உங்கள் அடுத்தப் பிறவி என்ன?
”என் அன்பு மக்களே, வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்.
இன்று நம் மக்களிடையே புல் ஒழுக்கங்களே நிறைந்து காணப்படுகின்றன. புல் ஒழுக்கங்கள் என்றால், சட்டத்திற்கு பயந்து ஏதோ ஒருவகையில் நியாயவானாக இருப்பது, தங்களது மதங்கள் கூறுவதுதான் உண்மை என தவறானப் பாதையில் வாழ்க்கையை ஓட்டுவது,அல்லது மனம் போன போக்கில் வாழ்வது, இவைகள்தான் புல் ஒழுக்கங்கள் ஆகும்.
இப்படிப்பட்ட புல் ஒழுக்கங்களைத் தாண்டி மனிதனானவன், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்காமையால்தான் இவ்வுலகில் புல் ஒழுக்கங்களே நிறைந்து காணப்படுகின்றன.
மனிதனானவன் புல் ஒழுக்கங்களையே கடைபிடிப்பதனால், அவனுக்கு என்ன நிகழும் என்று கேட்கிறீர்களா?
அவனுக்கு அடுத்த பிறவியானது துன் மார்க்கப் பிறவியே ஏற்படும், என்கிறார் வள்ளலார்.” அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற உண்மையை உலகிற்கு அறிவித்தார் அவ்வையார்.
மனிதப் பிறவி அவ்வளவு எளிதில் எடுக்கமுடியாது என்பார் வள்ளலார்.
இப்பிறவி தப்பின் எப்பிறவியோ? நம்மில் அனைவரும் அடுத்தப் பிறவி நமக்கு மனிதப் பிறவிதான் கிடைக்கும் என்று நூறு சதவிகிதம் நம்புகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை நூறு சதவிகிதம் பொய்யில்தான் சென்று முடியும்.
இந்த உலகில் 800 கோடி மக்கள் வாழ்கின்றனர். நம்மில் குடும்பக் கட்டுப்பாடு என்ற செயற்கை கட்டுப்பாடு இல்லை என வைத்துக்கொண்டாலும், இன்று, சுமார் 2000 கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால், ஒரு சில எறும்பு புற்றுகளில் இருக்கும் எறும்புகளின் எண்ணிக்கை மட்டுமே இந்த 2000 கோடியினையையும் தாண்டிவிடும்.
இன்னும் மற்ற மற்ற உயிரனங்களின் எண்ணிக்கையை நாம் கணக்கிடவே முடியாது. அவ்வளவு எண்ணிறைந்த ஆன்மாக்கள் நம் போன்ற மனிதப் பிறவியை எடுக்க முடியாமல் இவ்வுலகில் வாழ்கின்றன.
நமக்கு மனிதப் பிறவி எதற்காக கொடுக்கப்பட்டது?
நாம் ஒவ்வொருவரும், சர்வ ஜீவ தயவு உடையவர்களாகவும், இறைவனின் சர்வ வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்காகத்தான் நமக்கு இறைவன் இந்த அற்புதமான மனித தேகத்தை கொடுத்தான், என ஒரு குழந்தைக்கு சொல்வது போல், வள்ளலார் நமக்கு சொல்கிறார்.
இதனை மீறி புல் ஒழுக்கங்களை கடைப்பிடிக்கும் கடின சித்தர்கள் முதல் மக்கள் யாவரும், அவர்களது அடுத்தப் பிறவியில், அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப,
சிலர், நரகவாசிகளாகவும்,
சிலர், சமுத்திர வாசிகளாகவும் அதாவது கடலில் வாழும் உயிரினங்களாகவும்,
சிலர், ஆரணிய வாசிகளாவும் அதாவது காடு, மலைகளில் வசிக்கும் ஆதிவாசிகளாகவும்,
சிலர், புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, மான், ஆடு, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட மிருகங்களாகவும்,
சிலர், பாம்பு, தேள் முதலிய விஷ ஜந்துக்களாகவும்,
சிலர், முதளை, சுறா முதலிய கடின ஜந்துக்களாகவும்,
சிலர், காக்கை, கழுகு முதலிய பறவை சண்டாளங்களாகவும்,
சிலர், எட்டி, கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும்,
பிறப்பெடுக்கின்றனர், என்று வள்ளலார் கூறுவதை நீங்கள் யாவரும் அறிய வேண்டும். எனவே என் அன்பு மக்களே!
வள்ளலார் சொல்கிறார், “ இனி நீங்கள் இது வரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை”
பல்லாயிரங்கோடி ஆன்மாக்களில் ஒரு ஆன்மாதான் மனிதனாக பிறப்பெடுக்கிறது,
எனவே தயவுடன் இருங்கள். நன்றி மக்களே!




