வள்ளற்பெருமானின் மாஹா மந்திரம் எந்நூலில் யாரால் முதலில் வெளியிடப்பட்டது?
அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம்…
திரு.ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்களால்தான் 1932-ஆம் ஆண்டு வெளிவந்த திருவருட்பாப் பதிப்பில் மஹாபதேசம் என்ற பகுதியில் மஹா மந்திரம் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது என்று நாம் இதுகாரும் கருதிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தவறு.
வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களால் 1924-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளிவந்த திருவருட்பாவில் வள்ளற்பெருமானின் மஹா மந்திரம் வெளியிடப்பட்டுவிட்டது. மேலும் மஹாபதேசத்தின் சில முக்கிய பகுதிகள் அதாவது சன்மார்க்கக் கொடியின் விளக்கங்கள் முதற்கொண்டு “திருநெறிக் குறிப்புகள்” என்ற பகுதியில் பக்கம் 669-670 - ல் வெளியிடப்பட்டுவிட்டது.
1923-ஆம் ஆண்டு ச.மு.க. அவர்கள் தனது “பிரபந்தத்திரட்டு” நூலில் வள்ளற்பெருமானின் சரித்திரக் குறிப்புகளை எழுதி முடித்துவிட்டு அதன் இறுதியில் “இனி அச்சிட வேண்டியவை: வள்ளலார் பிரசங்கித்த காலங்களில் அன்பர்கள் எழுதிவைத்த பற்பல அருமையான குறிப்புகள்.” (பக்கம்-137 - பிரபந்தத்திரட்டு - திரு.அ.திருநாவுக்கரசு பதிப்பு) என்று குறிப்பிட்டதைத்தான் 1924-ஆம் ஆண்டு தாம் பதிப்பித்த திருவருட்பாவில் ”திருநெறிக் குறிப்புகள்” என்று வெளிகொண்டு வந்தார்.
எனவே மஹா மந்திரத்தை முதன் முதலில் இவ்வுலகில் வெளியிட்டவர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களே ஆவர் என்பது சன்மார்க்க உலகிற்கு நாம் எடுத்துரைக்கும் வரலாற்று உண்மையாகும். நன்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி: திரு.சாது ஹரி ஐயா.
தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com





