Sunday, October 13, 2013

ஈத் அல்-அதா / ப‌க்‌ரி‌த்


 

ஈத் அல்-அதா / ப‌க்‌ரி‌த் : இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள்‌!

இஸ்லாமியர்களின் பெருநாட்கள் இரண்டு. ஒன்று ஈகைத் திருநாள், மற்றது தியாகத் திருநாள். தியாகத் திருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் யாவரும் இறை தூதர் இப்றாஹீம்(அலை) அவர்களின் புனித வாழ்வை கட்டாயம் நினைத்துப் பார்ப்பார்கள்.

தியாகத் திருநாள் (Eid al-adha,  عيد الأضحى  ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.

ஆம், நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் தியாகங்களை எண்ணிப் பார்த்து நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. நாமும் இப்றாஹீம் (அலை)அவர்களின் உன்னத தியாகத்தை சற்று நினைவு கூர்வோமா..

நபி ஆதம் அலைஹிவஸல்லம் முதல் முகம்மது நபி அவர்கள் வரைக்கும் மக்கள் நிலைமை சீர் குலைந்து சின்னாபின்னமாகும் போதெல்லாம் இறைவன் மக்கள் குலத்திலிருந்தே ஒரு நேர்மையாளரை தேர்ந்தெடுத்துத் தனது நேர்வழியையும், அதைப் புறக்கணிப் போர்க்கு அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்யவதையும் நபி(தூதர்) மூலமாக அவ்வப்போது போதித்து வந்துள்ளான்.

இப்படி தோன்றிய நபிமார்கள் பலரும் ஏக காலத்தில் அல்லாது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் தோன்றினார்கள். இவர்களுள் சுமார் 4,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக மன்னன் நம்ரூது என்பவனது சமகாலத்தில் தோன்றிய நபி இப்றாஹீம் அவர்களுக்கு இறைவன் தனதரும் தூதுவத்தை அளித்தான்.

கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும் பயப்படாது ஏக இறைக் கொள்கையை முழங்கிய நபி இப்றாஹீம் அவர்கள் அயல் நாடுகளுக்கும் பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். இறைவனே எல்லாம், அவனுக்கு ஈடு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப்பற்றோடு வாழ்ந்த நபி இப்றாஹீம் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தபோதும் குழந்தை கிடையாது. இந்நிலையில்தான் இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் இருகரம் ஏந்தி தூஆ செய்தார்கள்.

ஒன்றுக்கு இரண்டு தாரம் இருந்தும் எனக்கு ஏன் பிள்ளைப் பாக்கியத்தைக் கொடுத்தருளவில்லை. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால் ஓர் உற்ற தோழரையாவது எனக்களித்தருள்புரிவாயாக என உளமுருக பிரார்த்தனை செய்தார்கள்.

இப்றாஹீம் நபியுடைய இந்த இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான் அல்லாஹ். இப்றாஹீம் (அலை) அவர்களின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையாருக்கு இறையருளால் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார்கள். மட்டில்லா மகிழ்வு கொண்டார்கள் இப்றாஹீம் (அலை) அவர்கள். இறைவன் மீது அவரது பற்றுருதி மென்மேலும் பெருகியது.
இறைவன் இப்றாஹீம் நபி(அலை) அவர்களை ஒவ்வொரு முறை சோதித்தபோதும் இறை நிந்தனை செய்யாது எல்லா சோதனைகளிலும் வென்றார்கள். இறுதியாக மாபெரும் சோதனை நபி இப்றாஹீம் அவர்களுக்கு வந்தது.

ஓரிரவு இப்றாஹீம்(அலை) அவர்கள் ஒரு கனவுக் கண்டார்கள். ஆம் தன் மகனை தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போல இப்றாஹீம் (அலை) அவர்கள் கனவு கண்டார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவழியில் அர்ப்பணித்த இப்றாஹீம் நபி(அலை) அவர்கள் தாம் கண்ட கனவை செல்ல மகனிடம் அறிவித்தார்கள். இஸ்மாயில் அவர்களும் தம் தந்தையிடத்தில் இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றும்படி பணித்தார்.

தன்னைப் பெற்ற பாசத்தினால் எங்கே தந்தையின் மனம் மாறிவிடுமோ எனக்கருதிய இஸ்மாயில் நபியவர்கள் தந்தையின் கண்களைக் கட்டினார். கையிலே கட்டாரியையும் கொடுத்தார். தந்தையும் துணிந்தார். ஆனால் இறைவன் அந்த நரபலியைத் தடுத்து அவர்களின் தியாகத்தை மெச்சி, இதன் ஞாபகார்த்தமாக ஒரு ஆட்டை பலியிட்டு அவர்களையும் மற்றவர்களையும் புசிக்குமாறு கூறுகின்றான்.

பல பிள்ளைகளைப் பெற்றவனே தன் ஒரு பிள்ளையை இழக்க சஞ்சலப்படும்போது, ஒரே மகனையும் பலியிடத் துணிவதென்றால், நபி இப்றாஹீம் அவர்களின் தியாகத்தை என்னவென்பது?

இப்புனிதப் பெருநாளில் நாமும் இப்றாஹீம் நபியவர்களின் தியாகத்தை மனதில் நிறுத்தி, புத்தாடை பூண்டு, அதில் நறுமணம் தடவி, பள்ளி சென்று இறைவனை இதயம் கனிந்து தொழுது உற்ற நண்பர்களுடன் உறவாடி உற்றார் உறவினர்களுடன் உளப்பூரிப்போடு நல்வழிகாட்டிய நபிமார்களின் வழியில் ஏழைகளைப் போற்றி இறைபணிந்து வாழ்வோம்.

அன்பர்களே! அப்படியே தொடர்ந்து இந்தக் கதையினையும் படியுங்கள்,

“நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்து வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையார். மனைவி கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர், உடனே அந்த சிவதொண்டரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க எண்ணி, கணபதீஸ்வர ஆலயத்திற்கு விரைந்தார்.

திருக்கோயிலில் இருந்த அத்திமரத்தின் கீழே அந்த அகோரி உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் சென்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட சிறுத்தொண்டர், தம் இல்லம் வந்து உணவு சாப்பிட அழைத்தார். (இது நடந்தது சுமார் கி.பி.650 ஆம் ஆண்டு, தமிழ் மன்னன் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலம்)

“நான் வருவது இருக்கட்டும், நீதான் சிறந்த சிவதொண்டரா.? அதனால்தான் உன்னை சிறுத்தொண்டர் என்று மக்கள் அழைக்கிறார்களா.?” என்றார் அகோரி.

“அப்படியெல்லாம் இல்லை சுவாமி. சிவதொண்டர்களுக்கு விருந்து தந்து உபசரித்து அவர்கள் சாப்பிட்ட பிறகே நான் சாப்பிடும் வழக்கம். ஆதனால் என்னை சிறுத்தொண்டர் என்று அழைக்கிறார்கள்.” என்றார் பவ்யமாக.

“நான் வடதேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் சாப்பிடுவதை உன்னால் தரமுடியாது. அதனால் இங்கிருந்து நீ போய்விடு. வேறு யாராவது ஒரு பிச்சைக்காரன் நீ தரும் உணவை சாப்பிட வருவான். அவனை அழைத்து போ.” என்று அலட்சியமாக சிறுத்தொண்டரிடம் பேசினார் அகோரி்.

“நீங்கள் இவ்வாறு சொல்ல கூடாது சுவாமி. உங்களுக்கு எந்த வகை உணவு வேண்டும் என்று சொல்லுங்கள். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றார் சிறுத்தொண்டர்.

“நான் பசுமாமிசம் சாப்பிடுவேன். உன்னால் அதை சமைத்து தரமுடியுமா.? என்றார் அகோரி.

“இவ்வளவுதானே. என்னிடம் பசு, எருமை, ஆடு போன்றவை இருக்கிறது. உங்களுக்கு எந்த வகை பசுவின் மாமிசம் வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.“ என்றார் சிறுத்தொண்டர்.

பலமாக சிரித்தார் அகோரி.

“நான் கூறும் பசுமாமிசம் என்பது, பசுமாடு மாமிசம் அல்ல. நரமாமிசம். அதுவும் ஐந்து வயது பாலகனாக இருக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த மகனாக இருக்க வேண்டும். அவன் உடலில் எந்த ஊனமும் இருந்திருக்கக் கூடாது. அத்துடன் அந்த பாலகன் உயர்ந்த குலத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும். அவனை பெற்ற தாயே அவனை பிடித்துக்கொண்டு, அந்த பிள்ளையின் தகப்பன் அந்த பாலகனை வெட்ட வேண்டும். அப்படி வெட்டபட்ட பாலகனின் மாமிசத்தை அவனை பெற்றவளே சமைக்க வேண்டும். அப்படி சமைக்கும் போது, அழுது கொண்டே சமைத்தால் நான் சாப்பிடமாட்டேன்.” என்றார் அகோரி.

சிறுதொண்டர் எதுவும் பேச முடியாமல் நின்றார்.

“என்ன யோசிக்கிறாய். உன்னால் எனக்கு உணவு தர முடியாதல்லவா. அதனால்தான் சொல்கிறேன். இங்கிருந்து போய்விடு.” என்றார் அகோரி.

“அப்படியில்லை சுவாமி. உங்கள் உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன்.”

“அப்படியென்றால் நான் இங்கேயே இருக்கிறேன். நான் கேட்ட உணவுக்கு ஏற்பாடு செய்த பிறகு வந்து கூப்பிடு. நான் உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன்.” என்றார் அகோரி.

யோசனையோடு கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்தார் சிறுத்தொண்டர்.

அகோரி கூறியதை அனைத்தும் ஒன்றுவிடாமல் தன் மனைவியிடம் சொன்னார். “அகோரி கேட்ட உணவு நம்மால் தரமுடியுமா.? உன் மகனை கொடு நான் சமைக்க வேண்டும் என்று எந்த பெற்றோர்களிடமும் நாம் கேட்கமுடியும்.? அப்படியே கேட்டாலும் அது பெரும் பாவத்தை அல்லவா நமக்கு சேர்க்கும். அகோரி ஏன் நம் வீட்டிற்கு உங்களை தேடி வந்தார்?. வந்தவர் எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறார்?. உங்கள் சிவதொண்டில் பாதகம் விளைவிக்க விதி விளையாடுகிறதோ?. இனி என்ன செய்ய போகிறீர்கள்?.” என்றாள் திருவெண்காட்டு நங்கையார்.

“நீ சம்மதித்தால் என் சிவதொண்டுக்கு எந்த பங்கமும் வராது“ என்ற சிறுத்தொண்டர், “நம் பிள்ளையை அந்த அகோரிக்கு உணவாக படைக்கலாம். நீ இதற்கு சம்மதிப்பாயா?.“ என்றார்.

“உங்கள் கேள்விக்கு நம் பிள்ளைதான் பதில் சொல்ல வேண்டும்.” என்றாள் திருவெண்காட்டு நங்கையார்.

பள்ளிக்கு சென்றிருந்த மகன் சீராள தேவனை அழைத்து வந்தார்கள். அவனிடம் விஷயத்தை சொன்னார்கள். “உங்கள் விரும்பமே எனது விருப்பம்” என்றான் தயக்கம் இல்லாமல்.


சிறுதொண்டரின் வாரிசு, சிவபக்தியில் தன் தந்தைக்கு குறைந்தவனில்லை என்பதை நிரூப்பித்தான். மகன் வெட்டப்பட்டான். பிள்ளைகறியை நன்றாக கழுவி சமைக்க ஆரம்பித்தாள். தலை கறியை அகோரி சாப்பிட மாட்டார் என்ற எண்ணத்தில் தலைகறியை சமைக்காமல் தனியாக எடுத்து வைத்தாள்.

சமையல் தயாராகிவிட்டது. நீங்கள் சிவதொண்டரை அழைத்து வாருங்கள் என்றாள் தன் கணவரிடம் திருவெண்காட்டு நங்கையர்.

கணபதீஸ்வரர் திருக்கோயிலுக்கு விரைந்தோடி வந்தார் சிறுத்தொண்டர். அகோரியை வணங்கி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

மகன் எங்கே?

வாழையிலையின் முன்பு அமர்ந்தார் அகோரி. இலையில் பிள்ளைகறி இருப்பதை கண்டார். அவர் முகம் மாறியது.

“சிறுத்தொண்டனே. என்னை ஏமாற்றுகிறாயா. எங்கே தலைகறி.? பசியில் எனக்கு முன்னதாகவே சாப்பிட்டு விட்டீர்களா?” என்றார் கோபமாக அகோரி.

“சிவசிவா.. அப்படியில்லை சுவாமி. தலைகறி நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் என்று நினைத்து தனியாக வைத்திருக்கிறோம்.” என்றார் சிறுத்தொண்டர்.

“நாம் அதையும் சாப்பிடுவோம். கொண்டு வா.” என்றார் அகோரி.

பணி பெண்ணான சந்தன நங்கையார், சமையலறைக்கு சென்று உடனடியாக தலைகறியை சமைத்து எடுத்துவந்து இலையில் பரிமாறினாள். அகோரி சாப்பிடாமல் இருந்தார்.

“சுவாமி. ஏதேனும் குறையா.? ஏன் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்.” என்றார் சிறுத்தொண்டர்.

“எனக்கும் உன்னை போல் ஒரு பழக்கம் இருக்கிறது. நான் சாப்பிடும் போது என் அருகில் ஒரு சிவதொண்டரையும் அமர வைத்து அவருடன் சாப்பிடுவது என் வழக்கம். நீ போய் ஒரு சிவதொண்டரை அழைத்து வா.” என்றார் அகோரி.

“சுவாமி. ஏனோ தெரியவில்லை இன்று ஒரு சிவதொண்டரையும் காண முடியவில்லை. இறைவன் அருளால் நான் சிவதொண்டரான தங்களை மட்டும்தான் இன்று தரிசித்தேன்.” என்றார் சிறுதொண்டர்.

“ஓ அப்படியா. பரவாயில்லை. நீயும் சிவதொண்டன்தானே. வா. வந்து அமரு. நீயும் என்னுடன் சாப்பிடு.” என்றார் அகோரி.

அகோரியின் அருகில் அமர்ந்தார் சிறுத்தொண்டர். அவருக்கு வாழையிலையில் உணவு பரிமாறினாள் திருவெண்காட்டு நங்கையார்.

சிறுத்தொண்டர் உணவில் கை வைக்கும் போது, அவரின் கையை பிடித்து தடுத்தார் அகோரி.

“ஆமாம். உனக்கு ஒரு மகன் இருப்பதாக கேள்விப்பட்டேனே… எங்கே அவன். அவனையும் அழைத்து வா. ஒன்றாக சாப்பிடுவோம்.” என்றார் அகோரி.

“சுவாமி..அவன் வர மாட்டான்.” என்றார் சிறுத்தொண்டர்.

“ஏன் வர மாட்டான். போய் கூப்பிடு வருவான்.” என்றார் அகோரி.

தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்கள் சிறுத்தொண்டரும் அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும், பணிப் பெண் சந்தன நங்கையாரும்.

“வெளியே நின்று வாயை மூடிக்கொண்டிருந்தால் எப்படி?. வாய் திறந்து உன் மகனை கூப்பிடு வருவான்.“ என்று வீட்டுக்குள் இருந்தபடி அதட்டினார் அகோரி.

சிறுத்தொண்டரும், அவருடைய மனைவியும், “மகனே சீராள தேவா.. ஓடிவா. சிவதொண்டர் உன்னை காண அழைக்கிறார்.” என்று கதறினார்கள் சிறுத்தொணடரும் அவர் மனைவியும்.

அப்போது, “இதோ வந்துவிட்டேன் அம்மா.” என்று குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள்.

மகன் சீராள தேவன் எங்கிருந்தோ ஓடிவந்தான். தன் தாய்-தந்தையை கட்டி அணைத்துக்கொண்டான்.

சிறுத்தொண்டருக்கும் அவர் மனைவிக்கும், பணிபெண்ணுக்கும் தாங்கள் காண்பது கனவா நிஜமா என்றே நம்ப முடியவில்லை. வெட்டி கறியாக சமைக்கப்பட்ட மகன், உயிருடன் வந்து நிற்பதை கண்டு ஆனந்தம் அடைந்தார்கள். அவர்களின் துக்க கண்ணீர், ஆனந்த கண்ணீராக மாறியது. மகனை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.

வீட்டுக்குள் அகோரி இல்லை. அவருக்கு சமைக்கப்பட்ட பிள்ளைகறியும் இல்லை. மீண்டும் வெளியே வந்து அகோரியை தேடினார்கள்.

சிவதரிசனம்

அப்போது வானத்தில் சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் ரிஷப வாகனத்தில் தோன்றினார்கள்.

“சிறுத்தொண்டனே. அகோரியாக வந்தது நாமே, உன் சிவதொண்டு உலகறியவே இச்சோதனை தந்தோம். நம் தொண்டர்களில் சிறந்தவன் நீ என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள். உனக்கும் உன் மனைவி திருவெண்காட்டு நங்கையாருக்கும், மகன் சீராள தேவனுக்கும், பணிப்பெண்ணான சந்தன நங்கையாருக்கும் நாம் அருள் புரிந்தோம். எல்லா வளங்களையும் பெறுவீர்களாக” என்று ஆசி கூறினார்.”

இறைவனை நம்பினால் சோதனைகள் யாவும் கடந்து வந்துவிடலாம். இறைவன் தரும் சோதனைகளை அனுபவங்களாக தாங்கினால், ஒருநாள் உலகபுகழும் கிடைக்கும். பொறுமை என்ற வரத்தை எல்லோருக்கும் தந்தே இருக்கிறார் இறைவன். அந்த வரத்தை நாம்தான் பயன்படுத்த வேண்டும். இன்னல்களை கண்டு மனம் கலங்காமல் பொறுமை என்கிற வரத்தை பயன்படுத்தினால், நீங்காத பெருமை சேரும் என்ற உண்மையை நமக்கெல்லாம் உணர்த்தினார் பரஞ்சோதியார் என்கிற சிறுத்தொண்ட நாயனார்.

அன்பர்களே! இப்போது நாம் 4000 வருடங்களுக்கு முன்பு தற்போதய ஈராக்கில் நடைபெற்ற இறைவனின் திருவிளையாடலையும், 1363 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த இறைவனின் திருவிளையாடலையும் படித்தோம்.

இவையிரண்டிலும் இறைவன் / இறையடியவர் பிள்ளைக் கறியினை விரும்பியதாக அறிகிறோம். முதல் கதையில் இறைவன் விரும்பியப்படி பிள்ளையினை பலி கொடுக்கவே இல்லை. மாறாக ஒன்றுமறியாத ஆட்டினை பலிகொடுக்க இறைவன் கூறியதால், அவ்வாடு பலியானது.

இரண்டாம் கதையில், இறையடியவர் ஐந்து வயது பிள்ளையினை பலி கேட்க, தனது பிள்ளையினையே வெட்டி பலி கொடுத்து சமைத்து சாப்பிடத் துவங்கியதை படித்தோம். இந்த இருகதைகளிலும் இருந்து நமக்கு இறைவன் கூறும் உபதேசம் / உண்மைதான் என்ன?

இரண்டாம் கதையில் நடந்த தியாகத்தை, ஏன் நாம் முதல் கதையில் நடந்த தியாகத்தை நினைவு கூறும்படி இன்று நடக்கும் திருவிழாவினைப் போன்று கொண்டாடவில்லை?

இவை இரண்டில் எந்த இறை தொண்டர் உண்மையில் 'தியாகம்' செய்தார் என்பதனை இந்த இருகதைகளையும் மீண்டும் படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆட்டை தியாகம் செய்தவரா? தனது பிள்ளையினை தியாகம் செய்தவரா?

உணவில் சைவ பழக்கத்தை மேற்கொண்டவர், இறையடியவருக்காக தனது பிள்ளையைக் கொன்று சமைத்தவர் செய்த தியாகம் பெரிதா? அல்லது உணவில் அசைவ பழக்கத்தை மேற்கொண்டவர், இறைவனுக்காக ஒன்றுமறியாத ஆட்டைக் கொன்றவரின் தியாகம் பெரிதா?

இறையடியவர் சாப்பிடவேண்டும் என்று தனது மகனை தியாகம் செய்தது பெரிதா? தாங்கள் பங்கிட்டு சாப்பிடுவதற்காக ஆட்டை தியாகம் செய்தது பெரிதா?

எந்த இறைவன் பெரியவன்? என்று கேட்கமுடியாது. ஏனெனில் இரண்டு நிகழ்ச்சியிலும் திருவிளையாடல் செய்தது, ஒரே இறைவனாகத்தான் இருக்கமுடியும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. ஆனால் அதன் உண்மையினை அறியாமல், நாம் நமக்கு வசதியானதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை திருவிழாவாக தொடர்ந்து சடங்குகளாக கொண்டாடிவருகிறோம் என்பதுதான் சகிக்கமுடியாமல் உள்ளது.

ஆட்டினை வெட்டு தியாகம் செய்தார் என்பதற்காக, நாம் இவ்வுலகில் அதேபோல் ஆட்டினை வெட்டி பலியிட்டு உண்பதனை திருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். ஒருவேளை அந்த அடியார், இறைவன் கனவில் கூறியவாறு தனது மகனை பலியிட்டு தியாகம் செய்திருந்தால், உலக மக்களாகிய நாமும் அதே போன்று பலியிட்டு அந்த அடியவரின் தியாகத்தை வருடாவருடம் திருவிழாவாகக் கொண்டாடியிருப்போமா?

அன்று பலியிட்டது ஒரு ஆடுதான். அதற்காக அன்றைய வருடத்திலிருந்து இந்த வருடம்வரை எத்தனை கோடி கோடி ஆடுகள் இறைவன் பெயரால் பலியிட்டு உண்ணப்பட்டன? என்று அந்த இறைவன் கண்டிப்பாக அறிவான். இறைவன் ஆட்டை பலியிடசொன்னது அந்த அடியவரின் பக்தியினை சோதிப்பதற்காகத்தான். நம்மையெல்லாம் எந்த இறைவன் வந்து பலியிடசொன்னான் என்று தெரியவில்லை.

அந்த அடியவரின் பக்தி உண்மையானது எனில், அவர் நேரில் வந்த இறைவனிடம், "ஏதும் அறியாத இந்த ஆட்டினை பலிகொடுப்பதில் என்ன தியாகம் இருக்கப்போகிறது? எம் இறைவா! அதனால் தாங்கள் கனவில் கூறியபடி எம்மகனையே பலி கொடுத்து தியாகம் செய்ய விரும்புகிறேன்" என்றுதானே கூறியிருக்க வேண்டும். இந்த பதிலையே இறைவனும் அந்த அடியவரிடம் எதிர்பார்த்திருப்பான். ஆனால் நடந்தது வேறு, இன்று நடப்பதும் வேறாக உள்ளது. நம்முடைய நாவின் சுவைக்காக பலியிட்டு உண்டு ஏப்பமிடுவதற்க்காக, வசதியாக நமக்கு நாமே விதிகளை அமைத்துக்கொண்டு, இறைவன் கூறினான் என்று அவன் மீதே பழியினை போட்டு விழாக்களை கொண்டாடி வருகின்றோம் என்பதே உண்மை.

இறைவன் இவ்வுலகில் பல்வேறு பிரதேசங்களில், பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறுபட்ட அடியவர்களை / தீர்கதரிசிகளை அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கின்றார் என்று நாம் நம்புகின்றோம். நாளையும் பல இறையடியவர்கள் இம்மண்ணில் பிறப்பார்கள். இவர்களில் பலரது உபதேசங்களில், புலால் உண்பது தவறு என்றும், இறைவனின் பெயரால் பலியிடுவது தவறு என்றும் கூறியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

பல மதத்தவர்கள் பலியிடுவதெல்லாம், தன்னுடைய உணவிற்க்காகத்தானே அன்றி இறைவனை மகிழவைக்க அல்ல. துன்புறுத்தும்போதும் கொலையுறும்போதும் உடம்பில் தோன்றும் வலியும், உணர்வில் தொன்றும் வலியும், உயிரில் தோன்றும் வலியும், நரம்பில் தோன்றும் வலியும், எலும்பில் தோன்றும் வலியும், பாசப்பிணைப்பினால் வரும் வலியும் எல்லா உயிர்களுக்கும் ஒன்றாகவே ஓரிறைவன் படைத்துள்ளான் என்பதை அறிய எந்த இறைதூதரும் / இறையடியவரும் / நீங்களும் / நானும் / எவரும் தேவையில்லை, நமது மனசாட்சியே / அறிவே போதும். மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் எவ்வுயிருக்கும் துயரம் கொடுக்காமல் வாழ்ந்து அந்த ஓரிறைவனின் உலகை அடைவோம். இறைவனை நினைக்கும் பொருட்டு மகிழ்ச்சியாக நாம் கொண்டாடும் விழாக்களில், எவ்வுயிரையும் அழவைக்க வேண்டாமே.

உலக மக்களுக்கு எமது ஈத் அல்-அதா / ப‌க்‌ரி‌த் நல்வாழ்த்துகள்.  நன்றி.

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி

     

 

 

  

 

  

 

Thursday, October 10, 2013

தொழுவூர் வேலாயுத முதலியார்


தொழுவூர் வேலாயுத முதலியார்

 
வணக்கம்.

 கடந்த திருஅருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் (05-10-2013) அன்று  யாம் திருவொற்றியூர் சென்றிருந்தேன். யமது முக்கிய நோக்கம், வள்ளலாரின் முதன்மை மாணாக்கர் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' அவர்களது சமாதி நிலையத்தை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்பதே ஆகும்.

முதலில் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் உள்ளேயும், வெளியேயும் வள்ளலாரின் பிறந்தநாள் வாழ்த்துப் படங்கள், அங்கேயுள்ள சன்மார்க்க சங்கத்தவர்களால் அழகுபட வைக்கப்பட்டிருந்தன. கோயிலின் உள்ளே, அரசிடம் அனுமதி பெற்றுக்கொண்டு சிறப்பு அன்னதானமும் சன்மார்க்கச் சங்கத்தவர்களால் சிறப்புற நடைபெற்றுக்கொண்டிருந்தது.

 பிறகு, அங்கிருந்து 'பட்டினத்தார்' சமாதி நிலையம் சென்று தரிசித்தோம். திருவொற்றியூர் கடற்கரையோரம் இவரது சமாதி அமைந்துள்ளது. தற்போது அங்கு புதியதாக கட்டிட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பட்டினத்தாருக்கும் வள்ளலாருக்கும் சமாதி கிடையாது என்று அங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. பட்டினத்தார் அடிக்கடி தன்னை மறைத்து பிறகு வெளிபடுவார். அவர் இறுதியாக தன்னை மறைத்துக்கொண்ட இடத்தைதான் நாம் சென்று பார்க்கும் இடமாக உள்ளது. 'காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராது காண்', 'தீபம் இருக்க நெருப்பை தேடுவானேன்' போன்ற தத்துவ வரிகளை அங்கே காணமுடிந்தது.

 



அடுத்து, நாம் 'இராமலிங்கசாமி மடாலயம்' சென்றோம். ஜோதி வழிபாடு முடிந்தது. அங்குள்ள சிறிய மாடத்தில் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அப்படம் தெளிவாக இல்லை. இருப்பினும் அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அங்கிருந்த உள்ளூர்வாசியிடம் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' அவர்களின் சமாதி எங்குள்ளது? என வினவினோம்.

 


அவ்விடம் அடுத்த தெருவில் ஒரு பள்ளிக்கூடத்தினுள் அமைந்துள்ளது. அதனை தற்போது பார்க்கமுடியாது. நாங்கள் இரவு நேரத்தில் சென்றதால் அதனை பார்க்க முடியவில்லை. பள்ளிக்கூடம் இயங்கும் நேரத்தில் மட்டுமே அங்குச் சென்று  வழிபடமுடியும் என்று கூறினார். தொழுவூராரின் சமாதி நிலையம் எல்லாம் அந்தக்காலத்தில் இடுகாடாக இருந்தது என்றும் அவ்விடம் தற்போது, 'கலைஞர் எம்.எஸ்.முத்துகிருஷ்ணன் தொடக்கப்பள்ளி' என்ற ஒன்று இயங்கி வருவதாகக் கூறினார். பகல் பொழுதில் மாணவர்களும் ஆசிரியர்களும் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள் என்றும் கூறினார். பிறகு இராமலிங்கசாமி மடாலயத்தில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள தொழுவூராரின் சமாதி அமைந்துள்ள பள்ளிக்கூடத்தை சென்று வெளியிலிருந்துக்கொண்டே வணங்கிவிட்டு வந்தோம்.

 


வள்ளலார் அவர்களே வலிந்துச் சென்று ஆட்கொண்ட 'இராமலிங்கம்' என்கின்ற கல்பட்டு அய்யா அவர்கள், வள்ளலாருடன் இருந்துக்கொண்டே தவம் இருந்துக்கொண்டு ஜீவகாருணய பணியினை செய்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களது சமாதி நிலையம் வடலூரில் உள்ளது என்பதனை நாம் அறிவோம்.

இதுவரை வள்ளலாருக்கெனத் தனியாக பாசுரங்களை பெருமளவில் இயற்றியவர், வள்ளலாரின் அனுக்கத்தொண்டர் 'காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை ஆவார்கள். இவர் இயற்றிய 'பிரபந்தத் திரட்டு' என்ற நூலில் மொத்தம் 3466 பாடல்களை வள்ளல் அருளால் பாடியருளியிருக்கிறார்கள். இவர் படிப்பறிவு அற்றவர். வள்ளலாரின் கட்டளைக்கிணங்க, அவரது அருள்பெற்று பாடிய பாக்களே அன்றி, அவரது முயற்சியால் பாடப்பட்டவை அன்று. இவரது சமாதி நிலையம் காரணப்பட்டில் உள்ளது.

 அதற்கு அடுத்து, தனது படிப்பால் தமது புலமைத் திறத்தால் வள்ளலாரை பாடியவர் நமது வள்ளலாரின் முதன்மை மாணாக்கர், உபய கலாநிதிப் பெரும்புலவர் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' ஆவார்கள். 'உபய கலாநிதி' என்ற பட்டம் வள்ளலார் அவர்களே இவருக்கு வழங்கிய பட்டமாகும். 'திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறையீடு' என்ற இவரது நூலில் மொத்தம் 215 பாடல்கள் மூலம் வள்ளலாரை பாடியுள்ளார்.

தொழுவூர் வேலாயுத முதலியார் கி.பி 1832 ல் (நந்தன, ஆவணி 9) செங்கற்பட்டு மாவட்டம், திருவள்ளூர் கூற்றம், ஈக்காட்டுக் கோட்டம், சிறுகடல் என்னும் சிற்றூரில் தோன்றியவர்.

 தந்தையார் தொழுவூர் செங்கல்வராய முதலியார், தாயார் ஏலவார் குழலி ஆவார்கள், (தொழுவூர் அஞ்சல் நிலையம் பக்கம் அமைந்ததே சிறுகடல்).

தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மாகராஷ்டிரம், இந்துஸ்தானி ஆகிய பல மொழிகளில் புலமை பெற்றவர்.

 இவரின் மனைவியார் ஸ்ரீ சீரங்கம்மாள், மகன் திரு நாகேச்சுரன், மகள் சிவகாமி அம்மை,

1849 இல் இவர் தந்தையாரின் நண்பரான காளவாய் குப்பண்ண முதலியார் என்பவரால் வள்ளற் பெருமானிடம் சேர்ப்பிக்கபட்டார்,
பெருமானும் 'புதியவனல்லன்; நம்பிள்ளை நமக்கே கிடைத்தான்' என இவரை ஏற்றுக்கொண்டார்கள்.

பின்பு பலகாலம் பெருமானோடு வடலூரிலும், மேட்டுக்குப்பத்திலும் குடும்பத்தோடு தங்கி இருந்து தொண்டு செய்தார், பெருமானாரின் அருள் உபதேசங்களை பெற்றவர்,
நமது பெருமானாரின் தலைமை மாணவர் என்னும் உயரிய தகுதியினை பெற்றவர்,

நமது பெருமானாரின் கட்டளைக்கு ஏற்ப முதன் முதலாக திருக்குறள் வகுப்பை நடத்தியவரும் இவரே,
இறுக்கம் இரத்தினம் முதலியார் போன்றோரது முயற்சியால் பெருமானின் பாடல்கள் முதல் நான்கு திருமுறைகளாக 1867 இல் அச்சிடப்பட்ட போது, அப்பாடல்களுக்குத் "திருஅருட்பா" என்றும், அதன் பகுதிகளுக்குத் திருமுறை என்றும், இராமலிங்க அடிகள் என்னும் பெயருக்கு சிறப்பு பெயராக "திருஅருட்பிரகாச வள்ளலார்" என்றும் பெயரிட்ட பெருமை தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களையே சாரும்,

அவர் பாடிய திருஅருட்பா வரலாறு என்னும் நூலில் இவற்றை பற்றி விளக்கமாக அறியலாம்.
தொழுவூரார் பாடிய பல பக்தி பாடல்களை வள்ளற் பெருமானார் கண்ணுற்றருளி, 'நமது முதலியாரப்பா மதுர வாக்கிது', 'வித்துவான் பாட்டிது', 'அமுதப் பாட்டிது' எனப் பாராட்டி 'உபய கலாநிதி' எனப் பட்டமும் தந்தருளினார், பெருமானால் பட்டம் சூட்டப்பட்ட பெருமைக்கு உரியவர் இவர்.

பெருமான் சித்தி பெற்ற பிறகு பிரம்ம ஞான சபையின் அன்பர்களுக்கு, பெருமானைப்பற்றி வாக்கு மூலம் தந்தார்,
திருஅருட்பா ஐந்தாம் திருமுறையை 1880 இல் வெளியிட்டு சன்மார்க்க பெரும்பணி செய்தவரும் இவரே.

சென்னை 'பிரசிடென்சி' கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்,
முதல் மனைவியும் மகளும் இறந்து போய் விட்டதால் ஸ்ரீ சுவர்ணம்மாள் என்பவரைத் திருமணம் செய்து செய்து கொண்டார், இவர்களுக்கு மகன் செங்கல்வராயர்,

1889 இல் (சர்வதாரி, மாசி 12) இவர் திருவடிப்பேறு எய்தினார், திருஒற்றியூரில் வேலாயுத நகர், ஈசானமூர்த்தி தெரு, முத்து கிருஷ்ண தொடக்கப்பள்ளி வளாகத்தினுள் சமாதி உள்ளது.
இவர் பல உரை நடை நூல்களையும் விநாயகர், முருகர், சிவன், அம்பிகை, திருஞானசம்பந்தர், மயிலம் சிவஞான பாலையர் ஆகியோரின் மீதும் பல செய்யுள் நூல்களை செய்துள்ளார்.

திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறை (முறையீடு) என்னும் நூலினை பாடி வள்ளல் பெருமானாரை போற்றியுள்ளார்,
அந்நூலின் பகுதிகள் இவை

1. சற்குரு துதிகள் (4 பாடல்கள்)

2. திருப்பள்ளி எழுச்சி (12 பாடல்கள்.

3. நாம சங்கீர்த்தனம் (11 பாடல்கள்)

4. சரண மஞ்சரி (24 பாடல்கள்)

5. அருணாம மந்திராமிர்தம் (10 பாடல்கள்)

6. திவ்விய நாமாமிர்தம் (10 பாடல்கள்)

7. போற்றி சங்கீர்த்தனம் (10 பாடல்கள்)

8. முறையீட்டு விண்ணப்பம் (11 பாடல்கள்)

9. குறையிரந்த விண்ணப்பம் (11 பாடல்கள்)

10. அற்பித்த விண்ணப்பம் (10 பாடல்கள்)

11. திருக்கழற் சந்நிதி விண்ணப்பம் (3 பாடல்கள்)

12. மங்கள வாழ்த்து (5 பாடல்கள்)

13. வாழ்த்து திருவிருத்தம் (1 பாடல்)

14. அலங்காரம் (90 பாடல்கள்)
என 215 பாடல்கள் அமைந்துள்ளன, இது 1912 ஆம் ஆண்டு சனவரி மாதம் அவரது பிள்ளைகளால் தனி நூலாக வெளியிடப்பட்டது.

(Reference: கடலூர்
புலவர் ஞானப்பிரகாசம் அவர்கள்)

சதபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் ஆனால் அது நூரு பொருளை தரும், அதுபோல

தசபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் அது பத்து பொருளை தரும், தசபங்கியை இங்கு

வெளியிட்டுள்ளோம் சத பங்கி கிடைக்க வில்லை.

சத பங்கிக்கு உரை காணும் பொருட்டு சில தமிழ்ச் சான்றோர்களை அணுகினோம்,
ஆனால் இது மிகவும் இலக்கண கடினம் உடையதாக அவர்கள் தெரிவித்தார்கள்,
தமிழக இலக்கிய வரலாற்றில் இப்படி ஒரு நூல் செய்யப்பட்டது இல்லை என்றும்,
வள்ளல் பெருமானாரின் மீது கொண்ட பற்றே தொழுவூர் - வேலாயுத முதலியாரை இவ்வாறு பெருமானார் மீது மிக உயர்ந்த இலக்கியங்களை செய்ய தூண்டியது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இதன் உரை விரைவில் வெளிப்பட பெருமானார் அருள் புரிவாராக!

 தசபங்கி

கட்டளைக் கலிப்பா

1 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம்முயர்த் தோன்

       விரைந்த செய்கை மேனந்திய

எண்ணமேதோ பாயிளங்கா றானண்ணி வண்ணம்

      புரைந்தம் மேனிவானம் பெறு

புண்ணதாக் கன்னோய் விளைத்தக் கோன்மன்ன

      பொன்னைப் புரிந்து நேரா மானம்வடல்

நண்ணியே யாய்வதென்னா நானென்ன செய்வன்

      பரிந்தேவாழி வாநம் பியே.

வஞ்சித் துறைகள்

2 வெண்ணிலாவே எண்ணமேதோ புண்ணதாக்க நண்ணினாயே

3 தீயைவீசும் பாயிளங்கா னேய்விளைத்த ஆய்வதென்னாம்

4 மீனம்முயர்த்தோன் றானண்ணிவண்ணம் கோன்மன்னபொன்னை

நானென்னசெய்வன்

5 விரைந்தசெய்கை புரைந்தம்மேனி புரிந்துநேரா பரிந்தேவாழி.

6 மேனந்தி வானம்பெறு மானம்வடல் வாநம்பியே.

வஞ்சி விருத்தம்

7 வெண்ணிலாவே தீயைவீசும் எண்ணமேதோ பாயிளங்கால்

புண்ணதாக்கன் னோய்விளைத்த நண்ணினாயே யாய்வதென்னே.

நேரிசை வெண்பா

8 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம் முயர்த்தோன்
எண்ணமேதோ பாயிளங்காறா - னண்ணிவண்ணம்

புண்ணதாக்கன் னோய்விளைத்தக் கோன்மன்ன பொன்னை

நண்ணினாயே யாய்வதென் னாம்.


வஞ்சி விருத்தம்

9 விரைந்த செய்கைமே னந்திய புரைந்தமேனி வானம்பெறு

புரிந்துநேரா மானம்வடல் பரிந்தேவாழி வாநம்பியே.
கட்டளைக் கலித்துறை

10 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம்முயர்த்தோன் விரைந்த

எண்ணமேதோ பாயிளங்கா றானண்ணிவண்ணம் புரைந்த

புண்ணதாக்கன் னோய்விளைத்தக் கோன்மன்ன பொன்னைப்புரிந்து

நண்ணினாயே யாய்வதென்னா நானென்ன செய்வன் பரிந்தே.

                                                                           - தொழுவூர் - வேலாயுத முதலியார்.

(Reference: www.vallalarspace.com)

ன்பர்களே, வள்ளலாருடன் மாணக்கர்களாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் மூன்று அருளாளர்கள் எனலாம். அவர்களில் இரண்டு அருளாளர்களுக்கு தனியாக வழிபாட்டு இடமாக, அவர்களது சமாதி கொண்ட இடம் விளங்கிவருகின்றது. அங்கு அனையாதீபமும் விளங்கிவருகின்றது. ஆனால் வள்ளலாரின் முதன்மை மாணாக்கர் 'தொழுவூர் வேலாயுத முதலியார்' அவர்களின் சமாதி இடம் ஒரு பள்ளியின் கட்டுப்பாட்டில் அமைந்திருப்பது, சுத்த சன்மார்க்கிகள் மத்தியில் மிகவும் வருத்தத்தை கொடுத்து வருகின்றது. அவ்விடம் வெகுவிரைவில், பள்ளியின் கட்டுப்பாட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு வரவேண்டும். அங்கும் ஓர் அனையாதீபம் ஒளிரவேண்டும் என்பதே யமது வேண்டுகோளாகும். திருவருள் சம்மதம் விரைவில் கிடைக்கும் என நம்பி இக்கட்டுரையினை முடிக்கிறேன். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி

   

 

 

 

 

 

      

Wednesday, September 18, 2013

வருவார் அழைத்துவாடா

வருவார் அழைத்துவாடா

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

அருள்வார்என் றுலகத்தே புகழும் பல்இறைவரும்
புழுவாய் நெளியக் கண்டேன் அவர்களை

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

எந்தை இடத்தைக்கொண்டு அருட்ஜோதி ஆடக்கண்டு
    இறந்தவரெல் லாரும்விண்டு இனியஅமிழ்தினை உண்டு
சிந்தை கலங்காமலே சாகாமலிருக் கலாம்அங்கே
    சாதியுமதமும் சதியும்விதியுமாய் சகதியில்வீழ்ந்தீரே இங்கே

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

அடுக்கி வைத்தபே ரண்டமுண்டு பக்திசெய்ய
    உலகெலாம் உணர்ந்த உத்தமராம வர்சபையுமுண்டு
தடுக்கி விழுந்தவரெலாம் தானேஎழுகின் றாரென்னால்
    தூய்மைபெற்றார் உண்மையிது தாய்மையிது என்றுசொன்னால்

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

தொல்லியல் வேதங்களும் தொல்லைபல சடங்குகளும்
    தோல்விகண்டு மாளவும் தனித்தஇறை ஓங்கவும்
பல்லியல் கடவுளெல்லாம் பலன்காணும் மார்க்கமிது
    பன்மார்க்கமும் கூடும் பார்சுத்தசன்மார்க்கம் என்றபோது

வருவார் அழைத்துவாடா வடலூர் அருள்திசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல அருளே.

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை        அருட்பெருஞ்ஜோதி

தலைவனானவன் (வள்ளலார்) இவ்வுலகில் இறைவன் என்று கருதி புகழும் (உண்மையில் இவர்கள் புழுவின் தரத்தில் உண்மை இறையின் பாதத்தில் ஓர் தூசிஎன ஒட்டிக்கொண்டிருப்பதாக கூறுவார், வள்ளலார்) பல மூர்த்திகளிடம் தனது தோழனை (தலைவனின் மனம்) தூதாக அனுப்ப எண்ணினார். தோழனான நான் அழைத்தால் அம்மூர்த்திகள் வருவரோ என்று எண்ணினான். அதனால் அவனை நோக்கி, 'வருவார் அழைத்துவாடா' என்று உரிமையாக சொல்லி, அழைத்து வரப்படும் இடமான 'வடலூர் ஞான சபையின்' உண்மையினையும் சொல்லி அழைப்பதாக இப்பாடல் அமைக்கப்பெற்றது.

'வருவார் அழைத்து வாடி' என்ற திருஅருட்பா பாடலை தழுவி எழுதப்பட்டது.

அன்பர்களே! மேற்கண்டவாறு பல மூர்த்திகளையும் அழைத்த வள்ளலார் உங்களையும் அழைக்கிறார். நாம், இறைவன் என்று வணங்கக்கூடிய மூர்த்திகளெல்லாம் நம்மைப் போன்ற மனித தேகம் என்று எடுப்போம் என்று ஏங்குகின்றனர். எனவே நமக்குக் கிடைத்த இந்த அற்புத மனித தேகத்தை வீணே அழியவொட்டாமல் தடுக்க, மாதப் பூச தரிசனம் காண விரைந்திடுங்கள். வடலூர் ஞானசபை மட்டுமே நமக்கு ஆன்ம இலாபத்தைக் கொடுத்து நம்மை மரணமிலா பெருவாழ்வை அளிக்கும். பெருவாழ்வை அடைய முயன்று பாருங்கள். ஒருவேளை உலகியல்பால் சிக்கிக்கொண்டு இறப்பை அடைந்தாலும், நம்மை வள்ளலார் எழுப்பி அருள்வார், இது திருஅருட்பா அடிகளில் கண்ட சத்தியம்.

மாத பூச நாள்: 29.09.2013 ஞாயிறு. நன்றி.
  

   
   


   
   

Saturday, September 14, 2013

வள்ளலாரின் திருமண வாழ்க்கை



வள்ளலாரின் திருமண வாழ்க்கை

வணக்கம் அன்பர்களே!


வள்ளலார் வாழ்க்கையில் விதி என்னும் மாயை விளையாட்டால் அவருக்கு அவரது விருப்பம் இன்றியே திருமணம் நடைபெற்றது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அத்திருமணம், வள்ளலாரின் ஆன்மீக பயணத்தை எவ்வகையிலும் தடைசெய்யவில்லையே ஏன்? மூவரும், தேவரும், முத்தரும், சித்தரும், யாவரும் பெற்றிடாத இயலான 'மரணமிலா பெருவாழ்வை' பெற்றாரே அது எப்படி?

ஆன்மீக பயணத்திற்கு திருமணம் என்பது ஒரு தடையா? என்று வள்ளலாரை கேட்டால், அவர் "ஆம்" என்பார். அவரால் உருவாக்கப்பட்ட 'சுத்த சன்மார்க்கம்' என்னும் ஆன்மீக வாழ்க்கைக்கு 'பெண் போகம்' என்பது தடையே என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். பெண்களையும் பலஇடங்களில் தரக்குறைவாகவும் பேசியுள்ளார். திருஅருட்பாவை உணர்ந்தவர்களுக்கு இது தெரியும்.

# 'புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்...
... நமச்சிவாயத்தை  நான்மற வேனே.' (822)

இங்கே மங்கயரை 'புன்' என்கிறார். அந்தப் புன்னை யாம் புணர்ந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறக்கமாட்டேன் என்கிறார்.

# 'சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
 சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்' (805)

இங்கே மங்கயரை 'முலைச்சியர்' என்றும் அவரால் என்ன சுகம் கண்டாய்? என்று வினவுகிறார்.

# 'நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
 நாளும் வீழ்வுற்று நலிந்திடேல்... (800)

இங்கே, புல்லர்கள் மனம் அதிகம் நாடும் மங்கயர் குறியினை 'புழுமலக் குழி' என்று புழுக்களுக்கு இடமான மலக்குழி என்று சாடுகிறார். அக்குழியில் தினமும் வீழாதே என்று எச்சரிக்கின்றார்.

# 'மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்' (479)

இங்கே, மங்கையரை 'மடவார்' என்கிறார். அறிவிலார் முலையின் காம்பிற்காக அலைந்தால் இறைவனை மறக்க நேரிடும் என்கிறார்.

# 'மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
 வருந்தி நாள்தோறும் மனம் இளைக் கின்றேன். (433)

இங்கே, நமது மனம் இளைப்பதற்கு மங்கயரின் புழுக்குழி காரணமாக உள்ளதாக கூறுகிறார். நன்றாக கவனிக்கவும், நமது உடல்தானே இளைக்கும், ஆனால் இங்கே மனம் இளைப்பதாக கூறுகிறார்.

# 'பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
 வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்...(293)

இங்கே, 'பெண்களை வைதிலேன்' என்று கூறுவதன் மூலம், பெண்களை வைதல் (ஏசுதல் / தரக்குறைவாக பேசுதல்) என்பது ஒரு அறமாகவே, பொதுவாக எல்லா அடியார்களும் வழிவழியாக கொண்டுள்ளனர் என்பதனை அறியமுடிகிறது. இவ்வாறு பெண்களை வைதல்மூலம் தமது மனதை அடக்க முயல்கின்றனர் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இங்கே பெண்கள் கோபப்படவேண்டிய அவசியம் இல்லை.

# 'முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்' (394)

இங்கே, மங்கயரை, முலையினை காட்டி நம்மை மயக்கும் 'கொடியவர்' என்று கூறுகிறார்.

# 'மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
 வருந்தி மனம் மயங்கிமிகவாடி நின்றேன்...' (115)

இங்கே, மங்கையரை, உயிரற்ற மண்ணோடும், பொருளோடும் ஒப்பிட்டுள்ளதை காணமுடிகிறது.

# 'கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஒர்
 பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன்...' (344)

# 'துயர்செய் மாதர்கள்...' (341)

# 'மாதர் கண் எனும் வலையிடைப் பட்டேன்...' (340)

# 'மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
 பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்...' (338)

# 'வஞ்சமட மாதரார் போகம் என்னும்
 மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்...' (326)

# 'பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
 வதிதரும் நெஞ்சினேன்...' (316)

# 'விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால்...' (266)

# 'கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே...' (269)

# 'கண்ணைக் காட்டி இருமுலை காட்டி
 மோகத்தைக் காட்டி அகந்தைக் கொண்டே
 அழிமண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்...' (259)

# 'மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன்...' (257)

# 'பாவம் ஓர் உருவாகிய பாவையர்...' (255)

# 'முலையைக் காட்டி மயக்கி என் ஆருயிர்
 முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
 குலையக் காட்டும் கலவிக்கிசைந்து...' (253)

# 'மஞ்சட் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள்
 மயங்கவே செயும் வாள்விழி மாதர்பால்
 கெஞ்சிக் கொஞ்சி நிறை அழிந்து...' (252)

# 'கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
 கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே...' (122)

# 'பாழான மடந்தையர்பால் சிந்தை வைத்து...' (117)

# 'மலஞ்சான்ற மங்கையர் கொங்கையிலே ஆசைவாய்த்து மனம்...'(1246)

# 'பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
 மண் நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண் என்றால்
 பேயும் இரங்குமென்பார் பேய் ஒன்றோ தாம்பயந்த
 சேயும் இரங்குமவர் தீமைக்கே...' (1965-393)

# 'வஞ்ச மின்னிடையார் முடைச்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ
 வீழ்ந்திடவோ...' (2160)

# 'பெண்கள் குறியே எங்கள் குலதெய்வம் எனும்
 மூடரைத் தேற்ற எனில் எத்துணையும் அரிதரிதுகாண்...' (2121)

# 'பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ...' (3765)

# 'காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
 காணியின் ஆட்சியும் கருதிலேன்  கண்டீர்...'(3794)

# 'புல்லவரே பொய் உலகபோகம் உற விழைவார்
 புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்...' (4203)

# 'மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே
 மலஞ்சார் தோலிலே ஆசை வைத்து வீண்
 பொழுது தொலைக்கின்றார்...' (4727)

# 'மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கி இது கேள் உன்
 மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு
 உன்சாயை எனும் பெண் இனத்தார்...' (4843)

# 'காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
 கற்பன கற்கிலீர்...' (5559)

# 'படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி'
# 'பாவம் யாவும் பழகுறும் பாழுங்குழி'
# 'குடிகொள் நாற்றக் குழி'
# 'சிறுநீர்தரும் கொடிய ஊற்றுக் குழி'
# 'புழுக் கொள் குழி'
# 'கடி மலக்குழி ஆகும் கருக்குழி'
# 'கள்ளமாதரைக் கண்டு மயங்கினேன்...' (260)

மேற்கண்ட திருஅருட்பா அடிகள், பெண் போகத்தைப் பற்றின வள்ளலாரின் மனநிலையினை எடுத்து இயம்புவதாக உள்ளதை நாம் அறிகிறோம். மேலும் இவைகள் யாவும் யோக மார்க்கத்தில் / சுத்த சன்மார்க்க வழியில் செல்பவர்களுக்கே பொருந்தும். உலகியல் வாழ் மக்களுக்கு இவை பொருந்தாது என்பதனை வள்ளலாரே கீழ்கண்டவாறு கூறுகிறார்...

'ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
 பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
 மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
 யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.' (5549)

உலகியல் வாழ் மக்களுக்கு அவர்கூறும் வாக்கு, வியப்பளிப்பதாக உள்ளது. 'மகா ஸ்ரீ இரத்தின முதலியார்' அவர்களுக்கு வள்ளலார் எழுதியக் கடிதத்தில், "பரமசிவத்தினிடத்தே மாறாது மனத்தை வைத்துக்கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்துக் கொள்ளலாம்." என்று அவரை திருமணத்திற்கு சம்மதிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறார். இங்கு ஒருவர், சிவாயநம என்று சொல்லிக்கொண்டு ஆயிரம் திருமணம் செய்யலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. திருமணம் வேண்டாம் என்று இருப்பவரை, அவரின் ஆன்மீக நிலையறிந்து, திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க கூறப்பட்டுள்ள மொழியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படியே பொருள்கொண்டால் அது வியப்பாகத்தான் இருக்கும்.

சரி! சுத்த சன்மார்க்க வழியில் சென்ற வள்ளலார் ஏன் திருமணம் செய்துக்கொண்டார்? அத்திருமணம் அவரை உலகியலில் இழுக்காமல் அருளியலில் செல்ல வைத்தது எப்படி?

வள்ளலாரே ஆனாலும், அவர் பெண் இச்சையை நுகர்ந்துவிட்டால் அவரால் 'மரணமிலா பெருவாழ்வு' எய்துதல் என்பது முடியவே முடியாது.

"கடவுளைக் காண உண்மையாய் விரும்பினால், அழுத கண்ணீர் மாறுமா? ஆகாரத்தில் இச்சை செல்லுமா?" என்று ஆகாரத்தில் கூட இச்சை செல்லாது என்று கூறிய வள்ளலார் பெண் இச்சையை நுகர்ந்திருப்பாரா? என்பதனை நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

"சுத்த சன்மார்க்க லசஷிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு நனவிலும் மண்ணாசை, கனவிலும் பெண்ணாசை, சுழுத்தியிலும் பொன்னாசை முதலிய மூன்றும் கூடாவாம்." என்று வள்ளலார் தமது உரைநடை பகுதியில் கூறியிருப்பதை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

அதனால்தான் வள்ளலார் அவர்கள் திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் சுற்றத்தாரால் மணம் புரிந்துக்கொண்டார். இதனை அவர் ஏதோ ஒரு முன்பிறவி வினைப்பயன் என்று எடுத்துக்கொண்டார். அதனை பின்வரும் பாடல்வரிகளில் கூறுவதை பாருங்கள்.

'புவிமேல் விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன்...' (3819)

ஆக, இத்திருமணம் என்பது வெறும் சடங்கு என்ற நிலையிலேயே முடிவுற்றது. மற்றபடி தன் மனைவியிடம் பெண் இன்பத்தை நுகர்ந்தாரில்லை. தனக்கு வாய்த்த மனைவியும் கலவியலில் ஈடுபாடு இல்லாத ஆன்மீக வாழ்க்கை வாழுகின்றவரையே அவர் தேர்ந்தெடுத்தார் அல்லது இயல்பாகவே அவ்வாறு அமைந்தது என்பதே உண்மையாக இருக்க முடியும். அதற்கான சான்றை வள்ளலாரே கீழ் கண்டவாறு கூறியிருப்பதை காணவும். 

'முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
 தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக்கை தொடச்சார்ந்தேன்
 குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
 பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.' (3452)

# முனித்த வெவ்வினையோ - எமது திருமணம் முன்செய்த தீவினையால் நடைபெற்றதோ அறியேன்.
# நின்னருட் செயலோ தெரிந்திலேன் - அல்லது எல்லாம் வல்லவா, இது உன் அருளால் நடைபெற்றதோ அறியேன்.
# மோகம் மேலின்றித்  - மோகம் என்கிற கலவியல் இன்பம் விழையாத
# தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் - தனித்தனியாக / தன்னை மட்டுமே சார்ந்த / எதற்கும் வேறுறொருவரை நாடாத / சாராத, ஒருசார் மங்கையர்களுள்
# ஒருத்தியைக்கை தொடச்சார்ந்தேன் - அப்படிப்பட்ட ஒருத்தியை நான் திருமணம் செய்துக்கொண்டேன். வள்ளலார் ஏற்கனவே எப்போதும் ஒருமையில் இருப்பவர் / தனித்திருப்பவர், அப்படிப்பட்டவர் அதே ஒருமையில் உள்ள ஒருசார் மடந்தையை திருமணம் செய்துக்கொண்டார். உலகியலுக்கும் சுற்றத்தாருக்குத்தான் அது திருமணம். இவர்களுக்குள் தனித்த மனத்தவர்களாகவே இருந்தனர்.
# குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றி கலப்பிலேன் - எனை சிலர் கலவியலுக்கு விரும்பினர். அவர்களை தொட்டேன் அன்றி அவர்களுடன் சுகித்திலன்.
# மற்றிது குறித்தே பனித்தனன் - மேலும் அவர்களைத் தொட்டது குறித்தே பயந்தேன்.
# நினைத்த தோறும் உள் உடைந்தேன் - அவர்களைத் தொட்டது குறித்து நினைக்கையில் என்மனம் நொந்தேன்.
# பகர்வதென் எந்தைநீ அறிவாய் - இதனைப் பற்றி சொல்வதனால் என்ன பயன்? எல்லாம் நீ அறிவாய் அன்றோ?

இதுதான் மேற்கண்ட பாடலுக்கு எமக்குத் தெரிந்த விளக்க உரை. எனவே இதற்குமேல் வள்ளலாரின் திருமண வாழ்க்கையினைப் பற்றி கூறுவதற்கு திருஅருட்பாவிலோ அல்லது வள்ளல் வாழ்க்கையினைப் பாடிய அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளையின் 'பிரபந்தத் திரட்டிலோ' எமக்குத் தெரிந்து எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வள்ளலார் தமது திருமணத்தன்றே முதலிரவில் தமது மனைவியினை திருவாசகம் படிக்கச் சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார் என்றோ அல்லது அவர் திருமணத்திற்குப் பின்பு எட்டு ஆண்டுகள் மனைவியுடன்தான் வாழ்ந்தார் என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

வள்ளலார் திருமணத்தன்றே வெளியேறினார் என்று பற்பல எழுத்தாளர்களும், வள்ளலார் பற்றிய திரைப்படத்திலும் காட்டப்படுகின்றது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தியாகவே இருக்கவேண்டும். வள்ளலாரின் கருணைக்கு இது ஒவ்வாததாக உள்ளது. அதற்காக அவர் எட்டு ஆண்டுகள் தமது மனைவியினை சார்ந்து இருந்தார் என்பதும் சற்று மிகைப்படுத்தப்பட்டச் செய்தியாக உள்ளது. எப்படி இருப்பினும் அவர்களிருவரும் தங்களுக்குள் ஒத்து தனித்தனியாக ஓர் வீட்டில் தாமரை இலை தண்ணீர் போன்று இருந்தார்கள் என்ற உண்மை அவரது மேற்கண்ட பாடல் மூலம் தெரியவருகிறது.

வள்ளலாரின் திருமணம் நடந்த அன்று இரவே மனைவியிடம் திருவாசகம் கொடுத்து விட்டு வெளியேறிவிட்டார் என்பது உண்மையா? என்ற கேள்விக்கு, 'வள்ளலாரைப் புரிந்துக்கொள்ளுங்கள்' என்ற நூல் ஆசிரியர் திரு.மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் கீழ்கண்டவாறு பதில் கொடுத்துள்ளார்கள்.

வள்ளலாரின் வயது 27.

சபாபதிப் பிள்ளையும் சின்னம்மையாரும் பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் வள்ளலார் இருந்ததைக் கண்டு கவலைப்பட்டதுண்டு. வள்ளலாரின் ஞான அறிவைப் புரிந்து கொண்டபின் அந்தக் கவலை நீங்கிற்று. மற்ற பிள்ளைகளைப்போல் இல்லாமல் கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருப்பது தற்சமயம் மிகுந்த கவலையை அளித்தது. ஒரு கால் கட்டு போட்டால் வீட்டோடே தங்காமலா போய்விடுவார் என்று எண்ணிய தாயாரும், அண்ணன் சபாபதியும் வள்ளலாருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். வள்ளலாரோ திருமணம் வேண்டாம் என்று மறுத்தார். அவர்களால் முடிந்தவரை எவ்வளவோ அறிவுரைகள் கூறிப் பார்த்தனர். வாதம் செய்தனர். வள்ளலார் திருமணத்திற்கு இசையவேயில்லை.

வள்ளலார் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நந்தி ஆசிரமத் தலைவராகிய சிவயோகியாரிடம் முறையிட்டு எப்படியாவது இராமலிங்கரைத் திருமணத்திற்கு இசைய வைக்கவேண்டும் என்று வேண்டினர். சிவயோகியாரும் அவர்கள் கேட்டுக் கொண்டபடி வள்ளலாரைத் திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தினார்.

மோகம் மேலிட்டவர்கள் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துவது முறையானது. அவ்வாறில்லாத நான் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்றார் வள்ளலார்.

இறைவனே அம்மை அப்பனாகத்தானே விளங்குகின்றான். ஆண், பெண் என்ற படைப்பு இறைவனுடையதுதானே. எல்லா ஜீவன்களிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும்படித் தானே ஆண்டவன் செய்திருக்கின்றான். நீ மறுப்பது என்ன நியாயம் என்று சிதம்பர மாமுனிவர் வினவினார்.

சிவம் என்பது சும்மா இருப்பது என்பது மனம் அடங்கிய தவம். தவம் ஆற்றுவோர் அடைவது சக்தி. அதாவது ஆற்றல் தவம் செய்வோர் எந்த அளவிற்கு அதைச் செய்கின்றார்களோ அந்த அளவிற்கு ஆற்றல் பெறுவர் என்ற தத்துவத்தை விளக்கவே சிவம்பாதி சக்திபாதி என்று கூறி சிவனை ஆணாகவும், சக்தியைப் பெண்ணாகவும் நமது முன்னோர் காட்டியுள்ளனர். இது தத்துவ விளக்கமே தவிர வேறில்லை என்று தாங்கள் அறியாததா. இதை உதாரணம் சொல்லலாமா என்றார் வள்ளலார்.

உன்னைப் பெற்றெடுத்த தாயும் உன்னை வளர்த்த அண்ணனும் மனம் வருந்தலாமா இது சரியா என்றார் சிவ யோகியார். எனக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகி விடாதா? எந்த விதத்திலும் எனக்குத் திருமணம் செய்வது சரியல்ல என்றார் வள்ளலார்.

சிவயோகியார் விடுவதாக இல்லை. நீ பக்தி உள்ளவன்தானே. எல்லாம் அவன் செயல் என்பதை நம்புகிறாயா இல்லையா? நீ திருமணம் செய்து கொள்வது ஆண்டவனுக்குச் சம்மதம் இல்லை எனில், சுந்தரரது முன் மணத்தில் ஓலை காட்டித் தடுத்தது போல் தடுக்கட்டும். நீ தடுப்பதில் தர்மம் இல்லை என்றார்.

வள்ளலார் இதற்கு என்ன சொல்வது என்று தயங்கினார். ஆண்டவன் தடுத்துவிடுவான் என்று நம்பினார். பதில் பேசவில்லை.

மெளனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு தமக்கையார் உண்ணாமுலை அம்மாளின் மகளான தனக்கோட்டி அம்மையாரை வள்ளலாருக்குத் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் நடந்தபோது அவருக்கு வயது 27.

இராமலிங்கர் எதிர்பார்த்ததுபோல் அவரது திருமணத்தைத் தடை செய்ய இறைவன் முன்வரவில்லை. இறைவன் தடை செய்வான் என்று இராமலிங்கர் எதிர்பார்த்ததற்கு அவரது பாடலே சான்று.

முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டதுபோல்
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில்
ஒன்றும் ஒரு கணம் வந்துற்றழைக்கில் செய்ததன்றி
இன்றும் ஒரு மணம் செய்வேன் நான். (2019)

அவரது வாழ்வில் திருமணம் நடைபெற்றது என்பதற்கு இந்த அவரது பாடலே சான்றாக உள்ளது.

திருமணம் செய்து கொண்ட அன்றிரவே தனக்கோட்டி அம்மையாரிடம் திருவாசகம் கொடுத்துப் படிக்கச் சொல்லிவிட்டு வள்ளலார் வீட்டை விட்டு வெளியேறினார் என்றே இதுவரை எழுதி வந்துள்ளனர். இக்கருத்துப் பற்றி ஓர் ஆய்வு.

இராமலிங்கர் திருமணம் செய்து கொண்டபோது அவரது வயது 27. அவரது தாயார் சின்னம்மையார் இறந்த பிறகுதான் அவர் 1858ம் ஆண்டு, அவரது 35ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறுகின்றார். திருமணத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் வீட்டில்தான் இருந்திருக்கின்றார். வள்ளலார் தாம் பாடிய திருஅருட்பாவில் தன்னைப்பற்றியும் சில செய்திகளையும் கூறியுள்ளார். அவை அவருடைய வாழ்க்கையின் அகச் சான்றுகள். அந்த வகைப் பாடல்களைப் பொதுப்படையாகப் பாடியவை என்றோ பிறருக்காகப் பாடியவை என்றோ கூற முடியாது. உதாரணமாகப் பிள்ளைப் பெரு விண்ணப்பம் 43வது பாடல் (3452)

'முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
 தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக்கை தொடச்சார்ந்தேன்
 குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
 பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.'

மோகம் மேலின்றித் தனித்தனி ஒரு சார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன் என்பதன் பொருள் என்ன?

மோகம் மேலின்றி - மோகந்தகாரமில்லாது
மடந்தையர் - பெண்களுள்
கைதொட - பாணிக் கிரகணம் அதாவது திருமணம்

மோகம் அதிகப்படாது திருமணம் செய்து கொண்டதால் ஒருத்தியைச் சார்ந்து வாழ்ந்தேன்.

குளித்த - வளைத்த - (அல்லது) என்னை விரும்பிய
மற்றவரை - மற்ற பெண்களை
தொட்டனன்றிக் கலப்பிலேன் - தொட்டிருக்கலாம் ஆனால் அவர்களோடு சேர்ந்து கலந்ததில்லை.
மற்றது குறித்து - தொட்டதை நினைத்தே
பனித்தனன் - நடுங்கினேன்

திருமணம் செய்து கொண்டதால் அதுவும் மோகாந்தம் இல்லாது ஒருத்தியைச் சார்ந்தேன்; என்னை விரும்பி வளைத்த மற்ற பெண்களோடு கலப்பிலேன் என்பது நமக்குப் பொருந்தாது. இந்தத் திருமணமும் வெவ்வினையின் காரணமா அல்லது நினது திருவருட்செயலா என்று இறைவனைக் கேட்கிறார். இது பொதுவான பாடல் அல்ல அவரது வாழ்வின் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டும் அகச் சான்று என்பதில் ஐயமில்லை. எனவே அவரது வாக்கின்படித் திருமணம் செய்து கொண்டதால் ஒருத்தியைச் சார்ந்தேன். மற்றவரோடு கலந்ததில்லை என்பதும், 27 வயதில் திருமணம் செய்து கொண்டவர் தனது 35ம் வயதில் வெளியேறியதால் அதுவரை அவர் வீட்டில்தான் இருந்தார் என்பதும் உண்மை. திருமணத்தன்று இரவு மனைவியிடம் திருவாசகம் கொடுத்து வெளியேறினார் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை.

ஐந்து வயது குழந்தையாய் இருந்த போதே அண்ணியாரின் கண்ணீர் கண்டு இரங்கிய வள்ளலார், உணவிலே விருப்பமில்லா விட்டாலும் பெற்ற தாய் முகவாட்டம் பார்ப்பதற்கஞ்சி இரக்கம் காரணமாகப் பேருணவு கொண்ட வள்ளலார், இரக்கம் ஒருவில் என் உயிரும் ஒருவும் என்று கூறிய வள்ளலார், ஜீவகாருண்யமே தெய்வ வழிபாடு என்று கூறிய வள்ளலார் தனக்கோட்டி அம்மாவிடம் கருணை இல்லாமல் இருந்திருப்பாரா என்று சிந்திக்க வேண்டும்.

இல்லற வாழ்வில் ஈடுபட்டால் ஞான நிலை அடையமுடியாது என்று வள்ளலார் கூறவில்லை. 27ம் வயதில் திருமணம் கொண்ட இராமலிங்கர் தனது 35ம் வயதில் தான் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது உண்மை.

'வள்ளலாரைப் புரிந்துக்கொள்ளுங்கள்' என்ற நூல் ஆசிரியர் திரு.மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் மேற்கண்ட விளக்கத்தை தனது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இந்நூலாசியரை யாம் அறிவோம். மிகுந்த வள்ளல் பக்தி கொண்டவர் என்பதைவிட வள்ளல் இவரிடம் காரியப்படுகிறார் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு அன்று வடலூர் தருமச்சாலையிலிருந்து சித்திவளாகத்திற்கு அகவல் பாடிக்கொண்டே இவரது தலைமையில் நடைபயணம் மேற்கொள்வது வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். யானும் சில வருடங்கள் தொடர்ந்து இவரது தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஒருவனாக நடைபயின்றுள்ளேன். சில ஆண்டுகள் இவர் கடலூரில் அலுவல் செய்தபோது கடலூரில் உள்ள சன்மார்க்கச் சங்கத்தில் வியாழன்தோறும் சொற்பொழிவும் ஆற்றுவார். அதனையும் யாம் கேட்டு களித்துள்ளேன். ஆனால் எம்மை யார் என்று அவருக்குத் தெரியாது.

ஆசியர் அவர்கள் இங்கு எழுதியுள்ள சில கருத்துகளை யாம் மறுக்க தளைப்படுகிறோம். இங்கு உள்ள ஆசிரியரின் கருத்தாழத்தைப் பார்த்தால் வள்ளலார் தன் மனைவியுடன் சிற்றின்பத்தில் ஈடுபட்டார் என்று கூற வருவது போன்று உள்ளது.

சிலர் தமக்கு திருமணம் ஆகிவிட்டதால், அதனால் எங்கே இறை அருள் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து, எமக்கு மட்டுமா திருமணம் நடந்தது, வள்ளலாருக்கே திருமணம் நடக்கவில்லையா? என்று தமது பிழையினை வள்ளலார்மேல் போடுவார்கள். அவ்வாறுதான் இவ்வாசியரின் கூற்று உள்ளது. ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள், திருமணம் ஆகிறதோ இல்லையோ, ஒருவர் சிற்றின்பத்தில் ஈடுபட்டுவிட்டால் பேரின்பம் (மரணமிலா பெருவாழ்வு) கிடைக்காது. அதனால்தான் வள்ளலார் தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் இறைவனடியில் ஒப்படைத்தார். நம்மவர்களையும் மரணமிலா பெருவாழ்வு கிடைக்கவேண்டுமெனில் அவ்வாறே ஒப்படைக்கச் சொன்னார்.

வள்ளலாருக்கு 27ம் வயதில்தான் திருமணம் நடந்தது என்பதற்கு எந்தஒரு ஆதாரமும் இல்லை. எனவே அவர் மனைவியுடன் எட்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தார் என்பதனை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவ்வாறே இருந்திருந்தாலும் தனக்கோட்டி அம்மையாரின் பக்குவ நிலையினையும் தனித்தனி ஒருசார் நிலையினை பெற்றிருப்பதாலும்தான் வள்ளலார் அவரை திருமணம் செய்துக்கொண்டார். எனவே இருவரும் வீட்டில் சேர்ந்திருந்தபோதுக்கூட யாம் ஏற்கனவே கூறியது போல் அவர்களிருவரும் தாமரை இலை தண்ணீர் போன்றுதான் இருந்துள்ளார்கள்.

மேலும் திருமணம் ஆன முதல்நாள் அன்றே வள்ளலார் வெளியேறிவிட்டார் என்பதை ஆசிரியர் மறுப்பதை யாமும் வரவேற்கிறோம்.

அடுத்ததாக, இல்லற வாழ்வில் ஈடுபட்டால் ஞான நிலை அடையமுடியாது என்று வள்ளலார் கூறவில்லை, என்று ஆசிரியர் கூறுவது எனக்கு வியப்பாக உள்ளது. வள்ளலார் இதுபற்றி மிகத்தெளிவாகவே கூறியிருக்கிறார்,

"ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபக முடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்திற் செய்யலாமென்றது மந்தரத்தையுடையவனுக்கே அன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல." (பக்கம் 423)

சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர் யாவர்? என்று கூறுகையில்,

காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்கள்தான் (பக்கம் 411) சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் என்று வள்ளலார் கூறுவதை இவ்வாசியரும் நாமும் அறிந்து தெளிய வேண்டும்.

வள்ளலார் உலகியலில் ஒரு பெண்ணுக்கு கணவராக இல்லாமல் இறைவனுக்கு மனைவியாக இருந்தார் என்பதே உண்மை. அந்த இறைவனோடு தாம் கலந்த சுகத்தைத்தான் அந்த புணர்ச்சியைத்தான் திருஅருட்பா முழுவதும் பார்க்க காண்கிறோம். இதோ ஒரிரு பாடலை படித்து நாமும் அப்பாடலோடு புணருவோம்.

'இரவகத்தே கணவரோடு கலக்கின்றார் உலகர்
     இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
 கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
     கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
     சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
     உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.' (5786)

'உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
     உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
     கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென்
     குறிப்பினில் குறித்ததொன் றிலையே
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த
     துரைப்பதென் அடிக்கடி உனக்கே.' (4072)


வள்ளலார் தமது பிரம்மச்சரிய ஒழுக்கத்தை கடைபிடித்ததால் தான் மேல்நிலை சென்றார் என்பதில் நமக்கு எள்ளவும் ஐயம் வேண்டாம். மனித வாழ்வில் சில நடைமுறை சிக்கல் வருவது போன்று வள்ளலாருக்கும் திருமணம் என்ற துன்பம் வந்து ஒழிந்தது. அதனை நாம் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

'ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
 ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.' (4710)   

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி