Monday, February 9, 2015

பெருவாழ்வு



அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் இயற்றிய

பெருவாழ்வு

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

அண்டமெலாம் தேடினும் அரிதான உலகில்
  அரிதரிதான மானிடப் பிறவி பெற்றீரே
எண்ணி லடங்கா நச்சத்திரத்தில் காட்சிக்கு
  ஒளி கொடுக்கும் சூரியனை பெற்றீரே
கண்ணி ரண்டும் குளிரவே இரவில்
  காணும் சந்திரனை இன்புறப் பெற்றீரே
தண்ணீர் சூழும் உலகிடை மனிதம்வாழ
 தளங்களுடன் காற்றையும் பெறும்பேறு பெற்றீரே.    1 

பெற்றதெலாம் இயற்கை இன்பமே உயிர்
  பிறப்பெடுத்து கண்ட தெல்லாம் இயற்கை
சுற்றமே என்று மகிழ்ந்து மகிழ்ந்து
  சிரித்து சிரித்து உடன் கண்ணீர்
உற்று மெய்சிலிர்த்து சிலிர்த்து இயற்கை
  உண்மையை வியந்து வியந் தோர்
குற்றமு மின்றி வாழலாம் வாரீர்
  கருணை பெரும்பதியை கண்டு நீரே.              2

நீரே என்னுறவன் நானுன் அடியனென்றே
  நவில் கின்றேன் உலகீர் வாரும்
சீரே பெற்று பெருவாழ்வு வாழலாம்
  சுத்த சன்மார்க்க சுகநிலை யடை
வீரே நரைதிரை மூப்பும் காணா
  வாழ்வை எய்திடலாம் ஞான சபைக்கு
நேரே நின்று கேளாய் சகத்தீரே
  நினைத்தது நடக்கும் நிமிட நேரத்திலே.       3

நேரமிது காலமிது அருட்ஜோதி ஆட்சியிது
  நாடி வருவீரேல் நாயக னாகலாம்
தூரமென்று நினையாதீர் தட்டி எழுப்புகின்றேன்
  தூங்காதீர் தொலையாதீர் காலமுள்ள போதே
சாரலாம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தே
  சாதனைப் புரிந்து இறை சோதனையெனும்
பாரமெலாம் தவிர்த்தே பரமனா கலாம்
  பாரிது பாரென அடிமுடி ஆகலாமே.       4

ஆகட்டும் எல்லாம் செயல் கூடட்டும்
  அருட்பெருஞ் ஜோதி நின் றோங்கட்டும்
போகட்டும் கொலை புலை கூட்டமெலாம்
  புறமேவட்டும் சாதிமத இன நேசமெலாம்
சாகட்டும் சகத்தீரே இங்கு ஆன்மநேயமே
  சனித்து வாழட்டும் அருட்பா ஆவியிலே
வேகட்டும் மனம் வெந்துவெந்து தயவை
  வாங்கட்டும் வந்து வந்து தரிசிக்கலாமே.    5

தரிசனம் அறிவாயோ சத்திய ஞானசபைத்
  தலைவனின் வருகையை உணர்வாயோ அவன்
புரிகின்ற சித்துக்களைப் பெறுவாயோ உலகீர்
  பிறந்த நாள்முதல் ஏது செய்தீர்ஐயோ
நரிபோல் வாழ்ந்தீர் நாய்போல் திரிந்தீர்
  நயவஞ்சக மதங்களை நாடி ஒழிந்தீர்
பரிணாமம் ஒன்றும் காணீர் வாருமிங்கே
  பெறுதற் கரிய பெருவாழ்வைப் பெறலாமே.   6

பெற்ற தெல்லாம் பேயே நீதினம்
  பேசிய தெல்லாம் பாழே உறவு
உற்ற தெல்லாம் ஊழே இறைபக்தி
  எல்லாம் கதையே அந்தோ நீர்
சற்றும் அறிந்திலையே எந்தை அருட்
  சோதி அனுபவமும் இறை யருள்
சுற்றமும் கலந்தருளும் மிடத்திற்கு வாரீர்
  சும்மா இருக்கும் சுகமதை அடைவீரே.        7

அடையும் நிலை தெரியீர் அடைந்தவரையும்
  அறியீர் உலகில் சமயக் குழிஒன்றையே
உடையீர் தயவு என்னும் சொல்லையும்
  எண்ணீர் பகட்டுக்கு பால்ஊற்றி பூவைத்து
உடையுடுத்தி தேரிழிப்பீர் இன்னும் சிறுபிள்ளை
  ஆட்ட மெல்லாம் ஆடி பக்தர்
படையெனத் திரண்டு என்கண்டீர் வாருமிங்கே
  பெருவாழ்வு ஒன்றுண்டு எனக் காணீரோ.   8

காணுமினோ தைப்பூச ஜோதியினை நீயும்
  கண்டால் கசிந்துருகி எனைப்போல் சுகம்
பேணுமினோ சன்மார்க்க சித்தெல்லாம் நீயும்
  பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடலாம் நான்
வீணுக்கு சொல்லிடேன் சகத்தீரே சத்திய
  வான்கலந்த இராமலிங் கரேவந்திங்கு எண்
சாணுடலி லிருந்து மீண்டும் சாற்றுகின்றார்
  சாகாமலி ருக்கலாம் வம்மின் உலகீரே.   9 

உலகெலாம் தேடினும் சுத்த சன்மார்க்கரை
  அறிதல் அரிதே தமிழனே கண்டான்
நலமெலாம் உரைக்கும் நாயக னவன்
  நன்மார்க்கம் தமிழனே கண்டான் நற்
குலமெலாம் ஓங்கும் பெருவாழ்வு தமிழனே
  கண்டான் ஆன்மநேயம் தமிழனே மும்
மலமறுக்கும் மருந்தினைக் கண்டு தமிழால்
  மறைபாடி இறைகண்டு இறை யானானே. 10

ஆனதும் ஆவதும் அவன் அருளாலே
  ஆண்டதும் ஆள்வதும் அவன் அடியாலே
தானமும் தவமும் அவன் வடலூராலே
  தேகமும் போகமும் அவன் செயலாலே
மானமும் ஈனமும் அவன் தயவாலே
  மாள்வதும் வாழ்வதும் அவன் நினைவாலே
ஊனம் நீங்கியுரைக் கின்றேன் உலகீர்
  உண்மை இங்கிருக்க எங்கெங்கோ செல்கின்றீரே. 11

செல்லும் இடமறியாது செல்கின்றீர் இன்னும்
  செத்துப் பிறக்கவே திரிகின்றீர் நான்
சொல்லும் பொருளை அறிந்திலீர் பித்துலகர்
  செய்யும் மாயமத சடங்கைப் பிடித்திட்டீர்
வெல்லும் மார்க்கம் அறிவித்தும் எனை
  வெட்டிப் பயல் என நினைத்திட்டீர்
கல்லும் கரைய உரைத்ததெல்லாம் நின்
  கருத்திற்கு புகநான் என் செய்வேனே.      12

செய்யும் குற்றங்கள் தெரிந்தே செய்கின்றீர்
  சகத்தீர் மதிக்க வாழ்கின்றேன் என்கின்றீர்
பெய்யும் மழையும் என்னால் என்கின்றீர்
  பொய்த்த வாழ்வை புகழாய் பேசுகின்றீர்
நெய்யும் ஊனும் சுவைக்க உண்கின்றீர்
  நலிந்தோரைப் பார்த்து எட்டி நடக்கின்றீர்
பொய்யும் புரட்டுமேவ வெள்ளாடை உடுக்கின்றீர்
  பாரிலே சிறக்க வாழ்கின்றீர் பித்துலகீரே.   13 

பித்தம் தெளிய பிறப்பெடுத்தேன் நின்
  பக்கம்பேச பேச்செடுத் தேனிறைவா உன்
சித்தம் எதுவோ அறிந்திலேன் உலகில்
  சிறக்கும் மனிதனும் புலையன் என்றால்
நித்தம் அழுகின்றேன் ஏதும் செய்தலறியேன்
  நீடுலகில் நீடுவாழ நீஎன்னையும் நீட்டினாய்
சத்த மில்லாமல் சாகவோ சகத்தில்
 சீறும் மனிதரைக் கண்டுளம் நடுங்கினேனே.   14

நடுங்கும் வயது வாராது என்றும்
  நிலைக்கும் இளமை துடிப்பு போகாது
எடுத்த உடம்பு வீழாது எந்நோயும்
  எனக்கு வாராது உலகீர் எனைப்போல்
அடுத்து நீங்கள் வாழவே வாரும்வாரும்
  ஆசை யுண்டேல் வடலூர் வாரும்
கொடுத்தக் கரங்கள் கொடுக்கும் எந்தாய்
  கருணைக் கண்கள் தரும் தரிசனமே.       15
 
தரிசனம் தருவாயோ தலைவா தரிசனம்
  தருவாயோ உலகிடை குற்றம் புரிந்த
அரிசனமான எனக்கு தரிசனம் தருவாயோ
  அன்பென் பதையறியா அற்பனுக்கு நீ
கரிசனம் காட்டாயோ என்னுடல் பொருளாவி
  கனிந்தே கொடுத்தும் என்னுள் நீ
சரிபாதி யாகி முழுமை யாகோயோஅப்பா
  சோதிக்கா மலெனை ஜோதியாய் ஏற்றருளே.  16

ஏற்றமாகி இறைக் கின்றேன் என்னுளத்தே
  இரக்கத்தால் இறங்கி ஏறிவந்த மன
மாற்றத்தால் கண்ணீராய் ஊற்றுகின்றேன் அந்தோ
  மடப்பயலை இன்னும் மன்னிக்காது உன்
சீற்றத்தால் சிதைப்பா யெனில் ஏதுபுரிவேன்
  சிதம்பரம் இராமலிங்க அபய மென்றே
கூற்றதை தடுக்கின்றேன் காலத்தைக் கடக்கின்றேன்
  கூடுசிதைக்கா தென்னுள் கூடி விளையாடே.   17   

ஆடுகின்ற உலகில் ஆடுகின்ற உலகீர்
  ஆட்டம் முடிந்தால் ஓட்ட மெங்கே
வீடுதாண்டி வீதியில் வைத்து சுற்றி
  வந்து மாலையிட்டு தூக்குவாரே உம்மை
காடுசென்று குழிதோண்டி புதைப்பாரே இந்தக்
  கருமம் தேவையோ வம்மின் உலகீர்
கூடுவிட்டு போகும்முன் சன்மார்க்கச் சங்கம்
  காக்கும் உன்னை நித்தியமாய் வாழலாமே.      18

வாழும்நிலை யறிந்தேன் வாடும்நிலை போக்கி
  வடலூர் வந்து வானவனைக் கண்டுதிரை
ஏழும் விலக அருட்பெருஞ் ஜோதிகண்டேன்
  இதைவிட இவ்வுலகில் இறைகாட்சி இல்லை
தாழும் குணமும் தன்னைக் காட்டாநெறியும்
  தானே அமையும் இடமன்றோ வாரும்
வீழும் உலகீரே பணிந்து பணிந்தழைக்கின்றேன்
  வாடிய பயிரும் தழைக்கக் காண்பீரே.        19

கண்டதும் கேட்டதும் சொன்னதும் முகர்ந்ததும்
  கல்வியெனக் கற்றது யாவும் நன்றோ
விண்டதால் கூறுகின்றேன் உலகீர் நீர்இது
  வரைஏதும் அறிந்திலீர் ஒருமை அறிகிலீர்
பண்டையப் புராண இதிகாசங்களைப் பேசியே
  புண்பட வாழ்ந்தீர் புண்படா உடம்பைஇவ்
வண்டம் கண்டதோ காணவாரீர் உலகீரே
  அகஇனமாகி வாரீர் வடலூர் பெருவெளிக்கே.    20

வெளிகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகியே
  வடலூர் பெருவெளியில் காணலாம் வாரீர்
தெளிந்த நீரோடையில் நிலவின் பிம்பம்போல்
  தனித் தலைமை பதியைப் பாரீர்
ஒளிஒன்றே ஏகமாகி இயங்கும் அற்புத
  அருளை உணர்ந்து அதனுடன் சேரீர்
களித்து இன்புற இதைவிட பெருவெளி
  கண்டால் சற்றே சொல்லும் செகத்தீரே.     21 

செகத்தில் உனையன்றி யாரையும் அறியேன்
  சத்தியன் உனையன்றி யாரையும் பாடேன்
அகத்தில் உனைசுற்றிய சுற்று இப்பூமியும்
  அறியாதே இறைவா இறைவா என்றுன்
முகத்தைப் பார்த்து அழைக்கின்றேன் எந்தாய்
  முத்தியும் சித்தியும் வேண்டேன் உந்தன்
நகத்தின் கடையுறு துகளாயிருக்க வேண்டுவனே.    22

ேண்டு மென்கின்ற ஆசை வேண்டுமுனை
  வேண்டா தவர்க்கும் தருதல் வேண்டும்
காண்பவர்க்குன் திருமேனிக் காட்சி வேண்டுமுனை
  காணாதவர்க்கும் உன்னரு ளாட்சி வேண்டும்
தீண்டுகின்றார்க்கு தீங்கில்லா வாழ்வு வேண்டுமுனை
  தீண்டாதவர்க் குமுன் நலம் வேண்டும்
ஆணுடன் பெண்ணும் சன்மார்க்கியாக வேண்டுமுனை
  அலி வேண்டினும் சாகாதிருக்க அருளகவே.   23

அருள்மழை எங்கும் பொழிய என்ஊனின்
  உள்ளத் திருந்து உலாவரும் வான்மேகமே
நருமணம் எங்கும் பரவ என்அறிவில்
  நின்று விளங்கும் வள்ளலே உயரறிவே
திருமணம் புரிந்து என்னைப் புணர்ந்த
  திருவாளா மணவாளா உன்னை எனக்கு
குருவாய் கொடுத்த அருட்பெருஞ் ஜோதியை
  கண்என்பேன் கதிரென்பேன் ஏகன் என்பேனே.    24

என்னென்பேன் ஏதென்பேன் உலகீர் நீர்
  இதுவரை அறியாத அருட் ஜோதியை
உன்னோடு இருப்பான் உயிரோடு உறைவான்
  உள்ளம் அறியாது மறைவான் உணர்ந்தால்
புன்படும் உடம்பில் புண்ணியன் இரண்டற
  புணர்வான் அத்துவித மாகலாம் வம்மின்
இன்பம் மிகப்பெறுவீர் காணாததைக் காண்பீர்
  இறந்தவர் எழுவீர் எழுந்தவர் இறவீரே.     25 

இறந்து இறந்து பிறந்தும் இன்னும்
  இரக்கம் இல்லை வன்மன உலகீர்
திறந்துக் காட்டியும் மதப்பேயை விட்டு
  துறக்க மறுக்கின்றீர் கற்பனை மேவி
சிறக்கும் சமயச் சடங்குகளில் சிக்கினீர்
  சாதீய பழக்கங்களில் கண்மூடி உண்மை
மறக்கின்றீர் உயிர் இரக்கமதை விட்டு
  மண்ணில் ஏதுபுரிய பிறந்தீர் உலகீரே.      26

உலகில் தூங்கிஎழ மறந்தவரை ஐயோ
  ஆவிப்போக துடிக்கச் சுடுகின்றீர் தேகமதை
பலவந்தம் செய்தே சாம்பலாக் குகின்றீர்
  பிறந்துவர பத்து மாதம் இறந்து
கலக்க ஒருமணித் துளியோ சிந்திப்பீர்நீரே
  கொலை செய்யாமல் தேகமதை குழியில்
மலமற புதைப்பீர் செத்தவர் சிரித்தெழுந்து
  முன்வரும் காலமும் வரும் நண்பரே.    27

ண்பர்களே நலம்சார் அன்பர்களே உண்மை
  நவில் கின்றேன் நானே என்
எண்ண மெல்லாம் நிறைந்தவர் அருளாலே
  ஆண்டவர் வரும் தருணம் இதுவே
கண்ணாறக் காணலாம் சித்தெல்லாம் பெறலாம்
  களிப்புறலாம் நித்திய னாகலாம் நற்
பண்புகளுடன் வடலூரை நினைந்து வணங்கி
  பாருங்கள் பாருக்குள்ளே சத்தியன் ஆவீரே.            28

ஆவதும் அழிவதும் நீங்கி இறைமேனி
  ஆகலாம் எந்தை ஞானசபை நாதனை
ஈவதும் பணிவதுமாய் இருக்கக் கூடுமே
  இறையொளி இறங்கி வாருமே வடலூர்
போவதும் வருவதுமாய் தானிருக்க வந்தால்
  போகாமல் என்றும் பற்றுவான் அவன்
சேவடியை தொழுது ஏற்றுவீரே என்றும்
  சாகாநிலை பெற்று நீடு வாழ்வீரே.     29

வாழும் வகைசொன்ன வள்ளல் வாழ்க
  வடலூர் அரசன் விண்ணோன் வாழ்க
ஏழுதிரை நீக்கிய என்னவன் வாழ்க
  எழும்பிறப்பைத் தடுத்த ஏந்தல் வாழ்க
விழுமுடலை நிறுத்திய விமலன் வாழ்க
  விட்டதினால் வந்த பயனே வாழ்க
அழுதழுது பெற்ற அருளே வாழ்க
  ஆவியில் கலந்தொளியே வாழ்க வாழ்கவே.   30

வாழ்க எனைசிறை வைத்த சிற்றம்பலம்
  வாழ்க எனைச்சுற்றி வரும் கதிரவன்
வாழ்க எனைத் தாங்குகின்ற தருமச்சாலை
  வாழ்க எனை வாழ்விக்கும் சித்திவளாகம்
வாழ்க எனைப் போலிருக்கும் ஞானசபை
  வாழ்க எனைப் பெற்றெடுத்த பெருவெளி
வாழ்க எனைக்கலந்த அருட்பெருஞ் ஜோதி
  வாழ்க எனைப்போல விரியும் அண்டமே.    31


https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqNjhxRWdGeFp6RjQ/view?usp=sharing

                        09-02-2015

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.