Tuesday, January 30, 2018

இறுதி வார்த்தை

இறுதி வார்த்தை

திருவருட்பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்வதற்குச் சில நாளைக்குமுன் தமது அன்பர்களை நோக்கி:

          "நம்மோடு கூடிப் பழகியிருந்தவர்களையும் பின் கேள்வியால் விரும்புகின்றவர்களையும் கைவிட மாட்டோம், ஆணை, ஆணை" என்று உறுதி கூறியருளினர்.

          ஸ்ரீமுக வருஷத்தில் மார்கழி மாதம்முதல் வள்ளலார் சித்திவளாகத் திருவறைக்குள் சென்று சிலநாள் கதவை மூடிக்கொண்டு இருப்பதும் பிறகு வெளிவந்து பிரசங்கஞ் செய்வதும், மறுபடியும் சிலநாள் தாளிட்டுக்கொண்டு உள்ளே இருப்பதும், பின்னர் வெளிவந்து பிரசங்கஞ்செய்வது மாகிய அருட்பெரு நெறியில் திகழ்ந்தனர்.

          அங்ஙனம் நிகழுநாட்களில் ஒருநாள் அன்பர்களை நோக்கிக் "கடையை விரித்தோம். கொள்வார் இல்லை. கட்டிவிட்டோம். நீங்கள் அருள் அடைவதற்கு இந்தத் தீபத்தினைக் கடவுளெனக் கொண்டு ஜீவகாருண்யமுடையயராய்ச் சிந்தித்துக் கொண்டிருங்கள். இனி இரண்டரை கடிகை நேரம் உங்கள் கண்ணுக்குத் தோன்ற மாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கும் இருப்போம். பின்னர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவர். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பலநிகழ்த்துவோம். நாம் திருக்கதவை மூடியிருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆஞ்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார்". என்று கட்டளையிட்டுச் சித்தசாந்தம் உண்டாக்கி ஸ்ரீமுக வருடம் தை மாதம் புனர்ப்பூசத்தன்று இரவு 12-மணிக்கு மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத்தில் திருக்காப்பிட்டுக் கொண்டனர். (ச.மு.கந்தசாமி ஐயா பிரபந்தத்திரட்டு-அ.திருநாவுக்கரசு பதிப்பு-பக்கம்132)

          சன்மார்க்க அன்பர்களுக்கு எமது இனிய வணக்கங்கள். நமது வள்ளற்பெருமான் திருக்காப்பிட்டுக்கொண்டு இம்மாதத்தோடு 144 ஆண்டு காலங்கள் ஆகின்றது. வருகின்ற 31-01-2018 புதன் கிழமை அன்று வடலூரில் தைப்பூசம் காண இருக்கின்றோம். உலகெங்கிலுமுள்ள சன்மார்க்க அன்பர்களும் பொது மக்களும் தைப்பூசம் காண வடலூர் நோக்கி வரவுள்ளனர். அவர்களை எல்லாம் வருக வருக என வரவேற்கின்றேன்.

          ஐயா அவர்கள் திருக்காப்பிட்டுக்கொள்ளும் முன் கூறிய உறுதிமொழியினை இவ்வேளையில் நினைவுறுவோம். “நம்மோடு கூடிப் பழகியிருந்தவர்களையும் பின் கேள்வியால் விரும்புகின்றவரகளையும் கைவிட மாட்டோம், ஆணை, ஆணை” என்று இருமுறை அழுத்தமாக ஆணை இட்டு கூறும் இந்த சத்திய வாக்கு நம்மை எல்லாம் சன்மார்க்கத்தை நோக்கி ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

          “நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்கு உபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகளாய் இருத்தல் வேண்டும்” என்கின்ற வள்ளற்பெருமானின் அவாவினை நாமெல்லாம் தலைமேல் கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

          1865-ஆம் ஆண்டு துவங்கிய சன்மார்க்க சங்கம், 1867-ஆம் ஆண்டு துவங்கிய தருமச்சாலை, வைத்தியசாலை, சாஸ்திரசாலை, உபகாரச்சாலை, விருத்திசாலை, உபாசனாசாலை, யோகசாலை, விவகாரசாலை, சன்மார்க்க விவேக விருத்தி மற்றும்  சன்மார்க்க போதினி, 1872-ஆம் ஆண்டு ஏற்படுத்திய ஞானசபை,  சமரச வேத பாடசாலை போன்ற சாதனங்களின் மூலம் சுத்த சன்மார்க்கத்தை நிலை நிறுத்த வள்ளற்பெருமான் முயன்றார்.

          இவைகளில் சன்மார்க்க சங்கமும், தருமச்சாலையும் தவிர மற்ற அமைப்புகள் எல்லாம் அன்றைய மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஞானசபை உட்பட எல்லாம் தோல்வியில் முடிந்தன. இன்றைக்கும் மக்களில் 99 சதவிகிதத்தினர் பொருளியல் மற்றும் உலகியல் நாட்டத்துடன் இருக்கின்றார்களே தவிர அருளியல் நாட்டம் அறவே இல்லை என்பதனை காணமுடிகின்றது. அன்றைய மக்கள் எல்லாம் சாதி, மதம், சமயங்களில் அபிமானித்து இருந்தனர். அவர்களுக்கு சுத்த சன்மார்க்க கொள்கைகள் கசப்பூட்டுவனவாக இருந்தன. இதன் காரணமாக மனமுடைந்த நமது வள்ளற்பெருமான் “கடையை விரித்தோம், கொள்வார் இல்லை, கட்டிவிட்டோம்” என்று மக்களிடையே இறுதியாக முழங்கி திருக்காப்பிட்டுக்கொண்டார்.

          உலக மக்கள் என்று சுத்த சன்மார்க்க கொள்கைக்கு வருகின்றார்களோ அன்று திருக்கதவம் திறக்கும். வெள்ளாடை மேனி வெளிப்படும். அருட்பெருஞ்ஜோதி ஒளிரும், சித்துக்கள் பல நடந்தேறும். அப்படிப்பட்ட காலம் இன்று வந்துக்கொண்டிருக்கின்றது.

“அந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர், உறவினர், அடுத்தோர், வார்த்திபர், வாலிபர், பாலியர், குமாரர், ஆண்மக்கள், பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலம்” என்று வள்ளற்பெருமான் கூறும் அந்த பொற்காலம் / சன்மார்க்க காலம் விரைவில் வரப்போகின்றது.

மக்களாகிய நாமெல்லாம் சன்மார்க்க காலத்தில் வாழ தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டு வருவோம். அதற்குள் மரணம் வந்துவிட்டதே என கலங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் சன்மார்க்க காலத்தில் எழுவீர்கள். அஞ்ச வேண்டாம். அஞ்ச வேண்டாம்.

வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் சமரசபஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் அருள் நிலையம் என்றென்றும் உங்களுக்கு பக்கத் துணையாக இருந்து  அருள் வழிநடத்தும் என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மொழிகின்றார்.

இவ்வேளையில் வள்ளற்பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுதம் ஐயா, கல்பட்டு இராமலிங்கம் ஐயா மற்றும் வள்ளற்பெருமானிடம் கூடிப் பழகிய நண்பர்கள் எல்லாம் நம்மை சன்மார்க்க வழி நடத்துவார்கள் என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மொழிகின்றார்.

“என்னால் நீங்கள் நன்மையடைவது சத்தியம்” என்கின்ற வள்ளலின் சத்திய வார்த்தைகளை எண்ணி நன்மையடைவோம். தைப்பூசம் காண வடலூர் வாருங்கள் என காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் உங்களை அன்போடு அழைக்கின்றது.

தைப்பூசம் காணும் நேரங்கள்

31-01-2018 – காலை 06.00 மணி
31-01-2018 – காலை 10.00 மணி
31-01-2018 – மதியம் 01.00 மணி
31-01-2018 – இரவு 07.00 மணி
31-01-2018 – இரவு 10.00 மணி
01-02-2018 – காலை 05.30 மணி

TMR

Monday, January 15, 2018

குளத்தங்கரை அரச மரம் - வ.வே.சு. ஐயர்

குளத்தங்கரை அரச மரம்
தமிழில் முதல் சிறுகதை
வ.வே.சு. ஐயர் 


பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்தது மரம்- பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ தொண்ணூறு நூ று வருஷமிருக்கும். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்துங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள். பட்டு பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளை கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ஸ்நானம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவுந்துகொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளை பார்த்து சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்தது.



குளத்தங்கரையெல்லாம் கம் என்று மணம் வீசும். இப்பொழுது ஆதரிப்பாரில்லாமல் பட்டுப்போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் அதன்அதன் புஷ்பங்களை பொறுக்கி ஆசையுடன் மோந்து பார்க்கும்...ஆ! அந்த நாளையெல்லாம் நினைத்தால் ஆசையாயிருக்கிறது! ஆனால் இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாயிருக்கும்போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்று போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் ருக்மிணியைத் தெரியாது. பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகத்தை நினைச்சால் அவளே எதிரில் வந்து நிற்பது போலிருக்கிறது எனக்கு. அவள் நெத்தியின் அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும் காலும் தாமரைத் தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள் அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விசாலம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமற்ற நீல ஆகாசம் ஞாபகத்துக்கு வரும். அவள் கண்களை பார்த்ததும் நீலோற்பலம் நிறைஞ்ச நிர்மலமான நீரோடையைப் போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு! எத்தனை பரிவு! ஸோமவார அமாவசைகளில் பரமாத்மாவைப் பூஷிக்கிறதற்காக என்னைப் பிரதஜிணம் செய்வாள். அப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னவென்று சொல்லுவேன்! என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே! ஐயோ, என் ருக்மிணித் தங்கமே! எப்போ காண்பேன் இனிமேல் உன்னைப் போலக் குழந்தைகள்? அவள் குழந்தைப் பருவம் முதல், அவளுடைய கடைசி நாள் வரையில், இங்கே வராத நாளே கிடையாது. அஞ்சாறு வயஸின் போதெல்லாம் ஸதா ஸர்வ காலமும் இங்கேயேதான் விளையாடிக்கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க வேணுமென்று நினையாதவர் இல்லை. எத்தனை அவசரமான காரியமிருந்தாலும் சரி, நம்ம வேணுகோபால் சாஸ்திரி இருந்தாரே, அவர் காலமே ஸ்நாநஞ் செய்துவிட்டு, குழந்தை கை நிறைய மல்லிகைப் பூப்பறித்துக் கொடுத்துவிட்டுத்தான் போவார். நம்ர் மாடு கன்றுகள் கூட, எத்தனை முரடாக இருந்தாலும் சரி, அவளைக்கண்டதும் உடனே முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு, அவளுடைய சிறிய கைகளால் தடவிக் கொடுக்க வேணுமென்று அவள் பக்கத்திலேயே போய்க் காத்துக் கொண்டிருக்கும். குழந்தைகள் என்றால் எனக்கு எப்பொழுதுமே ஆசை. அனால் அவள் வந்துவிட்டால் போதும், மெய் மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி வெயில் படக்கூடாது. அவள் கொஞ்சம் ஒதுங்கியிருந்தால்கூட என் கைகளை நீட்டி அவளுக்கு குடை பிடிப்பேன். என்னுடைய நாதனான சூரியனுடைய முகத்தை காலமே ஆசை பயபக்தியோடு தரிசனம் செய்தானதும் எனக்குக் குழந்தை ருக்மிணியின் ஞாபகம் வந்துவிடும். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டேயிருப்பேன். அவள் வந்ததும் எனக்குள் அடங்காத ஆனந்தம் பிறந்துவிடும். குழந்தைகளுக்குள் பேதம் பாராட்டக்கூடாதுதான்.  ஆனால் மற்ற யார் வந்தாலும் எனக்கு அவள் வருகிறது போல் இருப்பதில்லை. நான் மாத்திரமா? ஊரில் உள்ள மற்ற குழந்தைகள்கூட அவள் வந்த பிறகுதான் பூரணமான ஆனந்தத்துடன் விளையாடும். அவள்தான் அவர்களுக்குள்ளே ராணி. அத்தனை காந்த சக்தியிலிருந்து அவளிடத்தில். அப்போதெல்லாம் அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால் நம்ம ருக்மிணி அணிந்துகொண்டால் அழகாக இருக்கும்' என்று உடனே வாங்கி வந்துவிடுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார். அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அந்த நிலாவுக்கும் அவளுடைய அலங்காரத்திற்கும் அவளுடைய அழகுக்கும் என்ன ஏர்வை! கண்கொள்ளா காட்சியாயிருந்தது எனக்கு! அவள் குரலைப்பற்றி உங்களுக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு! தங்கக் கம்பிபோல் இழையும் அவள் சாரீரம். இன்னைக்கெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாலும் சலிக்காது. ஜோத்ராக்களின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன். இப்போது நினைச்சாலுங்கூட அவளுடைய குரல் அதே இனிமையுடன் நயத்துடன் என் மனசில் கேட்கிறது. அவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன்பு வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன்? குழந்தையாக இருக்கும்போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான் வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லா தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில் விட அதிக பாசம் காட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள். கண் பொட்டையான பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலேயே அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவதை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதை விட அதிகமாகவே போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு இருந்ததனால்தான் அவளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு கடினமான கோடைக்குப் பிறகு நல்ல மழை பெய்யும்போது உண்டாகுமே, அந்த நிரதிசயமான ஆனந்தம் உண்டாகிறது. இவ்விதம் கண்ணுக்குக் கண்ணாய் நான் பாவித்து வந்த என் அருமைக் குழந்தையின் கதி இப்படியா போகணும்! நான் பாவி வெச்ச ஆசை பழுதாய் போகனுமா! பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே! ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு?

ருக்மிணிக்கு பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்ர் மணியம் ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்கு கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும், அத்தனை அழகாயிருந்தது. அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததை பார்க்கும்போது, மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே அந்த மாதிரியேதான் இருந்தது. காமேசுவரையர் ருக்மிணிக்கு கல்யாணப் பந்தலில் நிறைய சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டுபோய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்கு தலை பிண்ணிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப் போகும்போது அவளை அழைச்சுக் கொண்டு போகாமல் போகவே மாட்டாள். இப்படி சகல விதமாகவும் ஜானகி (அதுதான் ருக்மிணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணியின் பேரிலுள்ள அபிமானத்தை காட்டி  வந்தாள். மாப்பிள்ளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும்ருக்மிணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான். கிராமத்தில்அவர்கள் இருவருந்தான் ரூபத்திலும் புத்தியிலும் செலவத்திலும் சரியானஇணை என்று நினைக்காதவர், பேசிக்கொள்ளாதவர் கிடையாது. இப்படி என்று வருஷ காலம் சென்றது. அந்த ணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள்! காமேசுவரையருக்குக் கையிளைச்சு போய்விட்டது. ரொக்க வேஷியையெல்லாம், ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம், அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்ர் பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மிணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள்தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துதான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைதத் தீர்க்க வேண்டியதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க் காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார். மீனாட்சியும் பார்க்கிறதுக்கு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளுடைய சாந்தத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை பெரிய கஷ்டம் வந்துவிட்டதே, இருந்தாலும் அவள் மனம் கொஞ்சமேனும் இடியவில்லை. ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக் கொண்டு ஸ்வாமி கொடுத்தார்! அவர் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ? அவாளும் ருக்மிணியும் ஆயுஸோடு இருக்கிறவரையில் எனக்கு குறைச்சலுமில்லை. இந்த தை மாஸத்திலே ருக்மிணிக்கு சாந்தி முகூர்த்தம் பண்ணிப் புக்காத்துக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் எங்களுக்கு நிர்விசாரம். கஞ்சியோ கூழோ சாப்பிட்டுக்கொண்டு வழக்கம் போல் பகவத்தியானம் பண்ணிக்கொண்டே எங்கள் காலத்¬க் கழித்து விடுகிறோம்'' என்று சொல்லுவாள். ஐயோ பாவம், நடக்கப் போகிற சங்கதியை அவள் எப்படி அறிஞ்சிருப்பாள்? காமேசுவரையர் ஐவேஷியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டதும் ராமசுவாமி ஐயருக்கு அவருடனிருந்த சிநேகம் குளிர் ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன்னெல்லாம் அவர் காமேசுவரையர் அகத்துக்கு அடிக்கடி வருவார். வழியில் அவரைக்கண்டால் பத்து நிமிஷம்பேசாமல் போகவே மாட்டார். இப்பொழுதோ காமேசுவரையர் தூர வருகிறதை கண்டுவிட்டால், ஏதோ, அவசர காரியமாகப் போகிறதுபோல இன்னொரு பக்கம் திரும்பி வேகமாக போய்விடுவார். இப்படி செய்பவர், அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று நான் சொல்லாமலேநீங்கள் நினைத்துக்கொண்டுவிடுவீர்கள். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நெறுங்குவதை நிறுத்திவிட்டாள் ஆனால் இதையெல்லாம் மீனாட்சியம்மாளும் காமேசுவரையரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. செல்வமுள்ளபோது உறவு கொண்டாடுகிறது; அது போய்விட்டபோது வேத்து மனுஷாள்போல போய்விடுகிறது- இதெல்லாம் ஒரு சிநேகிதத்தோடு சேர்த்தியா? ஆனால்அவர்கள் ருக்மிணி விஷயத்திலுங்கூட வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அறுபத்துநாட்டு உடைகிறதற்கு முந்தி சில மாதங்களாக ஜானகி பிரதி வெள்ளிக்கிழமையும் சாப்பிட்டானதும், ருக்மிணியை அழைத்துக்கொண்டுவரும்படி வேலைக்காரியை அனுப்பிவிடுவாள். அன்னைக்கு, அவளுக்குத் தலைப்பின்னி, மை சாந்திட்டு, சிங்காரிச்சு, அகிலாண்டேசுவரி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போய்த் தரிசனம் பண்ணிவிட்டு, அன்னைக்கு ராத்திரி முழுவதும் தங்கள் அகத்திலேயே வைத்துக்கொண்டிருந்து அடுத்தநாள் காலமேதான் அவளை அகத்துக்கு அனுப்புவாள். ஆனால், அறுபத்துநாட்டில் போனது போனதுதான் என்று ஏற்பட்டுவிட்டபிறகு வந்து முதல் வெள்ளிக்கிழமையன்னைக்கே, எனக்கு ஆத்தில் இன்னைக்கு ரொம்ப வேலையாக இருக்கும்' என்பாள். அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அவ்விதம் சொல்லியனுப்புவதைக்கூட நிறுத்திவிட்டாள். இது மீனாட்சிக்கும் காமேசுவரையருக்கும் மிகுந்த துக்கத்தை தந்தது. ருக்மிணியும், நம்மை இவ்வளவு இளக்காரம் செய்கிறாள் பார்த்தாயா! நம்ப மாமியார் கூட, என்று மிகவும் வருத்தப்பட்டாள். இப்படி கொஞ்ச நாளாச்சு. ஊரெல்லாம் குசு குசு'என்று பேசிக்கொண்டிருப்பார்கள். எல்லா ரகசியங்களும் குளத்தங்கரையிலேதான். அரைவார்த்தையும் குறை வார்த்தையுமாகத்தான் என் காதில் விழுமேயோழிய முட்ட முழுக்க ஒரு பேச்சும் எனக்கு எட்டாது. ஊரிலே இப்படி எப்போதும் இருந்ததில்லை.எனக்கு மனசு குருகுருத்துக் கொண்டேயிருந்தது. ஏதோ கெடுதலுக்குத்தான் இத்தனை ரகசியம் வந்திருக்கிறது என்று எனக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் யாருக்கு என்று மாத்திரம் தெரியவில்லை. கடைசியாக அப்படியும் இப்படியுமாய், அத்தையும் இத்தையும் கூட்டிச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க, கொஞ்சங் கொஞ்சமாய் சமாசாரம் என் மனசுக்கு அத்துபடியாச்சு. ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்! என்ன பண்ணுவேன்! என் மனசு இடிஞ்சி போய்விட்டது. குழந்தை ருக்மமிணியைத் தள்ளி வைக்கத் துணியுமா மனுஷாளுக்கு? அடிப்பாவி! உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா! என்ன பண்ணித்து அது உன்னை! அதை கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே! கல்லையும்விட அழுத்தமா உன் நெஞ்சு! காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்தில் ஈ ஆடாது. எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பனாருக்கு கேட்கனுமா? இனிமேல் நாகராஜனைப்பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு! அவன் பட்டணத்தில் படித்துக்கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகிவிட்டது. தாயார் தகப்பனார் அவன் மனத்தைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம்
அதிகரித்துக்கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங்கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். இனிமேல் ஏது? இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கெதி அதோகெதிதான் என்று நினைத்துவிட்டேன். தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கிழக்கத்தி பெண்ணாம். தகப்பனாருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்த பெண்ணைத் தவிர காலக்கிரமத்தில் இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். ராமசாமி ஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்து சேர்ந்து விடுமாம். இதெல்லாம் எனக்கு கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல், மீனாட்சி பகலில் வெளியிலேயே வருவதில்லை. சூரியோதையத்துக்கு முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நாநம் செய்துவிட்டு தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்தால் கண்ட்ராவியாயிருக்கும். சரியான தூக்கமேது? சாப்பாடேது? ஓஹோவென்று வாழ்ந்துவிட்டு, இந்த கதிக்கு ஆளானோமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது. வீடு வாசல் போய்விட்டதே என்றாவது , நகை நட்டெல்லாம் போய், வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக்கொண்டிருக்கும்படியாகிவிட்டதே என்றாவது அவள் வருத்தப்படவில்லை. கிளிபோல் குழந்தை அகத்திலிருக்க , ஜானகி அதன் பேரில் கொஞ்சம் கூட இரக்கம் வைக்காமல் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணிவைக்க நினைத்துவிட்டாள் பார்த்தயா என்னும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம். அவள் முகத்தைப் பார்த்தால் ஜானகிக்குக் கூட மனசு உருகிப் போய்விடும். ஆனால் ராணி, அவளெங்கே பார்ப்பாள்! அப்போதெல்லாம் ருக்மிணி எப்படி இருந்தாளோ, என்ன நினைத்தாளோ, எனக்கொண்ணுந்தெரியாது. அறியாக்குழந்தை அது என்ன நினைத்திருக்குமோ! ஒரு வேளை, மாமியார் நம்மை கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத்தாளோ? அல்லது மாமியார் என்னநினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்கமாட்டான் என்று நினைத்தாளோ? 

இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளக்கரையில் விளையாடி! கல்யாணமான பிறகுங் கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடவை பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான்!அவன் கைவிடமாட்டான் என்றேதான் ருக்மிணி நினைத்திருப்பாள். ஆனால் நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜனுடைய மனதில் மாத்திரம் இன்னது  இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காரம் செய்வதற்காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவுகூட அடையாளமில்லை. ஆனால் முகத்தை விட்டு முதனாள் போன உல்லாஸக்குறி மறுபடியும் திரும்பி வரவேயில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாகவேயிருப்பான். கடைசியாக, நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காரர் வந்து லக்கினப் பத்திரிக்கையையும் வாசித்துவிட்டுபோய்விட்டார்கள், ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேஸ்வரையருக்கு எப்படியிருந்திருக்குமோ? மீனாட்சி மனசு எப்படி துடித்ததோ? ருக்மிணி எப்படி சகித்தாளோ? எல்லாம் ஈசுவரனுக்குதான் தெரியும். நாகராஜனுக்குக்கூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது பார்த்தாயா என்று நான் அழாத நாள் கிடையாது. சில வேளைகளில், இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானோ என்று கூடச் சொல்லிவிடுவேன்.... இப்படி என் மனசு தளும்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது, ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தார்போல ஒரு சங்கதி என் காதில் விழுந்தது. நாகராஜனோடு கூட படித்துக்கொண்டிந்தவனாம் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனை பார்க்கறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே ? நம்ம குளத்தங்கரைதானே? ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு எல்லோரும் போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லுக்கந்தண்டை இருக்கிறது. நாகராஜன், பெண்ணிருக்க, பெண் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதிவிட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்துவிட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி அதெல்லாம் வாஷ்தவந்தானா என்று அவன் நாகராஜனைக் கேட்டான். நாகராஜனும், அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட்டபோது நான் மாட்டேன் என்று சொன்னால் தான் தீரப்போகிறதா? தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார் லட்ச ரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி இருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்ச ரூபாய் சொத்து சேருமாம். இப்படி, தானே வருகிற ஸ்ரீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது?'' என்று சொன்னான். இந்த வார்த்தையெல்லாம் சொல்லும் போது ஸ்ரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று சொல்வது? நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ஸ்ரீநிவாசன் அவனுக்கு எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா?'' என்று நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, கல்லுங்கரையும் படியாக ருக்மிணிக்காக பரிஞ்சு பேசினான். அவன் நன்றாக இருக்க வேணும், க்ஷேமமாக இருக்கவேணும், ஒரு குறைவுமில்லாமல் வாழ வேணும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன். ஆனால் அவன் பேசினதும் நாகராஜன் அவனைப் பார்த்து , ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை சொன்னதெல்லாம் விளையாட்டாக்கும். நான் காசுக்காக இவ்வளவு அற்பமாக போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குதெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை, என்று நினைத்துவிட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம்; இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இவர்களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியது என்று நிச்சயித்துவிட்டேன். நான்எத்தனை மறுத்தும் அம்மாவும் அப்பாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆகையால் மன்னார் கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப்படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமாங்கல்யத்தில் நான்தானே முடிச்சு போடவேணும்? வேறு ஒருவரும் போட முடியாதே. அந்தச் சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சித்தின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்ட கையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா?'' என்று சொல்லி முடித்தான். ஆனால் நீ விவாகத்துக்கென்று போகுங்காலத்தில், ருக்மிணி, அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா?'' என்று ஸ்ரீநிவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன், யோசித்தேன்; ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள் நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் , திடீரென நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள்! என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிடமாட்டேன்! பணத்தாசை பிடித்தவர்களையெல்லாம் மணப்பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன்' என்று நான் சொல்லுங்காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்! அதைப்பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்'' என்றான். அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப்படி அடித்துக்கொண்டிருக்கும்? நினைத்துப்பார்'' என்றான் ஸ்ரீநிவாசன். அதற்கு நாகராஜன், இன்னும் ஐந்து நாளில்லை; இன்று வெள்ளிக் கிழமை. ஞாயிற்று கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப்போகிறோம்.  அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்தநாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா? என்றான். என்னவோ அப்பா, எனக்கு இது சரியில்லை என்று தோன்றுகிறது'' என்று ஸ்ரீநிவாசன் பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் நகர ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை. அன்னைக்கு ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே வரவில்லை. பார்த்தாயா, நாகராஜனை வையக்கூட வைதேனே பாவி, அவனைப்போல ஸத்புத்திரன் உண்டா உலகத்திலே' என்று சொல்லிக் கொண்டேன். இனிமேல் பயமில்லை; அஞ்சு நாளென்ன, பத்து நாளென்ன? நாகராஜன் பிடிவாதக்காரன்; சொன்னபடியே செய்துவிடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லை' என்று பூரித்துப் போய்விட்டேன்.

ஞாயிற்றுக் கிழமை; இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது ஆனால் அவர்களை கூப்பிட்டு நல்ல புத்தி சொல்வதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர்கள் கட்டுப்படுபவர்களும் இல்லை. அவர்கள் புறப்படுகிற அன்னைக்கு ஊரிலிருந்து கண்ணாலே பார்த்தால் இன்னுங்கொஞ்சம் வயித்தெரிச்சல்தான் அதிகமாகுமென்று நினைத்து, காமேசுவரையரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள்தான் துணை. சனிக்கிழமை ராத்திரியாச்சு. றுரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாக குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில  நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப்பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொருதடவை பின் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது. கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும்போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சுக் கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உன்னிப்பாய் கவனிக்கலானேன். ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள். எதேச்சையாய் நாகராஜன் தலையை தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஆனால் உடனே நிதானித்துக்கொண்டு, ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமா நீ?'' என்று கேட்டான். நீங்கள் இருக்கிற இடத்தில் தனியாக நான் இருக்க வேண்டிய நாள் வரவில்லையே '' என்று பதில் சொல்லிவிட்டு ருக்மிணி நின்றாள். இரண்டு ன்று நிமிஷத்துக்கு ஒரு வரும் வாய்திறக்கவில்லை. இரண்டு பேர் மனதும் குழம்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது, என்ன பேசுகிறது என்று அவர்களுக்கு ஒன்றுந்தெரியவில்லை. கடைசியில் நாகராஜன், இந்த வேளையில் நாம் இங்கே இருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள்; வா, அகத்துக்கு போய்விடலாம் என்றான். அதற்கு ருக்மிணி, உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும்'' என்றாள். சொல்லேன்'' என்று நாகராஜன் சொல்ல, ருக்மிணி பேசலானாள்: எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த ணு மாசமாய் மனசு படுகிறபாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத்தான் தெரியுமே யொழிய மனுஷாளுக்கு தெரியது நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்கள் என்னைக் கை விடமாட்டீர்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் நீங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன்? வேலியே பயிரைஅழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது . நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால்தான் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான்; அதில் சந்தேகமில்லை.'' இந்த வார்த்தையைப் பேசும்போது ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அத்தோடு நின்றுவிட்டாள். நாகராஜன் பேசவில்லை. ருக்மிணியும் சில நாழி வரைக்கும் பார்த்துவிட்டு, நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே; நீங்கள் போகத்தானே போகிறீர்கள்?'' என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன், ஆமாம், போகலாம் என்றுதான் இருக்கிறேன்'' என்றான். அப்படி அவன் சொன்னதும் ருக்மிணிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடு கிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் தளும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு அதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் அப்படியானால் நீங்கள் என்னை கைவிட்டு விட்டீர்கள்தானே ?'' என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமைதானே? ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒரு நாளும் தள்ளிவிட மாட்டேன்'' என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. நீங்கள் மறுவிவாகம் பண்ணிக்கொண்டுவிடுகிறது. நான் கவலைப்படாமல் இருக்கிறது. என்னை ஒரு நாளும் கைவிடமாட்டீர்கள். ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள். நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி இத்தனைதானாக்கும்''என்று சொல்லிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

நாகராஜன் ஒன்றும் பேசவில்லை. கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன்' என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தையை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேற்றலாம் ? அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையால் மாத்திரம் காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டிக் கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய், என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய்விட்டதே; இப்படித்தானா பண்ணிக்கொள்கிறது? உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே! எங்கே உன் முகத்தைப் பார்ப்போம்! ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே! முகத்தின் ஒளியெல்லாம் போய்விட்டதே ! என் கண்ணே, இப்படி இருக்காதே. உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு. உன் மனசில் கொஞ்சங்கூட அதைரியப்படாதே. என் ஹிருதய பூர்வமாகச் சொல்லுகிறேன், எனக்கு பொறுக்கவில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க. சின்ன வயது முதல் நாமிருந்த அன்னியோன்யத்தை மறந்துவிட்டேன் என்று கனவில் கூட நீ நினையாதே. வா, போகலாம், நாழிகையாகிவிட்டது, இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது'' என்று சொல்லி முடித்தான். ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. அந்தச் சமயத்தில் தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது போலிருந்தது. சொல்லித்தான் வைத்தானா பாவி! ஆனால் அவனுக்கு அவனுடைய விளையாட்டுதான் பெரிதாய்பட்டது. ஆகையினாலே அதை மாத்திரம் அவன் வாய்விடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் எப்படித் தெரியும் இப்படியெல்லாம் வரும் என்று? அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே. அந்த சமயத்திலே, எங்கே தெரிந்திருக்கப்போகிறது குழந்தைக்கு? அப்படி நினைத்துபோய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப்போல் தூக்கி மார்போடே அணைத்துக்கொண்டு, என்ன, ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி; நான் என்ன செய்யட்டும்?''என்று கருணையோடு இரங்கி சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏரிட்டு பார்த்தாள். அந்த பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? பிரவாகத்தில் அகப்பட்டுக் கை அலுத்துப்போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு, தூரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போல் தென்பட, அவனும் பதை பதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக்கொண்டு போய் அப்பா, பிழைத்தோமடான்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது, ஐயோ பாவம், அது கட்டையாக இராமல், வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் அவன் மனசு எப்படி விண்டுவிடும், அவன் முகம் எப்படியாகிவிடும், அப்படி இருந்தது ருக்மிணியின் முகமும், அந்த முகத்தில் பிரதிபலித்துக்காட்டிய அவள் மனசும். எல்லையில்லாத துன்பம், எல்லையில்லாத கஷ்டம், அந்தப் பார்வையில் இருந்தது. அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டு, நான் சொல்லக்கூடியது இனிமேல் ஒன்னுமில்லை. மன்னார்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்கு சொல்லமாட்டேன் என்கிறீர்கள்; இன்றோடு என் தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத்துணிந்தீர்களோ, நான் இனிமேல் எதைநம்பிக்கொண்டு யாருக்காக, உயிரை வைத்துக்கொண்டிருப்பது? உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. ளுங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம், உங்களை இப்படியெல்லாம் செய்யசொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள். அவள் நம் பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிறபோது கூட நம்மையே நினைத்துக் கொண்டுதான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக் கேட்டுக்கொள்வது'' என்று சொல்லிக்கொண்டு நாகராஜன் காலில் விழுந்து, காலை கெட்டியாய் பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

நாகராஜன் உடனே அவளை தரையிலிருந்து தூக்கியெடுத்து, பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவிடாதே, நீ போய்விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுகும்மென்றாகிவிட்டது. இன்னும் சற்று போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது; வா அகத்துக்கு போகலாம்'' என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரம், ஒன்றும் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம். சித்தைக்கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிறது போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்தகாரமாகிவிடும். பூமியெல்லாம் கிடுகிடுவென்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும்போலே இடிஇடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம்போல அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மழை பெய்து கொண்டிருநத இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரிவரப்படவில்லை. அவர்களும் அகத்துப்பக்கம் வேகமாக சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு மின்னல் மின்னும்போது, ருக்மிணி வீட்டுக்கு போக மனமில்லாமல் பின்வாங்குவதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வதும் மாத்திரம் கண்ணுக்கு தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்ணும் ரெண்டுமாகத்தான் என் காதில் பட்டது. .....பிராணன் நிற்காது....அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி.....வெள்ளிக்கிழமை காலமே.....ஸ்திரீகளின். ....உடைந்து விடும்..... சொல்லாதே..... கொடுத்துவைத்ததுதானே.....அந்தப் பெண்ணையாவது நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.....மனப்பூர்த்தியாக வாழ்த்துகிறேன்.....அன்றைக்கு தெரிந்து கொள்வாய்.....கடைசி நமஸ்காரம்... வரையில் பொறுத்துக்கொள்.....'' இந்த வார்த்தைகள்தான் இடி முழக்கத்திலும், காற்றின் அமலையிலும், மழை இரைச்சலிலும் எனக்கு கேட்டது. மழை தாரை தாரையாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் மறைந்து போய்விட்டார்கள். ஆச்சு, அடுத்த நாள் காலமே விடிந்தது. மழை நின்றுவிட்டது. ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை.மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தைபோல, ஓயாமல் கதறிக் கொண்டேயிருந்தது. என் மனசிலும் குழப்பம் சொல்லி முடியாது . எப்படி நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதானம் வரவில்லை. என்னடா இது, என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக்கொண்டு வருகிறது? காரணம் ஒண்ணும் தெரியவில்லையே' என்று நான் எனக்குள் யோசித்துக்கொண்டேயிருக்கும்போது மீனா, என்னடியம்மா, இங்கே ஒரு புடவை மிதக்கிறது!'' என்று கத்தினாள்.

உடனே பதட்டம் பதட்டமாய், அந்த பக்கம் திரும்பினேன். குளத்திலே  குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு காதோடு காதாக ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு பஞ்சப்பிராணணும் போய்விட்டது. புடவையைப் பார்த்தால் காமாக்ஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா தலையிலே கல்லை தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே ர்ச்சை போட்டுவிட்டேன். அப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன,வையாதெ போனாலென்ன? ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஷீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்துபோய்விட்டாளே என் ருக்மிணி. கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடவை அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறாள். அவள் பொன்னான கையாலே! குளத்தங்கரையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடாத மரமேது, செடியேது! ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் களை மாத்திரம் மாறவே இல்லை. பழையதுக்கக் குறிப்பெல்லாம் போய் முகத்தில் ஒருவித அத்தியாச்சரியமான சாந்தம் வியாபித்திருந்தது! இதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப் போது இருந்தது. அதற்குள்ளே, நாகராஜன் வ'றான், நாகராஜன் வ'றான், என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம், நிசந்தான், அவன்தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்துகொண்டிருந்தான். வந்துவிட்டான். மல்லிகை செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!''என்று கதறிக்கொண்டு கீழே மரம் போல் சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் பென்று அடங்கிப் போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் ர்ச்கை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய் பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்தி லே ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தை பார்த்து, என்னுடைய எண்ணமத்தையும் பாழாக்கிவிட்டு ஜூலியத் மாதிரி பறந்தோடிபோய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய் போய்விட்டதே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான்தான் உன்னைக் கொலைசெய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகஸ்யம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்த கதி நமக்கு இன்று வந்திருக்காதே! குஸும ஸத்ருசம் ......ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்'' * என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!'' என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தி தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்திரீயத்தையும் அப்படியே தாராய் கிழித்து விட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டேன். இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்? திதிதி *காளிதாசன், மேகஸமேதேசம் - பொருள்: பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும்.


Saturday, January 13, 2018

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு - டிசம்பர் - 2017

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு
(பொது மக்கள் பார்வைக்கு)
டிசம்பர் - 2017

தேதி விவரம் வரவு செலவு இருப்பு
01.12.2017 இருப்பு கீ/கொ              5,885.50
04.12.2017 திரு.மு.குமரேசன் (Trustee) மூலம் வரவு          1,477.00            7,362.50
04.12.2017 திரு.ம.உமாபதி (Trustee) மூலம் வரவு             500.00            7,862.50
19.12.2017 திரு.எம்.சண்முகநாதன் மூலம் அன்னதான நன்கொடை வரவு          5,000.00          12,862.50
20.12.2017 அன்னதான செலவிற்காக எடுப்பு            5,000.00          7,862.50
23.12.2017 திரு.தி.ம.இராமலிங்கம் (Trustee) மூலம் வரவு             600.00            8,462.50
30.12.2017 திரு.என்.ஆனந்தகுமார் மூலம் நன்கொடை வரவு             333.00            8,795.50


டிசம்பர் மாத இறுதியில் வங்கியிருப்பு ரூ.8,795.50 மட்டும் உள்ளது. ரொக்க இருப்பு ஏதுமில்லை என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

திரு.எம்.சண்முகநாதன் ஐயா (கும்பகோணம்) அவர்கள் நமது காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் 21.12.2017 வியாழன் அன்று மூன்றாவது முறையாக அன்னதானம் வழங்கினார். அவருக்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் காரணப்பட்டு அருள் நிலையம் நன்றியினையும் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.   

          தம்மை யார் என அறிமுகப்படுத்திக்கொள்ளாத ஆன்மநேயர் திரு.என்.ஆனந்தகுமார் ஐயா அவர்கள் மாதாமாதம் உரூபாய் முந்நூறு அல்லது அதற்கு சற்று மேம்பட்டத் தொகையினை நமது அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றார். அவரையும் அவரது இனிய குடும்பத்தினரையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம். நன்றி.

                                                                                           இங்ஙனம்
                                                                                      T.M.Ramalingam
                                                                                              Trustee

சித்தர்கள் பார்வை - ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ?

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

சித்தர்கள் பார்வை
ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? 

பொதுவாக உடல் அசுத்த உடலாகத்தான் இருக்கிறது .இது காரண தேகத்தால் உண்டாவது. இது அறிவில்லாதது. இந்தக் காரண தேகம் எப்படி உண்டாகிறது. எடுத்துக்காட்டாக பெருங்காயம் வைத்த பாத்திரம் பெருங்காயம் காலி ஆனாலும் வாசனை போவதில்லை அல்லவா?? அது போல போன பிறவியில் உடல் செய்த தீய நல்ல காரியங்கள் உடலும் உயிரும் பிரியும் மரணம் என்ற காரியத்திற்கு பின் உயிருடன் தொடரும் வாசனையே இந்த காரண உடல். அந்த காரண தேகம் சேர்ந்த உயிரும், நம் இந்த அசுத்த உடலும் சேர்ந்த பிறவியில், உடலின் அறிவில்லாத தன்மையும் உயிரின் அறிவுள்ள தன்மையும் சேர்ந்து உடலில் அறிவில்லாததாகவும், அறிவுள்ளதாகவும் சிற்சில நேரங்களில் வெளிப்படுகின்றது.

புலன்களின் வழியே மட்டுமே செயல்படும் மனம், சித்தம், புத்தி இவைகளின் ஒரு செயல்பாட்டை கவனித்தால் உங்களுக்கு இது புரியும். ஒரு பஸ் உங்களை மோத வருகிறது. நீங்கள் அதைப் பார்க்கும் திசையில் இல்லை, பயங்கர திருவிழா ரேடியோ சத்தத்தில் உள்ளீர்கள், காதும் பஸ் வரும் ஓசையை கேட்கவில்லை. ஆனால் நீங்கள் திடீரென ஒதுங்கி விலகிவிட்டு அப்பப்பா நல்ல வேளை பஸ் மோதாமல் தப்பிவிட்டேன் என்று நினைத்திருப்பீர்கள்.

இது போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தை எண்ணிப் பார்த்தீர்களானால், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். கண்ணோ பார்க்கவில்லை, காதோ கேட்கவில்லை. புலன்களின் வழியே சென்று செயல்படும் மனம் இந்தப் புலன்களின் வழியே உணரவில்லை. அதை புத்தியில் ஒப்பிட்டு பார்த்து கால்களுக்கு ஒதுங்கு என்று கட்டளையிடவில்லை. ஆனால் எப்படி உடல் ஒதுங்கித் தப்பித்தது.

அதற்குக் காரணம் உள்ளே இருக்கும் எல்லா பேரறிவிற் சிறந்த உயிர் சித்தத்தின் வழியே செயல்பட்டு ஒதுங்கு என்று கட்டளையிடுகிறது. இது எப்படி நிகழ்கிறது. உடலும் உயிரும் பிரிய வேண்டிய சூழல் உருவாகும் போது உயிர் அதை விரும்பாவிட்டால், தான் பெற வேண்டிய அனுபவங்கள் இன்னும் இந்த உலகில் இருக்கிறது என்றால், தன் பேரறிவினால் உடலை நகரச் சொல்லி சித்தத்தினால் கட்டளையிடுகிறது. இல்லையெனில் இதையே விபத்தாக்கி உடலைப் பிரிந்து உயிர் பறந்துவிடும்.

இந்த ஒரு வினாடி சித்தத்தின் மூலம் செயல்படும் உயிரை, எல்லா நாளும் சித்தத்தின் மூலம் செயல்பட வைத்தால் நீங்கள் சித்தர். இல்லையானால் தினம் நாய் போல் நம்மை அலைக்கழிக்கும் மனதால் செயல்படும் சாதாரண மனிதர்.

இந்த காரண தேகமான வாசனை நம் உடலில் இருக்கும் வரை நம் உடல் சுத்த தேகமாகாது. உடல் சுத்த தேகமாகவில்லை என்றால் சித்தம் சுத்த சக்தியுடன் செயல்படாது. சித்தம் சுத்த சக்தியுடன் செயல்படாவிட்டால் நீங்கள் ஞானத்திலும் தெளிய இயலாது. காயமும் சித்தியாகாது. முக்தியும் கிட்டாது.

எனவே உடலை முதலில் நோயில்லாமல் ஆக்கவேண்டும். பிறகு அசுத்த தேகத்தை சுத்த தேகமாக ஆக்க வேண்டும். நோயணுகாத வஜ்ர தேகமான பின் காயத்தை சித்தியாக்கி சித்தத்தின் வழியே செயல்கள் புரிந்து சித்தராக வேண்டும். பின் முக்தி அடைய வேண்டும்.

இதற்கு சித்தர் விஞ்ஞானத்தின் முக்கிய அங்கங்களான வைத்தியமும், மருந்துகளின் அறிவும், காய கற்பங்கள் முடிப்பதும், பற்ப, செந்தூரங்கள், சுண்ணம் முடிப்பதும் வான சாத்திர அறிவும் அடிப்படைத் தேவைகள். இரத்தம் கடுங்காரமாக வேண்டும். இப்படி ஆனால்தான் சுண்ணாம்பால் ஆன நம் எலும்புச் சட்டகம், இரத்தம் ( URIC ACID ) யூரிக் அமிலம் போன்ற அமிலங்களால் அமிலத் தன்மையாகாமலும், அதன் விளைவாக எலும்புச் சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்படும். அப்படி எலும்புச் சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்பட்டால்தான் உடல் அழியாது. இவை எல்லாம் தெரியாமல், ஒருவன் ஒரே பிறவியில் ஞானியாகவே இயலாது .

உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!!!
— திரு மூலர் —

உடம்பு அழிந்தால் உயிர் அழியும். உயிர் அழிந்தால் மெய்ஞ்ஞானம் கிடைக்காது. எனவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பையும் வளர்க்கலாம், விளைவாக உயிரையும் வளர்க்கலாம். உயிரை வளர்த்தால் சீவன், சிவமாகும். ஞானம் சித்திக்கும் .

முதலில் ஒரு விடயத்தை தெளிவாக்குகிறேன். உலகில் உள்ள அனைத்துக் அறிவு சார்ந்த கலைகளையும் 64 கலைகளாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள். அந்த கலைகள் அனைத்தையும் படிப்பறிவு என்று கொண்டால் நம் பட்டு அனுபவித்து தெரிந்து கொள்ளும் அறிவு பட்டறிவு, அடுத்தவர் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்வது அனுபவ அறிவு (இதில் அடுத்த நபரின் படிப்பறிவும், பட்டறிவும் அடக்கம்). சித்தர்களின் ஞானமும், மருத்துவமும், கற்ப சூத்திரங்களும் இந்த அனுபவ அறிவின் பால் பட்டவை. நாம் அனுபவித்துத்தான் தெரிய வேண்டும் என்றால் பல பிறவிகள் தேவை. சித்தர்கள் பெருங்கருணையினால் இவற்றை நமக்காக எழுதி வைத்துச் சென்றுள்ளனர். இவை நமக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள்.

முதலில் ஆன்மா கொண்ட சிற்றறிவு பேரறிவாகப் பரிணமிக்க வேண்டும். பின் இந்த பேரறிவு “தான் “ என்ற எண்ணத்தினால் வளர்ந்தது. அதனால் பேரறிவாக வளர்ந்த பின் “தான் “ என்ற அகங்காரத்தை விட வேண்டும் விட்டால், ஜீவன் முக்தியடைய முடியும். தேகத்தோடு காயசித்தியடையும் மார்க்கத்தையும் இந்தப் பேரறிவால் நிகழ்த்த முடியும். இப்பிறவித் துன்பம் எல்லாம் இன்றோடே போச்சு என்றும், செத்தவரும் எழுவார் என்றும் வள்ளலார் கூறுகிறார் .

இது நம் செந்தமிழ் மொழிப் பாடல்களில் இப்போதும் மறைவாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. இதையே வள்ளலார் கீழ்க்கண்ட பாடலில் பாடுகிறார் .

கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு…(5258) என்ற பாடல் தொடர்களில் காணலாம்.

-நன்றி – சித்த ஞானசபை 

மாதம் ஒரு மகான் - ஸ்ரீ குழந்தையானந்தர்

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

மாதம் ஒரு மகான்
     ஸ்ரீ குழந்தையானந்தர்



மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும் கூட. அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.

மதுரையை அடுத்த சமயநல்லூரில் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். ஸ்ரீவித்யா உபாசகர்கள். தினம்தோறும் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் தொழுவது இருவருக்கும் முதற்கடமை. ஆனால் எல்லா செல்வங்களும் இருந்தும் அதனை அனுபவிக்க புத்திர பாக்கியம் வாய்க்கவில்லையே என்ற மனக்குறை அவர்களை பெரிதும் வாட்டி வந்தது. ஆண்டுகள் பல கடந்தும் பலனில்லாததால் அவர்களுடைய மனக்கவலை அதிகரித்தது. அதனால் தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதை மீனாட்சிக்கே அர்ப்பணித்து விடுவதாக வேண்டிக் கொணடனர். அவர்கள் பிரார்த்தனை பலித்தது. திரிபுரசுந்தரி அம்மாள் கருத்தரித்தார். இரண்டு குழந்தைகளை ஈன்றார். ராமன், லட்சுமணன் என அக்குழந்தைகளுக்குப் பெயரிட்டனர். அதில் மூத்த குழந்தை ராமன் ஒளி பொருந்திய கண்களுடனும், காலில் சங்கு, சக்கரத்துடனும் மிக அழகாக இருந்தது. ஆனால் அழவில்லை. தாய்ப்பால் குடிக்கவில்லை.

மாதங்கள் கடந்தன. ஆயினும் அக்குழந்தையின் நிலையில் மாற்றமில்லை. தெய்வக் குற்றமோ என பெற்றோர் அஞ்சினர். ஆலய அர்ச்சகரிடம் ஆலோசனை கேட்டனர். பின்னர் தான் இருவருக்கும் குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தையை அர்ப்பணிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சகருக்கு அருள் வந்து, காலில் சங்கு சக்கரம் உள்ள குழந்தையை விட்டுச் செல்லுமாறு ஆணை வந்தது. அதன்படி குழந்தை ’ராமன்’ ஆலயத்தில் தனித்து விடப்பட்டான். அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்தது. தகுந்த வயது வந்ததும் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.


ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன். புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரைகளை மேற்கொண்டார். பல மன்னர்களால் போற்றப்பட்டார். ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். சில வருடங்களில் கணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவர் சமாதிக்குப் பின் தனியறையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.

பின் இரண்டாவது அவதாரமாக மீண்டும் காசியில் தோன்றி த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்து நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார். பின் தென்காசியில் குழந்தை வேலப்பராகத் தோன்றி வாழ்ந்து பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். பின்னர் நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார். குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய். மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது. ‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படுவது.

ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி. தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார். ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார். அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார்.

சுவாமிகள் பிளாட்பாரத்தில் அமர்ந்து விட்டார். ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர். கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.

உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார். டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது..

ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள். அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன். இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.

இவ்வாறு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.

நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர்-3

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர்-3
தி.ம.இராமலிங்கம்

நாயன்மார்களின் தத்துவ விளக்கங்களில் நாம் தற்போது பார்க்கப் போகும் நாயன்மாரின் பெயர் “திரு.அமர்நீதி” என்பவராவார். இவர் கி.பி.300 – 600 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவராக குறிப்பிடப்பட்டுள்ளார்கள். சோழநாட்டிலே கும்பகோணம் அருகில் உள்ள பழையாறை என்னும் சிற்றூரிலே வைசியர் குலத்தில் தோன்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



நாயன்மார்கள் புரிந்த தொண்டின் அடிப்படையில் மூன்று விதமான முறையில் அவர்கள் முக்தி அடைந்ததாக கூறுவர். குருவருளால் முக்தி அடைந்தவர்கள் 11 நாயன்மார்கள். சிவலிங்கத்தால் முக்தி அடைந்தவர்கள் 31 நாயன்மார்கள். அடியார்களை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் 21 நாயன்மார்கள் ஆவர். இப்பிரிவிலே நாம் தற்போது காணும் திரு.அமர்நீதி அவர்கள் அடியார்களை வழிபட்டமையால் முக்தி கிடைக்கப்பெற்றவராவார்.

பெரும் வணிகரான இவர் செல்வச் செழிப்பில் திளைத்தார். தாம் ஈட்டிய செல்வங்களை கொண்டு சிவ அடியார்களுக்கு உதவி செய்து வந்தார். அது என்ன உதவி?... சிவ அடியார்களுக்கு கோவணத்தை தானமாக கொடுத்து வந்தார். அடப் பாவமே…. பெரிய செல்வந்தர்… போயும் போயும் கோவணத்தையா தானமாக அளிப்பது! என்ற வியப்பும் நம்மில் எழத்தான் செய்கின்றது. ஆமாம்… அந்த கோவணத்தை இனாமாக வாங்கவே பல சிவ பக்தர்கள் அன்று திரு.அமர்நீதி அவர்களை நாடி வந்தார்கள் என்றால்… சிவ அடியார்கள் கோவணத்தின் அருமையினை உணர்ந்திருந்தனர். வேஷ்டி கட்டாமல் கூட இருக்கலாம். ஆனால் கோவணம் கட்டாமல் இருக்க முடியாது! இந்த காலத்திலும் கோவணத்தை சிலர் அணியத்தான் செய்கின்றனர். எனது தந்தையார் கூட குளிக்கும்போது மட்டும் கோவணம் அணிவார். மற்ற நேரங்களில் ஜட்டிதான். சரி… விஷயத்துக்கு வருவோம்.


சிவ அடியார்களுக்கு கோவணம் தானம் செய்யவே திருநல்லூர் என்ற ஊரில் சிவமடம் ஒன்றை கட்டினார். அங்கே திருவிழாக் காலங்களில் தன் குடும்பத்தோடு சென்று அடியவர்களுக்கு கோவண தானம் செய்து வந்தார். இதனை அறிந்த சிவபெருமான், இவரை சோதிக்க எண்ணி அந்தணர் குல பிரம்மச்சாரியாய் உருக்கொண்டு கோவணம் மட்டும் அணிந்துக்கொண்டு இரு கோமணம் முடிந்த தண்டுடன் திருநல்லூர் அமர்நீதியார் மடத்திற்கு எழுந்தருளினார்.

தன் மடத்திற்கு வந்திருக்கும் கோவணாண்டி சிவ அடியாரை இன்முகத்தோடு பாத பூஜை செய்து வரவேற்று சாப்பிட அழைத்தார். அதற்கு முன் நீராட வேண்டும்… வானம் மேகக்கூட்டங்கள் நிரம்பி இருக்கின்றன… குளித்துவிட்டு அணிய இருக்கும் ஒரு கோவணத்தை என்னோடு எடுத்துச் செல்கின்றேன்… மற்றொரு கோவணத்தை பத்திரமாக நீ வைத்திரு… நான் நீராடி வந்தவுடன் அதனை என்னிடம் கொடு… என்று கூறியதோடு கோவணத்தில் அருமை பெருமைகளெல்லாம் ஆஹா… ஓஹோ… என்று புகழ்ந்துவிட்டு அவ்வடியார் காவிரி ஆற்றில் நீராடச் சென்றுவிட்டார்.


தம்மிடம் ஏராளமாக உள்ள கோவண துணிகளுடன் அதனை வைக்காமல், தனியான ஒரு இடத்தில் அவ்வடியாரின் கோவணத்தை பாதுகாப்பாக வைத்தார் அமர்நீதியார்.

பத்திரமாக வைத்திருந்த அந்த கோவணத்தை சிவபெருமான் மறையச்செய்தார். வெளியில் மழை வேறு பெய்ய ஆரம்பித்துவிட்டது. தாம் காவிரியில் குளித்துவிட்டு மழையில் நனைந்தவாறே  மடம் வந்து சேர்ந்தார். எதிர்பாராவிதமாக மழையில் நனைந்ததால் எனது மாற்று கோவணம் நனைந்துவிட்டது. நான் உன்னிடம் கொடுத்த மற்றொரு எனது கோவணத்தை கொண்டு வா… என அமர்நீதியிடம் கேட்டார் அவ்வடியார்.

அமர்நீதி அவர்களும் அவர் வைத்த இடத்தில் சென்று பார்க்க… அங்கே அந்த கோவணம் இல்லை. எங்குத் தேடியும் அந்த கோவணம் கிடைக்கவில்லை. மிகவும் வருத்தப்பட்டார். எனினும் கோவணம்தானே… அதுதான் நம்மிடம் ஏராளமாக உள்ளதே… என்று தாம் வைத்திருந்த கோவணத்தில் ஒன்றை எடுத்துவந்து அடியாரிடம் கொடுத்தார்… நீங்கள் கொடுத்த கோவணம் காணவில்லை… எனவே நான் வாங்கியுள்ள இந்த கோவணத்தை அணியுங்கள் என்றார் அமர்நீதியார்.


அமர்நீதியாரின் பேச்சைக் கேட்டு சீறி விழுந்தார் சிவ அடியார். ஓ! ஊரெல்லாம் கோவணம் கொடுப்பதாய் நாடகமாடி உன்னிடமுள்ள கோவணங்களை கொள்ளை இலாபத்தில் விற்க இப்படி செய்தாயா என சினந்தார் சிவ அடியார். உங்களிடம் கொடுக்கும்போதே பத்திரமாய் வைத்திருக்க சொன்னேனே. இப்பொழுது என் கோவணத்தை தொலைத்துவிட்டு வேறொரு கோவணத்தை கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என்ன நியாயம்? என் இடுப்பிலிருக்கும் கோவணம் மற்றும் தண்டிலிருக்கும் நனைந்த கோவணத்துக்கு ஈடானது அந்த கோவணம். மழையில் நனைந்த உடம்பு நடுக்கமாய் உள்ளது. தண்டிலிருக்கும் கோவணமும் உதவாது என்ன செய்வது?

ஐயா மன்னியுங்கள். நான் எமது கோவணத்துடன் பொன்னும் வைரமும் தருகின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார் அமர்நீதியார். எனக்கெதுக்கு பொன்னும் வைரமும்? எனது தண்டிலிருக்கும் இந்த நனைந்த கோவணத்திற்கு ஈடாக அதே நிறையுள்ள வேறொரு புதிய கோவணத்தை தாரும்… என சிவனடியார் நிபந்தனை விதித்தார். அது கேட்டு ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைந்த அமர்நீதியார்… உடனே துலாக்கோலை கொண்டு வந்து ஒரு தட்டில் அடியவரது கோவணமும், இன்னொரு தட்டில் தன் கையிலிருந்த கோவணத்தையும் வைத்தார். துலாக்கோலில் உள்ள தட்டு அடியவர் பக்கமே தாழ்ந்திருந்தது. மேலும் சில கோவணங்களை தன் பக்கமுள்ள தட்டில் வைத்தார். அப்படியும் துலாக்கோள் சமமாகவில்லை. மேலும் மேலும் தம்மிடமுள்ள அனைத்து கோவணங்களையும் கொண்டு வந்து வைத்தும் தம் பக்கம் துலாக்கோல் உயராததைக் கண்டு கலக்கமடைந்தார் அமர்நீதியார்.

பிறகு தம்மிடமுள்ள தங்கம், வெள்ளி, வைரங்களையும் அத்தட்டில் வைத்தும் சிறிதும் துலாக்கோல் உயரவில்லை. ஐயா! என்னிடமிருந்த கோவணங்களையும், நல் வழியில் ஈட்டிய பொருள்களையும் வைத்தும் உங்கள் கோவணத்துக்கு அவைகள் ஈடாகவில்லை. அதனால் நானும் என் மனைவியும் என் மகனையும் துலாக்கோலில் அமர்கிறோம். தங்கள் அடிமைகளாய் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். தாங்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்கின்றோம்… என அமர்நீதியார் வேண்டி அனைவரும் துலாக்கோலில் ஏறி கண்களை மூடி வணங்கி நின்றனர்.


இதற்கு மேலும் சோதிக்க மனமின்றி, துலாக்கோலை நேர் நிறுத்த சம்மதித்தார் அவ்வடியார். உடனே துலாக்கோலும் அமர்நீதியார் பக்கம் இறங்கி நேர் நின்று சமமாகியது. மூவரும் கண் திறந்து பார்க்க… அதற்குள் அவ்வடியார் மாயமாய் மறைந்தார். அடியாரைக் காணாது அனைவரும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்து, நீலகண்ட பெருமான் உமாதேவியாருடன் காட்சி அளித்தார். விண்ணவர்கள் கற்பக பூக்களை மழைபோல் பொழிய மறைகள் முரசுபோல் முழங்கின. வணிகரும் மனைவியாரும் மகனும் துலாத்தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளால் துலாத்தட்டு புஷ்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புஷ்பக விமானத்தில் கைலங்கிரியை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.

அமர்நீதியார் உருவாக்கிய திருமடம் கோவிலுக்கு வெளியே குளத்தின் தென்மேலைக்கரையில் சிதிலமடைந்த நிலையில் இன்றும் உள்ளதாக கூறுகின்றார்கள். இங்குள்ள இறைவன் பொன் நிறமாக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகின்றார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என ஐந்து நிறங்களில் காட்சி கொடுப்பதால் ‘பஞ்சலிங்கேசர்’ என பெயர் கொண்டார்.


அமர்நீதியார் முக்தி தலம் “திருநல்லூர்”. முக்தி கொடுத்த இறைவன் திருப்பெயர் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர், இறைவி பெயர் ஸ்ரீ பர்வத சுந்தரி. அமர்நீதியாரின் குருபூஜை நாள் ‘ஆனி – பூரம்’.

          அமர்நீதியாரின் காலத்திற்கும் பிற்பாடு தோன்றியதாக அறியப்படும் அப்பரும், சம்பந்தரும் இந்த திருநல்லூர் கோவிலை பாடியிருக்கின்றார்கள். ஆனால் அப்பாடல்களில் அமர்நீதியாரைப் பற்றி இருவரும் குறிப்பிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

          சரி… நாம் கதைக்குச் செல்வோம். அமர்நீதியார் கதையில் கோவணத்தை தானம் அளித்தே இறையருள் பெற்றதாக அறிகின்றோம். 63 நாயன்மார்களில் நாம் யாரை பின்பற்றினாலும், அந்நாயன்மார் பெற்ற சித்தியினை நாமும் பெறலாம் என வள்ளற்பெருமான் கூறுகின்றார். எனவே நாம் அமர்நீதியார் செய்த தொண்டான கோவண தானத்தை செய்து இறையருள் பெற முயன்றால் என்ன ஆகும்? முதலில் கோவணத்தை வாங்குவார் இவ்வுலகில் இன்று இல்லை. வாங்குவாரின்றி கொடுப்பாரும் இல்லை. அப்படியே இதனையும் ஒரு சடங்காக ஏற்படுத்தி கோவணத்தை கொடுத்து வாங்கினாலும் இறையருள் கிடைக்கப்போவதில்லை. பின்பு இக்கதையில் உள்ள தத்துவம் என்ன?

          பிறருக்கு தானம் செய்ய வேண்டும் என்பதே இக்கதையின் தத்துவம். தானம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதே இக்கதையின் முக்கியம். இங்கே அமர்நீதியார் என்கின்ற கதைமாந்தர் ஏதோ ஒரு தானம் கொடுக்கின்றார். அவர் யாருக்கு தானம் கொடுக்கின்றார். தமக்கு பிடித்த சிவ அடியார்க்கு மட்டுமே தானம் கொடுக்கின்றார். ஆண் அடியார்களுக்கு மட்டுமே தானம். பெண் அடியார்களுக்கு தானம் இல்லை. அதுவும் எதனை தானம் கொடுக்கின்றார்? மிகச்சாதாரண கோவணத்தை தானம் கொடுக்கின்றார். கொடுப்பவர் மிகப்பெரிய செல்வந்தர். இவர் கோவணத்தையா தானம் கொடுப்பது? இவருடைய அந்தஸ்துக்கு தலைப்பாகை, மேல் சட்டை, வேட்டி, துண்டு மற்றும் கோவணம் என்று ஒரு ஆள் அணியக்கூடிய முழு ஆடைகளையும் கொடுக்கும் தகுதி இவருக்கு உண்டு. அப்படி இருந்தும் இவ்வாடைகளில் மிகச்சாதாரண கோவணத்தை மட்டுமே இவர் தானம் கொடுக்கின்றார்.

          இக்கதையின்படி இறைவனின் நனைந்த ஈரத்துடன் உள்ள கோவணத்திற்கு ஈடாக உலகியல் செல்வங்கள் எதுவும் இல்லை என்று நிரூபிக்கப்படுகின்றது. ஈரத்துடன் உள்ள ஒரு கோவணத்திற்கு ஈரமற்ற பல கோவணங்கள் ஈடாகவில்லை. ஈரத்துடன் உள்ள ஒரு கோவணத்திற்கு பொன்னும் விலை உயர்ந்த பொருட்களும் ஈடாகவில்லை. இந்நிலையில் கோவணம் என்பது பெரிதல்ல. அதிலுள்ள ஈரம்தான் பெரிது. ஈரம் என்பது கருணை, தயவு என்று பொருள்படும்.

           எந்த ஒரு காரியத்தையும் நாம் தயவுடன் செய்ய வேண்டும் என்பதே இக்கதையின் தத்துவம். தயவன்றி செய்யும் அறங்கள் கூட பாவமாகும். கோவணம் போன்ற மிகச்சாதாரண எளிமையான தானம் செய்தாலும் அதனையும் கருணையுடன் வழங்கவேண்டும்.

இங்கே அமர்நீதியார் தான் ஒரு செல்வந்தர் என்ற நிலையில் இருந்துக்கொண்டு தானம் செய்கின்றார். மேலும் தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே தானம் செய்கின்றார். மேலும் பெண்பாலுக்கு தானம் கிடையாது. இக்காரணங்களால் இவர் செய்யும் தானத்தில் கருணை அல்லது தயவு அல்லது ஈரம் இல்லாமல் போகின்றது. கருணையுடன் அவரது தானம் அமைந்திருப்பின் சிவ அடியார்களுக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்கும் வறியவர்களுக்கும் அவரது கோவண தானம் சென்று சேர்ந்திருக்கும். ஆனால் அவரது தானம் ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டுமே சென்று சேர்ந்தது, அதனால் அது அவரது கர்வத்தை ஆணவத்தை அதிகரிக்க செய்திருக்கின்றது. சாதி, மதம், ஆசாரங்கள், சடங்குகள் எல்லாம் தயவினை தடைசெய்வதாக வள்ளற்பெருமான் அறிவிப்பதை நாம் இந்த நேரத்தில் அறிந்து உணர வேன்டும். 

இதையறிந்த இறைவன் அவரது கர்வத்தை ஆணவத்தைப் போக்குகின்றார். இறுதியில் அச்செல்வத்தால் ஆணவமடைந்த அமர்நீதியாரையும் அவரது குடும்பத்தார்களையும் ஈர கோவணத்தை வைத்து, எதிலும் ஈரம் வேண்டும் என புரியவைத்து தம்மை சரணாகதி அடைய வைத்து முக்தி கொடுக்கின்றார். பிறருடைய மானம் காக்கக்கூடிய பொருளாகினும், அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் அதனை அன்போடு கொடுக்க வேண்டும்.

இச்செய்தியை / தத்துவத்தை உணர்த்தவே அன்றைய பெயர் தெரியாத சித்தர்கள் அமர்நீதி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள்.

 அவருக்கான சாஸ்திரத்தை / கதையை ஈர கோவணம் என்கின்ற விதத்தில் அமைத்து,

 அக்கதைக்கு இடமான ஆலயத்தை திருநல்லூரில் அமைத்து மேற்படியான சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயராக ‘கல்யாணசுந்தரேஸ்வரர்’ என்றும் ‘கல்யாண சுந்தரி’ என்றும் கடவுள் பெயராக அமைத்து,  

அந்த சித்தி முடிக்குங் காலமாக ஆனி மாதம் பூரம் நட்சத்திரம் எனவும் அவ்வாலயத்திற்கு விஷேச காலமாக்கி வழக்கத்தில் கொண்டுவந்தார்கள்.

நாமோ இக்கதையினை உட்பொருளை, தத்துவத்தை புறந்தள்ளி கோவிலையும், கடவுள் சிலைகளையும், நாயன்மார் சிலைகளையும் வணங்கி வாழ் நாள் தள்ளுகின்றோம். இதனால் யாதொரு பயனும் இல்லை. எனவே நாம் நமது வாழ்க்கையில் பிறருக்கு தானம் செய்ய வேண்டும். அதுவும் கருணை நெஞ்சுடன் தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் “சத்மெய்” என்கின்ற சித்து கிடைக்கும். 63 கலைகளில் “சத்மெய்” என்பது ஒரு கலை. கருணையுடன் தானம் செய்தால் நமது ஆன்மா ‘சத்மெய்’ என்கின்ற ஒரு கலையுடன் வளர்ச்சியடைகின்றது. ‘சத்மெய்’ என்கின்ற ஆன்ம அறிவை அடைகின்றது. ‘சத்மெய்’ என்கின்ற கலையானது இறைவனையும் நம்மையும் நேர் நிறுத்தும் வல்லமையுடையது. இவ்வாறு தானம் அளித்துவர நமது கதைமாந்தர் அமர்நீதியார் போல நாமும் ஆவோம்.

--தத்துவங்கள் தொடரும்…