Tuesday, December 6, 2016

பேப்பர் சுவாமிகள்

பேப்பர் சுவாமிகள்

          திருக்குற்றாலத்தை அடுத்த இலஞ்சி என்னும் ஊரில் சுவாமிகள் தமது அருளாட்சியைத் தொடங்கினார்கள். சுவாமிகள் எப்பொழுதும் தமது கைகளில் பேப்பர் செய்தித்தாள்களை வைத்திருப்பது வழக்கம். கீழே கிழிந்து கிடக்கும் தாள்களை எடுத்து அவற்றை ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொள்வார். பின்னர் அவற்றைப் பார்த்து வாசிப்பார். வாசித்தவை மறுநாள் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக வரும். இவற்றைக் கண்ட மக்கள் வியப்படைவார்கள். இதனாலேயே சுவாமிகளை மக்கள் பேப்பர் சுவாமிகள் என்று பெயரிட்டழைத்தனர்.


          இலஞ்சியிலுள்ள பெரியவர்கள் சுவாமிகளைப் பற்றிக்கூறும் போது, "சுவாமிகள் சுமார் ஐந்தரை அடி உயரம் இருப்பார். ஜிப்பா சட்டையும் வேஷ்டியும் அணிவது வழக்கம். இரண்டு கைகளிலும் காப்பு அணிந்திருப்பார். கால்களில் பூட்ஸ் அணிந்திருப்பார்" என்று கூறுகின்றனர்.

          சுவாமிகள் இலஞ்சியில் அருளாட்சி செய்த காலத்தில் ஓரிடத்தில் நிலையாக இருந்தது இல்லை. சுவாமிகள் எங்கிருப்பார், எப்பொழுது வருவார், போவார் என்று தெரியாது. இலஞ்சியில் உள்ள பெருந்தெரு பிள்ளையார் கோயில், குன்னக்குடி பிள்ளையார் கோயில், கீழ் இலஞ்சியில் உள்ள நாராயணசுவாமி கோயில் போன்ற இடங்களில் சுவாமிகள் தவமிருப்பார்கள்.

          பேப்பர் சுவாமிகள் மிகுந்த அருளாற்றல் மிக்கவராக விளங்கினார்கள். சுவாமிகள் பரிபூரணமடைவதற்கு முன் இறுதிப் பத்தாண்டுகள் இளையசனேந்தல் ஜமீனில் இருந்தார்கள். ஜமீனில் மூத்த ஜமீன், இளைய ஜமீன் இருவருக்கும் ஆண் வாரிசுகள் இல்லை. ஒருமுறை சுவாமிகளை வணங்கிய இளைய ஜமீன் நரசிம்ம அப்பாசாமி, தமக்கு பிள்ளை இல்லாக்குறையை மனம் உருகச் சொல்ல... சுவாமிகள் இரண்டு கடுக்காய்களை அவரிடம் கொடுத்து உனக்கு சிம்மலக்னத்தில் இரண்டு ஆண்குழந்தைகள் பிறக்கும் பிறக்கும் என ஆசீர்வதித்தார். சொன்னபடியே குழந்தைகள் பிறந்தனர். முதல் ஆண் குழந்தைக்குப் பெரிய பேப்பர் என்றும், இரண்டாம் ஆண் குழந்தைக்கு சின்ன பேப்பர் என்றும் பெயரிட்டு ஜமீன்தாரர் மகிழ்ந்தார்.

          சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மழையில்லா நிலையில் மழை பெய்வித்தது, சிறுவன் தவறுதலாகக் கொடுத்த நவபாஷணத்தைச் சாப்பிட்டும் உயிரோடு இருந்தது, சுவாமிகள் கேட்டும் வைத்துக்கொண்டே இல்லை என்று சொன்னதால் ஊறுகாய்ப் பானையில் புழுவாய் ஆய்ந்தது, வறுமையில் வாடிய அன்பருக்கு அருள்பாலித்தது, குத்தகைக்கு எடுத்த பட்டாமரங்களை தளிர்க்கச் செய்து காய்த்துக் குலுங்க வைத்தது, முத்துக்கோனார் என்பவரின் இறந்துபோன இரண்டு வயது மகனை உயிர்பெற்று எழச் செய்தது, ஒரே நேரத்தில் இலஞ்சியிலும், இளையசனேந்தம் அரண்மனையிலும், அன்பர் ஒருவர் வீட்டிலும் காட்சி கொடுத்தது, அன்பர் ஒருவர் சிறுநீரகங்கள் பழுதடைந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலிருந்ததை மாற்றிக் குணமாக்கியது போன்ற அற்புதங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

          பேப்பர் சுவாமிகள் வைத்தியத்திலும் சிறந்து விளங்கினார்கள். கீழ்இலஞ்சி இராமசாமி, திருநெல்வேலி முத்தையாபிள்ளை போன்றோர் சுவாமிகளிடம் மருத்துவம் கற்றனர். இவர்களுள் முத்தையா பிள்ளையிடம் ஜி.டி.நாயுடு, நீதிபதி பலராமையா போன்றோர் மருத்துவம் பயின்று இருக்கின்றனர்.

          1946-ஆம் ஆண்டு முதல் 1950-ஆம் ஆண்டு வரை இளையசனேந்தலில் தவத்தை மேற்கொண்ட சுவாமிகள் 1950-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை மெளன தவத்தில் வீற்றிருந்தார்கள். தமிழ்நாட்டின் தென்பகுதியில் தமது ஞானப்பணி நிறைவடைந்ததை உணர்ந்த சுவாமிகள் தாம் ஜீவசமாதி ஆகப் போவதை ஜமீன் குடும்பத்தார்க்கு உணர்த்தினார்கள். 14-05-1956-ஆம் ஆண்டு சித்திரை மாதம் 31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 01.30 மணியளவில் திருவாதிரை நட்சத்திரத்தில் பேப்பர் சுவாமிகள் பரிபூரணமடைந்தார்கள்.

          ஆண்டுதோறும் சித்திரை வளர்பிறை திருவாதிரை நட்சத்திரத்தில் குருபூஜையை இளையசனேந்தல் ஜமீன் குடும்பத்தினர் சிறப்பாக நடத்திவருகின்றனர். கோயில்பட்டியிலிருந்து திருவேங்கடம் இராஜபாளையம் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் இளையசனேந்தல் என்னும் ஊரில் உள்ள ஜமீன் அரண்மனையின் ஒரு பகுதியில் பேப்பர் சுவாமிகளின் அதிஷ்டானக் கோயில் உள்ளது. அழகிய மண்டபத்தின் நடுவில் சமாதி மேடை உள்ளது. கிழக்குப் பார்த்த சன்னதியாக சிவலிங்க பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.    


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.