சாதிய உணவகங்கள்:
இந்தியா முழுதும் உள்ள சில உணவங்கள் சாதியின் பெயரில் இயங்குவது நாம் அறிந்ததே. ஐங்கார் பேக்கரி, நாடார் மெஸ், நாயுடு மெஸ், ரெட்டியார் மெஸ் செட்டிநாடு போன்றவைகளை தமிழகத்தில் பரவலாகப் பார்க்கலாம். நான் வசிக்கும் கடலூர் மாநகரிலும் அருகில் இருக்கும் புதுச்சேரியிலும் ரெட்டியார் மெஸ்-இல் உணவருந்தியுள்ளேன். சுவை அவ்வளவாக இருக்காது. உடம்பிற்கு கேடு விளையாமல் வீட்டு சாப்பாடு போன்று இருக்கும். ஆனால் அனைத்து ரெட்டியார் மெஸ்-சும் சைவம் கிடையாது. என்னைப் போன்று தாவர உணவாளர்கள் சைவமா- அசைவமா என கவனித்து உள்ளே செல்வது நல்லது.
என்னதான் சாதியின் பெயரில் உணவகங்கள் நடந்தாலும், அங்கு உணவை சமைப்பவர்கள் அனைத்து சாதியினரும் இருக்கவே வாய்ப்புள்ளது. எனவே இந்த சாதிக்கு இன்ன ருசி இருக்கும் என எதிர் பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். எனினும் சில சாதியினர் நடத்தும் உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட ருசியினை தொடர்ந்து மக்களுக்கு கொடுப்பதில் நீண்ட காலமாக வழக்கத்தில் வைத்துள்ளனர்.
இங்கு படத்தில் இருக்கும் கர்நாடகாவில் உள்ள பிராமின் ரெஃப்ரஸ்மெண்ட்ஸ் என்கின்ற இப்படத்தை ஒரு முகநூல் பதிவிலிருந்து எடுத்தது. கர்னாடகாவிலும் ஆந்திராவிலும் பிராமினர்கள் நடத்தும் மெஸ்கள் நிறைய காணலாம். ஆனால் தமிழகத்தில் திராவிட மாடல் நீண்ட காலமாக அரசாட்சியில் இருப்பதால் பிராமின்ஸ் சாதியினர் வெளிப்படையாக இவ்வாறு உணவகங்கள் நடத்துவது இல்லை என்றே தோன்றுகின்றது. ஏதோ ஒரு சில நகரங்களில் இருக்கவும் கூடும். அப்படி உங்கள் ஏரியாவில் இருந்தால் கமெண்ட்டில் தெரிவிக்கவும். ஐங்கார் பேக்கரி என்ற அளவில் தமிழகத்தில் முடங்கி விடுகின்றார்கள். பிராமனாள் சமையல் ருசியை தமிழகர்கள் அறியாத வண்ணம் முடக்கிவிட்டார்களே…. என்ன கொடுமையடா இது…!
இவ்வாறு சாதியை முன்னிலைப் படுத்தி உணவகங்கள் நடத்துவது சரியா? தவறா? என்பதில் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும். என்னைக் கேட்டால், தவறு என்றுதான் சொல்வேன். கடலூரில் நான் வசிக்கும் தெரிவிற்கும் சங்கர நாயுடுத் தெரு என்றுதான் பெயர். இத்தெருவில் பாதி தெருவு முழுதும் இரு ஓரங்களிலும் ஆட்டுக் கறிக் கடைகள், மீன் கடைகள் சட்ட விரோதமாக (காவல் நிலையம் அருகில் இருந்தும்) இயங்கி வருகின்றன. நாயுடு என்ற சாதிப் பெயரில் உள்ள இந்தத் தெரு சுத்தபத்தமாக இல்லையே!! நாற்றத்துடன் நாயுடுத் தெருவில் போக்குவரத்து இயங்குவது அந்த சாதிக்கு இழுக்காகாதோ? அல்லது அதுதான் பெருமையோ? என எண்ணத் தோன்றுகின்றது.
இன்னும் சில திருமண மண்டபங்கள் சாதியின் பெயராலே இயங்குவதும் நாம் காண்கின்றோம். கடலூரில் வன்னியர் திருமண மண்டபம், ரெட்டியார் திருமண மண்டபம் போன்றவைகள் ஃபேமஸ். இங்கு எங்கள் உறவினர்கள் திருமணமும் நடைபெற்றுள்ளது.
உணவங்கங்கள் நடத்துவது, திருமண மண்டபங்கள் நடத்துவது இவை எல்லாமே சமுதாயத் தொண்டுகள்தான். ஆனால் சாதியின் பெயரில் நடப்பதுதான் வருந்தத்தக்கது. ”சாதியின் பெயரில் நடந்தால் உனக்கேன் வலிக்குது? நீ வேண்டுமானால் உன் சாதிப்பெயரில் நடத்திக்கொள்…” என்கிற கருத்தைத் தவிர, உங்களது மாற்று கருத்துகள் வரவேற்கப் படுகின்றன. நன்றி.
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்…
--TMR
