Tuesday, December 6, 2016

அடிப்பவன் கடவுள்

அடிப்பவன் கடவுள்

கடவுள் ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு மனிதரிடமும், ஒவ்வொரு பொருள்களிலும் நிறைந்து இருப்பதாக நமது முன்னோர்கள் கூறுவார்கள். சுத்த சன்மார்க்கமும் அதனையே கூறுகின்றது. ஆனாலும் நாம் உலகிடையே அடிபடும்போது அக்கருத்து நம்மைவிட்டு நீங்கிவிடுதலையும் காணமுடிகின்றது.

கடவுள் ஒவ்வொரு மனிதரிடமும் இருப்பதாகக் கருதி தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது, பலம் வாய்ந்த மனிதன் ஒருவன் வந்து நம்மை தள்ளுவதால், நாம் நடைபாதையில் கீழே விழுகிறோம். உடனே இறுகிய முஷ்டியுடன் நாம் விரைவில் எழுந்து நிற்கின்றோம். கோபத்தினால் இரத்தம் தலைக்குப் பாய்கின்றது. உடனே நாம் பைத்தியகாரனாகிவிடுகிறோம். எல்லா நீதிகளையும் மறந்துவிடுகின்றோம். கடவுளை காண்பதற்கு பதில் அங்கு அவர் நமக்கு எதிரியாகத் தென்படுகின்றார். நாம் முடிந்தால் ஓங்கி ஒரு அறை கூட அறைந்துவிடுகிறோம். கடவுளை எங்கும் காணவேண்டும் என்ற நீதி நம்மை விட்டு வழுவிவிடுகின்றது.  கடவுளையே எதிரியாக நினைத்து அடித்தாலும் கூட, அது ஒருவகையில் வரவேற்கத்தக்கது. ஆனால் நாம் அந்நிலையில் கடவுளையே மறந்துவிடுகின்றோம் என்பதே எதார்த்தம்.

எல்லா உயிர்களும், எல்லா மனிதர்களும், எல்லா பொருட்களும் இறைவனே என்ற அனுபவம் ஒருவருக்கு எப்போது கிடைக்குமென்றால், தன்னை முழுவதும் இறைவனிடம் ஒப்படைக்கும் அன்பர்களுக்குத்தான் அவ்வனுபவம் கிடைக்கும். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற திட நம்பிக்கையை அவன் பெற்றிருப்பான்.

இந்த பெரும் அனுபவத்தைப் பற்றி வள்ளற்பெருமானே ஒரு கதையின் மூலம் விளக்கியிருப்பார்.

தெருவோரமாக ஒரு நிர்வான சந்நியாசி நடந்து செல்கின்றான், அப்போது அவனைப்பார்த்த ஒருவன் அச்சந்நியாசியிடம் மரியாதைக்கொண்டு அவனுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்து அவனது பசிக்கு உதவினான்.
அச்சாமியாரைப்பார்த்த இன்னொருவன், பெண்கள் நடமாடும் இத்தெருவில் நிர்வாணமாய்ப் போகின்றானே என்று கோபித்து அவனைக் கல்லால் அடித்தான்..

           இந்த இருநிகழ்ச்சியினையும் பார்த்த மூன்றாமவன், அந்த நிர்வாணசாமியாரையும் பழம் கொடுத்தவனையும், கல்லால் அடித்தவனையும் அழைத்துக்கொண்டு நீதிபதியிடம் சென்றான்.

         நீதிபதியிடம் சென்று, அந்த நிர்வானச் சாமியாருக்கு இப்புண்ணியவான் பழம் கொடுத்தான், இப்பாவி அவரைக் கல்லால் அடித்தான், என்றான் மூன்றாமவன்.

        நீதிபதி நிர்வானச் சாமியாரை நோக்கி, உம்மை யார் அடித்தது? என்று கேட்க, 'வாழைப்பழம் கொடுத்தவன் அடித்தான்' என்று கூறினான்.

        அதற்கு நீதிபதி யார் வாழைப்பழம் கொடுத்தது? என்று கேட்க, 'கல்லால் அடித்தவன் வாழைப்பழம் கொடுத்தான்', என்று நிர்வானச் சாமியார் கூறினார்.

         அதற்கு நீதிபதி யார் கல்லால் அடித்தது? என்று கேட்க, 'எங்களை உங்களிடம் இட்டுக்கொண்டுவந்தவன் கல்லால் அடித்தான்' என்று கூறினார்.

         இதனை கேட்ட நீதிபதி தீர்ப்பு கூறமுடியாமல் மயங்கியப்பின் ஒரு முடிவுக்கு வந்தார், 'இவர் மேலானஞானத்தை உடைய ஞானி' என ஒருவாறு உணர்ந்து, அடித்தவனுக்கு சிறைதண்டனை அளித்தார். (பிரபந்தத்திரட்டு – அ.திருநாவுக்கரசு பதிப்பு – பக்கம்-93)

வள்ளலார் சொன்ன இக்கதையிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவெனில், பேத உணர்வு நம்மிடமிருந்து நீங்க வேண்டும் என்பதே.  “அடித்தது போதும்… அணைத்திடல் வேண்டும்” என்று இறைவனிடம் வள்ளற்பெருமான் வேண்டுவார். எனவே நம்மை அடிப்பதும் இறைவனே...! நம்மை அணைப்பதும் இறைவனே…!  நம்மை அடிக்கும் மனிதனும் இறைவனே…! நம்மை அணைக்கும் மனிதனும் இறைவனே…!

தன்னளவில் பாதிப்பு ஏற்படும்போது மட்டுமே நாம் இந்நீதியினை கடைபிடிக்க வேண்டும். பிறர் பாதிக்கப்படும்போது, அது இறைச்செயல் என நாம் சும்மா இருப்பது தகாது. பரோபகாரத்தை மறந்துவிடக்கூடாது.

நாமெல்லாம் சுத்த சன்மார்க்கர்களாய் சுத்த சன்மார்க்க நீதியுடன் வாழ்வோம். இந்நீதியினை கடைபிடிப்பது மிகவும் கடினம்தான். முயலுவோம்… முடியும்…! ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டும் வல்லமை பெறுவோம். வாழ்க சுத்த சன்மார்க்க நீதி.- TMR



பேப்பர் சுவாமிகள்

பேப்பர் சுவாமிகள்

          திருக்குற்றாலத்தை அடுத்த இலஞ்சி என்னும் ஊரில் சுவாமிகள் தமது அருளாட்சியைத் தொடங்கினார்கள். சுவாமிகள் எப்பொழுதும் தமது கைகளில் பேப்பர் செய்தித்தாள்களை வைத்திருப்பது வழக்கம். கீழே கிழிந்து கிடக்கும் தாள்களை எடுத்து அவற்றை ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொள்வார். பின்னர் அவற்றைப் பார்த்து வாசிப்பார். வாசித்தவை மறுநாள் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக வரும். இவற்றைக் கண்ட மக்கள் வியப்படைவார்கள். இதனாலேயே சுவாமிகளை மக்கள் பேப்பர் சுவாமிகள் என்று பெயரிட்டழைத்தனர்.


          இலஞ்சியிலுள்ள பெரியவர்கள் சுவாமிகளைப் பற்றிக்கூறும் போது, "சுவாமிகள் சுமார் ஐந்தரை அடி உயரம் இருப்பார். ஜிப்பா சட்டையும் வேஷ்டியும் அணிவது வழக்கம். இரண்டு கைகளிலும் காப்பு அணிந்திருப்பார். கால்களில் பூட்ஸ் அணிந்திருப்பார்" என்று கூறுகின்றனர்.

          சுவாமிகள் இலஞ்சியில் அருளாட்சி செய்த காலத்தில் ஓரிடத்தில் நிலையாக இருந்தது இல்லை. சுவாமிகள் எங்கிருப்பார், எப்பொழுது வருவார், போவார் என்று தெரியாது. இலஞ்சியில் உள்ள பெருந்தெரு பிள்ளையார் கோயில், குன்னக்குடி பிள்ளையார் கோயில், கீழ் இலஞ்சியில் உள்ள நாராயணசுவாமி கோயில் போன்ற இடங்களில் சுவாமிகள் தவமிருப்பார்கள்.

          பேப்பர் சுவாமிகள் மிகுந்த அருளாற்றல் மிக்கவராக விளங்கினார்கள். சுவாமிகள் பரிபூரணமடைவதற்கு முன் இறுதிப் பத்தாண்டுகள் இளையசனேந்தல் ஜமீனில் இருந்தார்கள். ஜமீனில் மூத்த ஜமீன், இளைய ஜமீன் இருவருக்கும் ஆண் வாரிசுகள் இல்லை. ஒருமுறை சுவாமிகளை வணங்கிய இளைய ஜமீன் நரசிம்ம அப்பாசாமி, தமக்கு பிள்ளை இல்லாக்குறையை மனம் உருகச் சொல்ல... சுவாமிகள் இரண்டு கடுக்காய்களை அவரிடம் கொடுத்து உனக்கு சிம்மலக்னத்தில் இரண்டு ஆண்குழந்தைகள் பிறக்கும் பிறக்கும் என ஆசீர்வதித்தார். சொன்னபடியே குழந்தைகள் பிறந்தனர். முதல் ஆண் குழந்தைக்குப் பெரிய பேப்பர் என்றும், இரண்டாம் ஆண் குழந்தைக்கு சின்ன பேப்பர் என்றும் பெயரிட்டு ஜமீன்தாரர் மகிழ்ந்தார்.

          சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மழையில்லா நிலையில் மழை பெய்வித்தது, சிறுவன் தவறுதலாகக் கொடுத்த நவபாஷணத்தைச் சாப்பிட்டும் உயிரோடு இருந்தது, சுவாமிகள் கேட்டும் வைத்துக்கொண்டே இல்லை என்று சொன்னதால் ஊறுகாய்ப் பானையில் புழுவாய் ஆய்ந்தது, வறுமையில் வாடிய அன்பருக்கு அருள்பாலித்தது, குத்தகைக்கு எடுத்த பட்டாமரங்களை தளிர்க்கச் செய்து காய்த்துக் குலுங்க வைத்தது, முத்துக்கோனார் என்பவரின் இறந்துபோன இரண்டு வயது மகனை உயிர்பெற்று எழச் செய்தது, ஒரே நேரத்தில் இலஞ்சியிலும், இளையசனேந்தம் அரண்மனையிலும், அன்பர் ஒருவர் வீட்டிலும் காட்சி கொடுத்தது, அன்பர் ஒருவர் சிறுநீரகங்கள் பழுதடைந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலிருந்ததை மாற்றிக் குணமாக்கியது போன்ற அற்புதங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

          பேப்பர் சுவாமிகள் வைத்தியத்திலும் சிறந்து விளங்கினார்கள். கீழ்இலஞ்சி இராமசாமி, திருநெல்வேலி முத்தையாபிள்ளை போன்றோர் சுவாமிகளிடம் மருத்துவம் கற்றனர். இவர்களுள் முத்தையா பிள்ளையிடம் ஜி.டி.நாயுடு, நீதிபதி பலராமையா போன்றோர் மருத்துவம் பயின்று இருக்கின்றனர்.

          1946-ஆம் ஆண்டு முதல் 1950-ஆம் ஆண்டு வரை இளையசனேந்தலில் தவத்தை மேற்கொண்ட சுவாமிகள் 1950-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை மெளன தவத்தில் வீற்றிருந்தார்கள். தமிழ்நாட்டின் தென்பகுதியில் தமது ஞானப்பணி நிறைவடைந்ததை உணர்ந்த சுவாமிகள் தாம் ஜீவசமாதி ஆகப் போவதை ஜமீன் குடும்பத்தார்க்கு உணர்த்தினார்கள். 14-05-1956-ஆம் ஆண்டு சித்திரை மாதம் 31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 01.30 மணியளவில் திருவாதிரை நட்சத்திரத்தில் பேப்பர் சுவாமிகள் பரிபூரணமடைந்தார்கள்.

          ஆண்டுதோறும் சித்திரை வளர்பிறை திருவாதிரை நட்சத்திரத்தில் குருபூஜையை இளையசனேந்தல் ஜமீன் குடும்பத்தினர் சிறப்பாக நடத்திவருகின்றனர். கோயில்பட்டியிலிருந்து திருவேங்கடம் இராஜபாளையம் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் இளையசனேந்தல் என்னும் ஊரில் உள்ள ஜமீன் அரண்மனையின் ஒரு பகுதியில் பேப்பர் சுவாமிகளின் அதிஷ்டானக் கோயில் உள்ளது. அழகிய மண்டபத்தின் நடுவில் சமாதி மேடை உள்ளது. கிழக்குப் பார்த்த சன்னதியாக சிவலிங்க பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.    


வாமனா அவதாரம்

வாமனா அவதாரம்

காசிபர் என்பது மனம். இவரது பிள்ளையாகிய மாபலிச் சக்கரவர்த்தியாவது மனதின் மந்தம். அதில் உண்டாகிய சீதம் சாக்கிரத்திலும் சுழுத்தியிலும் நிறைந்து நின்றது. உலகளந்த பெருமாள் ஒருகால் மேலும் ஒருகால் கீழும் அளந்து ஓர் அடிக்கு இடமில்லா திருந்தது. - Vallalar


பிரகலாதனின் வம்ச்த்தில் வந்தவனே மகாபலிச் சக்கரவர்த்தி. இவன் முற்பிறவியில் எலியாக இருந்தான். இந்த எலி, வேதாரண்யம் கோயில் கருவறையில் நுழைந்து அங்கு எரிந்துக்கொண்டிருந்த சர விளக்கில் உள்ள நெய்யை உண்பதற்காக மேல் நோக்கி ஏறியது. அவ்வமயம் அவ்விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. எலி, விளக்கில் உறைந்திருந்த நெய்யை உண்டபோது, தற்செயலாக திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாக எரிந்தது. அணையவிருந்த ஆலய விளக்கைத் தூண்டி எரியச் செய்ததால் அந்த எலி மகாபுண்ணியம் பெற்றது. அதன் விளைவாக மறுபிறவியில் கேரள நாட்டின் சக்கரவர்த்தியாக மகாபலி என்ற பெயருடன் அசுர குலத்தில் பிறந்தது அந்த எலி.

பிரகலாதனனின் மகனான விரோசனனின் மகனே இந்த மகாபலி சக்கரவர்த்தி. பிரகலாதன் வம்சத்தில் பிறந்ததால் தெய்வீகப்பற்று இருந்தாலும், பிரகலாதனின் தந்தை இரணியனின் அசுர குணமும் அவனிடம் கலந்து இருந்தது. அசுரர்களின் தலைவனான மகாபலி தேவர்களுடன் ஏற்பட்ட போரில் கொல்லப்படுகின்றான். ஆனால் அசுர குரு சுக்கிராச்சாரியாரின் தவ வலிமையால் மகாபலி மீண்டும் உயிர்பெற்று, மீண்டும் தேவர்களுடன் போரிட்டு தேவர்களையும், இந்திரனையும் அடித்து உதைத்து தேவலோகத்தைக் கைப்பற்றுகின்றான்.


தெவர்களும் இந்திரனும் தேவலோகத்தை கைப்பற்ற விஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார்கள். விஷ்ணு மகாபலியை பலியிட வாமன அவதாரம் எடுக்க முடிவெடுக்கின்றார். (திருமால் அவதாரத்தில் வாமன அவதாரம் ஐந்தாம் அவதாரம்) இந்திரனின் தாயான அதிதிக்கும் தந்தையான காசிபருக்கும் மகனாக வாமனர் என்ற பெயரில் மகனாகப் பிறக்கின்றார். புரட்டாசி மாதம், சுக்கில பட்சம், திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும்போது வாமனன் இப்பூமியில் பிறந்தார். இந்நாளை விஜய துவாதசி என்று பெரியோர்கள் பெயரிட்டனர். குள்ளமான உயரம், உபநயனம் முடிந்து, தலையில் அரைக்குடுமி, மார்பில் பூணூல், கையில் சிறுகுடை, ஒரு கமண்டலம் ஆகியவற்றுடன் மகாபலியை பலியிட கிளம்புகின்றார்.

அவ்வமயம் மகாபலி ஒரு மாபெரும் யாகத்தைச் செய்துகொண்டிருக்கின்றார். வாமனர் நேராக அங்கே செல்கிறார். யாகம் நடக்கும் இடத்தில் பிராமணனுக்கு மரியாதை செய்வது வழக்கம். அந்த முறையில் மகாபலி சக்கரவர்த்தி, மகாபலியை அழைத்து கால் கழுவி, மரியாதை செய்வித்து, தங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள், தருகின்றேன் என்றான்.

அந்தக்கட்டத்தில் வந்திருப்பது சாதாரண ஆள் இல்லை என சுக்கிராச்சாரியாருக்கு தெரியவர, மகாபலியை அழைத்து, அந்த குள்ளனை நம்பாதே, அவனுக்கு எதையும் தரவேண்டாம் என எச்சரித்தார். தனது குருவின் எச்சரிக்கையை ஏற்க மறுக்கின்றான்.  மகாபலி, தன் கையில் உள்ள கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து, தருவதாகச் சத்தியம் செய்ய முனையும்போது, சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி கமண்டல ஓட்டையை அடைத்துக்கொள்கின்றார். வாமனர் தன் குடையிலிருந்து ஒரு கம்பியை எடுத்து, ஓட்டையைக் குத்த நீர் வருகின்றது. சுக்கிராச்சாரியாருக்கு அதனால் ஒரு கண் பார்வையும் போய்விட்டது.

இப்போது தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் என்றவுடன், வாமனரும் எனக்கு எனது காலால் மூன்றடி மண் வேண்டும் எனக்கூறுகின்றார். இவரது குள்ள உருவத்திற்கு மூன்றடி என்ன? எத்தனை அடிவேண்டுமானாலும் தரலாம் என நினைத்த மகாபலி… தருகின்றேன் என கமண்டலத்திலிருந்து நீரினை தெளித்து வாக்களிக்கின்றான்.

அவ்வளவுதான்… அந்த குள்ள வாமனன் விஷ்வரூபம் எடுத்து ஓரடியால் பூமியை அளைந்து, இரண்டாவது அடியால் ஆகாயத்தை அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்கிறார். தனது வாக்கினை காப்பாற்றுவதற்காக, மூன்றாவது அடியினை எனது தலையில் வையுங்கள் என்று கூறுகிறான் மகாபலி.

மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அப்படியே அவனை பாதாளத்தில் அழுத்தி சம்ஹாரம் செய்கின்றார் வாமனான விஷ்ணு பகவான். அதுமுதல் விஷ்ணுவை ஓங்கி உலகலந்த உத்தமன் / திருவிக்ரமன் என்று போற்றுவர் மக்கள்.


பகவான் கால் பட்டதும் மகாபலியின் ஆணவம் நீங்கியது. அந்தச் சமயத்தில், “பகவானே, ஒரு வரம் வேண்டும்” என்றான் மகாபலி, ‘என்ன?’ என்று  பகவான் கேட்க, “பிரபுவே, நான் பாதாளத்தில் அழுத்தப்படும் இந்த நாள் போற்றப்படவேண்டும். இதே நாளில் நான் மீண்டும் என் நாட்டு மக்களைக் காண வேண்டும்” என்றான். அந்த வரத்தை அருளி, ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக  இடம் பெறுவாய் என்ற வரத்தையும் தருகின்றார் பகவான் விஷ்ணு.

பகவானிடம் மகாபலி வாங்கிய வரத்தின்படி ஆவணி மாதம் திருவோண நாளில் மக்களைக் காண கேரள நாட்டிற்கு மகாபலி வருவதாக இன்றும் நம்பப்படுகின்றது. ஆகவே அந்நாளின் கேரளாவில் ஓணம் பண்டிகையாக இந்நிகழ்ச்சி கொண்டாடப்படுகின்றது.

என்ன… வாசகர்களே… படித்தீர்களா?... எப்படி இருந்தது?... அப்படியே உண்மையில் இவையெல்லாம் நடந்ததுபோன்று ஒரு கற்பனை உலகிற்கு சென்று வந்திருப்பீர்களே!...  பலருக்கு மெய் சிலிர்த்திருக்கும்!... ஆம் நமது புராணக்கதைகளின் சக்தி நம்மை வசீகரிக்கும் தன்மையுடையது. சாதாரணமாக தொலைக்காட்சி நாடகத்தைப் பார்த்தே நாம் உணர்ச்சிவசப்பட்டு அழுவது உண்டு. இந்த அடிப்படை மனக்கவர்ச்சியால்தான் நாம் கடவுள் பெயரைச் சொல்லி வரும் புராணத்தையினை அப்படியே நம்பிவிடுகின்றோம்.

இந்த புராணக்கதையினைப் பற்றி நமது வள்ளற்பெருமான் என்ன கூறுகின்றார் என்பதனைப் பார்ப்போம்…
மேற்காணும் புராணக்கதைக்கும் வள்ளற்பெருமான் கூறுகின்ற செய்திக்கும் சற்று மாறுதலை நாம் முதலில் காணமுடிகின்றது. அதாவது காசிபர் என்பவர் மகாபலி சக்கரவர்த்தியின் தந்தை என வள்ளற்பிரான் கூறுகின்றார். ஆனால் இந்த காசிபர் என்பவர் இந்திரனின் தந்தை என புராணம் கூறுகின்றது. மற்றும்  இக்கதையின் படி வாமனனின் தந்தையாக காசிபர் விளங்குகின்றார். இப்புராணத்தின் படி விரோசன் என்பவனின் மகனே மகாபலி சக்கரவர்த்தியாவார். அந்த அளவில் மட்டும் சிறு வேறுபாட்டினை நாம் காண்கின்றோம்.

அதாவது இப்படி மாற்றி படிக்க வேண்டும் என எண்ணுகின்றேன், “காசிபர் என்பது மனம். இவரது பிள்ளையாகிய வாமனன் என்பது மனதின் மந்தம்…” இவ்வாறே நாம் இதனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.
எனினும் காசிபரின் உண்மை, மகாபலியின் உண்மை என்ன? என்பதை தெளிவாகவே கூறியிருக்கின்றார். நாம் அதனை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

காசிபர் – மனம்
வாமனர் – மனதின் மந்தம்
சீதம் – குளிர்ச்சி
சாக்கிரம் / மேல் – ஆன்மாவின் விழிப்பு நிலை
சுழுத்தி / கீழ்  – புலன்கள் செயலற்று உறங்கும் நிலை

வாமனாவதாரம் என்பது நமது மனதின் அழிவினைக் குறித்து நிற்கின்றது. மந்தம் என்றால் தென்றல் அல்லது காற்று எனப்பொருள்படும். “மந்தம் ஆர் பொழில்… மாந்துறை”, “மந்தம் வந்துலவு சீர் மாமழ பாடியே…” என்று தேவரம் பாடுகின்றது. இவ்விடத்தில் மந்தம் என்பது தென்றல் என்ற பொருளினைத் தரும். நாமும் ‘மனதின் மந்தம்’ என்பதை மனதில் ஏற்படும் தென்றலான மனஓட்டத்தை குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாறாக மனதின் மந்தம் என்பதனை மனதில் ஏற்படும் சோர்வு என்ற நேரடியான பொருளை எடுத்துக்கொள்ளக்கூடாது.

நமது மனஓட்டம் என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் அடிவொட்டியே அமையும். அதாவது சீதம் என்ற குளிர்ச்சி நமது மனதிற்கு எப்போது ஏற்படுமென்றால்?, நமது மூச்சு இடபுறமாக ஓடும்போது ஏற்படும். இதனை சந்திர கலை என்பர். இந்த சந்திர கலையில் மூச்சு ஓடும்போது நமது மனம் நமது ஆன்மாவின் விழிப்பு நிலையிலும் செல்லும் அதே நேரத்தில் பாதாள நிலையான நமது ஐம்புலன்களும் செயலற்று உறங்கும் நிலையிலும் செல்லும். இதை விடுத்து அடுத்த நடு நிலைக்குச் செல்லத் தெரியாது. அப்படி செல்லமுடியாமல் தவிக்கும் நமது மனதைத்தான் வாமனனாக சித்தரித்தார்கள். இது ஜீவ அறிவினைக் குறிக்கும்.

கந்தகக் காற்று சுவாசம் ஏற்படும்போது அதாவது வலப்புற சுவாசமான சூரியக் கலை நிகழும்போது நமது மனம் விழிப்பு நிலையில் மட்டுமே இருக்கும். அப்போது நமக்கு ஆன்ம அறிவு ஏற்படும். அதனாலேயே வள்ளற்பெருமான் சூரிய கலையிலே எப்போதும் இருக்குமாறு நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள சொல்வார்.

இவை இரண்டுமின்றி சுழுமுனை என்ற நடுக்காற்றும் உள்ளது. நமது நாசியில் இருபுறமும் சுவாசம் சென்று வரும். இந்நேரத்தில்தான் சமாதி கைகூடும். அந்நிலையில் கருணை முயற்சியினால் சமாதி கூடாமல் சகஜ நிலைக்கு நாம் திரும்ப வேண்டும் என்பார் வள்ளலார். அதாவது நமது மனம் அழியும் நிலை வரும். மனித மனம் எப்போது அழிவுறுகிறதோ அந்தக் கணமே அங்கு இறைவனின் மனம் செயல்படத்துவங்கும். அந்நிலையில் ஒரு மனிதன் உத்தமனாகின்றான். “உத்தமனாகுக… ஓங்குக…” என்று இறைவனே நம்மை வாழ்த்தும் நிலை ஏற்படும்.

அப்படிப்பட்ட நடு நாடியில் (சுழுமுனை சுவாசம்) நமது மனம் அடியெடுத்து வைப்பதுதான், வாமனன் மகாபலியின் தலையில் கால் வைத்த நிலை. இதனை உணர்த்த வந்தவர்கள் ஏதோ கடவுள் பெயரால் கதை கட்டிவிட்டு சென்றுவிட்டார்கள். நாமும் அந்தக் கதைக்கடவுளே உண்மை என நம்பி நமது காலத்தை கடந்து மாண்டுபோகின்றோம். இனியும் நாம் அவ்வாறு இராமல் சுத்த சன்மார்க்கத்தின் உண்மை அறிந்து மேலேறுவோம். - TMR


ச.மு.க. - 92-ஆம் ஆண்டு நினைவாஞ்சலி

வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அவர்களின் 92-ஆம் ஆண்டு நினைவாஞ்சலி 05-12-2016 – அன்று காரணப்பட்டு கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. 










Sunday, December 4, 2016

சன்மார்க்க விவேக விருத்தி – டிசம்பர் 2016

சன்மார்க்க விவேக விருத்தி – டிசம்பர் 2016


அன்பர்களுக்கு வந்தனம்!

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமான் அருளிய "சன்மார்க்க விவேக விருத்தி" என்கிற மாதாந்திர மின்னிதழினை கீழ்காணும் இணைப்பினை சுட்டி பதிவிறக்கம் செய்து படித்து பயனுறலாம்.

http://www.vallalarspace.com/user/c/V000022678B

(OR)

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWaTdPdlBBay1oRzQ/view?usp=sharing