Monday, March 25, 2024

சித்த வித்தையும் நானும்

அருட்பெருஞ்ஜோதி                       அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                 அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

சித்த வித்தையும் நானும்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

கடந்த ஒரு வருடமாக சித்த வித்தைபற்றின காணொளிகளை யூட்யூப் வழியாக பார்த்து இரசித்து வருகின்றேன். சென்னையைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ தாவா ஐயாவின் காணொளி வாரந்தோறும் ஞாயிறு அல்லது திங்கள் அன்று பார்த்துவிடுவேன். அதன் ஈர்ப்பில் சித்த வித்தையினைப் பற்றி அறிந்துக்கொள்ளும் ஆர்வம் எனக்கு அதிகரித்தது. அதனைப் பற்றி ஆராயும் பொழுது அப்பயிற்சியானது மூச்சுப் பயிற்சி அதாவது வாசி யோகம் சம்பந்தப்பட்டது என்றும் அதன் முடிவு ஜீவ சமாதி அடைதல் என்பதனையும் அறிந்தேன். இந்த அமைப்பின் தலைமை கேரளா வடகாராவில் அமைந்துள்ளதாகவும், இதன் தலைவர் சிவானந்த பரமஹம்சர் என்பதனையும் அறிந்தேன். அவரது வாழ்க்கை வரலாற்றைத் தேடி படித்தேன். அதனை இந்த வலைப்பூவிலும் வெளியிட்டேன்.

கடந்த டிசம்பர்-2023 மாதம் முதல் இவ்வமைப்பைப் பற்றி ஆராயத் தொடங்கினேன். அவ்வமயம் முகநூலில் சித்த வித்தையாளர் ஒருவரின் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் சித்த வித்தை பழகுவதற்கான நூல்களை (மொத்தம் ஏழு நூல்கள்) சென்னையிலிருந்து அஞ்சல் மூலமாக வாங்கிப் படித்தேன். அந்த ஏழு நூல்களையும் படித்து முடித்தப் பின்பு மரணமிலாப் பெருவாழ்விற்கும் சித்த வித்தைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை அறிந்தேன். ஆனால் இவ்வமைப்பைத் தோற்றுவித்த சிவானந்த பரமஹம்சர், சித்த வித்தையானது மரணத்தைத் தடுக்கும் எனக் கூறி சித்த வித்தையினை மக்களிடையே பரப்பி வரவே, அதனை ஏற்று இன்று ஆயிரங்கணக்கான சித்த வித்யார்த்திகள் பயிற்சி செய்துக்கொண்டும், ஆயிரங்கணக்காண சித்த வித்யார்த்திகள் ஜீவ சமாதி ஆகியும் உள்ளதை அறிந்தேன். மேலும் வாசி யோகம் என்பது தமிழ்ச் சித்தர்கள் மரபில் வழிவழியாக வந்துக்கொண்டிருக்கின்ற ஒன்றுதான் என்பதை அறிந்தேன். வள்ளற்பெருமானும் மூச்சுப் பயிற்சி மற்றும் சமாதி பழக்கத்தினைப் பற்றி கூறியுள்ளதை நான் ஏற்கனவே அறிவேன்.

உடனே ”மரணமிலாப் பெருவாழ்வில் சுத்த சன்மார்க்கமும் சித்த வித்தையும்” என்ற தலைப்பில் ஒரு ஒப்பீடு செய்து அதனை இந்த வலைப்பூவில் வெளியிட்டேன். அதனை யூட்யூப் செய்தும் காணொலி வாயிலாகவும் வெளியிட்டு அதனை எனது முகநூலிலும் விளம்பரப்படுத்தினேன். என்னதான் நான் சித்த வித்தைக்கு எதிராக தற்போது இருப்பினும், மூச்சுக் கலையை கற்க வேண்டும் என்ற ஆர்வம் என்னில் அதிகரித்துக்கொண்டே இருந்தது. சிவானந்த பரமஹம்சரின் படத்தை வைத்து வணங்க ஆரம்பித்துவிட்டேன். மேலும் சரக் கலையைப் பற்றியும் நான் ஏற்கனவே ஒரு பதிவை இதே வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன். 

சித்த வித்தைப் பற்றி (நெய்வேலியைச் சார்ந்த சுத்த சன்மார்க்கம் சார்ந்த திருமதி சாவித்ரி அம்மாள் அவர்களுடனும் அவரது மகன் திரு.சபரி அவர்களுடனும் அவ்வப்போது சத்விசாரம் (கைப்பேசி மூலம்) செய்வது வழக்கம். இவர்கள் நமது யூட்யுபில் சில பதிவுகளையும் செய்துள்ளார்கள்.) திருமதி சாவித்ரி அம்மாள் அவர்களுடன் நான் விவாதிப்பது உண்டு. அவர்கள் ஏற்கனவே சித்த வித்தையார்த்திகள் வாட்ஸாப் குழுவில் இருக்கின்றார்கள் என்று அப்போது, அவர்கள் சொல்லித் தெரிய வந்தது. (வடகரை வள்ளல் குழு). மேலும் அக்குழுவில் என்னையும் இணைத்து விட்டார்கள். நான் சித்த வித்தை பயில ஆசைக் கொண்டதால், அவர்களுக்கும் சித்த வித்தை மீது பற்று வரினும், ஒரு கட்டத்தில் சுத்த சன்மார்க்கத்திலிருந்துக்கொண்டு ஏன் சித்த வித்தைக்கு ஆசைப் படுகின்றீர்கள்? ஏதேனும் சித்து வேலை செய்ய ஆசையா? பெருமான் அதற்கு இசைவு அளிக்கமாட்டார்கள் என்றெல்லாம் சொல்லி, உங்களுக்கு இருக்கும் அனுபவத்திற்கு இவ்வித்தையினால் சீக்கிரம் சமாதி ஆகிவிடப்போகின்றீர்கள்? என்றெல்லாம் பயந்தார்கள். அவர்களால் முடிந்தவரை என்னை தடுக்கப் பார்த்தார்கள். பிறகு முடியாத பொழுது, சித்த வித்தை கற்றுக்கொண்டு அதன் அனுபவத்தை எனக்குச் சொல்லுங்கள் என்றுச் சொல்லிவிட்டார்கள். 

சித்த வித்தை கற்றுக்கொள்ள அந்த வாட்சாப் குழுவில் உள்ள வேலூரில் உள்ள ஒரு பிரம்மஸ்ரீ அவர்களிடமும் திருமதி.சாவித்ரி அம்மா அவர்களே எனது சார்பில் பேசினார்கள். வித்தை அளிக்க ஒரு நாள் போதும் என்று அவர் கூறியதாக சொன்னார்கள். எனினும் நான் கடலூரில் யாரேனும் பிரம்மஸ்ரீ உள்ளார்களா? என தேடும் பொழுது, மறுநாளே தமிழகம் முழுதும் உள்ள சித்த வித்தை அப்பியாச நிலையங்களின் முகவரியை யாரோ பதிவிட்டிருந்தார்கள். அப்பதிவு எனது கண்ணிற்கு கிட்டியதை நினைத்து ஆச்சரியம் அடைந்தேன். அதில் கடலூர் வில்லுபாளையம் கிராமத்தில் (தவளக்குப்பம் அருகில்) அப்பியாச நிலையம் இருப்பதை அறிந்தேன். அதன் நிறுவுனர் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா என்பதையும் அறிந்து அவருடன் கைப்பேசி மூலம் அழைத்து (15-03-2024) எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். உடனே அவர் இந்த வாரம் (17-03-2024-ஞாயிறு) விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பம் (புதுச்சேரி கருவடிக்குப்பம் அருகில்) அப்பியாச நிலையத்தில் நான்காம் ஆண்டு விழா உள்ளது, அதற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும் புதுவை அப்பியாச நிலைய வாட்சாப் குழுவிலும் என்னை இணைத்துவிட்டார்.




17-ஆம் தேதி சின்ன கோட்டக்குப்பம் சென்று அப்பியாச நிலைய ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டேன். காலை 10.30 முதல் மாலை 03.30 வரை அங்கிருந்தேன். தமிழகத்திலிருந்து சில சித்த வித்யார்த்திகள் அங்கு வந்திருந்து சொற்பொழுவு ஆற்றினார்கள். பெரும்பாலும் வள்ளற்பெருமானின் கருத்தினைச் சொல்லி சித்த வித்தையினையும் விளக்கினார்கள். அதில் ஒருவர் பேசுகையில், நான் வடலூர் சென்றிருந்த பொழுது, ஞான சபை அருகில் சென்று அப்பியாசம் செய்த பொழுது வள்ளலார் ஆகாயத்தில் தோன்றி என்னிடம் பேசினார், நேற்று இங்கே (சின்ன கோட்டக்குப்பம் நிலையம்) சிவானந்த பரமஹம்சர் வந்ததையும் நான் பார்த்தேன் என்றெல்லாம் பேசினார். இதனால் எனக்கு இன்னும் சித்த வித்தையின் மீது காதல் பெருகிற்று. மேலும் எனக்கு உபதேசம் செய்ய இருக்கும் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயாவையும் அன்றுதான் அந்நிலையத்தில் முதன் முதலில் நேரில் சந்தித்து பேசினேன். அங்கே கோட்டக்குப்பத்தைச் சார்ந்த எனது உறவினர் ஒருவரும் வந்திருந்தார். அவரிடமும் பேசிவிட்டு மதியம் 02.00 மணியளவில் சொற்பொழிவு முடிந்து அன்ன விரயம் செய்தார்கள். உணவு உண்டுவிட்டு ஒரு மணி நேரம் காத்திருந்து மீண்டும் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயாவிடம் பேசினேன். அவர் என்னிடம், புலால் உண்ணக் கூடாது, சைவமாக இருக்க வேண்டும், போதை வஸ்துக்கள் உபயோகிக்கக் கூடாது என்கின்ற கட்டுப்பாட்டினை சொன்னார். நானும் அதெல்லாம் நம்மிடம் இல்லை ஐயா என்று சொன்னேன். அங்கே சித்த வித்தை நூலில் உள்ள பரமஹம்சரின் உபதேசங்கள் வாரந்தோறும் படித்து விளக்கம் சொல்வார்கள் என்றார். உடனே நான், வித்தை தொடர்பான அந்த ஏழு நூல்களையும் படித்துவிட்டேன் ஐயா என்றேன். உடனே அவர், சற்று கோபமாக கதை படிப்பது போன்றெல்லாம் படிக்கக் கூடாது என்றார். (நான் இவ்விழாவிற்கு சந்தனக் கலர் ஃபேண்ட் மற்றும் மஞ்சள் கலர் டிசர்ட் அணிந்துச் சென்றேன். நீட்டாக சவரம் செய்து இருந்தேன். இதனைப் பார்த்து இவ்விழாவிற்கு வெள்ளாடையில் அள்ளவா வரவேண்டும். இவன் என்னத்த படித்தான் என்று நினைத்திருப்பார் என்று நான் நினைக்கின்றேன்.) பிறகு வருகின்ற ஞாயிறு அன்று (24-03-2024) 09.30 மணியளவில் வில்லுப்பாளையம் வந்துவிடவும் என்று கூறினார். இவ்விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் ஒரு சிறிய பையில் லட்டு பிரசாதம் கொடுத்தார்கள், அதனைப் பெற்றுக்கொண்டு விடைபெற்று கிளம்பி கடலூர் வந்துச் சேர்ந்தேன். 


சித்த வித்தை கற்றுக்கொண்டு சமாதி நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்ற விழிப்புணர்வு என்னிடம் இருக்கின்றது.  (அதைவிட ஆன்மாவை வெளியேற்றி இறந்துவிடுவதுதான் நல்லது) எனினும் இவ்வித்தையால் சுத்த சன்மார்க்கத்திற்கு ஏதேனும் செய்ய முடியுமா? என்ற ஆராய்ச்சிக்காக மட்டுமே நான் சித்த வித்தை கற்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அடுத்து சித்துக்கள் ஏதேனும் கைகூடினால், அதைக்கொண்டு அக இனத்தார்களின் சிறிய சிறிய நோய்களை நீக்க வேண்டும் என்ற எண்ணமும் எண்ணில் இருக்கின்றது. மேலும் சித்த வித்தைக்காண எனது தேடலின் பொழுது, எனக்குத் தேவையான உதவிகள் உடனுக்குடன் நான் இணையத்தில் தேடாமலேயே எனது கண்ணில் வந்து உற்றதை நினைக்கையில் வள்ளற்பெருமான் எனக்கு தடை ஏதும் கூறாமல் வழி காட்டுவதாகவே நினைத்தேன். 

மேற்காணும் சிந்தனையுடன் வருகின்ற ஞாயிறு சித்த வித்தை தீட்சை பெற போகிறதை நினைத்து மனதுக்குள் மகிழ்ச்சி. மேலும் எனக்கு தீட்சை அளிப்பவர் சுமார் 70 வயது மதிக்கத் தக்க பிரம்மஸ்ரீ. அவரது பெயரும், சித்த வித்தை தோற்றுவித்தவர் பெயரும் ஒன்றுதான் (சிவானந்தம்) என்று நினைக்கையில் இன்னும் மகிழ்ச்சி. மிகச் சரியான இடத்தில் வள்ளற்பெருமான் நம்மை இட்டுச் சென்றுள்ளார் என்ற நினைப்பு எண்ணில் எழுந்தது.

ஞாயிறு (24-03-2024) வந்தது. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எனது தாயாரும் சகோதரியும் மகிழுந்தில் (காரில்) ஓட்டுனரை வைத்துக்கொண்டு திருவாரூர் கோயிலுக்குச் சென்றுவிட்டார்கள். நான் சித்த வித்தைக்காக செல்வதால் ஓட்டுனரைக் கொண்டு பயணம் மேற்கொண்டார்கள். இல்லையேல் இன்று நான் ஓட்டுனர் வேலையை பார்க்க வேண்டியிருந்திருக்கும். மூச்சுப் பயிற்சி பிடிக்க வில்லையெனில் வந்துவிடு, வீட்டில் சிவனேன் என்று இரு. உனக்கு எதுக்கு இதெல்லாம், என்று எனது அம்மா சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

நானும், காலையில் குளித்துவிட்டு, (இவ்வித்தை பயில வேண்டும் என்பதற்காகவே சென்ற வாரத்திலிருந்து நான் சவரம் செய்யாமல் சிறிது தாடியும் வளர்த்திருந்தேன்) வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, வெள்ளைச் சட்டை அணிந்துக்கொண்டு எனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு 08.50 மணியளவில் கிளம்பினேன். இதுவரை வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்து எங்குமே சென்றதில்லை. இதுதான் முதல் முறை. 

காலை சிற்றுண்டிக்காக முதலில் ஒரு உணவத்திற்கு சென்று நின்றேன். ஆனால் அங்கு ஞாயிறு விடுமுறை என்றதும் திரும்பி வந்து, வேறு ஒரு உணவகத்திற்குச் சென்றேன், அங்கு ஒரே கூட்டம், உட்கார இடமில்லை, நின்றுக்கொண்டு காத்திருப்பவர்களும் அதிகமாக இருக்கவே, அங்கிருந்து கிளம்பி வேறு ஒரு உணவகத்திற்குச் சென்றேன். அங்கு இடம் கிடைத்தது. மூன்று இட்லி வடை சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன். வழியில் நான் தலையில் அணிந்திருந்த தொப்பி (40 கி.மீ. வேகத்தில்தா சென்றேன்) காற்றில் பிய்த்துக்கொண்டு வேகமாக பின்னோக்கிச் சென்றுவிட்டது. அட, என்னடா இது... சோதனை என்று நிற்காமல் அதே வேகத்தில் சென்று காட்டுப்பாளையம் சென்று அங்கு வில்லுபாளையம் வழி கேட்டுச் சென்றேன். வில்லுபாளையம் சென்றவுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் அப்பியாச நிலையம் எங்கே இருக்கின்றது என வினவினேன். அவரும் ஒரு புளிய மரம் அருகில் உள்ள ஒற்றையடிப் பாதையைக் காண்பித்து இப்பாதையில் சென்றால் வந்துவிடும் என்று வழிகாட்டினார். 

நானும் அந்தக் குறுக்கு வழியில் பிரதானச் சாலையை விட்டு இறங்கும் பொழுது ஒரு சிறிய குப்பை மேடு இருந்தது. அதனை ஒட்டி ஒற்றையடிப் பாதை துவங்குகின்றது. அவ்வாறு அந்த குப்பை மேட்டைஒட்டி எனது இரு சக்கர வாகனத்தை செலுத்தினேன். உடனே “டப்” என்று ஒரு சத்தம் கேட்டது, என்ன வென்று பார்க்கையில் எனது வேட்டி முழுதும் (முட்டிக் கால் அளவிற்கு) செக்கச் செவேல் என்று இரத்தக் கரை படிந்தது போன்று தக்காளிச் சட்டினியானது விசிறி அடிக்கப்பட்டிருந்தது. ஒரே சட்டினி நாற்றம் வேறு. அட, என்னடா இது... சோதனி என்று வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரேனும் பார்த்துவிட்டார்களா? என்று.... (அசிங்கம் அல்லவா...! ஹி... ஹி...) ஒரு கிழவி அந்த புளிய மரத்தடிக்கு பக்கத்திலிருந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து தலை குனிந்தேன். 

அந்தக் குப்பை மேட்டில் யாரோ தக்காளி சட்டினி பாக்கெட்டை பார்சல் வாங்கிச் செல்லுகையில் அல்லது வேண்டாம் என்றோ அங்கு போட்டு விட்டு சென்றுவிட்டார்கள். அதனில் எனது இருசக்கர வாகன டயர் ஏறும் போது அது வெடித்து அதில் உள்ள சட்டினி எல்லாம் எனது வேட்டியில் பீய்ச்சி பாய்ந்து விட்டது. இதுதான் நடந்தது. இப்படியே நான் எப்படி அப்பியாச வகுப்பிற்குச் செல்ல முடியும்? திரும்பிவிட வேண்டியதுதான் என்று நினைக்கையில், அந்தப்புளிய மரத்திற்கு பக்கத்தில் ஒரு மாடி வீடு உள்ளது. அந்த மாடி வீட்டின் மேலே உள்ள தண்ணீர் தொட்டி ரொம்பி கீழே வேகமாக தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. அங்கேச் சென்று எனது வேட்டியினை கசக்கி அந்த சிவப்பு நிறம் போக புழிந்து, ஏதும் நடவாதது போல ஆக்கிக்கொண்டாலும், அந்த நாற்றமும் ஆடையிலும் காலிலும் ஈரம் இருந்தது.

ஈரத்துடன் சென்று கலந்துக்கொள்வோம், அங்கே ஏதாவது சொல்லிக்கொள்ளலாம் என்று மீண்டும் வண்டியில் ஏறி பக்கத்தில் உள்ள அப்பியாச நிலையம் சென்றடைந்தேன். நான் செல்லும் பொழுது மணி 10.15 ஆகிவிட்டது. (09.15 க்கு வரச்சொன்னார்) ஆனால், இன்னும் அந்த நிலையம் திறக்கப்படாமல் இருந்தது. சரி, அவர்கள் வந்து திறப்பதற்குள் நமது வேட்டி காயட்டும் என சற்று வெய்யிலில் நின்றேன். வேட்டியும் காய்ந்து விட்டது. ஆனால் யாரும் வரவில்லை. பிறகு புதுவை அப்பியாச வாட்சாப் குழுவில் இன்றைய நிகழ்ச்சி நிரலை நேற்றே பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா அவர்கள் பதிவிட்டிருந்தார்கள். அப்பதிவை திறந்துப் பார்த்தேன், அதில் 11.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக இருந்தது. 

அப்பொழுது ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு அவ்வழியே வந்தார். அவரிடம் நிலையம் எத்தனை மணிக்குத் திறப்பார்கள் என்று வினவினேன். ஞாயிற்றுக்கிழமையானால் காலை ஏழு மணிக்கே வந்துவிடுவார்கள். ஆனால், இன்று ஏன் யாரும் வரவில்லை எனத் தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார். எனக்கு சந்தேகம் வரவே 10.30 மணிக்கு பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயாவிற்கு கைப்பேசியில் தொடர்புக் கொண்டேன். ஆனால் அவர் எனது அழைப்பை ஏற்கவில்லை. பிறகு அங்கே உள்ள விளம்பரப் பலகையில் உள்ள வேறு ஒரு எண்ணில் தொடர்பு கொண்டேன். அவர் எடுத்துப் பேசினார். எனது நோக்கத்தை நான் தெரிவிக்கவே, “ஐயா, இன்று அனைவரும் சென்னைக்குச் சென்றுவிட்டார்கள். ஜபம் செய்பவர்கள் மட்டும் இனிமேல் யாரேனும் வருவார்கள். அதனால், நீங்கள் அடுத்த வாரம் வாருங்கள்” என்று சொல்லிவிட்டார். 

எனக்கு உள்ளுக்குள் கோபம் தலைக்கேறியது. பிறகு அந்த அப்பியாச நிலையம் முன்புச் சென்று எனது கைப்பேசி மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டு 10.50 மணியளவில் அங்கிருந்து கிளம்பி கடலூர் வந்துச் சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்தவுடன், பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயாவின் வாட்சாப் எண்ணில் வாய்ஸ் மெசேஜ் செய்தேன். “ஐயா நலமா? நான் இவ்வாறு உங்களது நிலையம் வந்து ஏமாந்து வந்தேன். நான் இன்று திருவாரூர் செல்லும் வேலையை விட்டு இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் என்னை இன்று வரச்சொல்லிவிட்டு, நீங்கள் சென்னைக்கு சென்றுவிட்டதுதான் உங்களது சித்த வித்தை சேவையா. நன்றாக சேவை செய்கின்றீர்கள். என்று சொல்லி மெசேஜ் செய்தேன். மேலும் புதுவை அப்பியாச வாட்சாப் குழுவில் சென்று அங்கேயும் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா அவர்களின் சேவையைப் பற்றி சற்று கோபமாக பேசி வாய்ஸ்மெசேஜ் செய்துவிட்டு, அக்குழுவிலிருந்து உடனே வெளியில் வந்துவிட்டு அக்குழுவை எனது கைப்பேசியிலிருந்து அழித்துவிட்டேன். (நான் கடலூர் நோக்கி வரும் பொழுது பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் என்பதை நான் வாட்சாப் பதிவுகளை பதிந்தப் பிறகு பார்க்க நேர்ந்தது. மேலும் நான் வாட்சாபில் இட்ட வாய்ஸ் மெசேஜை கேட்டுவிட்டு அவரும் ஏதோ வாய்ஸ் மெசேஜ் செய்திருக்கின்றார். எனினும் அவர் என்ன மெசேஜ் செய்துள்ளார் என்று இது வரை பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை.)  

அடுத்ததாக நான் கைப்பேசியில் தொடர்புகொண்டது நெய்வேலி திருமதி.சாவித்ரி அம்மாவிடமும் அவரது மகன் திரு.சபரி அவர்களிடமும்தான். நான் இன்று இவ்வாறு அனுபவப்பட்டேன் என்றவுடன், அவர்கள் சொன்னது, ”நீங்கள் வேறு மார்க்கத்திற்குச் செல்வதை பார்த்துக்கொண்டு வள்ளலார் சும்மா இருக்க மாட்டார். அதனால்தான் இந்தத் தடைகள்.” என்று கூறி உண்மை உரைத்தனர். அவர்களுக்கும் வள்ளற்பெருமானுக்கும் சிவானந்த பரமஹம்சர் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சித்த வித்யார்த்திகளுக்கு எவ்வளவோ அப்பியாசம் சார்ந்த பணிகள் இருக்கத்தான் செய்யும். அவர்களது அன்றாட அல்லது வார நிகழ்ச்சிகள் அதற்கேற்றார் போல மாறத்தான் செய்யும். அது எனக்கு வருத்தமில்லை. அதனை முன் கூட்டியே எனக்கு கைபேசியில் தெரிவித்திருந்தால் எனது நிகழ்ச்சியும் மாறி இருக்கும். நானும் இன்று இங்கு வந்து இவ்வளவு தடைகளை கடந்து ஏமாந்துச் செல்ல அவசியம் இன்றி இருந்திருக்கும். எனினும் இவை எல்லாம் சித்து விளையாட்டே. யார் மீதும் தவறு இல்லை, என்று மனம் சாந்தி அடைந்தேன். நான் சில மாதங்களாக வணங்கி வந்த சிவானந்த பரமஹம்சரின் படமும் எனது மேசையிலிருந்து புறம் சென்றது.

சித்த வித்தைக்கு எதிராக இன்று (24-03-2024) நான் சந்தித்தத் தடைகள்:

1. காலை சிற்றுண்டிக்காக இரண்டு உணவகங்களில் ஏமாற்றம்.

2. வாகனத்தில் செல்லும் பொழுது எனது தொப்பி காற்றில் பறந்துச் சென்றது.

3. வில்லுபாளையத்தில் எனது வேட்டியில் இரத்தக் கரை போன்று தக்காளிச்           சட்டினியின் அடாவடித் தனம். ஈர உடம்பு, ஈர வேட்டி, சட்னி நாற்றத்துடன்         அப்பியாச நிலையம் சென்றது.

4. வழக்கமாக ஞாயிறு அன்று ஏழு மணிக்கெல்லாம் நிலையம் திறந்துவிடும்,         ஆனால் இன்று நான் வருகின்றேன் என்று 10.50 வரை நிலையம்                                 திறக்கப்படவே இல்லை. (இன்று திறந்தார்களா என்று தெரியவில்லை)                 மேலும் பிரம்மஸ்ரீ சிவானந்தன் ஐயா சென்னைக்குச் சென்றுவிட்டார்.

மேற்காணும் நான்கு தடைகளும் மிக சர்வ சாதாரணமாகத் தோன்றும். ஆனால், இதனை நான், வள்ளற்பெருமான் ”சித்த வித்தை” வேண்டாம் என்று என்னை தடுத்தாட்கொண்டதகாவே கருதுகின்றேன். சித்த வித்தைக்கு எதிராக பதிவு போடும் அளவிற்கு உனக்கு நான் அறிவைக் கொடுத்திருந்தும், நீ ஏன் அதனை மீறி சித்த வித்தை நோக்கிச் சென்றாய்? என என்னை தடுக்கவே மேற்காணும் நான்குத் தடைகளையும் நான் பார்க்கின்றேன். எனவே நான் இன்றுடன் வாசி யோகம் பற்றின எனது கனவை அழித்துவிட்டு, சுத்த சன்மார்க்கம் நோக்கி எப்பொழுதும் போல் நான் நடைபயில்வேன். என்னைப் போல் யார் ஒருவரும் இனி யூட்யூப் வீடியோ பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. 

மீண்டும் நான் சொல்வதெல்லாம், வாசி யோகம், கிரியா யோகம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் எல்லாம் மரணம் இல்லா நிலையை நமக்குக் கொடுக்காது. சித்த வேதம் என்பது செத்த வேதம்தான். உங்கள் உடம்பை குழித்தோண்டி புதைத்து விட்டாலே அது மரணம்தான். உடலில் சூடு இருக்கின்றது, கை கால்கள் இலகுவாக அசைகின்றது... என பல சித்த வித்யார்த்திகளின் பூத உடலினை குழிக்குள் வைக்கும்பொழுதெல்லாம், ஐயோ! இவர் ஏமாந்து விட்டாரே! யார் பெற்ற பிள்ளையோ? என்ற எண்ணம் என்னில் எழுவது உண்டு.  எனவே மரணமிலாப் பெருவாழ்விற்கு ஆசை உண்டேல், சுத்த சன்மார்க்கத்திற்கு வம்மின் உலகியலீர்..... சமாதி பழக்கமெல்லாம் பழக்கம் அல்ல. சகஜ மார்க்கமே மரணத்தை வெல்லும் என்ற வள்ளற்பெருமானின் வார்த்தைதான் சத்தியம்....

வள்ளற்பெருமானின் சத்திய வார்த்தைகள்:

”தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.”

ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.”

சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜக் பழக்கமே பழக்கம்.”

கண்மூடிப் பழக்கம்தான் மண் மூடிப் போக வேண்டும்... நமது பூத உடல் மண் மூடிப் போகலாமா? விழித்திருங்கள்... நன்றி அன்பர்களே! 

தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com
www.vallalarr.blogspot.in

for PDF
https://drive.google.com/file/d/1vkdg_9mUwNmOWAgi8kCOjEZ7jBrK_pu9/view?usp=drive_link


  


 




  



  




கலாச்சாரம்

அருட்பெருஞ்ஜோதி                                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                            அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கலாச்சாரம்

வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவும்...... இதயம் பலவீனமானவர்கள் இப்பதிவை படிக்க வேண்டாம்.

சமீபத்தில் நான் ஒரு ஹாலிவுட் திரைப்படம் ஒன்று பார்த்தேன்........ அந்த படத்தின் பெயர் தி க்ரீன் இன்பெர்னோ (The Green Inferno).. படம் என்னவோ நல்ல மையக்கருத்தை கொண்டதாக இருந்தாலும்,பல நாடுகளில் சென்சார் போடால் தடை செய்யப்பட்ட படமும் கூட..ஏனென்றால் இந்தப் படத்தில் வெறுக்கத்தக்க மனிதனை கொன்று நரமாமிசம் உண்ணும் படும் மோசமான, அருவருக்கத்தக்க ரத்தவாடை கொண்ட சித்திரவதைக் காட்சிகள் ஏராளம்...


இதனை எதற்காக எப்பொழுது கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்துகிறான் என்று கேட்கிறீர்களா.....இந்த கேள்வியை பார்த்ததும் எனது மண்டையில் சுத்தியால் அடித்தது போல் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தான் ஞாபகம் வந்தது. அது என்னனா இந்த படத்தில் பேராசிரியை ஒருவர் மாணவர்களுக்கு உலகின் சில பகுதியில் பெண்களுக்கு எதிராக பின்பற்றப்படும் ஒரு மோசமான கலாச்சாரா சடங்கை பற்றி விளக்குவார்.....அதை பார்த்ததும் எனக்கு பகீர் என்று ஆனது.. அப்படி என்ன கலாச்சார சடங்கு என்று கேட்கிறீர்களா?..... வாருங்கள் பார்க்கலாம் இப்பதிவின் வாயிலாக...

21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கும் நாம் எவ்வளவோ அறிவியல் முன்னேற்றம் அடைந்து விட்டோம்..... குறிப்பாக பெண்கள் எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு நிகராக தங்களது பங்களிப்பையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றனர் என்னும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும்.....அதே சமயம் பெண்களுக்கு எதிரான சில வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம்தான் உள்ளது.... அந்த வகையில் பெண்களுக்கு எதிராக சடங்கு என்ற பெயரில் ஒரு கேவலமான, மடத்தனமான, அருவருக்க தக்க, விரும்பத்தகாத கலாச்சார சித்ரவதை நிகழ்த்தப்பட்டு வருவதை தெரிந்துகொள்ளும் போது ஆத்திரங்கள்தான் வருகிறது......

ஆம் அந்த சடங்கின் பெயரை ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ.நா) -பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation) என்று குறிப்பிடப்படுகிறது. சுருக்கமாக FGM என்றும் அழைக்கின்றனர்.

இந்த பெண் பிறப்புறப்பு சிதைப்பு (FGM) கலாச்சார சடங்கானது பெரும்பாலும் ஆப்பரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா, சோமாலியா போன்ற 27 நாடுகளால் அதிக அளவு கடைப்பிடிக்கப்படுகிறது.



ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து இந்தோனேசியா, ஈராக் , குர்திஸ்தான், ஜெர்மன் போன்ற நாடுகளிலும் இம்முறை செறிவாக காணப்படுகிறது. அது மட்டும இல்லாமல் ஆசியா, ஆஸ்திரெலியாவில் குடிபெயர்தந்த இவ்வினத்தோர், அரபு நாடுகள் மட்டும் அல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடி பிரிவினரால் குறிப்பாக இஸ்லாம் மதத்தை சார்ந்த குறிப்பிட்ட பிரிவினரும் இந்த அநியாய கலாச்சார சடங்கை பின்பற்றுகின்றனர் என்பதை அறியும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. அவ்வளவு ஏன் இந்தியாவில் கூட மும்பை போன்ற பெரு நகரங்களில் இது போன்ற சம்பவம் நடக்கிறது என்ற தகவலும் வலம் வருகிறது.

அதாவது பெண் பிறப்புறப்பு சிதைப்பு (FGM) என்பது இஸ்லாம் மதத்தில் உள்ள ஒரு குறிப்பிட இனத்தின் பழங்குடி மக்களால் ஆண்களுக்கு சுன்னத்து செய்வது போல் பெண்களின் பிறப்புறப்பை அறுக்கும் ஒரு இழிவான, கொடுமையான மூட நம்பிக்கையின் உச்சம் தொட்ட ஒரு பாரம்பரிய கலாச்சார சடங்கு.

இந்த சடங்கானது 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று எகிப்தில் உள்ள மம்மிகளின் மாதிரி உடலமைப்பை வைத்து ஒரு கருத்தும் நிலவுகிறது..

இந்த பெண் பிறப்புறப்பு சிதைப்பு நிகழ்த்தும் குறிப்பிட்ட இனத்தோர் இதை "காஃப்டா" அல்லது பெண் சுன்னத்து என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த சடங்கை நிகழ்த்தும் குடும்பங்களில் இது பெரிய விழாவாக தன் உறவினர்களை அழைத்து விருந்து உபச்சாரத்துடன் கொண்டாடுகிறார்களாம் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள். இந்த மதச் சடங்கிற்கு பலியாக இருக்கும் பெண்களின் வயது வரம்பு 3 முதல் 12 வயதுக்குள் இருப்பார்களாம். அதாவது பெண்கள் பருவமடைவதற்குள் இந்தச் சடங்கை செய்து வைத்து விடுவார்களாம். இந்த சடங்கை செய்பவர்கள் மருத்துவர்கள் அல்லாத அதே சமூகத்தை சார்ந்த வயதில் முதியவர்கள் என்னும் போது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


இந்த சடங்கு செய்ய இருக்கும் பெண் குழந்தைகளை அவரது பெற்றோர்கள்..... "செல்லக்குட்டி இங்கே வா, தங்கத்திற்கு சாப்பிட என்ன வேணும்" அப்படி என்று விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை ஆசை வார்த்தை காட்டி சடங்கு நடக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்று துணிகளை அவிழ்த்து விட்டு படுக்க வைக்கின்றனர்.பின்பு தன் குழந்தையின் கண்களை கைகளால் இருக்க பொத்தி ஊரில் இந்த சடங்கு செய்வதற்கென்றே இருக்கும் கெழகட்டைகள்(கெழவி) முன்பு ஆஜார் படுத்துகின்றனர். அதன் பிறகு அந்த பெருசு தன் கைப்பையில் உள்ள அசுத்தமான பிளேடு அல்லது கத்தி அல்லது கூர்மையான கண்ணாடி சில்லை கொண்டு பெண்ணின் உணர்ச்சி நரம்புகள் அனைத்தும் சங்கமிக்கும் பெண் உறுப்பின் கிளிடோரியஸ் என்னும் கந்துப்பகுதியை எந்த வித வலி நிவாரணியோ, மயக்கமருந்தோ வழங்காமல், இரத்தம் தெறிக்க தெறிக்க ஈவு இரக்கமின்றி அறுத்து எறிந்து விடுவார்களாம்.....பெண்களின் புணர்ச்சி இன்பத்தை அதிகரிப்பது இந்த கிளிட்டோரியஸ். இதை அறுத்து எறிவதினால் அவர்களின் வாழ்நாளில் ஒரு போதும் பரவசநிலையை (orgasam) அடையமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.கீழே உள்ள படம் அதனை தெளிவுபடுத்தும்... இந்த புகைப்படத்தை கனத்த இதயத்துடன்தான் இங்கு பதிவேற்றுகிறேன்.


பெண் சுன்னத்து முறை (FGM) அந்த அந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு தகுந்தார் போல் மூன்று படிநிலைகளில் பெண் உறுப்பு சிதைக்கப்படுகிறது.

முதல் படிநிலை: இம்முறையில் பெண்ணின் கந்து முனையை (கிளிடோரியஸ்) மட்டும் நீக்கிவிடுகின்றனர்.

இரண்டாவது படிநிலை: இம்முறையில் பெண்ணின் கந்து முனையுடன் பெண் உறுப்பின் இதழ்களையும் வெட்டி நீக்கி விடுகின்றனர்.

மூன்றாவது படிநிலை : இம்முறை கொடுரத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அதாவது இம்முறையில் பெண் உறுப்பின் கந்து முனை+பெண் உறுப்பு இதழ்களை வெட்டி வீசிவிட்டு .....பெண் உறுப்பின் சிறுநீர் வெளியேற்றம் மற்றும் யோனி குழாய் துவாரத்திற்கு மட்டும் சிரிய இடம் விட்டு பெண் உறுப்பை முழுவதுமாக துணிதைக்கும் ஊசியால் தைத்து மூடி விடுவர். பெரும்பாலும் தையல் போடும் முறை ஆபிரிக்காவின் எரித்திரியா, எதியோப்பியா, சோமாலியா மற்றும் வடக்கு சூடான் போன்ற நாடுகளில் பெரிய அளவில் பின்பற்றப்படுகிறது. கீழே உள்ள படத்தை பார்த்தால் இன்னும் தெளிவாக புரியும்.



இவ்வாறாக பெண் உறுப்பு சிதைப்பு சடங்கு முடிந்த பின்பு அந்த பெண்ணின் காலை கட்டி படுத்த படுக்கையாக மாற்றி விடுவர். காயம் ஆறும் பொருட்டு 40 நாள் கழித்தே இச்சடங்கிற்கு ஆளான பெண்ணை பெற்றோர்களால் விடுவிப்பர். இந்த சடங்கு முடிந்தவுடன் பெண்ணின் பெற்றோர் குறிப்பாக தாய் உறவினர்களிடம் தன்னுடைய பெண் "புனிதமடைந்துவிட்டாள்" என்று பெருமையுடன் கூறி விழா ஏற்பாடு செய்து விருந்தும் அனுசரிக்கப்படும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணோ வலியின் வேதனையால் ஒரு மூளையில் படுத்த படுக்கையாக அழது கொண்டிருப்பாள்.இதை செய்த பின் பெண்ணின் செக்ஸ் ஆர்வம் முற்றிலுமாக அழிந்துவிடும். அவர்களுக்கு மிக சொற்பமாக மனதளவில் மட்டுமே பாலியல் எண்ணம் தோன்றும்.

இயல்பாக பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படக்கூடிய கிளர்ச்சியும், எழுச்சியும் இந்த சடங்குக்குப் பிறகு ஏற்படுவதில்லை. இதனால் இந்தப் பெண்கள் தவறான வழியில் போகமாட்டார்கள். வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். செக்ஸ் உணர்வு இல்லாததால் காலம் முழுக்க கற்போடு இருப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆணாதிக்கம் திணித்த பெண் அடிமைத்தனமும் இதன் பின்னே கைகோர்த்து நிற்கிறது.

இந்த குறிப்பிட்ட பிரிவினரால் நிகழ்த்தப்படும் இந்த கொடூரமான கலாச்சார சடங்கு பின்பற்றப் படுவதற்கான காரணமாக பின் வரும் விதியையும் கூறுகின்றனர்.

அதாவது "பெண்கள் சைத்தானின் மறு உருவம், அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள். ஆதலால் அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாய் இருப்பார்கள்" என்கிறார்கள். இவ்விதி மட்டும் இல்லாமல் மேலும் சில மூடத்தனமும் நிலவுகிறது.இந்த சடங்கு பெண்ணுக்குரிய தீட்டை மறைத்துவிடும். உடலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். முகம் அழகு பெறும், பெண்மை அதிகரிக்கும் என்று ஏகப்பட்ட நம்பிக்கைகள் போதிக்கப்படுகின்றன.

இவ்வாறாக FGM செய்யப்பட்ட பெண்ணுக்கு திருமணமானவுடன் கணவன்தான் பெண்ணுறுப்பின் தையலைப் பிரிப்பான். அவள் இன்னும் கன்னிதான் என்பதற்கான சாட்சி அந்த தையல்தான்.அந்த தையல் பிரித்தவுடன் மீண்டும் அதிக அளவு உதிரப்போக்கும் வலியும் அந்த பெண் அனுபவிக்கிறாள்....

இந்த சடங்கால் 0.000000001% கூட பெண்களுக்கு பலன் கிடையாது. மாறாக உடல் நலம் பாதிப்படைகிறது, அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறது, நீங்காத வலி, குழந்தை இன்மை மற்றும் குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்கள். எல்லாத்திற்கும் மேலாக மன உளைச்சல். என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.ஏன் இறப்பும் கூட ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த பெண் உறுப்பு சிதைப்பு என்கின்ற நரக வேதனை சடங்கிற்கு பலிக் கடாவாக்கப்பட்ட பெண்கள் பலர் இந்த FGM க்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அதில் குறிப்பிடதக்க ஒரு பெண்மணி தன் 5வது வயதில் இந்த சடங்கால் பாதிக்கப்பட்டு பின்னாலில் மிகப்பெரும் மாடலாக வலம் வந்த வாரிஸ் டேரி என்ற சோமாலியா நாட்டுப் பெண் இச்சடங்கை என சாடுகிறாள். பின்னாளில் பெண்ணுறுப்பு சிதைவுக்கு எதிரான இயக்கத்துக்கு இவரைத்தான் தூதுவராக உலக சுகாதார அமைப்பு நியமித்துள்ளது. கீழே படத்தில் உள்ளவர் தான் வாரிஸ் டேரி.


எகிப்தில் 2007 ஆம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு இவ்வாறான சடங்கு செய்யும் போது இறந்துவிட்டால்.இதனால் அங்கு பெண் உறுப்பு சிதைப்பு சடங்கிற்கு எதிராக புரட்சி வெடித்தது. அதன் பொருட்டு அங்கு FGM சட்டப்படி குற்றம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

1970 முதல் ஐ.நா சபை (UNESCO) பெண் உறுப்பு சிதைப்புக்கு எதிராக பெயரளவில் நடவடிக்கை எடுத்து வந்தாலும் இதன் தீவிரத்தை உணர்ந்து 2012 முதல் FGM க்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தது.

ஐ.நா சபையின் 2016 கருத்துக்கணிப்பின் படி உலகில் சுமார் 200 மில்லியன் (20 கோடி) பெண்கள் பெண் பிறப்புறுப்பு சிதைப்பால் பாதிப்புக்குள்ளாகி வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தது.அதாவது உலகம் முழவதில் 20:1 (20-ல் ஒரு பெண் வீதம்) இந்த சடங்கால் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர். இதில் ஆப்பரிக்கா கண்டத்தில் மட்டும் 13 கோடி பெண்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அதாவது 1 நாளைக்கு உலகம் முழுவதும் 6000 பெண்கள் வீதம் பாதிப்புக்குள்ளாகின்றனர் போன்ற புள்ளி விவரங்களை ஐ.நா சபை 2016-ல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. மேலும் இந்த FGM க்கு எதிரா உலக நாடுகள் அனைத்திற்கும் குறிப்பா ஆப்பரிக்கா நாடுகளில் ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இதன் விளைவாக இந்த பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிராக பல நாடுகள் தடை விதித்துள்ளது. இதன் பொருட்டு இச்சடங்கு பெரிதும் குறைந்துள்ளது என நம்பப்படுகிறது. அவ்வாறாக நம்பப்பட்டாலும் இன்றும் இந்த சடங்கை மத நம்பிக்கையின் அடிப்படையில் சில மிருகங்கள் சட்டத்திற்கு புறம்பாக அரங்கேற்றம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் இந்த ஊரடங்கின் போது இது போன்ற பெண் பிறப்புறுப்பு சிதைப்பு சம்பவம் பல நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.......

ஐ.நா அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 6 ஆம் நாளை பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிரான நாளாக அனுசரித்து வரப்படுகிறது.



இதுபோன்ற ஐ.நா சபையின் பல நடவடிக்கையால் ஆப்ரிக்காவின் உகண்டா போன்ற பலநாடுகளில் இந்தச் சடங்கிற்கு சமீபத்தில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் பெண் பிறப்புறப்பு சிதைப்புக்கு எதிராக அரசால் வைக்கப்பட்ட பதாகை படம் தான் இது.


கடைசியாக மத நம்பிக்கை, சடங்கு, கலாச்சாரம் என்று மிருகங்களை விட மனிதன் பெண்களுக்கு எதிராக இது போன்ற அநீதியை இழைத்து கொண்டு தான் இருக்கிறான். கதைகளில் அரக்கர்களை பற்றி நான் படித்ததுண்டு..இந்த கலாச்சார சடங்கை படிக்கும் போது நிஜத்திலும் அரக்கர்கள் வாழ்கிறார்கள் போலும் என்று என்ன தோன்றுகிறது.

விருப்பத்துடன் தன் கற்பை விற்று ஆபாச படங்கள் (pornography) நடித்து சம்பாதித்து வாழும் பெண்களுக்கு மத்தியில் தான் கற்புடையவள் என்பதை நிருபிக்க இது போன்ற விரும்பத்தகாத பெண் உறுப்பு சிதைப்பிற்கு உள்ளாகி வேதனையுடன் வாழும் பெண்கள் இந்த சமுகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது ஒரு வேடிக்கையான முரண். வேற என்னத்த சொல்ல.

Thanks to Tamil Wikipedia & Villankachaithi


 சுத்த சன்மார்க்கச் சட்டம் விதி எண்:60

60.  கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தயவை விருத்தி செய்யத் தடையாய் இருக்கின்றன. ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் ஆகிய ஆசார வகைகளை சுத்த சன்மார்க்கிகள் கைவிட்டு, கடவுள் அருளை பெற வேண்டும்.

T           T.M.RAMALINGAM
        9445545475

W

V

V


Thursday, March 21, 2024

நான் - I Am

                                 அருட்பெருஞ்ஜோதி                                      அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                                  அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

நான்

                                ”நான்” என்பது ஆணவமா? அல்லது ஆன்மாவா?

தமிழக சித்தர்கள் உலகில்தான் “நான்” என்பது யார்? என்கின்ற கேள்வி முதன் முதலில் எழுப்பப்பட்டு அதற்கான தீர்வும் காணப்பட்டது. இக்கேள்விக்கு பதிலாக “ஆன்மா” என்கின்ற பதிலும் அழுத்தமாக வைக்கப்பட்டது. ”நான்” என்பது ”ஆன்மா” என்றால் இவ்வுடம்பு நான் இல்லையா? அப்படி என்றால் இவ்வுடம்பு யார்? தாய் தந்தையர் வைக்கும் வெறும் பெயர்தான் இவ்வுடம்பின் உண்மையா? வெறும் காற்றடைத்த பை தானா?

வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த

            மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்

அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்

            கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே

இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான

            இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்

ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை

            உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே.

இவ்வுடம்பை ”மலக்கூடு” என்கின்றார் வள்ளலார். அடுத்த நொடியில் இம்மலக்கூடு வாழுமோ? அல்லது வீழுமோ? என்று அறிஞர்கள் எல்லாம் வருந்திக்கொண்டிருப்பதைக் கேட்டும், நான் என்ன செய்கின்றேன் தெரியுமா? கட்டி அணைத்துக்கொள்ள பெண் என்கின்ற பேய் இல்லையே! வயிறு என்னும் தொப்பை மேட்டில் அடைத்திட வெண் சோறு இல்லையே! இம்மலக்கூட்டை அழகு படுத்திப் பார்க்க ஆடை இல்லையே! இரு கண்களும் கண்டு களிக்கக் கூடிய வியப்பான விடயம் இல்லையே! இம்மலக்கூடு தங்கி இளைப்பாற வசதியான இடம் இல்லையே! என்றே திரிந்து இளைக்கின்றேனே தவிர, இறைவா உன்னை ஒரு நொடியேனும் நினைக்க வில்லையே! எனக்கு உடையவன் நீ அல்லவா? அப்படியிருக்க உன்னை நினைக்காமல் ”நான்” எந்த வகையில் உருப்படப்போகின்றேனோ? தெரியவில்லை! என்று வள்ளற்பெருமான் வருத்தப்படுகின்றார்.  

நமக்கும் இவ்வுடம்பின் உண்மை என்ன? எனத்தெரிந்தும் வள்ளலார் சொல்வது போல, அருவெறுக்கத்தக்க மலத்தை சுமந்துக்கொண்டிருக்கின்ற இவ்வுடம்பிற்காகத்தான் நாமெல்லாம் இவ்வுலகில் சோற்றுக்காகவும், பெண் சுகத்திற்காகவும், இன்னும் பல வசதி வாய்ப்புகளுக்காகவும் அலைந்து திரிகின்றோமே அன்றி நமது ஆன்மாவிற்காக நாம் ஒரு போதும் இறைவனிடம் அன்பு செலுத்துவதில்லை.

நாம் செய்யும் வினைகளினால் நமக்கு ஏற்படும் இன்பத் துன்பங்களையும், புண்ணிய பாவங்களையும் அனுபவிப்பது இந்த மலக்கூடு என்னும் உடம்பா? அல்லது மலக்கூட்டினுள் இருக்கும் ஆன்மாவா? உங்களை ஒரு எறும்புக் கடிக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள், அவ்வமயம் அந்த வலியை உணருவது உங்களது உடம்பா? அல்லது உங்களது ஆன்மாவா? உடம்புதானே வலிக்கின்றது! ஆன்மா வலிப்பதாகத் தெரியவில்லையே? ஆன்மாவை எறும்புக் கடிக்க முடியுமோ? எனவே உடம்புதான் வலியை உணருகின்றது என்றே நாம் பதில் சொல்வோம்.

ஆண், பெண் உடலுறவு கொள்ளுகையில் ஏற்படும் இன்பத்தை உணர்வது உங்கள் உடம்பா? அல்லது உங்கள் ஆன்மாவா? அட என்னப்பா இது கேள்வி? இருவருக்கும் உடம்பில்தானே இன்பம் தோன்றுகின்றது! ஆன்மாவில் இன்பம் தோன்றுவதாகத் தெறியவில்லையே! இரண்டு ஆன்மாக்கள் உடலுறவு கொள்ள முடியுமோ? என்றே நாம் சொல்வோம்.

உடம்பிலிருந்து ஆன்மா வெளியேறியப் பின்பு, அந்த உடம்பை (பிணத்தை) ஒரு எறும்புக் கடிக்கின்றது. இப்பொழுது அந்தப் பிணம் என்னும் உடம்பு வலியை உணருமோ? உணராது! ஏனெனில் அவ்வுடம்பில் “நான்” இல்லை. அப்படி என்றால் அன்று “நான்” என்னும் ஆன்மாதானே வலியை உணர்ந்தது! பாவங்களைச் செய்தது!

அதுபோல், அந்த ஆண் மற்றும் பெண் உடம்புகளிலிருந்து ஆன்மாக்கள் வெளியேறியப் பிறகு அப்பிணங்கள் உடலுறவு கொள்ள முடியுமோ? முடியாது. ஒருவாறு அப்பிணங்களை உடலுறவு கொள்ளுமாறு நாம் இயக்கினாலும், அவ்விரண்டு உடம்பும் இன்பங்களை அனுபவிக்க முடியுமா? முடியாது. ஏன்? அந்த இரு உடம்பிலும் ”நான்” இல்லை. அப்படி என்றால் அன்று “நான்” என்னும் ஆன்மாதானே இன்பத்தை உணர்ந்தன! புண்ணியங்களைச் செய்தன!

இப்பொழுது நாம், ”நான்” என்றால் “ஆன்மா” என்றும் “உடம்பு” அல்ல என்றும் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டோம். “நான்” என்பவன் ஓர் சிற்றணுவாக இருக்கின்றான். “நான்” என்பவன் கோடி சூரியப் பிரகாசமுடையவனாக இருக்கின்றான். ”நான்” என்பவன் கால் பங்கு பொன்மை முக்கால் பங்கு வெண்மை நிறத்துடன் இருக்கின்றான். இவ்வுடம்பில் இரு புருவ மத்தியில் “நான்” என்பவனின் இருப்பிடமாக உள்ளது. ஏழு மாயாசக்திகள் (திரைகள்) கொண்டு “நான்” என்பவனின் கோடி சூரியப் பிரகாசமும் மறைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது “நான்” (ஆன்மா) உடம்பின்றி தனித்து இருக்கின்றேன். எனது உடம்பிலிருந்து ”நான்” வெளியேறியதால் எனது உடம்பு மரணமுற்றது. நானும் (ஆன்மாவும்) அவ்வாறே மரணமுற்றேனா?  இந்நிலையில் எனக்கு (ஆன்மாவிற்கு) இன்பத் துன்பங்கள் உண்டாகுமா? புண்ணிய பாவங்கள் ஏற்படுமா? என்றால், ஆன்மாவாகிய ”நான்” ஆன்மாவாக தனித்திருக்கும் பொழுது இன்பத் துன்பங்கள், புண்ணிய பாவங்கள் என ஏதும் என்னை (ஆன்மாவை) புதியதாக அண்டாது. ஏனெனில் எனக்கு (ஆன்மாவிற்கு) உணர்ச்சிகள் கிடையாது. உலகியலில் கூறுவது போல் சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் ஆன்மாவிற்கு கிடையாது. அது இன்பத் துன்பங்களில் சிக்காது.  உடம்புடன் ஆன்மா இணைந்தப் பிறகே சொர்க்கம் நரகம் எல்லாம் உள்ளது என்று வள்ளற்பெருமான் உண்மை உரைப்பார்.

”நான்” ஏற்கனவே இருந்த உடம்பின் மூலம் செய்த இன்பத் துன்பங்கள், புண்ணிய பாவங்கள்தான் தற்போது தனித்திருக்கும் என்னிடம் இருக்கின்றன. அவைகளுக்கேற்ப “நான்” மறுபடியும் இன்னொரு உடம்பினை எடுக்க நேரிடும். ஓர் உடம்பின் மூலமாகத்தான் “நான்” புண்ணிய பாவங்களையும் இன்பத் துன்பங்களையும் அனுபவிக்க முடியும். அதுபோல் தனித்திருந்தாலும், ஒர் உடம்புடன் இணைந்திருந்தாலும் எனக்கு (ஆன்மாவிற்கு) மரணம் என்பது இல்லை. அவ்வாறே எனக்கு (ஆன்மாவிற்கு) பிறப்பு என்பதும் இல்லை. நான் (ஆன்மா) இறைவனைப் போலவே ஆதியும் அந்தமும் இல்லாதவன்.

 ”நான்” என்னும் ஆன்மாவை எவ்வாறு காண்பது?

இவ்வுடம்பிற்குள் “நான்” இருந்தாலும் என்னைக் காண்பது எவ்வாறு? “நான்” கோடி சூர்யப் பிரகாசமுடையவனாக இருப்பினும் என்னைக் காண முடியவில்லை எனில் “நான்” எவ்வளவு சிற்றணுவாக இருக்க வேண்டும்! என்னையே “நான்” காண்பதுதான் ஆன்ம தரிசனம். காணப்படும் பொருளும் காண்பவரும் ”நான்”தான். “நான்” என்னும் ஆன்மாவினை “நான்” பார்க்க முடியாதவாறு ஏழு திரை மறைப்புகள் உள்ளன. அவைகளை நமது முயற்சியினாலும் இறை அருளாளும் நீக்கிக்கொள்ளும் பொழுது எனக்கு “நான்” தரிசனமாவேன். தரிசனத்துடன் ஆன்மாவிற்கு உள்ள ஒரு பங்கு மலமும் நீங்கி, ஆன்மாவானது முற்றும் மலமற்ற சிவமாகும். மறைப்பிற்கான அந்த ஏழு திரைகள்;

1.  1. கருப்புத் திரை: மாயா சத்தியானது கருமை நிறத்துடன் ஆன்ம பிரகாசத்தை மறைத்துக்கொண்டிருக்கின்றது. சத்தி என்றால் இயக்க ஆற்றலாகும். (திரை என்பதும் அதன் நிறம் என்பதும் உருவகத்திற்காக சொல்லப்பட்டுள்ளது. உண்மை அல்ல) இவ்வுலகம் முழுதும் மாயா இயக்க ஆற்றலாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. எறும்பு முதல் (மனிதன் உட்பட) யானை வரையுள்ள உயிரினங்கள் அனைத்தும் தினமும் தாங்கள் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்கும், எவ்வுலக இயங்களும், பிரபஞ்ச இயக்கங்களுக்கும் இந்த மாயா சத்தியே காரணமாகும். மாயை என்பது இறைவனால் உருவாக்கப்பட்டது அல்ல. இறையாற்றல் போல் மாயையும் ஆதி அந்தம் இல்லாதது. இறையாற்றலைவிட மாய ஆற்றலே உயிர்களை மிக விரைவில் ஆட்கொண்டுவிடும்.

மிகவும் ஆற்றலுடைய இந்த மாயையை, மனித உயிரினம் மட்டுமே தனது முயற்சியால் கண்டு கொண்டு அதனிலிருந்து விலகி வாழ முடியும். மண், பெண்/ஆண், பொன் ஆசைகளாகிய இவை மூன்றும் அதி முக்கிய மாயை ஆகும். இம்மூன்று மாயைகளை கடந்துவிட்டாலே மாயையை வென்றுவிடலாம். அவ்வாறு வென்றுவிட்டால் மாயை நடத்தும் அரசிலிருந்து விடுபட்டு இறைவன் நடத்தும் மாயை அற்ற உண்மையான அரசைக் காணமுடியும். இவ்வாறு இறை அரசைக் காண்பது என்பது ஆன்மாவின் உள்ள ஒரு பங்கு மலத்தைப் போக்குவதற்கான முதல் படியாகும்.

 

2. நீலத்திரை: கிரியா சத்தியானது நீல நிறத்துடன் ஆன்ம பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது. ”நான்” என்பது ”ஆன்மா”வாகும் என்கின்ற உண்மையினை நமக்குத் தெரியவொட்டாது மறைத்துக் கொண்டிருப்பது இந்த கிரியா சத்தியாகும். நமது ஐம்புலன்களையும் உண்மைக்கு மாறாக எந்நேரமும் வீணே இயக்குவதுதான் கிரியா சத்தி. வேறு எந்த உயிரினமும் “நான்” ஒரு “ஆன்மா” என்று அறியாது. மனிதர்களுள் கருப்புத் திரையை நீக்கியவர்கள் மட்டுமே “நான்” ஒரு “ஆன்மா” என்பதை அனுபவ பூர்வமாக அறிவார்கள். (கருப்புத் திரையை நீக்காமலேயே ஏட்டுக் கல்வியில் அறிவது அனுபவம் ஆகாது). அவ்வான்மாவை பார்க்க செயலில் இறங்குவார்கள்.

அவ்வாறு செயலில் இறங்குகையில், நம்மைப் போன்றே இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் ஆன்மாக்களே என்று உணர்ந்து ஆன்ம நேயத்தை கடைபிடிக்கவும் செய்வார்கள். மாயா சத்தியை கடந்துவிட்டால் ஆன்மாவின் இயக்கமாக இவ்வுலகம் (இறைவன் அரசாட்சி செய்யும் இவ்வுலகம்) இருப்பதை அறிவார்கள். இவ்வாறு அறிவது ஆன்மாவிலுள்ள ஒரு பங்கு மலத்தைப் போக்குவதற்கான இரண்டாம் படியாகும்.

3. பச்சைத் திரை: பரா சத்தியானது பச்சைத் திரையாக நமது ஆன்ம பிரகாசத்தை மறைத்துக்கொண்டிருக்கின்றது. ஆன்மா இருக்குமிடம் புருவ மத்தி என்பதை நாம் அறிந்துக்கொண்டோம். ஆனால் இறைவன் இருக்குமிடம் எது? என்பதை நாம் அறிய வொட்டாது மறைத்துக்கொண்டிருப்பதே இந்த பரா சத்தியாகிய பச்சைத் திரையாகும். பரத்தை மறைப்பது பரா சத்தியாகும். பரா-பரம்: பரா என்பது மாயை, பரம் என்பது இறைவன். மாயையுடன் கடவுளை சம்பந்தப்படுத்துவது இந்த பரா சத்தியாகும்.

பச்சைத் திரை என்பது இரு கூறுகளாக இருக்கின்றது. பச்சைத் திரையில் அசுத்த மாயா திரையும், சுத்த மாயா திரையும் உள்ளன. கருமையில் பச்சை நிறமுடையது அசுத்த மாயா திரையாகும். இத்திரை இகலோக லட்சியமுடையதாக உள்ளது. பொன்மையில் பச்சை நிறமுடையது சுத்த மாயா திரையாகும். இத்திரை பரலோக லட்சியமுடையது.


பரா சத்தி என்பது, நம்மை மாயையை கடவுளாகப் பார்க்க வைக்கும். கருப்புத் திரை மற்றும் நீலத் திரைகளை நீக்கிக்கொண்டவர்களை இந்த பரா சத்தி எவ்வாறு இயக்கும் என்றால்? இறைவன் யார்? என அறிவதில் இவர்களை இரண்டு விதமாக இயக்கும். இகலோகத்தில் உள்ள மதங்களை பின்பற்றி அவைகள் கூறும் கடவுள்களான (ஒவ்வொரு மதத்திலும் ஒன்று அல்லது பல கடவுள்கள் உள்ளன) அருவக் கடவுள், உருவக் கடவுள், மரம், உலோகங்கள், மண், கல், வரைபடங்கள் போன்ற வஸ்துக்களிலிருந்து உருவாக்கப்பட்ட கடவுள் என்னும் கற்பனைகளை உண்மை என மதித்து உலக அரசியலுக்காக அல்லது கற்பனையானாலும் கற்சிலை ஆனாலும் அதுதான் கடவுள் என விளக்கமில்லாமல் அறியாமையில் கடைபிடிக்கும் கடவுள் கொள்கைகாரர்கள் பச்சைத் திரையில் அசுத்த மாயா திரையை விலக்கிக்கொள்ளாதவர்கள் ஆவர்.

 

பச்சைத் திரையில் அசுத்த மாயா திரையை நீக்கியவர்கள் உண்மையான இறைவன் விளங்கும் இடமான பரலோகத்தை அறிந்து வணங்குவார்கள். மேற்காணும் இரண்டரைப் படியினை கடந்தவர்கள் (கருமை, நீலம், பச்சையில் அசுத்த திரைகளை கடந்தவர்கள்) ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் இறைவன் விளங்குவதை அறிந்து ஆன்மாக்கள்தான் இறைவன் வசிக்கும் கோயில் என அறிவான். “உயிருள் யாம் எம்முள் உயிர்” என்ற கடவுள் உரைத்த வார்த்தையினை மதித்து உயிர் இரக்கத்துடன் ஒழுகுவான். இவ்வாறு பச்சைத்திரை விலக்கி உயிர் இரக்கத்துடன் நடப்பவன் தனது ஆன்மாவில் உள்ள ஒரு பங்கு மலத்தைப் போக்குவதற்கான மூன்றாம் படியினை கடந்தவனாவான்.


4. சிவப்புத்திரை: இச்சா சத்தியானது சிவப்புத்திரையாக நமது ஆன்ம பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது. உலகியல் விருப்பமே இன்பத்தைக் கொடுக்கும் என்று நம்மை அறிவற்ற நிலையில் ஆழ்த்துவதே இந்த இச்சா ஆற்றலாகும். உலகியல் விருப்பமான இச்சா சத்தியை நீக்கினால் நமக்கு ஆன்ம அறிவு விளங்கும். சித்து உறும் (அறிவை நோக்கிச் செல்லுதல்) இடமாக நமது ஆன்மா விளங்குவதை உணரலாம். ஆன்ம அறிவை முற்றிலுமாக மறைப்பது இந்த இச்சா சத்தியாகும்.

அறிவு நான்கு வகைப்படும். அவை, இந்திரிய அறிவு, மன அறிவு, ஜீவ அறிவு, ஆன்ம அறிவு ஆகும். ஒரு பொருளை உள்ளது உள்ளபடி பார்ப்பது இந்திரிய அறிவு. அப்பொருளின் குணம் என்ன? குற்றம் என்ன என்று பார்ப்பது மன அறிவு. அப்பொருளின் உபயோகம் என்ன என்று பார்ப்பது ஜீவ அறிவு. அப்பொருளின் உண்மையினை அறிதல் ஆன்ம அறிவாகும். நாம் எப்போதும் ஆன்ம அறிவுக் கொண்டே ஒரு பொருளை பார்க்க வேண்டும். பார்க்கப்படும் பொருள் மாயையா அல்லது உண்மையா? என்பதைக் கொண்டு நாம் அப்பொருளுடன் உறவு கொள்ளலாமா? அல்லது வேண்டாமா? என முடிவெடுப்பதே ஆன்ம அறிவாகும். அதற்குத் தடையாக இருப்பது இச்சா சத்தியாகும். இதனை விலக்கினால் நமது ஆன்மாவில் ஒரு பங்கு மலத்தை போக்குவதற்கான நான்காம் படியினை கடந்தவனாகின்றான்.

5. பொன்மைத் திரை: ஞான சத்தியானது பொன்மைத் திரையாக நமது ஆன்மாவின் பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது. “நான்” என்பவன் சிவப்புத் திரையை நீக்கியவுடன் அவனுக்கு ஆன்ம அறிவு விளங்கும் என சென்ற நான்காம் படியில் நாம் பார்த்தோம். ஒரு பொருளின் உண்மையை உணர்தலே ஆன்ம அறிவாகும். உண்மைப் பொருளை நோக்கி “நான்” செல்லும் பொழுது, சிறிய ஒளியினை காண்பித்து, ஞான சத்தியானது நம்மை உண்மையை நோக்கிச் செல்ல வொட்டாமல், சில அடிப்படை சித்துக்களை கொடுத்து நம்மை விளையாட வைத்து தடுத்துவிடும். இதனால் நாம் நமது இலக்கினை நோக்கி முன்னேற முடியாமல் ஏமாற நேரிடும்.

அவ்வாறு ஞான சத்தியால் நிகழும் சிறு ஒளிக்கும், சிறு சித்துக்கும் ஏமாறாமல் தொடர்ந்து உண்மை பொருள் இறைவன்தான் என்றும், இவ்வுலகத்தில் காண்பது எதுவும் பொருளல்ல என்ற தெளிவையும் நோக்கிச் செல்லும் “நான்”, எனது ஒரு பங்கு மலத்தை நீக்க ஐந்தாம் படியினை கடந்தவனாகின்றேன்.


6. வெண்மைத் திரை: ஆதி சத்தியானது வெண்மைத் திரையாக “நான்” என்னும் ஆன்மாவினை மறைத்துக் கொண்டிருக்கின்றது. ஐந்தாம் படியில் “நான்” பொருளுறு வெளியைக் கண்டு தரிசிக்கும் பொழுது, வெண்மைத் திரையானது அவ்வெளியில் உள்ள உண்மைப் பொருளைக் காண வொட்டாமல் தடுக்கும். அதாவது இப்பொருள் தான் அப்பொருள், அப்பொருள்தான் இப்பொருள் என்ற திரிபை நமக்குக் காட்டி மயக்கும்.

ஆறாவது படியில் “நான்” என்பவன், மெய்ப் பதி என்பது அருட்பெருஞ்ஜோதிதான் எனக் கண்டுவிடும். ஆனால், அருட்பெருஞ்ஜோதி என்பது ”நான்” எனது சமய மதங்களில் வணங்கும் ஆதி கடவுள்தான் எனவும், நான் தொன்று தொட்டு வணங்கி வரும் சமய மதக் கடவுள்கள்தான் அந்த அருட்பெருஞ்ஜோதி எனவும் மயக்கத்தில் வைத்துவிடும் இந்த ஆதி சத்தி. எனவே இந்த ஆதி சத்தியை வென்றுவிட்டு, அருட்பெருஞ்ஜோதி என்பது அருட்பெருஞ்ஜோதிதான் எனவும், அக்கடவுள் வேறு எந்த சமய மதக் கடவுளர்களும் அல்ல எனவும் தெளிவாய்த் தெளிந்து உண்மைப்பதி அருட்பெருஞ்ஜோதியே என அதன் தரிசனம்/உண்மை கண்டுவிட்டால், “நான்’ எனது ஒரு பங்கு மலத்தை நீக்க ஆறாவது படியினைக் கடந்தவனாவேன்.

 

7. கலப்புத் திரை: சிற் சத்தியானது கலப்புத் திரையாக “நான்” என்னும் ஆன்மாவினை மறைத்துக் கொண்டிருக்கின்றது. நமது எண்ணங்களே மனம் ஆகும். மனமே சிற் சத்தியாகும். “நான்” என்பதை இயக்குவது மனமே ஆகும். இவ்வுடம்பில் மனம் அசையத்துவங்கும் போது “நான்’ எழுவேன். மனம் அடங்கும்போது “நான்” உறங்குவேன். தற்போது ”நான்” என்னும் ஆன்மா ஆறாவது படியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே உள்ளது உள்ளபடி திரிபற்று தரிசனம் செய்துவிட்டு உச்ச நிலையில் இருக்கும் உத்தமனாகும். அப்படியென்றால் இந்நிலையில் எனது மனம் சாதாரணமாக கண்டதிற்கும் அலைகின்ற மனமல்ல. அதனால்தான் நாம் இதுவரை கடந்துவந்த கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய திரைகள் எல்லாம் ஒன்றாய்க் கலந்தால் அவ்வளவும் எவ்வளவு சக்திவாய்ந்த இயக்கத்தைப் பெறுமோ அந்த அளவிற்கு ஒரு ஆவேசமாக ஆறு சத்தியும் இணைந்து வந்து சிற் சத்தியாக உருவெடுத்து நம்மை (நான்) அந்த உண்மை பதியாம் அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றலை பெற்றுவிடாமல் நம் சித்தத்தைக் கொண்டே நம்மைத் தடுக்கும்.

உலகியலை விட்டு “நான்” விலகியிருப்பினும் பலதரப்பட்ட உலகியல், உடலியல் சார்ந்த தாங்கொண்ணா வேதனைகள் நம்மை வந்தடையும். இத்தடைகளை நாம் கடக்க வேண்டும். எப்படி கடப்பது? என்னதான் நாம் நமது மனதினை கட்டுப்படுத்தியிருந்தாலும், நமது மனம் “நான்” என்னும் சுதந்தரத்தோடுதான் எதையும் செய்துக்கொண்டிருக்கும். அச்சுதந்தரம் இருக்கும் வரை சிற் சத்தியானது இறையாற்றலை பெறமுடியாதவாறு தடை செய்துக்கொண்டே இருக்கும். எனவே, “நான்” எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரம், போக சுதந்தரம், ஜீவ சுதந்தரம் ஆகிய மூன்று சுதந்தரத்தையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் சர்வ சுதந்தரமாய் கொடுத்துவிட வேண்டும். உண்மையில் இவ்வாறு சுதந்தரத்தைக் கொடுத்துவிடுபவர்களுக்கு மூன்று சுதந்தர தோற்றமும் தோன்றாது. (இறை அருள் பெற்றால்தான் நமது சுதந்தரத்தை கொடுக்கவும், இறை சுதந்தரத்தை பெறவும் முடியும். வெறுமனே சுதந்தரத்தை கொடுத்துவிட்டேன் என எழுதுவதாலோ அல்லது எண்ணுவதாலோ இவ்வற்புதம் நடைபெறாது. மேற்காணும் ஆறு படிகளையும்/திரைகளையும் கடக்க வேண்டும்.) அவ்வமயம் இறைவனின் சுதந்தரம் “நான்” என்பதை இயக்கத் துவங்கும். சிற் சத்தியின் தடைகளை இவ்விதம் உடைத்தெறிய வேண்டும்.

 

இந்நிலையில் “நான்” கருதுகின்ற/எதிர்பார்க்கின்ற இறை அனுபவங்களைப் பெற்று அதாவது மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இந்த தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழலாம். இறையாற்றலான இறந்தாரை எழுப்புதல், ஐந்தொழில் செய்யும் வல்லபம், சன்மார்க்க சித்துக்கள் அனைத்தும் கிடைக்கப்பெறும். ஏழு திரைகளும் நீங்கியவுடன் ஒரு பங்கு மலமும் முற்றிலும் நீங்கி மலமற்ற இறை நிலை அடைந்துவிடுகின்றது.

 

இவ்வாறு “நான்” என்பதை “நான்” பார்க்கும் பொழுது இறைவனையும் சேர்த்து இந்த “நான்” தரிசித்துவிடுகின்றது. இதற்காக நாம் மேற்காணும் ஏழு கடல்களையும்/திரைகளையும் கடக்க வேண்டியுள்ளது. ஆன்மாவில் படிந்துள்ள அந்த ஒரு பங்கு மலத்தை நீக்கவே நாம் ஏழுத் திரைகளையும் நீக்க வேண்டியிருக்கின்றது. அந்த ஒரு பங்கு மலம் என்பது யாது? எனில், அந்த மலம்தான் “ஆணவம்”, “நான்” என்கின்ற ஆணவமாகும்.

உடல் அற்று ஆன்மா தனித்திருக்கையில் அதற்கு மலம் ஒரு பங்காகிய ஆணவம் மட்டுமே. உடல் அற்ற ஆன்மாவனது புவியில் ஓர் உடலை எடுத்து பிறந்துவிட்டால், அந்த ஜீவனுக்கு மலம் மூன்று ஆகும். அதாவது, ஆணவத்துடன் கன்மம், மாயை ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்று மலம் உடையதாகவே ஆன்மா இருக்கும். ஜீவனுக்கு மூன்று பங்கு மலம் உண்டு. இம்மூன்று மலமும் ஏழு திரைகளை நீக்கும் போது விலகிவிடும். முதல் மூன்று திரைகளாகிய கருப்பு, நீலம், பச்சை நீங்கும் போது மாயை என்னும் மலம் நமது ஆன்மாவிலிருந்து நீங்கும். கருப்பு, நீலம், பச்சை ஆகியவைகளை மனித முயற்சியால் நீக்கப்பட வேண்டும். ஒருவனுக்கு மாயை நீங்கினால் சுத்த தேகம் கிடைக்கும்.

அடுத்து, சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய திரைகள் நீங்கும் பொழுது கன்மம் (செய்த வினைகள், செய்யும் வினகள், செய்ய இருக்கும் வினைகள்) என்னும் இரண்டாவது மலம் நமது ஆன்மாவை விட்டு அகலும். ஒருவனுக்கு மாயையும், கன்மமும் நீங்கினால் பிரணவ தேகம் கிடைக்கும். சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய மூன்று திரைகளும் விலக மனிதத் தரத்தால் முடியாது. இறைவனின் அருளாள் மட்டுமே இது சாத்தியம்.  எனவே இறை அருள் பெற ஜீவ காருண்யம் முக்கியம்.

அடுத்து, கலப்புத்திரை நீங்கும் பொழுது ஆணவ மலம் நமது ஆன்மாவை விட்டு அகன்று, முற்றும் மலமில்லாது இறை நிலை அடையும். ஆன்மாவின் இயற்கை குணமான தயவு வந்துவிடும். ஒருவனுக்கு மும்மலமும் நீங்கினால் அவனுக்கு ஞான தேகம் கிடைக்கும். கலப்புத் திரை நீங்கவும் மனிதத் தரத்தால் முடியாது. இறைவனின் அருள் வேண்டும்.

இவ்வாறு “நான்” முற்றிலும் மலம் நீங்கிய ஆன்மாவாக இருப்பின், எனக்குள் எவ்வளவு கடவுள் மகிழ்ச்சியும், கடவுள் ஆனந்தமும், கடவுள் அறிவும், கடவுள் ஆற்றலும், கடவுள் செயலும், கடவுள் பார்வையும் பொருந்தி இருக்கும் என்பதை நினைத்தாலே கடவுளின் அற்புதம் நமது மனதை நெகிழ்வுற செய்கின்றதல்லவா! இதோ, மனித உடம்பில் ஆன்மா எவ்வாறு  இருக்கும் என்று வள்ளலார் கூறியதை கற்பனையாகப் பாருங்களேன்,….


இந்த “நான்” என்ற ஒன்றானது, கருப்புத் திரையினைக் கூட நீக்கமுடியாமல், நீக்க வேண்டும் என்ற அறிவும் இல்லாமல், அறிவு இருந்தால் முயற்சி இல்லாமல், இந்த உலகியல் மாயையில் சிக்கித் தவிக்கும் மனித ஜீவன்களே அதிகம். உலகியலில் கிடைக்கும் இன்பத் துன்பங்களுக்கு காரணம் மும்மலமும்தான் காரணம். உலகியல் வாழ்க்கையில் யார் ஒருவருக்கும் இன்பங்களைவிட துன்பங்களே மிகுதியாக வந்து வாட்டும். ஒருவர் எவ்வளவுதான் புண்ணிய கர்மாவினை செய்யினும் துன்பங்களே வந்து அவரை வாட்டும். காரணம் அவர் மாயையில் இருந்துக்கொண்டு புண்ணியம் செய்வதே.

நான் இவ்வுலகில் அனைத்தையும் துறந்துவிட்டேன் என்று கூறும் துறவிகளுக்கும் துன்பங்களே சூழும். ஏனெனில் துறவு நிலையும் மாயையே. சகஜ நிலையில் துறவு (குடும்ப சன்யாசம்) மேற்கொள்வதே மாயையை வெல்லும் வழிமுறையாகும். இவ்வாறு எவரும் இவ்வுலகில் துயரம் அடையும் பொழுது, இவை அனைத்திற்கும் “நான்” என்னும் மனமே காரணமாக உள்ளதை ஒருவாறு இல்லறத்தில் இருப்பவர்களும், துறவறத்தில் இருப்பவர்களும் அறிந்துக்கொண்டு, ”நான்” என்பதை அழிக்க நினைத்து, அதற்கு மாறாக அறியாமையில் தங்களது மனத்தை அழிக்க முற்படுகின்றார்கள். மனம் அடங்கும் பொழுது கூடவே “நான்” என்பதும் அடங்குமல்லவா? அந்நிலையில் தற்காலிகமாக தங்களது துயரங்களிலிருந்து ஒரு விடுதலை கிடைப்பதை அறிந்து ஆனந்தமடைகின்றனர்.

இயற்கையிலேயே இறைவனால் சற்று இளைப்பாற கொடுக்கப்பட்டதுதான் தூக்கம். பாவம் மனிதர்கள், இவர்கள் படும் அவத்தைகளை சற்று நேரம் மறந்து இருக்கட்டுமே! என்று தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து “நான்” என்பதை மறக்கச் செய்கின்றான். இந்த தூக்கம் மட்டும் இல்லை என்றால் மனிதர்கள் மட்டுமில்லை அனைத்து ஜீவன்களுக்கும் மன நிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக்கொள்ளும். எனவே நாம் தூக்கத்தை பயன்படுத்திக்கொண்டு சற்று புத்துணர்ச்சிக் கொள்ளலாம். தவறில்லை.

ஆனால், சில ஆன்மீகவாதிகள் தியானம், வாசி பயிற்சி, சமாதி அடைதல் போன்ற குறுக்கு வழியில் சென்று தங்களது மனதை அடக்குகின்றனர். இதனால் மனம் அடங்கிக் கிடக்கும்வரை “நான்” என்கின்ற தன் முனைப்பும் இல்லாமையால் அவர்களுக்கு இவ்வுலக இன்பத் துன்பங்கள் அனுபவிப்பதில்லை. ஆனால், தியானம் முடிந்தவுடன், வாசி பயிற்சி முடிந்தவுடன், சமாதி நிலை முடிந்தவுடன் மீண்டும் அவர்களை இவ்வுலக இன்பத் துன்பங்கள் வந்து பற்றி விடுகின்றன. எனவே “நான்” என்பதை விடவேண்டுமாகில் மாயையை விட வேண்டும். கருப்புத் திரை விலக வேண்டும். மனதை இயங்கவிடாமல் செய்யக் கூடாது.

இதுபோலவே, சில துறவிளும், சில உலகியல் மக்களும் “நான்” என்பதை மறக்க நினைத்து போதை பழக்கத்திற்கு ஆளாகின்றார்கள். அவர்கள் உட்கொண்ட போதை மயக்கம் தீரும் வரை அவர்கள் மனமற்று கிடக்கின்றார்கள். இவ்வாறு கிடப்பது அவர்களுக்கு ஒரு வித ஆனந்தத்தை கொடுப்பதால் இவ்வுலகில் போதை பொருட்களும் மலிந்துவிட்டன.   

மேலும், சிலர் “நான்” என்பதே துன்பத்திற்கு காரணமாக இருக்கின்றதை அறிந்து ஒரு கட்டத்தில் நிரந்தரமாக “நான்” என்பதை நீக்க வேண்டி, தற்கொலைக்கு ஆளாகின்றார்கள். தற்கொலை செய்துக்கொண்டால் இவ்வுலகத் துயரங்கள் நீங்கிவிடும் என்பது அவர்களது கருத்தாகும். தற்கொலையும் இதற்கு தீர்வாகாது. மீண்டும் மாயா உலகில் பிறப்பெடுத்து அனுபவிக்கத்தான் வேண்டும்.

ஒரு சிலர், நான், எனது என்கின்ற பற்றினை விட்டுவிடுங்கள் என்றும், அகங்காரம் (ஆணவம்) கூடாது  என்றும், எல்லாம் அவன் செயல் என்று கருதுங்கள் என்றும்,  அப்போது உங்களை துயரம் அண்டாது என்றும் தவறாக போதனை செய்கின்றார்கள். இப்படிப்பட்ட போதனையால் ஆன்மீகத்தில் உள்ளவர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் “நான்” “எனது” என்கின்ற பற்றினை விட்டுவிட்டதாகவும், எல்லாம் அவன் செயல், நான் எதுவும் செய்யவில்லை என்றும் அவர்கள் தங்களது மனதளவில் பாவனை செய்துக்கொண்டு ஒவ்வொரு உலகியல் காரியத்தையும் செய்கின்றனர். அவ்வாறு செய்யும் வினைகளாலும் இன்பத் துன்பங்களை அடைகின்றனர். பெரும்பாலும் துயரங்களே அடைகின்றனர். அந்நிலையில் அவர் ஏற்ற போதனையும் தோல்வி அடைவதை நினைத்து மனம் கலங்கி என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு கட்டத்தில் பலர் கடவுள் மறுப்பாளர்களாகவோ அல்லது மதம் மாறுபவர்களாகவோ ஆகிவிடுகின்றனர்.

ஒரு சில துறவிகள், “நான்” என்பதை மறக்க தங்களது தாய் தந்தையர் வைத்தப் பெயரினை நீக்கி நித்யானந்தம், சத்யானந்தம், பேரானந்தம் என்று மனம் போன போக்கில் தங்களுக்குத் தாங்களே அல்லது குரு என்று சொல்லப்படுபவர் மூலமாகவோ தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டு உலகில் திரிவார்கள். இதுவும் முட்டாள்தனம்தான்.

“நான்” என்னும் ஆணவத்தை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. ஆனால் ஏழு திரைகளையும் நீக்கினால் முடியும். அப்படியே ஆணவத்தை நீக்கினாலும் மும்மலமற்ற “நான்” என்றும் இருந்துக்கொண்டேதான் இருக்கும். இவ்வுலகில் நேற்று இருந்தவர்களும், இன்று இருப்பவர்களும், நாளை இருக்கப்போகின்றவர்களும் அவரவர்களுக்கு ஒரு பெயர் இருந்தேத் தீரும். யாரும் பெயர் அற்று வாழவே முடியாது. நீங்கள் இறந்தாலும் உங்களது பெயர் வடிவில் ஒரு அடையாளமாக “நான்” என்பது இருந்துக்கொண்டே இருக்கும். ஏழு திரைகள் நீக்கி மும்மலத்தையும் நீக்கியவர்களுக்கும் “நான்” என்ற இயல்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும். மும்மலமற்ற இறைவனுக்கும் “அருட்பெருஞ்ஜோதி” என்கின்ற பெயர் வைத்தாகிவிட்டது. பெயரற்ற கடவுள் இருக்க முடியாது. இப்போது “அருட்பெருஞ்ஜோதி” ஆகிய “நான்” என்பது நிலைத்துவிடும். இவ்வாறு இறைவனுக்கும் “நான்” என்னும் இயல்பு உள்ளது. மும்மலம் நீக்கிய வள்ளலாருக்கும் “நான்” என்பது இராமலிங்கமாக உள்ளது.

வள்ளற்பெருமான் தனது அடியவர்களுக்கு கடிதம் எழுதி முடிக்கும் பொழுதும், தான் எழுதிய திருவருட்பா நூலை வெளியிடும் பொழுதும் தனது பெயரினை மறக்காமல் பதிப்பித்திருப்பார். கையொப்பம் இட்டிருப்பார். அப்பெயர்தான் “நான்” என்பதை மற்றவர்களுக்கும் இறைவனுக்கும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இது சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியக் காரியம்தான். ஆனால், சாதாரண மனிதர்கள் தங்கள் பெயரினை பதிப்பதும், கையொப்பமிடுவதும் ஆணவத்தில் (மும்மலத்தில்) இருந்துக்கொண்டு செய்வார்கள். அருளாளர்கள் மும்மலமற்று அதனைக் கடவுள் செயலாகச் செய்வார்கள். கடவுள் செயல் என்பது வெறும் பாவனையில் செய்வதில்லை. ஏழு திரைகளையும் நீக்கியவர்களுக்கே தாங்கள் செய்வது கடவுள் செயலாக இருக்கும். தன்னைக் காட்டாது ஒழிக்க வேண்டும் என்பது இதுதான்.

எனவே, இனிமேல் உபதேசம் செய்பவர்கள் வெறுமனே நான் என்பதையும் எனது என்பதனையும் நீக்குங்கள் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லாமல், அதனை எவ்வாறு நீக்குவது என்கின்ற ஏழு திரை நீக்கும் வழிமுறைகளைச் சொல்லி ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுவல்லாமல் நான் ஆணவமற்று செய்கின்றேன், பணிவாகச் செய்கின்றேன், தயவாகச் செய்கின்றேன் என்று சொல் அளவில் சொல்லிச் செய்யும் வினைகள் அனைத்தும் துயரில்தான் சென்று முடியும். முன் வினை, செய் வினை, வரும் வினை, கர்மா, விதி என்கின்ற இவை எல்லாம் பெரும் துக்கத்தை கொடுக்கக் கூடியன. சாக்கடையில் பன்றியும், எருமையும் உழல்வது அவைகளுக்கு ஆனந்தமே. அது போல் இவ்வுலகியல் வாழ்க்கை என்பது பலருக்கு ஆனந்தமாகவே இருக்கின்றது. உலகியல் ஒரு சாக்கடை என்று உணர்ந்து அதற்கு மாறாக செயல்படுவதுதான் மாயை, கன்மம், ஆணவ நீக்கம் ஆகும்.

எனவே மனிதத் துன்பத்திற்கு காரணம் “நான்” மற்றும் “எனது” என்கின்ற பற்று காரணமல்ல. ஆணவம், கன்மம், மாயையை நீக்கிக் கொண்டவர்களுக்கு “நான்” மற்றும் “எனது” என்ற பற்று பேரானந்ததையே கொடுக்கும். உலகியல் மக்களுக்கு துயரம் வரக் காரணம் ஆணவம், கன்மம், மாயையே ஆகும். மும்மலம் நீங்கிய “நான்” அல்ல. நன்றி.  


என்சாமி "எனது"துரை என்உயிர் நாயகனார்
         இன்றுவந்து “நான்”இருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே "எனது"
          பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடையபெருந் தவத்தாலே “நான்”தான்
          சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம் சத்தியமே
மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின்தனக்கே
          வெளியாகும் இரண்டரை நாழிகைகடந்த போதே.

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தி.ம.இராமலிங்கம்.
கடலூர்.
9445545475
vallalarmail@gmail.com
for PDF https://drive.google.com/file/d/1d2vOmyE7UyDZFx2ONFh3Bnhq_jdKDN0R/view?usp=drive_link