Saturday, June 27, 2020

மலைகளும் நதிகளும் (Part - 5)

மலைகளும் நதிகளும் (Part - 5)

அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி

மலைகளும் நதிகளும்
(PART - 5)

தி.ம.இராமலிங்கம்
(யாத்திரை அனுபவங்கள்)

யமுனை நதி:
ஐந்தாம் நாள் இரவில் யமுனை நதியினை பற்றி சிறிது சிந்திப்போம். 

யமுனை நதியின் மூலமானது யமுனோத்திரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. அரித்துவார் வடக்கில் உத்ரகாண்ட் மாநிலத்தில், உத்ரகாசி மாவட்டத்தில் கீழ் இமாலயத்தின் தென்கிழக்குச் சாரிவில் பாந்தர்பூஞ்ச் சிகரத்திலிருந்து 6387 மீ உயரத்திலிருந்து இது உருவாகிறது. யமுனை நதி கடவுளாகக் கருதப்படுவதால் யமுனைக்கு அர்ப்பணிப்பதற்காக யமுனோத்ரி கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் யமுனோத்ரி கோயில், புனிதத் தளமாக கருதப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை உள்ளது. இப்பாதை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள "மார்க்கண்டேய" தீர்த்தத்துக்கு செல்கிறது. இங்குதான் முனிவர் மார்க்கண்டேயர், மார்க்கண்டேய புராணத்தை எழுதினார்.
இவ்விடத்தில் இருந்து யமுனை தெற்கில் பாய்கிறது. கீழ் இமாச்சலம் மற்றும் சிவாலிக் மலைத் தொடர் வழியாக 200 கி.மீ. தூரத்திற்கு தெற்கு நோக்கி பாய்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் மண்ணியல் அமைப்புகளான செங்குத்தான பாறைகளில், பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் ஓடைகள் அமைந்துள்ளன. இந்நதியின் நீர் பாயும் மொத்தப் பரப்பளவு 2320 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதி இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. யமுனையின் முக்கியக் கிளை நதிகளான டான்ஸ், ஹரி-கி-துன் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இது டேராடூனில் கால்சி நதியுடன் இணைந்த பிறகு இதன் கொள்ளளவு யமுனை நதியை விட அதிகமாகும். இந்நதியின் வடிகால் பகுதிகள் இமாச்சலத்தில் உள்ள கிரி-சட்லெஜ் நீ்ர்ப்பிடிப்புப் பகுதிகளும், கார்வாலில் உள்ள யமுனை - பிலிங்னா நீர்ப்பிடிப்புப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. சிம்லாவின் தெற்குப் பகுதியும் இந்நதி நீர் பாயும் பகுதியில் அடங்கும். யமுனை நதிப் பள்ளத்தாக்கில் மிக உயரமான பகுதி காலாநாக், இது 6387 மீட்டர் உயரமுடையது.
யமுனையின் மற்ற கிளை நதிகளான கிரி, ரிஷிகங்காஹனுமன் கங்கா மற்றும் பாட்டா ஆகியவை யமுனை நதி பள்ளத்தாக்கின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதியில் பாய்கின்றன. இங்கிருந்து யமனை நதி டேராடூனின் அருகில் உள்ள டாக் பாதரில் உள்ள டூன் பள்ளத்தாக்குப் பகுதியில் கீழ்நோக்கிப் பாய்கிறது. டாக் பாதர் அணைக்கட்டிலிருந்து நீர், மின்சாரம் எடுப்பதற்காக கால்வாய்க்கு பிரித்து விடப்படுகிறது.
சீக்கிய புனித யாத்திரை நகரான போயன்டா சாகிப்பை கடந்து சென்ற பிறகு, ஹாரியானாவில் உள்ள யமுனா மாவட்டத்தில் உள்ள தேஜ்வாலாவை அடைகிறது. இங்கு 1873-ல் ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இரண்டு முக்கிய கால்வாய்களான மேற்கு யமுனைக்கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய் உருவாகின்றன. உத்திரபிரதேசம் மற்றும் ஹாரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு் இக்கால்வாய் யமுனா நகர், கார்னல் மற்று பானிபட் ஆகிய நகரங்களைக் கடந்து கைதர்பூர் சுத்திகாரிப்பு ஆலையை அடைகிறது. இங்கிருந்து டெல்லிக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. யமுனா நகர் மற்றும் பானிபட் ஆகிய நகரங்களில் இருந்து கழிவு நீர் இக்கால்வாயில் கலக்கிறது. 224 கிலோ மீட்டர் கடந்து பல்லா கிராமத்தை அடைந்தபிறகு யமுனை நதியில் சிறு ஓடைகளில் அவ்வப்போது வருகின்ற நீர் கலக்கிறது. வறட்சிக் காலங்களில் இந்த நதி தேஷ்வா முதல் டெல்லி வரை வறண்டு இருக்கும்.
யமுனைநதி இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட் மற்றும் அாரியானா, டெல்லி, உத்தரபிரதேசம்   ஆகியமாநிலங்களுக்கு இடையே எல்லையாக உள்ளது. இந்நதி கங்கை நதிக்கு இணையாக இந்து - கங்கைச் சமவெளி வரை பாய்கிறது. உலகிலேயே மிகப் பெரிய வளமான பகுதியான இந்து - கங்கை சமவெளிப் பகுதிக்குப் பிறகு இரு நதிகளும் இணையாகப் பாய்கின்றன. கங்கை - யமுனை சமவெளிப்பகுதி 69,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தச் சமவெளிப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு பெயர் பெற்றது.

 11-09-2019 – புதன் கிழமை – கராடி (Kharadi) இருந்து உத்ரகாசி :

கராடியிலிருந்து காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு உத்தரகாசி நோக்கி இன்றைய எங்களது பயணம் தொடங்கியது. காலை 8.00 மணியளவில் எங்களது வாகனம் கிளம்பியது. 40 நிமிட பயணத்திற்கு பிறகு ஓரிடத்தில் வாகனம் நின்றது. அங்கு உத்ராகாண்ட் மாநில சுற்றுலாத் துறையிடம் நாங்கள் அனைவரும் ”ச்சார்தாம்” யாத்திரைக்காக அனுமதி சீட்டு வாங்கினோம். எங்களது ஆதார் அட்டையினை வாங்கி பதிந்தார்கள். மேலும் ஒவ்வொருவரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு விடுவித்தார்கள். இவ்விடத்தில் அரை மணி நேரம் ஆகிவிட்டது. பிறகு மீண்டும் உத்தரகாசியை
நொக்கி வாகனம் புறப்பட்டது. காலை 10.30 மணியளவில் “ப்ரகதீஸ்வர் மகாதேவ்” மலைக் கோயில் செல்வதற்காக வாகனம் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு மலை ஏற வேண்டும். சிலர் மட்டுமே மலை ஏறி கோயிலைப் பார்க்க வந்தனர். பலர் வாகனத்தை விட்டு கீழிறங்கி அங்குள்ள கடைகளையும், இயற்கையும் இரசிக்க ஆரம்பித்துவிட்டனர். நான் மலையேறினேன். மேலே ஒரு குகைபோன்ற இயறகை அமைப்பு இருந்தது. உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. ஐந்து ஐந்து நபர்களாக உள்ளே விடுகின்றார்கள். இரண்டு பெண் காவலர்கள் அதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அக்குகைக்குள் சென்றேன். அங்கு ஒரு அருட்பெருஞ்ஜோதி விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது. அவ்வெளிச்சத்திலும், சிலர் எரியவிடும் மொபைல் வெளிச்சத்திலும் அக்குகையினை கண்டேன். ஓரிடத்தில் தொட்டி போன்று பாறைகள் சூழ்ந்த இடத்தில் தண்ணீர் தொபதொபவென வந்துக்கொண்டிருந்தது. அதனை எல்லோரும் பார்த்தோம். பிறகு அதன் மறு புறத்தில் சாமி சிலைகள் உள்ளன. அதனை கண்டுவிட்டு அக்குகையினை விட்டு மேலேறினோம். வெளியில் மண்பத்துடன்கூடிய கோயில் உள்ளது. பிறகு அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்த வழியே கீழிறங்கினோம்.












கீழிறங்கும்போது இடதுபுற மலைகளிலிருந்து ஒரு ஒற்றையடிப் பாதை நாங்கள் செல்லும் பாதையில் வந்து இணைந்தது. அவ்வழியே அவ்வூரில் உள்ள சில சிறார்கள் கூட்டமாக வந்து எங்களிடம் பிச்சை எடுக்கும் நோக்கில் அருகில் வந்தார்கள். அப்போது கீழே இருந்து கோயிலுக்கு மேல் நோக்கி சில பெண் காவலர்கள் வருவதைக் கண்ட அச்சிறார்கள் உடனே தாங்கள் வந்த அந்த மலைப்பாதையினுள் சென்றுவிட்டார்கள். மலை கிராமங்களில் வறுமை நிலவுவதை அப்போது என்னால் உணரமுடிந்தது. அழுக்கு நிறைந்த பாவாடை சட்டை அணிந்த அந்த சிறுமிகளுக்கு இறைவன் அருள் புரியட்டும்.

இப்படியாக கீழே சாலைக்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ள கடைகளை சுற்றி பார்த்தோம். அவ்விடத்தில் எலுமிச்சை பழம் மிகப்பெரியதாக இருந்தது. அதனைக்கொண்டு ஜூஸ் போட்டுக் கொடுத்தார்கள். அதில் சில பொடிவகைகளையும் சேர்த்து கொடுத்ததைப் பார்த்து நாங்கள் அந்த ஜூஸை வாங்கிப் பருகினோம். நன்றாகவே இருந்தது. பிறகு 12.00 மணியளவில் அங்கிருந்து வாகனத்தில் உத்தரகாசியை நோக்கி கிளம்பினோம். மதியம் 1.40 மணியளவில் உத்தரகாசி சென்றடைந்தோம்.  “விஸ்வரூப் ரெசிடன்சி” என்கின்ற ஹோட்டலில் தங்கினோம். (Hotel Vishwaroop Residency – NH34, Barahat Range, Netala, Uttrakashi – 249193. Mobile:7060106563)

 ‘உத்தரகாசி’ நகரம் அம்மாவட்டத் தலைநகராக விளங்குகின்றது. இந்நகரம் பகீரதி நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு பல இந்து மதக் கோயில்களும், ஆசிரமங்களும் அமைந்துள்ளன. இங்கு ஜவகர்லால் நேரு இன்ஸ்டியூட் ஆஃப் மவுண்டனியரிங் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1352 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகர மக்கள் தொகை சுமார் 20,000 ஆகும். இந்நகரில் உத்ரகாசி விஸ்வநாதர் ஆலயம் புகழ் வாய்ந்தது.

நாங்கள் ஹோட்டலில் எங்களது லக்கேஜ்களை அவரவர்கள் அறையில் இறக்கி வைத்துவிட்டு, உத்தரகாசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் செல்ல வாகனத்தில் சென்றோம். எங்களது வாகனம் அந்த ஹோட்டல் தெருவினைக்கூட தாண்டவில்லை. அதற்குள் எங்களது வேன் பழுதடைந்து நடுத்தெருவில் நின்றுவிட்டது. சுமார் 30 நிமிடம் வாகனத்தி நகர்த்த முடியாமல் சாலையை அடைத்துக்கொண்டு நின்றது. அப்போது ஒரு இராணுவ வாகனம் வீரர்களை அழைத்துக்கொண்டு அவ்வழியே வந்தது. எங்களது நிலமையை பார்த்தவுடன் அவ்வீரகளில் சிலர் இறங்கி வந்து எங்களது வாகனத்தை தள்ளி ஓரமாக நிறுத்திவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பினார்கள். எனக்கு அவர்களது சேவை ஆச்சரியத்தை அளித்தது. பிறகு அங்கிருந்து நடந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். வழியில் ஒரு டீக்கடையில் தேநீர் அருந்தினோம். எங்களது ஹோட்டலுக்கு பின்புறம் அதாவது சாலையின் ஒருபுறம் பகீரதி நதி ஓடிக்கொண்டிருக்கும் அழகை இரசிக்க முடிந்தது. இன்று உத்தரகாசியில் எங்களால் வேறு எந்த இடத்திற்கும் சென்று பார்க்க முடியவில்லை.  இன்று இரவு உத்தரகாசியில் தங்கினோம். இது எங்களுக்கு 6-ஆம் நாள் இரவாகும். 

(தொடரும்)

Friday, June 12, 2020

மலைகளும் நதிகளும் - பகுதி-4

மலைகளும் நதிகளும் (Part - 4)

அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி

மலைகளும் நதிகளும்
(Part - 4)

தி.ம.இராமலிங்கம்
(யாத்திரை அனுபவங்கள்)

09-09-2019 – திங்கள் கிழமை – ஹர்துவாரிலிருந்து கராடி (Kharadi) :


இன்று காலை ஹர்துவார் டேரவால் பவனில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு (மதிய உணவாக அனைவருக்கும் வெரைட்டி ரைஸ் பொட்டலம் கட்டிக்கொண்டார்கள்) ஹர்துவாரிலிருந்து யமுனாத்ரி செல்ல ஆயுத்தமானோம். ஹர்துவாரிலிருந்து வேன் மூலம் பயணம். ரிஷிகேஷ் ஊரைச்சார்ந்தவரின் வேன் ஏற்பாடாகியது. வேன் ஓனரே டிரைவராகவும் இருந்தார். நாங்கள் சார் தாம் பார்த்துவிட்டு மீண்டும் ஹர்துவார் வரும்வரை இதே வேனில்தான் பயணம் நடைபெற்றது.

சுமார் 11 மணியளவில் எங்களது வாகனம் யமுனை நதி உற்பத்தியாகுமிடம் காண யமுனாத்ரிக்கு புறப்பட்டது. முழுதும் மலைப் பாதையில்தான் பயணம். சாலைகள் ஒருசில இடங்களைத் தவிர பெரும்பாலும் மிக மோசமாகவே இருந்தன. ஆனாலும் யமுனை நதியின் அழகு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மலையடிவாரத்தில் தவழ்ந்துச் செல்லும் அழகே அழகு. யமுனை நீர் கலங்கல் இல்லாமல் மிக சுத்தமாக இருந்தது. வாகனம் செல்லும்போதே எனது கைப்பேசி மூலம் பல படங்களை எடுத்துக்கொண்டேன்.  

மதிய நேரம் கடக்கும்போது, வாகனத்திலேயே மதிய உணவு உண்டுவிட்டு தொடர்ந்து பயணம் சென்றுக்கொண்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் மலையும்,
யமுனை நதியும்தான் காட்சி கொடுத்தன. இப்படியே இரவும் வந்துவிட்டது. இரவு 08.00 மணிக்கு மேல் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லையாம். அதனால் 7.50 மணியளவில் Kharadi கராடி என்னும் ஊரில் உள்ள செண்டர் பேலஸ் ஹோட்டலில் தங்கினோம். இரவு நாங்கள் அழைத்துச் சென்ற சமையல் காரர்கள் அங்கேயே சிற்றுண்டி செய்து அளித்தார்கள். சாப்பிட்டுவிட்டு உறங்கினோம். இன்றைய இரவு 4-ஆம் நாள் இரவாகும். குளிர் என்று சொல்லமுடியா வண்ணம் தமிழகத்தில் இருப்பதுபோலவே இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பின்புறம் யமுனை நதி சலசலசல என்ற சப்தம் எழுப்பி ஓடிக்கொண்டே இருந்ததை கேட்கவும், பார்க்கவும் முடிந்தது. காலையில் நதியில் குளிக்கலாம் என்று இருக்கின்றேன்.

09-09-2020 இன்றைய பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில…














10-09-2019 – செவ்வாய் கிழமை – கராடி (Kharadi) இருந்து யமுனாத்ரி :


ஹர்துவாரிலிருந்து யமுனாத்ரி செல்லும் வழியில் நேற்று இரவு கராடியில் தங்கினோம். கராடியிலிருந்து யமுனாத்ரி செல்ல இன்னும் 25 கிலோ மீட்டர்தான்

உள்ளது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பின்னால் யமுனா நதி ஓடிக்கொண்டிருக்கின்றது. மிகவும் அற்புதமான இயற்கை சார்ந்த இடம். இன்று காலையில் அந்நதியில் நீராடலாம் என இருந்தேன். ஆனால் முடியவில்லை. ஹோட்டல் ரூமில் சுடுநீர் வரவே அங்கேயே குளித்து கிளம்பிவிட்டேன். காலையில் சிற்றுண்டி செய்து எடுத்துக்கொண்டு 06.45 மணியளவில் எங்களது வேன் கராடியிலிருந்து கிளம்பியது. பாதை மிக மோசமாக இருந்தது. காலை 08.15 மணிக்கெல்லாம் யமுனாத்ரி அடிவாரத்திற்கு சென்று சேர்ந்துவிட்டோம்.









யமுனாத்ரி செல்ல இனிமேல் நடந்துதான் செல்ல வேண்டும். அதாவது மலையேற வேண்டும். அடிவாரத்திலிருந்து 05 கிலோமீட்டர் உயரத்திற்கு மலை ஏற வேண்டும். எங்களுடன் வந்திருந்த ஒருசில வயதானவர்கள் வாகனத்திலேயே அமர்ந்துவிட்டனர். மற்றவர்கள் சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு மலையேற புறப்பட்டனர். நடந்து மலையேற விருப்பம் உள்ளவர்களில் சிலர் மூங்கில் குச்சியினை ஊன்று கோலாக பயன்படுத்தும் பொருட்டு வாங்கிக்கொண்டனர். நான் எதுவும் வாங்கவில்லை. சிலர் நடந்து மலையேற முடியாது என குதிரை மேல் ஏறியும், சிலர் டோலி (மனிதன் மனிதனை சுமப்பது) வைத்துக்கொண்டனர். நானும் என்னுடன் சிலரும் நடந்தே மலை ஏறினோம். வழியில் ஓரிடத்தில் அமர்ந்து சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு தொடர்ந்தோம். வழியெங்கும் இயற்கை அழகை அனுபவித்தோம்.
ஓரிடத்தில் எங்களுக்கு மிக அருகில் யமுனா ஓடிக்கொண்டிருக்கவே, நான் மட்டும் அவ்விடத்தில் இறங்கி யமுனாவில் முதல் முதலாக கால் வைத்தேன். அப்படியே சுர்ர்ர்ர் என்றிருந்தது. அவ்வளவு குளிர்ந்த நீராக ஓடியது. இப்போதுதான் எனக்குப் புரிந்தது… இப்படி ஓடும் ஆறுகளில் மக்களும், விலங்கினங்களும் ஏன் நீர் அருந்தக்கூட வரவில்லை என்று… சற்று நேரம்கூட அந்த ஓடும் நீரில் நிற்க முடியவில்லை. கால் மறுத்துவிட்டதைபோல உணர்ந்தேன். உடனே அங்கிருந்து விலகி மேலே சாலைக்கு வந்துவிட்டேன். நடை பயணம் தொடர்ந்தது.


மேலே செல்ல செல்ல என்னால் நடக்க முடியவில்லை. என்னுடன் வந்தவர்களில் சிலர் பாதி வழியில் குதிரையேறி சென்றுவிட்டார்கள். இறுதியாக வந்த இரமேஷ் அண்ணன் மற்றும் அண்ணியையும் 4 கிலோ மீட்டர் அளவில் தவறவிட்டுவிட்டேன். (அவர்கள் 4 கிலோ மீட்டர் அளவில் ஏறிவிட்டு, இதற்கு மேல் நடக்க முடியாது என கீழே இறங்கிவிட்டார்கள் என எனக்கு பிறகு தெரியவந்தது) இப்போது நான் மட்டுமே தனியாக நடந்துச் செல்ல வேண்டியதாயிற்று. இருந்தாலும் பொதுமக்கள் கூட்டம் சாலை முழுதும் இருந்தது. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஆங்காங்கு உட்கார்ந்துதான் செல்ல வேண்டியதாயிற்று. அவ்வளவு கடினப் பயணமாக இருந்தது. எப்படியோ யமுனாத்ரி உற்பத்தியாகும் இடத்தில் உள்ள கோயிலுக்கு சென்றடைந்தேன். வழியெங்கும் எனக்குப் பிடித்த காட்சிகளை படம் எடுத்துக்கொண்டேன்.








அங்கே மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மதியம் 02.00 மணியளவில் சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. அந்தக்கோயிலில் சுடுநீர் ஊற்றும் இருந்தது. இவ்வூற்று இயற்கையாக உள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு அது செயற்கையாக இருக்குமோ என்கின்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில் அவ்வூற்று எழும் இடத்தை பார்க்க முடியவில்லை. மாறாக பெரிய அளவில் நீச்சல் தொட்டிப்போல் கட்டியிருக்கின்றார்கள். அத்தொட்டியின் கீழே நான்கு மூலைகளிலும் சுடுநீர் உள்ளே வந்துக்கொண்டே இருக்கின்றது. அதிகப்படியான நீர் ஒரு புறம் வெளியேறிக்கொண்டே இருக்கின்றது. இயற்கையான சுடுநீர் ஊற்று கொதிக்கும் தன்மையுடையதாக இருக்குமாம். அதனால் அந்த நீருடன் குளிர்ந்த நீரினையும் கலந்து இந்தத் தொட்டியில் விடுவதாக கூறுகின்றார்கள்.

என்னுடன் வந்திருந்த சிலர் எனக்கு முன்னமே அந்த சுடுநீரில் குளித்து முடித்துவிட்டிருந்தார்கள். நானும் அந்த சுடுநீர் தொட்டியில் இறங்கி குளித்துவிட்டு மேலே வந்தேன். அப்படியே அங்கிருந்து சற்று தள்ளி யமுனை இறங்கி ஓடிவந்துக்கொண்டிருக்கின்ற இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. நானும் அங்குச் சென்றேன். வெறும் ஜட்டி துண்டுடன் குளித்துவிட்டு அக்கூட்டம் இருக்குமிடம் நோக்கிச் சென்றேன். யமுனை மிக வேகமாக மேலிருந்து கீழ் நோக்கி ஓடிவருகின்ற இடம் அது. சற்று நேரம் பார்த்தேன். நாங்கள் இருக்குமிடத்திற்கும் மேலேயிருந்து எங்கிருந்தோ யமுனை வந்துக்கொண்டிருந்தது. எனவே இவ்விடம் யமுனை உற்பத்தியாகவில்லை என்பது புரிந்தது. உடனே யோசிக்காமல் ஓடும் நீரில் இறங்கி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தினேன். நீர் சில்லென்று இருந்தது. உடம்பு வலி எடுத்துக்கொண்டது. அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மீண்டும் ஒரு முறை தலையை தண்ணீருக்குள் விட்டேன். சற்று ஏமாந்தால் நம்மை அடித்துச் சென்றுவிடும் அளவிற்கு நீரின் வேகம் இருந்தது.


இரண்டாவது முறையாக நீரில் முழுகி எழுந்தப்பிறகுதான் பார்க்கின்றேன். என்னைத் தவிர யாரும் அந்த நீரில் குளிக்கவில்லை என்று! ஒரு கூட்டம் நான் குளிப்பதைப் பார்த்து அவர்களது மொழியில் என்னை ஏதோ எச்சரிக்கின்றார்கள். நான் எதனையும் கண்டுக்கொள்ளாமல் உடனே அவ்விடத்திலிருந்து கிளம்பிவிட்டேன். இறைவனே என்னை அங்கு குளிக்கச்சொன்னது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. பிறகு மீண்டும் வெந்நீர் ஊற்றுக்கு வந்து சுடுநீரில் குளித்துவிட்டு, ஆடைகளை மாற்றிக்கொண்டு திரும்ப முடிவெடுத்தேன். மதியம் 03.00 மணியளவில் அங்கிருந்து எங்களது குழு கிளம்பியது. இதில் சிலர் மேலே வரும்போது நடந்து வந்து, கீழே இறங்குகையில் குதிரையில் சென்றவர்களும் உண்டு. நானும் இன்னும் சிலரும் நடந்தே திரும்பினோம். கீழ் இறங்குகையில் அவ்வளவு சிரமம் தெரியவில்லை. 04.30 மணிக்கெல்லாம் கீழே இறங்கிவிட்டோம்.

நாங்கள் சென்றவுடன் வேன் புறப்பட்டுவிட்டது. மீண்டும் நாங்கள் தங்கியிருந்த கராடி என்னும் ஊர் நோக்கிச் சென்றோம். வழியில் ஓரிடத்தில் மண் சரிவு ஏற்படுவதாகக் கூறி, காவலர்கள் சிலர் வாகனத்தில் இருந்தவர்களை எல்லோரையும் இறங்கச்சொன்னார்கள். வாகனம் செல்லும் பாதையிலிருந்து கீழிறங்கி ஆற்றின் வழியே சென்று குறிப்பிட்ட இடத்தைக் கடந்து பிறகு மேலேறி பாதைக்கு வந்தோம். அவ்வாறு கீழிறங்கி ஆற்றில் கால் வைத்து நடந்து வந்ததும் ஒரு இனிமையான அனுபவத்தைக் கொடுத்தது. வேன் ஓட்டுனர் மட்டும் மெல்ல வாகனத்தை ஓட்டி அந்த குறிப்பிட்ட இடத்தை கடந்துவந்துவிடவே, நாங்கள் மீண்டும் வாகனத்தில் ஏறி பயணத்தை மேற்கொண்டோம். கராடியில் நாங்கள் தங்கியிருந்த செண்டர் பேலஸ் ஹோட்டலுக்கு மாலை 06.30 மணிக்கெல்லாம் வந்து சேர்ந்தோம். அறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இன்றைய இரவை அங்குக் கழித்தோம். இரவு நாங்கள் எங்களுடன் அழைத்துச் சென்ற சமையல் காரர்கள் மூலம் சிற்றுண்டி செய்து சாப்பிட்டோம். இது எங்களுக்கு 5-ஆம் நாள் இரவாகும். 

தொடரும்...