காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும்
இணைய இதழில் ‘மே-2017’ அன்று “கிறுஸ்து” என்ற தலைப்பில் வெளியானவை…
திறமைகள் – Talents
கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக
பயன்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட இக்கதையை இயேசு மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த
திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு இறைவன் மென்மேலும் திறமைகளை வழங்குவான். அவற்றை
பயன்படுத்தாதவர்களிடம் இருக்கும் திறமையும் மங்கிப் போகும் என்னும் பொருள் பட இயேசு
கூறிய "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர்.
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள்
வசனமாகக் குறிப்பிடலாம். இது புனித விவிலியத்தில் மத்தேயு 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது.
நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து ஒவ்வொரு
பணியாளரின் திறமைக்கு ஏற்ப, ஒருவருக்கு ஐந்து ரூபாயும் வேறொருவருக்கு இரண்டு ரூபாயும்,
இன்னொருவருக்கு ஒரு ரூபாயும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து ரூபாயைப்
பெற்றவர் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து மேலும் ஐந்து ரூபாய் ஈட்டினார். அதே போன்று,
இரண்டு ரூபாயைப் பெற்றவர் மேலும் இரண்டு ரூபாயை ஈட்டினார். ஆனால், ஒரு ரூபாயைப் பெற்றவரோ
அதை நிலத்தில் புதைத்து வைத்தார்.
நீண்ட நட்களுக்கு பிறகு அந்த எசமானர் திரும்பிவந்து, பணியாளர்களிடத்தில்
தான் அவர்களுக்கு கொடுத்த ரூபாய்களுக்கு கணக்குக் கேட்டார். அப்பொழுது, ஐந்து ரூபாயைப்
பெற்றவர், மேலும் ஐந்து ரூபாய்களை கொண்டுவந்து: “ஐயா, ஐந்து ரூபாயை என்னிடம் ஒப்படைத்தீர்;
இதோ பாரும், இன்னும் ஐந்து ரூபாயை ஈட்டியுள்ளேன்" என்றார். எசமானர் அவரை நோக்கி:
“நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய்
இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில்
நீரும் வந்து பங்கு கொள்ளும்” என்றார். இரண்டு ரூபாயைப் பெற்றவரும் வந்து: ஐயா நீர்
என்னிடம் இரண்டு ரூபாயை ஒப்படைத்தீர். இதோ பாருங்கள், மேலும் இரண்டு ரூபாயை ஈட்டியுள்ளேன்
என்றார். எசமானர் அவரை நோக்கி: "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய
பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.
உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்" என்றார்.
ஒரு ரூபாயைப் பெற்றவரோ வந்து: “ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; விதைக்காத
இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை
அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய ரூபாயை நிலத்தில் புதைத்து வைத்தேன்.
இதோ, பாரும், உம்முடையது" என்றார்.
அவனுடைய எசமான் மறுமொழியாக: "சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான்
விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன்
என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில்
அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு
திரும்பப் பெற்றிருப்பேன்" என்று கூறினார். எனவே அந்தத் ஒரு ரூபாயை அவனிடமிருந்து
எடுத்துப் பத்துத் ரூபாய் உடையவரிடம் கொடுங்கள். உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும்.
அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற
பணியாளனாகிய இவனை வீட்டுக்கு வெளியே இழுத்து போய் வெளியே தள்ளுங்கள் என்றார்.
ரூபாய் உவமை சொல்லும் கருத்து : கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
அளவுகளில் கொடுத்துள்ள திறமையை மென்மேலும் வளர்க்க முயல வேண்டும். அவ்வாறு செய்தால்
கடவுள் மேலும் திறமைகளைக் கொடுப்பார். திறமையை வளர்க்காது இருந்தால் கொடுக்கப்பட்ட
சிறிய திறமையும் மங்கி மறைந்து விடும்.