Showing posts with label குழந்தை பெறுவதை நிறுத்து. Show all posts
Showing posts with label குழந்தை பெறுவதை நிறுத்து. Show all posts

Sunday, September 22, 2024

குழந்தை பெறுவதை நிறுத்து

குழந்தை பெறுவதை நிறுத்து

RAMALINGAM T M
பெங்களூரில் முளைத்திருக்கும் " குழந்தை பெறுவதை நிறுத்து " என்ற இயக்கம் எதிர்காலத்திற்கு வரமா அல்லது சாபமா ?

++++++++++++++++++++++++++++++++++
பெங்களூரில் முளைத்திருக்கும் " குழந்தை பெறுவதை நிறுத்து " என்ற இயக்கம் எதிர்காலத்திற்கு வரமா அல்லது சாபமா ?
கண்டிப்பாக சாபம் இல்லை. அதுவும் ஒரு வாழ்க்கை முறை.
ரஃபேல் சாமுவேல் என்கிற இளைஞர் ஆரம்பித்த இயக்கம் தான் "Stop Having Babies". இவர் ஒரு ஆன்டிநேட்டலிஸ்ட். அதாவது குழந்தை பெற்று கொள்வதற்கு எதிரானவர்.
ரஃபேல், சில வருடங்களுக்கு முன் தன் பெற்றோருக்கு எதிராக ஒரு வினோதமான வழக்கு தொடர்ந்தார். அவருடைய சம்மதத்தை பெறாமல் அவரை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது தவறு என்றும், அதற்கு ஈடாக தன் வாழ்நாளுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பெற்றோரே பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவரது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவரது பெற்றோர் இருவரும் வழக்கறிஞர்கள். அவர்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களாக தெரியவில்லை. அவரது தாயார், "எனது மகன் சுய சிந்தனை கொண்டவனாக வளர்ந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் அவனுக்கு இரக்கம் காட்ட மாட்டேன். இந்த வழக்கை கிழி கிழி என கிழித்து விடுவேன்" என்று கூறி இருக்கிறார்.
கேட்ட மாத்திரத்தில் ஆன்டிநேட்டலிஸ்ட்கள் இயற்கைக்கு புறம்பான மனித நேயமற்ற வெறுப்பு மிகுந்தவர்கள் என்று தோன்றுகிறது அல்லவா? அவர்கள் நிலைப்பாட்டுக்கான காரணங்களை கேட்டால் அந்த எண்ணம் மாறி விடும்.
வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு சுகமானது அல்ல. ஒவ்வொரு படியிலும் போட்டி, பொறாமை, போராட்டம், வேலைவாய்ப்பு திண்டாட்டம், தோல்வி, ஏமாற்றம், சமூக கட்டுப்பாடு, நோய், இயலாமை என்று கசப்பான அனுபவங்கள் நிறைந்தது. வாழ்க்கையை பற்றிய கசப்பான உண்மைகளை அனுபவங்களை அறிந்திருந்தும் அவற்றை ஏன் குழந்தைகள் மீது (அதுவும் தன்னுடைய குழந்தைகள் மீது) திணிக்க வேண்டும்?
பெற்றோராக நம் குழந்தைகளின் நன்மைக்காக எதை வேண்டுமானாலும் செய்வோமேயானால், அவர்களை ஏன் நாமே இந்த இன்னல்களுக்கு உட்படுத்த வேண்டும்?

பெற்றோருடைய அன்பு நிபந்தனை இல்லாதது, சுயநலம் இல்லாதது என்றாலும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கான காரணம் அனைத்தும் சுயநலமானது

என் குலம் தழைக்க வேண்டும்

என் வியாபாரத்தை எனக்கு பிறகு பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும்

என்னை வயதான பிறகு பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும்

சின்ன குழந்தைகள் செய்யும் குறும்பு முகபாவனைகள் அழகாக இருக்கும். அதை நான் பார்த்து ரசிக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் கொஞ்சி விளையாட வேண்டும்

குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் ஊர் என்னை என்ன சொல்லும்? அந்த அவமானத்தை நான் தாங்குவதை விட, வாழ்க்கை வீசும் இன்னல்களை வாழ்நாள் முழுவதும் என் குழந்தை எதிர் கொள்ளட்டும் என்று எண்ணம்

நாம் வாழும் உலகத்தை சிறந்ததாக ஆக்க, நாம் எதிர்நோக்கிய பிரச்சினைகளை களைய, பூமியை பசுமையாக்க பெரிதாக நாம் முயற்சி செய்யவில்லை. இன்னமும், பசி பட்டினி தண்ணீர் பற்றாக்குறை வன்முறை வன்புணர்வு எல்லாமும் ஜம்மென இருக்கிறது.
ரஃபேல் ஆரம்பித்துள்ள Stop Having Babies இயக்கத்தின் முக்கியமான நோக்கங்கள் -
கண்டிப்பாக ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அப்படி கட்டாயப்படுத்தவும் கூடாது. நம்மை பெற்றுவிட்டதாலேயே நாம் நம் பெற்றோருக்கு கடமை பட்டவர்கள் அல்லர். மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்கிற அழுத்தத்தின் பேரில் குழந்தைகளைப் பெற்று அவர்களை வதைக்க வேண்டாம் என்பதே நோக்கம்.
==================================
வள்ளற்பெருமானின் இறவாவரத்தை பெறுவதைவிட மிகச்சுலபமானது, ஒரு ஆன்மாவை இப்பூமியில் பிறக்காமல் செய்வது சுலபம், அதுவே புண்ணியம். அதுவே அனைத்து பிறவா ஆன்மாவிற்கும் நாம் அளிக்கும் வரம். - TMR.
===================================