Monday, April 11, 2016

காமம் நீக்கு

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த சுத்த சன்மார்க்க நீதி.



                                       காமம் நீக்கு

      நம்மில் பெரும்பாலோர் 'காமம்' என்ற தலைப்பை பார்த்தவுடன் மிகவும் ஆவலாக மற்ற விஷயங்களை தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தைவிட, இதில் என்ன உள்ளது? என படிக்க வேகப்படுவோம். அந்த அளவிற்கு இந்த மூன்றெழுத்து மாயை நம்மை சீர்குலைக்க வல்லது. சைவ சமயத் தலைவர் சிவபெருமானுக்கு கூட இந்த காமத்திற்கு என ஒருவள் தேவைப்படுகிறாள். அவளுக்கு 'காமம்' என்றே பெயர். அவள்தான் சிவ-காமம் = சிவகாமி = சிவ-காம-வல்லி.


      ஆனால், சுத்த சன்மார்க்கத்திற்கு இந்த 'காமம்' தடையாக உள்ளதாக வள்ளற்பிரான் கூறுகிறார். இந்த காமம் நேரிட்ட போது ஞான அறிவாலே அதனை நாம் தடுக்க வேண்டும் என்கிறார். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-411) நன்றாக கவனிக்க வேண்டும், தடுக்க வேண்டுமே தவிற தவிர்கக்கூடாது. கொலை, புலையை தவிர்க்கச் சொன்ன பெருமான், இந்த காமத்தை தவிர்க்கச் சொல்லாமல் தடுக்கவே சொல்கிறார்.

      தவிர்ப்பது என்பது ஒரு காரியத்தை முற்றிலும் விடுவது. தடுப்பது என்பது ஏகதேசத்தில் மட்டும் உபயோகிப்பது, மற்ற நேரங்களில் அதனை தடுத்து நிறுத்துவது. நீரினை அனைகளில் தடுப்பது போன்றது இது. தேவையான போது அந்நீரினை திறந்து உபயோகப்படுத்திக்கொள்ளலாம். எனவே காமத்தை நாம் தடுக்க மட்டுமே வேண்டும். நம்மால் காமத்தை முற்றிலும் தவிர்க்க முடியாது.

      "இது நல்லது இது கெட்டது என்று பகுத்தறியும் ஞானத்தால் விஷய வாசனையில் கரணங்களைச் செல்ல வொட்டாமல் தடுக்கக்கூடுமே ஒழிய, நிவர்த்திக்கக் கூடாது. அது ஆண்டவன் அருளால் சுத்த தேகம் பெற்றவர்களால்தான் முடியும்." (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-399) என்ற வள்ளலின் வார்த்தைக்கிணங்க காமத்தை தவிர்ப்பது என்பது சுத்த தேகிகளால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று. அப்படி தவிர்க்க வேண்டுமானால் முதலில் நாம் அதனை தடுக்க பழகிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு ஆண்டவன் அருளால் காமம் இயல்பாகவே தகர்ந்துவிடும்.

      சரி, இந்த காமத்தை எப்படித் தடுப்பது? அதுதானே மிகப்பெரிய கேள்வி! இக்கேள்விக்கு வள்ளற்பெருமான் மிக சாதாரணமாக "ஞான அறிவால்" தடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அது என்ன? ஞான அறிவு. ஞானம் என்றாலும் அறிவு என்றாலும் ஒன்றுதானே!

      ஒன்றுதான். சத்தியமான உண்மை என்பதுபோலத்தான் இதுவும். மேலே உள்ள, 'இது நல்லது இது கெட்டது' என்ற பத்தியை மீண்டும் வாசிக்கவும். அங்கு 'ஞானம்' என்ற சொல்லை வள்ளற்பெருமான் பயன்படுத்தி யிருப்பார். எனவே நல்லது கெட்டது அறிந்து அவற்றில் கெட்டதை தடுப்பதுதான் ஞானம்.

      நடைமுறை வாழ்க்கையில் ஞானத்தால் எவ்வாறு காமத்தை தடுக்க இயலும்? எனில்,

      காமம் நமக்கு நமது எண்ணம் மூலமாகவே எழுகிறது. அவ்வாறு எண்ணம் எழும்போதே அந்த எண்ணத்தை தடுத்து வேறு வேலையில் ஈடுபட வேண்டும். அப்போதும் எண்ணம் அதனை தொடர்கிறதா... அதனை கீழ் காணும் உண்மையைக் கூறி மிரட்ட வேண்டும்.

மனத்தால் செய்யும் பாவங்களுக்கு சண்டாளாதி சரீரம் உண்டாகும்.
வாக்கால் செய்த பாவங்களுக்கு மிருகம் முதலான சரீரம் உண்டாகும்.
தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரம் உண்டாகும். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-455)

      ண்ணங்களால் நாம் நினைக்கும் காமத்திற்கே சண்டாளாதி சரீரம் உண்டாகும் என்றால் அதனை செயல்படுத்தினால் மரம் முதலான சரீரம் அல்லவா நமக்கு மறுபிறவியில் கிடைக்கும்! என்று நமது எண்ணத்தை மிரட்டி அதனை அப்போதே தடுத்தல் வேண்டும்.

      அல்லது காமத்தை கண்டபடி வசைபாடும் தந்திரத்தை கையாள்வது. இதனை தமிழ் சித்தர்கள் முதல் கொண்டு வள்ளற்பிரான் வரையில் அனைவரும் இந்த தந்திரத்தை கையாண்டுள்ளனர். காம எண்ணம் வரும்போது இப்படி வசைபாடுவதனால் அது அங்கிருந்து ஓடிவிடும். எப்படி வசை பாடுவது...

மின்னைப் போலிடை மெல்இய லார்என்றே
      விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
      புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
      சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
என்னைப் போல்வது நாய்க்க்குலம் தன்னிலும்
      இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே. (திருவருட்பா-2739)

      "மின்னலைப்போல இடையுடைய விடம் போன்ற பெண்களைப் பொன்னைப் போல் பாராட்டி அவர்களது இடை நடுவில் உள்ள புழையில் விரலை விட்டுச் சுரண்டி, ஆங்கே முடைநாறும் சலத்தைச் சந்தனம் எனக் கொள்ளும் என்னைப்போல ஒருவனை நாய்க் கூட்டத்திலும் பார்க்க முடியாது" என்பதே இதன் பொருள். இதன் மூலம் காமத்தால் நான் நாயைவிட கேவலாம ஆகிவிட்டேனே! என்று எண்ணி தமது நிலையினை தாழ்த்தாது அந்த காமத்தை தடுக்கலாம், மேலும்...

வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
      விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
      கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
      துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
      ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே. (திருவருட்பா-2777)

      (வெட்டை - காம இச்சை மற்றும் அதனால் வரக்கூடிய நோய், துட்டை - கற்பில்லாதவள், கட்டை - கட்டு மற்றும் உடம்பு, எட்டை - எண்சான் உடம்பு) காம இச்சையில் சிக்கிக்கொண்டால் வெட்டை என்னும் விடாத பெருந் துன்ப நோய் வரும் என்பதை எண்ணாமல், விலை மாதரை வேண்டி சென்றே அவரை தொழுது இக்கட்டில் சிக்கிக்கொள்வார். அப்படிப்பட்ட கற்பில்லாத பெண்ணை நாடிச் சென்றால், எப்படி மாட்டின் கழுத்தில் கட்டியிருக்கும் கழுத்ததடியானது சுமை வண்டியை இழுக்க வைக்கிறதோ அதைப்போன்று நம்மை சுமை வண்டிபோல் அவளையே சுமந்து இழுக்க வைத்துவிடும். நாம் நமது எண்சான் உடம்பை விட்டு பாடையில் செல்லும்போதும் கூட அந்தக் கட்டை (விபச்சாரி) ஆசை நம்மை இழுக்கும். என்று விலைமாதர் ஆசையின் விபரீதத்தை இப்பாட்டில் வள்ளற்பிரான் சொல்வதை படிக்கும்போது, நாமும் இப்படிப்பட்ட எண்ணத்தை தடுக்கலாம்.... மேலும்,

புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
      புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
      பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
      மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
      கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே. (திருவருட்பா-2778)

      பெண்குறி என்னும் புண்மேல் ஒரு புடவையைக் கட்டிப் புதுமைகள் காட்டும் பெண்ணை மணஞ்செய்யும் அறிவிலாரின் வாழ்வினை நோக்கின், கொள்ளிவாய்ப் பேயைக் மணஞ்செய்பவன் ஒருவேளை பிழைத்தாலும் பிழைக்கலாம், பெண்களை மணஞ்செய்பவன் பிழைக்கமாட்டான் என்பது விளங்கும். கண்ணைக் கட்டிக்கொண்டு கிழக் கழுதைமேலேறி ஊருக்கு செல்வது போன்று அமையும் இவர்களது வாழ்வு. இத்திருவருட்பாவின் வசை மொழியானது நம்மை காமத்தில் இருந்து தடுக்கும். மேலும்...

மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
      வருந்திமனம் மயங்கமிக வாடி நின்றேன்...(திருவருட்பா-115)

பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும் பாவியேன்.. (117)

கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
      கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே.. (122)

மஞ்சட் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள்
      மயங்க வாங்குறும் முண்டைகள் நன்மதி
குலையக் காட்டும் கலவிக்கி சைந்து... (253)

பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
      பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகி.. (255)

பெண் பேய்களை முன்னினே... (257)

குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு... (258)

கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
      கத்தைக் காட்டி... (259)

படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
      பாவம் யாவும் பழகுறும் பாழுங்குழி
குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
      கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
கடிமலக் குழி ஆகும் கருக்குழி
      கள்ள மாதரைக் கண்டு மயங்கினேன்...(260)

விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால்... (266)

கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் விழாமே... (269)

கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்...(270)

மங்கையர்தம் கண்களெனும் வலைக்குள் வீழ்வேன்... (292)

பிறத்தல் எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை வைதிலேன்...(293)

முலைமலை வீழ்ந்துருள் வேன்... (294)

காமாந்த காரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன்... (295)

பொல்லா நங்கையர்தன் கண்மாய
      நவையைச் சற்றும் வென்றறியேன்... (296)

பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
வதிதரும் செஞ்சினேன்... (316)

பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ஆகும்.. (320)

மாதர்பால் என்மூட மனம் இழுத்தோடப் பின்சென்றெய்த்தேன்.. (321)

மடமாதர்தம் வெய்யநீர்க் குழிவீழ்ந்து... (322)

முலைஒருபால் முகமொருபால் காட்டும் பொல்லா
      மூடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்... (324)

வஞ்சமட மாதரார் போகம் என்னும்
      மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்.. (326)

ஏழை மார்முலைக்கே விழைந்து ழன்றேன்... (337)

மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
      பஞ்ச பாதகம் ஓருஉரு எடுத்தேன்... (338)

கொடிய வாட்கண்ணார் முலை மலைக்கு உபசரித்தேன்...(339)

மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்... (340)

துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்... (341)

கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஓர்
      பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன்... (344)

முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்.. (394)

மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து... (433)

மடவார் முலைமுகட்டின் முயங்கி
      அலைந்தே நினை மறந்தேன்.. (479)
 
வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
      மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்? (794)

மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
      வெய்ய நீர்க்குழி விழுந்தது போக.. (796)

      புலைய மங்கையர் புழுநெளி அளற்றில்
என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே... (797)

வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
      மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று... (798)

நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
      நாளும் வீழ்வுற்று நலிந்திடேல்... (800)

மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
      மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய்... (802)

நிலவும் ஒன்மதி முகத்தியர்க் குழன்றாய்
      நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
இலவு காத்தனை என்னைநின் மதியோ.. (803)

சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
      சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்?... (805)

மாந்தர்கள் தம் வெப்பார் குழியில் கண்மூடி விழுந்தேன்... (911)

பொல்லா விடமனைய பெரும்பேய் மாதர்
      பிணக்குழியில் பேதை மனம் போந்திட... (932)

நங்கையர்தம்
ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
கோளை அகற்றி நின் அடிக்கே கூடும் வண்ணம்... (935)

கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
தத்தி விழுந்தேன்... (936)

மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம்
தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன்... (937)

என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட்
      கின்பம் எனவே எனக்கவர்நோய்
தன்னைக் கொடுத்தார்... (938)

மடவார் இடைவாய் மணிப்பாம்பின்
      புற்றுக் குழன்றேன்... (939)

தீங்கும் புழுவும் சிலைநீரும்
      சீழும் வழும்பும் சேர்ந்தலைக்கத்
தூங்கும் மடவார் புலைநாற்றத்
      தூம்பில் நுழையும் சூதகனேன்... (940)

காமக்கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமடவியர்தம்
      கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்... (941)

மலினக்குழி இருள் மடவார் முலைஎனும்
      மலநிறைக் குவையைச் சுற்றிஊர்
நாயின் சுழன்றேன்.. (942)

மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
      பிரியமுற் றலைந்தேன்... (943)

பேதையர் புழுமலப் பிலமாம் கருமவாழ்
      வனைத்தும் வேண்டிலேன்... (944)

மங்கையர் கொங்கைத் திடர்மலைச் சிகரத்தில் ஏறி
      உருள்வதும் அல்குல் படுகுழி விழுந்தங் குலைவதும்.. (945)

வஞ்சக விழியினால் மயங்கிக் குண்டுநீர்
      ஞாலத்திடை அலைகின்றேன்... (946)

இளமுலை மங்கையர்க் குள்ளம்கனிய
      கொடியார்க் கேவல்செய் துழன்றேன்... (948)

கோதையர் குறுங்குழி அளற்றில் பொறையும்
      நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன்... (949)

நெறியிலேன் கொடிய மங்கையர் மையல்
      நெறியிலே நின்றனன்... (950)

தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே... (967)

காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
      கலங்கு கின்றனன்... (1058)

முறுவல் மங்கையர் மலைநேர் முலைத்தலை
      உருண்டன னேனும்... (1090)

புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
      போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்தி... (1156)

காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண்.. (1200)

மலஞ்சான்ற மங்கையர் கொங்கையிலேநசை வாய்த்துமனம்... (1246)

குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம்
சென்றே விழுகின்ற தென்னைசெய்கேன்... (திருவருட்பா-1251)

மேற்கண்டவாறு நாமும் இந்த காமத்தை வாய்க்கு வந்தபடி வசை பாடினால், நம்மை விட்டு காமம் அகலும். பெண்களாகப்பட்டவர்கள் ஆண்களின் உடலை எவ்வாறெல்லாம் இழிவாக வசை பாடலாமோ அவ்வாறு அவர்களும் வசை பாடலாம். இதுவரை தமிழ் உலகில் ஆண்கள் உடலை வசை பாடிய பெண்கள் யாருமில்லை என எண்ணுகிறேன். எனவே யாரேனும் பெண்கள் இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, ஆண்களின் உடலை மரபுக் கவிதை வடிவில் வசை பாடினால், அது பெண்களின் காமத்தை தடுக்க பேருதவியாக இருக்கும். செய்வீர்களா?

காமத்தை தடுக்க இதுவரை இரண்டு வழிகளைக் கண்டோம். மூன்றாவதாக என்ன வழி இருக்கிறது என்பதனையும் காண்போம்...

வள்ளற்பெருமான் காமத்தை தடுக்க வேண்டும் என்று சொன்னார், அவரே பிறிதோர் இடத்தில் காமத்தை நீக்க வேண்டும் என்று சொல்கிறார். நீக்குதல் என்றால் அறவே விடுவது என்று பொருள். தடுக்கும் போதே மீண்டும் மீண்டும் நம் கழுத்தில் வந்து அமர்ந்து விடுகிறது. அப்படியிருக்கையில் நாம் எவ்வாறு அதனை நீக்கமுடியும்.

அதற்கு அதிதீவிர பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். உண்மையிலேயே நாம் காமத்தை நீக்க விரும்பவேண்டும். அந்த முனைப்பில் நாம் இடைவிடாது இறைசிந்தனையுடன் இருக்க வேண்டும். மேலும் ஜீகாருண்ய ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தோமானால் நாம் காமத்தை தடுப்பது மட்டுமல்லாது முற்றிலும் நீக்கிடவும் முடியும். அதிதீவிரனுக்கு இறைவன் அருளால் அந்த காமம் எறிக்கப்பட்டுவிடும். 

கெடுதியாகிய காமக் குரோதாதி சம்பந்தங்களையும் நீக்கல் வேண்டும். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-371)

அதிதீவிர பக்குவியாய் மேற்குறித்த வண்ணம் கடவுளிடத்தில் இலக்ஷியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிலாபாசம் நேரிடாது. (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-423)

ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகமுடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்திற் செய்யலாமென்றது மந்ததரத்தையுடையவனுக்கேயன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல. (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-423)

தீவிரதரம் - எவ்வகையிலுஞ் சுக்கிலம் வெளிப்படாமல் செய்வித்தல் (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-413)

ஒரு வஸ்துவினிடத்தில் பற்றுதல் அவா; அதை அனுபவிக்க வேண்டுமென எழுந்தது ஆசை; அதன் மயமாதல் காமம்; அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம்; எந்த வஸ்துவிடத்திலும் மோகமாதிக ளின்றி அவாமயமாய் நிற்றல் வேண்டும். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-395)

.பஞ்ச மகா பாதகங்களில் காமம் இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது. எனவே இந்த கொடிய காமத்தை நீக்குவது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. கள், கொலை, களவு, பொய் என்கிற நான்கு மகா பாதகங்களை விட்டும் இன்னும் இந்த காமம் என்கிற மகா பாதகத்தை விடாத சன்மார்க்கிகள் பலர். காமத்துடன் இருக்கும் சன்மார்க்கிகளும் மகா பாதகர்களே. எனவே ஒரு முடிவுக்கு வாருங்கள். காமத்தை அழியுங்கள். பெருவாழ்வை நோக்கி நடை போடுங்கள்.

சீனாவை சேர்ந்த லியுயிகியான் 1100 கோடி கொடுத்து ஒரு ஓவியத்தை சென்ற வருடம் (நவம்பர்-2015) வாங்கியுள்ளார். அது என்ன ஓவியமாக இருக்கும். அமெடியோ மொடிகிலியானி என்ற ஓவியர் வரைந்த நிர்வான பெண் ஓவியம் தான் அது.

இந்த மானிடதேகம் ஆண்டவரது சிருஷ்டி அன்று, மாயா சிருஷ்டி. என்று வள்ளற்பெருமான் சொன்னதை சீன கோடீஸ்வரர் நிரூபித்துவிட்டார்.ுலை முகங்காட்டி மயக்கிடும் கொடியரின் வரை படத்தின் மதிப்பு 1100 கோடியாம். அடுத்த வேளை உணவிற்கு அல்லாடும் மனிதர்கள் இருக்கும் இப்பூமியில் 1100 கோடியை, குடிகொள் நாற்றக்குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்றுக் குழி புழுக்கொள் குழியின் வரைபடமே களவாடிவிட்டதை பார்த்தீர்களா!!! காமத்தின் சக்தி அவ்வளவு வலிமையானது. அந்த வலிமையை திருவருட்பா கூறுகின்ற வழிமுறைகளில் உடைத்தெறிபவர்கள் சுத்த சன்மார்க்கிகளான நாம் மட்டுமே.

சுத்த சன்மார்க்கிகளில் காமத்தை ஒழித்து வெள்ளாடை உடுத்தி துறவு வாழ்க்கையை மேற்கொள்ளும் அன்பர்கள் எல்லாம் ஒன்றுகூடி "சுத்த சன்மார்க்கத் துறவிகள் சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் சன்மார்க்க இளைஞர்களை துறவு வாழ்க்கைக்கு அழைக்க முன்வருதல் வேண்டும். எதிர் காலத்தில் வரவிருக்கும் இந்த சன்மார்க்கத் துறவிகளால்தான் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் உலகெங்கிலும் பரவும். இதற்கான முதல் படியாக சுத்த சன்மார்க்கத் துறவிகளை ஒன்றினைக்க 'சன்மார்க்க விவேக விருத்தி' பாடுபடும். உங்களில் யாரேனும் துறவியாக ஆக விருப்பம் இருப்பின் அல்லது முன்னரே துறவு பூண்டிருந்தாலும் நீங்கள் இந்த மின்னஞ்சலுக்கு vallalarlive@live.com உங்களது விவரங்களை தெரியப்படுத்தவும். திருவருள் சம்மதம் கிடைத்தவுடன் துறவிகள் ஒன்றிணைய வாய்ப்புக்கிட்டும். 

நமது தேசத்தந்தை மகாத்மா காந்திஜி எவ்வகையில் தமது காமத்தை வென்றார் என்று சற்றே பார்ப்போம். அவர் காமத்தை வள்ளற்பெருமான் போன்று வென்றாரா? என்றால் இல்லை. எனினும் பிரம்மச்சரியம் கடைபிடிக்க ஒரு காலக்கட்டத்தில் மிகவும் புதிய யுத்தியில் அவர் முயன்று பார்த்தார்.

காந்திஜி தமது தென்னாப்பிரிக்கா வாழ்க்கையின் போது சத்தியாகிரகம் என்ற அகிம்சை போர்முறையினை அவர் அங்குதான் உருவாக்கினார். சுயநலம் மற்றும் குடும்ப உறவிற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வு முறைக்கு அவர் தயாரானார். அதனால் அவர் ஒரு முக்கியமான இரண்டு முடிவினை அங்கிருந்த போது எடுத்தார். முதலாவதாக குடும்பத்தை விட்டு விலகி முழுமையாகப் பொதுச் சேவைக்கு தம்மை அர்ப்பணித்துக்கொள்ளுதல், இரண்டாவதாக உடலுறவை மட்டுமின்றி காம உணர்வுகளையும் இச்சைகளையும் முற்றிலும் துறத்தல்.

அவர் கடைசியாக வைத்துக்கொண்ட உடலுறவு மகன் தேவதாசின் பிறப்போடு (1899) முடிவடைகிறது. 1906-ஆம் ஆண்டு முதல் அவர் மிகவும் இறுக்கமான பிரம்மச்சர்யத்தை பயிற்சி செய்தார். அது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அவர் தமது வாழ்க்கையில் ஐம்பதாண்டு காலத்தை அவரது இச்சைகளுக்கும் அவர் விரும்பிய லட்சியத் தூய நிலைக்குமான போராட்டத்திற்கே செலவிட்டார்.

காந்திஜியின் அந்தரங்க வாழ்க்கைக்கு செல்வோம், அப்போது 50 வயதான காந்திஜிக்கும் 47 வயதான திருமணமான சரளாதேவியுடன் உருவான உறவும் பிரிவுமே அது. தாகூரின் மருமகளான சரளா, அக்காலக்கட்டத்தில் ஒரு மிகப்பெரிய ஆளுமை, பேரழகி, எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியை, இசை வல்லுநர், வங்கத்தின் 'ஜோன் ஆஃப் ஆர்க்' எனவும், பூமிக்கு வந்த துர்க்கை எனவும் வியக்கப்பட்டவர். கணவருடன் விடுதலை போராட்டத்தில் முன்னணியிலிருந்தவர்.

1901-ஆம் ஆண்டே காந்திஜி சரளாவைச் சந்தித்திருக்கின்றார். தென்னாப்பிரிக்க வாழ்க்கைகுப் பிறகு 1919-20 ஆம் ஆண்டு காந்திஜி தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கியபோதுதான் இருவருக்குமிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. "இது வரையறைக்கு அப்பாற்பட்ட உறவு" என காந்தியாரால் அழைக்கப்பட்டது. அவர் வெகுவிரைவில் சரளாவுடன் ஒரு 'Spiritual marriage' என்கிற அளவிற்குப் பரிணாமமடைந்தார். மார்ச் 1920-ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்திற்கு சரளா வந்திருந்தபோது, இருவருக்குமிடையே காணப்பட்ட நெருக்கமும் ஆசிரமத்தில் சரளாவின் மகன் தீபக்கிற்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமைகளும் அப்போதே சர்ச்சைக்குள்ளாயின. காந்தியின் வாழ்வில் வந்து சென்ற ஏராளமான பெண்கள் குறித்து எந்தச் சஞ்சலமும் அடையாத கஸ்தூரிபாவே கவலைப்படத்தக்கதாக அவ்வுறவு அமைந்தது.

மகன் தேவதாஸ், மிகவும் நெருக்கமானவர்களும் அலோசகர்களுமான மகாதேவ தேசாய், மதுரதாஸ், ராஜாஜி ஆகியோரின் கடுமையான தலையீட்டின் பேரில் வெகுவிரைவில் காந்திஜி அந்த உறவைத் தீய்த்து அணைக்க வேண்டியதாயிற்று. வழக்கம்போல இந்த உறவுச் சிதைவிலும் மிகவும் பாதிக்கப்பட்டது சரளாதான். 'உலகச் சுகங்கள், மகிழ்ச்சிகள் எல்லாவற்றையும் ஒரு தட்டில் நிறுத்தி, பாவுவையும் அவரது நெறிகளையும் இன்னொரு தட்டில் நிறுத்தி, இரண்டாவதைத் தேர்வு செய்த முட்டாள் தனத்திற்கு ஆளானேன்' எனக் கலங்கிய சரளாதேவிக்கு, தனது அன்பு உடலிச்சைகளை முற்றிலும் துறந்த ஒரு ஆன்மிக இணைவு எனவும், எல்லா அம்சங்களிலும் பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடிக்கும் இருவருக்குமிடையே மட்டுமே இது சாத்தியமானது எனவும் சொல்லி வேறு வழியின்றி கதையை முடித்தார் காந்திஜி.

காமம் என்பது ஒரு மகாத்மாவையே எவ்வாறு திசை திருப்பி இருக்கிறது என்பதை காணுகையில் நாமெல்லாம் இதனை ஒரு படிப்பினையாகக் கருதி மிகவும் எச்சரிக்கையாக பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் பழக வேண்டும். தனது அந்தரங்க வாழ்வை முற்றிலும் ஒரு திறந்த புத்தகமாக அமைத்துக் கொண்ட காந்திஜி, இதை ஏன் தனது சுயசரிதையில் பதிவு செய்யவில்லை? 1920-ஆம் ஆண்டு இறுதியில் 'சத்திய சோதனை'யை அவர் எழுதியபோது சரளாவும் அவர் மகனும் உயிருடனிருந்தனர். அவர்களை இன்னும் ஒருமுறை புண்படுத்திவிடக்கூடாது என்கிற கரிசனம் காந்திஜிக்கு இருந்ததை ராஜ்மோகன் சுட்டிக்காட்டுகிறார். எனினும் வில்லியம் லாஷ், ஸ்டான்லி ஜோன்ஸ், மார்கரெட் சாங்கர் ஆகியோருடன் கொண்ட உரையாடல்களின்போது அவர் இந்த உறவு குறித்துப் பகிர்ந்துக்கொள்ளத் தயங்கவில்லை. காம உணர்வு மட்டுமன்றி 'சாக்லேட்' போன்றவற்றை விரும்பி இச்சை கொள்ளுதலும் கூட பாவகரமானது, எனக் காந்திஜி தனது பின்னாட்களில் விளக்கமளித்தார். இன்ப நாட்டத்தை அழித்தொழிப்பது என்கிற அம்சத்தில் சற்றும் இரக்கமற்ற ஒரு இரும்பு மனம் அவருக்கு வாய்த்தது.

உடலிச்சையைத் துறத்தல், பிரம்மச்சர்யம் அகியவற்றைத் தனது அகிம்சைப்போர் முறை, சத்தியாக்கிரகம் ஆகியவற்றிற்கு மிக உறுதுணையாக இருக்கும் என உளமாற நம்பினார் காந்திஜி. புற உலகைப் பாதிக்கும் திறன் என்பது ஒருவருக்குத் தன் உலகைக் கட்டுப்படுத்துவதிலிருந்தே துவங்குகிறது என்றார். பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்காமல் ஒரு சத்தியாகிரகி வெற்றிபெற முடியாது என்றார். (சன்மார்க்கிகளான நாமும் சத்தியாகிரகிதான் என்பதை கூறவும் வேண்டுமோ?) அரசியல் நிகழ்வுகள் அவரை மீறி நடக்கையில், அதற்கான காரணம் தமது இச்சையையும் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியாததால்தான் என்று தமது ஒழுக்கத்தின் மீது குறை கூறினார். அரசியலில் தோல்வியுற்ற தருணங்களில் தீவிரமாக பிரம்மச்சரியச் சோதனைகளில் இறங்கினார்.

சத்யாக்கிரகி என்பவன் கொண்ட கொள்கைக்காக எல்லாவிதமான துயர்களையும் தாங்கி நிற்கும் வல்லமை பெற்றவன். வன்முறையற்ற எதிர்ப்பு என்பது துயர் தாங்கும் திறனில் நிற்கிறது. எனவே சமூகத்திலிருந்தும் பாலியல் உள்ளிட்ட எல்லாவிதமான கவர்ச்சிகளிலிருந்தும் விலகி வனங்களில் அலையும் முனிவர்களாய் ரிஷிகளாய் இருக்க காந்தி விரும்பவில்லை. காமத்துயரை வன்முறையற்று எதிர்த்து வெல்லவே விரும்பினார்.

சமூகத்திற்குள் நின்று, அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டு, எல்லாவிதமான கவர்ச்சிகளின் அருகாமையோடு அவற்றிலிருந்து விலகி நிற்றலே உண்மையான சுயகட்டுப்பாடு. பிரம்மச்சர்யம் என்பது உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. மனம் சார்ந்த ஒன்று அது. மனத்தளவிலேயே "தூய்மையற்ற" சிந்தனைகளுக்கு இடமளிக்காத நிலையையே காந்தி லட்சியமாக முன்வைத்தார். முஸ்லிம்கள் நிறைந்த ஒரு கூட்டத்தில் அவர் ஒருமுறை இப்படிச் சொன்னார், "அறுவை சிகிச்சை மூலம் தம்மை அலிகளாக்கிக் கொள்பவர்களைத்தான் இறைத்தூதர் ஏற்கவில்லை. தொழுகை மூலம் அந்நிலையை அடைந்தவர்களை அவர் வரவேற்கவே செய்தார்."

காந்தியின் இன்னொரு முக்கியப் பண்பு தன்னிடமுள்ள 'ஆண்மையை' அழித்துப் 'பெண்மை' ஒளிரச் செய்வதைத் தொடர்ச்சியாக மேற்கொண்டது. தாதியாக இருத்தல் (Nurse) என்பதை அவர் உவந்து ஏற்றுக்கொண்டார். குழந்தைப் பருவத்திற்குரிய சேட்டைகள், விளையாட்டுகள் எல்லாவற்றையும் ஒதுக்கித் தன் தந்தைக்குச் சேவை செய்தது தொடங்கி, தென் ஆப்பிரிக்காவில் சூலு கலகம், போயர் யுத்தம், பின்னாளில் தொழுநோயாளிகளுக்கு மத்தியில் என அவரது தாதிச் (Nursing) சேவகம் தொடர்ந்தது. கடமைக்கும் தாதி நிலைக்கும் காமம் விரோதமானது என்கிற கருத்து அவருக்கு இளமையிலேயே இறுகப் பதிந்தது. ஆனாலும் காமம் அவரை விடவில்லை. தமது தந்தை உடல்நிலை குறைவால் நோயுற்று இருக்க, ஒரு நாள் காந்திஜி தமது மனைவியுடன் கூடிவிட்டு சற்று அகன்றபோது, அவரது தந்தையின் மரணம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் அவரை வெகுவாக பாதித்தது.

இச்சைகளை துறக்கும் அவரது பிரம்மச்சரியச் சோதனைகள் ஃபோனிக்ஸ் பண்ணைக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. பருவப் பெண்களுடன் அருகில் உறங்குவதாக அப்பயிற்சி தொடங்கியது. "ஜெகி என்னருகில் படுத்திருந்தார்" என அவர் அதைப் பதிவு செய்தார். தொடர்ந்து அவர் இந்தப் பயிற்சியின் 'வரம்பை' விரிவாக்கிக் கொண்டே சென்றார். அவரது பிரம்மச்சர்யச் சோதனைகளில் பிரபாவதி நாராயணன் (பாலியல் உறவைத் தவிர்த்துக் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் மனைவி), சுசிலா நய்யார், லீலாவதி அசர், அப்துல் சலாம், பத்மஜா நாயுடு, மீரா பென், ஆபா, மனு காந்தி எனப் பலரும் பல்வேறு வகைகளில் அந்த சோதனையில் பங்கு பெற்றனர்.

பிரம்மச்சரியச் சோதனைகளை மனைவியுடன் மட்டும் நிறுத்திக் கொள்வது போதும் என காந்தி நினைக்கவில்லை. அது பெரிய விஷயமில்லை. பிற பெண்கள், குறிப்பாகப் பருவ வயதிலுள்ளோருடன் மேற்கொள்ளப்படுதலே சரியான சோதனை எனக் கருதினார். பழக்கப்பட்ட உடல்களைத் தவிர்த்து புதிய கவர்ச்சிகளுடன் சோதனைகள் தொடர்ந்தன.

"ஊன்றுகோல்களாக", பாதத்தை வருடி விடுபவர்களாக, ஒரு மெல்லிய துண்டுடன் கிட்டத்தட்ட முழு நிர்வாணமான நிலையில் படுத்துள்ள காந்திக்கு 'மசாஜ்' செய்பவர்களாக, இரவில் குறைந்த ஆடைகள் அல்லது ஆடையின்றிப் படுக்கையைப் பகிர்ந்து கொள்பவர்களாக இந்தப் பெண்கள் அவருடைய சோதனைகளில் பங்கு பெற்றனர். சுசிலா அவருக்கு 'மசாஜ்' செய்து வந்தார். லீலாவதி, மனு, ஆபா, மீரா இவர்கள் அவருடன் படுக்கைச் சோதனைகளில் பங்கு பெற்றனர்.

1930-ஆம் ஆண்டு பிற்பகுதியும், 1940-ஆம் ஆண்டு பிற்பகுதியும் அவருக்கு அரசியல் ரீதியில் சோதனைக்காலங்கள். நாட்டுப் பிரிவினையை அவரால் தடுக்க இயலவில்லை. ஜின்னாவுடன் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில்தான் கிட்டதட்ட 36 ஆண்டுகளுக்குப் பின் 18-01-1936 மற்றும் 14-04-1938-ஆம் நாட்களில் விழிப்பு நிலையில் அவருக்கு விந்து வெளிப்படுகிறது. கலங்கிப் போய்விடுகிறார் காந்திஜி. 'விந்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி ஆற்றல் பெறுவதில் தோற்றுப்போன நான் அரசியல் களத்தில் எப்படி வெல்ல முடியும்?' என வேதனையுற்றார். "என் நிலை என்ன? இத்தகைய ஆசைகளுக்கு ஆட்பட்ட ஒருவன் அகிம்சையையும் சத்தியத்தையும் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த இயலும்" என அம்ரித்லால் நானாவதிக்கு எழுதுகிறார்.

தனது சோதனைகளைத் தீவிரப்படுத்துவது என்கிற முடிவுக்கு வந்த காந்தி, அதைத் தன் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்களுடன் 'ஹரிஜன்' இதழ் மூலம் பகிர்ந்து கொண்டார் (23-07-1938). முந்தைய சொதனைகளின் எல்லையை அகலப்படுத்துவது என்றும் அவர் முடிவு செய்து அறிவித்தார்.

இந்தச் சோதனைகள் தொடர்பான முணுமுணுப்புகள், கிசுகிசுக்கள், காந்திஜியின் அருகாமைக்காகத் தவமிருப்போரிடையே போட்டிகள், வதந்திகள் ஆகியவற்றிலிருந்து மீள 1939-ஆம் ஆண்டு இவற்றை அவர் மறுக்கவும் செய்தார். சுசிலா தனக்கு 'மருந்துக் குளியல்' மற்றும் 'மசாஜ்' மட்டுமே செய்வதாக அறிவித்தார். வேறு வகைச் சோதனைகள் நடைபெறவில்லை என்னும் பொருளில்.

பிரிவினை குறித்த பேச்சு வார்த்தைகளில் தோல்வியுற்ற காந்திஜி, 1946-ஆம் ஆண்டு இறுதியில் தனது உச்சகட்டச் சோதனைகளில் இறங்கினார். இப்போது அவரது சோதனைகளில் பங்கு பெற்றவர்கள் இருபது வயதுக்கும் குறைந்த மனுவும் ஆபாவும். இந்தச் சோதனையில் 'வெப்பம் உச்சமாக இருக்கும்' என்றார். மனு தன்னருகில் முற்றிலும் நிர்வாணமாக உறங்குவதாக பியாரே லாலுவுக்கு கடிதம் எழுதினார். ஒருவேளை இப்போதுதான் முதல்முறையாக முழு நிர்வாணத்துடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது போலும். 'சோதனையில் வரம்புகள் கடக்கப்படுவது' பற்றிய குறிப்பின் பொருள் இதுவாக இருக்கலாம்.

பேத்தி மனுவின் மீது அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. தனது சோதனையில் பங்கு பெறுவதற்கான முழுத் தகுதி தான் மட்டுமின்றி, பங்கு பெறுபவரும் இச்சைக்கு ஆட்படாதிருப்பது என்று கருதிய காந்திஜி அத்தகைய திறனுடையவராக 19 வயதுள்ள தன் பேத்தி மனுவை அவர் மதித்தார்.

இத்தகைய சோதனைகளில் சோதனையாளிகளின் விருப்பு குறித்த காந்திஜியின் கருத்து என்னவாக இருந்தது? அவர்களது உணர்வுகளைப் பற்றி காந்தி எந்த அளவு யோசித்தார்? தமது மருந்துச் சோதனைகளை 'அவுட் சோர்சிங்' செய்கிற பன்னாட்டு நிறுவனங்களைப் போல சோதனையாளிகளின் பிரச்சனை குறித்து அவரும் கவலை கொள்ளவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதிலளிப்பது சிக்கலே. விருப்பப்பூர்வமான இசைவு முக்கியம் என்றே அவர் கூறினார். அவருடைய உடலில் அருகாமைக்குப் பலரும் போட்டியிடவே செய்தனர், பியாரே லால் உட்பட மனுவைத் திருமணம் செய்ய விரும்பியவராக அவர் இருந்தபோதும் காந்திஜியின் அருகாமைக்கான அவரது ஆவலை ஒரு பால் வேட்கையுடன் ஒப்பிடத் தயங்க மாட்டார் கத்ரீன் டிட்ரிக்.

எனினும் இந்தச் சோதனைகளில் ஆபாவின் கணவர் கனுகாந்திக்கும் மனுவின் தந்தை ஜெய்சுக்லாலுக்கும் ஒப்புதலில்லாததைக் காந்திஜி பொருட்படுத்தவில்லை. ஜெயசுக்லால் இதை வெளிப்படையாக முன்வைத்த போது, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தவும் காந்திஜி தயங்கவில்லை.

இறுதிச் சோதனைகளின்போது காந்தியின் வயது 75-ஐத் தாண்டியிருந்தது. இந்தக் கிழவரிடம் இருபது வயதிற்கும் குறைவான பெண்கள் என்ன கவர்ச்சியைக் கண்டுவிட முடியும்? எந்த வகையில் இவர்கள் சோதனைக்குப் பொருத்தமானவர்களாக இருக்க முடியும்? இந்து மரபிலிருந்துதான் காந்திஜிக்கு இதற்கும் பதில் கிடைத்தது. தனது பிரம்மச்சர்யத்தின் மூலம், தான் இன்னும் பருவப் பெண்களைக் கிளர்ச்சியுறுத்த முடியும் என அவர் நம்பினார். ஆரோக்கியமான வாழ்முறையின் மூலமான உறுதியான உடற்கட்டு, தொடர்ந்த 'மசாஜ்' மூலமான வழுவழுப்பான சருமம், அகன்ற மார்பு, சராசரி அளவிலேனும் உள்ள ஆண்குறி ஆகியவற்றின் மூலம் எழுபது வயதிலும் கிளர்ச்சியூட்டும் சாத்தியம் மிக்கவராக காந்திஜி இருந்திருபார் என்பது கத்ரீன் டிட்ரிக்கின் கணிப்பு.

இரண்டு விஷயங்களை இங்கு குறிப்பிடுதல் அவசியம். தனது உடலையும், இச்சைகளையும் இந்த அளவிற்குத் திறந்த புத்தகமாக வைத்துக் கொண்டவர்கள் அதிகமில்லை. இந்தியாவில் யாருமே இல்லை எனலாம். இரண்டாவதாக அரசியல் களத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தனது பிரம்மச்சர்ய விரதத்தில் ஏற்பட்ட விலகல்களே காரணம் என நம்பி விரதப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்திய காந்திஜி, அதனால் அரசியல் களத்தில் செய்ய வேண்டிய பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. தனது இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால், 'ஜின்னாவை வழிக்குக்கொண்டு வந்துவிட முடியும்' என அவர் சொன்னதாக ஒரு பதிவு இருந்தபோதிலும் அரசியல் முயற்சிகளில் அவர் பின்வாங்கியதில்லை. விந்தைக் கட்டுப்படுத்தினால் விளைவுகள் மாறிவிடும் என அவர் வாளாவிருக்கவில்லை. புறச்சூழல் மற்றும் அரசியல் மாற்றங்களை விளைவிக்கும் ஆற்றல் மிக்கவராகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகவே அவரது பாலியற் சுய கட்டுப்பாட்டுச் சோதனைகள் அமைந்தன.

ஆனாலும் இறுதியில் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து நழுவியது. நாடு பிரிந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை கொன்று கொண்டனர். காந்திஜியின் எதிர்பார்ப்புகள் பலவும் தோல்வியுற்றன. 'அரசியல் தோல்விகளுக்கு அகநிலைப் பிறழ்வுகளே காரணம்' என்கிற அவரது 'லாஜிக்'படிப் பார்த்தால் இதன் பொருளென்ன? காந்திஜி தோற்றார், காமம் வென்றது என்பதா? (நன்றி-அ.மார்க்ஸ்)

இப்படி பல வழிகளில் காமத்தை நீக்க இவ்வுலகில் உள்ளோர் முயல்கின்றனர். சிலர் அதில் வெற்றிபெறுகின்றனர். பலர் அதில் தோல்வி அடைகின்றனர். வள்ளற்பிரானை பொறுத்த மட்டில் "இதில் அருவருப்புப் பால் உண்ணும் காலையே உள்ளது" (திருவருட்பா-3392) என்கிறார். தனது அன்னை மடியில் பால் அருந்தும் பருவத்திலேயே காம இச்சையின்பால் எனக்கு அருவருப்பு இருந்தது என்றால், அவரின் பிறவி ஒரு தெய்வப்பிறவி என்ற வகையில் அது சாத்தியம். நாமெல்லாம் போராடியே தீரவேண்டும். அதற்காக காந்திஜியின் போராட்டம், நடைமுறையில் அனைவருக்கும் சாத்தியமில்லாத போராட்டம். அது இரட்டை வழி பாதையாகும். நாம் ஒழுங்காக சென்றாலும் எதிரில் வருபவர் நம்மீது மோதிவிட்டால் இருவருக்கும் அழிவே. அதனால் காமத்தை ஒழிக்க காந்திஜி பயன்படுத்தியப் பாதை தவறனா பாதையாகும்.

காமத்தை ஒழிக்க நமது சிந்தனையை எந்நேரமும் இடைவிடாமல் இறைவனின் பால் செலுத்துவதே சிறந்த முறையான எளிதான மார்க்கம் ஆகும்.

                                                     - தி.ம.இராமலிங்கம்
 

7 comments:

  1. அழ்ந்த கருத்து

    ReplyDelete
    Replies
    1. திரு.சிவராமன் ஐயாவிற்கு நன்றி

      Delete
  2. உங்களுக்கு நிதி தேவையா? நீங்கள் நிதி தேடுகிறீர்களா? உங்கள் வணிகத்தை பெரிதாக்க நிதி தேடுகிறீர்களா? தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிக விரிவாக்கத்திற்கான நிதி பெறவும், எந்த அளவிலும் ஒரு புதிய வணிகத்தை அமைக்கவும் நாங்கள் உதவுகிறோம். 3% மலிவு வட்டி விகிதத்தில் நிதி பெறுங்கள், வணிகத்திற்கும் உங்கள் பில்களை அழிக்கவும் உங்களுக்கு இந்த நிதி தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் (Financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.