Wednesday, January 22, 2014

சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 3



சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 3
               
அன்பர்களுக்கு வணக்கம்!

நாம் தற்போது 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான "சிவவாக்கியார்" அருளிய "சிவவாக்கியம்" என்னும் நூலில் உள்ள தத்துவக் கருத்துகளையும், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபில் ஒருவரான "வள்ளலார்" அருளிய "திருஅருட்பா" என்னும் அருள்வாக்கியத்தில் உள்ள தத்துவக் கருத்துகளையும் ஒருங்கிணைத்து சற்றே உரசிப்பார்ப்போம்.

என்னகத்துள் என்னைநான் எங்கும்நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தன்மையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னை அன்றியாதும் ஒன்றுமில்லையே. (சிவவாக்கியம்)

நான் யார்? என்ற கேள்வி சிவவாக்கியாருக்கு எழுகிறது. அதற்கான பதிலைத் தேட எங்கும்நாடி ஓடுகிறார். நம்மைப் போல் புறத்தில் தேடி ஒடவில்லை. தனது அகத்துள் தன்னை தேடுகிறார். ஒருவழியாக தேடுதல் முடிவுற்றது. தமது அகத்தில் தன்னை அறிகிறார், தான் யார் என்பது அவருக்கு தெரிந்துவிடுகிறது, ஆனால் தான் யார் எனத் தெரிந்தப்பின், தன்னகத்துள் தன்னையன்றி வேறுயாரும் இல்லை என்கிறார் சிவவாக்கியார்.

நான் யார்? எனத் தேடி தன்னை அறிவதே ஒரு பெரிய ஆன்மீக நிலை அனுபவம் ஆகும். அந்த நிலையினை சிவவாக்கியார் அடைந்துவிட்டார். அந்த அனுபவ நிலையினை மட்டும் தமது பாடலில் வெளிப்படுத்தியிருக்கலாம். அது அருமையாக இருந்திருக்கும்.

ஆனால் இங்கே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றால், இருக்கிறான் எனப்பொருள், அதுபோன்ற பொருளை இது உருவாக்குகின்றதா? என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால், என்னை அன்றி என்னகத்துள் வேறுயாரும் இல்லை என்று சொல்வதைக்காட்டிலும் இல்லையே எனப் பாடியது ஆழ்ந்த பொருள் இருப்பதாகவும் உள்ளது.

ஒருவேளை இவர் 'துவைத' தத்துவத்தை பின்பற்றுபவராக இருந்திருக்கலாம். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்துவாச்சாரியரால் 'துவைதம்' பரவியது. துவைதம் என்பது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு எனக்கொள்ளத்தக்க வாதம். இறைவன் ஒருவனே சுதந்தரமானவன். உயிரான ஜீவாத்மா பரத்திலிருந்து வேறுபட்டது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று சேர இயலாது, இரண்டும் எப்போது இரண்டாகவே இருக்கும் என்பன போன்ற வாதத்தை மார்க்கத்தை பரப்பியவர் மத்துவர். இங்கே சிவவாக்கியார் மத்துவரின் தத்துவத்தை எடுத்து விளம்பியதாகத் தோன்றுகிறது.

தன்னகத்தே என்னுடைய ஜீவாத்மா மட்டுமே உள்ளது, அங்கே பரமாத்மாவை நான் பார்க்கவில்லை என்று அன்றைய 'அத்வைத' ஆதரவாளர்களுடன் மோதியிருக்கிறார் என்றே யாம் கருதுகின்றோம். 'துவைதம்' என்பதும் உண்மைநிலைதான். ஒருவர் ஆன்மீக நிலையில் முன்னேறும்போது 'துவைதம்' என்ற உண்மை 'அத்வைதம்' என்ற பேருண்மைக்கு இட்டுச்செல்லும்.

8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் உபதேசித்ததே 'அத்துவிதம்' என்ற உயரிய அனுபவம். இதற்கு இரண்டற்ற நிலை என்று பொருள். 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் உபதேசித்ததே 'அத்துவிதம்' என்ற உயரிய அனுபவம். இதற்கு இரண்டற்ற நிலை என்று பொருள். அதாவது மனம் என்ற த்வைதம் மறைவதே அத்வைதம். ஜீவன் என்கிற ஜீவாத்மா, இறைவன் என்கிற பரமாத்மாவோடு ஒன்றியபிறகு அங்கு ஜீவனும் இன்றி பரமும் இன்றி இரண்டற்ற நிலையான தனிநிலை / திருநிலையினை காண்பது அத்துவிதம் ஆகும்.

இனி வள்ளலாரின் தத்துவ மரபானது அத்வைதமா? துவைதமா? என இங்கே சற்றே உரசிப்பார்ப்போம்,

என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய் (திருஅருட்பா-3694)

என்னிலையாகிய 'நான்' பெறுகின்றது என்னவெனில், நின்னிலையாகிய (நீ) இறைதன்மையதாம், 'நான்' 'நீ' என்கிற இருநிலைகளும் ஒரு நிலையாகிய 'நாம்' என அறியவேண்டும். 'நாம்' என்பது நானுமல்ல, நீயுமல்ல. இரண்டற்ற ஒன்றாகிய 'திருநிலை' ஆகும். 'என்னையும் நின்னையும் ஓர் உரு ஆக்கியான்' என்று அகவலில் வள்ளற்பெருமான் தான் இறையுடன் இணைந்ததை மிக அழகாக கூறுவார். என்னுள் நீ, உன்னுள் நான் என்கிற இணையும் மார்க்கமாகிய 'அத்வைத' தத்துவத்தையே வள்ளற் பெருமான் எடுத்துரைத்திருப்பதை பார்க்கமுடிகிறது.

ஜீவனும், பரமும் இணையும் அனுபவம் எவ்வாறு இருக்கும்? என்ற வேதியியல் அனுபவத்தை வள்ளற்பெருமானார் அனுபவித்தார்,

'தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால் என்னை வேதித்த என்தனி அன்பே' என அகவுவார். மேலும் த்வைதம் அத்வைதமாகும் போது கீழ்கண்ட அனுபவம் நமது உடலில் ஏற்படும் என வள்ளலார் தமது அகவலில் கூறியுள்ளார்,

1.  தோல் - குழைந்திடும்
2.  நரம்புகள் - மேலெலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிடும்
3.  எலும்புகள் - நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திடும்
4.  தசைகள் - மெய்புறத் தளர்ந்திடும்
5.  இரத்தம் - உள் இறுகிடும்
6.  சுக்கிலம் - உரத்திடை பந்தித்து ஒருதிரள் ஆயிடும்
7.  மூளை - மடல் எல்லாம் மலர்ந்திடும்
8.  உடல் - அமுதம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிடும்
9.  ஒண்ணுதல் - வியர்த்திடும்
10. முகம் - மலர்ந்திடும்
11. உயிர் - சாந்தம் ததும்பிடும்
12. உண்ணகை - தோற்றிடும்
13. உரோமம் - பொடித்திடும்
14. கண்கள் - நீர் பெருகி கால்வழிந்தோடிடும்
15. வாய் - துடித்து அலரிடும்
16. செவிகள் - கும்மெனக் கொட்டிடும்
17. மெய் - குளிர்ந்திடும்
18. மார்பு - பசைந்திடும்
19. கைகள் - குவிந்திடும்
20. கால்கள் - சுலவிடும்
21. மனம் - கனிந்து உருகிடும்
22. மதி - நிறைந்து ஒளிர்ந்திடும்
23. சித்தம் - இயைந்து களித்திடும்
24. அகங்காரம் - ஆங்காங்கு அதிகரிப் பமைந்திடும்
25. உள்ளம் - தழைத்து மலர்ந்திடும்
26. அறிவுறும் அனைத்தும் - ஆனந்தம் ஆயிடும்
27. பொறிகள் - ஆன்மதற் போதம் போயிடும்
28. தத்துவம் - தாம் ஒருங்கி ஒழிந்திடும்
29. சத்துவம் - தனித்து நின்று ஓங்கிடும்
30. உலகம் எல்லாம் - விடயம் உளவெலாம் மறைந்திடும்
31. அருள் - ஆசைமேல் பொங்கிடும்
32. உள்ளம் - எழுந்திடும்
33. உயிர் எல்லாம் -  மலர்ந்திடும்

இப்படிப்பட்ட அனுபவம் 'த்வைத' மார்க்கத்தார்களுக்கு கிடைப்பது கிடையாது. 'அத்வைத' மார்க்கத்திற்கு இது செயல் கூடும். 

அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் (திருஅருட்பா-4515)

வள்ளற்பெருமான் தான் எப்படி 'அத்வைதம்' ஆகினேன் என்று மேற்கண்ட அடிகளில் மிகத்தெளிவாக கூறுவதையும் இங்கே பார்க்கமுடிகிறது.

இந்த அனுபவத்தை சற்றே மனித தரத்தில் புரிந்துக்கொள்ளும்படி கூறவேண்டுமானால், பாரதியார் பாடிய பாடலை எடுத்துக்காட்டாக கூறலாம்,

'எங்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ?'

கணவன் மனைவி என்ற இருவருக்கும் உள்ள உறவினை இல்லறத்தில் அத்வைதம் எனலாம். இதனையே 'ஈருடல் ஓருயிர்' என்பார்கள். தனித்தனியாக இரண்டு விளக்குகள் இடைவெளி குறைவாக ஒன்றுக்கொன்று மிக அருகில் எரிகின்றன. எரிகின்ற தீபங்கள் இரண்டு, ஆனால் அவைகள் தம்முள் இருந்த ஒளியினை வெளிப்படுத்துவதில் இணைந்துவிட்டன. இரு விளக்கின் ஒளியும் ஒன்றாகவே இணைந்துவிட்டன. இது அந்த விளக்கின் ஒளி என்று அடையாளப்படுத்த முடியாதவாறு இரண்டும் ஒளியால் கலந்துவிட்டன. இதுவே அத்வைதம்.

வள்ளற்பெருமானார் 'த்வைத' நிலையினை பேசினாலே தமது உள்ளம் எரிகிறது என்று பாடுகிறார்.
 
'பிரிந்தினிச் சிறிதும் தரிக்கிலேன் பிரிவைப்
     பேசினும் நெய்விடுந் தீப்போல்
எரிந்துளங் கலங்கி மயங்கல்கண் டிலையோ' (திருஅருட்பா-3823)

'திவைத' தத்துவத்தை கூறிய மத்துவர், இறைவன் ஒருவனுக்கே சுதந்தரம் உள்ளது என்று கூறுவார். அது நூறு சதவிகிதம் உண்மையும் கூட. ஆனால், அந்த ஏக சுதந்தரத்தை இறைவன் 19ம் நூற்றாண்டில் பிறந்த 'சிதம்பரம் இராமலிங்கம்' என்பரிடத்தில் கொடுத்துவிட்டார்,

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
     தூயநல் உடம்பினில் புகுந்தேம்
இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
     இன்புறக் கலந்தனம்.... (திருஅருட்பா-3851)

இறைவனின் ஏக சுதந்தரத்தை வள்ளற்பெருமான் பெற்ற அதே நொடி இறைவன் அவர் உடம்பில் கலந்துவிட்டார்.

என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
இன்னுயிர் ஆயினீர் வாரீர்
என்னுயிர் நாதரே வாரீர் (திருஅருட்பா - 4416)

ஒருமை நிலையில் இருமையும் தந்த
ஒருமையி னீர்இங்கு வாரீர் (திருஅருட்பா - 4443)


எல்லாம்செய் வல்லான் என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் (திருஅருட்பா-5588)
 
 கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுவதும்
     கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
    இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
    புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
    நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே. (திருஅருட்பா-5723)


'என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
இன்றுவந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் (திருஅருட்பா-5818)

நான் இருக்கும் இடத்தில் என்னையன்றி வேறு யாருமில்லை எனக் கண்டவர் சிவவாக்கியார். நான் இருக்கும் இடத்தில் இறைவன் அமர்ந்திருப்பதை கண்டவர் வள்ளலார். ஆக இருவருக்கும் இங்கு மோதல் மிக அதிகமாகவே இருக்கிறது.


இனி சிவவாக்கியாரின் அடுத்த ஒரு பாடலுக்குச் செல்வோம்... தொடரும்....

Sunday, January 19, 2014

சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 2

சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 2                

அன்பர்களுக்கு வணக்கம்!

நாம் தற்போது 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான "சிவவாக்கியார்" அருளிய "சிவவாக்கியம்" என்னும் நூலில் உள்ள தத்துவக் கருத்துகளையும், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபில் ஒருவரான "வள்ளலார்" அருளிய "திருஅருட்பா" என்னும் அருள்வாக்கியத்தில் உள்ள தத்துவக் கருத்துகளையும் ஒருங்கிணைத்து சற்றே உரசிப்பார்ப்போம்.

கறந்த பால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே. (சிவவாக்கியம்)

சிவவாக்கியருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை எனத்தோன்றுகிறது. உயிர்களுக்கு மறுபிறவி இல்லை என்பதை மிகவும் வலிய சொல்லிவிட்டார். மாட்டின் முலையிலிருந்து கறக்கப்பட்ட பாலானது மீண்டும் தான் வந்த முலைவழியே செல்லமுடியாது, மோரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையினை மீண்டும் அதனைக் கடைந்து மோராக்க முடியாது, சங்கிலிருந்து எழும்பும் ஓசையானது அச்சங்கு உடைந்துவிட்டால் அதிலிருந்து மீண்டும் ஓசையினை எழுப்பமுடியாது, இறந்துபோன உடலில் உள்ள உயிரும் மீண்டும் அந்த உடலில் புகமுடியாது, மலர்ந்த மலரும், உதிர்ந்தக் காயும் மீண்டும் சென்று செடியிலோ மரத்திலோ ஒட்டாது, அது போன்று ஒருவர் இறந்துவிட்டால் அவர் மீண்டும் பிறக்கமுடியாது என்று மிகவும் உறுதிப்பட சொல்கிறார் சிவவாக்கியார். இதன்மூலம் மறைமுகமாக முற்பிறவியும் இல்லை என்ற கோட்பாட்டுக்கும் வந்துவிடுகிறார் சிவவாக்கியார். இக்கூற்று சைவ சித்தாந்தத்திற்கு எதிராக உள்ளது. 

இறந்தவர் பிறப்பதில்லை என்பதனை நாம் ஏற்றுக்கொண்டாலும், உயிர் என்ற ஒரு இயங்கு சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்ளும் சிவவாக்கியார், அந்த இயங்கு சக்தியான உயிரானது மறுபிறப்பு எடுப்பதில்லை என்பதனை விளக்க இவர் எடுத்துவைக்கும் எடுத்துக்காட்டுகள் சரியானதாக இல்லை என்பதே எமது நோக்கு. ஒருவகையில் அவர் எடுத்துவைத்த எடுத்துக்காட்டே அவரது தத்துவத்திற்கு எதிராக உள்ளதை நாம் பார்க்கவேண்டும்.

பால், வெண்ணை, மோர், பூ, காய் இவைகளெல்லாம் இப்புவியிலுள்ள உயிரனங்கள் உண்ணக்கூடிய பொருள்களாகும். இவைகளில் எந்தவிதமான இயங்கு சக்திகளும் கிடையாது. எனவே அவை மீண்டும் தாம் வந்த இடத்திற்கு செல்லும் அளவிற்கு சக்தியினை பெற்றிருக்கவில்லை, அதற்கான எவ்வித அவசியமும் அதற்கு இல்லை, அதனால் இந்த எடுத்துக்காட்டுகள் மறுபிறவி இல்லை என்பதற்கான சாட்சியாக இருக்கமுடியாது.

ஆனால் ஓசையும், உயிரும் இயங்கு சக்திகள். சங்கினுள் காற்றாகிய ஓசை எழுகிறது, இங்கு சங்கு உயிரற்ற பொருள், ஓசை உயிருள்ள இயங்கு சக்தி. அதுபோல உடலில் காற்றாகிய உயிர் இயங்குகிறது, இங்கு உடல் உயிரற்ற பொருள், காற்று உயிருள்ள இயங்கு சக்தி. சங்கு உடைந்துபோனாலும் ஓசைக்கு எந்த பழுதும் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதே ஓசையினை வேறொரு புதிய சங்கின்மூலம் இயற்கையாகவே எழவைக்க முடியும். அதுபோல உடல் இறந்தாலும் உயிருக்கு எந்த பழுதும் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதே உயிரினை வேறொரு புதிய உடலின்மூலம் இயற்கையாகவே கொண்டுவர முடியும். இயற்கை என்பது இறைவன் என எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஓசையும், உயிரும் இயங்கு சக்தியாக, அழியா சக்தியாக, நித்தியமானதாக இருப்பினும் இவைகளால் தனித்து இயங்க முடியாது. இவைகள் இயங்க சங்கும், உடலும் வேண்டும். ஆகவே உடைந்த சங்கில் இருந்த காற்றும், இறந்த உடலில் உள்ள உயிரும் தாம் தொடர்ந்து இயங்குவதற்கு வேறொரு சங்கினையும், உடலையும் தேடிக்கொண்டே பொருந்திக்கொண்டே இருக்கும்.

ஆகவே, 'உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகும்' என்பதே சரியான எடுத்துக்காட்டாக இருக்கமுடியும்.

இனி அருள்வாக்கியமான திருஅருட்பா மறுபிறப்பு பற்றி என்ன கூறுகிறது என்பதனை பார்ப்போம்.

'இனிப்பிறவா நெறி எனக்களித்து அருளிய தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே' (அகவல்). "இனிப்பிறவா" என்று கூறுவதன் மூலம் வள்ளலார் அவர்கள், இப்பிறவிக்கு முன்பு பல பிறவிகளை கடந்து வந்துள்ளார் என்பதனை விளக்குகிறது. 'இனிப்பிறவா நெறி' என்பது என்ன? அது மரணமிலா பெருவாழ்வு நெறி. யார் ஒருவர் இறந்தாலும் அவருக்கு நிச்சயம் மறு பிறவி உண்டு என்கிறார் வள்ளலார். யாருக்கு மறுபிறவி கிடையாது எனில், யார் ஒருவர் இப்பிறவியில் சாகாமல் இருக்கிறாறோ அவருக்கே இனிப்பிறவா நெறி கிட்டும் என்பது வள்ளலின் தத்துவமாக இருக்கின்றது.

'சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரைகாணாது அழுந்தி' (919) இவ்வரியில் சாதலும் பிறத்தலும் சுழற்சியாக வருவதை விளக்குகிறார்.

'எனை எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே' (1965) என்பதின் மூலம் முற்பிறவி முதல் இப்பிறவி வரை அவரது உள்ளம் அவரைவிட்டு நீங்கவில்லை என்று பாடுகிறார் வள்ளலார்.

'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்ற குறளை வள்ளலார் தமது திருஅருட்பாவில் மறுபிறவி உண்டு என்பதற்கு எடுத்தாண்டிருக்கிறார். (1965-465)

'முதல் சிருஷ்டித் தொடங்கி இது வரையில் அழிந்த தேகங்களுக்கு அளவில்லை. அப்படியே ஆன்மாக்களுக்கும் அளவில்லை. ஆகவே இனி ஆன்மாக்கள் தேகங்களை எடுக்காமல் இருக்க வேண்டும். அப்படியில்லையே தேகங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.' (திருஅருட்பா உரைநடை பகுதி பக்கம் 147)

சிவவாக்கியார் கூறுவதைப்போல மறுபிறப்பு இல்லை என்றால், இவ்வுலகில் எவ்வித உயிரனமும் தமது உடலினை சுமந்து திரிந்துக்கொண்டிராது என்பதே வள்ளலின் வாதம். அதாவது இறைவன் முதல் சிருஷ்டியில் 1000 ஆன்மாக்களுக்கு உடலினை கொடுத்து இவ்வுலகில் உலாவவிடுகிறான். அந்த 1000 உடல்களும் குறிப்பிட்ட காலத்தில் இறந்துவிட்டன, அவ்வாறே அந்த 1000 உயிர்களும் இறந்துவிட்டன அல்லது மறுபிறவி எடுக்கவில்லை என்றால், இப்பூமியில் ஏது உயிரினம்? ஆகையால் அந்த 1000 உடல்கள் இறந்தப்பின்னும் அவ்வுடலில் இருந்த 1000 உயிர்களும் மறுபடியும் உடலை எடுக்கின்றன. அந்த 1000-ல் நாமும் ஒருவராக சாதல்-பிறத்தல் என்னும் சுழற்சியில் இருக்கின்றோம் என்பதே வள்ளலாரின் வாதமாக உள்ளது.

'இந்தத் தேகத்திற்கு பிறப்பு ஏழு உண்டு. அதுபோல ஏழு வகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு. அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியிலும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இந்ததேகம் கிடைத்தது.' (திருஅருட்பா உரைநடை பகுதி பக்கம்358)

நாம் அடைந்திருக்கின்ற இந்த அற்புதமான மனிதப் பிறவி எப்படி கிடைத்திருக்கின்றது என்பதனை மேலே உள்ளவாறு வள்ளலார் தமது உரைநடைப்பகுதியில் விளக்கியுள்ளார். மேலும் மறுபிறவி உண்டு என்பதற்கு பல ஆதாரங்களை அவரது உரைநடைப் பகுதியில் காணமுடிகின்றது.

மறுபிறப்பினைப்பற்றிய தத்துவங்களில் சிவவாக்கியமும், அருள்வாக்கியமும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருக்கின்றன. இதில் எந்த தத்துவம் உண்மையானது என்பதை நம்மால் நமது சொந்த அனுபவத்தால் கூறிவிடமுடியாமல் இருக்கிறோம். எனக்கு சிவவாக்கியரை பிடித்திருந்தால் அவர் சொன்னதே சரி, வள்ளலாரை பிடித்திருந்தால் இவர் சொன்னதே சரி என்ற நிலமையில்தான் நாம் இருக்கிறோம். எனினும் நம் சிற்றரிவை கொண்டு இரண்டையும் ஆராய்ந்தால் மிகத்தெளிவான ஒருமுடிவுக்கு நம்மால் வரமுடியும். அந்த முடிவு நமது அறிவை பொருத்ததாக அமையும்.



இனி சிவவாக்கியாரின் அடுத்த ஒரு பாடலுக்குச் செல்வோம்... தொடரும்....

ச.மு.க. பிரபந்தத் திரட்டு



பேரன்புடையீர் வணக்கம்!

காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் 1924 ஆம் ஆண்டு வள்ளற்பெருமானின் திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளையும் ஒரே பதிப்பில் பதிப்பித்து வெளியிட்ட பெருமைக்குரியவர். மேலும் 1923 ஆம் ஆண்டு, வள்ளற்பெருமானின் சரித்திர குறிப்புகளை உரைநடையாகவும், பாடலாகவும் தாம் பாடி எழுதிய "பிரபந்தத் திரட்டு" என்ற நூலினை திரு.முத்தையா செட்டியார் அவர்களின் பேருதவியுடன் வெளியிட்டார்.

ச.மு.க. பாடிய "பிரபந்தத் திரட்டு" என்ற நூல் வெளியிட்டு 90 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நூல் தற்போது ஒருசில அருளாளர்களிடம் இருப்பதாக அறிகிறோம். ஆனால் பல சன்மார்க்கர்களுக்கும், வள்ளலார் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கும் மற்றும் இந்நூல் பற்றி தெரிந்த பொதுமக்களுக்கும் இந்நூல் அவ்வளவு எளிதில் கிடைக்காமல் உள்ளது.

பல சன்மார்க்கர்கள் விருப்பத்திற்கு இணங்கவும், திருவருள் சம்மதத்துடனும் இந்த "பிரபந்தத் திரட்டு" என்ற நூலினை திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள் பதிப்பிக்க உள்ளார்கள். சுமார் 700 பக்கங்களுக்கும் மேற்பட்டு வெளிவரும் இந்த நூலானது, உயர்தர தாளில் அச்சிடப்பட்டு, உயர்ரக அட்டையுடன் அடுத்த ஆண்டு (2015) தைப்பூசத் தினத்தன்று காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை வெளியிடவுள்ளது.

இந்நூலின் விலை ரூபாய் 350/- ஆகும். எனினும் ச.மு.க. அறக்கட்டளையானது அன்பர்களின் விருப்பத்திற்காக 'முன்பதிவு சலுகை விலை'யாக வருகின்ற மே மாதம் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யும் அன்பர்களுக்கு ரூபாய் 200/- க்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்நூல் தேவைப்படும் அன்பர்கள் ரூபாய் 200/- செலுத்தி முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் 'நன்கொடைத் திட்டம்' என்ற வகையில் ரூபாய் 500/- மற்றும் அதற்கு மேலும்  செலுத்தும் அன்பர்களின் பெயரினை இந்நூலில் நன்றியுடன் அச்சிடப்பட்டு நூலின் ஒரு பிரதியினையும் அவர்களுக்கு வழங்க, காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை இசைந்துள்ளது.

வருகின்ற 17.01.2014 அன்று வடலூரில் தைப்பூசத் தினத்தன்று முன்பதிவும், நன்கொடையும் ஏற்க இசைந்துள்ளோம். காரணப்பட்டு ச.மு.க. நிலையத்திலும் முன்பதிவு செய்யலாம். இதன்பொருட்டு 9445545475 என்ற எண்ணிற்கோ அல்லது vallalarlive@live.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்புகொள்ளலாம். நன்றி.








The great love holders, we wishing to you,
Karanappattu Sa.Mu.Kandhasamy Pillai (07.09.1838 to 02.12.1924) was one of the dearest / closer devotees of our saint VALLALAR. He was contemporary age of VALLALAR.   He wrote a book of ‘PirabanthaThirattu’ and published on 1923. It contains saint VALLALAR’s history and 3466 poems also. Those poems are spread out our saint VALLALAR’s fames.  And he was published the complete six part of ‘ThiruArutpa’ on 1924 and free issued a book to public. 
‘PirabanthaThirattu’ and published on 1923 and 90 years gone. At present that book is unavailable to public, Sanmarka people, Vallalar devotees and research students.
Many Sanmarka people have been like this book, accordingly as per likes of Sanmarka people requirements’ with saint VALLALAR’s blessings we have plan to republish the PirabanthaThirattu’ in the guidelines of Mr.A.Thirunavukkarasu, V.A.O. (Retired) .  He became a publisher of this book and one of the eldest living members of Karanappattu Sa.Mu.Kandhasamy Pillai’s families.  
We are planning to print this book has more than 700 pages and high quality paper and high quality binding. So, this book price will be come and fixed the rate of Rs.350/- .  And will publish of coming ‘Thai Poosam’ (03.02.2015).
But our trust have been declared two options for this book purchaser,
Option No.1:  Advance Booking Plan – Under this plan this book to be issue at cost price of Rs.200/- , who is paid in advance Rs.200/- within 31.05.2014 for this book. After publish this book we will send a book to you through post at free of cost. (Out of India also free for post)
Option No.2: Donation Plan – Under this plan, your good name and place are printed on this book, who is paid in advance Rs.500/- and above within 31.05.2014 for this book. After publish this book we will send a book to you through post.  (We will allot one book to each Rs.500/-)
PAYMENT OPTION
# Through cheque or Demand Draft:
                In favor of “KARANAPPATTU SA.MU. KANDHASAMY PILLAI 5S TRUST”  (Payable at Cuddalore)
                                                                                Or
                In favor of “T.M.RAMALINGAM” (Payable at Chennai)
Please be send your Cheque or DD by post to this address: A.Thirunavukkarasu, No.73-B,  Sankaranaidu Street, Thirupathiripuliyur, Cuddalore, Tamilnadu, PIN 607 002.

# Through net banking or Direct Payment to Bank:
                Account holder name – T.M.RAMALINGAM
                Account No. 057401502097
                Bank and Branch: ICICI Bank, Chennai Armenian Street.
                IFSC Code: ICIC0000574
After paid up your amount, please intimate your good name and address to us through SMS to 9445545475 or vallalarlive@live.com mail ID. 

We expect your assistance /coordinate for this historical book publishing to our Tamil world.  Thank you to all.

A.THIRUNAVUKKARASU, V.A.O., (Retired), Founder Cum Managing Trustee,
M/s.KARANAPPATTU SA.MU.KANDHASAMY PILLAI 5S TRUST,
No.73-B, Sankaranaidu Stree, Thirupapuliyur, Cuddalore, Tamilnadu, India. PIN 607 002.
Mobile No.9445545475