Monday, June 16, 2014

அருட்பிரகாசர் - கிளிக் கண்ணிகள்

அருட்பிரகாசர் - கிளிக் கண்ணிகள்

                                       
T.M.RAMALINGAM




அருட்ஜோதி வாழ்க! ஆளும்தாள் வாழ்க!                        16.06.2014      
சுமைஒன்றும் காணாது உள்ளிருந்து ஓங்கும் தாள் வாழ்க!
சித்தெல்லாம் ஆண்ட சிற்சபை அரசன் தாள் வாழ்க!
அருட்பாவாகி நின்று அருள் தருவான் தாள் வாழ்க!
கருணையாம் அருட்பெருஞ்ஜோதி அடி வாழ்க!

காலன் கெடுத்துஆளும் கருணீகன்அடி வெல்க!
இறப்பு அறுக்கும்நம் இதயகழல்கள் வெல்க!
சிறப்பு உடம்பெடுத்ததன் சீர்கழல்கள் வெல்க!
அகஇனத்தார் உள்மகிழும் அருங்கழல்கள் வெல்க!
சகத்திலோர் சபைக்கண்ட ஞானகழல் வெல்க!


அருட்பிரகாசர் - கிளிக் கண்ணிகள்

நெஞ்சம் நிறைந்தே நீடு வாழ்பவரிடம்
      தஞ்சம் அடைந்தேனடி - கிளியே
      தயவைப் பெற்றேனடி.                            (1)

உடலின் உதிரமான உயிரின் சுவாசமான
      கடலை அடைந்தேனடி - கிளியே
      கருணைப் பெற்றேனடி.                            (2)

இடமும் வலமும் இருவொரு நடுவுமான
      வடலூர் அடைந்தேனடி - கிளியே
      வரம்பல பெற்றேனடி.                             (3)

நிலவாய்க் கதிராய் நின்றோங்கு மவர்நற்
      குலம் அடைந்தேனடி - கிளியே
      கதிர்நலம் பெற்றேனடி.                            (4)

சோகமான பார்வையால் சாமிஅவர் பார்க்க
      மோகம் அடைந்தேனடி - கிளியே
      மோதகம் பெற்றேனடி.                            (5)

கட்டிய கைகள் கட்டுமோ என்னுடலையென
      எட்டியே அடைந்தேனடி - கிளியே
      எந்தயைப் பெற்றேனடி.                            (6)

கதிர்சூடுபட காலிரண்டும் கடக்குமோ பாதுகையாய்
      பதியடியை அடைந்தேனடி - கிளியே
      பரமனைப் பெற்றேனடி.                           (7)

ஏடெடுத்து அவர்நிலை அழகைப் பாடவே
      கூடெடுத்து அடைந்தேனடி - கிளியே
      கூடும்நிலை பெற்றேனடி.                          (8)

தனித்துரிய அமுதுடன் துளிர்விட்டு எழுந்து
      தனித்தே அடைந்தேனடி - கிளியே
      தலைவனைப் பெற்றேனடி                         (9)

ஞானக் கொழுந்தனை ஞானசபையரைக் கண்டே
      ஆனந்தம் அடைந்தேனடி - கிளியே
      அருளைப் பெற்றேனடி.                            (10)

உனைப் பார்க்கவே எழுவேன் மன்றில்
      தனைப்பார்க்க அழுவேனடி - கிளியே
      தரித்திரக் காரியடி                                (11)

எனையல்லால் கூடுவாள் அவரோடு யாரோ
      வினைவந்து தடுக்குதடி - கிளியே
      விசித்திரக் காரியடி.                               (12)

சாதியும் மதமும் சமயமும் கோயிலும்
      வீதியில் தேடுவேனடி - கிளியே
      விதிவழிக் காரியடி.                               (13)

முகத்திலே பளிச்சிட்டு மதிகெட்ட மூடனை
      அகத்திலே வைப்பேனடி - கிளியே
      அகந்தைக் காரியடி.                               (14)

பசித்தோரைப் பாராது பணத்தைப் புதைத்து
      புசித்திருக்கும் புலையனடி - கிளியே
      புண்முகக் காரியடி.                               (15)

குணமொன்றும் இல்லா கொல்லாநெறித் தெரியா
      பிணந்திண்ணும் உண்ணியடி - கிளியே
      பித்தலாட்டக் காரியடி.                            (16)

சித்திவளாகச் சித்தரிருக்க செத்தவரெல்லாம் சித்தரென்ற
      வித்தைக்கற்ற சொத்தையடி - கிளியே
      விழியாட்டக் காரியடி.                             (17)

சதுரனவன் புகழைச் சாராது சூதுவாதுசெய்து
      மதுகுடிக்கும் மடமாதரடி - கிளியே
      மதிகெட்டக் காரியடி.                              (18)

முலைக்காட்டி மலம்சார் முகம்காட்டி முறுவலுடன்
      விலைப்போகும் ஏந்தலடி - கிளியே
      விகற்பக் காரியடி.                                (19)

தவறேது செய்யினும் திருந்தி உன்பாதமலரைத்
      தவம்செய்யும் கூட்டமடி - கிளியே
      தவசியக் காரியடி.                                (20)

ஆமையாய் இருந்தும் அவராண்மை என்வசமாக
      ஊமையாய் இருந்தேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (21)

தன்சிறு முடியும் தலைவனடிக் காணஎழ
      என்நிலை மறந்தேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியொ?                       (22)

விழித்திருந்தும் காணா விழியோனை புறம்
      அழித்தே கண்டேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (23)

சன்மார்க்கம் பேசியும் சுயஞ்ஜோதியைப் பாடியும்
      என்னோடிருக்கக் காணேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (24)

துன்பம் போக்க துரிசுநீக்க பசித்திருந்தேன்
      என்னவராய் வந்தாரடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (25)

வருவேனென சென்றார் வரும் நாள்வரை
      அருட்பாவைச் சேர்ந்தேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (26)

பசலையால் மெலிந்தேன் பசுந்திரை நீக்கி
      அசலைக் காண்பேனடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (27)

பொருள் கொடுத்தாலும் பொருட்டாகார் அவர்
      அருள்ஜோதி மாயரடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (28)

மன்மதன் வருவானோ மன்னவனிடம் நீபோய்
      என்பெயரைக் கூராயடி - கிளியே
      உண்மைதான் என்னடியோ?                        (29)

கண் மூன்றானார் காணாநடுக் கண்ணானார்
      எண்ணாரை எண்ணேனடி - கிளியே    
      உண்மைதான் என்னடியோ?                        (30)

இறைவனுடன் பேசவே ஆசைப்பட்டேன் பேசினும்
    குறையொன் றுள்ளதடி - கிளியே
    குரல்கேட்க வில்லையடி.                            (31)

நான்பேசினும் என் நாயகன் பேசவில்லை
    ஏன்என கேட்பாயடி - கிளியே
    என்நிலை விளக்காயடி.                            (32)

பேசும்மொழி அறியலையோ பாசமது புரியலையோ
    வீசுகாற்றும் விளக்குமடி - கிளியே
    வன்தமிழ் அறியுமடி.                            (33)

காதுகேட்க வில்லையோ கருவிவாங்கித் தருகிறேன்
    ஈதுபொருத்தி வாருமடி - கிளியே
    இறைச்செவிடு கேட்குமடி.                            (34)

வீதியோரக் கடைகளிலே விலங்கினங்கள் ஓலமிட்டு
    நீதிக்கேட்டு கத்துதடி - கிளியே
    நியாயம்கேட்டு மாளுதடி.                            (35)

கொதிக்கின்ற நீரினிலே கோழிதனை மூழ்கடிப்பார்
    கொதிப்பார் இல்லையடி - கிளியே
    கடவுளும் கருதாரடி.                            (36)

சுடுகாட்டுப் பாடையிலும் சடலமருகில் உயிர்க்கோழிக்
    கூடு தொங்குதடி - கிளியே
    காருண்யம் இல்லையடி.                            (37)

குலாவுகின்ற கோழிகளை குலைநடுங்க தலைக்கீழாய்க்கட்டி
    உலாவுகின்ற மனிதரடி - கிளியே
    உணர்வற்ற மிருகமடி.                            (38)

கூட்டம்கூடி ஆட்டமிட்டு குலதெய்வத்திற்க்கு என்று
    ஆட்டை வெட்டுவாரடி - கிளியே
    ஆணவம் கொள்வாரடி.                            (39)

கத்தும்போது உணவிட்டு காசுக்காக வெட்டுகின்ற
    பித்துபிடித்த மனிதரடி - கிளியே
    பாசமொன்றும் இல்லையடி.                        (40)

மேனித் துடிக்கஆட்டின் மேல்தோலை உரித்தே
    பேனிக் காப்பாரடி - கிளியே
    பணம் பண்ணுவாரடி.                            (41)

ஆய்ந்த பாவங்கள் ஆன்றோர் சொற்களாவும்
    வாய்ச்சொல் ஆனதடி -  கிளியே
    வாய்மை இல்லையடி.                            (42)

மடிச்சொரிந்து பாலீனும் மாடெல்லாம் முடிவில்
    அடிமாடு ஆனதடி - கிளியே
    ஆன்மநேயம் இல்லையடி.                            (43)

வலையிட்டு மீன்பிடித்து வந்து சமைத்து
    இலையிட்டு உண்பாரடி - கிளியே
    இரக்கமொன்று மில்லையடி.                        (44)

உயிரீனும் முட்டையை உடைத்து ஊற்றி
    லயித்து உண்பாரடி - கிளியே
    லட்சியம் இல்லையடி.                            (45)

காட்டு மிருகமதைவிட கண்டதைத் தின்னும்
    நாட்டு மிருகமடி - கிளியே   
    நாறியப் பிண்டமடி.                                (46)

தயவின்றி கொன்றுத் தின்னுங் கொடிய
    சுயநலக் காரனடி - கிளியே
    சகத்திலோர் சூரனடி.                            (47)

மலந்தின்னும் பன்றியை மனிதன் தின்னுங்
    குலமிது பாரடி - கிளியே
    கொலை செய்வாரடி.                            (48)

எல்லா உயிர்களும் என்னுயிர் என்று
    வல்லான் சொன்னானடி - கிளியே
    வரக்காணோ மடி.                                (49)

இறை என்றிருந்தால் ஊன் உண்பாரை
    அறையச் சொல்லடி - கிளியே   
    ஆண்மைத் துடிக்குதடி.                            (50)




ஊமைஎனை பேசவைத்து உண்மைதனை புரியவைத்து           
      தீமைதனை விலக்கினாரடி - கிளியே
      தயவுநிலை பெற்றேனடி.                                      (51)

தண்டபாணி பெயரோனை தவிர்த்து அவர்பெயரை
      தெண்டனிட்டே வைத்தேனடி - கிளியே
      தேனமுது உண்டேனடி.                                        (52)

கடவுள் நிலையறிந்து கடக்க முயன்றேன்
      இடமொன்று கண்டேனடி - கிளியே
      அம்பலம் அடைந்தேனடி.                                      (53)

அம்பலத்தே ஆடல்செய்யும் அப்பனைக் கண்டே
      சம்பளம் பெற்றேனடி - கிளியே
      சதுரனை அடைந்தேனடி.                                      (54)

கண்மூடி பழக்கமெலாம் கருணாகரன் தயவில்
      மண்மூடி போனதடி - கிளியே
      மயக்கம் தெளிந்தேனடி.                                       (55)

சிதைக்கும் வழக்கொழித்து செத்தாரை எல்லாம்
      புதைக்கச் செய்தேனடி - கிளியே
      பார்க்க எழுவாரடி.                                            (56)

குலதெய்வ பக்தியெலாம் குடிக்கெட்டுப் போக
      நலமொன்று கண்டேனடி - கிளியே
      நல்லதே நிலைக்குமடி.                                        (57)

பலிகேட்ட கடவுளெல்லாம் பொய்யெனப் போகவே
      கலிகாலம் சென்றதடி - கிளியே
      கருணையுகம் வந்ததடி.                                       (58)

புறவின மக்களெல்லாம் பரமனின் அகஇனந்தேடி
      பறந்தே சேர்வாரடி - கிளியே
      பயமினி இல்லையடி.                                         (59)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழஇனி
      எல்லோரும் நினைப்பாரடி - கிளியே
      உயிர்க்கொலை செய்யாரடி.                                    (60)

பொய்கள் பொலிந்துப் புறத்திருக்க உண்மை
      தொய்ந்திருப்பது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (61)

சந்தையில் பிறப்பெடுத்து சித்தன் என்றானப்பின்
      தந்தைதாய் ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (62)

உளவு பார்த்து உண்மை தெரிந்தப்பின்
      தளர்வது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (63)

கடை விரித்தாய் களித்து வாங்கியப்பின்
      தடைவிதிப்பது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (64)

அரிய மானிடப்பிறவி அறிந்தேன் அடுத்து
      துரியநிலை ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (65)

ஆக்கை அழியாதிருக்க ஆசை வந்தப்பின்
      தூக்கம் ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (66)

மயக்கம் மாய்ந்தது மருளும் நீங்கியப்பின்
      தயக்கம் ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (67)

மடமாதர் ஆசையெலாம் மாண்டுப் போனப்பின்
      திடதேகம் ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (68)

அத்திக் காயும் எட்டிப்பழமும் எனக்கு
      தித்திப்பது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (69)

மறதியும் அவனே மதிநினைவும் அவனே
      துறப்பது ஏனடி - கிளியே
      தலைவனைக் கேளடி.                                         (70)

ஏகமே இறையெனில் அநேக மாய
      மேகஉருவானது எப்படி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (71)

எந்திரம் தந்திரம் எமனைத் தடுக்குமோ
      மந்திரம் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (72)

இனமான உயிர்களை இச்சித்து உண்போருக்கு
      மனசாட்சி எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (73)

இதயத்துள் துடிக்கும் இறைவனைக் காண
      மதங்கள் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (74)

தன்னைப் போலவே தலைவனும் என்போருக்கு
      மன்னிப்பு எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (75)

குணமின்றி கூடிக் குலாவி சண்டையிட
      மணம்புரிவது எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (76)

கண்ணிருந்தும் பசித்தோரைக் காணாத கயவர்க்குஇம்
      மண்ணும் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (77)

தங்கமான உடலை தனித்து விட்டோருக்கு
      மங்களம் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (78)

சோதிடம் பார்த்தும் சோதனை வந்திடநவக்கல்
      மோதிரம் எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (79)

தாள் பணிந்து தலைவனை ஏற்க்காது
      மாள்வது எதுக்கடி - கிளியே
      மனிதரிடம் கேளடி.                                           (80)

சித்தெல்லாம் வல்ல சித்தன் ஒருவன்
      தித்திக்க வருவானடி - கிளியே
      திண்பண்டம் தருவானடி.                                      (81)

மறைந்தவன் இதோ மீண்டும் இங்கே
      இறையென வருவாடி - கிளியே
      இன்பெலாம் தருவானடி.                                      (82)

பூட்டியதைத் திறந்தே பலர்காண இறைவனைக்
      கூட்டியே வருவானடி - கிளியே
      கூறியதைத் தருவானடி.                                      (83)

அழுதிருக்க இருப்போரை அற்பமாய் செத்தாரை
      எழுப்பவே வருவானடி - கிளியே
      எல்லாம் தருவானடி.                                         (84)

அடி கண்டோரை ஆள்வதற்கே இரண்டரைக்
      கடிகையில் வருவானடி - கிளியே
      கரும்புச்சாறு தருவானடி.                                     (85)

பொன்னான மேனியுடன் பொற்பாத அடியெடுத்து
      சொன்னபடி வருவானடி - கிளியே
      சொத்தெல்லாம் தருவானடி.                                   (86)

அன்பானவன் அருளானவன் என்கைப் பிடித்தே
      என்னோடு வருவானடி - கிளியே
      என்னையும் தருவானடி.                                      (87)

அளித்த அருட்பாக்களை அன்புடனே படிப்போர்க்கு
      வெளிப்பட வருவானடி - கிளியே
      வெல்லக்கட்டி தருவானடி.                              (88)

பற்பல கற்பங்களிலும் பலர்காண நடமாட
      அற்புதன் வருவானடி - கிளியே
      அமிழ்தம் தருவானடி.                                        (89)

சாகாக் கல்விஅருளிச் சாகாவரம் தரவே
      ஆகாயன் வருவானடி - கிளியே
      ஆதாயம் தருவானடி.                                         (90)

நாயினும் ஒப்பிலேன் நாயகனை பாடினேன்
      ஆயினும் அருள்வானடி - கிளியே
      ஆயிரம் தருவானடி.                                          (91)

புழுவிலும் இழிந்தேன் புகழோனை புகழ்ந்தேன்
      அழுகையாய் அருள்வானடி - கிளியே
      அழகைத் தருவானடி.                                        (92)

மலந்தின்ற பன்றியேன் மாதவனை ஏற்றினேன்
      நலமென்று அருள்வானடி - கிளியே
      நல்லன தருவானடி.                                          (93)

காமமரக் குரங்கேன் காதலாகிக் குழைந்தேன்
      ஏமசித்தி அருள்வானடி - கிளியே
      ஏற்றவரம் தருவானடி.                                        (94)

மாதரைஈ எனமொய்த்தேன் மன்னவனை அடைந்தேன்
      சாதகம் அருள்வானடி - கிளியே
      சாகாதேகம் தருவானடி.                                       (95)

மதத்திலும் பொய்யேன் மெய்யோனை வையேன்
      இதமாய் அருள்வானடி - கிளியே
      இன்பம் தருவானடி.                                          (96)

எதனினும் கடையேன் என்னவனை எண்ணினேன்
      பதமாய் அருள்வானடி - கிளியே
      பழமொன்று தருவானடி.                                      (97)

மலத்தினும் நாறினேன் முயங்கியே ஏறினேன்
      இலக்கொன்று அருள்வானடி - கிளியே
      இலக்கணம் தருவானடி.                                      (98)

சாதியில் லயித்தேன் சுத்தனை சுகித்தேன்
      சோதியாய் அருள்வானடி - கிளியே
      சோதனைத் தருவானடி.                                      (99)

அறியாதச் சிறியேன் அறிந்ததாய் பிதற்றினேன்
      எறியாது அருள்வானடி - கிளியே
      எதையும் தருவானடி.                                        (100)
 

தி.ம.இராமலிங்கம் - கடலூர்
T.M.RAMALINGAM - CUDDALORE 




Wednesday, April 23, 2014

அருளாளர் மு.பா. அவர்களின் சத்விசாரம்



அருளாளர் மு.பா. அவர்களின் சத்விசாரம்

1.     இந்திரிய ஒழுக்கம் என்ற பகுதியில் மலம் தடைபடுமானால் சரபேத ஹஸ்த ஸ்பரிச தந்திரத்தாலும் ,மூலாங்கப்  பிரணவ தியானத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளுதல் என்று  கூறப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் தேவை.

2.நமுதன் முதல் பல நன்மையுமாம் என்ற வரி அருட்பாவில் உள்ளது. நமுதன் என்ற சொல்லுக்கு என்ன பொருள்.

அகராதியில் கிடைக்கவில்லை.

3.மரணமிலாப் பெருவாழ்வு என்பதன் விளக்கம் என்ன? நமது பெருமானார் அதை அடைந்தார்களா. அடைந்தார் என்றால் அவர்  உடலுடன் இருக்கிறாரா? அவர் அந்த வாழ்வை எப்படி அடைந்தார்?அவர் அதற்குச் செய்த முயற்சி என்ன?

4. வள்ளலாருக்குப்பின் யாராவது அந்த மரணமிலாப் பெருவாழ்வை அடைந்திருக்கின்றார்களா?

5. யாராவது அடைந்திருந்தால் அவர் யார்? யாரும் அடையவில்லை என்றால் ஏன்  அடையவில்லை.

6.நம்மால் அடையமுடியுமா? முடியாதென்றால் சன்மார்க்கம் என்?

7.அடைய முடியும் என்றால் என்னென்ன செய்யவேண்டும்

   வள்ளலாரின் இணைய தளத்தில் பங்கேற்கும் அன்பர்கள் இந்த விளக்கங்களில் பங்கு கொண்டால் வழி தெரியாத என்னைப் போன்றோருக்கு வழி காட்டிய புண்ணியம் கிடைக்குமே? நன்றி  வந்தனம். 



மேற்கண்ட 7 விதமான சத்விசாரங்களை திருவருள் ஆட்டுவிக்க, அருளாளர் மு.பா.ஐயா அவர்கள் துவக்கிவைத்துள்ளார்கள்.  இதனை விசாரஞ்செய்ய மிக நுண்ணிய அறிவு நமக்கு வேண்டும். அருளாளர் மு.பா. ஐயா அவர்களே இதன் விளக்கத்தை கூறும் அளவிற்கு நுண்ணறிவு பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை, எனினும் மற்ற அன்பர்கள்மூலம் இதன் விளக்கத்தைப்பெற்று அதனை திருத்த முயலுகிறார்கள் என கருதுகிறேன். தற்போதய நிலையில் எமக்கு எந்த அறிவும் இல்லை. இருப்பினும் ஏதோ ஒரு உள்ளுணர்வு இதனை விசாரஞ் செய்தேயாக வேண்டும் எனத்தோன்ற எழுந்த சிறு விளக்கம்...

விசாரம் எண் 1 : இந்திரிய ஒழுக்கம் என்ற பகுதியில் மலம் தடைபடுமானால் சரபேத ஹஸ்த ஸ்பரிச தந்திரத்தாலும் ,மூலாங்கப்  பிரணவ தியானத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளுதல் என்று  கூறப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் தேவை.

இந்திரிய ஒழுக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று - கன்ம இந்திரிய ஒழுக்கம், மற்றது - ஞான இந்திரிய ஒழுக்கம். கன்ம இந்திரிய ஒழுக்கத்தில், "மலஜல உபாதிகளை அக்கிரமாதிக்கிரம மின்றி கிரமத்தில் நிற்கச் செய்வித்தல், எவ்விதமெனில், மித ஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல்,  கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஓஷதி வகைகளாலும் பெளதிக மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும் செய்வித்தல்..." (திருஅருட்பா உரைநடைப்பகுதி பக்கம் - 413) என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளலார்.

மேலும் நித்திய கரும விதியில்,

மலங்கழிக்கின்ற போது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும்போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும்.

மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும்.

ஜலம் தடைபட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜல வுபாதி கழித்தல் வேண்டும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 333)

அதாவது, மல ஜல கழிப்பதில் சற்று உபாதை உள்ளவர்கள், சூரியக்கலையில் (வலது நாசி) சுவாசம் செல்லும்போது மலம் கழிக்க வேண்டும். சந்திரக்கலையில் (இடது நாசி) சுவாசம் செல்லும்போது ஜலம் கழிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.

அடுத்து திருவருண் மெய்ம்மொழி என்னும் பகுதியில்,

மலஜல உபாதைகள் அளவு மீறாமலும் கிரமங்குறையாலும் அளவை போல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல்... (திருஅருட்பா உரைநடைப்பகுதி பக்கம் - 460) என்கிறார் வள்ளலார்.

மலஜலத்தைக்குறித்து இந்த மூன்று விளக்கங்கள் திருஅருட்பா உரைநடைப்பகுதியில் காணக்கிடக்கிறது. இங்கு மலம் ஒன்று, ஜலம் இரண்டு என மூன்று வகை எனக்கொள்ளவேண்டும். ஜலம் என்பது சிறுநீர் மற்றும் விந்துவைக்குறிக்கும், ஆக மலத்தோடு சேர்ந்து மூன்று வகை. மலம், சிறுநீர் தடை ஏற்பட்டால் நித்திய கருமவிதியை கடைபிடிக்கவேண்டும்.

காலபேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் மலஜலம் தடைநேர்வது என்பது மேற்சொன்ன மூன்றுவகைகளையும் சேர்த்தே குறிப்பிடுகின்றார். 'மித போகம்' என்பது விந்து என்ற ஜலத்தை குறித்து நிற்கிறது என்பது தெளிவு.

மலஜலங்கள் தடைபட இரண்டு காரணங்களில் ஒன்று - காலபேதம் அதாவது சரியான காலத்தில் செய்யாமல் சில உலகியல் காரணங்களால் தள்ளிப்போடுவதால் ஏற்படும் தடை, மற்றது உஷ்ண ஆபாசம் அதாவது உடல் சூட்டினால் முறைதவறி தடை ஏற்படுதல் ஆகிய இரண்டு காரணங்களால் ஏற்படும் மலஜல தடைகளை நீக்க 'ஓஷதி வகைகளாலும் பெளதிக மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும்' ஆகிய நான்கு வழிகளில் தடையினை நீக்குதல் வேண்டும் என்கிறார்.

1. ஓஷதி வகைகள்: ஒஷதி என்றால் மூலிகை மருந்து (Medicinal Herbs),
2. பெளதிக மூலங்கள்: பெளதிக மூலங்கள் என்றால் பூமியிலிருந்து/மண் மூலக்கூறுகளிலிருந்து கிடைக்கக் கூடிய மருந்துகள். உதாரணம் தங்க பஸ்பம். (A purging medicine; stimulates evacuation of the bowels) . பெளதிகம் என்பதற்கு வள்ளலார் கூறும் விளக்கம், "பெளதிக மென்பது லிங்கமாதி உபரசம் நூற்றிருபதிற்கும், பாஷாணமாதி 64 பாஷாணங்கட்கும், சுக்காதி ஓஷதி மூல பத்திர பீசங்கட்கும் பெயர். இஃது ஒருவாறு பூதகாரிய தேகமாதி தத்துவங்கட்கும் பெயர். பெள+தீ+அகம்=பெளதீகம். பெள-மூடல், அகம்-உள், தீ-அக்கினி, ஆதலால் தீயை உள்ளடக்கியது பெளதீகம். தீ என்பது காரண உஷ்ணம், பெளதிகங்களென்பவை வீரம் பூரம் முதலிய 64 சரக்குகள்" (திருஅருட்பா உரைநடைப்பகுதி பக்கம்391)
3. சரபேத அஸ்தபரிச தந்திரம்:
சரம்=மூச்சோட்டம், பேதம்=வேறுபாடு, அஸ்த=மறைந்து, பரிச=தொடுஉணர்ச்சி, தந்திரம்=புணர்தல். 

அதாவது, மல ஜல கழிப்பதில் சற்று உபாதை உள்ளவர்கள், சூரியக்கலையில் (வலது நாசி) சுவாசம் செல்லும்போது மலம் கழிக்க வேண்டும். சந்திரக்கலையில் (இடது நாசி) சுவாசம் செல்லும்போது ஜலம் கழிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.

4. மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பம்:
ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.
ஓம் என்பதே பிரணவம் ஆகும். ஓம் என்ற பிரணவம் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம். உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு) " உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும் அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இங்கு மூலாங்கமாக விளங்குவது ஓம் என்னும் பிரணவ நாதம் ஆகும். அதனை தியானம் செய்வதின் மூலம் தம் மனதை உறுதிசெய்துக் கொள்வது. இதன்மூலம் மலஜல தடைகளை நீக்கலாம் என்கிறார்.
மேலும் மூலாங்கப் பிரணவமாகிய அகர சக்ஷணம் ஒருவாறு,
1. ஊன்றல் வாமை.
2. சுழித்தல் ஜேஷ்டை
3. விசிரிம்பித்தல் ரெளத்திரி
4. மடித்து மேலேறல் காளி
5. அங்கிருந்து கீழ்வரல் கலவிகரணி
6. மேல் புடைபெயர்த்தல் பலவிகரணை
7. கீழ்த்தாழல் பலப்பிரமதனி
8. கீழ் ஊன்றி நிற்றல் சர்வபூததமனி
9. வரிவடிவாதல் மனோன்மணி
இதில் விந்து நாதம் முதலிய நவநிலைகளு முள. என வள்ளலார் கூறியிருப்பதையும் கவனிக்கவேண்டும். (திருஅருட்பா உரைநடைப்பகுதி பக்கம்-388)
இவ்வாறு கால பேதத்தாலும் (வேறு வழியின்றி கட்டாயத்தால்) உஷ்ண ஆபாசத்தாலும் (உடலில் சூடு ஏறி அதன்மூலம் விந்து வெளியேறும் போது) தடை நேர்ந்தால், அதாவது நமது ஒழுக்கத்திற்கு தடை நேர்ந்தால் மேற்கண்ட வழிகளில் அதனை நியாயமான முறையில் அத்தடை இனி நேராவண்ணம் மேற்கண்ட நான்கு முறைகளில் ஏதேனும் ஒருமுறையினை பின்பற்றி கிரம (ஒழுக்க) முறையில் கொண்டுவரவேண்டும் எனலாம்.

விசாரம் எண் 2: நமுதன் முதல் பல நன்மையுமாம் என்ற வரி அருட்பாவில் உள்ளது. நமுதன் என்ற சொல்லுக்கு என்ன பொருள்.
     நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
     அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார்
       அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே... (4316)
உரை:
        - சான்றாகுபவன்; பொறுப்பாளன். நம்மைத் தாங்கும் பொறுப்பு முதல் நலம் பலவும் தருபவன் எனக் குறித்தற்கு, “நமுதன் முதற் பல நன்மையுமாம் ஞான வமுதர்” எனக் கூறுகின்றார். நமுதன் - நமோது எனவும் வழங்கும். (இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்ட விளக்கம்)
விசாரம் எண் 3: மரணமிலாப் பெருவாழ்வு என்பதன் விளக்கம் என்ன? நமது பெருமானார் அதை அடைந்தார்களா. அடைந்தார் என்றால் அவர்  உடலுடன் இருக்கிறாரா? அவர் அந்த வாழ்வை எப்படி அடைந்தார்?அவர் அதற்குச் செய்த முயற்சி என்ன?

(i) சுத்த உடம்பு, பிரணவ உடம்பு, ஞான உடம்பு என்ற மூன்று நிலைகளையும் படிப்படியாக பெற்ற ஊன் உடம்பே மரணமிலா வாழ்வைப் பெற்ற உடம்பு ஆகும். மரணமிலா பெருவாழ்வு என்பது ஞான உடம்புடன் என்றென்றும் நிலைப்பது.

(ii) நமது பெருமானார் மட்டுமே அந்த ஞான உடம்பினை பெற்ற முதல் மற்றும் இறுதி மனிதர் ஆவர்.

(iii) மரணமிலா பெருவாழ்வு என்பது உடலுடன் இருப்பதுதான்.

(iv) தயவு கருணை தவம் மூலம் அடைந்தார் என்பதைவிட, இறைவனே வலிந்து அளித்த அருளால் அதனைப் பெற்றார் எனலாம்.

(v) அருள்பெறின் துரும்பும் ஓர் ஐந்தொழில் செய்யும், எனவே அருள் பெற முயலுக... என்று பெருமானார் சொல்வதினால், அவர் தனக்கே உரிய ஆன்ம தயவு, கருணை மற்றும் தவத்தினால் இறை அருளை பெற முயற்சித்து அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

விசாரம் எண் 4: வள்ளலாருக்குப்பின் யாராவது அந்த மரணமிலாப் பெருவாழ்வை அடைந்திருக்கின்றார்களா?

இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறார்கள். வள்ளலாருக்குப் பிறகு ஞான உடலை பெறுபவர் நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம்.

விசாரம் எண் 5 : யாராவது அடைந்திருந்தால் அவர் யார்? யாரும் அடையவில்லை என்றால் ஏன்  அடையவில்லை.

யாரும் அடையவில்லை. உலகியலில் சிக்குண்டதால் நாம் ஓர்சிறிதேனும் இறைஅருள்பெற முயலவில்லை. நமது உடல் பொருள் ஆவி இம்மூன்றையும் இறைவனிடம் ஒப்படைக்கவில்லை போன்ற எண்ணற்ற காரணங்களை கூறலாம்.

விசாரம் எண் 6: நம்மால் அடையமுடியுமா? முடியாதென்றால் சன்மார்க்கம் என்?

மூவராலும் தேவராலும் முத்தராலும் சித்தராலும் முடியாது. ஆனால் நம்மால் (சாதாரன மனிதனால்) மட்டுமே மரணமிலா பெருவாழ்வை அடையமுடியும்.

'சாகாதவனே சன்மார்க்கி' எனவே சுத்த சன்மார்க்கத்தால் முடியும்.

விசாரம் எண் 7 : அடைய முடியும் என்றால் என்னென்ன செய்யவேண்டும்

இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், ஜீவகாருண்ய ஒழுக்கம் போன்றவைகளை தம்வாழ்வில் கடைபிடிக்கவேண்டும். 'நினைந்து நினைந்து...' என்ற பாசுரம் உணர்த்தும் உண்மை ஆன்ம நெகிழ்வை நாம் அடைய இமைப்பொழுதும் நீங்காது இறை சிந்தனையில் இருந்து தவம் புரிதல்வேண்டும். இறையருளை பெறுகின்ற பாத்திரத்திரமான நமது மனத்தையும் உடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சன்மார்க்கிகள் சுத்த சன்மார்க்கிகளாக ஆகவேண்டும். மேலும் உலகில் உள்ள ஒரே சாகாக்கல்வி நூல் திருஅருட்பா அதற்கு வழிகாட்டும்.