Showing posts with label ஆறுமுக நாவலர். Show all posts
Showing posts with label ஆறுமுக நாவலர். Show all posts

Friday, November 3, 2017

அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர்



அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர் : இனவாத நாணயத்தின் இரு முகங்கள் 



சிங்கள இனவாதிகளின் பிதாமகனாக கருதப்படும் அநகாரிக தர்மபாலா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் :

1. இங்கேயுள்ள படத்தில், விவேகானந்தருக்கு இடது பக்கம் அமர்ந்திருப்பவர் தான் அநகாரிக தர்மபால. 1893 ம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த சர்வதேச மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட பொழுது எடுக்கப் பட்ட படம் அது.

2. அநகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் "Don David Hewavitharana". அவர் பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த சிங்கள மேட்டுக்குடிப் பிரஜை. கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்று, விவிலிய படிப்பில் பாண்டித்தியம் பெற்றவர். (சுருக்கமாக: ஒரு சிங்கள ஆறுமுக நாவலர்.)

3. 1886 ம் ஆண்டு, மேலைத்தேய நாட்டவரின் ஆன்மீக சபையான "Buddhist Theosophical Society" இல் இணைந்து கொண்டார். அந்த சபையானது, பௌத்த மதத்தை தழுவிக் கொண்ட ஆங்கிலேயரான Henry Steel Olcott இனால் உருவாக்கப் பட்டது. அவர் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேர்னல் ஆவார். இன்றைக்கும், அநகாரிக தர்மபாலாவுக்கு அடுத்த படியாக, கேர்னல் ஒல்கொட் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் நாயகனாக போற்றப் படுகின்றார்.

4. பௌத்த சமயத்தை தழுவிய அநகாரிக தர்மபாலாவும், ஒல்கொட்டும், இலங்கை முழுவதும் பௌத்த மதத்தை மீள் உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியால் தான் மகாவம்சம் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப் பட்டது. துட்டகைமுனு சிங்களவர்களின் நாயகன் ஆனான்.

5. இலங்கையில் பௌத்த மத புத்துயிர்ப்பில் ரஷ்யப் பெண்மணியான Blavatsky யின் பங்களிப்பும் அளப்பெரியது. Blavatsky யின் தொடர்பினால் தான் அநகாரிக தர்மபாலா பாளி மொழி பயின்றார். Blavatsky யின் ஆரிய இனப்பெருமை பேசும் கருத்துக்கள் ஹிட்லரையும் ஈர்த்தன. Theosophical Society இப்போதும் சென்னை, அடையாறில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

6. இலங்கையை காலனிப் படுத்திய போர்த்துக்கேயர்களும், டச்சுக்காரர்களும் பௌத்த மதத்தை ஒடுக்கி, ஏறக்குறைய அழித்து விட்டார்கள். நாட்டில் எந்தப் பாகத்திலும் பௌத்த மதக் கல்வி போதிக்கப் படவில்லை. அநகாரிக தர்மபாலா பெருமுயற்சி எடுத்து, பௌத்த மதப் பாடசாலைகளை உருவாக்கினார். விகாரைகள் புதுப்பிக்கப் பட்டன.

7. அநகாரிக தர்மபால முன்மொழிந்த தத்துவங்கள், பிற்காலத்தில் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் தோன்றுவதற்கு பெரிதும் உதவியது. அதனால், இன்றைக்கும் சிங்கள தேசியவாதிகள்/மதவாதிகள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகின்றனர்.

8. மறுபக்கத்தில், தமிழ் தேசியவாதிகள்/இனவாதிகள் அநகாரிக தர்மபாலாவை வெறும் இனவாத குருவாக மட்டும் பார்க்கின்றனர். ஆனால், அதே நபர்கள் ஆறுமுக நாவலரை மரியாதையுடன் நினைவுகூரும் முரண்நகையையும் அவதானிக்கலாம்.

9. பௌத்தமும், சிங்களமும் வளர்த்த, அநகாரிக தர்மபாலா "ஒரு சிங்கள ஆறுமுகநாவலர்". சைவமும், தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலர், "ஒரு தமிழ் அநகாரிக தர்மபாலா". ஆனால், சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள்.

10. தெற்கில் பௌத்த மதத்தையும், வடக்கில் சைவ மதத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உள்நோக்கம் குறித்து யாரும் அக்கறைப்படுவதில்லை. ஆனால், இன்றைய சிங்கள-தமிழ் இன முரண்பாட்டின் விதைகள் அப்போதே தூவப் பட்டிருக்கலாம். "மக்களை பிரித்தாள்வதன்" மூலமே, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பல நூறாண்டுகள் நிலைத்து நின்றது என்பது வரலாறு.

---Kalaiyarasan – The Netherland

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்! 


யார் இந்த ஆறுமுக நாவலர்? ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா?

//ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் பிறந்தவை.// - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். (1822 – 1879)

ஈழ‌த் தமிழ‌ர்க‌ளிடையே பிரிவினையையும், சாதிவெறியையும் தூண்டி விடும் நோக்கில், அர‌ச‌ ஒத்தோடி ஆறுமுக‌நாவ‌ல‌ர் எழுதிய,‌ "சைவ‌ வினா விடை" புத்த‌க‌ம், இன்றைக்கும் யாழ்ப்பாண‌ பாட‌சாலைக‌ளில் போதிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

யாழ் இந்துக் க‌ல்லூரியில் நான் ப‌டித்த‌ கால‌த்தில், சைவ‌ ப‌ரிபால‌ன‌ ச‌பை மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌ரீட்சை வைத்து, அந்த‌ நூலை ப‌டிக்க‌ ஊக்குவித்த‌து. அந்த‌ ந‌டைமுறை இப்போதும் தொட‌ர்கிற‌து.

"சாதிக‌ளை ஒழித்து த‌மிழ‌ர்க‌ளை ஒற்றுமைப் ப‌டுத்திய‌தாக‌" சொல்ல‌ப் ப‌டும், புலிக‌ளின் ந‌டைமுறை த‌மிழீழ‌ அர‌சு கூட‌ அந்த‌ சாதிவெறி நூலை த‌டை செய்ய‌வில்லை. புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டைக‌ளில் தாராள‌மாக‌ விற்ப‌னை செய்ய‌ப் ப‌ட்ட‌து. பாட‌சாலைக‌ளில் க‌ற்பிக்க‌ப் ப‌ட்ட‌து. அன்று அது எவ‌ர் க‌ண்க‌ளையும் உறுத்த‌வில்லை.

இன்றும் கூட‌, எந்த‌வொரு த‌மிழ்த் தேசிய‌வாதியும் "நாவ‌ல‌ர் ஒரு த‌மிழின‌த் துரோகி" என்று பிர‌க‌ட‌ன‌ம் செய்ய‌வில்லை. மாறாக‌, வெட்க‌மில்லாம‌ல் நாவ‌ல‌ருக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்குகிறார்க‌ள்.

யாழ்ப்பாணம், நல்லூரில் நாவலர் மண்டபம் இருக்கிறது. அதன் முற்றத்தில் ஆறுமுக நாவலரின் சிலை இருக்கிறது. அந்தச் சிலையை, 1969 ம் ஆண்டு, யாழ் குடாநாடு முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

அப்போதே சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்திருந்ததனர். "சாதிவெறியன் நாவலருக்கு சிலை வைப்பது அவமானம்" என்று பிரச்சாரம் செய்தனர். "கடும்போக்கு சாதியவாதி நாவலர் சிலையை தகர்ப்போம்" என்று சுவரொட்டிகள் ஓட்டப் பட்டன. ஆயினும், "ஈழத்து பார்ப்பனர்கள்" என்று சொல்லக் கூடிய வெள்ளாளர்கள், தமது சாதியத் தலைவர் நாவலருக்கு சிலை வைப்பதை பெருமையாகக் கருதினார்கள்.

நான் ஒரு தடவை இலங்கைக்கு சென்றிருந்த நேரம், நாவலர் மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர், மண்டபத்திற்கு பின்னால் இருந்த யாழ் அருங்காட்சியகத்தை பார்வையிட சென்றிருந்தேன்.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில், யாழ் கோட்டைக்கு அருகில் இருந்த அருங்காட்சியகம் தற்போது நல்லூருக்கு மாற்றப் பட்டுள்ளது. அந்த இடத்தில், ஆறுமுக நாவலர் வாழ்ந்த வீட்டின் எஞ்சிய சுவர்ப் பகுதி இருப்பது, ஓர் அகழ்வாராய்ச்சிப் பொக்கிஷமாக கருதப் பட்டிருக்கலாம். எதிர்பாராத விதமாக அங்கு வேறு சில ஆர்வத்திற்குரிய விடயங்களும் இருந்தன.

ஆறுமுக நாவலர் பிறந்த வீடு இருந்த இடத்தில், டச்சு காலனியாதிக்க வாதிகளின் சமாதிகள் இருக்கின்றன. அதாவது, நாவலர் வீட்டின் இடிந்த சுவர் என்று சொல்லப் படும் சுவருக்கு பின்னால் அந்த சமாதிகள் இருக்கின்றன. அவர்களும் சாதாரணமான ஆட்கள் அல்ல. யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான டச்சு படையணிகளின் தளபதிகளாக பணியாற்றி உள்ளனர். அந்தத் தகவல் சமாதிகளில் எழுதப் பட்டுள்ளது. அதன் அருகில் அருங்காட்சியகம் வைத்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது.

ஆறுமுக நாவலர் பிறந்த காலத்தில், யாழ்ப்பாணம் டச்சுக்காரர் கையை விட்டகன்று, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து விட்டிருந்தது. இருப்பினும், காலனிய காலத்தில் ஐரோப்பியரின் குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் உள்நாட்டவர்கள் வசிப்பதற்கு அனுமதி இருக்கவில்லை. அது மட்டுமல்லாது, டச்சு காலனிய ஆட்சியாளர்கள் இறந்தால், அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு அருகிலேயே புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தோனேசியா, சுரினாம் போன்ற பிற டச்சுக் காலனிகளிலும் இந்த நடைமுறை இருந்ததை சரித்திர நூல்களில் படித்திருக்கிறேன்.

காலனிய காலகட்டமானது, தென்னாபிரிக்காவில் இருந்ததைப் போன்ற "அப்பார்ட் ஹைட்" காலம் போன்றிருந்தது. அதாவது, வந்தேறுகுடிகளான வெள்ளையர்களும், உள்நாட்டவரான கருப்பர்களும் பிரித்து வைக்கப் பட்டனர். இலங்கையிலும் அதே நடைமுறை இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. வெள்ளையரின் பகுதிகளுக்கு அருகாமையில் வசிக்க அனுமதிக்கப் பட்டவர்கள், அன்றைய காலத்து அரச ஒத்தோடிகள், அல்லது ஒட்டுக்குழு உறுப்பினர்கள், அவர்களது குடும்பங்கள் மட்டுமே. ஐரோப்பியர்களுக்கு அடுத்ததாக, அவர்களுக்கு அரச சலுகைகள் கிடைத்து வந்தன.

ஆறுமுக நாவலர் சைவத்தையும், தமிழையும் வளர்த்தார் என்று இலங்கைத் தமிழ்ப் பாடநூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, அமெரிக்க மிஷனரிகள் பாடசாலைகள் கட்டி, கிறிஸ்தவ மதம் பரப்பிக் கொண்டிருந்த காலத்தில், நாவலர் இந்துப் பாடசாலைகள் கட்டினார். அங்கு வெள்ளாளர் சாதிப் பிள்ளைகளுக்கு மட்டுமே படிக்க அனுமதித்தார்கள். "நாவலரின் அரும்பெரும் முயற்சியால் தான், யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதம் பரவுவது தடுக்கப் பட்டது" என்று சொல்லப் படுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

அதற்கு பின்வரும் காரணங்களை காட்டலாம்:

1. ஆங்கிலேய காலனிய காலகட்டத்தில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அது ஒரு சர்வாதிகார ஆட்சி. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் கடுமையான சட்டம் போட்டு, நாவலர் "சைவத்துக்கும், தமிழுக்கும் செய்த தொண்டுப் பணியை" தடுத்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. இதே ஆங்கிலேய ஆட்சியாளர்கள், மறுபக்கத்தில் அநகாரிக தர்மபால "பௌத்தத்திற்கும், சிங்களத்திற்கும் தொண்டு செய்வதை" தடுக்கவில்லை.

2. சிங்களவர், அல்லது தமிழர் ஒருவர், ஆங்கிலேய காலனிய ஆட்சி நிர்வாகத்தில் பதவிகளில் சேர வேண்டும் என்றால், அவர் ஆங்கிலக் கல்வியில் புலமை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். (அதிலும் அங்கிலிக்கன், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவருக்கு முன்னுரிமை. அதற்கு அடுத்த படியாக கத்தோலிக்கர்கள்.) இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும், மேட்டுக்குடி சிங்களவர்களும், தமிழர்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். "தாய்மொழியை" விட, ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தனர்.

3. "சைவமும், தமிழும் வளர்த்த" ஆறுமுக நாவலர், அதை ஒரு காலனிய எதிர்ப்பு நடவடிக்கையாக செய்யவில்லை. அத்துடன் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே நாவலர் காலமாகி விட்டார். ஆகவே, "சைவமும், தமிழும் வளர்த்த நடவடிக்கை" உள்ளூர் மக்களை, அதாவது தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்திருக்கும். கிறிஸ்தவம், ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்த ஒரு நாட்டில், சைவத்தையும், தமிழையும் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்க முடியும்?

4. ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக, தமிழர்கள் மத்தியில் உள்ள, வர்க்க, சாதிய முரண்பாடுகளை கூர்மைப் படுத்துவதற்கு, நாவலரின் "சைவமும், தமிழும் வளர்த்த" நடவடிக்கை உறுதுணையாக இருந்திருக்கும். அன்று, ஆதிக்க சாதியினரான வெள்ளாளரில், ஒரு சிறு பிரிவினரே மேட்டுக்குடியினராக இருந்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாகவும், ஆங்கிலக் கல்வியில் புலமை பெற்றவர்களாகவும் இருந்தனர். இருப்பினும், அதே சாதியில் பெரும்பான்மையானோர் ஏழை விவசாயிகளாக, அதாவது உழைக்கும் வர்க்கமாக இருந்தனர். அவர்கள் தான், நாவலரின் "சைவமும், தமிழும் வளர்த்த பாடசாலைகளில்" படித்திருப்பார்கள். அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்திருக்கும். ஆனால், தாம் ஆங்கிலேய ஆட்சியில் ஒரு வர்க்கமாக ஒதுக்கப் படுகிறோம் என்ற உண்மை தெரிந்து விடாமல் மறைப்பதற்கு, நாவலர் அவர்களுக்கு சாதிவெறிக் கருத்துக்களை போதித்து இருக்கிறார்.

5. அந்தக் காலத்தில் இலவசக் கல்வி கிடையாது. எல்லா இடங்களிலும் கட்டணக் கல்வி தான். அதே நேரம், பொதுக் கல்வியும் இருக்கவில்லை. நாவலர் கட்டிய இந்துப் பாடசாலைகள் தனியார் மத நிறுவனம் ஒன்றால் நிர்வகிக்கப் பட்டன. மேலும், அங்கு தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு கல்வி உரிமை மறுக்கப் பட்டது. கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பள்ளிக்கூடங்களில் மட்டும், கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் குறைந்த எண்ணிக்கையில் சிலரை சேர்த்துக் கொண்டனர்.

இதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியது என்னவெனில், ஆறுமுக நாவலர் ஒரு காலனிய எதிர்ப்பாளர் அல்ல, மாறாக ஒரு காலனிய ஒத்தோடி. அதை நிரூபிப்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை காட்டலாம். இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் நடத்திய காந்தி போன்ற "தீவிரவாதிகளை" கூட பிரிட்டிஷ் காலனிய அரசு கடுமையாக நடத்தவில்லை. நாவலர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுண்டு விரலைக் கூட நீட்டாதவர். அவரால் என்ன ஆபத்து வந்து விடப் போகிறது?

ஆறுமுகநாவலர் சாதித் தீண்டாமை பற்றி பக்கம் பக்கமாக எழுதி உள்ளார். ஆனால், குறைந்தது ஒரு வரியாவது ஆங்கிலேயரின் நிறவாத/இனவாத தீண்டாமை பற்றி எழுதவில்லை. தனது சொந்த மக்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைகளை கண்டுகொள்ளவில்லை. அதையெல்லாம் கண்டும் காணாத மாதிரி புறக்கணித்தார். அப்படியான ஆறுமுகநாவலர் ஒன்றில் அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக் குழுத் தலைவராகவே இருந்திருக்க வேண்டும்.
                                      --Kalaiyarasan. – Netherland



Tuesday, February 5, 2013

ஆறுமுக நாவலர்


ஆறுமுக நாவலர்

வள்ளலாரின் திருவருட்பா – முதல் நான்கு திருமுறைகளை மட்டும் அவர் மாணவர் தொழுவூர் வேலாயுதம் 1867 பிப்ரவரியில் சென்னையில் வெளியிட்டார். அது, திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருவருட்பா முதற் புத்தகம் என்று காணப்பட்டது.

இந்நூலில் உள்ள ஆசிரியர் பெயர் – திருவருட்பிரகாச வள்ளலார், நூற் பெயர் – திருவருட்பா, நூல் பதிப்பின் பெயர் – திருமுறை. இவைகள் கண்டனத்துக்குரிய ஒன்றாக அக்காலத்தில் யாழ்ப்பாணம் ச.ஆறுமுக நாவலர் அவர்களால் கருதப்பட்டது. இங்கு ஓர் உண்மையை எடுத்துரைப்பது பொருந்தும் என எண்ணுகிறேன். உலகில் எந்த ஒரு இலக்கியப் படைப்பும், சாதனையும் சமகாலத்தவரால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே. இக்குறைபாட்டைக் குறிப்பிட்ட மனிதர்கள் மீது சுமத்துவதை விட அக்காலத்தின் சூழ்நிலை என்று கொள்வது அறிவுடைமை ஆகும்.

யாழ்ப்பாணம் ச.ஆறுமுக நாவலர் (1823 – 1879) இல்லறத்தில் ஈடுபடாமல், சைவமும், தமிழும் வளர்க்கும் பணியில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணத் தமிழறிஞர்களுள் சிறப்பிடம் பெற்றுத்திகழ்ந்தவர். சிதம்பரத்திலும் சென்னையிலும் சிலகாலம் தங்கி, சைவ பாடசாலைகள் ஏற்படுத்தி, பாடல்களை அச்சிட்டுத் தர அச்சகமும் வைத்து நடத்தினார். மாணவர்களுக்கு ஏற்ற பாடங்களை உரைநடையில் பல தொகுதிகளாக வெளியிட்டார். பல உயர்ந்த நூல்களைப் பதிப்பித்தும், உரை எழுதியும், உரைநடைப்படுத்தியும் பிழைஇன்றி அச்சிட்டு வெளியிட்டார். இவர் ‘நாவலர் என்றும் ‘தமிழ் உரைநடையின் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.

தமிழ் மக்களால் – குறிப்பாகச் சைவர்களால் பெரிதும் போற்றப்படும் ஆறுமுக நாவலர், வள்ளலாரின் திருவருட்பா வெளிவந்ததைக் கண்டார். “அடிகளின் பாடல் திரட்டிற்குத் திருவருட்பா எனப் பெயரிட்டதும் அதன் பகுதிகளுக்குத் திருமுறை எனப்பெயரிட்டதும்    அடிகளைத் திருவருட் பிரகாச வள்ளலார் என வழங்கியதும் ஆறுமுக நாவலுருக்கு உடன்பாடில்லை.

அடிகளது பாடல்கள் அருட்பாக்கள் அன்றென்பதும் அவை மருட்பாக்கள் என்பதும் ஆதலின் திருவருட்பா என்னும் பெயர் அடிகளின் பாடல் தொகுதிக்குப் பொருந்தாதென்பதும் நாவலரின் வாதம். பட்டினத்டார் படற்றிரட்டு, குமர குருபர் பிரபந்தத்திரட்டு, சிவப்பிரகாச சுவாமிகளின் பிரபந்தத் திரட்டு, தாயுமானவர் பாடற்றிரட்டு, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு என்பவைபோல் அடிகளது பாடல் தொகுதியும் ‘இராமலிங்க பிள்ளை பாடல் திரட்டு என்றோ ‘இராமலிங்க பிள்ளை பிரபந்தத் திரட்டு என்றோ வழங்கப்பட வேண்டுமென்பது நாவலர் கருத்து. ‘திருமுறை என வழங்கத்தக்கவை பன்னிரு திருமுறைகளே என்பதும் வேறு எவற்றையும் ‘திருமுறைஎன்னும் பேரால் வழங்கக் கூடாது என்பதும் நாவலர் கொள்கை.

இன்ன பிறவற்றால் நாவலர் வள்ளலாரையும் அவரது திருவருட்பாவையும் தூற்றி, போலியருட்டபா மறுப்பு எழுதி வேறொருவர் பேரால் 1868ல் வெளியிட்டார். இதற்கு மறுப்பாக வள்ளலாரின் மாணவர் ‘திருவருட்பா வின் பதிப்பாசிரியரான தொழுவூர் வேலாயுதம் அவர்கள் போலி அருட்பா மறுப்பின் கண்டனம் அல்லது குதர்க் காரணிய நாச மஹாபரசு என்பதை எழுதினார்.

இவற்றைத் தொடர்ந்து பல கண்டன, மறுப்பு நூல்கள் வெளிவந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டிற் கண்டனங்கள் எழுதுவதில் ஈழ நாட்டுப் புலவர்களே சிறந்து விளங்கினர். நாவலருடைய கண்டனங்கள் தனிச்சிறப்புடையன. எதிரிகளாலே இலகுவில் அசைக்க முடியாதன. சைவதூஷண பரிகாரம் – சுப்பிரபோதம், மித்தியவாத நிரசனம், போலி அருட்பா மறுப்பு முதலியன நாவலர் எழுதிய கண்டனங்களுட் சிறந்தன.
வாதத்தால் பயனில்லை என்றுனர்ந்த நாவலர் 1869ல் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வள்ளலார் மீது வழக்குத் தொடுத்தார். வழக்கு நடந்த நாளில் வள்ளலார் மன்றத்துள் புக, வாதி உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். வாதியாகிய ஆறுமுக நாவலர் பிரதிவாதிக்கு மரியாதை செலுத்தியதைக் கண்டு நீதிபதி வழக்கைத் தள்ளுபடிசெய்துவிட்டார். நாவலர் பெருமான் பின்னர் 1879ல் மறைந்தார். அருட்பா மருட்பா போர் ஓய்ந்ததா?


இல்லை. கால் நூற்றாண்டுக்குப்பின் நாவலரின் மாணவரின் மாணவராகிய நா.கதிரைவேற்பிள்ளை (1871-1907) சென்னை வந்து சில ஆண்டுகள் தங்கியபின், இப்போர் மீண்டும் எழுந்தது. யாழ்ப்பாணம் நா.கதிரைவேற் பிள்ளை ஒருசிறந்த தமிழ்ப் புலவர். நாவன்மை வாய்ந்தவர், எழுத்தாற்றல் நிறைந்தவர், வாதம் புரிவதில் வல்லவர், சைவ சமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டவர். நாவலரைப் போற்றுபவர். தம் பேச்சு, எழுத்து, வாதத் திறங்களால் மக்களின் அன்பைப் பெற்றவர். இத்தகையார் சைவத்தின் மேன்மையை விளக்குவதற்காக வைணவம், பெளத்தம், வேதாந்தம் ஆகிய சமயங்களை எதிர்த்து வாதம் செய்தவர் – வள்ளலாரின் அருட்பாவையும் எதிர்த்தார். தாம் கோவை செய்த அகராதியில் அருட்பா என்பதற்குப் பன்னிரு திருமுறை என்றே பொருள் விளக்கம் செய்துள்ளார். திரு.வி.க. இவரது மாணவர், திரு.வி.க. இவர் மீது கொண்ட அதீத பற்றால் தமது பள்ளிப் படிப்பையே பாதியில் கைவிட்டார்.
 
இராமலிங்க சுவாமிகளின் எதிர் அணியிலே நின்ற கதிரைவேற் பிள்ளையின் செயல்களுக்குத் துணை போன திரு.வி.க. பின்னாளில் அருட்பா அணியைச் சார்ந்த ம.ரா. குமாரசாமிப்பிள்ளையிடம் 1912ல் பேசிய பேச்சு அருட்பா – மருட்பா நிலைகளைக் தெளிவாகக் காட்டுகிறது.

குமாரசாமிப்பிள்ளை குறுக்கிட்டு ‘நீங்கள் கதிரைவேற் பிள்ளை மாணாக்கர், யான் இராமலிங்க சுவாமிகளின் அடியவன். இருவருக்கும் இடையில் நெருப்பு ஆறு ஓடுகிறதே என்று சொன்னார். நெருப்பு ஆறா? அன்பு ஆறு என்று சொல்லுங்கள்… என்று ஒருவாறு திரு.வி.க. வள்ளலாரின் அருட்பாவை ஒத்தவரானார்.