முன் ஜென்ம பாவங்கள் - உங்கள் பின்னால்...
Tuesday, September 8, 2026
Monday, September 7, 2026
முற்பிறவி உண்டா?
முற்பிறவி உண்டா?
வணக்கம் மக்களே….
நாம் இன்று பார்க்கப்போவது இவ்வுலக ஜீவிகளுக்கு முன் பிறவி இருந்ததா? மற்றும் அடுத்தப் பிறவி உண்டா? என்பது பற்றிதான்.
பொதுவாக அனைத்து மதங்களிலும் இதைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
நாம் இதைப்பற்றி வள்ளலார் என்ன கூறியிருக்கிறார் என்று இந்த நாளில் பார்ப்போம்.
மக்களே, உங்கள் அருகில் வள்ளலார் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா? ஆம், வள்ளலார் இதோ இங்கே நம்மிடையேதான் இருக்கிறார். அவரை வரவேற்கும் பொருட்டு, உற்சாகமாக ஒரு முறை எழுந்து நின்று கரவொலி எழுப்புங்கள் மக்களே.
அனைவரும் எழுந்து கரவொலி எழுப்புகிறார்கள்.
நன்றி மக்களே.
ஒருவன், தான் குடியிருக்க, புதியதாக ஒரு வீட்டைப் பார்த்து வாடகை கொடுத்து குடியிருக்கிறான். அவன், இந்த புதிய வீட்டிற்கு வரும் முன்பே ஏதோ ஒரு வீட்டில் குடியிருந்திருக்க வேண்டும் அல்லவா?, முன்பு இருந்த வீட்டை விட்டுவிட்டுத்தானே, அவன் புதியதாக தற்போது குடியிருக்கும் இந்த வீட்டிற்கு வந்திருக்க முடியும். ஏதோ ஒரு காரணத்தினால் அவன் பழைய வீட்டை விட்டு, புதிய வீட்டிற்கு வந்திருக்கிறான்.
அது போல், அவன் தற்போது இருக்கும் வீடும் பழுதடைந்துவிட்டால், அவன் தனது எதிர் கால வாழ்க்கைக்காக, வேறு ஒரு புதிய வீடு தேடி குடியேறுவான் அல்லவா?
அதுபோல், நமது ஆன்மாவானது, ஆகாரம் என்னும் வாடகை கொடுத்து, இந்த மனித தேகத்தில் ஜீவிக்கிறது. இந்த ஜீவன் இதற்கு முன்பும் ஏதோ ஒரு தேகத்தில் ஜீவித்திருக்க வேண்டும். அந்த முன் தேகத்திற்கு பழுது ஏற்பட்டதால், அந்த ஆன்மாவானது தற்போதுள்ள இந்த மனித தேகத்திற்கு ஆகாரக் கூலி கொடுத்து வசித்துவருகிறது.
தற்போதுள்ள தேகத்திற்கும் பழுது நேரிடும் பொழுது, அந்த ஆன்மாவானது எதிர்காலத்தில் வேறு ஒரு தேகம் எடுப்பது நிச்சயம். ஏனெனில் தேகம் இல்லாமல் ஆன்மாவனது ஜீவித்திருக்க முடியாது.
எனவே, நமக்கெல்லாம் முன் பிறவிகள் இருந்திருக்கின்றன, அடுத்த பிறவிகளும் நிச்சயம் உண்டு, என அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார்.
இங்கு நமக்கு ஒரு கேள்வி எழும். அதாவது, நாம் நமது பழைய வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையினை ஞாபகம் வைத்துக்கொள்வதுபோல, ஏன், நமக்கு முற்பிறவியின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஞாபகம் வருவதில்லை, என்பதுதான் அந்தக் கேள்வி.
இதற்கும் வள்ளலார் பதில் கூறுகிறார். நாம் எவ்வாறு நமது குழந்தைப் பருவ செயல்களை கால ஓட்டத்தில் நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லையோ, அது போல், நாம் நமது முற்பிறவியின் செயல்களையும் கால ஓட்டத்தில் மறந்துவிடுகிறோம்.
யார் ஒருவர் இந்தப் பிறவியில் மரணமில்லா பெருவாழ்வு பெற்று தனது தேகத்தை ஞான தேகமாக, நித்திய தேகமாக மாற்றுகிறோரோ, அவருக்கே அடுத்தப் பிறவி என்பது கிடையாது. நித்திய தேகத்திற்கு குடிக்கூலி கிடையாது, அதாவது ஆகாரம் கொடுக்க வேண்டாம். அது அவருக்கு என்றும் பழுதே ஏற்படாத, சொந்த வீடாகிவிடுகிறது. அவர் எதிர்காலதில் வாழ, அடுத்த வீடு தேடி செல்ல வேண்டியதில்லை.
எனவே மக்களே, நீங்கள் குடியிருக்கும் இந்த தேகம் என்னும் வீட்டினை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், நித்திய தேகமாக்கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் பிற ஜீவன்களை துன்புறுத்தி, அவர்கள் வாழும் தேக வீட்டினை இடித்து பாழ் செய்யாமலிருந்தால்தான், உங்களுக்கு நித்திய வீடு கிடைக்கும் என்பதை மட்டும் நினைவு கொள்ளுங்கள். Mind It.
நாம் தயவுடன் இருப்போம். நன்றி மக்களே…
அருட்பெருஞ்ஜோதி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
Friday, September 4, 2026
உங்கள் அடுத்தப் பிறவி என்ன?
உங்கள் அடுத்தப் பிறவி என்ன?
”என் அன்பு மக்களே, வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்.
இன்று நம் மக்களிடையே புல் ஒழுக்கங்களே நிறைந்து காணப்படுகின்றன. புல் ஒழுக்கங்கள் என்றால், சட்டத்திற்கு பயந்து ஏதோ ஒருவகையில் நியாயவானாக இருப்பது, தங்களது மதங்கள் கூறுவதுதான் உண்மை என தவறானப் பாதையில் வாழ்க்கையை ஓட்டுவது,அல்லது மனம் போன போக்கில் வாழ்வது, இவைகள்தான் புல் ஒழுக்கங்கள் ஆகும்.
இப்படிப்பட்ட புல் ஒழுக்கங்களைத் தாண்டி மனிதனானவன், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்காமையால்தான் இவ்வுலகில் புல் ஒழுக்கங்களே நிறைந்து காணப்படுகின்றன.
மனிதனானவன் புல் ஒழுக்கங்களையே கடைபிடிப்பதனால், அவனுக்கு என்ன நிகழும் என்று கேட்கிறீர்களா?
அவனுக்கு அடுத்த பிறவியானது துன் மார்க்கப் பிறவியே ஏற்படும், என்கிறார் வள்ளலார்.” அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற உண்மையை உலகிற்கு அறிவித்தார் அவ்வையார்.
மனிதப் பிறவி அவ்வளவு எளிதில் எடுக்கமுடியாது என்பார் வள்ளலார்.
இப்பிறவி தப்பின் எப்பிறவியோ? நம்மில் அனைவரும் அடுத்தப் பிறவி நமக்கு மனிதப் பிறவிதான் கிடைக்கும் என்று நூறு சதவிகிதம் நம்புகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை நூறு சதவிகிதம் பொய்யில்தான் சென்று முடியும்.
இந்த உலகில் 800 கோடி மக்கள் வாழ்கின்றனர். நம்மில் குடும்பக் கட்டுப்பாடு என்ற செயற்கை கட்டுப்பாடு இல்லை என வைத்துக்கொண்டாலும், இன்று, சுமார் 2000 கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால், ஒரு சில எறும்பு புற்றுகளில் இருக்கும் எறும்புகளின் எண்ணிக்கை மட்டுமே இந்த 2000 கோடியினையையும் தாண்டிவிடும்.
இன்னும் மற்ற மற்ற உயிரனங்களின் எண்ணிக்கையை நாம் கணக்கிடவே முடியாது. அவ்வளவு எண்ணிறைந்த ஆன்மாக்கள் நம் போன்ற மனிதப் பிறவியை எடுக்க முடியாமல் இவ்வுலகில் வாழ்கின்றன.
நமக்கு மனிதப் பிறவி எதற்காக கொடுக்கப்பட்டது?
நாம் ஒவ்வொருவரும், சர்வ ஜீவ தயவு உடையவர்களாகவும், இறைவனின் சர்வ வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்காகத்தான் நமக்கு இறைவன் இந்த அற்புதமான மனித தேகத்தை கொடுத்தான், என ஒரு குழந்தைக்கு சொல்வது போல், வள்ளலார் நமக்கு சொல்கிறார்.
இதனை மீறி புல் ஒழுக்கங்களை கடைப்பிடிக்கும் கடின சித்தர்கள் முதல் மக்கள் யாவரும், அவர்களது அடுத்தப் பிறவியில், அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப,
சிலர், நரகவாசிகளாகவும்,
சிலர், சமுத்திர வாசிகளாகவும் அதாவது கடலில் வாழும் உயிரினங்களாகவும்,
சிலர், ஆரணிய வாசிகளாவும் அதாவது காடு, மலைகளில் வசிக்கும் ஆதிவாசிகளாகவும்,
சிலர், புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, மான், ஆடு, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட மிருகங்களாகவும்,
சிலர், பாம்பு, தேள் முதலிய விஷ ஜந்துக்களாகவும்,
சிலர், முதளை, சுறா முதலிய கடின ஜந்துக்களாகவும்,
சிலர், காக்கை, கழுகு முதலிய பறவை சண்டாளங்களாகவும்,
சிலர், எட்டி, கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும்,
பிறப்பெடுக்கின்றனர், என்று வள்ளலார் கூறுவதை நீங்கள் யாவரும் அறிய வேண்டும். எனவே என் அன்பு மக்களே!
வள்ளலார் சொல்கிறார், “ இனி நீங்கள் இது வரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை”
பல்லாயிரங்கோடி ஆன்மாக்களில் ஒரு ஆன்மாதான் மனிதனாக பிறப்பெடுக்கிறது,
எனவே தயவுடன் இருங்கள். நன்றி மக்களே!
Friday, August 14, 2026
எல்லா உயிர்களுக்கும் சுதந்தர தின வாழ்த்துகள்
மனிதர்களிடமிருந்து அனைத்து உயிரினங்களுக்கும் சுதந்தரம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
- TMR
9445545475
Friday, August 7, 2026
சுத்த சன்மார்க்கத்தில் திருமணத்திற்குத் தடையா?
சுத்த சன்மார்க்கத்தில் திருமணத்திற்குத் தடையா?




