Tuesday, June 7, 2022

மதுரை ஆதீனத்தில் வள்ளலார் தீட்சை பெற்றாரா?

 

                        

                          மதுரை ஆதீனத்திற்கு கண்டனங்கள்:

1500 வருடங்களுக்கு முன்னர் திருஞான சம்பந்தரால் உருவானதாகச் சொல்லப்படும் மதுரை ஆதீனத்தின் 292-ஆவது ஆதீனம் குரு அருணகிரி அவர்கள் நித்தியானந்தா அவர்களை இளைய ஆதீனமாக தேர்ந்தெடுத்ததால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு பின்பு அந்நிலையை திரும்பப் பெற்றார். தற்போது நித்தியானந்தா அவர்களின் நிலை என்ன வென்றே தெரியாவண்ணம் பல வதந்திகள் அல்லது உண்மைகள் யூட்யூபில் பரவிவருகின்றன. இவ்வாறு மதுரை ஆதீனம் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை.

தற்போது 293-ஆம் ஆதீனமாக உள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஒரு விழாவில் பேசும்போது, வள்ளலார் மதுரை ஆதீனத்தில் தீட்சை பெற்றார் என்று, தான் சார்ந்த ஆதீனத்திற்கு பெருமையை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாய்க்கு வந்ததை அப்படியே உளறிவிட்டார்.

சைவ சமயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு ஆதீனம்,பொறுப்பில்லாமல், வள்ளற்பெருமானைப் பற்றி பேசும்போது இவ்வாறு பொய்ச் செய்தியினை மக்களிடையே பரப்புவது கண்டிக்கத்தக்கது.

வள்ளற்பெருமான் வெளிப்பட வாழுங்காலத்தில் அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களும் புறக்கனித்தன. ஆதீனங்களின் உதவிகளை வள்ளற்பெருமானும் நாடவில்லை. அனைத்து ஆதீனங்களையும் வள்ளற்பெருமான் புறக்கனித்தார். வள்ளற்பெருமானுக்கு எதிராக திருவாவடுதுறை ஆதீனம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு மஹாவித்வான் என்கின்ற பட்டத்தையும், இலங்கை ஆறுமுகம் பிள்ளை அவர்களுக்கு நாவலர் பட்டமும் கொடுத்து, அவர்களை புகழ்வதின் மூலம் வள்ளற்பெருமானை மறைமுகமாக இகழ்ந்தார்கள்.

வள்ளற்பெருமான் தான் வெளிப்பட இவ்வுலகில் வாழும்போது மதுரை பக்கமே சென்றதில்லை என்பது வரலாறு. ஆனால் அன்று மதுரை ஆதீனத்தில் தங்கி இருந்த திருச்சிற்றம்பல ஞானியாருக்கும் வள்ளற்பெருமானுக்கும் கடிதத் தொடர்பு இருந்தது உண்மை. வள்ளற்பெருமான் தங்கியிருந்த கருங்குழியிலிருந்து மதுரை ஆதீனத்திற்கு கடித தொடர்பு இருந்தது. இத்தொடர்பை பற்றி வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய பிரபந்தத்திரட்டு என்னும் நூலில் உள்ள சரித்திரக்குறிப்புகளில் இருந்து நாம் இதனைக் காணலாம்.

திரு.அ.திருநாவுக்கரசு அவர்களின் பதிப்பில் வெளிவந்த பிரபந்தத்திரட்டு என்னும் நூலில் பக்கம் 89-ல் நாம் இதனைக் காணலாம். இதன் விவரங்களை நாம் மற்றொரு பதிவில் காண்போம்.

நாம் இதுபற்றின பதிவு செய்துக்கொண்டிருக்கும்போது, முகநூலில் திருமதி.அஜந்தா அம்மா அவர்கள் மதுரை ஆதீன வரலாறு என்னும் நூலில் இருந்து சில பக்கங்களை பதிவேற்றம் செய்திருந்தார்கள். அதனையும் நாம் இங்கே கிழே அன்பர்கள் பார்வைக்கு வைத்திருக்கின்றோம். அதில் அன்றைய மதுரை ஆதீனம் நமது வள்ளற்பெருமானுக்கு வரைந்த கடிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் வள்ளலார், மதுரை ஆதீனத்திற்கு  பாடியருளிய ”திருமுகப் பாசுரம்” என்பதும் காணக்கிடைக்கின்றது. இந்தப்பாடல்கள் திருவருட்பாவில் விடுபட்டுள்ள பாடல்களாகும்.

அன்றைய மதுரை ஆதீனம் வள்ளற்பெருமானுக்கு வரைந்த மடலில், “நாம் தமக்களித்த தீட்சா மந்திரத்தை அடிக்கடி உருவேற்றி வரவேண்டியது.” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து இக்கடிதத்திற்கு முன்பே வேறொரு கடிதத்தில் அந்த தீட்சா மந்திரத்தை ஆதீனம் அவர்கள் வள்ளற்பெருமானுக்கு தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு கடிதம் வாயிலாக மந்திரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளனவே அன்றி வள்ளற்பெருமான் ஆதீனத்திடம் தீட்சை பெறவில்லை என்பது தெளிவாகின்றது. ஆனால், வள்ளற்பெருமானுடன் இருந்த திருச்சிற்றம்பல ஞானியார், கருங்குழி புருஷோத்தம ரெட்டியார், கணக்கிலவதானம் முத்துசாமி பிள்ளை ஆகிய மூவரும் நேரடியாக மதுரைச் சென்று அன்றையா ஆதீனத்திடம் சிவ தீட்சை பெற்றது இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வள்ளற்பெருமான் தொடங்கிய சத்திய சன்மார்க்கத்தைப்பற்றியும் அன்றைய மதுரை ஆதீனம் மேற்குறித்த மூன்று நபர்களிடமும் உரையாடியிருப்பதும் தெரியவருகின்றது.

நாம் இந்தப்பதிவில் மூலம் மீண்டும் தெரிவிக்க விரும்புவது யாதெனில், மதுரை ஆதீனத்தின் பொய் உரைக்கு கண்டனம் மட்டுமே. இது நிற்க.

மதுரை ஆதீன வரலாறு என்னும் நூலில் 

உள்ள வள்ளலார் பற்றின பதிவுகள்:




சிதம்பரம் கோயில் வரவு செலவு கணக்குகள்:

ஓரிரு நாட்களுக்கு முன்னர், இந்து நலத்துறையால், சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளும், இந்து நலத்துறை அமைச்சரும் சென்றபோது, அங்குள்ள தீட்சிதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணக்குகளை காண்பிக்க மறுத்துவிட்டனர் என்பது செய்தி.

இந்து கோயில்களை நிர்வகிக்கும் இந்து நலத்துறையும் தாம் எழுதும் கணக்குகளை, கோயில்கள் வாரியாக அதாவது தனித்தனியாக ஒவ்வொரு கோயில்களுக்கும் வரவு செலவு கணக்குகளையும் பேலன்ஸீட்டுகளையும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதத்திற்குள் ஆடிட் செய்து அதனை பொதுமக்களுக்கு இந்து நலத்துறை வெப்சைட்டில் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்கின்றார்களா? https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்கின்ற வெப்சைட்டில் சென்று பார்த்தால், அவ்வாறு பொதுமக்களுக்கு வரவு செலவினங்களை அரசு வெளியிடுவதாகத் தெரியவில்லை. இதனை ஏன் செய்ய வில்லை. அங்கும் ஊழல் நடைபெறுகின்றது. அதனால் அரசு கோயில்களின் வரவு செலவினை மக்களிடம் காண்பிப்பதில்லை.

அதுபோல தீட்சிதர்கள் எழுதும் சிதம்பரம் கோயிலின் வரவு செலவு கணக்குகளிலும் ஊழல் இல்லாமல் இருக்காது.அதனால் அவர்கள் அதனை அரசிடம் காண்பிக்க மறுக்கின்றார்கள். இங்கு இருவருமே மக்களிடம் குற்றவாளிகாக நிற்கின்றார்கள். நாம் யாரை ஆதரிப்பது? அரசினையா? தீட்சிதர்களையா? இருவரும் என்னப்பொறுத்தவரை ஊழல் வாதிகளே. இதன் இறுதி தீர்வு தமிழக மக்களிடம்தான் உள்ளது. தீட்சிதர்கள் அரசிடம் தங்களது கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதியளிக்க வேண்டும். அதேபோல் அரசும், தாங்கள் நிர்வகிக்கும் கோயில்களின் வரவு செலவு கணக்குகளை பொது மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். இது நிற்க.

                              பங்காரு அடிகளின் ஆக்ரமிப்புகள்:

அடுத்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் ஆக்ரமிப்புகளை ஜூன் 10-ஆம் தேதிக்குள் இடித்து தரைமட்டமாக்கி, அந்நிலங்களை மறுபடியும் நீர்நிலைகளாகவும், அரசின் புறம்போக்கு நிலமாகவும் மாற்றம் செய்திடல் வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு போட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு முன்னரே மார்ச் மாதம் என கெடு விதித்த நீதிமன்றம், தற்போது ஜூன் 10-ஆம் தேதி என கெடு விதித்துள்ளது. இம்முறையேனும் அரசு, நீதி மன்ற ஆணையை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்றிட வேண்டும். ஆன்மிகம் என்று பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் தாம் ஒரு முன்மாதிரியாக மக்களிடம் வாழ்ந்து காட்ட வேண்டும். ஆனால், மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆக்ரமிப்பு செய்து வியாபாரம் செய்பவர்களை,மக்கள் எவ்வாறு இவரை ஆன்மிக குருவாக ஏற்கின்றார்கள் எனத் தெரியவில்லை. குற்றம் மக்களுடையதே.

அதே நேரம் வள்ளற்பெருமானின் வடலூர் பெருவெளியை ஆக்ரமிப்பு செய்தவர்களையும் இவ்வரசு, நீதிமன்றம் மூலம் விரைவில் அகற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இது நிற்க.

                                            நபிகள் நாயகம்:

இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, அரபு நாடுகளின் கூட்டமைப்புகள், கத்தார் போன்ற சிறிய நாடுகள் எல்லாம் தற்போது அலறி வருகின்றன. காரணம், நமது நாட்டினை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஒருவர், தாம் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்தைப் பற்றி தவறாக பேசிவிட்டதே காரணம் என சொல்லப்படுகின்றது. பிரச்சனைகள் பெரிதானவுடன் அச்செய்தி தொடர்பாளரை உடனே அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டது அக்கட்சி. அவர் என்ன பேசினார் என பொதுமக்களுக்கு இதுவரை தெரியவில்லை. ஆனாலும் அவர் பேசிய அக்கருத்தை ஏற்கனவே நமது தமிழகத்தில் இஸ்லாமியர்களே பேசியதுதான் எனவும் செய்தி கேட்கின்றோம். அச்செய்தியாளர் தவறாக பேசியிருந்தால் அந்த செய்தியாளர் சார்ந்த அக்கட்சி மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும். ஆனால் இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? இந்தியா மன்னிப்பு கேட்பது என்பது நடவாத ஒன்று.

பொதுவாக, எந்த ஒரு தனி நபரும், எந்த ஒரு கடவுளும் மக்களின் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களே ஆவர். விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்ட கடவுளும் இல்லை. தனி நபர்களும் இவ்வுலகில் இல்லை. இருக்கவும் முடியாது. ஒரு எதிர்மறை கருத்தினை இலை மறை காய் போல விமர்சிக்க வேண்டும். தேவையற்று யாரையும், எந்தக் கடவுளையும் விமர்சிக்கவும் கூடாது. தேவை ஏற்படின் விமர்சிக்கவும் வேண்டும். அதன் எதிர்வினைகளை, எதிர் கருத்துக்களால் தெரிவிக்கவேண்டுமே தவிர, அதற்காக ஒருவரை ஒருவர் கொலை செய்வது, கொலை மிரட்டல் விடுவது, வன்முறையில் இறங்குவது காட்டுமிராண்டித்தனமாகும்.

நன்றி.

தி.ம.இராமலிங்கம்

9445545475

 


               

Sunday, June 5, 2022

வீடுகள் தோறும் தருமச்சாலை – திட்டம்

                                 வீடுகள் தோறும் தருமச்சாலைதிட்டம்




ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு.

கடலூர் மாநகரில் வீடுகள் தோறும் தருமச்சாலைத் திட்டம் துவங்கப்பட உள்ளது. அதன் விவரங்களை இங்கே நாம் இப்பதிவில் காண்போம். ஜீவகாருண்யத்தின் சாதனம் தருமச்சாலை. தருமச்சாலையின் சாதனம் தயவு உள்ளம் படைத்த சமுசாரிகளின் இல்லங்கள்தான்.

உண்பதற்கு ஆகாரமில்லாமல் சோர்வடைந்த சீவர்களுக்குச் சீவகாருணியத்தால், அந்தச் சீவர்களுக்கு அகத்தினித்தும் முகத்தினிடத்தும் தழைந்து பொங்கித் ததும்புகின்ற இன்பமும், அது கண்டபோது கொடுத்தவர்களுக்கு அகத்திலும் முகத்திலும் அவ்வாறுண்டகின்ற இன்பமும், ஆன்ம சகிதமாகிய கடவுள் கரணத்திற் பூரணமாகத் தோன்றும்.

பசியினால் வருகின்ற துன்பங்கள், ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க, அத்துன்பங்களும் நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியதுக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சமென்றே சத்தியமாக அறிய வேண்டும்.

நேற்று இராப்பகல் முழுதும் நம்மை அரைப்பங்கு கொன்றுதின்ற பசியென்கின்ற பாவி இன்றும் வருமே! இதற்கு என்ன செய்வோம்! என்று ஏக்கங் கொள்கின்ற ஏழைச் சீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் சீவகாருண்யம்.

நடந்து நடந்து காலும் சோர்ந்தது. கேட்டுக் கேட்டு வாயுஞ் சோர்ந்தது. நினைத்து நினைத்து மனமுஞ் சோர்ந்து இனி இப்பாவி வயிற்றுக் கென்ன செய்வோம்! என்று கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துக் கண்ணீரை மாற்றுவதே சீவகாருண்யம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற சாதன சகாயங்களை வேண்டாமல், சீவகாருண்யம் என்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

புண்ணியபூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும், உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச்சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்.

அன்றியும், சீவகாருணிய ஒழுக்கத்தை உடையவர்களாகி அருந்தல் பொருந்தல் முதலிய பிரபஞ்ச போகங்களை அனுபவிக்கின்ற சமுசாரிகளெல்லாம் சர்வசக்தியுடைய கடவுளருளுக்கு முழுதும் பாத்திரமாவார்கள். சீவகாருணிய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளருளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள். அவர்களை ஆன்மவிளக்கமுள்ளவர்களாகவும் நினைக்கப்படாதுசீவகாருணிய மில்லாது செய்யப்படுகிற செய்கைக ளெல்லாம் பிரயோஜன மில்லாத மாயாசாலச் செய்கைகளே யாகுமென்று அறியவேண்டும்.

எனவே தயவு உள்ளம் படைத்த சமுசாரிகள் அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பை வள்ளலார் வழங்குகின்றார். வீடுகள் தோறும் தருமச்சாலை திட்டத்தில் இணைந்திட வாருங்கள்.   

சன்மார்க்க இல்லங்கள் அல்லது தாவர உணவை மட்டுமே சமைக்கின்ற உண்ணுகின்ற இல்லங்கள் மட்டும் இத்திட்டத்தில் இணைய வேண்டும். இத்திட்டத்தின்படி  தினசரி குறைந்தது 1 கிலோ அரிசி சாதம் (தயிர் சாதம் கண்டிப்பாகக் கூடாது. கசாம்பார் சாதம் எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்ற வெரைட்டி ரைஸ்) 10 எண்ணிக்கை கொண்ட உணவு பொட்டலங்கள் பார்சல் செய்து காலை 10.30 மணிக்கு தயாராக வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

உங்கள் இல்லம் தேடி எங்கள் குழுவில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் வந்து நீங்கள் அளிக்கும் உணவு பொட்டலங்களை வாங்கிச் செல்வார்கள். இப்படி பல சன்மார்க்க குடும்பங்களிலிருந்து வாங்கி வரும் உணவு பொட்டலங்களை தீபத்தின் முன் குவித்து இறைவனிம் ஆணை பெற்று, அந்த உணவுப் பொட்டலங்கள் அனைத்தும் கடலூர் நகர் முழுதும் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு நேரடியாகச் சென்று வழங்குவார்கள்.

இதனால் இத்திட்டத்தில்  இணைந்த குடும்பங்களில் உள்ள அனைவருக்கும் ஆன்ம இலாபம் கிடைப்பது உறுதி. மேலும் உங்கள் குடும்பம் வடலூர் சத்திய தருமச்சாலை போன்று தினமும், பசியை நீக்க முடியாது வருந்துகின்ற ஏழை மக்களுக்கு உணவை அளிக்கும் தருமத்தின் சாலைகளில் நடைபயிலும் ஓர் ஒப்பற்ற மாண்பினை பெறும் என்பதில் ஐயமில்லை.

இத்திட்டத்தில் சேரும் அன்பர்கள் கடலூர் நகருக்குள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். தாவர உணவாளர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மட்டும் 9445545475 என்கின்ற வாட்ஸாப் எண்ணில் உங்கள் இல்லத்தின் முகவரி மற்றும் உங்களது பெயரினை தெரிவிக்கவும்.

இதற்காக வாட்சாப் குரூப் துவங்கப்பட்டு, அதில் மற்ற விவரங்கள் அனைத்து பகிரப்பட்டு இத்திட்டம் இனிதே நடைபெற ஆவண செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வீடுகள் தோறும் தருமச்சாலைத் திட்டம் தமிழகத்தில் சில நகரங்களில் இயங்கி வருகின்றன. தற்போது சன்மார்க்கர் சாது ஹரி அவர்களின் சீரிய கருத்துருவில் இத்திட்டம் நமது கடலூர் மாநகரில் நடைபெற உள்ளது. நன்றி.

தி.ம.இராமலிங்கம்

கடலூர்

9445545475