Showing posts with label அடிப்பவன் கடவுள். Show all posts
Showing posts with label அடிப்பவன் கடவுள். Show all posts

Tuesday, December 6, 2016

அடிப்பவன் கடவுள்

அடிப்பவன் கடவுள்

கடவுள் ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு மனிதரிடமும், ஒவ்வொரு பொருள்களிலும் நிறைந்து இருப்பதாக நமது முன்னோர்கள் கூறுவார்கள். சுத்த சன்மார்க்கமும் அதனையே கூறுகின்றது. ஆனாலும் நாம் உலகிடையே அடிபடும்போது அக்கருத்து நம்மைவிட்டு நீங்கிவிடுதலையும் காணமுடிகின்றது.

கடவுள் ஒவ்வொரு மனிதரிடமும் இருப்பதாகக் கருதி தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது, பலம் வாய்ந்த மனிதன் ஒருவன் வந்து நம்மை தள்ளுவதால், நாம் நடைபாதையில் கீழே விழுகிறோம். உடனே இறுகிய முஷ்டியுடன் நாம் விரைவில் எழுந்து நிற்கின்றோம். கோபத்தினால் இரத்தம் தலைக்குப் பாய்கின்றது. உடனே நாம் பைத்தியகாரனாகிவிடுகிறோம். எல்லா நீதிகளையும் மறந்துவிடுகின்றோம். கடவுளை காண்பதற்கு பதில் அங்கு அவர் நமக்கு எதிரியாகத் தென்படுகின்றார். நாம் முடிந்தால் ஓங்கி ஒரு அறை கூட அறைந்துவிடுகிறோம். கடவுளை எங்கும் காணவேண்டும் என்ற நீதி நம்மை விட்டு வழுவிவிடுகின்றது.  கடவுளையே எதிரியாக நினைத்து அடித்தாலும் கூட, அது ஒருவகையில் வரவேற்கத்தக்கது. ஆனால் நாம் அந்நிலையில் கடவுளையே மறந்துவிடுகின்றோம் என்பதே எதார்த்தம்.

எல்லா உயிர்களும், எல்லா மனிதர்களும், எல்லா பொருட்களும் இறைவனே என்ற அனுபவம் ஒருவருக்கு எப்போது கிடைக்குமென்றால், தன்னை முழுவதும் இறைவனிடம் ஒப்படைக்கும் அன்பர்களுக்குத்தான் அவ்வனுபவம் கிடைக்கும். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற திட நம்பிக்கையை அவன் பெற்றிருப்பான்.

இந்த பெரும் அனுபவத்தைப் பற்றி வள்ளற்பெருமானே ஒரு கதையின் மூலம் விளக்கியிருப்பார்.

தெருவோரமாக ஒரு நிர்வான சந்நியாசி நடந்து செல்கின்றான், அப்போது அவனைப்பார்த்த ஒருவன் அச்சந்நியாசியிடம் மரியாதைக்கொண்டு அவனுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்து அவனது பசிக்கு உதவினான்.
அச்சாமியாரைப்பார்த்த இன்னொருவன், பெண்கள் நடமாடும் இத்தெருவில் நிர்வாணமாய்ப் போகின்றானே என்று கோபித்து அவனைக் கல்லால் அடித்தான்..

           இந்த இருநிகழ்ச்சியினையும் பார்த்த மூன்றாமவன், அந்த நிர்வாணசாமியாரையும் பழம் கொடுத்தவனையும், கல்லால் அடித்தவனையும் அழைத்துக்கொண்டு நீதிபதியிடம் சென்றான்.

         நீதிபதியிடம் சென்று, அந்த நிர்வானச் சாமியாருக்கு இப்புண்ணியவான் பழம் கொடுத்தான், இப்பாவி அவரைக் கல்லால் அடித்தான், என்றான் மூன்றாமவன்.

        நீதிபதி நிர்வானச் சாமியாரை நோக்கி, உம்மை யார் அடித்தது? என்று கேட்க, 'வாழைப்பழம் கொடுத்தவன் அடித்தான்' என்று கூறினான்.

        அதற்கு நீதிபதி யார் வாழைப்பழம் கொடுத்தது? என்று கேட்க, 'கல்லால் அடித்தவன் வாழைப்பழம் கொடுத்தான்', என்று நிர்வானச் சாமியார் கூறினார்.

         அதற்கு நீதிபதி யார் கல்லால் அடித்தது? என்று கேட்க, 'எங்களை உங்களிடம் இட்டுக்கொண்டுவந்தவன் கல்லால் அடித்தான்' என்று கூறினார்.

         இதனை கேட்ட நீதிபதி தீர்ப்பு கூறமுடியாமல் மயங்கியப்பின் ஒரு முடிவுக்கு வந்தார், 'இவர் மேலானஞானத்தை உடைய ஞானி' என ஒருவாறு உணர்ந்து, அடித்தவனுக்கு சிறைதண்டனை அளித்தார். (பிரபந்தத்திரட்டு – அ.திருநாவுக்கரசு பதிப்பு – பக்கம்-93)

வள்ளலார் சொன்ன இக்கதையிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவெனில், பேத உணர்வு நம்மிடமிருந்து நீங்க வேண்டும் என்பதே.  “அடித்தது போதும்… அணைத்திடல் வேண்டும்” என்று இறைவனிடம் வள்ளற்பெருமான் வேண்டுவார். எனவே நம்மை அடிப்பதும் இறைவனே...! நம்மை அணைப்பதும் இறைவனே…!  நம்மை அடிக்கும் மனிதனும் இறைவனே…! நம்மை அணைக்கும் மனிதனும் இறைவனே…!

தன்னளவில் பாதிப்பு ஏற்படும்போது மட்டுமே நாம் இந்நீதியினை கடைபிடிக்க வேண்டும். பிறர் பாதிக்கப்படும்போது, அது இறைச்செயல் என நாம் சும்மா இருப்பது தகாது. பரோபகாரத்தை மறந்துவிடக்கூடாது.

நாமெல்லாம் சுத்த சன்மார்க்கர்களாய் சுத்த சன்மார்க்க நீதியுடன் வாழ்வோம். இந்நீதியினை கடைபிடிப்பது மிகவும் கடினம்தான். முயலுவோம்… முடியும்…! ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டும் வல்லமை பெறுவோம். வாழ்க சுத்த சன்மார்க்க நீதி.- TMR