சுத்த சன்மார்க்கத்தில் திருமணத்திற்குத் தடையா?
என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
என் இயல் போல் பிறர் இயலை எண்ணாதே, என்னைப்போல் பிறரை எண்ணாதே. பிறர் போல் நால் இல்லை. நான் தனித்து இருக்கின்றேன். இதனை நான் இறுமாப்பாய் சொல்லவதாக நினைத்துவிட வேண்டாம்.
எனது அருட்பெருஞ்ஜோதி அல்லாது வேறொருவரிடம் எனக்கு ஒரு சிறிதும் பற்றில்லை.
எனக்கு உற்றவரும், மற்றவரும், எனது பொருளும், எனக்கான என் உயிரும், எனது உடலும், எனது உணர்வும், உயிர் உணர்வால் அடைந்த சுகமும்
திருச்சிற்றம்பலத்தில் அதாவது என் இறைவன் இருக்கும் இடத்தே நிலைபெற்றுவிட்டது.
எனவே நான், பிறர் போல, பெண்ணும் அல்ல, ஆணும் அல்ல, அலியும் அல்ல. இது குறித்து நீ என்று அறியப்போகின்றாயோ?
என, தன் மனதிடம் வள்ளலார், தனது உண்மை நிலையை எடுத்துரைப்பதை பாருங்கள்.
ஆறாம் திருமுறையில் அனுபவ மாலையில் இப்பாடலை பாடியிருக்கின்றார்.
பாலியல் மாயையை கடந்து, நாமெல்லாம் ஆன்மா என்கிற நிலையை அடைய, இந்தப்பாடலை சன்மார்க்கிகள் ஒரு முக்கிய ஆதாரமாகக் கொள்ள வேண்டும். சாகாதவனே சன்மார்க்கி என்ற நிலையை அடைய வேண்டுமானால், நமது ஆன்மா குடிகொண்ட இந்த உடல், பிற அசுத்த உடலுடன் உறவு கொள்வதை தடுத்து, நிர்மலனாகிய இறை உடலுடன் உறவு கொள்ள வேண்டும்.
இறைவனின் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதே சன்மார்க்கிகளில் இலட்சியமாக இருக்க வேண்டும்.
இதற்கு தடையாக இருப்பது உடல் உறவிற்காக செய்யக்கூடிய திருமணங்கள். இந்த திருமணங்கள் உலகியல் மனிதர்களுக்கு அவசியம் வேண்டும். நாம் இங்கு சன்மார்க்கிகளை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். யார் ஒருவர் ஒளி தேகத்திற்கு இச்சை கொள்கிறார்களோ? அவர்களை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்.
மோக மாந்தருக்கு உரைத்திலேன், இது சுகம் உன்னும் யோக மாந்தருக்கு உரைத்தேன் என்பார் வள்ளலார்.
ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகமுடையாருக்கு கோசத்தடிப்பு உண்டாகாது, என்பார் வள்ளலார்.
வள்ளலார் திருமணம் செய்தாரே? என்று யாரேனும் உங்களில் கேட்டால், நீங்களும் எதிர் பாலினத்தாரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள். ஆனால் உடலுறவில் வள்ளலார் போல் ஈடுபடாமல் இருவரும் இருங்கள். இராமகிருஷ்ணரும் அவ்வாறுதான் இருந்தார். உங்களால் முடிந்தால் அவ்வாறு இருங்கள்.
பிரம்ம குமாரிகள் அமைப்புதான் வள்ளலாரின் ஆன்ம தத்துவத்தை கடைபிடித்துவருகின்றவர்கள்.
இதன் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதும், உரையாடும் போதும் "ஓம் சாந்தி" என்று கூறிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதன் பொருள் "நான் ஒரு அமைதியான ஆன்மா" என்பதாகும்.
மனிதர்கள் அனைவரும் உடல் அல்ல, தூய்மையான ஆன்மாக்கள் என்ற உண்மையை உணர்கின்றார்கள்.
ஆன்மாவிற்கு பாலினம் ஏதுமில்லை என்பதை தங்களது நடத்தையின் வாயிலாக எடுத்துரைக்கின்றார்கள்.
ஒருவரை ஒருவர் சந்தித்து பேசும்போது முதலில், எதிரில் நிற்ப்பவரின் நெற்றிப்பொட்டைப் பார்த்துதான் பேசுவார்கள்.
சிவபெருமானை உச்ச ஆன்மீகத் தந்தையாகக் கருதி ராஜயோகத் தியானம் (Raja Yoga Meditation) பயிற்றுவிக்கின்றார்கள். வள்ளலார் போன்று தூய்மையான வெள்ளாடைதான் (ஆண்களும், பெண்களும்) அணிவார்கள். அசைவ உணவு உட்கொள்வதில்லை.
இந்த அமைப்பினர் யார் ஒருவரும் திருமணம் செய்துகொள்வதில்லை. உடல் உறவு செய்யின், தனது ஆன்மாவானது பரிசுத்த நிலையை இழந்துவிடும் என்ற இரகசியத்தை தெரிந்தவர்கள் இவர்கள்.
சுத்த சன்மார்க்கிகளுக்கும் வள்ளலார் இதனை மறைமுகமாக போதித்துள்ளார்.
இதனால் மட்டும் மரணமில்லா பெருவாழ்வை பிரம்ம குமாரிகள் அடைவார்களா? என்றால் இல்லை. சுத்த சன்மார்க்க ஒழுக்கங்களில் இவர்கள் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றார்கள். சன்மார்க்கிகள் இந்த ஒழுக்கத்தை விடுத்து மற்ற ஒழுக்கங்களை கடைபிடிக்கின்றார்கள். ஆக, யாரும் முழுமையான அனைத்து ஒழுக்கங்களையும் கடைபிடிப்பது இல்லை.
இப்போது தெரிகின்றதா? ஏன், வள்ளலாருக்குப் பிறகு யாரும் ஒளி உடம்பு பெறவில்லை என்று!
வள்ளலார் சொல்லும் இந்த இரகசியத்தை நாம் சற்று விரிவாகச் சொன்னால், நீ எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கின்றாய்? என்று என் மீது சண்டைக்கு வரும் சன்மார்க்கர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நான் என்ன வென்று சொல்வது? நீங்கள் புதியதாக ஒரு கருத்தை சொல்லாதீர்கள். பைத்தியக்காரன் நீ, இல்லறம் அல்லாது நல்லறம் அல்ல, இப்படியெல்லாம் பதில்கள் வருவதை நினைக்கும் பொழுது, ”கண்ணுக்கு தெரிந்தவரையில் சன்மார்க்கர்களை எங்கும் காணோம்” என்றே வருத்தப்பட வேண்டியிருக்கின்றது.
பாலின மாயையை நான் இன்னும் கடக்கவில்லை. ஆனால் முயற்சியில் இருப்பது உண்மை. இதன் உட்பொருளை உணர்ந்திருக்கிறேன். நீங்கள் அதாவது சன்மார்க்கிகள் இந்த ஒழுக்கத்தை கடைபிடிக்காவிட்டாலும், இவ்வொழுக்கத்தை பரப்புவதில்தான் நியாயம் உண்டு. நம்மால் முடியாவிட்டாலும், எதிர்கால சன்மார்க்கிகள் இவ்வொழுக்கத்திற்கு வருவார்கள். யாரேனும் ஒருவராகிலும் ஒளி உடம்பை பெறுவார்கள். அந்த நோக்கத்திற்காகவது “சன்மார்க்கத்தில் திருமணம் வேண்டாம்” என்பதை பிறருக்கு சொல்லுங்கள்.
நன்றி, வணக்கத்துடன் உங்கள் தி.ம.இராமலிங்கம்.
9445545475





