Friday, December 19, 2025

பாதுகை

                                                                   பாதுகை

இரக்கமே உருவான பாதம்
உகத்திலே வருவித்த பாதம்

கரங்கூப்பி தொழுகின்ற பாதம்
காண்பதற்கு அரிதான பாதம்

நரகர்கள் அறியாத பாதம்
நாடியமூவருக்கும் எட்டாத பாதம்

வரங்கள் கோடிதரும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே

 

இளமை எனுமோர் சுகமும்

            இறைவன் எனுமோர் அருளும்

வளமை எனுமோர் பொருளும்
வினைக ளற்றமதி முகமும்

களவு கொள்ளும் அழகும்
குடி கொள்ளும் சன்மார்க்கம் 

வளரும் காரணப்பட்டி லோங்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

நரை திரைமூப் பகற்றி
நாளை இல்லை என்ற

உரை அகற்றி என்றும்
இளமை யோடு இருக்கும்

கரை அடைந்து சன்மார்க்கக்
 காலத்தை நமக் கினி

விரைந் தருளும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

கந்தசாமி தொண்டனுக்கு செய்தக்
கருணையால் கிடைத்தப் பாதம்

சிந்தனை செய்வோர்க்கு என்றும்
சங்கடம் தீர்க்கும் பாதம்

தந்திரம் சொல்லி இன்பமுற
தன்னை அறிவிக்கும் பாதம்

வந்தனை செய்வோரைக் காக்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

கல்லார்கள் கற்கவே சாகாக்
கல்வி அளிக்கும் பாதம்

எல்லா உயிர்களும் இன்புறவே
இரக்கம் நல்கும் பாதம்

கொல்லான் புலால் மறுத்தானை
கைகூப்பி தொழும் பாதம்

வல்வினை போக்கும் எங்கள்
வள்ளல்நின் பொற் பாதமே.


நன்மை ஈன்றுநம்மை யென்றும்

            நீங்காத ஒளிதேகப் பாதம்

ஒன்பது ஓட்டைக் குள்ளே

            ஒளிந் திருக்கும் பாதம்

 சின்மயம் சச்சிதா னந்த

            சிவ மாக்கும் சன்மார்க்க

வன்மை விரைந்து கொடுக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

  

வெளிக்குள் வெளி கடக்கும்

            வித்தை தெரிவிக்கும் பாதம்

எளியோருக் கெல்லாம் தனது

            அடிமுடி காட்டும் பாதம்

 தெளிந்தோ ருக்கெல்லாம் நின்

            தரிசனம் தந்து அருள்

வெளிச்ச மளித்து இருள்நீக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

  

சதிசெய்த வலையில் சிக்கி

            சாதி மதம் சமயமெனும்  

பொதி சுமந்து பாரினில்

            பாழாய் இளைத் திளைத்து

மதிகெட்டு மதுவும் குடித்து

மயங்கிப் பாடையில் மாளும்

விதி என்பதில்லை எனும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

 

 உண்டு உண்டு மகிழவே

            உண வளித்து நின்னைக்

கண்டு களிப்பு மடைந்து

            கதிரும் மதியுமாக நின்று

எண் ணிரண்டு அறியவே

             ஏங்கி நிற்கும் சன்மார்க்க

வண்டுகள் தேடும் தேனன்றோ

            வள்ளல்நின் பொற் பாதமே.

 

விலை மதிப்பறியா பொன்னே

            வினை சூழ்ந்தறியா கண்ணே

மலை மேலாடிடும் காற்றே

            மரண மில்லா பெருவாழ்வே

அலை கடலில் வீழ்ந்தாடும்

            எம்போல் வாரை சன்மார்க்க 

வலையில் பிடித்துச் சமைக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.


--TMR




T.M.RAMALINGAM

VALLALAR


Wednesday, December 17, 2025

எடுத்துச்செல்வோம்

 எடுத்துச்செல்வோம்

இராமலிங்கம்


திக்கெட்டும் சுத்த சன்மார்க்கத்தை எடுத்துச்செல்வோம்!

1.அனைத்து சுத்த சன்மார்க்கச் சங்கங்களும் இணைந்து ஒரு சேட்டிலைட் ”வள்ளலார் டி.வி.’ சேனல் உருவாக்க வேண்டும்.

2. அனைத்து சுத்த சன்மார்க்கச் சங்கங்களும் இணைந்து ஒரு ‘வள்ளலார் எஃப்.எம்.’ உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு சன்மார்க்கச் சங்கமும், தங்களுக்கென ஒரு வெப் சைட், முகநூல் பக்கம், யூட்யூப் சேனல் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

மேற்காணும் யாவும் பொது வெளியில் மக்களுக்குச் சென்று சேரும் ஊடகங்களாகும். அனைத்து மார்க்கங்களும் கோடிகளை செலவு செய்து சேட்டிலைட் டி.வி. சேனல் வைத்து தங்கள் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுவது பாராட்டத்தக்கது. சுத்த சன்மார்க்கமும் அவ்வரிசையில் இணைய வேண்டும்.

டெலகிராம், வாட்சாப் போன்றவைகள் அவரவர்கள் சங்க உறுப்பினர்களை இணைக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவை எல்லாம் நமக்கு தெரிந்த விடயங்கள்தான். எனினும் முயற்சி வேண்டும் என்பதற்கே இப்பதிவு. ’நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்’ ஆனால், ‘என்னால் ஆவது ஒன்றுமில்லை”,

Monday, December 15, 2025

வேண்டுதல்

                                       அருட்பெருஞ்ஜோதி                          அருட்பெருஞ்ஜோதி
                                          தனிப்பெருங்கருணை                     அருட்பெருஞ்ஜோதி
 
                                                           எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

 
வேண்டுதல்
 
குற்றம் நினையாத மனமும்
            குறை வில்லாத அறிவும்
பற்று இல்லாத உலகும்
            பய மில்லாத நடையும்
சற்றும் கூடாத வயதும்
            சக்கை இல்லாத உணவும்
சுற்றம் சூழாத உடம்பும்
            சுத்த சித்தனாக வேண்டுவனே.
 
குற்றம் நினையாத மனம்:
 
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” மனதினில் மாசு படியாது இருத்தலே முதல் அறம். மற்றய அறங்களெல்லாம் அதற்குப் பிறகுதான் என்பார் திருவள்ளுவர். ”மனத்தால் செய்யும் பாவங்களுக்கு சண்டாளாதி சரீரம் (இழிவான பிறவிகள்) உண்டாகும் என்பார் வள்ளலார். ஆதலால் நாம் மனத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்துக்கொண்டே இறைவனிடமும் வேண்டுவோம்.
 
குறைவில்லாத அறிவு:
 
அறிவு கடலுக்கு முன்னால் ஒரு மனிதன் என்னவாக நிற்கிறான்? “கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்பது நாலடியார். குறைவில்லாத சதம் நிறைந்த அறிவுடைய மனிதர் வள்ளலாரைத் தவிர வேறு யாருமில்லை. அதனால்தான் அவர் பூரண அறிவை வணங்க வேண்டுமென வடலூரில் ஞான சபை எழுப்பி அருளினார். அறிவு தேகமும் (ஞான தேகம்) ஆனார். வள்ளாருக்கு முன்பிருந்த எவரும் அறிவுக்கு என ஒரு அமைப்பை இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அறிவு விளங்கியவர்களுக்கு ’உயிர் இரக்கமே” கடவுள் வழிபாடு என்பார் வள்ளலார்.
 
எனவே வள்ளலாரைப் போன்று குறைவற்ற அறிவை நாம் இறைவனிடம் வேண்டுவோம்.
 
பற்று இல்லாத உலகம்:
 
உலகியல் என்பது ஒரு மாமாயை. நாடு, மொழி, கலாச்சாரம், அரசியல், சட்டம், மதம், இனம், ஜாதி, பசி, தாகம், செல்வம், காமம், கோபம், தயவு, கருணை, இரக்கம், அறிவு, கணவன், மனைவி, சடங்குகள், ஜாதகம், அம்மா, அப்பா, பிள்ளைகள், நண்பர்கள், எதிரிகள், சகோதர சகோதரிகள், பொது மக்கள், நம்முடன் உலகில் வாழும் உயிரிகள்  இவை போன்ற பல மாயைகளுடன் நாம் இவ்வுலகில் வாழ வேண்டியிருக்கின்றது. அதுதான் இயற்கை. இந்த இயற்கை உண்மையை அறிந்து, நாம் மேல் சொன்னவற்றில் சிலதுடன் இணைந்தும், சிலவற்றை நீக்கியும் அவரவர்களின் அறிவுக்கேற்ப வாழ்கிறோம். இப்படிப்பட்ட உலகில் எதிலும் பற்றுதல் இன்றி “இச்சை அற்று நுகர்தல் வேண்டும்”.    
 
   
பயமில்லாத நடை:
 
இரக்கம், தயவு வரக்காரணமே பயம்தான். பயம் இல்லை எனில் தயவு வராது. எனவேதான் வள்ளலார் தனது திருவருட்பாவில் பயந்தேன்… பயந்தேன்… என பாடல்கள் பாடியிருப்பார். ஐயாவை பின்பற்றி நானும் “பயந்தேன்” என சில பாடல்களை பாடியிருக்கின்றேன். அப்படிப்பட்ட பயம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. “பயம் பூஜ்ஜியமாக வேண்டும்” என வள்ளலார் வேறொரு இடத்தில் குறிபிடுவார். மேலும் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கியத் தடையாக இருப்பதில் ’பயம்’ என்பதும் அடங்கும். இங்கே பயம் என்பது ’தெளிவின்மை அல்லது அறிவின்மை’ என்ற பொருளில் நோக்கலாம். எனவே தெளிந்த அறிவு கொண்ட நடத்தைகள் நமக்கு அருள வேண்டும் என வேண்டுவோம்.
 
சற்றும் கூடாத வயது:
 
சுத்த சன்மார்க்கத்திற்கு “மூப்பு’ என்பதும் ஒரு தடையாக இருக்கின்றது. “நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும் உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே”, “என்றே யென்னினு மிளமையோ டிருக்க நன்றே தருமொரு ஞானமா மருந்தே” என இளமை என்றும் வேண்டும் எனப் பாடுவார் வள்ளலார். இளமையை வலியுறுத்தேயே நாம் இங்கு ‘சற்றும் கூடாத வயது” வேண்டுமென இறைவனிடம் வேண்டுவோம்.
 
சக்கை இல்லாத உணவு:
 
’உண்பதெல்லாம் மலமே” என்பார் வள்ளலார். அதாவது மலம் என்பது சக்கை. நாம் அசைவம் உண்டாலும், சைவம் உண்டாலும் இவை இரண்டுமே மலம் தான். “மலம் காணா உடல் தாராய் வெண்ணிலாவே” என நானும் வெண்ணிலாக் கண்ணியில் பாடியிருப்பேன். மலம் இல்லாத உடம்பே சுத்த உடம்பாகும். இதற்கு நாம் சைவமும் உண்ணுதல் கூடாது, அசைவமும் உண்ணுதல் கூடாது. சைவமும் அசைவமும் இவை இரண்டுமற்ற உணவானது எது எனில்? இறையருளால் நம் உள் நாக்கிற்கு மேலே ஊறி வழியும் அமுது ஆகும். இந்த அமிழ்து உண்டுவிட்டால் பசி இருக்காது. சக்கை உணவு தேவைப்படாது. மலம் ஜலம் உடம்பில் இராது.
 
‘திருவருள் தேன் உண்டே யானும் நீயுமாய்க் கலந்துறவாடும் நாள் எந்தநாள் அறியேனே’
 
’தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே ஒளி விளங்கப் பெற்றேன்’
‘மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே…”
 
என வள்ளலார் இந்த அமுதத்தை பற்றி பல பாடல்களில்  பாடியிருப்பார்.
எனவே நாமும் இந்த சக்கை இல்லாத உணவான அமுதை வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவோம்.
    
சுற்றம் சூழாத உடம்பு;
 
சுற்றம் என்றால் நமது உறவினத்தார்கள் மற்றும் நமது நலம் விரும்பிகள் எனலாம். இவர்கள் நம்மை சூழ்ந்து இருப்பது எப்போது? நாம் உயிரற்ற உடம்பாக இருக்கையில் இவர்கள் எல்லாம் நமது உடம்பை சூழ்ந்துக்கொண்டு துக்கத்தில் இருப்பார்கள். அல்லது உயிரோடு இருக்கையில் நோய் கொண்டு படுத்தால் சூழ்வார்கள். இவ்வாறு நாம் நோய் கொண்டு படுக்காமலும், உயிரற்று படுக்காமலும் இருக்கின்ற பொன்னுடம்பு, பிறரின் துக்கத்திற்கு ஆட்படாத சுத்த உடம்பு, என்றும் இளமையோடு இருக்கின்ற ஞான உடம்பு வேண்டும் என அதற்கான முயற்சியுடன் நாம் இறைவனிடம் வேண்டுவோம்.  
 
இவ்வாறு நாம் ’சுத்த சித்தன்’ என ஆவதற்கு பயிற்சியுடன் கூடிய வேண்டுதலை இறைவனிடம் வைப்போம். for PDF 
https://drive.google.com/file/d/1-Qh0eJtWv6IfnsN8r15XHtw47CsD227Z/view?usp=sharing

            குற்றம் நினையாத மனமும்
            குறை வில்லாத அறிவும்
பற்று இல்லாத உலகும்
            பய மில்லாத நடையும்
சற்றும் கூடாத வயதும்
            சக்கை இல்லாத உணவும்
சுற்றம் சூழாத உடம்பும்
            சுத்த சித்தனாக வேண்டுவனே.
 
சித்தம் ஒடுங்கும் தவமும்
            சத்தியம் சொல்லும் திறமும்
செத்தாரை எழுப்பும் திடமும்
            சிவத்தை பாடும் வரவும்
தத்துவா தீதமேல் நிலையும்
            தந்தருளி நான்நீயாக நின்று
சுத்த சன்மார்க்க உலகில்          
            சுற்றித் திரிய வேண்டுவனே.
 
அரியும் அரனும் அறியாஇடமாய்
              ஐந்தொழில் புரிகின்ற பணியாய்
சரியும் தவறும் இல்லாச்செயலாய்
             சன்மார்க்க சத்துவ குணமாய்
விரியும் அண்டத்து வீச்சாய்
            வலிமை பெறும் சாதுவாய்
எரியும் தீபஒளி யாயென்றும்
            இருக்க நான் வேண்டுவனே.

 

உயிரெல்லாம் எனக்கே உறவாக

            உயிர்நலம் பரவ வரம்வாங்க

பயிரெல்லாம் செழித்து வளமோங்க

            பாரினில் வறுமைகள் புறம்போக

வயிரெல்லாம் மகிழ்ந்து பசியாற

            வள்ளலாய் உலகினில் விளையாட

துயிலெழுந்து சாகாக்கல்வி பெறநான்

            தயவாய் இருக்க வேண்டுவனே.

 

கடவுள் நிலை யறிந்ததும்

            கண்ணீர் பெருகி ஓடுதே

கடலெனும் பிறவி அறுந்ததும்

            கருணை எங்கும் நிறைந்ததே

நடனம் என்னுள் கண்டதும்

            நல்லமுதம் எனக்குள் ஊறுதே

இடமும் வலமுமாகி நடுவாய்

            இறை மயமாக வேண்டுவனே.

             

நினைத்தவை எல்லாம் நடக்குதே

            நிலைத்தவை என்றும் வருகுதே

வினைகள் எல்லாம் பயந்தோடுதே

            விதைத்தவை என்னுள் மலருதே

எனைமறந் துள்ளம் உனைநாடுதே

            என்றும் உனக்கடிமை என்றானதே

மனையெல்லாம் தீபம் ஒளிரவே

            மங்களமாய் இருக்க வேண்டுவனே.

 

புலையும் கொலையும் விடாது

            புரியும் தெய்வீகம் நீடாது

இலையில் தானம் போடாது

            அறங்கள் செய்யக் கூடாது

மலைகள் சுற்றினால் போதாது

            மனங்கள் சுத்தம் ஆகாது

சிலைகள் என்றும் பேசாதுஎன்

            சிவத்தின் ஓசைகேட்க வேண்டுவனே.

.

  

ஆவது ஒன்றுமில்லை என்னால்

            உனக்கு கிஞ்சித்தும் புகழில்லை

ஈவது எனையன்றி வேறில்லை

            உனையன்றி எனக்கு பெயரில்லை

சாவதும் பிறப்பதும் வழக்கில்லை

            சுத்த சன்மார்க்கமிருக்க பயமில்லை

போவது பிணமென பிறர்இழியாத

பொன்னான மேனி வேண்டுவனே.

 

ஆயிரம் ஆயிரம் கோடி

            அணி விளக்கு ஏற்றுவித்து

பாயிரம் பலகோடிப் பாடி

            பாரினில் அற்புதம் செய்வித்து

தாயினும் தயவுடையத் தமிழ்

            தந்த ஒளியேஎன் வள்ளலே

ஆயினும் அருட்பெருஞ் ஜோதி

            அருளாலர் வர வேண்டுவனே.

 

தருகின்றேன் உனக்கே எனது

            தேக போகஜீவ சுதந்தரத்தை

பெருங் கருணையால் நீதான்

            பெற்றுக் கொண்டு உனது

அருட் பெருஞ்ஜோதி அருளால்

            என்னை நீதான் ஆளும்

திருவருள் சுதந்தரம் பெறும்

திருநாள் வர வேண்டுவனே.


T.M.RAMALINGAM

VALLALAR


இராமலிங்கம்

Vallalar





Saturday, December 13, 2025

ஒரு தேசத்தை அழிக்க,


 

ஒரு தேசத்தை அழிக்க,


அந்த தேசத்தின் எல்லைகளில் பீரங்கிகளை நிறுத்தத் தேவையில்லை...

அணுகுண்டுகள் வீசத் தேவையில்லை....

அந்த நாட்டின் இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கினால் போதும்.

இந்தக் கொடூரமான யுத்தியை மிகத் துல்லியமாக மிக மிகக் கொடூரமாக வரலாற்றில் அரங்கேற்றியது
யார் தெரியுமா?

அது தான் #பிரிட்டிஷ்சாம்ராஜ்ஜியம்....

பாதிக்கப்பட்ட நாடு== #சீனா... பயன்படுத்தப்பட்ட ஆயுதம்== #அபின்... அந்த ஆயுதம் விளைவிக்கப்பட்ட இடம்==#நமதுஇந்தியா....

இன்று நாம் பேசப்போவது, சீனாவின் நூற்றாண்டு கால அவமானம் பற்றியும்...

அதில் இந்தியாவின் ரத்தமும், இந்தியத் தொழிலதிபர்களின் (டாட்டா உட்பட) மறைக்கப்பட்ட பங்கும் பற்றிய ஒரு கசப்பான வரலாற்றைத்தான்...

18-ம் நூற்றாண்டில்...
சீனா உலகப் பொருளாதாரத்தின் ஒரு தனித்தீவு போல இருந்தது....

சீனப் பேரரசர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தும் தங்களிடமே உள்ளன. காட்டுமிராண்டிகளான வெளிநாட்டவர்கள் தங்களுக்குத் தேவையில்லை என்ற கர்வத்துடன் தங்கள் வணிகக் கதவுகளை
மூடி வைத்திருந்தனர்....

ஆனால், பிரிட்டனுக்குச் சீனா தேவைப்பட்டது.... ஏன்?
#தேயிலை (Tea)....

இங்கிலாந்து மக்களுக்குத் தேயிலை ஒரு வெறியாகவே மாறியிருந்தது....

அவர்கள் சீனாவிலிருந்து டன் கணக்கில் #தேயிலையையும், #பட்டுத்துணிகளையும், #பீங்கான்பாத்திரங்களையும்
இறக்குமதி செய்தனர்....

இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது... பிரிட்டன், சீனாவிடமிருந்து
பொருட்களை வாங்கியது....
ஆனால், சீனா பிரிட்டனிடமிருந்து எதையும் வாங்க மறுத்தது....

உங்கள் கம்பளித் துணிகள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்...

இதனால், பிரிட்டன் தன்னிடம் இருந்த வெள்ளி மற்றும் தங்கத்தைக் கொடுத்துத் தேயிலையை வாங்க வேண்டியிருந்தது..

இதனால், பிரிட்டனின் கஜானா காலியானது....
இதை ’வர்த்தகப் பற்றாக்குறை’ (Trade Deficit) என்பார்கள்...

இதைச் சரிசெய்ய பிரிட்டன் ஒரு நயவஞ்சகத் திட்டத்தைத் தீட்டியது....

சீனர்களிடம் விற்பதற்கு நம்மிடம் ஒரு பொருள் வேண்டும்....

அவர்கள் மறுக்கவே முடியாத ஒரு பொருள் வேண்டும்...
என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள். அந்தப் பொருள்தான் அபின் (Opium)....

அபின் என்பது ஒரு போதைப் பொருள். இது #பாப்பி(Poppy) செடியிலிருந்து கிடைக்கிறது... இதை விளைவிக்கச் சிறந்த இடம் எது?

அவர்கள் தேர்ந்தெடுத்தது அப்போது
பிரிட்டனின் காலனியாக இருந்த இந்தியாவைத் தான்....
#கிழக்கிந்தியக்கம்பெனி, இந்தியாவின் வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் இருந்த ஏழை விவசாயிகளை மிரட்டியது.

நீங்கள் நெல் பயிரிடக்கூடாது...
கோதுமையை விளைவிக்கக் கூடாது. அபின் மட்டுமே பயிரிட வேண்டும்...

விவசாயிகள் மறுத்ததால்,
அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன....

அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது....

உணவு விளைவிக்க வேண்டிய நிலங்களில், விஷம் விளைவிக்கப்பட்டது....

பிரிட்டன், இந்திய விவசாயிகளை அடிமைப்படுத்தி அபினை விளைவித்தது...

அந்த அபினை, சீனாவிற்குக்
கடத்திச் சென்று விற்று,
அதற்குப் பதிலாகச் சீனர்களிடமிருந்து வெள்ளி நாணயங்களைப் பெற்றது...
அந்த வெள்ளியைக் கொண்டு, சீனாவிலிருந்து தேயிலையை வாங்கி, அதை இங்கிலாந்துக்கு அனுப்பியது...

சுருக்கமாகச் சொன்னால்
இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டினார்கள்,
சீனர்களின் அறிவை மழுங்கடித்தார்கள்,
இதன் மூலம்
பிரிட்டன் தனது தேநீர் கோப்பையை நிரப்பிக் கொண்டது.

#பிரிட்டன், அபினை நேரடியாகச் சீனாவிடம் விற்கவில்லை....

ஏனென்றால் சீனாவில் அபின்
தடை செய்யப்பட்டிருந்தது....

அவர்கள் கடத்தல்காரர்கள் மூலம்
இதைச் சந்தைப்படுத்தினார்கள்....

ஆரம்பத்தில் மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்ட அபின்,
விரைவில் ஒரு பழக்கமாகி,
பின்னர் ஒரு வெறியாக
மாறத் தொடங்கியது....

1830-களில், சீனாவின்
அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மாணவர்கள், சாதாரணக் கூலிகள்
எனச் சுமார் 1.2 கோடி சீனர்கள்
அபினிக்கு அடிமையாகியிருந்தார்கள்...

அபின் போதையால் சீனச் சமூகம் சீரழியத் தொடங்கியது...

குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன...

சீனாவின் வெள்ளிப் பணம் முழுவதும்
பிரிட்டனுக்குப் பாய்ந்தது...

ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம், புகைப்பிடிக்கும் குழாய்களுக்கு முன்னால் மயங்கிக் கிடந்தது...

#சீனப்பேரரசர் இதைக் கண்டு கொதித்தெழுந்தார்...
அவர் லின் ஜெக்சு (Lin Zexu) என்ற ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்தார்.

லின் ஜெக்சு, 1839-ல், பிரிட்டிஷ் வியாபாரிகளிடமிருந்த 20,000 பெட்டி அபினைக் கைப்பற்றி, அதைக் கடலில் கரைத்து அழித்தார்....

விக்டோரியா மகாராணிக்கு
எங்கள் மக்களை அழிக்கும் இந்த விஷத்தை ஏன் விற்கிறீர்கள்?
என்று ஒரு கடிதமும் எழுதினார்...

பதிலுக்கு பிரிட்டன் என்ன செய்தது? மன்னிப்பு கேட்டதா? இல்லை.

எங்கள் சொத்துக்களை (அபினை) அழித்துவிட்டீர்கள்! தடையற்ற வர்த்தகத்தைத் தடுத்துவிட்டீர்கள்!" என்று கூறி, பிரிட்டன் தனது நவீனக் கடற்படையைச் சீனாவுக்கு அனுப்பியது...

சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே போர் தொடங்கியது. இதுவே முதல் அபினிப் போர் (1839-1842).
பழைய வாள்களையும், ஈட்டிகளையும் வைத்திருந்த சீன ராணுவம், பிரிட்டனின் நவீனப் பீரங்கிக் கப்பல்களை எதிர்க்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.
சீனா சரணடைந்தது.

அவமானகரமான #நான்கிங்ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது....
அந்த ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டது என்று தெரியுமா?

🌹 சீனா, பிரிட்டனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்...
🌹சீனத் துறைமுகங்கள் பிரிட்டனுக்குத் திறக்கப்பட வேண்டும்...
🌹மிக முக்கியமாக, ஹாங்காங் (Hong Kong) தீவு, பிரிட்டனுக்குச் சொந்தமாக்கப்பட்டது....
இதுதான் சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானத்தின்’ (Century of Humiliation) தொடக்கம்...

இப்போது, இந்தக் கதையின்
இந்தியப் பக்கத்திற்கு வருவோம்...

பிரிட்டன் அபினை விளைவித்தது சரி, அதைச் சீனாவுக்குக் கொண்டு சென்று விற்றது யார்?
பிரிட்டிஷ் கப்பல்கள் மட்டுமல்ல. பல இந்திய வர்த்தகர்களும்
இதில் ஈடுபட்டனர்....

குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த #பார்சி (Parsi) மற்றும் #மார்வாடிசமூகத்தினர்
அவர்களில் முக்கியமானவர்கள் #டாட்டா (Tata) மற்றும் #ஜீஜீபாய் (Jeejeebhoy) குடும்பத்தினர்....

பார்சி இனத்தவரான டாட்டா குடும்பத்தினர் இப்படித்தான் செல்வம் கொழிக்கத் தொடங்கினார்கள்...
#ஜாம்செட்ஜிடாட்டா (Jamsetji Tata)
நவீன இந்தியத் தொழில்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்...
இவரது தந்தை #நுஸர்வான்ஜிடாட்டா மற்றும் #ஜாம்செட்ஜிடாட்டா ஆகியோர், தங்கள் ஆரம்பகால மூலதனத்தை, சீனாவுடனான அபின் வர்த்தகத்தில்
தான் ஈட்டினார்கள்....

அவர்கள் #குஜராத் மற்றும் #மால்வா பகுதிகளில் விளைந்த அபினை, கப்பல்களில் ஏற்றிச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தனர். #டாட்டாஅண்ட்கோ என்ற பெயரில் #ஷாங்காய் நகரில் கிளை அலுவலகம் கூடத் திறக்கப்பட்டது....

இந்த அபின் வர்த்தகத்தில் கிடைத்த அந்த அபரிமிதமான லாபம்தான் பின்னாளில் இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலை (Tata Steel), தாஜ் ஹோட்டல், மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்கான
மூலதனமாக (Capital) மாறியது....

மும்பை நகரம் இன்று ஒரு பிரம்மாண்டமான வர்த்தக மையமாக இருப்பதற்கு, அன்று சீனாவில் விற்கப்பட்ட அபினின் பங்கும் உண்டு என்பது மறுக்க முடியாத,
கசப்பான உண்மை....

டாட்டா மட்டுமல்ல, பல பார்சி மற்றும் மார்வாடி வர்த்தகக் குடும்பங்கள் இந்த வழியில் தான் வளர்ந்தன
என்பதும் குறிப்பிடத்தக்கது....

இன்றைய சீனா ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறது?

ஏன் #தைவான் விஷயத்திலும்,
#தென்சீனக்கடலிலும்
பிடிவாதமாக இருக்கிறது?
என்பதைப் புரிந்து கொள்ள,
நாம் இந்த வரலாற்றை
அறிந்துகொள்ள வேண்டும்...

சீனப் பள்ளிகளில் இன்றும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படும்
முதல் பாடம் எது தெரியுமா?
’நூற்றாண்டு அவமானம்’
நாம் பலவீனமாக இருந்தோம்
அதனால் போதை மருந்து கொடுத்து நம்மை அழித்தார்கள்....
நம் நிலங்களைப் பறித்தார்கள்...
இனி ஒருபோதும் சீனா அப்படி ஏமாறக்கூடாது...
இனி ஒருபோதும் சீனா பலவீனமாக இருக்கக்கூடாது...

#ஜிஜின்பிங் பேசும், #சீனக்கனவு
(Chinese Dream) என்பது,

இந்த 150 ஆண்டுகால அவமானத்தைத் துடைத்து, மீண்டும் உலகத்தின்
உச்சிக்குச் செல்வதுதான்...

வரலாறு விசித்திரமானது.
அன்று இந்தியா விளைவித்த அபின், சீனாவை அழித்தது....

அன்று ஈட்டிய லாபம், இந்தியாவின் நவீனத் தொழில்துறைக்கு அடித்தளமிட்டது....

அன்று அவமானப்பட்ட சீனா, இன்று அந்த வடுக்களைச் சரிசெய்ய, உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது...

"வரலாற்றை மறப்பவர்கள், அதை மீண்டும் வாழச் சபிக்கப்படுவார்கள்" என்பதுதான் உண்மை...
இது சீனாவிற்கு மட்டுமல்ல, தமிழ் இனத்துக்கும் பொருந்தும்...

"வரலாறு நமக்குக் கற்பிக்கும்
பாடம் மிகக் கடினமானது...

ஓர் இனத்தை வேரறுக்கப் பெரும்
போர் தேவையில்லை..

போதை ஒன்றே போதும்" என்பது சீன வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் என்பதை மீண்டும்
குறிப்பிட விரும்புகிறேன்....

அன்று சீனா அபின் புகையில் சரிந்தது...
இன்று நம் #தமிழ்நாடு கஞ்சா புகையிலும், டாஸ்மாக் மதுவின் பிடியிலும்
சிக்கித் தள்ளாடுகிறது....

இப்போது சீரழிந்ததைப் போல போதையில் தள்ளாடும் தமிழ்நாடு
இதுவரையிலும் கிடையாது...

#கஞ்சா எளிதாகக் கிடைக்கிறது....

கார்ப்பரேட் பார்ட்டிகள் எதுவும் கஞ்சா இல்லாமல் நடைபெறுவது இல்லை.

பள்ளிக்கூடங்கள் முன்பு கூட கஞ்சா புழங்கத் தொடங்கிவிட்டது...

அன்று சீனாவைச் சீரழிக்க பிரிட்டிஷ் எனும் அந்நிய சக்தி இருந்தது....

ஆனால் இன்று?

நம் சொந்த மண்ணிலேயே, நம் வருங்காலத் தலைமுறையானது,
கல்வி கற்க வேண்டிய வயதில் போதைக்கு அடிமையாகி,
சிந்தனை மழுங்கி வீதியில் திரிகிறது....

அன்று குடித்தாலே பாவம்,
தவறு என்று யாருக்கும்
தெரியாமல்
மறைத்துக் குடித்தார்கள்....

ஆனால், இன்று மீசை முளைப்பதற்கு முன்பே சாலையோரங்களில் அமர்ந்து குடித்துக் களிக்கிறார்கள்
நமது விடலைகள்....

நூற்றாண்டு கால அவமானத்திலிருந்து சீனா மீண்டு, இன்று வல்லரசாகிவிட்டது.

ஆனால், உலகம் போற்றும்
அறிவுச் சமூகமாகத் திகழ்ந்த தமிழினம்,
இன்று தன் இளைய தலைமுறையைப் போதைக்குப் பலிகொடுத்துவிட்டு, மீள முடியாத இருளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது...

உலகிற்கே வணிகத்தையும், அறத்தையும் கற்றுக்கொடுத்த ஓர் அறிவுச்சமூகம், இன்று போதைப்பிடியில் சிக்கித் தன் சுயத்தை இழந்து நிற்பது தான் காலத்தின் கோலம்....

அன்று பிரிட்டிஷார் அபினைக் கொண்டு சீனாவை அழித்தார்கள்...

ஆனால், இன்று கழக அரசுகளே
நமது மக்களை கஞ்சா மயக்கத்திலும், மது போதையிலும் தள்ளி
வேரறுத்துக் கொண்டிருக்கிறார்கள்....

'நம் பிள்ளைகளுக்குப் பொன்னையும் பொருளையும் சேர்த்து
வைப்பதை விட, போதையில்லாத தெளிவான புத்தியையும், சுயமரியாதையையும் சேர்த்து
வைப்பதே மிகச் சிறந்த சொத்து....

இல்லையேல், நாளைய வரலாறு நம்மை 'வீரத் தமிழினம்' என்று எழுதாது; 'மது மயக்கத்தில் வீழ்ந்த இனம்'
என்றே பதிவு செய்யும்!'
விழித்துக்கொள் தமிழா!

இந்த வரலாறை அனைவரும் அறிந்து கொள்ளட்டும் படித்தவுடன் பகிருங்கள்..

நாளைய நமது தமிழினம் வாழட்டும்..

இலங்கையில் நடந்தது போல் கு*ண்டு மழை பொழிந்து மக்களை அழிப்பது மட்டும் இனப்படுகொ*லை அல்ல.. குடிக்க வைத்து மக்களை கொ*ல்வதும் ஒரு இனப்படுகொலையே...