Sunday, January 31, 2016

"சன்மார்க்க விவேக விருத்தி" - பிப்ரவரி 2016





 "சன்மார்க்க விவேக விருத்தி"- பிப்ரவரி 2016

அன்புடையீர் வந்தனம்!

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையமானது "சன்மார்க்க விவேக விருத்தி" என்னும் மின்னிதழை மாதந்தோறும் ஒன்றாந் தேதி வெளியிடப்படுகின்றது. பிப்ரவரி 2016-ஆம் மாதத்திற்கான மின்னிதழை கீழ்காணும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

or

பொருளடக்கம்
1. கெளரவ ஆசிரியரின் தலையங்கம்
2. ஓமந்தூர் இராமசாமிரெட்டியார்
3. ஹைட்ரஜன் குண்டு
4. பதன்கோட்
5. மதுவின் மடியில்
6. காதலர் தினம் நமதே
7. வள்ளலாரைப் புரிந்துக்கொள்ளுங்கள்
8. சன்மார்க்க குரவர் நால்வர்
9. இந்து மதம் எங்கே போகிறது?
10. சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளின் சரித்திரக் குறிப்புகள்
11. இராமலிங்க அகவல்
12. திரு உந்தியார்
13. கண்மூடி வழக்கம்
14. மாதம் ஒரு மகான்
15. சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி
16. சத்விசாரம்
17. சுத்த சன்மார்க்க நீதி
18. பிப்ரவரி மாதத்தில் அன்று
19. கிறுஸ்து, இஸ்லாம், புத்தம், சமணம் பற்றிய பார்வைகள்
20. Topmost Advise

Friday, January 22, 2016

அருட்பெருஞ்ஜோதி காண வாருங்கள்

அருட்பெருஞ்ஜோதி காண வாருங்கள்
====================================

நாள்: 24-01-2016

தம்முடைய லட்சிய கனவான மரணமிலா பெருவாழ்வாழ்கிய பூரணத்துவத்தை நமது வள்ளற்பெருமானுக்கு கொடுத்த புண்ணிய நாள் எதுவென்றால், அது இந்த தைப்பூச நாளே. இதற்காக நமது வள்ளற்பெருமான் தமது பன்னிரண்டு வயதிலிருந்து பிரயாசை எடுத்துக்கொண்டு, அதனை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால் 1874-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாள் இரவு பன்னிரண்டு மணிக்கு பூரணத்துவம் அடைந்து வெற்றி பெற்றார்.

    பூச நட்சத்திரம் என்பது 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவதாக அமைந்த நட்சத்திர மண்டலமாகும். வள்ளற்பெருமானை இந்த நட்சத்திரமே, இப்பூவுலகில் யாரும் இதுவரை எட்டாத இலக்கினை எட்டவைத்தது. மனிதர்களுக்கு பெருவாழ்வினை அளிக்கக் கூடியது இந்த தைப்பூசம் என்பதை உலகிற்கு முதன் முதலில் எடுத்துக்காட்டினார் வள்ளற்பெருமான்.

    பூச நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் தை மாதமாகும். பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும் திஷ்யம் என்றும் வழங்கப்படும். திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கத் தொடங்கி தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது. தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய நிகண்டு குறிப்பிடுகின்றது.

    தை மாதம் முதல் நாளிலிருந்து வான்வெளியில் சூரியன் தனது பயணத்தை வடகிழக்காக மாற்றிக்கொண்டு மிகப் பிரகாசமாக ஒளிரும். எனவே தைமாதத்தில் வருகின்ற பூச நட்சத்திரத்தில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும், மேற்கில் முழு நிலவும் ஒன்றுக்கொன்று நேராக சந்திக்கும். அன்றைய தினத்தில் "காஸ்மிக் எனர்ஜி" எனப்படும் மெய்காந்த அலைகளின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இத்தருணத்தில் சூரிய சந்திரருக்கு இடையில் இப்புவியில்

நாம், சத்திய ஞான சபையில் திரைகள் அனைத்தும் நீங்கப்பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மிகவும் பிரகாசமாக கண்டுகளிக்கும் வகையில் அறிவியல் பூர்வமாக உருவாக்கி வைத்துள்ளார் நமது வள்ளற்பெருமான்.

    தை மாதத்தில் சூரியன் மகர வீட்டிலும், தைப்பூச நாளில் அவருக்குரிய சொந்த வீடான கடகராசியிலும் சஞ்சரிக்கிறார். அப்போது சூரியனின் ஏழாம் பார்வை சந்திரன் (கடகம்) வீட்டிலும், சந்திரனின் ஏழாம் பார்வை மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலை. அப்போது சூரியனால் ஆத்ம பலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. இதனை ஜோதிடக் கலையின் மூலம் அறிந்த நமது சைவ சமயப் பெரியோர்கள், இந்த தைப்பூச நன்னாளை கொண்டாடும் விதமாக பல்வேறுபட்ட கதைகளை உருவாக்கி அதனை புராணங்கள் எனச் சொல்லி அப்புராண நிகழ்ச்சிகளை சைவ சமயக் கோவில்கள் ஆயிரங்கணக்காண ஆண்டுகளுக்கு முன்னிருந்தே கொண்டாடி வருகின்றனர். இதன் முழு உண்மையும் வள்ளற்பெருமான் அவர்களால்தான் இவ்வுலகிற்கு அனுபவ பூர்வமாக உள்ளங்கை நெல்லிக்கணி போல தெரியவந்தது.

    இப்படிப்பட்ட தைப்பூசம் அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு சித்திவளாகம் சென்று திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் படித்துவிட்டு, காலை தைப்பூச ஜோதி தரிசனத்தை வடலூர் சத்திய ஞானசபையில் கண்டு களித்தால் நமது ஆதி வினைகள் எல்லாம் தீரும். நாளடைவில் புறத்தில் கண்ட தரிசனமானது நமது அகத்திலும் தெரியவரும். நமக்கு ஜோதி தரிசனம் என்றைக்கு அகத்தில் தெரியவருகிறதோ அன்றுதான் நமக்கு உண்மையான தைப்பூச நாள்.

    நாம் ஒவ்வொருவரும் இந்த பிறவியிலேயே நமது அகத்தில் தைப்பூச தரிசனம் கண்டு களிக்க காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் வாழ்த்துகிறது.

---- காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் ----

இராமலிங்க அந்தாதி - 7



அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  

                     இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா


என்றும் கடவுளர்கள் ஏத்தும் பொதுவாம்
மன்றில் நடிக்கும் மணியே - என்னில்
குடிகொண்ட துரியக் குடிலே ராமலிங்கமே
விடிந்த தென்னுள்ளம் விரைந்து.

விரைந்துக் காண வேண்டும்நான் உன்னில்
கரைந்து காணாமைக் கூடுமழகை - நரையுடன்
திரைகூடும் பருவந் தன்னில் ராமலிங்கமே
கரைகாட்டி எனைக் காப்பாய்.

காப்பாகி என்வானின் கதிராகி இப்பாட்டின்
கூப்பாடும் உனது கருணையாகி - நாப்பாடும்
பாட்டெலா மிங்கு பொதுவாகி ராமலிங்கமே
ஈட்டும் மரணமிலா இயக்கம்.

இயங்கி முதல்நான்கை அடுத்த நந்நான்கும்
முயங்கிக் கடந்தும் முடிவில்லை - தயங்கி
நிற்கையில் என்னுயிர் நிறைந்த ராமலிங்கமே
கற்கோயில் காணாக் கடவுள்.

கடவுளே கடவுளே கடவுளே என்றேதினம்
சடமுள்ளே கடவாத சடமானேன் - மடமான
மதக்கோயில் வழிபட்டு மகிழ்ந்தேன் ராமலிங்கமே
சதமான அருட்பாவை சார்ந்திலேன்.

சார்பெலாமாகி பெருஞ் சுடருமாகி புவியில்
ஓர்நிலையாகி சன்மார்க்கம் ஓங்குக - ஏர்உழுது
நீர்ப்பாய்ச்சி நடவும் நட்டால் ராமலிங்கமே
சீர்உற வளர்க்கும் சன்மார்க்கம்.

சன்மார்க்கச் சாலையில் சபையுடன் சித்திவளாக
தன்மார்க்க இடம்காட்டுவது தயவு - துன்மார்க்க
சாதிசமய மதந்தவிர்த்து சார்ந்தால் ராமலிங்கமே
சோதிமயமாய் ஆண்டு சாதிப்பான்.

சாதிப்பேன் என்கிறவனை சோதித்தால் நானும்
வாதிப்பேன் உன்னிலையை வாய்கிழிய - தாதியை
நாடினும் ஓர்சுகம் நல்குமே ராமலிங்கமே
ஆடிப்பாடி னேனுனையே அன்புதாராய்.

அன்பினால் ஏகசிவபோக அனுபோகம் அடைய
என்மூன்று சுதந்தர மூச்சும்போனது - சன்னலான
ஒன்பது ஓட்டையும் அடைந்தது ராமலிங்கமே
ஏன்தான் அருள்தரதாமதம் எனக்கு.

எனக்கென்று வீடில்லை ஊரில்லை உலகமில்லை
தனக்கென்று தந்தை தாயுமில்லை - மனமகிழ
சுவையூட்ட மனைவி சீருமில்லை ராமலிங்கமே
இவையெலாம் நீயெனவே இருந்தேன்.                    610

இருந்த வேலையை இருமாப்போடு விட்டேன்நான்
வருந்தவே காலங்களை வரைந்தாயோ - இருந்தும்
உனைப் பாடுவது உண்மையெனில் ராமலிங்கமே
எனைஎவ் வுலகமும் ஏற்றும்.

ஏற்றிய வாழ்வெங்கே ஈட்டிய செல்வமெங்கே
போற்றிய உலகமெங்கே பிறருக்காக - ஆற்றிய
வேலை யெங்கே வள்ளல் ராமலிங்கமே
காலைநீட்டி படுத்தக் காலை.

காலைமாலை இரவென்று காலக் கணக்கில்
ஓலைவரும் வரை ஓயாதுசுகத்தை - சேலைத்
தழுவிக் கூடித் தளர்ந்தேன் ராமலிங்கமே
அழுகும் உடலில் அழகாய்நீ.

அழகாய் நீயும்உன் அருகில் நானுமிருக்க
விழலாமோ தேகம் விமலா - நிழல்தரும்
மரத்தை வீழ்த்த மனமேனோ ராமலிங்கமே
கரத்தைப் பிடித்தேன் கைவிடேல்.

கைவிட மாட்டாயென கைத்தாளம் போட்டேன்
தைவிட மனமில்லை தலைவா - பைவிடமெலாம்
போக்கிப் பூசத்தன்றே புணர்வாய் ராமலிங்கமே
ஆக்கை கலக்கஓர் அறைதருவாய்.

தருகின்ற சோதனையை தலைவணங்கி ஏற்கவாநீ
அருள்கின்றாய் ஐந்தொழில் அறிந்து - தருக்கமாய்
கேள்விகேட்க விடலாமோ கருணை ராமலிங்கமே
நாள்கடக்கும் முன்கரம் நீட்டாய்.

நீட்டிய அருட்பாக்களில் நாட்டிய அருளைநீ
ஊட்டியே நான்வளர ஊத்தையெலாம் - பாட்டிலே
பாடையேறி போகவே பார்த்தேன் ராமலிங்கமே
ஆடையாகி என்தேகம் ஆனான்.

ஆனேன் என்றுஅன்று அறைந்த முரசெலாம்
வீனேன் எனக்குமறைய விழையுமோ - கூனேன்
குழையேன் நின்அருளை குறியேன் ராமலிங்கமே
பிழையேன் நாயேனுன்னைப் பாடேன்.

உன்னைப் பாடாத உன்னை நினையாத
சன்மார்க்க சங்கம் சாராதவர் - வன்உலகர்
தன்மார்க்கம் பெரிதென தானிருப்பர் ராமலிங்கமே
உன்மார்க்கம் அறிந்தால் உருகுவர்.

உருகும் மனம்படைத்தோர் உண்மை ஞானியர்
அருளும் குணம்படைத்தோர் ஆண்டவர் - தரும
சிந்தை யுடையோரே சன்மார்க்கர் ராமலிங்கமே
உந்தை அடியாரேஎல்லா முடையார்.                      620

யார்எனத் தேடியுள்ளே யாகத்தீ வளர்க்க
பார்எனைப் பார்என்பான் பரமன் - ஓர்
ஆயிரங் கோடிசூரிய அனலை ராமலிங்கமே
பாயிர மாயிரம்பாடிப் பணிந்தேன்.

பணிதல் வேண்டாம் பொய்ச்சம யாதியை
அணி செய்வோரை அடித்திடுக - தணிக்கை
செய்திடுவீர் மதங்களின் சுயத்தை ராமலிங்கமே
நெய்த மார்க்கம்தான் நிலைக்கும்.

நிலைஎனக் கருதும் நிழல்கலை தெய்வங்களை
மலைஎனக் கூறுவோரை மாய்த்திடுக - சிலை
வணங்கும் தொல் வழக்கத்தை ராமலிங்கமே
குணமுடையர் இன்றே கைவிடுவர்.

விடுத்ததால் வந்த விளைவை அறியீர்
கடுத்த மதத்தாலென் கண்டீர் - இடுகாட்டு
பிணங்கூட எழுந்து படிக்கும் ராமலிங்கமே
மணஞ்செய்த அருட்பா முறையை.

முறைசெய்த ஆறும் மலர்ந்த பிரபந்த
மறையான ஏழும் மனிதர் - நிறைகாண
எழுகின்ற இந்த எட்டும் ராமலிங்கமே
பழுக்கின்ற சன்மார்க்கிகளின் பாட்டு.

பாட்டுக்கு அடிமையாகில் புன்னான மதத்
தீட்டெல்லாம் இனித் தீயாகும் - கூட்டிய
மதக் கூட்டங்கள் மாயவே ராமலிங்கமே
வதஞ் செய்கின்றான் வாழ.

வாழவே பிறந்து வயோதிகம் அடைந்து
வீழவே போவரெலாம் வீணர் - ஆழவே
அருட்பாக் கடலில் ஆழ்ந்தால் ராமலிங்கமே
பெருவாழ்வு அளிப்பான் பார்.

பார்வை மறைந்தால் பரம்பொருள் தெரியும்
கூர்ந்து நோக்கு குறிநடுவே - ஈரிரண்டும்
ஒன்றாய்க் கூடி ஒளியாகும் ராமலிங்கமே
உன்அருளால் கூடுவது உண்மை.

உண்மை அறியாத உலகீர் நீவிரெல்லாம்
கண்மை அழகிலே கவிழ்ந்தீர் - பெண்மை
மதமாம் சுகத்தில் மாண்டீர் ராமலிங்கமே
நிதமும் ஆண்மை நவின்றான்.

நவின்ற பலகோடி நலிந்த சமயமதக்
கவிஞர்கள் பாடிய  கவிதையெலாம் - குவிந்தன
குப்பைக் கூளங்காலாய் குருவே ராமலிங்கமே
தப்பேது மில்லாததுஉன் தயவுகவி.                       630

கவியாலே சத்தியங் குறித்து என்றும்
புவியில் சாகாத புண்ணியா - தவித்தேனே
அதுபோல் நானும் ஆகவே ராமலிங்கமே
மதுபோதை ஆனானென் மனதில்.

தில்லை என்றும் திருப்பதி என்றுமோர்
கல்லை வணங்குவார் கல்லார் - நல்லார்
வணங்கும் ஞானசபை வெளியே ராமலிங்கமே
மணம் புரிந்துநமை மீட்பார்.

மீட்பேன் என்றே மேட்டுக் குப்பத்தில்எனை
ஆட்கொண்ட தேவா ஆங்கே - பூட்டிட்டு
மறைய எனக்குமோர் மனையை ராமலிங்கமே
இறையென வந்து இடுவாய்.

இடுகாடு செல்லாது இறையருள் பெற்று
சுடுகாடும் காணாத சுகந்தருவாய் - எடுத்த
இவ்வுடம்பில் கலந்து இருக்க ராமலிங்கமே
அவ்வுடல் மூன்றும் அருள்.

அருளன்றி ஆடேன் ஆருயிர்க் காப்பேன்
இருள்நெறி ஒழிய இயங்குவேன் - திருவருள்
பெற்று ஓங்குவேன் பணிந்து ராமலிங்கமே
கற்றதைக் கற்று களிப்பேன்.

களித்து வீண்காலம் கழியேன் நல்விசாரணை
அளித்து எனை அடக்குவேன் - எளிதில்
சாகாவரம் பெறுவேன் சத்தியம் ராமலிங்கமே
போகாத நிலைக்கும் போவேன்..

போவென எனைஇப் பூமியில் பிறப்பித்து
ஈவென எல்லாம் ஈந்தாய் - தாவென
கேட்காத போதே கொடுத்த ராமலிங்கமே
தீட்டாக நான்வீழாது தடுத்தாய்.
தாயுடம்பில் உள்ளபோதே தாங்கியத் தந்தைநீ
சேயுடம்பில் உள்ளபோதே சேர்ந்தாய் - பாயும்
மூச்சினுள் ஜீவனாய் முயங்கி ராமலிங்கமே
பேச்சான என்மொழி பெரிது.

பெரிதினும் பெரிதாகி பெயரொன்றும் இல்லாதாகி
அரிதினும் அரிதான அருள்ஜோதி - சரியை
கிரியை யோகஞானம் காணாது ராமலிங்கமே
உரிமை என்றோதில் உறவுறும்.

உறவெனச் சொல்ல உனையன்றி இவ்வுலகில்
இறவாதார் யாருண்டு எனக்கு - மறவாதே
எனையன்றி உனக்கும் உறவில்லை ராமலிங்கமே
உனைப்போல் நானும் உத்தமன்.                         640

உத்தமன் உறவெனக்கு உற்ற அந்நாழிகை
அத்தினம் இன்பத்தை என்சொல்வேன் - சித்தி
வளாக சித்தையே விழைந்தேன் ராமலிங்கமே
ஆளாக்கு என்னையுன் அடிக்கு.

அடிக்கு ஏவல்செய்யும் அருளான வம்சத்தில்
தடிக்கு விழுந்த தடியேன் - படித்து
அறியும் பண்பிலேன் அல்லன் ராமலிங்கமே
குறித்து உரைத்ததை கருதேன்.

கருத்தறியேன் நின்உளக் குறிப்பறியேன் சாகா
மருந்தறியேன் கொடும் மனத்தினேன் - இருள்
நெறியில் பல்கால் நின்றேன் ராமலிங்கமே
வெறித்த என்னால் விளைவதென்ன.

என்னெனச் சொல்வேன் இடுகாட்டுப் பிணமாய்
தன்னிலை அறியாது தளர்ந்தேன் - அன்றியும்
பொறித்த மதத்தில் புகுந்தேன் ராமலிங்கமே
பறித்தப் பழத்தில் புழுவேன்.

புழுவினுள் புழுத்தப் புழுவாகி அதிலிருக்கும்
அழுக்கினை உண்ணும் இனமானேன் - எழுத்தில்
பொய்யே எழுதிஎனைப் புகழ்ந்தேன் ராமலிங்கமே
மெய்யாய் இருக்க மனமிலேன்.

மனமுறும் காமத்தை மறித்திட அறியேன்
தினமும் மங்கைமடித் தேடியே - கனமும்
சுகத்தில் லயித்து சுழன்றேன் ராமலிங்கமே
இகபர சுகம் அறிந்திலேன்.

அறியாதவன் போல் உன்முன்னே நின்று
எறியாத மதங்களுடன் எதிர்த்தேன் - வெறியோடு
வேதத்தை மதித்து வீழ்ந்தேன் ராமலிங்கமே
நாதமுடி மேல் நாடிலேன்.
நாடிய நாட்டமெலாம் நானுரைத்தால் நாயும்
ஓடிவிடும் குணத்தில் ஒன்றினேன் - வாடியென
மகளிரை அழைக்கும் மதியேன் ராமலிங்கமே
முகநக நீறிட்டு மயக்கினேன்.

மயக்கத்தில் இருக்கவே மூடமத சமயநெறியை
தயக்கமின்றி பிடித்துத் தூக்கினேன் - பயமின்றி
பிறர் நயக்க பிணமுமாவேன் ராமலிங்கமே
அறத்தை கற்றிடாத அரக்கனானேன்.

அரக்கச் செயலெனினும் அறமென மதங்கள்
இரக்கமின்றிச் சொன்னதால் அந்தோ - நரகச்
செயலாய் புலாலை இச்சித்தேன் ராமலிங்கமே
பயமின்றி போனதே பக்தி.                               650

பக்தியால் வள்ளலுன் பாதக்கமலம் தொழுது
நிக்கிரகம் செய்ய நினையேன் - அக்கிரமம்
செய்தேன் சுக்கில சூட்சுமத்தை ராமலிங்கமே
மெய்காக்க எனக்கு முயங்கு.

முயங்கிய அருட்பாவில் முப்பத்து மூன்றின்
சுயம்பு மந்திர சித்தறியேன் - உயர்ந்ததென்று
ஐந்தெழுத்தால் ஐயோ இறந்தேன் ராமலிங்கமே
உந்தன் சாகாமந்திரமே உயர்ந்தது.

உயர்ந்த உண்மையும் உவட்டாத இன்பமும்
நயந்த வள்ளலை நானறியேன் - மயக்கும்
சைவசமய நீற்றைச் சூடினேன் ராமலிங்கமே
ஐவரும் செத்திடசாகா ஐயன்நீ.

நீயும்நானும் அருவமும் நல்உருவ முமாய்
பாயும் மூச்சாய் பாரிலிருந்து - மாயுமிந்த
மானிடக் குலத்தை மீட்போம் ராமலிங்கமே
நானினிஉன் உத்தம நண்பன்.
நண்பனின் சொல்லெல்லாம் நல் மந்திரமாக
கண்மூன்றும் திறந்திடக் களித்தேன் - விண்
உலகம் முழுவதும் உலவினேன் ராமலிங்கமே
இலகுந் தொழில்யாவும் அளித்தான்.

அளித்த சுகங்களில் ஆருயிர் நண்பன்பெற்று
களித்த சாகாசுகத்தைக் கண்டேன் - எளிதாய்
என்னுள் அம்மை அப்பனுமாய் ராமலிங்கமே
நன்றாய்க் கலந்து நடனமிடுகிறான்.

நடராஜ நடனமது நடுநாடி ஆட்டமது
வடலூர் சபையது வந்தால் - உடலூர்
அழியாது உண்மை இது ராமலிங்கமே
கழியாத உடலிது காண்.
காணுமிட மெல்லாம் காய எலும்புகளே
தாணு மழிவான் தன்னாலே - வாணுலகம்
சென்றாரு மழிவர் சித்துருவாய் ராமலிங்கமே
வென்றான் சாகா வரம்.

வரம்யாவும் பெற்றே வந்தேன் இப்புவியில்
பரம சித்தாந்தப் பதியுமானேன் - இரவு
பகலற்ற இடமாய்ப் பொலிந்தேன் ராமலிங்கமே
உகத்தில் பெயராய் எடுத்தேன்.

எடுத்த தேகமதில் எல்லாம் வல்லசித்து
உடுத்தி வந்தேன் உலகீர் - கடுத்துப்
பார்க்காதீர் நான் பரமாகாச ராமலிங்கமே
சார்ந்த சன்மார்க்க சத்தியன்.                             660

சத்தியம் குறித்தேன் சாகாத வித்தக
பத்தியம் அறிந்துப் பாரில் - சித்தகம்
புரிய வந்தேன் பாராய் ராமலிங்கமே
அரியதேக மூன்று மானேன்.

ஆனேனென்று சொல்லடா இறவா நிலை
தானேபெற்றே னென்று துள்ளடா - ஊனே
புகுந் தாட்டுவேன் பாரடா ராமலிங்கமே
வகுத்தப் பாதையில் வாங்கடா.

வாங்கடா வந்தால் வரம்பெற்று சாகாது
ஓங்கலாம் சத்தியம் ஈதடா - சாங்கியமேதடா
சாதிமத இனமும் சூதடா ராமலிங்கமே
போதிக்கும் சங்கம் போங்கடா.

போங்கடா போக்கற்ற போக்கிரிப் பசங்களா
ஆங்காங்கு அலைந்து ஒழியுங்கடா - ஈங்கு
சன்மார்க்க சங்கம் சாருங்கடா ராமலிங்கமே
உன்தேகம் புகுவான் உண்மையடா.

உண்மையடா இதுகேள் என்றாலும் கேளாது
பண்ணாத தீமைகள் பண்ணுங்கடா - உண்ண
கொலை செய்யும் கொலைகாரங்களா ராமலிங்கமே
புலை தவிர்த்தான் பாருங்கடா.

பாருங்கடா சத்தியஞான பதியைக் கண்டு
ாருங்கடா வந்தால் வானாகலாம் - சீரும்
சிறப்புமாய் சாகா சங்கமடா ராமலிங்கமே
இறப்பொழிப்பான் நம்பி இருங்கடா.

இருங்கடா இலகும் ஐந்தொழிலைப் பெற்று
அருட்பெருஞ் ஜோதி யாகலாமடா - குருவும்
தீட்சையு மின்றி தூங்கடா ராமலிங்கமே
காட்சி தருவான் காணுங்கடா.
காணுங்கடா கண்மூடிக் கலை வழக்கமெலாம்
நாணுமடா சன்மார்க்கமே நீளுமடா - தாணும்
முக் கண்ணுடன் மடிவானடா ராமலிங்கமே
எக்காலமும் இறவாமல் இருப்பானடா.

இருப்பானடா எல்லா உயிருள்ளும் அவனை
கருணை கொண்டு காணுங்கடா - அருமை
தம்பிகளா சத்தியமிது தானடா ராமலிங்கமே
நம்முயிர் ஆனானென்று நில்லடா.

நில்லடா சன்மார்க்கமே நிஜமென்று மற்றது
கல்லடா என்றே கூறுங்கடா - எல்லாமுடைய
அருட்பெருஞ் ஜோதி யாண்டவரடா ராமலிங்கமே
இருக்க இன்னும்மயக்கம் ஏனடா.                   670

ஏனடா இவ்வுலகில் இறந்தும் பிறந்தும்
போனது போதாதா படுங்கடா - தேனது
மானது என்ற மோகமேனடா ராமலிங்கமே
தானதுவாய்க் கலந்துஇருந் தானடா.

டாத செயல் ஒன்றில்லை என்றே
கடாகாச நிலை கூடியதடி - சடாந்த
சமரச நிலை சூழ்ந்ததடி ராமலிங்கமே
சுமக்கும் உடலிது சுகந்தானடி.

சுகமென்றாலும் காமம் சிறிதேனும் இல்லை
அக அனுபவம் அடைந்தேனடி - சிகரத்தில்
ஏறி சிற்றம்பல மானேனடி ராமலிங்கமே
கூறிய முத்தேகம் கண்டேனடி.

அடியே என்றுன்னை அழைத்து வாழ்த்த
தடியேனுக்கு குரோதந் தானடி - படியாத
மனதால் கூடுது மலந்தானடி ராமலிங்கமே
எனநான் இருக்க இசைந்தானடி.

இசைந்த திருவருள் அமுதால் என்பாட்டும்
திசை யெல்லாம் தாக்குமடி - பசையற்று
போகுமடி எல்லா பதிகளும் ராமலிங்கமே
ஆகுமடி அவனே இறைவனடி.

இறைவனடி கண்ட இறைவனடி அவன்
மறையை மறுத்த மாந்தரடி - குறை
இல்லா நாளேதடி எனக்கு ராமலிங்கமே
எல்லா மன்றோ இடரில்லையடி.

இல்லை எனாது எதையும் கொடுக்கும்
வல்லமை எனக்கு வருமடி - கல்லான
லோப குணங்கள் லாபமோ ராமலிங்கமே
கோப மடைவான் கூறுங்கடி.
கடிதம் எழுதிக் கடவுளுக்கு அனுப்பினேன்
படித்து என்னை பிடித்தானடி - மடிகாம்பு
தேடும் கன்றாய்த் தவித்தேனடி ராமலிங்கமே
கூடும் நாளைக் குறித்தானடி.

குறிக்காக மோகித்துக் குதிக்கும் மனதை
அறிவால் அடக்கி ஆண்டேனடி - பொறி
புலன்களும் எனக்குப் புல்லடி ராமலிங்கமே
உலக மானப்பின் என்னடி.

என்னடி கண்டே என்முடி கண்டேன்
உன்னடியால் எனக்கேது ஆறடி - துன்
மார்க்க மெலாம் மாய்ந்ததடி ராமலிங்கமே
ஓர் ஒளியாகி ஓங்குதடி.                                 680

ஓங்கின உலகம் உயர்ந்தன உயிர்கள்
ஏங்கின மனதிலே இன்பமடி - தூங்கிய
மனித ரெல்லாம் மாண்டாரடி ராமலிங்கமே
இனிய இறைமார்க்க மடி.

                  மடித்தேடிய மன்மதன் மதம்பிடித்த மன்னவன்
இடிவிழுந்து துடிக்க இறப்பான் - தடியெடுத்தக்
காவலன் நோய்வந்து கதறுவான் ராமலிங்கமே
பாவலத்தால் திருவருள் புகட்டு.

கட்டும் மனதில் காமம் புகுந்திடில்அதை
வெட்டி எறிபவர் வேந்தர்தாமே - சட்டி
உடைந்தால் பய னுண்டோ ராமலிங்கமே
துடைத் தெறிவாய்த் துயரை.

துயரும் துக்கமும் துனிந்தவர்க் கில்லை
பயமும் அவர்க்கு பூஜ்ஜியமே - சுயஞ்
ஜோதி அருட் ஜோதியாய் ராமலிங்கமே
ஆதியுமாய் இருப்பா ரவர்க்கு.

அவரென்று சுட்டும் எவரும் வள்ளல்
இவர்க்கு அடிபணிந்தா ரன்றே - சுவர்
இல்லா சித்திர மொன்றை ராமலிங்கமே
நல்லதாய் வரைந்தான் நன்று.

நன்றிது தீதிது நான்கிது இரண்டிது
என்ற றிந்தோர் இங்கே - சன்மார்க்க
சத்திய சங்கம் சார்ந்து ராமலிங்கமே
நித்திய மென்று நின்றனர்.

நின்றனர் யாவரும் நின்னருள் முகம்
என்று காண்போம் எனவே - அன்புடன்
எனக் கருளினா யன்றோ ராமலிங்கமே
உன தருளேஎன் னுயிர்.
உயிர் நண்பனேஎன் ஆன்ம அறிவனே
மயிலை குயிலாக்கும் மாயனே - துயில்
எழுப்பி என்னை ஏற்றிட்ட ராமலிங்கமே
அழுவேன் அப்ப னன்றோநீ.

நீதானே எந்தன் நீலவான நிலவுஎனது
பாதானே பாடுதுனைப் புகழ்ந்து - மாதா
பிதா குருதெய்வ பக்தியை ராமலிங்கமே
சதா நீயெனவே சார்ந்தேன்.

தேனென இனிக்கும் திருவருள் நூலினை
தானென கொள்ளும் தயவு - வானென
கலந்தோ ரெல்லாம் கூறுவர் ராமலிங்கமே
உலகெலாம் ஓதும் உறவன்.                             690

உறவன் இவனென உண்மைத் தெளிந்து
பெற வேண்டியதைப் பெற்றேன் - துறவு
கொண்டா ரெல்லாம் கதற ராமலிங்கமே
தொண்டரென எனைத் தந்தான்.

தந்திரத்தால் சோம்பல் தூக்கம் தவிர்த்து
விந்து மேலேறும் வழியறிந்தேன் - மந்தி
மனதடக்கி வீதி மேலேற ராமலிங்கமே
வனம் போகாதுஎன் வயது.

வயதினால் மூப்பு வருவதைத் தடுத்து
தயவெனும் முப்பூ தருவான் - அயல்
என நினையாதீர் உலகீர் ராமலிங்கமே
மனதை அடக்கும் மருந்து.

மருந்திது மணியிது மந்திரமிது மதியிது
ஒருமையிது மார்க்க மிது - குருவிது
அருளிது குலமிது என்ற ராமலிங்கமே
உருவினை மறைத்த உளவெது.

உளவு தெரிந்தேன் உடலினை மறைக்கும்
அளவு தெரிந்தேன் உலகிலே - களவாடும்
பொருள் தெரிந்துப் பணிந்து ராமலிங்கமே
அருளும் என்று அழுதேன்.

அழுதேன் அழுதேன் அழுகை தேனாகவே
எழுதிய தெல்லாம்திரு வருளானது - எழு
என்றிட செத்தவர் எழுந்தார் ராமலிங்கமே
உன்திறம் எனக்கும் உண்டு.

உண்டுண்டு உறங்கும் உலகீர் உறங்காநிலைக்
கண்டு அதில்புகவும் கருதீர் - நண்டுபோல்
சமயமதக் குழியைச் சூழ்ந்தீர் ராமலிங்கமே
இமயம் என்பதை அறியீர்.
அறிந்தது பொய்என்று அறிந்தேன் அறியாதது
அறிவென்பதை அறிந்து அழுதேன் - பொறி
வைத்தப் பொறியால் விழுந்தேன் ராமலிங்கமே
செத்தாரைக் கண்டு சிரித்தேன்.

சிரித்த மதமெலாம் சிதைந்தோடப் பற்றி
எரிந்தன சடங்குகள் அய்யோமத - நரிகள்
எல்லாம் ஓடிமடிந்து ஒழிந்தன ராமலிங்கமே
பல்லோர்க்கும் நற் பதியனான்.

பதியுனைப் பணிந்துப் பாடி சதாசதம்
பதித்தே திருவருள் பெற்றேன் - சதி
ஒன்றும் இல்லை உலகீர் ராமலிங்கமே
என்றால் திருவருள் ஆடும்.                              700


(இராமலிங்க அந்தாதி - தொடரும்)