Saturday, September 12, 2026

சரியை, கிரியை, யோகம், ஞானம் வேண்டாம்:

சரியை, கிரியை, யோகம், ஞானம் வேண்டாம்:


அன்பு சகோதர சகோதரிகளே! வணக்கம்

இன்றைய உலகில் ஈரான் அமெரிக்கா போர் நடைபெறுவதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் இவ்வுலக நாடுகளில் பெட்ரோல் டீசல், எரிவாயு கிடைக்காமல் மக்களால் வசதியாக வாழ முடியவில்லை. நீங்கள் பல கோடி செலவழித்து சொகுசு கார் வாங்கினாலும், அந்தக்காரில் செல்வதற்கு மிகச் சாதாரணமான பெட்ரோல் தேவை. பெட்ரோல் இல்லாமல், உங்களது சொகுசு கார் ஒரு செண்டிமீட்டர்கூட நகராது.

பெட்ரோல் இல்லாது, நீங்கள் வாங்கிக் குவிக்கும் அனைத்து வாகனங்களும் வெறும் அலங்கார பொம்மைகளாகவே இருக்கும்.

இங்கு நமது வாழ்க்கையினை செம்மையாக வழிநடத்த ஜீவகாருண்யம் முக்கியமாக வேண்டும். ஜீவகாருண்யம் என்பது காரில் பயன்படும் பெட்ரோலைப் போன்றது. அப்படிப்பட்ட ஜீவகாருண்யம் இல்லாமல், இந்த உலகில் வாழும் மக்கள் யாவரும் வெறும் அழகு பொம்மைகளாகவே வலம் வருகின்றனர்.

ஜீவகாருண்யம் இல்லாமல், சரியை, கிரியை, யோகம், ஞானம் பெற்றவர்களும், கடவுள் அருளுக்கு சிறிதும் பாத்திரமாகமாட்டார்கள்.

புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடல், புண்ணிய தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளை தரிசித்தல், தோத்திரம் செய்தல், ஜெபம் செய்தல், விரதம் இருத்தல், யாகம் செய்தல், பூஜை செய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற சமுசாரிகளும், விரதிகளும், பக்தர்களும், ரிஷிகளும்,

உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச் சார்புகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி, மனோலயஞ் செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும்,

அளவு கடந்த சித்தி இன்பங்களைப் பெற்ற சித்தர்களும், எது நிலையற்றது, எது நிலையானது என்று அறிந்து எல்லாப் பற்றுகளையும் துறந்து பிரம்ம அனுபவத்தைப் பெற்ற ஞானிகளும்,

ஜீவகாருண்யம் செய்யாமல், எவ்வளவு பெரிய ஆன்மீக செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் யாவரும் மோட்சம் என்னும் மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறி, அவ்வீட்டிற்கு அருகில் காத்திருந்து, அவ்வீட்டிற்குள் புக முடியாமல், மீண்டும் இவ்வுலகிற்கே திரும்புவார்கள்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டில் திறவுகோள். இந்த திறவுகோல் இருந்தால்தான், மோட்ச வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று இன்பத்தை அடைவார்கள் என்பதை உண்மையாக அறிய வேண்டும்.

எனவே, அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளில் சிக்குண்டு மாள்வதை விடுத்து, ஜீவகாருண்யம்  என்னும் கடவுள் வழிபாட்டால் நாம் பெறுவதுதான் இன்ப வாழ்வாகும்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ஜீவகாருண்யத்தை பின்பற்றாத மக்களுக்கு அறிவு விளங்கவில்லை என்று நாசூக்காக சொல்கிறார் வள்ளலார்.

நாமும் இந்நேரத்தில் உலக மக்களுக்கு எல்லாம், திருவிளங்க சிவயோக சித்தி எல்லாம் விளங்க, சிவஞான நிலை விளங்க சிவா அனுபவம் விளங்க, பூரண அறிவு விளங்கவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வோம்.

 ஆக, நாம் அனைவரும் தயவுடன் இருப்போம் மக்களேநன்றி

 அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

--T.M.RAMALINGAM - CUDDALORE * +91 9445545475



Friday, September 11, 2026

ஹிம்சை உணவு மிருகங்களுக்கும் அனுமதி இல்லை

ஹிம்சை உணவு மிருகங்களுக்கும் அனுமதி இல்லை


இங்கே கூடியிருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் நலம், உங்கள் நலம் அறிய ஆவல். அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? 

முதன் முதலில் தமிழில் உரைநடையை கொண்டுவந்தவர் வள்ளலார்தான். வள்ளலாருக்கு முன்பு செய்யுள் வடிவில்தான் தமிழ் வளர்ந்து வந்தது. தமிழில் உரைநடை வடிவை வள்ளலார் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், தனக்குத் தானே கேள்விகளை கேட்டுக்கொண்டு, அதற்கு தானே பதிலையும் உரைநடை வடிவில் முதலில் கொடுத்தவர் வள்ளலார்தான். 

வள்ளலார், தான் எழுதிய “ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் நூலில் உரைநடையை கையாண்டிருப்பார். இந்த உரைநடையை கேள்வி, பதில் என்னும் நடையில் மிக அருமையாக வடிவமைத்திருப்பார். 

தமிழில் முதன் முதலில் உரைநடையை எழுதி, அதனை தமிழக மக்களுக்குக் கொடுத்த சிதம்பரம் இராமலிங்கம் என்னும் வள்ளலாரை போற்றும் வண்ணம், நாமெல்லாம் எழுந்து கரவொலி எழுப்பலாமே மக்களே.

. இன்று நாம், காடுகளில் வசிக்கும் புலி, சிங்கம், இவைகளின் உணவு முறைகள் பற்றி வள்ளலார் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றி ”ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் உரைநடை நூலின் வழியே பார்ப்போம் வாருங்கள்

மாமிச ஆகாரம் புலி முதலிய துஷ்ட மிருகங்களுக்கு கடவுளால் அனுமதிக்கப்பட்ட நியதி ஆகாரம் அல்லவா? என்றால், இல்லை. மாமிச உணவு, காடுகளில் வாழும் புலி, சிங்கம் போன்ற துஷ்ட மிருகங்களுக்கும் கடவுளால் அனுமதிக்கப்பட்ட உணவு அல்ல என்கிறார் வள்ளலார். 

காட்டு மிருகங்கள் எல்லாம், தங்களது பரம்பரை வழக்கத்தால் அவைகள் தொடர்ந்து மாமிசங்களை உண்கின்றன. இம்மிருகங்களை சைவ ஆகாரத்திற்கு பழக்கப்படுத்த யாரும் இல்லை. ஒரு வேளை, ஒரு புலிக்குட்டியை பிடித்து வந்து, அதற்கு பிறந்தது முதல் சுத்த சைவ உணவையே கொடுத்து நாம் பழக்கப்படுத்தினால், அது சுத்த ஆகாரத்தையே உண்டு வாழுவதைப் பார்க்கலாம். 

”புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்ற பழமொழியை பொய்யாக்க முடியும். ஆனால், அதனை அவ்வாறு பழக்க மனிதர்களால் முடியாமல் போய்விடுகிறது. ஆதலால் அவைகள் தங்கள் வழக்கத்தால் அசுத்த ஆகாரங்களையே உண்கின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக, நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களை, அவைகள் வேறு இடத்திற்குச் சென்று அசுத்த உணவை உண்ண விடாமல், அவைகளுக்கு சுத்த உணவான சைவ உணவைக் கொடுத்து வளர்த்தால், அவைகள் இறுதிவரை அசுத்த உணவை தொடாது வாழ்வதை பார்க்கலாம்.

ஆகவே, ஒரு ஜீவனை இம்சைப் படுத்திக் கொன்று, அதனை வேறு ஒரு ஜீவனுக்கு பசியாற்றுவித்தல் கடவுள் அருளுக்கு சம்மதம் அல்ல. அது ஜீவகாருண்யமும் அல்ல என்று சத்தியமாக அறிய வேண்டும். 

இறைவனானவன், எல்லா உயிர்களுக்கும் சிவப்புக் கலரில்தான் இரத்தத்தை கொடுத்துள்ளான். இறைவனானவன், எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையை கொடுத்து, பந்தம், பாசம். சிற்றின்பம் போன்றவைகளை சமமாகவே கொடுத்துள்ளான். உங்கள் கைவிரலில் ஏதேனும் காயம் பட்டுவிட்டால், நீங்கள் எவ்வாறு வலியால் துடிக்கிறீர்களோ? அதே துடிப்பை, அதே வலியை எல்லா உயிர்களுக்கும் இறைவன் சமமாகவே கொடுத்துள்ளான். 

எனவே மக்களே, நாம், எல்லா உயிர்களிடத்தும் தயவாய் இருப்போம்.

நன்றி மக்களே. வேறொரு காணொலியில் சந்திப்போம். 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி;

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. 




Tuesday, September 8, 2026

முன் ஜென்ம பாவங்கள் - உங்கள் பின்னால்...

 முன் ஜென்ம பாவங்கள் - உங்கள் பின்னால்...


ஹலோ மக்களே, எப்படி இருக்கிறீர்கள்… 

இன்று நாம் பார்க்கப்போவது, முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள், இந்த ஜென்மத்தில் நம்மை வந்து தாக்குமா? என்பது பற்றி வள்ளலார் என்ன சொல்கிறார், என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.
அதற்கு முன்னர், உங்கள் வீட்டில் வள்ளலார் அருளிய ”திருவருட்பா” ஆறு திருமுறைகள் நூல் உள்ளதா? வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு, ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் இயற்றிய “பிரபந்தத்திரட்டு” நூல் உள்ளதா? இவை இரண்டும் சுத்த சன்மார்க்க நூல்கள் ஆகும்.  

இந்த இரண்டு நூல்களும் இல்லை என்றால் உடனே வாங்கி உங்கள் வீட்டில் பத்திரப்படுத்துங்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த நூல்களை எடுத்து படியுங்கள். படிக்கும்பொழுது உங்கள் ஊன் கலந்து, உயிர் கலந்து படிக்க வேண்டும். அப்போது உங்களது துன்மார்க்கங்கள் உங்களை விட்டு ஓடுவதை பார்ப்பீர்கள்.

இந்த இரண்டு நூல்களையும் இறைவன் இந்த உலகிற்கு கொடுத்தமைக்காக, அவருக்கு ஒரு நன்றி சொல்லும் பொருட்டு, நாம் அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாக கர ஓசை எழுப்பலாமே. (மக்கள் எழுந்து நின்று கர ஓசை எழுப்புகின்றனர்)

ஒரு குடியானான், தனது அதீத ஆசையை தீர்ப்பதற்காக, வேறு ஒரு நபரிடம் கடன் பெற்று, அந்தப் பணத்தை செலவழித்து விடுகிறான். ஆனால் அவனால் கடனை முழுதாக திருப்பிச் செலுத்த இயலவில்லை. கடன் கொடுத்த நபர், அவன் வீட்டுக்கு அடிக்கடி வந்து பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்கிறான்.

கடன் தொல்லை தாங்காமல், ஒரு கட்டத்தில், கடன் பெற்றவன், தனது குடியிருப்பை வேறு ஒரு ஊருக்கு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டான். என்ன கொடுமை பாருங்கள், அந்த புதிய வீட்டினையும் எப்படியோ கண்டுபிடித்து, அங்கேயும் வந்து கடன் கொடுத்தவன் வந்து தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டான். கடன் கொடுத்தவன் சும்மா விடுவானா?

ஒரு குடியானவள், தனது கணவன் சொல் பேச்சை கேட்காமல், பலரைக் கூட்டி தன் வீட்டில் விபச்சாரம் செய்கிறாள். இதனை தடுக்க நினைத்த கணவன், தனது வீட்டை அந்த ஏரியாவிலிருந்து மாற்றி நெடுந்தொலைவில் உள்ள வேறு ஒரு இடத்திற்கு குடிபெயர்ந்தான்.

என்ன கொடுமை பாருங்கள், அந்த புதிய வீட்டிலும் துன்மார்க்கர்கள் தேடி வந்து, அவன் மனைவியுடன் கூட ஆரம்பித்துவிட்டார்கள். 

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு சொல்லவா மக்களே…

நமது மக்கள் ஆட்சியில், ஒருவன் ,தான் ஆட்சி செய்தபோது செய்த பாவச்செயல்களுக்கு, அவன் ஆட்சிக்குப் பிறகு, மக்களின் தீர்ப்பால் வேறு ஒருவர் ஆட்சி அமையும்போது, முந்தைய ஆட்சியாளனுக்கு அவன் செய்த பாவச் செயல்களுக்கு  அவனுக்கு தண்டனை கிடைக்கிறது அல்லவா?   

இவ்வாறு, நீங்கள் முன்பிருந்த வீட்டில் செய்த வினைகள், நீங்கள் வேறு ஒரு வீட்டை மாற்றிய பிறகும், தற்போது உள்ள வீட்டிலும் தொடர்ந்து வருவது போல, ஒருவன் ஆட்சி செய்யும்போது, அவன் செய்த பாவங்களுக்கான  தண்டனை, அவனுக்கு வேறு ஒருவரின் ஆட்சியில் கிடைப்பது போல, 

ஜீவகாருண்யம் இன்றி, நீங்கள் முன் பிறவியில் விரும்பி செய்த பாவச் செயல்கள், உங்களின் இந்தப் பிறவியிலும் தொடரும் என்பதை அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார். பாவச் செயல்கள் மட்டுமல்ல, புண்ணியச் செயல்களும் அவ்வாறே தொடரும் மக்களே.

எனவே, உங்களை தொடர வேண்டியது பாவமா? புண்ணியமா? என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். (மக்களின் கர ஓசை எழுகிறது) 

நன்றி மக்களே…. நாம் தயவோடு இருப்போம்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் மலரடி வாழ்க, வாழ்க.




Monday, September 7, 2026

முற்பிறவி உண்டா?

முற்பிறவி உண்டா?


 வணக்கம் மக்களே…. 

நாம் இன்று பார்க்கப்போவது இவ்வுலக ஜீவிகளுக்கு முன் பிறவி இருந்ததா? மற்றும் அடுத்தப் பிறவி உண்டா? என்பது பற்றிதான். 

பொதுவாக அனைத்து மதங்களிலும் இதைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. 

நாம் இதைப்பற்றி வள்ளலார் என்ன கூறியிருக்கிறார் என்று இந்த நாளில் பார்ப்போம்.

மக்களே, உங்கள் அருகில் வள்ளலார் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா? ஆம், வள்ளலார் இதோ இங்கே நம்மிடையேதான் இருக்கிறார். அவரை வரவேற்கும் பொருட்டு, உற்சாகமாக ஒரு முறை எழுந்து நின்று கரவொலி எழுப்புங்கள் மக்களே.

அனைவரும் எழுந்து கரவொலி எழுப்புகிறார்கள்.

நன்றி மக்களே.

ஒருவன், தான் குடியிருக்க, புதியதாக ஒரு வீட்டைப் பார்த்து வாடகை கொடுத்து குடியிருக்கிறான். அவன், இந்த புதிய வீட்டிற்கு வரும் முன்பே ஏதோ ஒரு வீட்டில் குடியிருந்திருக்க வேண்டும் அல்லவா?, முன்பு இருந்த வீட்டை விட்டுவிட்டுத்தானே, அவன் புதியதாக தற்போது குடியிருக்கும் இந்த வீட்டிற்கு வந்திருக்க முடியும். ஏதோ ஒரு காரணத்தினால் அவன் பழைய வீட்டை விட்டு, புதிய வீட்டிற்கு வந்திருக்கிறான்.

அது போல், அவன் தற்போது இருக்கும் வீடும் பழுதடைந்துவிட்டால், அவன் தனது எதிர் கால வாழ்க்கைக்காக, வேறு ஒரு புதிய வீடு தேடி குடியேறுவான் அல்லவா?  

அதுபோல், நமது ஆன்மாவானது, ஆகாரம் என்னும் வாடகை கொடுத்து, இந்த மனித தேகத்தில் ஜீவிக்கிறது. இந்த ஜீவன் இதற்கு முன்பும் ஏதோ ஒரு தேகத்தில் ஜீவித்திருக்க வேண்டும். அந்த முன் தேகத்திற்கு பழுது ஏற்பட்டதால், அந்த ஆன்மாவானது தற்போதுள்ள இந்த மனித தேகத்திற்கு ஆகாரக் கூலி கொடுத்து வசித்துவருகிறது. 

தற்போதுள்ள தேகத்திற்கும் பழுது நேரிடும் பொழுது, அந்த ஆன்மாவானது எதிர்காலத்தில் வேறு ஒரு தேகம் எடுப்பது நிச்சயம். ஏனெனில் தேகம் இல்லாமல் ஆன்மாவனது ஜீவித்திருக்க முடியாது.

எனவே, நமக்கெல்லாம் முன் பிறவிகள் இருந்திருக்கின்றன, அடுத்த பிறவிகளும் நிச்சயம் உண்டு, என அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார்.

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழும். அதாவது, நாம் நமது பழைய வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையினை ஞாபகம் வைத்துக்கொள்வதுபோல, ஏன், நமக்கு முற்பிறவியின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஞாபகம் வருவதில்லை, என்பதுதான் அந்தக் கேள்வி.

இதற்கும் வள்ளலார் பதில் கூறுகிறார். நாம் எவ்வாறு நமது குழந்தைப் பருவ செயல்களை கால ஓட்டத்தில் நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லையோ, அது போல், நாம் நமது முற்பிறவியின் செயல்களையும் கால ஓட்டத்தில் மறந்துவிடுகிறோம்.  

யார் ஒருவர் இந்தப் பிறவியில் மரணமில்லா பெருவாழ்வு பெற்று தனது தேகத்தை ஞான தேகமாக, நித்திய தேகமாக மாற்றுகிறோரோ, அவருக்கே அடுத்தப் பிறவி என்பது கிடையாது. நித்திய தேகத்திற்கு குடிக்கூலி கிடையாது, அதாவது ஆகாரம் கொடுக்க வேண்டாம். அது அவருக்கு என்றும் பழுதே ஏற்படாத, சொந்த வீடாகிவிடுகிறது. அவர் எதிர்காலதில் வாழ, அடுத்த வீடு தேடி செல்ல வேண்டியதில்லை.

எனவே மக்களே, நீங்கள் குடியிருக்கும் இந்த தேகம் என்னும் வீட்டினை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், நித்திய தேகமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் பிற ஜீவன்களை துன்புறுத்தி, அவர்கள் வாழும் தேக வீட்டினை இடித்து பாழ் செய்யாமலிருந்தால்தான், உங்களுக்கு நித்திய வீடு கிடைக்கும் என்பதை மட்டும் நினைவு கொள்ளுங்கள். Mind It. 

நாம் தயவுடன் இருப்போம். நன்றி மக்களே…

அருட்பெருஞ்ஜோதி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.





Friday, September 4, 2026

உங்கள் அடுத்தப் பிறவி என்ன?

உங்கள் அடுத்தப் பிறவி என்ன? 


”என் அன்பு மக்களே, வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்.

இன்று நம் மக்களிடையே புல் ஒழுக்கங்களே நிறைந்து காணப்படுகின்றன. புல் ஒழுக்கங்கள் என்றால், சட்டத்திற்கு பயந்து ஏதோ ஒருவகையில் நியாயவானாக இருப்பது, தங்களது மதங்கள் கூறுவதுதான் உண்மை என தவறானப் பாதையில் வாழ்க்கையை ஓட்டுவது,அல்லது மனம் போன போக்கில் வாழ்வது, இவைகள்தான் புல் ஒழுக்கங்கள் ஆகும்.

இப்படிப்பட்ட புல் ஒழுக்கங்களைத் தாண்டி மனிதனானவன், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்காமையால்தான் இவ்வுலகில் புல் ஒழுக்கங்களே நிறைந்து காணப்படுகின்றன.

மனிதனானவன் புல் ஒழுக்கங்களையே கடைபிடிப்பதனால், அவனுக்கு என்ன நிகழும் என்று கேட்கிறீர்களா?

அவனுக்கு அடுத்த பிறவியானது துன் மார்க்கப் பிறவியே ஏற்படும், என்கிறார் வள்ளலார்.” அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற உண்மையை உலகிற்கு அறிவித்தார் அவ்வையார்.

மனிதப் பிறவி அவ்வளவு எளிதில் எடுக்கமுடியாது என்பார் வள்ளலார். 

இப்பிறவி தப்பின் எப்பிறவியோ? நம்மில் அனைவரும் அடுத்தப் பிறவி நமக்கு மனிதப் பிறவிதான் கிடைக்கும் என்று நூறு சதவிகிதம் நம்புகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை நூறு சதவிகிதம் பொய்யில்தான் சென்று முடியும்.

இந்த உலகில் 800 கோடி மக்கள் வாழ்கின்றனர். நம்மில் குடும்பக் கட்டுப்பாடு என்ற செயற்கை கட்டுப்பாடு இல்லை என வைத்துக்கொண்டாலும், இன்று, சுமார் 2000 கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம்.

ஆனால், ஒரு சில எறும்பு புற்றுகளில் இருக்கும் எறும்புகளின் எண்ணிக்கை மட்டுமே இந்த 2000 கோடியினையையும் தாண்டிவிடும்.

இன்னும் மற்ற மற்ற உயிரனங்களின் எண்ணிக்கையை நாம் கணக்கிடவே முடியாது. அவ்வளவு எண்ணிறைந்த ஆன்மாக்கள் நம் போன்ற மனிதப் பிறவியை எடுக்க முடியாமல் இவ்வுலகில் வாழ்கின்றன.

நமக்கு மனிதப் பிறவி எதற்காக கொடுக்கப்பட்டது? 

நாம் ஒவ்வொருவரும், சர்வ ஜீவ தயவு உடையவர்களாகவும், இறைவனின் சர்வ வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்காகத்தான் நமக்கு இறைவன் இந்த அற்புதமான மனித தேகத்தை கொடுத்தான், என ஒரு குழந்தைக்கு சொல்வது போல், வள்ளலார் நமக்கு சொல்கிறார்.

இதனை மீறி புல் ஒழுக்கங்களை கடைப்பிடிக்கும் கடின சித்தர்கள் முதல் மக்கள் யாவரும், அவர்களது அடுத்தப் பிறவியில், அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப,

சிலர், நரகவாசிகளாகவும்,

சிலர், சமுத்திர வாசிகளாகவும் அதாவது கடலில் வாழும் உயிரினங்களாகவும்,

சிலர், ஆரணிய வாசிகளாவும் அதாவது காடு, மலைகளில் வசிக்கும் ஆதிவாசிகளாகவும்,

சிலர், புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, மான், ஆடு, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட மிருகங்களாகவும்,

சிலர், பாம்பு, தேள் முதலிய விஷ ஜந்துக்களாகவும்,

சிலர், முதளை, சுறா முதலிய கடின ஜந்துக்களாகவும்,

சிலர், காக்கை, கழுகு முதலிய பறவை சண்டாளங்களாகவும்,

சிலர், எட்டி, கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும்,

பிறப்பெடுக்கின்றனர், என்று வள்ளலார் கூறுவதை நீங்கள் யாவரும் அறிய வேண்டும். எனவே என் அன்பு மக்களே!

வள்ளலார் சொல்கிறார், “ இனி நீங்கள் இது வரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை”

பல்லாயிரங்கோடி ஆன்மாக்களில் ஒரு ஆன்மாதான் மனிதனாக பிறப்பெடுக்கிறது,

எனவே தயவுடன் இருங்கள். நன்றி மக்களே!