கால் பந்தாட்டம்
"கீதையைப் படிப்பதைக் காட்டிலும் கால்பந்தாட்டத்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு மிக அருகில் இருப்பீர்கள்."
சரியாக 120 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு இந்தியத் துறவி பலம் பொருந்திய உடலுக்காகவும்,சுறுசுறுப்பான வாழ்க்கைக்காகவும் மக்களுக்கு இப்படி உபதேசித்தார்...
மேலும் அவர் கால்பந்து குறித்து கூறும் போது;
"கால்பந்து விளையாடும்போது மனம், உடல், செயல் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது. எங்கே மனம், உடல், செயல் அனைத்தும் ஒன்றாகிறதோ அதுவே தெய்விகம்... ஆன்மிகம்’’ என்பார்....
துறவிகள், பகவானைப் பற்றி பேசியே பார்த்த இந்தியா போன்ற நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி..
பலம் பொருந்திய உடலின் தேவைக்கு, கால்பந்தாட்டத்தினை பரிந்துரைக்கிறார். அப்போது மட்டுமல்ல, இப்போதும் அது தேவையானதாய் இருக்கிறது.
இத்தகைய, முற்போக்கான கருத்தினை அன்றைய காலகட்டத்திலேயே பேசிய அந்தத் துறவி தான் சுவாமி விவேகானந்தர்.
உலகமே தற்போது நடந்து கொண்டிருக்கும், பிஃபா கால்பந்தாட்டத்தில் கண்ணுற்றிருக்கின்ற இவ்வேளையில் இதைச் சொன்னால் பொருத்தப் பாடாக இருக்கும்...
இன்றைக்கு நடக்கிற பிஃபா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புடைய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிற இசுபெயின் (Spain) அணியினை எந்த கோலும் அடிக்கவிடாமல் தடுப்பாட்டம் (Defend) ஆடி, ஆட்டத்தை சமன் செய்து உலகையே தன் பக்கம் ஒரு குட்டித் தீவு திரும்ப வைத்திருக்கிறது. இணையத்தையே கலக்கிய அந்த தீவின் பெயர் கேப் வெர்டே (Cabo Verde).இந்த ஆட்டத்தில் பலம் பொருந்திய இசுபெயின்(Spain) அணி ஏழு முறை கோல் அடிக்க முயற்சித்தும், சீனப் பெருஞ்சுவர் போல் நின்று அதனைத் தடுத்தார் ஆட்ட நாயகனான கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் ஓசின்யா.
நமது சென்னையில் இருக்கக்கூடிய ஒரு சட்டமன்றத் தொகுதியின் அளவே,மக்கள் தொகை உடைய நாடு தான் கேப் வெர்டே (Cabo Verde).
ஐந்து லட்சத்திற்கு சற்று அதிகமான மக்கள் தொகை உடைய அந்தத் தீவு, தன்னுடைய முதல் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்று விளையாண்டு வருவதோடு மட்டுமல்லாமல் மிக முக்கியமான நாக் அவுட் ( knockout) சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
நாக் அவுட் சுற்றில், நடப்புச் சாம்பியனும் மேலும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸி(Messi) இருக்கக்கூடிய அர்ஜென்டினாவை இன்றைய நாளில் எதிர்கொள்ளப் போகிறது...
மெஸ்ஸிக்காக, விளையாட்டை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், மெஸ்ஸியோடு இந்தக் குட்டித் தீவு மோதுவதை பார்க்கவும் ரசிகர்கள் மத்தியில் ஆவல் பற்றி இருக்கிறது...
விஷயத்துக்கு வருவோம்....ஒரு குட்டித் தீவு,இவ்வளவு சாதனை செய்யும் போது கோடிக்கணக்கான மக்கள் வாழக்கூடிய இந்தியா, இளைஞர் பட்டாளம் நிரம்பிய இந்தியா...
உலகமே பங்கேற்கும் ஒரு பெரிய போட்டியில் தகுதி கூட பெறாமல் இருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று...
எதற்கெடுத்தாலும் ஏதோ ஒரு விளங்காத அரசியலை செய்து அன்றாட பரபரப்பிலேயே வாழ்ந்து பழகிய நாம், கிராமத்து பாட்டிகள் சொல்வார்களே...
"வாயப் பாத்துட்டு உட்கார்ந்து இரு"என்று இங்கே கால்பந்தாட்டத்தில் அடுத்தவர்களின் காலைப் பார்த்துக்கொண்டு, உட்கார்ந்து இருக்கிறோம்.
இன்னும் இந்திய மக்கள் சரிவர கால்பந்து விளையாடுவதில்லையா??? அல்லது வழக்கம்போல் இந்திய கால்பந்து விளையாட்டில் தனியாக அரசியல் விளையாடுகிறதா???
ஆராய்ந்து, அறிய வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது.
Anyway!!!!
குட்டித் தீவுக்கு (கேப் வெர்டே) மனமார்ந்த வாழ்த்துகள்.
ஓ இந்தியா விழித்தெழு! உன்னுடைய ஆன்மீகத்தால், உலகை வெற்றி கொள்.
-சுவாமி விவேகானந்தர்
ரா. சுரேஷ்


