இரக்கமே என் உயிர்
என் அன்பு மக்களே…. வந்தனம். எப்படி இருக்கிறீர்கள். (மக்கள் கை தட்டுகின்றனர்). நாமெல்லாம் மனித நேயத்தையும் கடந்து, ஆன்ம நேயத்தில் சங்கமிக்க வேண்டும் மக்களே. இதற்காகத்தான் வள்ளலார் 1865 ஆம் ஆண்டு, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை உருவாக்கினார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தில், வறியவர்களின் பசியை போக்குதல் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
வறியவர்களின் பசியை நீக்குவதில் சமுசாரிகளுக்குத்தான் அதாவது சமுசாரிகள் என்றால், இல்லறம் நடத்தும் குடும்பத்தார்களுக்குத்தான் வள்ளலார் முக்கியத்துவம் தருகிறார். சமுசாரிகள் கூடிய மட்டில் தங்களது செலவுகளை குறைத்து, அதில் மிச்சமாகும் பொருளைக் கொண்டு தங்களால் முடிந்தவரை வறியவர்களுக்கு அன்ன தானம் செய்வது சமுசாரிகளின் ஒழுக்கம் என வள்ளலார் குறிப்பிடுகிறார்.
இவ்வொழுக்கத்தை கடைபிடிக்கும் சமுசாரிகளுக்கு, இறைவனின் அருளானது காரியப்பட்டு, அவர்களுக்கு பல அற்புதங்களை செய்விக்கும் என வள்ளலார் குறிப்பிடுகிறார்.
பசித்தவர்களுக்கு பசியாற்றுவதே விரதமாகக் கொண்ட ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெய்யில் வருத்தாது. நீங்கள் வெய்யிலில் சென்றாலும், சூரியனின் வெப்பம் உங்களை ஒன்றும் செய்யாது. வியர்க்காது, தாகம் எடுக்காது, உடல் சோர்வினைத் தராது, மண்ணும் உங்களது காலை சூடு செய்யாது. பெருமழை, பெருங்காற்று அதாவது புயல், சூராவளி போன்றவை, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய இயற்கை சீற்றங்களும் உங்களை துன்பம் செய்யாது. விடூசிகை அதாவது காலரா, விஷக்காற்று மற்றும் விஷஜுரம் முதலிய அசாத்திய பிணிகளும் உங்களுக்கு உண்டாகாது.
ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும், அதாவது சமீபத்தில் ஏற்பட்ட நேபாள வெள்ளத்தில், ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகள் அகப்பட்டாலும், அவர்களை அந்த வெள்ளம் ஒன்றும் செய்யாது.
மேலும் கள்ளர்களாலும், விரோதிகளாலும் தீங்கிழைக்கப் படமாட்டார்கள். நாட்டை ஆளும் அரசர்களாலும், அதாவது அதிகார வர்க்கத்தினராலும், தெய்வங்களாலும் அவமதிக்கப்பட மாட்டார்கள்.
ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளின் விளைநிலத்தில், அவர்களது முயற்சி இல்லாமலேயே விளைவு மென்மேலும் உண்டாகும்.
அவர்கள் செய்யும் வியாபாரத்தில் தடையில்லாமல், லாபங்கள் உண்டாகும். அவர்கள் பார்க்கும் உத்தியோகத்தில் கெடுதியில்லாத மேன்மை உண்டாகும்.
சுற்றங்களாலும், அடிமைகளாலும் சூழப்படுவார்கள். துஷ்ட மிருகங்களாலும், துஷ்ட ஜந்துக்களாலும், துஷ்டப் பிசாசுகளாலும், துஷ்ட தெய்வங்களாலும் பயப்படும்படி எதுவும் நடக்காது.
ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும், ஊழ்வினையினாலும் சத்தியமாக வராது என்கிறார் வள்ளலார்.
சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதே விரதமாக கொண்டார்களேயானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விஷேச சவுக்கியத்தை உண்டுபண்ணும் என்பது உண்மை.
பல நாள் சந்ததி இல்லாமல் பல பல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணும் என்பது உண்மை.
அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்துக் கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி துன்பப் படுகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டு பண்ணும் என்பது உண்மை.
கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலானவைகளை உண்டுபண்ணும் என்பது உண்மை.
பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து, அவர்களுக்கு இன்பத்தை உண்டு பண்ணுகின்ற ஜீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதத்தை, சமுசாரிகள் மட்டுமல்லாது, தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியினர், பெண்சாதியினர், வயதானோர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், முதலிய யாவராலும் அவசியம் செய்ய வேண்டும் என்பது கடவுளின் ஆணை என்றறிய வேண்டும்.
பசித்தவர்க்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில், புருஷனைப் பெண்சாதி தடுத்தாலும், பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும், பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும், தந்தையைப் பிள்ளைகள் தடுத்தாலும், சீடரை ஆசிரியர் தடுத்தாலும், ஆசிரியரை சீடர் தடுத்தாலும், அடியாரை ஆண்டவர் தடுத்தாலும், குடிகளை அரசன் தடுத்தாலும், அந்தத் தடைகளால் சிறிதும் தடைபடாமல் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அவரவர் செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லாது வேரிடத்திற்கு போகாது என்பதை உண்மையாக நம்பி, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நடத்த வேண்டுமென்றும் அறிய வேண்டும்.
ஏழைகளின் பசியை நிவர்த்தி செய்பவர்களே யோகிகள், அவர்களே ஞானிகள், அவர்களே கடவுளைக் கண்டவர்கள், அவர்களே முத்தர்கள், அவர்களே உத்தமர்கள், அவர்களே தெய்வம் என்று உண்மையாக அறியவேண்டும். ஜீவகாருண்ய ஒழுக்கமுடையவர்கள், எந்த ஜாதியாராயினும், எந்தச் சமயதாராயினும், எந்தச் செய்கையை உடையவர்களாயினும், தேவர், முனிவர், சித்தர், யோகர், முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்கள் என்று சர்வ சத்தியையுடைய கடவுள் சாட்சியாக சத்தியம் செய்கிறேன், என்று வள்ளலார் இறைவன் மீது சத்தியம் செய்து ஜீவகாருண்யம் செய்யும் மக்களின் உண்மை நிலையை, சிறப்புகளை எடுத்து உரைப்பதை நீங்கள் அனைவரும் உணரவேண்டும் மக்களே.
”நாம் இதுவரை சொல்லிவந்த ஜீவகாருண்யத்தால் விளையும் பயன்களை சுருக்கமாக உங்களால் சொல்ல முடியுமா”
“ம்ம்… சொல்கிறேன்… இயற்கையினால் உண்டாகும் எப்படிப்பட்ட ஆபத்தும் ஜீவகாருண்யமுள்ளவர்களை ஒன்றும் செய்யாது. விவசாயிகளின் நிலங்களில், அவர்களின் முயற்சி இல்லாமலேயே பயிர் விளைவு உண்டாகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும், துஷ்ட மிருகங்கள், துஷ்ட ஜந்துக்கள், துஷ்ட தெய்வங்களால் எப்படிப்பட்ட ஆபத்துக்களும் ஊழ்வினையாலும், அஜாக்கிரத்தையாலும் சத்தியமாக வராது. தீராத வியாதிகள் தீரும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு அறிவுள்ள சந்ததி உண்டாகும். ஆயுள் குறைவுள்ளவர்களுக்கு தீர்க்க ஆயுளை உண்டுபண்ணும். கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவைகளை உண்டுபண்ணும்.
ஆஹா,,, அருமை. எனவே நாம் தயவுடன் இருப்போம் மக்களே. நாம் அடுத்த கூட்டத்தில் சந்திப்போம் மக்களே. அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன், நன்றி. உங்கள் டி.எம்.ராமலிங்கம், கடலூர்.




