Tuesday, October 17, 2023

கோடி பெறும்

கோடி பெறும்

அனைவருக்கும் வணக்கம்.

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் என்று ஆணையிட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார், புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார்.

உடனே அவர் புலவர்களைப் பார்த்து, இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன், மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள் என்று கூறிவிட்டு நான்கு செய்யுளை மட்டும் பாடினார். நான்கு செய்யுள் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று

மிதியாமை கோடி பெறும்

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

கூடுதல் கோடி பெறும்

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்

கோடாமை கோடி பெறும்

இச்செய்யுளில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கதையினை அடிப்படையாகக் கொண்டு நாமும் சுத்த சன்மார்க்கத்தின் புகழை 10 செய்யுள்களில் 10 கோடி பாடலாக பொருந்தும்படி இயற்றியுள்ளோம்.

10 கோடி பெறும் சுத்த சன்மார்க்கத்தின் புகழை நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்


இராமலிங்கம் தி.ம



இராமலிங்கம் தி.ம

மன்னன் வாழும் மண்ணகத்தில் சுத்த 
சன்மார்க்கம் கோடி பெறும்.                        (1)

ஈன உலகில் பசியாற்றும் அன்ன
தானம் கோடி பெறும்.                                        (2)

பெருவாழ் வளிக்கும் வள்ளல் திரு
அருட்பா கோடி பெறும்.                                (3)

உயிரும் உடலும் கூடும் கலை
பயிற்றல் கோடி பெறும்.                                (4)

பொறி ஐந்துள் கடவுள் நிலை
அறிதல் கோடி பெறும்.                                    (5)

தயவே வாழ்வாய்க் கொண்டு கடவுள்
மயமாதல் கோடி பெறும்.                                (6)

போரும் புலையும் ஒழிக்கும் ஜீவ
காருண்யம் கோடி பெறும்.                            (7)

மண்ணும் நெருப்பும் தீண்டா உடல்
உண்மை கோடி பெறும்.                                (8)

ஊமை எனைபெச வைத்த இராமலிங்க
நாமம் கோடி பெறும்.                                    (9)

மத்தியில் புத்தியை நிலைக்க வைக்கும்
சித்திவளாகம் கோடி பெறும்.                        (10)

தி.ம.இராமலிங்கம்
கடலூர்.
9445545475

(அன்று ஒளவையார் நான்காயிரம் பாடல் பாடினார். இன்று பத்து நிமிடத்தில் பத்து கோடி பாடலை வள்ளலார் பாடவைத்துவிட்டார்.- தி.ம.இராமலிங்கம்)  



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.