Wednesday, September 16, 2026

இரக்கமே என் உயிர்

இரக்கமே என் உயிர்

என் அன்பு மக்களே…. வந்தனம். எப்படி இருக்கிறீர்கள். (மக்கள் கை தட்டுகின்றனர்). நாமெல்லாம் மனித நேயத்தையும் கடந்து, ஆன்ம நேயத்தில் சங்கமிக்க வேண்டும் மக்களே. இதற்காகத்தான் வள்ளலார் 1865 ஆம் ஆண்டு, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை உருவாக்கினார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தில், வறியவர்களின் பசியை போக்குதல் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். 

வறியவர்களின் பசியை நீக்குவதில் சமுசாரிகளுக்குத்தான் அதாவது சமுசாரிகள் என்றால், இல்லறம் நடத்தும் குடும்பத்தார்களுக்குத்தான் வள்ளலார் முக்கியத்துவம் தருகிறார். சமுசாரிகள் கூடிய மட்டில்  தங்களது செலவுகளை குறைத்து, அதில் மிச்சமாகும் பொருளைக் கொண்டு தங்களால் முடிந்தவரை வறியவர்களுக்கு அன்ன தானம் செய்வது சமுசாரிகளின் ஒழுக்கம் என வள்ளலார் குறிப்பிடுகிறார். 

இவ்வொழுக்கத்தை கடைபிடிக்கும் சமுசாரிகளுக்கு, இறைவனின் அருளானது காரியப்பட்டு, அவர்களுக்கு பல அற்புதங்களை செய்விக்கும் என வள்ளலார் குறிப்பிடுகிறார். 

பசித்தவர்களுக்கு பசியாற்றுவதே விரதமாகக் கொண்ட ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெய்யில் வருத்தாது. நீங்கள் வெய்யிலில் சென்றாலும், சூரியனின் வெப்பம் உங்களை ஒன்றும் செய்யாது. வியர்க்காது, தாகம் எடுக்காது, உடல் சோர்வினைத் தராது, மண்ணும் உங்களது காலை சூடு செய்யாது. பெருமழை, பெருங்காற்று அதாவது புயல், சூராவளி போன்றவை, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய இயற்கை சீற்றங்களும் உங்களை துன்பம் செய்யாது. விடூசிகை அதாவது காலரா, விஷக்காற்று மற்றும் விஷஜுரம் முதலிய அசாத்திய பிணிகளும் உங்களுக்கு உண்டாகாது. 

ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும், அதாவது சமீபத்தில் ஏற்பட்ட நேபாள வெள்ளத்தில், ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகள் அகப்பட்டாலும், அவர்களை அந்த வெள்ளம் ஒன்றும் செய்யாது. 

மேலும் கள்ளர்களாலும், விரோதிகளாலும் தீங்கிழைக்கப் படமாட்டார்கள். நாட்டை ஆளும் அரசர்களாலும், அதாவது அதிகார வர்க்கத்தினராலும், தெய்வங்களாலும் அவமதிக்கப்பட மாட்டார்கள். 

ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளின் விளைநிலத்தில், அவர்களது முயற்சி இல்லாமலேயே விளைவு மென்மேலும் உண்டாகும். 

அவர்கள் செய்யும் வியாபாரத்தில் தடையில்லாமல், லாபங்கள் உண்டாகும். அவர்கள் பார்க்கும் உத்தியோகத்தில் கெடுதியில்லாத மேன்மை உண்டாகும்.

சுற்றங்களாலும், அடிமைகளாலும் சூழப்படுவார்கள். துஷ்ட மிருகங்களாலும், துஷ்ட ஜந்துக்களாலும், துஷ்டப் பிசாசுகளாலும், துஷ்ட தெய்வங்களாலும் பயப்படும்படி எதுவும் நடக்காது. 

ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும்,  ஊழ்வினையினாலும் சத்தியமாக வராது என்கிறார் வள்ளலார்.  

சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதே விரதமாக கொண்டார்களேயானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விஷேச சவுக்கியத்தை உண்டுபண்ணும் என்பது உண்மை. 

பல நாள் சந்ததி இல்லாமல் பல பல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணும் என்பது உண்மை.

அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்துக் கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி துன்பப் படுகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டு பண்ணும் என்பது உண்மை. 

கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலானவைகளை உண்டுபண்ணும் என்பது உண்மை. 

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து, அவர்களுக்கு இன்பத்தை உண்டு பண்ணுகின்ற ஜீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதத்தை, சமுசாரிகள் மட்டுமல்லாது, தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியினர், பெண்சாதியினர், வயதானோர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், முதலிய யாவராலும் அவசியம் செய்ய வேண்டும் என்பது கடவுளின் ஆணை என்றறிய வேண்டும். 

பசித்தவர்க்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில், புருஷனைப் பெண்சாதி தடுத்தாலும், பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும், பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும், தந்தையைப் பிள்ளைகள் தடுத்தாலும், சீடரை ஆசிரியர் தடுத்தாலும், ஆசிரியரை சீடர் தடுத்தாலும், அடியாரை ஆண்டவர் தடுத்தாலும், குடிகளை அரசன் தடுத்தாலும், அந்தத் தடைகளால் சிறிதும் தடைபடாமல் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அவரவர் செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லாது வேரிடத்திற்கு போகாது என்பதை உண்மையாக நம்பி, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நடத்த வேண்டுமென்றும் அறிய வேண்டும். 

ஏழைகளின் பசியை நிவர்த்தி செய்பவர்களே யோகிகள், அவர்களே ஞானிகள், அவர்களே கடவுளைக் கண்டவர்கள், அவர்களே முத்தர்கள், அவர்களே உத்தமர்கள், அவர்களே தெய்வம் என்று உண்மையாக அறியவேண்டும். ஜீவகாருண்ய ஒழுக்கமுடையவர்கள், எந்த ஜாதியாராயினும், எந்தச் சமயதாராயினும், எந்தச் செய்கையை உடையவர்களாயினும், தேவர், முனிவர், சித்தர், யோகர், முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்கள் என்று சர்வ சத்தியையுடைய கடவுள் சாட்சியாக சத்தியம் செய்கிறேன், என்று வள்ளலார் இறைவன் மீது சத்தியம் செய்து ஜீவகாருண்யம் செய்யும் மக்களின் உண்மை நிலையை, சிறப்புகளை எடுத்து உரைப்பதை நீங்கள் அனைவரும் உணரவேண்டும் மக்களே. 

”நாம் இதுவரை சொல்லிவந்த ஜீவகாருண்யத்தால் விளையும் பயன்களை சுருக்கமாக உங்களால் சொல்ல முடியுமா”

“ம்ம்… சொல்கிறேன்… இயற்கையினால் உண்டாகும் எப்படிப்பட்ட ஆபத்தும் ஜீவகாருண்யமுள்ளவர்களை ஒன்றும் செய்யாது. விவசாயிகளின் நிலங்களில், அவர்களின் முயற்சி இல்லாமலேயே பயிர் விளைவு உண்டாகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும், துஷ்ட மிருகங்கள், துஷ்ட ஜந்துக்கள், துஷ்ட தெய்வங்களால் எப்படிப்பட்ட ஆபத்துக்களும் ஊழ்வினையாலும், அஜாக்கிரத்தையாலும் சத்தியமாக வராது. தீராத வியாதிகள் தீரும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு அறிவுள்ள சந்ததி உண்டாகும். ஆயுள் குறைவுள்ளவர்களுக்கு தீர்க்க ஆயுளை உண்டுபண்ணும். கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவைகளை உண்டுபண்ணும்.

ஆஹா,,, அருமை.  எனவே நாம் தயவுடன் இருப்போம் மக்களே. நாம் அடுத்த கூட்டத்தில் சந்திப்போம் மக்களே. அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன், நன்றி. உங்கள் டி.எம்.ராமலிங்கம், கடலூர். 




Saturday, September 12, 2026

சரியை, கிரியை, யோகம், ஞானம் வேண்டாம்:

சரியை, கிரியை, யோகம், ஞானம் வேண்டாம்:


அன்பு சகோதர சகோதரிகளே! வணக்கம்

இன்றைய உலகில் ஈரான் அமெரிக்கா போர் நடைபெறுவதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் இவ்வுலக நாடுகளில் பெட்ரோல் டீசல், எரிவாயு கிடைக்காமல் மக்களால் வசதியாக வாழ முடியவில்லை. நீங்கள் பல கோடி செலவழித்து சொகுசு கார் வாங்கினாலும், அந்தக்காரில் செல்வதற்கு மிகச் சாதாரணமான பெட்ரோல் தேவை. பெட்ரோல் இல்லாமல், உங்களது சொகுசு கார் ஒரு செண்டிமீட்டர்கூட நகராது.

பெட்ரோல் இல்லாது, நீங்கள் வாங்கிக் குவிக்கும் அனைத்து வாகனங்களும் வெறும் அலங்கார பொம்மைகளாகவே இருக்கும்.

இங்கு நமது வாழ்க்கையினை செம்மையாக வழிநடத்த ஜீவகாருண்யம் முக்கியமாக வேண்டும். ஜீவகாருண்யம் என்பது காரில் பயன்படும் பெட்ரோலைப் போன்றது. அப்படிப்பட்ட ஜீவகாருண்யம் இல்லாமல், இந்த உலகில் வாழும் மக்கள் யாவரும் வெறும் அழகு பொம்மைகளாகவே வலம் வருகின்றனர்.

ஜீவகாருண்யம் இல்லாமல், சரியை, கிரியை, யோகம், ஞானம் பெற்றவர்களும், கடவுள் அருளுக்கு சிறிதும் பாத்திரமாகமாட்டார்கள்.

புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடல், புண்ணிய தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளை தரிசித்தல், தோத்திரம் செய்தல், ஜெபம் செய்தல், விரதம் இருத்தல், யாகம் செய்தல், பூஜை செய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற சமுசாரிகளும், விரதிகளும், பக்தர்களும், ரிஷிகளும்,

உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச் சார்புகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி, மனோலயஞ் செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும்,

அளவு கடந்த சித்தி இன்பங்களைப் பெற்ற சித்தர்களும், எது நிலையற்றது, எது நிலையானது என்று அறிந்து எல்லாப் பற்றுகளையும் துறந்து பிரம்ம அனுபவத்தைப் பெற்ற ஞானிகளும்,

ஜீவகாருண்யம் செய்யாமல், எவ்வளவு பெரிய ஆன்மீக செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் யாவரும் மோட்சம் என்னும் மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறி, அவ்வீட்டிற்கு அருகில் காத்திருந்து, அவ்வீட்டிற்குள் புக முடியாமல், மீண்டும் இவ்வுலகிற்கே திரும்புவார்கள்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டில் திறவுகோள். இந்த திறவுகோல் இருந்தால்தான், மோட்ச வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று இன்பத்தை அடைவார்கள் என்பதை உண்மையாக அறிய வேண்டும்.

எனவே, அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளில் சிக்குண்டு மாள்வதை விடுத்து, ஜீவகாருண்யம்  என்னும் கடவுள் வழிபாட்டால் நாம் பெறுவதுதான் இன்ப வாழ்வாகும்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ஜீவகாருண்யத்தை பின்பற்றாத மக்களுக்கு அறிவு விளங்கவில்லை என்று நாசூக்காக சொல்கிறார் வள்ளலார்.

நாமும் இந்நேரத்தில் உலக மக்களுக்கு எல்லாம், திருவிளங்க சிவயோக சித்தி எல்லாம் விளங்க, சிவஞான நிலை விளங்க சிவா அனுபவம் விளங்க, பூரண அறிவு விளங்கவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வோம்.

 ஆக, நாம் அனைவரும் தயவுடன் இருப்போம் மக்களேநன்றி

 அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

--T.M.RAMALINGAM - CUDDALORE * +91 9445545475



Friday, September 11, 2026

ஹிம்சை உணவு மிருகங்களுக்கும் அனுமதி இல்லை

ஹிம்சை உணவு மிருகங்களுக்கும் அனுமதி இல்லை


இங்கே கூடியிருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் நலம், உங்கள் நலம் அறிய ஆவல். அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? 

முதன் முதலில் தமிழில் உரைநடையை கொண்டுவந்தவர் வள்ளலார்தான். வள்ளலாருக்கு முன்பு செய்யுள் வடிவில்தான் தமிழ் வளர்ந்து வந்தது. தமிழில் உரைநடை வடிவை வள்ளலார் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், தனக்குத் தானே கேள்விகளை கேட்டுக்கொண்டு, அதற்கு தானே பதிலையும் உரைநடை வடிவில் முதலில் கொடுத்தவர் வள்ளலார்தான். 

வள்ளலார், தான் எழுதிய “ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் நூலில் உரைநடையை கையாண்டிருப்பார். இந்த உரைநடையை கேள்வி, பதில் என்னும் நடையில் மிக அருமையாக வடிவமைத்திருப்பார். 

தமிழில் முதன் முதலில் உரைநடையை எழுதி, அதனை தமிழக மக்களுக்குக் கொடுத்த சிதம்பரம் இராமலிங்கம் என்னும் வள்ளலாரை போற்றும் வண்ணம், நாமெல்லாம் எழுந்து கரவொலி எழுப்பலாமே மக்களே.

. இன்று நாம், காடுகளில் வசிக்கும் புலி, சிங்கம், இவைகளின் உணவு முறைகள் பற்றி வள்ளலார் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றி ”ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் உரைநடை நூலின் வழியே பார்ப்போம் வாருங்கள்

மாமிச ஆகாரம் புலி முதலிய துஷ்ட மிருகங்களுக்கு கடவுளால் அனுமதிக்கப்பட்ட நியதி ஆகாரம் அல்லவா? என்றால், இல்லை. மாமிச உணவு, காடுகளில் வாழும் புலி, சிங்கம் போன்ற துஷ்ட மிருகங்களுக்கும் கடவுளால் அனுமதிக்கப்பட்ட உணவு அல்ல என்கிறார் வள்ளலார். 

காட்டு மிருகங்கள் எல்லாம், தங்களது பரம்பரை வழக்கத்தால் அவைகள் தொடர்ந்து மாமிசங்களை உண்கின்றன. இம்மிருகங்களை சைவ ஆகாரத்திற்கு பழக்கப்படுத்த யாரும் இல்லை. ஒரு வேளை, ஒரு புலிக்குட்டியை பிடித்து வந்து, அதற்கு பிறந்தது முதல் சுத்த சைவ உணவையே கொடுத்து நாம் பழக்கப்படுத்தினால், அது சுத்த ஆகாரத்தையே உண்டு வாழுவதைப் பார்க்கலாம். 

”புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்ற பழமொழியை பொய்யாக்க முடியும். ஆனால், அதனை அவ்வாறு பழக்க மனிதர்களால் முடியாமல் போய்விடுகிறது. ஆதலால் அவைகள் தங்கள் வழக்கத்தால் அசுத்த ஆகாரங்களையே உண்கின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக, நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களை, அவைகள் வேறு இடத்திற்குச் சென்று அசுத்த உணவை உண்ண விடாமல், அவைகளுக்கு சுத்த உணவான சைவ உணவைக் கொடுத்து வளர்த்தால், அவைகள் இறுதிவரை அசுத்த உணவை தொடாது வாழ்வதை பார்க்கலாம்.

ஆகவே, ஒரு ஜீவனை இம்சைப் படுத்திக் கொன்று, அதனை வேறு ஒரு ஜீவனுக்கு பசியாற்றுவித்தல் கடவுள் அருளுக்கு சம்மதம் அல்ல. அது ஜீவகாருண்யமும் அல்ல என்று சத்தியமாக அறிய வேண்டும். 

இறைவனானவன், எல்லா உயிர்களுக்கும் சிவப்புக் கலரில்தான் இரத்தத்தை கொடுத்துள்ளான். இறைவனானவன், எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையை கொடுத்து, பந்தம், பாசம். சிற்றின்பம் போன்றவைகளை சமமாகவே கொடுத்துள்ளான். உங்கள் கைவிரலில் ஏதேனும் காயம் பட்டுவிட்டால், நீங்கள் எவ்வாறு வலியால் துடிக்கிறீர்களோ? அதே துடிப்பை, அதே வலியை எல்லா உயிர்களுக்கும் இறைவன் சமமாகவே கொடுத்துள்ளான். 

எனவே மக்களே, நாம், எல்லா உயிர்களிடத்தும் தயவாய் இருப்போம்.

நன்றி மக்களே. வேறொரு காணொலியில் சந்திப்போம். 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி;

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. 




Tuesday, September 8, 2026

முன் ஜென்ம பாவங்கள் - உங்கள் பின்னால்...

 முன் ஜென்ம பாவங்கள் - உங்கள் பின்னால்...


ஹலோ மக்களே, எப்படி இருக்கிறீர்கள்… 

இன்று நாம் பார்க்கப்போவது, முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள், இந்த ஜென்மத்தில் நம்மை வந்து தாக்குமா? என்பது பற்றி வள்ளலார் என்ன சொல்கிறார், என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.
அதற்கு முன்னர், உங்கள் வீட்டில் வள்ளலார் அருளிய ”திருவருட்பா” ஆறு திருமுறைகள் நூல் உள்ளதா? வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு, ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் இயற்றிய “பிரபந்தத்திரட்டு” நூல் உள்ளதா? இவை இரண்டும் சுத்த சன்மார்க்க நூல்கள் ஆகும்.  

இந்த இரண்டு நூல்களும் இல்லை என்றால் உடனே வாங்கி உங்கள் வீட்டில் பத்திரப்படுத்துங்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த நூல்களை எடுத்து படியுங்கள். படிக்கும்பொழுது உங்கள் ஊன் கலந்து, உயிர் கலந்து படிக்க வேண்டும். அப்போது உங்களது துன்மார்க்கங்கள் உங்களை விட்டு ஓடுவதை பார்ப்பீர்கள்.

இந்த இரண்டு நூல்களையும் இறைவன் இந்த உலகிற்கு கொடுத்தமைக்காக, அவருக்கு ஒரு நன்றி சொல்லும் பொருட்டு, நாம் அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாக கர ஓசை எழுப்பலாமே. (மக்கள் எழுந்து நின்று கர ஓசை எழுப்புகின்றனர்)

ஒரு குடியானான், தனது அதீத ஆசையை தீர்ப்பதற்காக, வேறு ஒரு நபரிடம் கடன் பெற்று, அந்தப் பணத்தை செலவழித்து விடுகிறான். ஆனால் அவனால் கடனை முழுதாக திருப்பிச் செலுத்த இயலவில்லை. கடன் கொடுத்த நபர், அவன் வீட்டுக்கு அடிக்கடி வந்து பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்கிறான்.

கடன் தொல்லை தாங்காமல், ஒரு கட்டத்தில், கடன் பெற்றவன், தனது குடியிருப்பை வேறு ஒரு ஊருக்கு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டான். என்ன கொடுமை பாருங்கள், அந்த புதிய வீட்டினையும் எப்படியோ கண்டுபிடித்து, அங்கேயும் வந்து கடன் கொடுத்தவன் வந்து தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டான். கடன் கொடுத்தவன் சும்மா விடுவானா?

ஒரு குடியானவள், தனது கணவன் சொல் பேச்சை கேட்காமல், பலரைக் கூட்டி தன் வீட்டில் விபச்சாரம் செய்கிறாள். இதனை தடுக்க நினைத்த கணவன், தனது வீட்டை அந்த ஏரியாவிலிருந்து மாற்றி நெடுந்தொலைவில் உள்ள வேறு ஒரு இடத்திற்கு குடிபெயர்ந்தான்.

என்ன கொடுமை பாருங்கள், அந்த புதிய வீட்டிலும் துன்மார்க்கர்கள் தேடி வந்து, அவன் மனைவியுடன் கூட ஆரம்பித்துவிட்டார்கள். 

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு சொல்லவா மக்களே…

நமது மக்கள் ஆட்சியில், ஒருவன் ,தான் ஆட்சி செய்தபோது செய்த பாவச்செயல்களுக்கு, அவன் ஆட்சிக்குப் பிறகு, மக்களின் தீர்ப்பால் வேறு ஒருவர் ஆட்சி அமையும்போது, முந்தைய ஆட்சியாளனுக்கு அவன் செய்த பாவச் செயல்களுக்கு  அவனுக்கு தண்டனை கிடைக்கிறது அல்லவா?   

இவ்வாறு, நீங்கள் முன்பிருந்த வீட்டில் செய்த வினைகள், நீங்கள் வேறு ஒரு வீட்டை மாற்றிய பிறகும், தற்போது உள்ள வீட்டிலும் தொடர்ந்து வருவது போல, ஒருவன் ஆட்சி செய்யும்போது, அவன் செய்த பாவங்களுக்கான  தண்டனை, அவனுக்கு வேறு ஒருவரின் ஆட்சியில் கிடைப்பது போல, 

ஜீவகாருண்யம் இன்றி, நீங்கள் முன் பிறவியில் விரும்பி செய்த பாவச் செயல்கள், உங்களின் இந்தப் பிறவியிலும் தொடரும் என்பதை அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார். பாவச் செயல்கள் மட்டுமல்ல, புண்ணியச் செயல்களும் அவ்வாறே தொடரும் மக்களே.

எனவே, உங்களை தொடர வேண்டியது பாவமா? புண்ணியமா? என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். (மக்களின் கர ஓசை எழுகிறது) 

நன்றி மக்களே…. நாம் தயவோடு இருப்போம்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் மலரடி வாழ்க, வாழ்க.