Showing posts with label புத்தம் T.M.RAMALINGAM VALLALAR TMR தி.ம.இராமலிங்கம். Show all posts
Showing posts with label புத்தம் T.M.RAMALINGAM VALLALAR TMR தி.ம.இராமலிங்கம். Show all posts

Monday, April 11, 2016

புத்தம்



 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த புத்தம்


புத்தர் தமது எண்பது வயது வாக்கில் கி.மு.483-ல் மரணம் அடைந்தவர். புத்தர் நூலேதும் எழுதவில்லை. பெளத்த நூல்கள் எதுவும் அவர் வாழ்நாளில் எழுதப்படவில்லை. எனினும் மிகப் பரந்து விரிந்த அளவில் பழமையான பெளத்த நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அதில் மிகப்பழமையான நூல் "பிடகம்" (கூடை) என்பது. இதில் புத்தரின் உரைகள், பொன்மொழிகள், அவர் குறித்த கவிதைகள் மற்றும் கதைகள் ஒழுக்க முறைமைகள் ஆகியவை உள்ளன. இப்படிப்பட்ட பிடகங்கள் மூன்று உள்ளன. அவை திரிபிடகங்கள் என்று அழைக்கப்படும்.

வினயபிடகம், சுத்தபிடகம், அபிதம்ம பிடகம் என்பனவே திரிபிடகங்களாகும். புத்தரின் போதனைகள் ஆர்ய சத்யங்கள் எனப்படும். நான்கு புனித உண்மைகளாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இந்த ஆர்ய சத்யங்கள், பிரதிஷ்ய சமுத்பாதங்கள் எனப்படும். உலக உற்பத்திக் கருத்தோடு தொடர்புடையவை எனக் காட்டப்படுகின்றன. அத்தோடு உலக வாழ்வில் துக்கத்துக்கான பன்னிரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த சங்கிலித் தொடர்ச்சியான காரணங்கள் துவாதச நிதானங்கள் என்றழைக்கப்படுகின்றன. நிர்வாணம் எனப்படும் விடுதலை பற்றியும் பேசப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அநித்யவாதாம் (அநித்யக் கொள்கை), அனாத்மவாதம் (ஆன்ம மறுப்புக் கொள்கை) ஆகிய புரட்சிகரமான கருத்துகளும் இந்நூல்களில் உள்ளன. நான்கு புனித உண்மைகள் (ஆர்ய சத்யங்கள்) வருமாறு, 1. எல்லாமே துக்கமயமானது. 2. துக்கத்திற்குக் காரணம் உண்டு. 3. துக்கத்திற்கு நிவாரணம் உண்டு. 4. நிவாரணத்திற்கு வழி உண்டு. 

"நான் சாந்தி நிலையை அடைந்துவிட்டேன். நிர்வாணத்தை அடைந்துவிட்டேன்". என்று கூறிய புத்தர், "சத்தியத்தின் சாம்ராஜ்யத்தை நிறுவ நான் காசிக்குச் செல்கிறேன். உலகில் சூழ்ந்துள்ள இருளின் நடுவே நித்தியத்துவத்தை நான் பறைசாற்றுவேன்" என்று கூறினார். அதன்படி இந்த ஆர்ய சத்யங்களையே, வாரணாசியில் (காசி) புத்தர் வழங்கிய புகழ்வாய்ந்த பேருரையாக அமைந்தது.

"பிட்சுக்களே! துக்கத்தைப் பற்றிய புனிதமிக்க உண்மை இதுதான். பிறப்பு துக்கமானது. அன்பிலார் தம்முடன் உறவு துக்கமானது. அன்புடையாரிடமிருந்து பிரிவு துக்கமயமானது. விரும்புவதைப் பெற முடியாதது துக்கமானது. சுருக்கிச் சொல்வதானால் ஐந்து வகையான பற்றுக்கள் துக்க மயமானவை."

"பிட்சுக்களே! துக்க காரணத்தைப் பற்றிய புனிதமிக்க உண்மை இதுதான்; வாழ்வதற்கான வேட்கையே அது. அது பிறவிதோறும் தொடர்கிறது. காமமும் ஆசையும் உடன் தொடர்கின்றன. அது இன்பங்களுக்கான ஆசை வாழ்வதற்கான ஆசை. அதிகாரத்திற்கான ஆசை."

"பிட்சுக்களே! துக்க நிவாரணத்திற்கான புனித உண்மை இதுவே. ஆசையை முற்றிலும் ஒழிப்பது. அதைப் போக விடுவது அதிலிருந்து விலகிக்கொள்வது. அதற்கு இடங்கொடாமை ஆகியவையே."

"பிட்சுக்களே! துக்க நிவாரணத்திற்கான வழி இதுவே! நன்னம்பிக்கை, நல்லுறுதி, நல்வாக்கு, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்சிந்தனை மற்றும் நற்தியானம் ஆகிய அஷ்டாங்க மார்க்கமே அது."

மார்க்ஸ் கூறுகிறார்..., "சமூக முழுமைக்கும் ஆர்ய சத்தியத்தை முறைபடுத்த முடியாது. எனவே பபஜ்ஜம் மற்றும் உபசம்வாதம் ஆகிய கட்டளைகளைக் கடைபிடியுங்கள். அதாவது சமூகத்தை விட்டு வெளியேறி பிட்சுக்களின் சங்கத்தில் சேருங்கள் என்று மக்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்."

அடிப்படையில் இச்சங்கங்களில் தனியுடமை இல்லை. சமத்துவமும் ஜனநாயகமும் அங்கே ஒன்றாய் நிலவின. பழைய இனக்குழுச் சமூகத்தின் எளிமையான ஒழுக்க முறையைப் பாதுகாத்து வளர்க்க இத்தகைய சங்களால்தான் முடியும். புத்தர் உண்மையில் இத்தகைய நிலைக்காகவே வாதாடினார். வர்க்க சமூகத்தின் மடியில், வர்க்க மற்ற சமூகமாக உருவாயிற்று. அதுவே இதயமில்லாத இந்த உலகில் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலையில் ஆன்மாவாகவும் ஆக முடிந்தது. அச்சங்கத்தில் தனியொருவனுக்கே சொந்தம் என்று எதுவுமில்லை, சொந்தமில்லாது என்றும் எதுவுமில்லை.