Wednesday, November 27, 2013

குருபூஜை அழைப்பிதழ்


குருபூஜை அழைப்பிதழ்

பேரன்புடையீர்! வணக்கம்!

திருஅருட்பிரகாச வள்ளலாரின் மாணவர், வள்ளல்அடி ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் 89-ம் ஆண்டு குருபூஜை விழாவானது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளின் திருவருள் வளத்தாலும் காரணப்பட்டுவாழ் சீரோங்கும் கிராமவாசிகளாலும் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த அருளாளர்களின் ஆசிகளோடும் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி (08-12-2013) அன்று காரணப்பட்டு கிராமத்தில் அருள்ஒளி ஈந்துவருகின்ற அவரது சமாதி நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

அவ்வமையம் சுத்த சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்களும், பொதுமக்களும் வள்ளல்அடியின் குருபூஜையில் கலந்துக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை பெறவேண்டுமாய் அழைக்கிறோம்.

மாணவரின் விழாவிற்கு ஆசிரியர் வராமல் இருப்பாரா? நமது ஆசிரியர் அழைக்காமலேயே வந்துவிடும் பேரருளை உடையவர் அல்லவா? ஆம்... நிச்சயம் வள்ளலார் இவ்விழாவிலே கலந்துக்கொண்டு நம்மை எல்லாம் ஆசிவழங்க காரணப்பட்டு கிராமத்தில் எழுந்தருள்வார். ஆகையால் அன்பர்களே, நம்மை நேரில் வந்து அழைக்கவில்லையே! எப்படி அங்குப் போவது? என்று இருந்துவிடாதீர்கள், இவ்விழா வள்ளலார் கலந்துக்கொள்ளும் விழா என்பதை மறக்காதீர், வாருங்கள் காரணப்பட்டிற்கு, வள்ளலாரின் திருவடி அங்கேஇருந்துக்கொண்டு இப்பிரபஞ்சத்தை ஆண்டுக்கொண்டிருப்பதை வந்து காணுங்கள். அருளை பெறுங்கள்.

மெய்ஞானி கந்தசாமிப் பெரியோன் நூல்வாழி
அஞ்ஞானம் நீங்கி அருள் வளர்க இஞ்ஞாலத்
திந்தச் சமாதி எழிற்சிற் சபையாகிச்
சந்ததமும் வாழ்க தழைத்து. (பிரபந்தத்திரட்டு)

துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
  சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
  பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
  மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. (திருஅருட்பா)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Monday, November 25, 2013

இராமலிங்கா அபயம்

 இராமலிங்கா அபயம்

வணக்கம்!

அருளாளர் திரு.மு.பாலசுப்ரமணியன் என்கிற 'முபா' ஐயா (எண்.98, நேரு நகர், ஆழ்வார் திருநகர்) அவர்களின் கட்டளைப்படியும் திருவருள் சம்மதத்தாலும் மேலும் ஒரு சித்திரக்கவி இங்கே பொலிந்துள்ளது.

கீழ்கண்ட கவியினை, வரையப்பட்டுள்ள குத்துவிளக்கின் கீழிருந்து, இடமிருந்து வலமாக பிறகு வலமிருந்து இடமாக முறையே மேல் நோக்கி ஒவ்வொரு எழுத்தாக பொருத்த வேண்டும். இறுதியில் அக்குத்துவிளக்கின் நேர் மையத்தில் நம்பெருமானாரின் பெயர் தோன்றும், அதாவது "இராமலிங்கா அபயம்" என்கிற அபய வாக்கியம் தோன்றுவதைக் காணலாம்.

'அபயம்' என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. 'பயம்' என்பதன் எதிர்பொருள் 'அபயம்' - அச்சமற்ற என்று பொருள்படும். மற்றொரு பொருள் 'அடைக்கலம்' / 'சரணம்' / தஞ்சம் / அருள் போன்ற பொருளையும் 'அபயம்' என்ற வாக்கியம் குறித்து நிற்கும். இங்கு அபயம் என்பது அடைக்கலம் என்கிற பொருளைச் சுட்டி வந்துள்ளது.

இனி சித்திரக்கவியினைப் பார்ப்போம்....


அபயம்
(கலிவிருத்தம்)


"இனி யும்இறப்பனோ அயன் வல்லனோ


பனி யும்அல்லாகாதோ பொங்கு பொலி

தனி ஒளிமய தயா குணதாரா
கனி ந்து கனி இனிக்க..."


குத்துவிளக்கு பந்தம்

(படத்தைக் காண்க)
 

இதன் பொருளாவது,

இதனைப் படிக்கும்போது இறுதி அடியினை முதலில் படித்துவிட்டு பிறகு மேலிருந்து படிக்க நன்கு புரியும்படி அமைந்துள்ளது.

கனிந்து கனி இனிக்க - தற்போது எம்நிலை காயாகவே உள்ளது, அதாவது சாதனையில் உள்ளது. சாதனைகள் முற்றி இறுதியில் அது கனியாகி இனிக்க, சாதனைகளின் பலனை பெறும்போது,

இனியும் இறப்பனோ? - எத்தனைக்கோடி ஜென்மம் எடுத்தேனோ, அத்தனைக்கோடி இறப்பையும் யாம் கண்டோம். அதுபோல் இப்பிறவியிலும் இறப்பேனோ? சாகாக்கல்வி எனும் சாதனையின் பலனால் இப்பிறவியில் இறக்கமாட்டேன்.

அயன் வல்லனோ? இப்பிறவியே எமக்கு இறுதியானதால், இனி ஒரு பிறப்பை எமக்குக் கொடுக்கும் சக்தி அந்த பிரம்மனுக்கு உள்ளதா? கிடையாது.

பனியும் அல்லாகாதோ? 'அல்' என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் உதித்துவிட்டால் பனி மறைந்துவிடும். இப்படி பனிபோன்ற எம்தேகம், காலத்தால் இனி இறக்காமல் சூரியன் போன்றே என்றும் காலம் கடந்து ஒளிராதோ? ஒளிரும். (சிறு ஒளி, பேரொளியினை அடைதல்)

பொங்கு பொலி தனி ஒளிமய தயா குணதாரா - பொங்கி வழியும் அழகையுடைய தனித்தன்மையான ஒளிமயமான கருணை குணத்தை தருகின்ற வள்ளலே.

மேற்கண்ட பொருள் - காலத்தாலும், படிப்பவர்களின் தரத்திற்கேற்பவும் மாறுபடக்கூடியது. இறுதியானது அல்ல.

இப்பாடலின் ஆழ்பொருள் - நம்மை, நம்பெருமானாரிடம் ஒப்படைத்துவிடக்கூடியதாகவும், "இராமலிங்கா அபயம்" என நம்மை அவனது திருவடிக்கே அடிமையாக்கும் படியாகவும் உள்ளது என்பது உண்மை.



எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்

புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்

சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற

புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்
அபயம் அபயம் அபயம்...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, November 19, 2013

மஹாமந்திர பந்தம்

மஹாமந்திர பந்தம்

பேரன்புடையீர்! வணக்கம்!

கவி எழுதுவதில் 'சித்திரக்கவி' என்ற வகையில் நாம் ஏற்கனவே 'மாலைமாற்றுப் பதிகம்' பற்றி கண்டோம். ( http://www.vallalarr.blogspot.in/2013/11/blog-post_7.html ) இப்போது அதே சித்திரக்கவியில் வேறு சில முறைகளைப்பற்றிக் காண்போம்.

சித்திரக்கவிகளை இயற்றுவது மிகக் கடினமான செயல். புலவர்கள் அந்த முயற்சியை அரிதாகவே செய்வர். சித்திரக்கவியில் கமலபந்தம், லிங்கபந்தம், இரதபந்தம் என்ற ஒருவகைப் பாடல்கள் உண்டு. வெண்பா இயற்றி, அதிலுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, கமலமாகவோ (தாமரை), லிங்கமாகவோ, ரதமாகவோ (உருவம்) கட்டங்களை நிறைத்து அமைக்கப்படுவது சித்திரக்கவிகளாகும்.

திருஞானசம்பந்தர் எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என்னும் ஓவியக் கவிதைகள் ஒன்றிலிருந்து தொடங்கி ஏழு வரை முடிந்து, மீண்டும் ஏழிலிருந்து தொடங்கி ஒன்றில் முடியும் விசித்திரமான தேர் வடிவில் அமைக்கப்பட்ட ஓவியக் கவிதைகளாகும்.

திருமங்கையாழ்வார் எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் அமைந்துள்ளது.

சுவாமிமலையில் முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருவெழுக்கூற்றிருக்கையை இக் கோயிலில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் பார்த்து வருகின்றனர்.

நான்கும் நான்குமாக எட்டு பாம்புகள் பிணைந்தது போன்ற வடிவில் அமைக்கப்பட்ட அஷ்ட நாக பந்தம், அழகிய தமிழ் ஓவியக் கவிதையாகும்.

முரசு போன்ற அமைப்பில் உள்ள முரச பந்தம்,

மயில் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட மயூர பந்தம்,

மாலை மாற்றிக்கொள்வதைப் போல எழுதப்பட்ட மாலை மாற்று போன்ற ஓவியக் கவிதை மரபு தமிழரின் கவிதைக்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

தமிழின் எண்ணற்ற கவிதை மரபில் ஓவியக் கவிதை மரபை இன்றும் குழந்தைகள்கூட கண்டு ரசிப்பதுடன், இதுபோன்ற ஓவியக் கவிதைகளை அவர்களும் எழுதி விடவும் முடியும்.

கவிதைக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்ரா பெüண்ட் ஆங்கிலத்திலும், இந்தியாவில் தாகூர் வங்க மொழியிலும் ஓவியக் கவிதைகளை எழுதியுள்ளனர்.

சிறிய ஓடை ஓடுவது போன்ற வடிவில் ரஷிய மொழியில் மாயகாவ்ஸ்கியும், பிரெஞ்சு மொழியில் ஃபார்க், சீன மொழியில் லூசூன், போன்றோர் சித்திரக் கவி எனப்படும் ஓவியக் கவிதைகளை எழுதி கவிதை உலகுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

யாம் இப்போது 'திரு அருட்பிரகாச வள்ளலாரை' பாடுபொருளாகக் கொண்டு ஒரு கலிவிருத்த பாடலை ஆக்கியுள்ளோம். இது சித்திரக்கவி அமைப்பில் எழுதியதாகும். "குத்துவிளக்குப் பந்தம்" என்று இதற்குப் பெயர். வரையப்பட்டுள்ள குத்துவிளக்கின் அடியிலிருந்து வலம் இருந்து இடமாகவும் பிறகு இடமிருந்து வலமாகவும் முறையாக மாறி மாறி மேல்நோக்கி ஒவ்வொரு எழுத்துகளையும் பொருத்த வேண்டும். இறுதியில் அக்குத்துவிளக்கின் மையத்தில் மேலிருந்து கீழாக படித்தால் "மஹாமந்திரம்" காட்சிகொடுப்பதே இதன் சிறப்பு.



மஹாமந்திர பந்தம்
 
(கலிவிருத்தம்)

உன் ஆணைஎங்கும் ஓரருவாய் தனித்தேக

என் பேரகங்காரம் அருளோங்கி பெருகப்

பன் னிஅழிததாகிதிட ரஜோகுணம்விஞ்சி ஜீவனில்சேரும்

இன் பநாளை பெறவேஎனாட்கொ ளருளே அன்பே.


 
குத்துவிளக்குப் பந்தம்

 
 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Sunday, November 17, 2013

வள்ளலார் கண்ட திருஅண்ணாமலை ஜோதி தரிசனம்

வள்ளலார் கண்ட திருஅண்ணாமலை ஜோதி தரிசனம்

அன்பர்களே! இன்று மாலை (17.11.2013) திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் ஆதிமலையின் மீது ஜோதி தரிசனம் காண இருக்கிறோம். இந்த ஜோதியினை வெறுமனே புறத்தில் நடக்கும் நாடகக் காட்சியாக நாம் காண்பதைவிட இதன் தத்துவம் என்ன? என்பதனை வள்ளலார் வழியில் சுருங்கக் காண்போம்.

புராணக்கதைகளில், பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் அடியையும் முடியையும் காணாது திகைக்கின்ற போது இறைவன் ஜோதி சொருபமாய் எழுந்தருளிய இடமே தற்போது ஆதிமலையாக உள்ளதாக கூறுகிறார்கள்.

இதனையே வள்ளலார் "மால்யன் தேடும் மருந்து" என்று இந்த திருவண்ணாமலையினைப் பற்றி குறிப்பிடுகின்றார். மால் என்றால் விஷ்ணு, அயன் என்றால் பிரம்மா, இவர்களில் விஷ்ணு அடியையும், பிரம்மா முடியையும் கண்டுபிடிக்க புறப்பட்டனர். திருவண்ணாமலை என்னும் இறைவனின் அடியையும் முடியையும் தேடுவதாகக் கதை அமைந்துள்ளது. இன்னும் இருவரும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று கூறுகிறார் வள்ளலார்.



இதன் உண்மை என்னவென்றால், மனதாலும் நான் என்கின்ற அகங்காரத்தாலும் இறைவனைக் காணமுடியாது. எப்போது காணமுடியும் என்றால், நான் என்கின்ற அகங்காரம் மனத்தில் அடங்கி, மனம் ஜீவனில் அடங்கும் போது இறைவன் வெளியாவான். இரண்டறக்கலப்பது என்பது அப்போதுதான் நடைபெறும். ஜீவனிலிருந்து எழுந்து மனமும், மனதிலிருந்து எழுந்த அகங்காரமும் அந்த தாய்வீடான ஜீவனிடத்தில் ஒடுங்குவதற்கு நாம் கற்கவேண்டியது "சாகாக் கல்வி" ஆகும். இந்த சாகாக்கல்வியினை கற்றவனுக்கு இறைவனான ஜோதி சொருபம் தெரியும். அவனே அடிமுடியினை கண்டவனாகிறான், என்ற தத்துவத்தை புறத்தே செய்துகாட்டுவதுதான் திருவண்ணாமலை ஜோதி தரிசனம் ஆகும்.

மாலும் அயனும் இன்னும் தேடிக்கொண்டிருக்கும் இறைவனின் அடிமுடியினை தாம் கண்டுவிட்டதாக வள்ளலார் கூறுவதை பாருங்கள்,

"படிமுடி கடந்தனை பாரிது பாரென அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி" என்று இறைவனே, 'பார் என்னை முழுதும் பார்' என்று தன்னை வெளிப்படுத்தியதாக, வள்ளலார் முழங்குகிறார். எப்படி கண்டார்? புறத்திலா? இல்லை. தனது அகத்தில் கண்டார். நான் என்ற அசுரனும், மனம் என்னும் குரங்கும் ஜீவன் என்னும் ஆலயத்தில் ஒடுங்கும் போது காணக்கூடியதே ஜோதி தரிசனம்.

உலகியர் உள்ளத்தில் ஜோதி விளங்கிட எமது திருவண்ணாமலை ஜோதி தரிசன வாழ்த்துகள்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Monday, November 11, 2013

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவர் உண்மையல்ல!...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவர் உண்மையல்ல!...
 
ஒரு சீடன் தனது குருவிடம் - ஐயா, நீங்கள் எப்படி தங்களையே கடவுள் என்று கூறிக்கொள்கிறீர்? அது தவறில்லையா?     
 
 உடனே ஞானி - அது இருக்கட்டும், நீ தற்போது உன் வீட்டில் இந்து மதக்கடவுள் புகைப்படங்களை எல்லாம் எடுத்துவிட்டு வெறும் ஜோதியினை மட்டும் வைத்து வழிபடுகிறாய் என்று கேள்விபட்டேன். அப்படியா!

அதற்கு சீடன் - ஆம் ஐயா, வள்ளலார் வழியில் முற்றாக வந்துவிட்டேன். அதனால் இனி ஜோதிதான் எம்முடைய இறைவன் என்றார்.

 உடனே ஞானி - ஒருவேளை அந்த ஜோதி உன் முன் வந்து, காலம் காலமாக வணங்கிவந்த கடவுளையே நீ நம்பாமல் வழிபடுவதை விட்டுவிட்டீர்! புதியதாக வந்த நான் எத்தனை காலம் உங்களிடம் வழிபாட்டில் இருப்பேனோ? என்று கேட்டால் என்ன செய்வீர்? என்றார்.

அதற்கு அந்த சீடன் - அருட்பெருஞ்ஜோதி கடவுளும், பொய் கடவுள், என்று என்அறிவு உணர்த்தினால் அதனையும் விட்டுவிட தயங்கமாட்டேன், என்றார்.

 உடனே ஞானி - உனது விருப்பு வெறுப்பற்றத் தன்மையினை பாராட்டுகிறோம். ஒருவேளை அருட்பெருஞ்ஜோதி கடவுளும் பொய் என்று உன் அறிவு உணர்த்தினால், அதன்பிறகு எந்தக் கடவுளை வணங்குவாய்? என்று கேட்டார்.

அதற்கு அந்த சீடன் - கடவுள் உண்டு என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் அக்கடவுள் யார்? எங்கிருக்கிறார்? என்பதனை என்னுள்ளே சென்று கண்டுபிடித்துவிடும் சக்தி என்னிடம் உள்ளது. அதன்பிறகு நானே கண்டுபிடித்த அக்கடவுளை வணங்குவேன். உலகுக்கும் அறிவிப்பேன், என்றார்.

 உடனே ஞானி - நீ வேறு ஒரு கடவுளை புதியதாக கண்டுபிடிக்கும்வரை எந்தக்கடவுளை வணங்குவாய்? என்று கேட்டார்.

அதற்கு அந்த சீடன் - அதுவரை என்னையே நான் வணங்கி வருவேன், என்றார்.

 உடனே ஞானி - என் அருமை மாணவரே! இதைத்தான் நான் தற்போது செய்துவருகிறேன். எனது கடவுள் வெளியில் எங்கும் இல்லை, யாருடைய உபதேச மொழியிலும் இல்லை, யாருடைய வேதநூலிலும் இல்லை, என் கடவுள் பத்திரமாக என்னுள்ளே இருப்பதை நான் கண்டுகொண்டேன், அதனால் நானே கடவுளாக இருக்கின்றேன், நான் - என்னைத்தவிர வேறுயாரையும் வணங்கவேண்டிய அவசியம் இல்லை. வள்ளலார், தனக்கு முன்னே கண்ணாடியை வைத்து வழிபட்டதும் இதற்காகத்தான். தனது பிம்பத்தை தானே வழிபட்டார். அவர் தாமே கடவுளாகவும் பரிணமித்தார்.
 
 

எனவே வள்ளலார் கூறினார் என்று அவர் வழியினை பின்பற்றுவதை விட, முதலின் உன்னில் உன்னைப்பார், பிறகு நீயும் வள்ளலார் ஆவதைக் காண்பாய்.

 என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து

என்னுளே கனிந்த என்னுடை அன்பே

தன்னுளே நிறைவுறு தரம்எலாம் அளித்தே

என்னுளே நிறைந்த என்தனி அன்பே

 அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி

Friday, November 8, 2013

வள்ளலார் செய்த சூரபத்ம சம்ஹாரம்

வள்ளலார் செய்த சூரபத்ம சம்ஹாரம்

பேரன்புடையீர்! வணக்கம்!


 
இன்று (08.11.2013) மாலை திருச்செந்தூரில் சூரபத்ம் சம்ஹாரம் என்ற திருவிழா கோலாகலாமாக் கொண்டாடி முடித்துள்ளார்கள். யார் இந்த சூரபத்மன்? இவனை கொலைச்செய்த முருகன் யார்? எதற்காக கொலைசெய்தான்? யாருக்காக கொலைசெய்தான்? உண்மையில் இவர்கள் (முருகன் & அசுரன்) இந்த பூமியில் வாழ்ந்தார்களா? அல்லது முருகன் என்பவர் கடவுளா?

என்ற கேள்விக்கு கீழ்கண்டவாறு இந்து புராணம் விடை பகிர்கிறது...


 
,,, யாகத்திற்கு மருமகனை அழைக்க வந்தான். அவர் கடவுள் அல்லவா? மாமனாரை எழுந்து வரவேற்கவில்லை. இது தட்சன் மனதை நெருடியது. மாமனாருக்கு மரியாதை கொடுக்காத இவனை ஏன் யாகத்திற்கு அழைக்க வேண்டும் எனக் கருதி, மகளைப் பார்க்க வந்ததாகப் பொய் கூறி, மகளையும் யாகத்திற்கு அழைக்காமல் சென்று விட்டான். ஆனால், மற்ற லோகங்களுக்குச் சென்று பிரம்மா, திருமால், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களை யாகத்திற்கு வர அழைப்பு விடுத்தான்.

ஈசன் வீட்டு மாமனார் இல்ல விழா அல்லவா? ஒருவர் விடாமல் அங்கு சென்றுவிட்டனர். சென்ற பின்தான் அங்கு ஈசனும், ஈஸ்வரியும் அழைக்கப்-படவில்லை என்பது தெரிந்து பயந்து போயினர். இந்த விஷயம் பார்வதியின் கவனத்திற்கு வந்தது. தந்தைக்குப் புத்தி புகட்டுவதற்காகப் பூலோகம் செல்ல கணவனிடம் அனுமதி கேட்டாள். மறுத்தார் ஈசன். அவரது சொல்லையும் மீறி, பூலோகம் சென்று தந்தையிடம் நியாயம் கேட்டாள்.

அவனோ மகளை அவமானப்படுத்தி அனுப்பி விட்டான். அவள் ருத்ர காளியாக மாறினாள். சிவனோ வீரபத்திரராக உருவெடுத்தார். இருவரும் யாக சாலையை அழித்தனர். தன் மாமனாருக்கு சாபம் ஒன்றைக் கொடுத்தார் சிவன்.

என் பக்தனாயினும், நீ ஆணவத்தால் என்னை அவமதித்தாய். எனவே, நீ ஆட்டுத் தலையுடன் திரிவாயாக. மறு ஜென்மத்தில் உனக்கு அசுர குணங்களே தலைதூக்கும். உன்னை அடக்க என்னில் பிறக்கும் ஒரு சக்தி உன்னிடம் வரும். சுப்பிரமணியன் என்ற சக்தியிடம் நீ தோற்றுப் போவாய்.

நீ சூரபத்மன் என்றும், பத்மாசுரன் என்றும் பெயர் பெறுவாய். நீ செய்த நற்செயல்களின் பலனாக அகில உலகமும் உனக்கு கட்டுப்பட்டிருக்கும். உன் இறுதிக் காலத்தில், சுப்பிரமணியன் உன்னை வதம் செய்வான் என்றார்.

இதன்படி மறுஜென்மத்தில் சூரபத்மனாகப் பிறந்தான் தட்சன். அழகுக் கோலத்தில் இருந்த பெண்மணி மீது ஒருசமயம் ஆசை கொண்டார் காசியப முனிவர். அதன் விளைவாக, அவர் பத்மாசுரன், சிங்கமுகன் என்ற மகன்களையும், அஜமுகி என்ற மகளையும் பெற்றார். அதன்பின் தன் தவறை உணர்ந்து மீண்டும் தவம் செய்யப் போய்விட்டார். இந்தப் பத்மாசுரனே உலகை அடக்கி ஆண்டான். அவனை திருச்செந்தூர் கடற்கரையில், முருகன் வதம் செய்தார்.

தான் இறக்கும் நிலையில், சூரபத்ம-னுக்குத் தன் முன்ஜென்ம நினைவு வந்தது. எதிரே நிற்பது தன் பேரன் என்பதைப் புரிந்துகொண்டான். மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.

முருகா! என் முற்பிறவிப்படி நீ என் பேரனாகிறாய். உன்னை என் முதுகில் சுமக்க ஆசைப்படுகிறேன். நான் உன் மடியில் எந்நாளும் இருந்தால், என்னை மீண்டும் ஆணவம் ஆட்கொள்ளாது! என்றான்.

தாத்தாக்கள், பேரன்களை முதுகில் சுமந்து செல்வது இப்போதும் எப்படி வழக்கமோ, அதேபோல, அந்த ஆசையை சூரபத்மனும் வெளியிட்டான். இதன்படி, சூரனின் ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி அதன் முதுகில் அமர்ந்தார் முருகன். ஒரு பகுதியை சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தி, தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டார்.

என்ன அன்பர்களே, கதை எப்படியிருக்கிறது. நமது குடும்பங்களில்கூட இப்படிப்பட்ட மோசமான சம்பவங்கள் நடைபெறாது. ஆனால் இறைவனின் குடும்பங்களில் எப்படி அடித்துக்கொண்டு மாய்கிறார்கள் பாருங்கள். ஒருவருக்கொருவர் பொறாமையுடன், நயவஞ்சக உணர்வுடன், காம பார்வையுடன் உலாவருகிறதை இக்கதை நமக்கு கூறுகிறது. உண்மையில் நமது குடும்பங்களைப்பார்த்து இறைவனின் குடும்பங்கள் திருந்தவேண்டும். நாம் இந்தக்கதையினை உண்மைஎன்று நம்பினால் கூட இதனை எப்படி திருவிழாவாக கொண்டாடமுடியும்? இப்படிப்பட்ட மோசமான திருவிழாக்களில் கலந்துக்கொள்ளும் முன்பு, நம்மவர்களே சற்று சிந்திப்பீர்.

முருகப்பெருமானையே தமது முழுமுதற்கடவுளாக நினைத்துப் பலபாடல்கள் பாடிய வள்ளலார் இதனை சற்று சிந்தித்து பார்த்தார். அதன்பிறகு என்ன நடந்தது? 'எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்' என்று திடமாகக் கூறினார். அதுமட்டுமல்ல அதன் உண்மையினை தெளிந்து அதனை உலகிற்கு எடுத்துரைக்கவும் அவர் தயங்கவில்லை. சுப்பரமணியன் என்பது என்ன? என்று விளக்கம் அளித்துள்ளார்.
 
 

நாம் தற்போது சூரபத்ம சம்ஹாரம் பற்றி வள்ளலார் என்ன கூறுகிறார் என்பதனை இங்குப் பார்ப்போம்...

பதுமாசுரன் என்பது = பதுமம்++சுரன்

பதுமம் - நாபி (கொப்பூழ்)

- அவா

சுரன் - சுழித்து எழுதல்

நாபியினிடமாய் அடங்காமல் எழும்பும் குணத்தை அடக்கியும், தடைபடாதது பத்மாசுரனாகிய அவா/ஆசை.

கஜமுகம் என்பது மதம் (வெறி).

சிங்கமுகம் என்பது மோகம்.

இவைகளை வெல்வது அதாவது மதம் மற்றும் மோகத்த்தை வெல்வது என்பது நமது ஐந்தறிவாலும் உபசத்தியான பஞ்சசத்தியாலும் கூடாது.

ஐந்தறிவு என்பது - பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு.

பஞ்சசத்தி என்பது - பரையாற்றல், முந்தையாற்றல், விருப்பாற்றல், அறிவாற்றல், வினையாற்றல் என்பதாகும்.

மேற்கண்ட சத்திகளாலும் அறிவாலும் மதம் மற்றும் மோகத்தை அடக்கக்கூடாது ஆதலால் சிவத்தால் தடைபட்டது. அதாவது மதத்தையும் மோகத்தையும் ஒழிக்கமுடியவில்லை.

சுப்பிரமணியம் என்னும் சண்முகரால் அழிக்கப்படவேண்டியது எப்படி எனில்,

மேற்கண்ட பஞ்ச சத்தியோடு அனன்னியமாகிய (பஞ்சத்தியோடு ஒன்றியது) சம்வேதனை (சுத்த அறிவு ஆற்றல்) என்னும் அருட்சத்தியையுங் கூட்டிச் சுத்த அறிவே வடிவாகிய ஆறறிவு என்னும் முகங்களோடு,

சுத்தஞானம் சுத்தக்கிரியை என்னும் சத்தியுடன்,

கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால்,

தயாவடிவாய் ஆசையென்னும் மதம், மோகங்களை நாசம் செய்வதே சூரசம்ஹாரம் ஆகும்.

மயில் வாகனம் என்பது என்னவெனில், மேற்படி தத்துவங்களான மதம், மோகம் ஆகியவைகள் நாசமடைந்தபின்னும் அவற்றின் அக்கிரமம் (வரம்புமீறிய செயல்) அதிக்கிரமம் (நெறிதவறுதல்) கெட்டுக் கிரமம் (ஒழுங்கு) மாத்திரம் இருப்பது.

பூர்வ வண்ணமாய் விரிந்து ஆடுவது இயல்பாததால், அவற்றை அசைய விடாமல் மத்தியில் ஏறி இருப்பதாகிய சுத்த அறிவே சண்முகம். விகல்பஜாலமே (மாயை) மயில் ஆகும். (ஒருபொருளைக்கண்டால் அது அப்பொருள்தானா? என எழும் ஐயமே விகல்பம். ஜாலம் என்பது ஏமாற்றும் வித்தை)

இவ்வண்ணமே அண்டத்திலும் உண்டு.

மேலும், நமது புருவ மத்தியில் ஆறுபட்டையாய் மணிபோல் ஒர் ஜோதியிருக்கின்றது. அந்த ஜோதியே சண்முகம்.

மேற்படி சூர தத்துவத்தை (மதம் மற்றும் காமம்) தயாவடிவாய் ஒழிக்கும்போது மேற்படி தத்துவம் மகாமாயை மாமரமாகவும், மாச்சரியம் (பகைமை) சேவலாகவும், விசித்திரமாயை (அழகாக இருப்பதுபோன்ற மாயை) மயிலாகவும், மகாமதம் (அடங்காத வெறி) யானைமுகமாகவும், அதிகுரோதம் (மிகையான கோபம்) சிங்கமாகவும் விளங்கும்.

இப்பொழுது நாம் முதலில் எழுப்பிய கேள்விக்கு விடைகாண்போம்.

1. யார் இந்த சூரபத்மன்?

நமது உடம்பில் உள்ள கொப்பூழ்கொடியிலிருந்து சுழன்று வீறுகொண்டு எழக்கூடிய அவா/ஆசை எண்ணும் வெறி மற்றும் காமம்.

இவனை கொலைச்செய்த முருகன் யார்?

நமது உடம்பில் புருவமத்தியில் உள்ள ஆறுபட்டையாய் உள்ள மணிபோல் உள்ள ஓர் ஜோதிதான் முருகன். அந்த ஜோதியினை எவர் காணுகிறார்களோ அவர்களே முருகன். அவர்களால் மட்டுமே ஆசைகளை வதம் செய்யமுடியும். அவர்களே ஞானி.

எதற்காக கொலைசெய்தான்?

தன்னுடைய மனிதப்பிறவி மேம்படுவதற்காக ஆசைகளை கொலைசெய்தான். நாமும் அப்படியேதான் நமது ஆசைகளை கொலைசெய்ய வேண்டும்.

யாருக்காக கொலைசெய்தான்?

தனக்காகவும், தன்னைப்போல் மற்றவர்களும் ஆசைகளை கடக்கவேண்டும் என்பதற்காக கொலைசெய்தான். நாமும் அவ்வாறே நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் நமது ஆசைகளை கொலை செய்யவேண்டும்.

உண்மையில் இவர்கள் (முருகன் & அசுரன்) இந்த பூமியில் வாழ்ந்தார்களா? அல்லது முருகன் என்பவர் கடவுளா?

இல்லை. இவர்கள் நமது உடலில் உள்ள தத்துவங்களே ஆகும். ஏற்கனவே கூறியபடி நமது புருவமத்தியில் உள்ள ஆறுகோணமாய் உள்ள ஜோதிமணியையே நாம் முருகன்/ஆறுமுகன் என்கிறோம். எனவே நமது அகத்தில் உள்ள அந்த ஜோதிமணியே கடவுள். புறத்தில் ஏதுமில்லை.

எனவே அன்பர்களே, அகத்தில் உள்ளதை புறத்தில் கூறமுயன்றதின் விளைவுதான்- புராணங்களும் முருகன்/ஆறுமுகன் என்னும் புறத்தில் உள்ள பொய் தெய்வங்களும் என்பதை இதிலிருந்து நாம் அறிய வேண்டும். உண்மையில் சூரசமஹாரம் என்பது நமக்குள் உள்ள ஜோதியினைக்கண்டு தயவின் குணம்கொண்டு, மாமாயைகளான ஆசைகளை வெல்வதே என்று தெளியவேண்டும். வள்ளலாரைப்போன்று எத்தனையோ ஞானிகள் இப்படிப்பட்ட சூரசம்ஹாரத்தை தங்களது அகத்தில் செய்திருக்கிறார்கள், நாமும் செய்வோம்.

இதற்குமேலும் உண்மைஅறியாது புராணக்கதைகளையே உண்மை என்று நம்பி திருச்செந்தூர் சென்று பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை வேடிக்கைப் பார்த்ததுபோன்று நாமும் வேடிக்கை பார்த்துவந்தால், நம்மைப்போன்று ஏமாளி இவ்வுலகில் யாரும் இல்லை.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



 


 



 

 

 

வள்ளலார் மாலைமாற்றுத் திருப்பதிகம்

வள்ளலார் மாலைமாற்றுத் திருப்பதிகம்



பேரன்புடையீர்! வணக்கம்!

நமது தமிழ் மொழியில் பாடப்படும் பாவகைகளில் "மாலைமாற்று" என்ற ஒரு நடை உண்டு. இது சித்திரக்கவியில் ஒருவகை எனப்படுகிறது. மாலைமாற்று என்பது எந்த திசையில் இருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும்.

ஜப மாலையை முன்னிருந்து பின்னும், பின்னிருந்து முன்னுமாக உருட்டும் முறையினை இப்பாவகை அமைந்திருப்பதால் இதனை மாலைமாற்று என்று தமிழில் கூறுகிறோம்.

'அணியிலக்கணம்' என்னும் ஐந்திலக்கண நூல்பிரிவில் இதைப்பற்றிய விளக்கத்தைக் காணலாம். தமிழில் நான்குவகைக் கவிகள் உள்ளன.

1. ஆசுகவி

2. மதுரகவி

3. சித்திரக்கவி

4. வித்தாரக்கவி

இவற்றுள் சித்திரக்கவி வகையில் மாலைமாற்றுக் கவிகள் அடங்கும்.

மாலைமாற்று என்பதற்கான ஆங்கிலச் சொல்லான palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட பழைய மாலைமாற்றானது கி.மு.79ஐச் சேர்ந்த இலத்தீன் சொல்லான Sator Arepo Tent Opera Rotas என்பதாகும்.
 
               
தமிழ் மொழியில்

விகடகவி,
திகதி,
குடகு,
தேருவருதே,
தேளு மீளுதே
போன்ற சொற்கள் மாலை மாற்றுகள் ஆகும்.

 ஆங்கில மொழியில்

Civic,
Radar,
Level,
Madam,
Malayalam,
Pop,
Noon,
Refer,
Anna,
Hannah,
Ada,
Bob,
Eve,
Rotor,
Minim,
Mahamaham,
Tamat,
Tattarrattat,
Was it a cat I saw?,
Do gees see God?
A Toyota's a toyota,
A nut for a jar of tuna,
Madam - I am adam,
Ablewasiereisawelba - (எல்பாவைப் பார்க்கும் வரைக்கும் நான் வல்லமையுடையவனாக இருந்தேன் - எல்பா என்பது ஒரு தீவின் பெயர். இதனை நெப்போலியன் கூறிய வாசகம் என்பர்)

போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும்.

பொதுவாக மாலைமாற்றுத்தொடர்களில் வரும் இடைவெளிகள், நிறுத்தக்குறிகள், பேரெழுத்து, சிற்றெழுத்து வேறுபாடு போன்றவை கவனிக்கப்படுவதில்லை.

தமிழில் நமக்குத் தெரிந்த வரையில் இதுவரை மூன்று புலவர்கள் மட்டுமே இவ்வகை மாலைமாற்று நடையில் பாவினை இயற்றியுள்ளனர்.

1. திருஞானசம்பந்தர் இயற்றிய திருமுறைகள்.

2. மாதவச்சிவஞான யோகிகள் இயற்றிய காஞ்சிபுராணம்.

3. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருநாகைக் காரோணப் புராணம்

ஆகிய தமிழ் இலக்கியங்களில் மாலைமாற்றுப்பாக்கள் உள்ளன.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலைமாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன.

கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று,

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாக

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாய

·         இந்தப் பாடலைக் கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்து வரையில் ஒவ்வொரு எழுத்தாகத் திருப்பி எழுதிப் படித்தாலும் இதே பாடல் வருவதைக் காணலாம்.

·         பாடலின் பொருள்

·         யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா

·         நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா, பரமாத்மா

·         யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே

·         காணாகா-இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று

·         காணாகா-இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று

·         காழீயா-சீர்காழியானே

·         மாமாயா நீ-அம்மை அம்மை ஆம் நீ

·         மாமாயா-(இப்படி) பெரிய மாயமானவன

இப்படிப் பத்துப் பாடல்கள் உள்ளன. இப்போது ஒரு எளிய பாடலையும் காணலாம்,

தேரு வருதே மோரு வருமோ

மோரு வருமோ தேரு வருதே

·         இதனைத் திருப்பிப் படித்தாலும் இதே பாடல் வரும்                 

·         பாடலின் பொருள்

·         வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.


இவ்வகையில் நமது திருஅருட்பிரகாச வள்ளலார் - சிதம்பரம் இராமலிங்கம் அவர்களை நாயகனாக / இறைவனாக போற்றி பாடப்பட்ட 10 மாலைமாற்று பாடல்கள் எம்மை கருவியாக வைத்து திருவருள் சம்மதத்தால் இயற்றப்பட்டன. இப்பாடலில் உள்ள நிறைகளையும் குறைகளையும் இறைஅன்பு என்றும் பொருட்படுத்தாது, வாழ்த்துகளையே வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இங்கு வெளியிடுகின்றேன்.


வள்ளலார் மாலைமாற்றுத் திருப்பதிகம்
 

திருஅருமரு தூராகாரா வாடாகரு ணாசாகா
காசாணாரு கடாவாரா காராதூரு மருஅருதி     (1)

 தாபாதா தாமருத ராலூடவ மேதவமே
மேதவமே வடலூரா தருமதா தாபாதா                (2)

 யாரிது காளாவ டுகூகையோ கியோ
யோகி யோகைகூடு வளாகா துரியா                     (3)

 யாகாஆகாங் லிமராயா காயமாமாய
யமாமாய காசயாரா மலிங்கா ஆகாயா              (4)

 யாபாசனஞானா மதாதீதா ஓதாநாதா சாதாகாசா
சாகாதாசா தாநாதாஓதா தீதாமனா ஞானசபாயா (5)

யாதிஜோதியா ராவாராக சீவசாதீயா மசனாபோ
போனாசமயாதீசா வசீகரா வாராயாதி ஜோதியா (6)

 யாசாயாமா சாபூதைவாதே காமலாலீ காமுறுஆ
ஆறுமுகா லீலாமகா தேவாதைபூசா மாயாசாயா (7)

காலபாதீ சோகாடபாப தீதாஈராநீ யாடிமுடிய
யடிமுடியா நீராஈதா தீபபாடகா சோதீபாலகா     (8)

 ராகாவியா விகாடாமடு கூவிலக திருகு
குருதிகலவி கூடுமடா காவியா விகாரா                (9)

 யகழ்வா களையா கருணீகா சமரசா
சாரமச காணீருக யாளைக வாழ்கய                   (10)

 
இனி இப்பாடல்களுக்காண பொருளை ஒவ்வொன்றாக பார்ப்போம். ஒரு பாடலுக்கு இதுதான் பொருள் என்று சரியாக கூறிவிடயியலாது. யாம் நினைத்த பொருள் ஒன்றாகவும் மற்ற அருளாளர்கள் அதே பாடலை படிக்கும்போது அதற்கு வேறு ஒரு பொருளையும் தாங்கி நின்று அணிவகுப்பதுதான் நமது தமிழ் பாடல்கள். எனவே இங்கு எமது பொருள் என்பது இறுதியானது என்று கூறமுடியாது.

 'நீடுவாழ்வார்' என்ற திருவள்ளுவரின் சொற்களுக்கும், 'உலகெலாம்' என்ற சேக்கிழாரின் சொற்களுக்கும் சரியான பொருளைக் கூற, இறைவன் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நமது வள்ளலாரை அனுப்பியது போன்று மிகவும் சிறப்புடையது நமது தமிழ் மொழி.

 திருஅருமரு தூராகாரா வாடாகரு ணாசாகா
காசாணாரு கடாவாரா காராதூரு மருஅருதி (1)

 திருஅரு - திரு அருள்
மருதூரா - மருதூரில் பிறந்தவரே
காரா - கருமேகம் போன்று அருளை பொழிபவரே
வாடா - வாடாத, என்றும் தன்நிலை மாறாத
கருணா - கருணையுடையவரே
சாகா - சாகா வரம் பெற்றவரே
காசா - தலைவரே
ணாரு - நாணுதல் / தன்நிலை உணர்ந்து தாழ்ந்து
கடா - வினா / சந்தேகம்
வாரா - வராமல் / இல்லாமல்
காரா - கருமை / இருள்நிலையினை
தூரு - சேறு / உலகியல் என்னும் புழுதி
மரு - வாசனை / பிறவிதோறும் வருகின்ற வினை
அருதி - முழுமையானவர்.

முழுமை பொருள்:

திருவருளால் மருதூரில் பிறந்தவரே, மேகம் போன்று அருளை பொழிபவரே, என்றும் தன் நிலைமாறாத கருணையுடையவரே, சாகா வரம் பெற்றவரே, எங்கள் தலைவரே, தன் நிலை உணர்ந்து தன்னை தாழ்த்தி, வினா வரும்படி இல்லாமல் தன்னுடைய இருள் நிலையினை, உலகியல் என்னும் புழுதியினை, பிறவிதோறும் வருகின்ற வாசனா மலத்தை அற்று அருதியானவரே / முழுமையானவரே / நித்தியமானவரே.

தாபாதா தாமருத ராலூடவ மேதவமே
மேதவமே வடலூரா தருமதா தாபாதா (2)

தா - தாருங்கள்
பாதா - பாதமாக நம்மை தாங்கும் இறைவா
தா - தாருங்கள்
மருத - வயல் சார்ந்த நிலம்
ஆலூ - வில்வ மரம்
தவமே - யோகமே
தவமே - யோகப் பயனே
மேதவமே - மேலான தவமே
வடலூரா - வடலூர் தலைவா
தரும - தருமசாலை
தாதா - உரியவனே
பா - பாடல்
தா - தாருங்கள்.                             

முழுமை பொருள்:

தாருங்கள் இறைவா! தாருங்கள், வயல் சார்ந்த நிலத்தில் வில்வமரமாய், யோகமாக அந்த யோகப் பயனாக மேலான தவத்தால் எங்களுக்குக் கிடைத்த வடலூர்வாழ் வள்ளலே, தருமச்சாலைக்கு உரியவனே, உம்மைப் புகழ்ந்துப்பாட தமிழ்ப் பாடலைத் தாருங்கள்.

யாரிது காளாவ டுகூகையோ கியோ
யோகி யோகைகூடு வளாகா துரியா (3)

யாரிது - யார் இவர்?
காளா - காளாஞ்சி - வெற்றிலை துப்பும் களம்
வடு - தழும்பு
கூகை - ஆந்தை
யோகியோ - முனிவனோ?
யோகி - தியானித்து
யோகை - புணர்தல்
கூடு - கூடுதல்
வளாகா - இடமானவனே
துரியா - சுத்தமானவனே

முழுமை பொருள்:

இவர் யாரோ? வெற்றிலை துப்பும் இடமான, அசிங்கமான தழும்பாக உள்ள இடத்தில், இரவு நேரத்தில் உணவுத் தேடும் ஆந்தைப்போன்று, இரவு நேரத்தில் அவ்விடத்தில் யோகம் செய்கின்ற முனிவரோ? தியானத்தால் இறைவனை புணர்ந்து கூடுகின்ற இடமாக மாற்றிய, சித்தி கூடுகின்ற இடமாக்கிய சித்திவளாக வள்ளலே, சுத்தனே.

யாகாஆகாங் லிமராயா காயமாமாய
யமாமாய காசயாரா மலிங்கா ஆகாயா (4)

யாகா - யாராக இருப்பினும்
ஆகாங் - ஆகாத
லிமராயா - எமராயா - எமன் சூழம்
காயமாமாய - புண் என்னும் பெரிய மரணம் மரணிக்க
யமா - எமன்
மாய - மரணிக்க
காசயா - பொன்மேனியனே
ராமலிங்கா - இராமலிங்கம் என்னும் திருப்பெயருடையோனே
ஆகாயா - ஆகாயமானவனே - விண்வெளிக்கு வயதோ சாவோ கிடையாது, தடைகளோ, முடிவோ கிடையாது - எனவே ஆகாயம் போன்ற சித்தனே.

முழுமை பொருள்:
எவ்வுயிராகினும் அவற்றிக்கு ஆகாதது எமனின் சுற்றம், எமனின் சுற்றம் நமக்கு மரணம் என்னும் மிகப்பெரிய ஆறாத புண்ணை தந்தாலும் அதனையும் ஆற்றியவனே, அந்தப்புண் வரக் காரணமான நோய்கிருமியான அந்த எமனையும் அழித்தவனே, எமனை அழித்ததின் மூலம் தமது காயத்தையே பொன்மேனியாக மாற்றியவனே, இராமலிங்கம் என்னும் திருப்பெயருடையோனே, வயதோ சாவோ தடைகளோ முடிவோ அற்ற, எல்லாவற்றையும் தன்னுள் கொண்டுள்ள அந்த ஆகாயம் போன்றவனே.

யாபாசனஞானா மதாதீதா ஓதாநாதா சாதாகாசா
சாகாதாசா தாநாதாஓதா தீதாமனா ஞானசபாயா (5)

யா - மரம்
பாசன - வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சுதல்
ஞானா - அறிவுடையோனே
மதாதீதா - மதங்களைக் கடந்தவனே
ஓதாநாதா - ஓதாமல் அனைத்தையும் அறிந்த ஞானியே
சாதா - பொதுவான
காசா - தலைவனே
சாகாதாசா - இறப்பொழித்த சுத்தசன்மார்க்க அடிகளாரே
தா - குறையின்றி
நா - நாவினால் உனைப்பாடும் வல்லமையினை
தா - கொடுங்கள்
ஒதாதீதா - உலகியல் படிப்பை வெறுத்தவனே
மனா - மனமானவனே
ஞானசபாயா - ஞானசபை ஜோதியே

முழுமை பொருள்:
மரம் தழைக்க நீர் பாய்ச்சுவதைப்போன்று நாங்கள் நீடுதழைக்க அறிவை பாய்ச்சுபவனே, மதங்களையும் அதன் பொய்கருத்துகளையும் கடந்தவனே, கற்காமலேயே அனைத்து அறங்களையும் அறிந்த ஞானியே, உலகியர் அனைவருக்கும் பொதுவான தலைவனே, இறப்பை ஒழித்த சுத்தசன்மார்க்க அடிகளாரே, எங்களுக்கு குறைவின்றி உன்னை நாவினால் பாடும் வல்லமையினை கொடுங்கள், உலகியல் படிப்பை வெறுத்தவனே, எங்கள் மனதில் ஒன்றியவனே, ஞானசபையில் ஒளிர்ந்து அருளும் அருட்பெருஞ்ஜோதியனே.

யாதிஜோதியா ராவாராக சீவசாதீயா மசனாபோ
போனாசமயாதீசா வசீகரா வாராயாதி ஜோதியா (6)

யாதி - ஆதி - தொடக்கம்
ஜோதியா - அருட்பெருஞ்ஜோதியனே
ராவா - இராவணன்
ராக - இராகம்
சீவ - உயிர்
சாதீயா - இனமானவனே
மசனா - மசனம் - மயக்கம்
போ - செல்
போனா - சென்றான்
சமயா - சமய வழியில் செல்லாமல்
தீசா - ஈசா - தலைவா
வசீகரா - ஆட்கொள்பவனே
வாரா - வாராய்
யாதி - ஆதி - சூரியன்
ஜோதியா - ஒளிர்பவனே.

முழுமை பொருள்:

எங்களது ஆத்மாவின் உருவாக்கத்தன்றே எங்களுல் அருட்பெருஞ்ஜோதியாக அமர்ந்தவனே, இராவணனின் இராகத்தில் மயங்கிய அவனது எதிரிபோன்று அல்லாமல் ஜீவசாதியாக அதாவது சீவாத்மவாக இருக்கும் எங்களுக்கு, எங்கள மயக்கிக்கொண்டிருக்கும் இந்த உலகமாயை என்னும் மயக்கத்தை போகச்செய்வாயாக, அவ்வாறு சென்ற, சமயச் சிக்கலை விடுத்த எங்களது தலைவா வள்ளலே, எங்களையெல்லாம் வசியப்படுத்தும் / ஆட்படுத்தும் ஆற்றலைக்கொண்டுள்ளவனே, சூரியன் போன்று ஒளிர்பவனே வாருங்கள்.

யாசாயாமா சாபூதைவாதே காமலாலீ காமுறுஆ
ஆறுமுகா லீலாமகா தேவாதைபூசா மாயாசாயா (7)

யாசா - ஆசாரம்
யாமா - கிரியைபூசை செய்தல்
சா - மாய்த்தல்
பூதை - அம்பு
வாதே - வாதாடுதல்
காமலாலீ - ஆசையின் தாலாட்டு
காமுறுஆ - காமுறா - ஆசையில்லா
ஆறுமுகா - ஆறுமுக நாவலர்
லீலா - விளையாட்டு
மகாதேவா - யாவருக்கும் இறைவனே
தைபூசா - தை மாதம் பூசநட்சத்திரத்தில் மறைந்தவனே
மாயாசாயா - மாயமாய் இருப்பவனே நிழலாய் தொடர்பவனே

முழுமை பொருள்:
சமயாசாரம், மதாசாரம் போன்ற ஆச்சாரங்களையும் பூசை முறைகளையும் மாய்த்தவனே, அம்பு போன்ற தனது வாதாடும் திறமையால், வாதாடும் ஆசையின்றி தாலாட்டுப் பாடுவதைப்போன்று தனது பாட்டால் ஆறுமுக நாவலரின் எதிர்ப்பை விளையாட்டாய் வென்றவனே, யாவருக்கும் இறைவனாக இருப்பவனே, தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று எங்கள் பார்வையிலிருந்து மறைந்து மாயமாய் இருப்பவனே, எங்களை நிழலாய் தொடர்பவனே.

காலபாதீ சோகாடபாப தீதாஈராநீ யாடிமுடிய
யடிமுடியா நீராஈதா தீபபாடகா சோதீபாலகா (8)

காலபாதீ - காலத்தில் இரண்டிலொரு பகுதியாக
சோ - அரண்
காட - ஆட
பாபதீதா - பாவத்தை தீர்த்தவா
ஈரா - மழைக்கு உரிய குணவா
நீ - நீ
யாடிமுடிய - ஆடிமுடிய
யடிமுடியா - அடிமுடியுமாய்
நீரா - நீரினை
ஈதா - ஈந்த
தீப - தீப ஜோதி
பாடகா - பாடியவன்
சோதிபாலகா - சிறுவயதிலேயே ஜோதியினை கண்டவன்

முழுமை பொருள்:
காலத்தை இருபகுதியாக பிரித்து அதில் ஒரு பாதியினை தனதாக்கிக்கொண்டு, காலம் உள்ளவரை அதனுடன் சேர்ந்து தானும் இருக்கும் வகை செய்துக்கொண்ட "காலபாதீ" யானவனே, மதம், இனம், சாதி போன்ற மதில்சுவர்களையெல்லாம் ஆட வைத்து விழவைத்து அப்பாவங்களையெல்லாம் தீர்த்தவனே, மழைக்கு உரிய குணத்தை தான் பெற்று அருள்மாரி பொழிபவனே, அப்படிப்பட்ட நீ இவ்வுலகில் ஆடிமுடியும் போது அடிமுடியுமாய் முழுப்பொருளாய் ஆனவனே, தண்ணீரை ஈந்து தீபஒளியேற்றி பாடல் பாடியவனே, இளம் பிள்ளை பருவத்திலேயே, ஓரிறைகொள்கையுடன் அருட்பெருஞ்ஜோதியினை கண்டவனே.

ராகாவியா விகாடாமடு கூவிலக திருகு
குருதிகலவி கூடுமடா காவியா விகாரா (9)

ராகா - இராகம்
வியா - வியாசன்
விகடா - செருக்குள்ளவன்
மடு - குளம்
கூ - உலகம்
விலக - அகல
திருகு - குற்றம்
குருதி - ரத்தம்
கலவி - புணர்ச்சி
கூடுமடா - செயல்கூடுமடா
காவியா - திருஅருட்பா காவியம் படைத்த
விகாரா - ஆலயமே

முழுமை பொருள்:
இராகத்தைப்போன்ற நம்மை மயக்குகின்ற வேதத்தை எழுதிய செருக்குள்ள வியாசன் குளத்து நீருக்கு ஒப்பாவான். உலகத்திலிருந்து அக்குற்றமான வேதம் அகல, இறை இரத்தத்துடன் புணர்ந்து எல்லாம் செயல்கூடுமளவில் திருஅருட்பா காவியம் / சுத்தசன்மார்க்க வேதம் படைத்த எங்கள் ஆலயமே.

யகழ்வா களையா கருணீகா சமரசா
சாரமச காணீருக யாளைக வாழ்கய (10)

யகழ்வா - அகழ்வா - அடியோடு
களையா - பிடுங்கி எறிதல்
கருணீகா - கருணையை ஈகின்றவனே
சமரசா - நடுநிலையாளனே
சாரமச - சாரம் அச - ஆசாரங்கள் அனைத்தும் அசைந்து விழுவதை
காணீ - காணீர் - வியப்புக்குறிப்பு
ருக - அருக - தகுதியுடைய
யாளைக - ஆளைக - கொல்லாமை
வாழ்க - வாழ்க
ய - 'தமிழ்' எனபதின் குறியீடு

முழுமை பொருள்:
உள்ளத்தில் உள்ள மாயையினை ஆழ்ந்து பிடுங்கி எறிந்து பிறகு கருணையினை வழங்குபவனே, உலகியர்களுக்கு நடுநிலை வகிப்பவனே, சாரம் என தாங்கி நின்றுக்கொண்டிருந்த உளுத்த ஆசாரங்கள் எல்லாம் சாய்ந்து விழ ஆச்சரியத்துடன் காணுங்கள், எங்களையும் அகஇனத்திற்கு தகுதியுடையனவாய் ஆக்கிக்கொள்ள கொல்லாமையினை ஏற்கச்சொன்ன எம்தலைவனே நீ வாழ்க... என்றென்றும் தமிழ் உள்ளவரை நீ வாழ்க...

அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி