Tuesday, April 28, 2026

தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?

அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

 

                                    தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?

 

TMR T M RAMALINGAM

அன்பர்களுக்கு வந்தனம்.

உங்களில் யாராவது கடவுளை பார்த்திருக்கின்றீர்களா?

நமக்கு முன்னோர்களில் யாராவது கடவுளை பார்த்திருக்கின்றார்களா?

நான் கடவுளை பார்த்திருக்கின்றேனா?

இந்த மூன்று கேள்விகளுக்கும் “இல்லை” என்பதே நூறு சதவிகிதம் பதிலாக இருக்கின்றது. இதற்கு வள்ளலார் பதில் என்னவாக இருக்கும்?

”கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகபதி என்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்ட்டு உளறியிருக்கிறார்கள்.”

இதுதான் வள்ளலாரின் பதிலாக இருக்கின்றது. இது மட்டுந்தானா? வள்ளலாரின் பதில் இன்னும் பல வகைகளில் திருவருட்பாவில் காணலாம். நாம் கேட்கும் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு வள்ளலார் முதற்கொண்டு யாராலும் மிகச்சரியான பதிலை சொல்லிவிட முடியாது. ஆனால், வள்ளலார் கடவுளின் உண்மையை அறிந்திருக்கின்றார், தாம் அறிந்ததை எடுத்துச் சொல்ல முடியாமல் தவிப்பதை பார்க்கின்றோம்.

“மன உணர்வு செல்லாத் தலத்தாடும் பெருமான் வடிவுரைக்க வல்லார் யார்?”

என தன்னாலும் இறை வடிவம் இன்னதுதான் என சொல்ல முடியவில்லை, என தன் தோல்வியை ஒப்புக்கொள்கின்றார். மனித மனங்களுக்கு அகப்படாதவராக இருப்பவரே இறைவன். மனம் கடந்து, சுத்த அறிவால் இறைவனைக் காணமுடியுமா? ஆம்… காணமுடியும் என்கின்றார் வள்ளலார்.

“நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே”

எனப் பாடுகின்றார். இங்கே தான் கண்ட இறை வடிவம் ”நற்பூதி அணிந்த திருவடிவம்” எனவும் சொல்லிவிடுகின்றார். இந்த நற்பூதி அணிந்த திருவடிவம் எப்படி இருந்திருக்கும்? என நமது மனம் இத்திருவடிவிற்கு மேலும் வடிவம் கொடுக்க முயல்கின்றது! ”நற்பூதி” என்பது விபூதியாக இருக்குமோ? விபூதி அணிந்த சிவபெருமானாக இருந்திருக்குமோ? என்றெல்லாம் நமது மனம் வினவ ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் சிவபெருமான்தான் அந்த ’நற்பூதி அணிந்த திருவடிவம்’ என ஒரு முடிவிற்கே வந்திருப்போம்.

ஆனால், “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்ற வள்ளலாரின் கேள்வியினை இங்கே நாம் மீண்டும் கேட்கத் தொடங்கினால், நற்பூதி அணிந்த திருவடிவத்திற்கு நிச்சயமாக கை கால்கள் இருந்திருக்காது! ஆக, இத்திருவடிவம் மனித வடிவம் அல்ல என்பதால், சிவபெருமானும் அல்ல என்பது நிச்சயம். ‘நற்பூதி’ என்பதற்கு செல்வம், தங்கம் என மேலும் பல பொருள்கள் தமிழில் உள்ளன. இதில் எதனைக் கொண்டு நற்பூதி என வள்ளலார் பாடினார்? என்பது அவருக்கே தெரியும்.

நற்பூதி அணிந்த திருவடிவு எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்பது, வள்ளலாருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த இரகசியமாகும்.  அதனை நம் போன்றவர்களால் அறிய முடியாது. “அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயலறிவார் உளரோ?”  என்பார் வள்ளலார்.

கை கால்களை கொண்ட கற்பனைக் கடவுளர்கள் இல்லை என்றால், தமிழில், சமஸ்கிருதத்தில் புராணங்கள் இதிகாசங்கள், வேதங்கள், பன்னிரு திருமுறைகள், வைணவ பிரபந்தங்கள் போன்ற நூல்கள் எழுதிருக்க வாய்ப்பே இல்லை, ஏன்? திருவருட்பாவும் கற்பனைக் கடவுள்களை பாடியதுதான், மறுப்பதற்கு இல்லை. கற்பனைக் கடவுளர்களால்தான் தமிழ் வளர்ந்தது. “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்”களால் தமிழ் பக்தி இலக்கியம் சிறப்புற்றது. வள்ளாலாரும் அப்புலவர்களில் ஒருவராக இருந்து, இறுதியில் அக்கூட்டத்தைவிட்டு வெளியில் வந்துவிடுவதை நாம் பார்க்கின்றோம்.

“கடவுள் ஏன் கல்லானார்? மனம் கல்லாய் போன மனிதர்களாலே…” என்ற கண்ணதாசனின் வரிகளில்தான் எவ்வளவு உண்மை பொதிந்திருக்கின்றது!

கல்லான மனங்களில் ஜீவகாருண்யம் என்னும் இரசாயணத்தைக் கொண்டு சுத்தம் செய்ய, மனித மனங்கள் விசாலம் அடைந்து, இறைவனை உயிர்களின் வடிவமாக பார்க்க வைக்கின்றது.

“உயிருள் யாம் எம்முள் உயிர்” என்று வள்ளலாருக்கு இறைவன் தனது வடிவை உணர்த்தினார். இவ்வுலகில் பிறந்து, பிறப்பதின் மூலம் ஏதேனும் ஒரு உடம்பினை பெற்ற ஆன்மாக்களுக்கு உயிர்கள் எனப் பெயர். அவ்வுயிர்களுக்கு கை கால்கள் முதலியன இருக்கின்றன.அந்த கை கால்கள் உடைய உயிர் வடிங்களே இறை வடிவமாக இருப்பதாக. வள்ளலாருக்கு இறைவனே உணர்த்துகின்றார். எனவே அவர் இவ்வாறு பாடுகின்றார்…

“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்? அவர் உளம்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன்…”   

”எல்லா உயிர்களும் என்னுயிர் ஆயின” என்ற வள்ளலாரின் வார்த்தைகளையும் “உயிருள் யாம் எம்முள் உயிர்” என்ற இறைவனின் வார்த்தைகளையும் நாம் உள்ளூர உணரும்பொழுது, நமது கண்களில் நீர் பெருகுகின்றன அல்லவா!!... அந்த கண்ணீர்தான் இறைவனின் வடிவம். கல் மனம் கண்ணீர் சிந்தும்பொழுது, கல் உருவில் செய்யப்பட்ட இறைவனும் காணாமல்போய் உயிர் உள் விளங்குவதைக் காணலாம். உயிர் வழிபாடே கடவுள் வழிபாடு என்கின்றது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.

இறுதியாக சொல்வதானால், இறைவனுக்கு உருவம் கிடையாது. உருவம் இல்லாத ஒரு வஸ்து இருக்க முடியுமா? என்றால்,

ஏன், காற்று இல்லையா?, கனல் இல்லையா? என்றால், அவைகள் ஓரிடத்தில் இருக்கும் ஓரிடத்தில் இருக்காது.

எங்குமாய் விளங்கும் அருவமான கடவுள் எது? மனிதனால் சொல்லிவிட முடியாத அருவமான கடவுள் நிலை மனித மனதிற்க்கு அப்பாற்பட்டது. உலகில் பிறந்த எந்த மதமும் அருவமாக இறைவனை வணங்கவே முடியாது. இஸ்லாம் மதம் இவ்விடயத்தில் உண்மையை தங்களது வழிபாட்டில் கடைபிடித்தாலும், அல்லா என்ற சொல்லின் எழுத்துருவையும், காஃபா என்கின்ற கட்டிட உருவையும் தொழவே செய்கிறார்கள். உருவம் அல்லாது இறை வணக்கத்தை மனிதர்கள் புறத்தே செய்யவே முடியாது. அதனால்தான் இந்து மதத்தில் கற்பனை தெய்வங்கள் மனம் போன போக்கில் எழுந்தன. இதனை முடிவு கட்டவே ஒளி வழிபாட்டை வள்ளலார் கொண்டுவந்தார். இதுவும் கற்பனைதான், எனினும் ஒளி உருவமும் அல்ல, அருவமும் அல்ல. ஒளி வழிபாட்டில் புற வழிபாடாகக் கொண்டால், நாம் அக வழிபாட்டிற்கு செல்வது எளிதாக இருப்பதுடன், பொய்ச் சடங்குகள் ஏதும் செய்ய வேண்டியதில்லை.   

சுத்த சன்மார்க்கம் அகத்தே இறைவனை தொழும் மார்க்கமாகும். அகத்தே இறைவன் சுத்த சித்துருவாய் விளங்குகின்றான். எல்லா உயிருள்ளும் அகம் இருப்பதனால், எல்லா உயிருள்ளும் இறைவன் அருவமாக இருக்கின்றான். இப்பொழுது நாம் நமது தேகத்திலும், பிற உயிர்களின் தேகத்திலும் இறைவனின் சித்துருவை உணர்ந்து தொழுதலே ”ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை”  ஆகும்.

எங்கே இப்பொழுது சொல்லுங்கள்… “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று உங்களிடம் கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்காதீர்கள்…”இல்லை”  என நெற்றியில் அடித்தாற் போல் சொல்லிவிடுங்கள்.

 T.M.RAMALINGAM - CUDDALORE

9445545475

  

Friday, April 24, 2026

வடலூர் மாதப்பூசம் - ஏப்ரல் 2026

TMR

 நான் இருக்கும் இடத்தில்

நீ அமரக் கண்டேன்
வான் கலந்த யாவரும்
வாயாற போற்றும் என்
ஊன் செய்த புண்ணியம்
ஊரார் யாவரும் அறிய
சான்றாய் நடுவில் கூடும்
சுத்த சன்மார்க்க சங்கமே.
--TMR

Friday, February 6, 2026

மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026

 மழையூர் சதாசிவம் - நிறைவு: 05-02-2026

இராமலிங்கம் தி.ம


நலந்தரும் திரு அருட்பாவை

நயமாய் திக்கெட்டும் தனது
பலத்த குரலால் பாடிப்பாடி
பிழைக்க வைத்தாய் சன்மார்க்க
உலகை அந்தோ மறப்பறியோம்
இன்று வள்ளல் மனதிலூன்றி
மலர்ந்து மணந்த தவமே
மழையூர் சதா சிவமே.
தனது காலம் முழுதும் திருவருட்பாவை தவிர்த்து வேறு ஏதும் எனது வாயால் பாட மாட்டேன் என முழக்கமிட்டு அவ்வாறே நடந்து காட்டினார். பல முறை சினிமா பாடல் பாடகராக வாய்ப்புக் கிட்டியும் அதனை தவிர்த்தார்.
ஒரு முறை, எங்கள் ஐயாவை போற்றி பாட வேண்டும் என (’ஐயா” என தங்கள் தலைவரை அழைக்கும் கட்சியினர்) கேட்க, அதற்கு மறுத்து, நான் எனது ஐயாவைத் தவிர (வள்ளலாரை) வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்ல, அக்கட்சியினரிடம் அடியும் வாங்கினார்.
மயிலாடுதுறையில் நடந்த எங்கள் சகோதரரின் திருமண வரவேற்பில் திருவருட்பா பாடி எங்களை மகிழ்வித்ததை அன்புடன் நினைவு கூர்கிறோம்.
இவ்வாறு சன்மார்க்கத்தில் அதீத பற்று கொண்டவரின் அருட்பா குரல் என்றும் திருவருட்பா உள்ளவரை நீடும்.
-TMR



Sunday, January 18, 2026

நாராயண ரெட்டியார் - குருபூஜை-91

 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளற்பெருமானின் மெய்த்தொண்டர் - நாராயண ரெட்டியார் - கட்டமுத்துப்பாளையம் (பண்ருட்டி) அவர்களின் 91-ஆவது குருபூஜை விழா அழைப்பிதழ்.

நாள்: 31-01-2026 சனிக்கிழமை.
தொடர்புக்கு; 9003824014

நாராயண ரெட்டியார்

நாராயண ரெட்டியார்


Wednesday, January 14, 2026

பொங்கல் வாழ்த்துகள்

 பொங்கல் வாழ்த்துகள்

==================
PONGAL




நிழலென தொடரும் பசியெனும்

நோயினை அனைத் துயிருள்ளும்
தழலென கொதிக்கும் கூற்றினை
தனதுதாழுங் குணத்தால் விரட்டும்
உழவனை எல்லாம் வல்லவனென
ஊர்தோறும் போற்றி கொண்டாடும்
பழந்தமிழனின் விழாவில் இன்பம்
பெருகி பொங்கல் பொங்கட்டுமே.
-TMR

Tuesday, January 13, 2026

வள்ளலார் பேருந்து நிலையம்

 வள்ளலார் பேருந்து நிலையம்

12-01-2026 - கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று வடலூர் நகராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள"வள்ளலார் பேருந்து நிலையத்தை" மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. MRK.Panneerselvam அவர்களுடன் இணைந்து இன்று திறந்து வைத்தேன்.

ரூ 7.53 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு. ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிபி ஆதித்ய செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. சிந்தனைச் செல்வன் அவர்கள், ஆகியோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

K.N.NEHRU - Tamil Nadu Minister for Municipal Administration & Water Supply

vallalar bus stand

VALLALAR BUS STAND

VALLALAR BUS SATND

VALLALAR BUS STAND


சில முரண்பாடுகள்

 சில முரண்பாடுகள்

TMR


ஞான சபையில் புலால் உண்பவர்கள் செல்வதால் தவறில்லை, ஏனெனில் நான் புலால் தவிர்க்கும் முன் ஞான சபைக்குள் சென்றதால்தான் சன்மார்க்கத்திற்கு வந்தேன். ஞான சபையில் புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும் என வள்ளலார் சொல்லவில்லை, என சிலர் கூறுகின்றனர்.

வள்ளலாரின் வடலூரை புனித நகரமாக ஆக்காவிடினும் பரவாயில்லை,  அவர் உருவாக்கிய ஞான சபையில் 20 நபர்கள் அமரக்கூடிய அந்த மிகச்சிறிய இடத்தையாவது புனிதமாக இருக்க விடுங்கள்.  

அடுத்து,

RAMALINGAM TM


புலால் உண்ணும் பார்வதிபுற மக்களிடம் வள்ளலார் ஏன் நிலத்தை தானமாகப் பெற்றார்? என சிலர் கேட்கின்றனர்?

வடலூர் பெருவெளியினை வேட்டவலம் ஜமீன்தாரர் அவர்களே வள்ளலாருக்கு தானமாக கொடுத்தார். வள்ளலார் அந்நிலத்தை தானமாக பெறுவதற்கு முன் அந்த ஜமீன்தாரரை தனது கொள்கைக்கு ஆட்படுத்திய பிறகு அவரை புலால் மறுக்கச் செய்தப் பிறகே வடலூர் நிலத்தை அவரிடமிருந்து தானமாகப் பெற்றார்.

அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியின் சில சட்ட வரையறைகளுக்காக அந்நிலத்தை பட்டா செய்ய ஜமீன் ஏற்பாடு செய்த சில பார்வதிபுற மக்கள் அந்நிலங்களுக்காக கையொப்பம் மட்டுமே இட்டனர். ஆனால் அந்நிலத்திற்கும் கையொப்பம் இட்ட பார்வதிபுற மக்களுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை.

அடுத்து,

VALLALAR


ஐயப்ப பக்தர்கள் மாலை போடுவதற்கு வடலூர் தருமச்சாலையை பயன்படுத்துவது சரிதானா?

நான் இவ்வாறு தருமச்சாலையில் மாலை போட்டுக்கொண்டதால்தான் இன்றைக்கு நான் சன்மார்க்கத்திற்கு வந்திருக்கின்றேன். இன்று நான் முழுதும் சன்மார்க்கத்திற்கு வந்துவிட்டதால், மாலை அணிந்து சபரி மலைக்குச் செல்வதில்லை.

எனவே தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் வந்து மாலை போட்டுக்கொள்வது தவறல்ல. வள்ளலார் தருமச்சாலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை போடக்கூடாது என எங்கும் சொல்லவில்லை, என ஒரு சன்மார்க்கி கூறுவார்.

இப்படிப்பட்டவர்களுக்கு நாம் என்ன சொல்ல?

ஐயப்ப மாலை போடுவதற்கு அனுமதி அளித்த இந்து நலத் துறை வன்மையான கண்டனத்திற்கு உரியது.

நன்றி.

https://www.facebook.com/reel/1982273392720324



Thursday, January 8, 2026

பௌத்தக் கொடி நாள்

                                                           பௌத்தக் கொடி நாள்

TMR


ஐந்து நிறங்களைக் கொண்ட பௌத்தக் கொடி சுமார் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இக்கொடியை ‘பறையர் வரலாறு’ நூலை எழுதியவரும், பௌத்த சிந்தனையாளருமான கர்னல் ஹென்றி.ஸ்டீல் ஆல்காட் அவர்கள் வடிவமைத்தார். ஆல்காட் இலங்கைக்குச் சென்று பௌத்தம் குறித்த உரையாடலை நிகழ்த்தியகாலத்தில் இக்கொடி அங்கு அறிமுகமானது. ஆல்காட்டும் அனகாரிக தர்மபாலாவும் இக்கொடியை ஜப்பான் பேரரசருக்கும் பர்மா அரசுக்கும் 1889 இல் வழங்கினார்கள்.
பல திருத்தங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கொடி,1885 இல் கொழும்பு பௌத்தக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதன்முதலாக இலங்கை பத்திரிக்கையான ‘சரசவி சந்தரேச(sarasavi sandaresa)’யில் பிரசுரிக்கப்பட்டது. 1886 ஆண்டின் வைசாக தினத்தில் கொழும்புவில் ஏற்றப்பட்டது.
1950 மே 25 ஆம் நாள் கொழும்புவில் ‘உலக பௌத்தர்கள் அமைப்பு(World Fellowship of Buddhist)’ இலங்கையைச் சார்ந்த பௌத்த அறிஞரும், கல்வியாளருமான பேராசிரியர் குணபால பியாசேன மாலசேகரா தலைமையில் கூடியது. 27 நாடுகளிலிருந்து பௌத்தர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் பங்கேற்றார். குணபால பியாசேன மாலசேகரா அவர்கள், பௌத்தக்கொடியை சர்வதேச பௌத்தக்கொடியாக ஆக்க வேண்டுமென்று அந்த மாநாட்டில் பரிந்துரைத்தார். அதன்படி இக்கொடி சர்வதேச பௌத்தக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.
கொடி ஐந்து நிறப் பட்டைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும் பௌத்த வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.
1.நீல நிறம்- அன்பு, கருணை மற்றும் உலக அமைதி ஆகியவற்றைக் குறிக்கிறது.
2.மஞ்சள் நிறம்- நடுவுநிலை (மத்திம) வாழ்க்கையைக் குறிக்கிறது.
3.சிவப்பு நிறம்- ஒழுக்கம், விழிப்புணர்வு, சாதனை ஆகிவற்றுக்கான நன்முயற்சிகளைக் குறிக்கிறது.
4.வெண்மை நிறம்- மாசற்ற தம்மத்தைக் குறிக்கிறது.
5.காவி நிறம்- புத்தரின் போதனைகளையும் ஞானத்தையும் குறிக்கிறது.
ஆறாவதாகவும் ஒரு வண்ணம் இக்கொடியில் துவக்கத்தில் இருந்தது. அது, இந்த ஐந்து நிறங்களையும் கலந்த கலைவை நிறமாக இருந்தது. பிறகு திருத்தப்பட்டக் கொடியில் ஐந்து நிறங்களே ஏற்கப்பட்டன. மேலும், ஐந்து நிறப் பட்டைகள், பஞ்ச சீலங்களையும் நினைவுபடுத்துகின்றன.
கொடியில் உள்ள ஐந்து நிறப்பட்டைகள் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் இருப்பது பௌத்தம் எங்கும், எத்திசையிலும், சமமாகப் பரவவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

Tuesday, January 6, 2026

மேட்டுக்குப்பம் வள்ளலார் கிணறு

                                              மேட்டுக்குப்பம் வள்ளலார் கிணறு


இருபது வயதுள்ள இஸ்லாமியச் சிறுவன் ஒருவன் உடம்பில் எண்ணெய் தடவிக்கொண்டு பஞ்சை அப்பி வேணுமென்றே வள்ளலாரிடம் சென்று, ‘சிரங்கு” என்று கூற, “சில நாள் பொறுத்துக் குணமாகும்” என்றனர். அப்படியே சிரங்கில்லாத உடம்பு முழுவதும் பெருஞ்சிரங்காகியது. பின்பு வருந்த, மேட்டுக்குப்பக் கேணியில் மூழ்க குணமாகியது.

--பிரபந்தத்திரட்டு - பக்கம் 124 (அ.திருநாவுக்கரசு பதிப்பு)




Friday, January 2, 2026

சன்மார்க்க குரவர் நால்வர்

 சன்மார்க்க குரவர் நால்வர்


வணக்கம்,

நமது திருவருட் தந்தையாராகிய திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருமேனிகண்டு, திருவார்த்தை கேட்டும் அவருடன் இசைவு பெற்று அருட்தொண்டு புரிந்த சன்மார்க்க தொண்டர்கள் பலர் அவர்களுள் மிக முக்கியமான நான்கு பெருந்தொண்டர்களை குறித்து விளக்குவதே இந்தச் சிறு நூல்.

1. கல்பட்டு அய்யா,
2. தொழுவூர் வேலாயுதானர்
3. காரணப்பட்டு கந்தசாமியார்
4. பிறையாறு சிதம்பர சுவாமிகள்

இந்த சன்மார்க்க குரவர் நால்வர்களின் அருள் வரலாற்றை ஓதி நாமும் உய்வு பெறுவோமாக!

இன்னூல் திரு. சீனி. சட்டையப்பர் அவர்களின் துணைவியாரும், சன்மார்க்க பெருமாட்டியும் ஆன திருமதி மணிமேகலை அம்மாள் அவர்களின் நினைவாக வெளி வந்தமை குறிப்பிட தக்கது.

நன்றி!



Thanks : Dr. RamaPandurangan. Ex. Edu.Dpt. Dir (Madurai)

சன்மார்க்க குரவர் நால்வர்


கீழ் காணும் இணைப்பினைச் சுட்டி மின்னூல் பெறுக். 

https://www.vallalarspace.org/Download/V000041461F

(or)

https://drive.google.com/file/d/1P1PqA8EgrD2wTHc03HymZSiA9EiTZCAD/view?usp=sharing

https://drive.google.com/file/d/1mrhPh7VDLBH1wpjdvLPpGMmPdOq5AmGm/view?usp=sharing