Showing posts with label "கிறுஸ்துவம்" - பிப்ரவரி -2016 T.M.RAMALINGAM VALLALAR TMR. Show all posts
Showing posts with label "கிறுஸ்துவம்" - பிப்ரவரி -2016 T.M.RAMALINGAM VALLALAR TMR. Show all posts

Friday, March 11, 2016

"கிறுஸ்துவம்" - பிப்ரவரி -2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "கிறுஸ்துவம்" - பிப்ரவரி -2016

FEBRUARY -2016

“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாய் இருக்கின்றன. அவையாவன;

விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரக ஆராதனை, பில்லி சூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்க பேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டங்கள் முதலானவைகளே.

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று முன்னே நான் சொன்னதுபோல இப்போதும் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.”  - கலாத்தியர் 5:19-21

பெறுதற்கரிய மானிட தேகத்தை பெற்றவர்களாகிய நாம் இந்த அரிய தேகத்தைக் கொண்டு மேற்காணும் பதினெட்டு வகையான பாவக் காரியங்களைச் செய்து வருகிறோம். இவைகளில் ஒன்றை நமது தேகம் செய்தால் கூட நம்மால் இறைவனின் ஆட்சியில் இருக்கமுடியாது என்கிறது விவிலியம். சுத்த சன்மார்க்கம் கூறும் ஒழுக்கமும் இதுவே.

மேற்காணும் கிரியைகளில் மிக முக்கியமாக விக்கிரக ஆராதனை மற்றும் கொலைகள் என்கிற இரண்டினை சுத்த சன்மார்க்கம் எதிர்க்கின்றது. விக்கிரக ஆராதனை இல்லை என்றால் இந்து மதமே இல்லை என்றாகிவிடும். இந்து மதத்தில் விக்கிரகங்கள் அந்த அளவிற்கு பல்கி பெருகிக்கொண்டே உள்ளது. புதிது புதிதாக தெய்வங்களையும் அதற்கான உருவச் சிலைகளையும் அதற்கென புதியப் பெயர்களையும் இட்டு சற்குரு என்றும் பெரியவர்கள் என்றும் தமக்குத் தாமே பெயரிட்டுக்கொண்டிருப்பவர்கள் இந்து மக்களை மேலும் கவர்ந்திழுக்கிறார்கள். புண்ணியம் செய்வது போல் பாவமே செய்கிறோம் என்று மக்களாகிய நமக்குத் தெரிவதில்லை. அந்த அளவிற்கு கவர்ச்சியான பக்தி நம்மை வீழ்த்திக்கொண்டிருக்கின்றது.

விக்கிரக ஆராதனையால் தீவிர மார்க்கத்தில் இருப்போர்க்கு சில சித்துக்கள் கிடைக்கக்கூடும். ஆனால் அவை இறைவனின் இராஜ்யத்திற்குள் நம்மை அண்ட விடாது. இந்த சித்து வேலைகளைத்தான் நாம் கவர்ச்சி என்கிறோம். இந்த கவர்ச்சியால்தான் மேற்காணும் மற்ற பதினேழுவகையான ஒழுக்கக் கேடுகளும் அதிவிரைவில் நமக்கு உண்டாகின்றன.

தற்போது இந்து மதம் மட்டுமின்றி மற்றுள்ள எல்லா மதங்களிலும் ஏதோ ஒரு வகையில் இந்த விக்கிரக ஆராதனை நுழைந்துவிட்டன. அவைகளை மக்களாகிய நாம் தவிர்க்க வேண்டும். இந்துமத சித்தர்களுக்கு விக்கிரக ஆராதனை ஆகாது. அதேபோல இந்துமதம் உட்பட எம்மதமும் பிடிக்காது. இப்படிப்பட்ட மக்களே இறைவனின் ஆட்சி அதிகாரத்துள் வாழமுடியும்.

அடுத்தது நாம் செய்யும் மிக முக்கிய கிரியை கொலை பாதகமாகும். மனிதர்களாகிய நாம் பிற மனிதர்களை விரோதத்தால் கொல்வது மற்றும் நமது உணவிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிற உயிரினங்களைக் கொல்வது இவைகள் எல்லாம் கொலை பாதகமாகும். தானே கொலை செய்வதும், தனக்காக பிறரரைக் கொலை செய்ய தூண்டுவதும்  கொலை பாதகமே. விரோதத்தால் நாம் நம்மைப் போன்றவர்களை கொல்வதைக் காட்டிலும் நமது உணவிற்காக மற்ற உயிர்களைக் கொல்வதே மிக அதிகம்.

கடல் / நீர் சார் உயிரினங்களும், பறவைகளும், நிலஞ்சார் உயிரினங்களும் நமது உணவிற்காக கொலையுறுகின்றன. காட்டு விலங்கினங்கள்தான் தமது உணவிற்காக மற்ற விலங்கினங்களை கொலை செய்யும். அதனைக்கூட நாம் பழக்கப்படுத்தினால் சுத்த சைவ விலங்கினங்களாக மாற்ற முடியும். அவ்வாறிருக்க நாட்டில் வாழும் நாமும் நமது உணவிற்காக விலங்கினங்களைக் கொல்வது அறிவுடமையாகாது. ஆகையால் நாம் கொலை செய்யாமல் இருக்க பழக்கப்படுத்திக் கொள்வோம். அப்போதுதான் நாம் இறைவனை வணங்குவதில் ஒரு பொருள் இருக்கும், அருள் இருக்கும், கருணை இருக்கும்.

உயிர்களை கொல்லாதிருப்பதே இறை வழிபாடாகும். கொல்லாதவனே இறை இராஜ்ஜியத்திற்கு ஏற்றவன் ஆவான் என்கிற விவிலிய வாக்கியங்களை சத்திய வார்த்தையாக நாம் ஏற்போம். சுத்த சன்மார்க்கப் பாதையில் வாழ்வோம்.