Showing posts with label இராமலிங்கா அபயம். Show all posts
Showing posts with label இராமலிங்கா அபயம். Show all posts

Monday, November 25, 2013

இராமலிங்கா அபயம்

 இராமலிங்கா அபயம்

வணக்கம்!

அருளாளர் திரு.மு.பாலசுப்ரமணியன் என்கிற 'முபா' ஐயா (எண்.98, நேரு நகர், ஆழ்வார் திருநகர்) அவர்களின் கட்டளைப்படியும் திருவருள் சம்மதத்தாலும் மேலும் ஒரு சித்திரக்கவி இங்கே பொலிந்துள்ளது.

கீழ்கண்ட கவியினை, வரையப்பட்டுள்ள குத்துவிளக்கின் கீழிருந்து, இடமிருந்து வலமாக பிறகு வலமிருந்து இடமாக முறையே மேல் நோக்கி ஒவ்வொரு எழுத்தாக பொருத்த வேண்டும். இறுதியில் அக்குத்துவிளக்கின் நேர் மையத்தில் நம்பெருமானாரின் பெயர் தோன்றும், அதாவது "இராமலிங்கா அபயம்" என்கிற அபய வாக்கியம் தோன்றுவதைக் காணலாம்.

'அபயம்' என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. 'பயம்' என்பதன் எதிர்பொருள் 'அபயம்' - அச்சமற்ற என்று பொருள்படும். மற்றொரு பொருள் 'அடைக்கலம்' / 'சரணம்' / தஞ்சம் / அருள் போன்ற பொருளையும் 'அபயம்' என்ற வாக்கியம் குறித்து நிற்கும். இங்கு அபயம் என்பது அடைக்கலம் என்கிற பொருளைச் சுட்டி வந்துள்ளது.

இனி சித்திரக்கவியினைப் பார்ப்போம்....


அபயம்
(கலிவிருத்தம்)


"இனி யும்இறப்பனோ அயன் வல்லனோ


பனி யும்அல்லாகாதோ பொங்கு பொலி

தனி ஒளிமய தயா குணதாரா
கனி ந்து கனி இனிக்க..."


குத்துவிளக்கு பந்தம்

(படத்தைக் காண்க)
 

இதன் பொருளாவது,

இதனைப் படிக்கும்போது இறுதி அடியினை முதலில் படித்துவிட்டு பிறகு மேலிருந்து படிக்க நன்கு புரியும்படி அமைந்துள்ளது.

கனிந்து கனி இனிக்க - தற்போது எம்நிலை காயாகவே உள்ளது, அதாவது சாதனையில் உள்ளது. சாதனைகள் முற்றி இறுதியில் அது கனியாகி இனிக்க, சாதனைகளின் பலனை பெறும்போது,

இனியும் இறப்பனோ? - எத்தனைக்கோடி ஜென்மம் எடுத்தேனோ, அத்தனைக்கோடி இறப்பையும் யாம் கண்டோம். அதுபோல் இப்பிறவியிலும் இறப்பேனோ? சாகாக்கல்வி எனும் சாதனையின் பலனால் இப்பிறவியில் இறக்கமாட்டேன்.

அயன் வல்லனோ? இப்பிறவியே எமக்கு இறுதியானதால், இனி ஒரு பிறப்பை எமக்குக் கொடுக்கும் சக்தி அந்த பிரம்மனுக்கு உள்ளதா? கிடையாது.

பனியும் அல்லாகாதோ? 'அல்' என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் உதித்துவிட்டால் பனி மறைந்துவிடும். இப்படி பனிபோன்ற எம்தேகம், காலத்தால் இனி இறக்காமல் சூரியன் போன்றே என்றும் காலம் கடந்து ஒளிராதோ? ஒளிரும். (சிறு ஒளி, பேரொளியினை அடைதல்)

பொங்கு பொலி தனி ஒளிமய தயா குணதாரா - பொங்கி வழியும் அழகையுடைய தனித்தன்மையான ஒளிமயமான கருணை குணத்தை தருகின்ற வள்ளலே.

மேற்கண்ட பொருள் - காலத்தாலும், படிப்பவர்களின் தரத்திற்கேற்பவும் மாறுபடக்கூடியது. இறுதியானது அல்ல.

இப்பாடலின் ஆழ்பொருள் - நம்மை, நம்பெருமானாரிடம் ஒப்படைத்துவிடக்கூடியதாகவும், "இராமலிங்கா அபயம்" என நம்மை அவனது திருவடிக்கே அடிமையாக்கும் படியாகவும் உள்ளது என்பது உண்மை.



எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்

புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்

சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற

புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்
அபயம் அபயம் அபயம்...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி