Thursday, November 30, 2023

அருட்பெருஞ்ஜோதி

 அருட்பெருஞ்ஜோதி:

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


இவ்வுலகிற்கு முதன் முதலில் சாதி, மதம், இனம் அற்ற தனிப் பெருங் கருணை கடவுளான "அருட்பெருஞ்ஜோதி" கடவுளை அறிமுகப்படுத்தியவர் நமது வள்ளலார். 

"அருட்பெருஞ்ஜோதி" என்று தாம் வழிபட்ட தனித் தலைமை இறைவனுக்கு முதன் முதலில் வள்ளலார்தான் பெயர் வைத்தார். இதற்கு முன்னர் வேறு எந்த மதங்களிலும் சமயங்களிலும் "அருட்பெருஞ்ஜோதி" என்ற பெயர் கொண்ட கடவுள் யாரும் கிடையாது. 

எனவே சமய மதங்களைச் சார்ந்த உலக மக்கள் யாரும் தாங்கள் வழி வழியாக வணங்குகின்ற கடவுள்களை "அருட்பெருஞ்ஜோதி" என்று வள்ளலார் உருவாக்கிய பெயரைக் கொண்டு அழைப்பது நன்றல்ல. இப்பெயர் சுத்த சன்மார்க்க கடவுளுக்கே முற்றிலும் உரியது. வள்ளலாருக்கே (சுத்த சன்மார்க்கத்துக்கே) இப்பெயர் காப்பரிமை பெற்றது. 

சமய மதங்களில் உள்ள அன்பர்கள் தயவு செய்து அவரவர் கடவுள்கள் பெயரை மட்டும் தங்கள் பிரச்சாரத்திற்கு பயன் படுத்தவும். எனது சமய அல்லது மதக் கடவுள்தான் "அருட்பெருஞ்ஜோதி" என்று வழங்குவது வள்ளலார் கொள்கைக்கு எதிரானது. நன்றி. 

TMR

9445545475

vallalarmail@gmail.com

Thursday, November 23, 2023

சூஃபி ராபியா - கவிதைகள்

 சூஃபி ராபியா - கவிதைகள்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



திரை விலகல்:

******************

கடவுளை நோக்கிப் பயணிப்பவர்கள்

திரை விலக்கி

உண்மையைப் பார்க்கட்டும்.


பிறர் குற்றம் பாராதே:

**************************

நான் கடவுளை நேசித்துக்கொண்டிருக்கிறேன்.

சாத்தானை வெறுக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை.


கதவைத் திற:

****************

யாரையாவது திறக்கச் சொல்லி மன்றாடி

எவ்வளவு காலம்தான் 

திறந்தக் கதவை

தட்டிக்கொண்டிருப்பாய்?


தனித்திரு:

*************

எனது கடவுளே,

இப்போது எல்லோரும் அவரவர் காதலர்களுடன் தனித்து இருக்கிறார்கள்.

நான் உன்னுடன் தனித்து இருக்கிறேன்.


கடவுள் மயமாதல்:

**********************

யாருடைய இருத்தலில் நீங்கள்

மறைந்து போகிறீர்களோ,

யாருடைய இருத்தலில் நீங்கள்

இன்னும் இருக்கிறீர்களோ,

யாரைத் தேடி உங்கள்

பயணம் தொடர்கிறதோ,

அவருடைய அன்புக்கு ஏங்கி,

அதில் கரைந்து

தொலைந்தபின், 

உங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய

வெறுமையைத் தவிர

வேறென்ன இருக்க

முடியும்?

____________

Tuesday, November 21, 2023

திருப்புகழ் கிடைத்த கதை

                                                             திருப்புகழ் கிடைத்த கதை


                                           - அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.


திருப்புகழ் நெருப்பென்று  அறிவோம்..

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா? அதற்கு யார் காரணம் என்பதை  வரலாறு அறியுமா?

அருணகிரிநாதர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்

திருப்புகழ் ஆகும். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. அதாவது கிடைத்துள்ளன. இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும். இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசை நூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை. 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுகன்...... அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

கற்பகம் எனவினை.... என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்பொழிவுகளைத் தொடங்குவார். அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது.

அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது 

அந்த  போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.

திருப்புகழ் நமக்கு கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது.

அவர் குறித்து  ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது.

அதை இப்போது சித்தர்களின் குரல் வாயிலாக பார்ப்போம்.....

பிரிட்டிஷ்காரர்கள் என்ற மாபாவிகள்  இந்தியாவை ஆண்டபோது  இந்தியர்களுக்கு அரிதாகவே அரசுப் பணி தருவார்கள். ஒருவர் மாவட்ட ஆட்சியர் ஆகும் தகுதி இருந்தால், அவர் இந்தியராக இருந்தால், அவருக்கு எழுத்தர் வேலை கொடுப்பார்கள்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர்.

அப்பாடலின் வரி;

வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை

மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...

பொருள்:

              வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே....

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் அந்தப் பாடலை கேட்ட மாத்திரத்தில் சொக்கிப் போனார். என்ன பாடல் அது எனக் கேட்டார். அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ்  பாடல்கள் 16000 இல் ஒன்று என்று சொன்னார்கள். எங்கே அந்நூலைக்  காட்டுங்கள் என்றார். ஓலைச்சுவடி ஒன்றை நீட்டினார்கள். மீதம் பாடல்கள்  எங்கே.. என்று பதறினார்... எங்களிடம் இல்லை என்று கை விரித்தார்கள்.

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக் கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின.....

(1)  1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 

(2) 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. 

(3) அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 

(4) 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 

(5) 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது "என் சரித்திரம்" நூலில் பதிவுசெய்துள்ளார்.

அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,

"எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே" என்ற வாக்கால் கூறியுள்ளார்.

ஆனால்  வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது.

ஓலைச்சுவடிகளின் குறை களைக் களைந்து சீர் செய்வ தற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார்.

திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் தமது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும்புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

நாம் இன்று முருகனை நினைந்து உருகிப் பாடும் திருப்புகழ் ஒரு தனி நபர் விடா முயற்சியால் தான் என நாம் நினைக்கும்போது அய்யா வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் பெருந்தொண்டு எத்தகையது என நன்றியுடன் வணங்குவோம்.

சந்த முனி யின் 1324 திருப்புகழ் பாடல்களில் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன. என ஓர் ஆய்வுக் குறிப்பு சொல்கிறது.

நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….!!

உதாரணமாக ஒரு மிக எளிய பாடல் பழனி  திருப்புகழில் இருந்து பார்ப்போம்.

சந்தம்:

தனதான தந்தனத் ...... தனதான

     தனதான தந்தனத் ...... தனதான

பாடல் :

அபகார நிந்தைபட் ...... டுழலாதே

     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே

     உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே

     இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா

     திருவாவி னன்குடிப் ...... பெருமாளே..

 இப்பாடலில் அருணகிரிநாதர் சாமிகள் முருகனின் அருள் பெறுவதற்கான எளிய வழிகள் சொல்கிறார்.

      பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அதனால் வினைகளை ஈட்டி விடாமல், அவ்வாறு  தீய  குணங்கள் கொண்ட மனிதர்களுடன் பழகாமலும், உரிய கிரியைகளுடன் கூடிய பூசையை தினம்  செய்தால் முருகனின் அருள் பெறலாம் என்கிறார்.  ஒவ்வொரு சைவரும் ஜெபமாலை வைத்து இருக்க வேண்டும்.

திருமுருகன் ஆறுபடைகளில் மூன்றாவது படைவீடு திருஆவினன்குடி என நக்கீரதேவ நாயனார் அவர்களால் திருமுருகாற்றுப்படை நூலில் பாடப்பட்டு  இருக்கிறது. இத்திருக்கோயிலில் மயிலில் ஆரோகணித்து திருமுருகன் வீற்றிருப்பார். பழனி மலைமேல் இருக்கும் தண்டபாணி கோயில் படை வீடு அல்ல என்பர் பெரியோர்.

திருத்தணி திருப்புகழில் அருணகிரிநாதர் சுவாமிகள் திருப்புகழ் சிறப்பு சொல்கிறார்.

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்.

அய்யா  வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் நம் கையில் உள்ளது. நெருப்பையும் எரிக்கும் நெருப்பான  திருப்புகழில் இருந்து எளிய பாடல் ஒன்றாவது தினம் ஒன்று விடாமல் சொல்வோம்... முருகனின் திருவருள் பெறுவோம்.




            

Saturday, November 18, 2023

வள்ளற்பெருமானின் மாஹா மந்திரம் எந்நூலில் யாரால் முதலில் வெளியிடப்பட்டது?

 வள்ளற்பெருமானின் மாஹா மந்திரம் எந்நூலில் யாரால் முதலில் வெளியிடப்பட்டது?

அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம்…

திரு.ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்களால்தான் 1932-ஆம் ஆண்டு வெளிவந்த திருவருட்பாப் பதிப்பில் மஹாபதேசம் என்ற பகுதியில் மஹா மந்திரம் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது என்று நாம் இதுகாரும் கருதிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தவறு.

வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களால் 1924-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளிவந்த திருவருட்பாவில் வள்ளற்பெருமானின் மஹா மந்திரம் வெளியிடப்பட்டுவிட்டது. மேலும் மஹாபதேசத்தின் சில முக்கிய பகுதிகள் அதாவது சன்மார்க்கக் கொடியின் விளக்கங்கள் முதற்கொண்டு “திருநெறிக் குறிப்புகள்” என்ற பகுதியில் பக்கம் 669-670 - ல் வெளியிடப்பட்டுவிட்டது.

1923-ஆம் ஆண்டு ச.மு.க. அவர்கள் தனது “பிரபந்தத்திரட்டு” நூலில் வள்ளற்பெருமானின் சரித்திரக் குறிப்புகளை எழுதி முடித்துவிட்டு அதன் இறுதியில் “இனி அச்சிட வேண்டியவை: வள்ளலார் பிரசங்கித்த காலங்களில் அன்பர்கள் எழுதிவைத்த பற்பல அருமையான குறிப்புகள்.” (பக்கம்-137 - பிரபந்தத்திரட்டு - திரு.அ.திருநாவுக்கரசு பதிப்பு) என்று குறிப்பிட்டதைத்தான் 1924-ஆம் ஆண்டு தாம் பதிப்பித்த திருவருட்பாவில் ”திருநெறிக் குறிப்புகள்” என்று வெளிகொண்டு வந்தார்.

எனவே மஹா மந்திரத்தை முதன் முதலில் இவ்வுலகில் வெளியிட்டவர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களே ஆவர் என்பது சன்மார்க்க உலகிற்கு நாம் எடுத்துரைக்கும் வரலாற்று உண்மையாகும். நன்றி.

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி  

நன்றி: திரு.சாது ஹரி ஐயா.


தி.ம.இராமலிங்கம்

9445545475

vallalarmail@gmail.com









Friday, November 3, 2023

கடவுள் கணக்கு எப்படி இருக்கும்?

                                               கடவுள் கணக்கு எப்படி இருக்கும்?



ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு

நான் ஒரு வழி சொல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொழுது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர்

மன்னா ... இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுத்தார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.

ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்.

இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு! ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தர்ம கணக்கு!!