Showing posts with label சரியை. Show all posts
Showing posts with label சரியை. Show all posts

Saturday, September 12, 2026

சரியை, கிரியை, யோகம், ஞானம் வேண்டாம்:

சரியை, கிரியை, யோகம், ஞானம் வேண்டாம்:


அன்பு சகோதர சகோதரிகளே! வணக்கம்

இன்றைய உலகில் ஈரான் அமெரிக்கா போர் நடைபெறுவதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் இவ்வுலக நாடுகளில் பெட்ரோல் டீசல், எரிவாயு கிடைக்காமல் மக்களால் வசதியாக வாழ முடியவில்லை. நீங்கள் பல கோடி செலவழித்து சொகுசு கார் வாங்கினாலும், அந்தக்காரில் செல்வதற்கு மிகச் சாதாரணமான பெட்ரோல் தேவை. பெட்ரோல் இல்லாமல், உங்களது சொகுசு கார் ஒரு செண்டிமீட்டர்கூட நகராது.

பெட்ரோல் இல்லாது, நீங்கள் வாங்கிக் குவிக்கும் அனைத்து வாகனங்களும் வெறும் அலங்கார பொம்மைகளாகவே இருக்கும்.

இங்கு நமது வாழ்க்கையினை செம்மையாக வழிநடத்த ஜீவகாருண்யம் முக்கியமாக வேண்டும். ஜீவகாருண்யம் என்பது காரில் பயன்படும் பெட்ரோலைப் போன்றது. அப்படிப்பட்ட ஜீவகாருண்யம் இல்லாமல், இந்த உலகில் வாழும் மக்கள் யாவரும் வெறும் அழகு பொம்மைகளாகவே வலம் வருகின்றனர்.

ஜீவகாருண்யம் இல்லாமல், சரியை, கிரியை, யோகம், ஞானம் பெற்றவர்களும், கடவுள் அருளுக்கு சிறிதும் பாத்திரமாகமாட்டார்கள்.

புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடல், புண்ணிய தலங்களில் வசித்தல், புண்ணிய மூர்த்திகளை தரிசித்தல், தோத்திரம் செய்தல், ஜெபம் செய்தல், விரதம் இருத்தல், யாகம் செய்தல், பூஜை செய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற சமுசாரிகளும், விரதிகளும், பக்தர்களும், ரிஷிகளும்,

உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச் சார்புகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி, மனோலயஞ் செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும்,

அளவு கடந்த சித்தி இன்பங்களைப் பெற்ற சித்தர்களும், எது நிலையற்றது, எது நிலையானது என்று அறிந்து எல்லாப் பற்றுகளையும் துறந்து பிரம்ம அனுபவத்தைப் பெற்ற ஞானிகளும்,

ஜீவகாருண்யம் செய்யாமல், எவ்வளவு பெரிய ஆன்மீக செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் யாவரும் மோட்சம் என்னும் மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறி, அவ்வீட்டிற்கு அருகில் காத்திருந்து, அவ்வீட்டிற்குள் புக முடியாமல், மீண்டும் இவ்வுலகிற்கே திரும்புவார்கள்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டில் திறவுகோள். இந்த திறவுகோல் இருந்தால்தான், மோட்ச வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று இன்பத்தை அடைவார்கள் என்பதை உண்மையாக அறிய வேண்டும்.

எனவே, அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளில் சிக்குண்டு மாள்வதை விடுத்து, ஜீவகாருண்யம்  என்னும் கடவுள் வழிபாட்டால் நாம் பெறுவதுதான் இன்ப வாழ்வாகும்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ஜீவகாருண்யத்தை பின்பற்றாத மக்களுக்கு அறிவு விளங்கவில்லை என்று நாசூக்காக சொல்கிறார் வள்ளலார்.

நாமும் இந்நேரத்தில் உலக மக்களுக்கு எல்லாம், திருவிளங்க சிவயோக சித்தி எல்லாம் விளங்க, சிவஞான நிலை விளங்க சிவா அனுபவம் விளங்க, பூரண அறிவு விளங்கவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வோம்.

 ஆக, நாம் அனைவரும் தயவுடன் இருப்போம் மக்களேநன்றி

 அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

--T.M.RAMALINGAM - CUDDALORE * +91 9445545475