Wednesday, December 11, 2013

குருபூஜை நிறைவு - 2013

குருபூஜை நிறைவு - 2013

அன்புடையீர் வணக்கம்!

சென்ற 08.12.2013 அன்று காரணப்பட்டு கிராமத்தில் சமரச பஜனை ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் 89 ஆம் ஆண்டு குருபூஜை மிகவும் சிறப்பாக திருவருள் சம்மதத்துடன் நிறைவேறியது. முதலில் திருஅருட்பிரகாசரின் பொன்னடியினை தாங்கிய பாதகுரடுக்கு பூஜை செய்யப்பட்டது. அவ்வமயம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி இவ்வுலகிற்கு அருள் புரிந்தார். திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களும் அவ்வமயம் அங்கு அரூபநிலையில் தமது மாணக்கரின் சமாதி நிலையினை வாழ்த்தியருளினார். திருஅருட்பிரகாசர் அவர்கள், செத்தாரை எழுப்புதல் என்ற அருள்நிலையினை துவங்குவதற்கு காலம் மிக சமீபத்தில் உள்ளது. அந்த அற்புத நிகழ்ச்சியினை காரணப்பட்டு ஐயா அவர்களின் சமாதி நிலையத்திலிருந்தே துவங்குவார் என்ற அன்பர்களின் எண்ணங்களுடன் / வேண்டுகோளுடன் காரணப்பட்டாரின் குருபூஜை இனிதே நிறைவுற்றது.

காலை 9.00 மணியளவில் சன்மார்க்க சங்கத்தவர்களின் அகவல் ஓதலுடன் இனிதே துவங்கியது குருபூஜை. 11.00 மணியளவில் காரணப்பட்டு வாழ் சமரச பஜனை அன்பர்கள் திருஅருட்பா பாடல்களை இசைத்தார்கள். அவ்வமயம் ஒரு அன்பர் பேசும்போது ஒரு புதிய செய்தியினை கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். அதாவது திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள், தாம் பாடிய திருஅருட்பாவினை காரணப்பட்டு ஐயாவை பாடச்சொல்லி கேட்பார்களாம்! என்ன ஒரு பாக்கியத்தை காரணப்பட்டு ஐயா பெற்றிருக்கிறார்கள்! என்று வியந்தோம். பிறகு புதுச்சேரியில் வந்திருந்த அருள்திரு.என்.அருள்ஜோதி - உதவி ஸ்கூல் - முதல்வர் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள். அதனைத்தொடர்ந்து பேராசிரியர் முனைவர். .நலங்கிள்ளி - கடலூர், அவர்களும் சொற்பொழிவு ஆற்றினார்கள். இறுதியாக கடலூர் நிலவள வங்கி தலைவர் திரு.இராமலிங்கம் - காரணப்பட்டு, அவர்கள் நன்றியுரையுடன் சொற்பொழிவுகள் முடிவுற்றன.

கன்னியாக்குமரி தங்கஜோதி ஞானசபையைச் சேர்ந்த இரண்டு அன்பர்கள் இவ்விழாவினில் கலந்துக்கொண்டு, ஞானதானம் செய்ததுடன் சன்மார்க்க புத்தகங்களையும் காணிக்கை பெற்றுக்கொண்டு தேவைப்படுபவர்களுக்கு அளித்தார்கள்.

காரணப்பட்டு ஐயாவின் சமாதி நிலையத்தை கவனித்துவரும் திரு.பழனி ஐயா அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு விட்டதால் கடந்த ஒரு மாதக்காலமாக சமாதி நிலையத்தினை அவரால் கவனிக்கமுடியாமல் போனது. அவ்வமயம் திரு.நடராஜன் ஐயா - காரணப்பட்டு அவர்கள் மிக நல்ல முறையில் நிலையத்தினை கவனித்துவந்தார்கள். இன்றைய குருபூஜையில் திரு.பழனி ஐயா அவர்கள் நடக்க முடியா நிலையிலும் மதியம் 2.00 மணியளவில் வந்து கலந்துக்கொண்டது சிறப்பு.

இறுதியாக மதியம் 2.00 மணியளவில் கடலூர் நிலவளவங்கித் தலைவர் திரு. இராமலிங்கம் அவர்களது இல்லத்தில் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்திற்காக அரிசி முதலிய இடுபொருள்களை வழங்கிய அன்பர்களுக்கு என்றும் திருஅருட்பிரகாச வள்ளலார் உறுதுணையாக இருப்பாராக.

இப்பூஜை சிறப்புற நடக்க புறக்காரணமாய் இருந்த காரணப்பட்டு கிராமவாசிகளுக்கும், சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், காரணப்பட்டு ஐயாவின் வாரிசுதாரர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்...

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 









 

3 comments:

  1. good job Karanapattu reach in Websites great work thank u!!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.