Showing posts with label விபூதி பூசுதல் பற்றிய வள்ளலாரின் விளக்கம். Show all posts
Showing posts with label விபூதி பூசுதல் பற்றிய வள்ளலாரின் விளக்கம். Show all posts

Friday, May 3, 2013

விபூதி பூசுதல் பற்றிய வள்ளலாரின் விளக்கம்


அருட்பெருஞ்ஜோதி                        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                        அருட்பெருஞ்ஜோதி

விபூதி பூசுதல் பற்றிய வள்ளலாரின் விளக்கம்             03-05-2013

எமது கேள்வி:

பேரன்புடைய ஐயா அவர்களே! வணக்கம், தாங்கள் அருளிய சுத்த சன்மார்க்கத்தின்படி விபூதி (திருநீறு) வழங்கல், பூசுதல் சரியானதா?

வள்ளலாரின் பதில்:

வணக்கம் அன்பரே! எமது மார்க்கம் இறப்பொழிக்கும் சுத்த சன்மார்க்கம் ஆகும். இதற்கென தனி கொள்கைகளை இறைவன் வகுத்தவழி வகுத்துத் தந்துள்ளோம். சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சாதி, மத, ஆசாரங்களை ஒழித்துவிட்டு உலகியர் அனைவரும் ஒரு பொது நோக்கத்தை வருவித்துக்கொள்ளுதல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தில் எந்த ஒரு சாதனத்தையோ (தியானம், விரதம், ஜபம், யோகா, சமாதி, உபாசித்தல் முதலின) சின்னத்தையோ (விபூதி, நாமம், திலகம், சந்தனம் முதலிய வெளிஅடையாளங்கள்) யாம் அறிவிக்கவில்லை. இவைகளெல்லாம், சுத்த சன்மார்க்கத்திற்கு யாம் எது பெருந்தடைகளாக உள்ளது என்று சொன்னேனோ, அதற்குரியவைகளாகும் என்பதை நான் சொல்லித் தான் உலகியலர்கள் அறிய வேண்டும் என்பதில்லை.

"எல்லா சமயங்களும், எல்லா மதங்களும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொதுநெறியாக விளங்குவது 'சுத்த சன்மார்க்கம்' ஆகும்." (பக்கம் 548)

விபூதி வழங்குதலும், பூசிக்கொள்ளுதலும் சைவச் சமயத்தின் சிறப்புச் சாதனம் மற்றும் அச்சமயத்தின் உயரிய அடையாளச் சின்னமாகும் என்பதில் யாவருக்கும் ஐயமில்லை. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் சின்னம் எங்ஙனம் எமது சுத்த சன்மார்க்கத்தில் இருக்க முடியும் உலகியலரே?

யாம் எமது உரைநடைப் பகுதியில் பல இடங்களில் கூறியுள்ளேன்...

"சுத்த சன்மார்க்கத்திற்கு சமயங்கள் எக்காலத்தும் முக்கியத் தடைகளாகும்" (பக்கம் 56)
"சமய மத ஆசாரங்களை விட்டு ஒழிக்க வேண்டும்" (பக்கம் 418)
"சாதனகள் ஒன்றும் வேண்டாம்" (பக்கம் 416)
எனவே உலகியலரே... விபூதி வழங்கல், பூசுதல் சுத்தசன்மார்க்கத்தின்படி கூடவே கூடாது.... கூடாது.......கூடாது....

ஆனால், எமது உருவமிலா உருவப்படத்தில் விபூதிக் கோலத்தில் யாம் இருப்பது போல் வெளியிடுவது உலகியருக்கு அழகா? பிற்காலத்தில் இவ்வாறு முரண் ஏற்படும் என்றும், எமது மார்க்கத்தின் மீது பற்று வைக்காமல் எம்மீது பற்று வைத்துவிடுவார்கள் என ஊகித்ததால் தான் யாம் எமது உருவத்தை அன்றைக்கே மறைத்தோம். ஆனால் எமது உருவத்தை கையால் வரைந்து வெளிபடுத்திவிட்டார்கள். அப்போது யாம் சைவ சமயத்தின் மீது ஆழ்ந்த பற்றுதலுடன் இருந்தோம்.



அச்சமயதில் உள்ள உருவ வழிபாடு, அச்சமய சாதனம் மற்றும் மந்திரங்களையும் பாடி துதித்துள்ளேன்.

அதன்பின் அச்சமய மதங்களில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்பதனை உள்ளபடி அறிந்து, அவைகளை எம்மிலிருந்து ஒழித்தோம், எமது முடிபான முடிவாக "சுத்த சன்மார்க்கத்தை" உலகியலோருக்கு வழங்கினோம்.

யார் ஒருவர், எமது சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் இணைகின்றனரோ அவர்கள் தாம் இதுவரை கடைபிடித்துவந்த போலி ஆசாரங்களை, சாதனங்கள், சின்னங்கள், மதங்கள், சாதிகள், சமயங்கள், புலால் உண்ணுதல், கொலைத்தொழில் செய்தல் போன்ற தடைகளை தகர்த்தவரான வெற்றி வீரனாக திகழ்தல் வேண்டும். அவ்வீரர்களுக்கே எமது மார்க்கம், சாகாக் கல்வியினை இலவசமாக வழங்கும், அவர்களையே சாகா நிலைக்கு உயர்த்தும் என்பதனை அறியவேண்டும்.

"ஆசாரங்களை விட்டு ஒழித்தவர்கள் மட்டுமே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேரமுடியும். இது எமது கட்டுப்பாட்டு விதியாகும்". (பக்கம் 411)

"இப்போது  ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது" (பக்கம் 469)
 
"யாம் 1873 ஆம் ஆண்டு எமது சீடர்களிடம் / ன்னை பின்பற்றுபவர்களிடமும் கீழ்கண்டவாறு கூறியுள்ளேன்.

சுத்த சன்மார்க்க சங்கத்தில் நீங்கள் எல்லாம் சிறந்த / உண்மையான உறுப்பினர்கள் அல்ல. உண்மையான சுத்த சன்மார்க்க சங்கத்தின் உறுப்பினர்கள் வடதிசையில் வெகுதொலைவில் வசிக்கின்றனர். எனது அடிப்படைக் கொள்கையினை நீங்கள் பின்பற்றவில்லை. நீங்கள் உறுதிஎடுத்துக்கொண்டதை அது காட்டுகிறது, உங்களை எம்மால் நம்பவைக்க / திருத்த முடியவில்லை. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து மிகவிரைவில் மக்கள் இங்கு வருவார்கள். நான் நெடுங்காலமாக கூறிவந்த ஆன்மநேய ஒருமைபாட்டினையும், சகோதரத்துவத்தையும் அவர்கள் போதிப்பார்கள். நான் உங்களுக்கு உபதேசம் செய்ய நினைத்த அந்த உண்மையினை அவர்கள் கூறுகையில்தான் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்."
(ள்ளலாரின் சீடர்கள் அனைவரும் நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாகவே இறுதிவரை இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வள்ளலாரின் உண்மை கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது புரிந்துக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரியவருகிறது.)

# விபூதி இரகசியம்:
சிவபக்தர்கள் சிலர், சாணத்தைச் சுட்ட சாம்பலை விபூதி என்று பூசிக்கொண்டு, நாம் இறைவனை வணங்கிவிட்டோம் என்று மனதிருப்தி யடைந்துக்கொள்வார்கள். இது புற வழிபாடு.
உண்மையான விபூதி என்பது 'கோ' என்றால் சப்த ரூபமான அகங்காரமான மனப்பசுவாகும். அதன் சாணம் என்பது காம, குரோதைகளான குணங்களாகும். அதைச் சுடுவது என்பது மனம் பற்றாமல் இருப்பது. ஜீவ சக்தியாயிருக்கின்ற வாயுவினால் நம்முடைய புருவமத்தியாகிய சுழிமுனையாயிருக்கின்ற அக்கினி நேத்திரத்தில் ஊதி, 'ராகத்துவேசாதிகளாகிய துர்விசாரங்களை அதாவது துர்குணங்களை எப்போது அங்கே எரிக்கின்றோமோ அப்போதுதான் நம்முள்ளில் பிரகாசித்து ஞானம் உண்டாகின்றது. ஆதலால் நமக்கு விபூதியின் பயன் கிடைக்க அகவழிபாடு தேவை.

 
மீண்டும் கூறுகிறேன், விபூதி பூசுதல், வழங்குதல் எம்மார்க்க சட்டப்படி குற்றம்... குற்றம்... குற்றமே...

அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!