ஹிம்சை உணவு மிருகங்களுக்கும் அனுமதி இல்லை
இங்கே கூடியிருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் நலம், உங்கள் நலம் அறிய ஆவல். அனைவரும் நலமாக இருக்கிறீர்களா?
முதன் முதலில் தமிழில் உரைநடையை கொண்டுவந்தவர் வள்ளலார்தான். வள்ளலாருக்கு முன்பு செய்யுள் வடிவில்தான் தமிழ் வளர்ந்து வந்தது. தமிழில் உரைநடை வடிவை வள்ளலார் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், தனக்குத் தானே கேள்விகளை கேட்டுக்கொண்டு, அதற்கு தானே பதிலையும் உரைநடை வடிவில் முதலில் கொடுத்தவர் வள்ளலார்தான்.
வள்ளலார், தான் எழுதிய “ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் நூலில் உரைநடையை கையாண்டிருப்பார். இந்த உரைநடையை கேள்வி, பதில் என்னும் நடையில் மிக அருமையாக வடிவமைத்திருப்பார்.
தமிழில் முதன் முதலில் உரைநடையை எழுதி, அதனை தமிழக மக்களுக்குக் கொடுத்த சிதம்பரம் இராமலிங்கம் என்னும் வள்ளலாரை போற்றும் வண்ணம், நாமெல்லாம் எழுந்து கரவொலி எழுப்பலாமே மக்களே.
. இன்று நாம், காடுகளில் வசிக்கும் புலி, சிங்கம், இவைகளின் உணவு முறைகள் பற்றி வள்ளலார் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றி ”ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் உரைநடை நூலின் வழியே பார்ப்போம் வாருங்கள்
மாமிச ஆகாரம் புலி முதலிய துஷ்ட மிருகங்களுக்கு கடவுளால் அனுமதிக்கப்பட்ட நியதி ஆகாரம் அல்லவா? என்றால், இல்லை. மாமிச உணவு, காடுகளில் வாழும் புலி, சிங்கம் போன்ற துஷ்ட மிருகங்களுக்கும் கடவுளால் அனுமதிக்கப்பட்ட உணவு அல்ல என்கிறார் வள்ளலார்.
காட்டு மிருகங்கள் எல்லாம், தங்களது பரம்பரை வழக்கத்தால் அவைகள் தொடர்ந்து மாமிசங்களை உண்கின்றன. இம்மிருகங்களை சைவ ஆகாரத்திற்கு பழக்கப்படுத்த யாரும் இல்லை. ஒரு வேளை, ஒரு புலிக்குட்டியை பிடித்து வந்து, அதற்கு பிறந்தது முதல் சுத்த சைவ உணவையே கொடுத்து நாம் பழக்கப்படுத்தினால், அது சுத்த ஆகாரத்தையே உண்டு வாழுவதைப் பார்க்கலாம்.
”புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்ற பழமொழியை பொய்யாக்க முடியும். ஆனால், அதனை அவ்வாறு பழக்க மனிதர்களால் முடியாமல் போய்விடுகிறது. ஆதலால் அவைகள் தங்கள் வழக்கத்தால் அசுத்த ஆகாரங்களையே உண்கின்றன.
இதற்கு எடுத்துக்காட்டாக, நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களை, அவைகள் வேறு இடத்திற்குச் சென்று அசுத்த உணவை உண்ண விடாமல், அவைகளுக்கு சுத்த உணவான சைவ உணவைக் கொடுத்து வளர்த்தால், அவைகள் இறுதிவரை அசுத்த உணவை தொடாது வாழ்வதை பார்க்கலாம்.
ஆகவே, ஒரு ஜீவனை இம்சைப் படுத்திக் கொன்று, அதனை வேறு ஒரு ஜீவனுக்கு பசியாற்றுவித்தல் கடவுள் அருளுக்கு சம்மதம் அல்ல. அது ஜீவகாருண்யமும் அல்ல என்று சத்தியமாக அறிய வேண்டும்.
இறைவனானவன், எல்லா உயிர்களுக்கும் சிவப்புக் கலரில்தான் இரத்தத்தை கொடுத்துள்ளான். இறைவனானவன், எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையை கொடுத்து, பந்தம், பாசம். சிற்றின்பம் போன்றவைகளை சமமாகவே கொடுத்துள்ளான். உங்கள் கைவிரலில் ஏதேனும் காயம் பட்டுவிட்டால், நீங்கள் எவ்வாறு வலியால் துடிக்கிறீர்களோ? அதே துடிப்பை, அதே வலியை எல்லா உயிர்களுக்கும் இறைவன் சமமாகவே கொடுத்துள்ளான்.
எனவே மக்களே, நாம், எல்லா உயிர்களிடத்தும் தயவாய் இருப்போம்.
நன்றி மக்களே. வேறொரு காணொலியில் சந்திப்போம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி;
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
