Tuesday, December 26, 2023

சித்த வித்தை நூல்கள்

சித்த வேதம் பற்றின சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்களின் உபதேசங்கள் அடங்கிய 7 வகை நூல்கள் இன்று (26-12-2023) கிடைக்கப் பெற்றன.

நூல் வேண்டுபவர்கள் கீழ்காணும் எண்ணிணை தொடர்பு கொள்ளவும். 7 நூட்களும் தபால் செலவு உட்பட ரூ.840/-. 


+91 95008 31257










Saturday, December 9, 2023

கடவுள் சுதந்தரம்

 ஜீவகாருண்யம் என்கின்ற பெயரில் கடவுள் சுதந்தரத்தில் தலையிடாதீர்கள்:

**********************************
ஜீவகாருண்யம் செய்கின்றேன் என்று நம்மில் சிலர், மனிதர்களால் வளர்க்கப்படாத சுதந்தரமான ஜீவன்களாகிய நாய்கள், குரங்குகள், யானைகள், காக்கைகள், புறாக்கள் போன்ற ஜீவன்களைத் தேடிச் சென்று அவைகளுக்கு உணவளித்தல் ஜீவகாருண்யம் ஆகாது. பசி போக்குவிக்கும் செயலை மனிதர்களிடத்தேதான் செய்ய வேண்டும்.

”நிலத்திலும் நீரிலும் ஊருகின்ற உயிர்களுக்கும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் அவ்வவற்றின் ஊழ்வகைக்குத் தக்கபடி அருள் நியதி ஆகாரங் கொடுப்பிக்க உண்டு பசியாறுகின்றன வென்றும், அவ்வவைகளுக்குத் தக்க ஆகாரம் அறிந்து கொடுப்பது நமது சுதந்தரமல்ல கடவுள் சுதந்தர மென்று அறிய வேண்டும்.

“பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற சீவகாருணிய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்த வேண்டுமென்று அறிய வேண்டும்." - Vallalar.


++++++++++++++++++++++++++++++++++++
முகநூலில் இக்கருத்திற்கு வந்திருந்த பின்னூட்டங்கள்:
++++++++++++++++++++++++++++++++++++


Christ Damodharan
மனுஷனுக்கு பசி ஆற்றும் தகுதி அந்த கூமுட்டை கடவுளுக்கு இல்லையா

175 வருஷம் முடிஞ்சு போச்சு.. எத்தனை கடவுள் உருவாக்கி இருக்கு சன்மார்கம்

அண்டா கணக்கில் சாப்பாடு போடுறது தான் மிச்சம்

வேலாயுதம் முதலியார் கூட கடவுள் ஆகல.. சாப்பாடு போட்டு கடவுள் ஆக போறாங்கலாம்

TMR: 
அடுத்த வேளை உணவிற்கு வழியில்லாமல் பசியால் வாடி நிற்பவர்களுக்கு தக்க சமயத்தில் உணவு அளித்து அவர்களது உயிரையும் மானத்தையும் காப்பவரே கடவுள். அந்தக்கடவுளை, உணவிற்கு வழியில்லாதவர்களால் மட்டுமே காணமுடியும். சுத்த சன்மார்க்கத்தில் இப்படிப்பட்ட கடவுள்களை நிறைய காணலாம்.

+++++++++++++++++++++++++++++++

Karthi Stone
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களிடத்தில் கடவுள் இருக்கிறார் அதனால் அந்த ஜீவன்களுக்கு உணவளிப்பதில் என்ன தவறு உள்ளது நிறைய ஜீவன்கள் பசியால் வாடுகின்றன இது ஜீவகாருண்யம் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்
TMR:
இதனை யாம் கூறவில்லை. ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் கூறும் உண்மை இது. சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதன் உண்மை புரியும்.

Karthi Stone
வணக்கம் அப்படி என்றால் வள்ளலார் வாடிய பயிரை கண்டபோது வாடினேன் என்று ஏன் கூறுகிறார் அந்த ஓரறிவு தாவரம் வாடிய போது அவர் மனம் மிகவும் வருந்தினேன் என்று கூறுகிறார்

TMR:
அந்த வாடிய பயிரானது மனிதர்களின் வளர்ப்பில் உள்ளது. அதனால் வாடினார். தான்தோன்றி அல்லது காட்டு தாவரங்கள் அனைத்தைம் இறைவன் சுதந்தரத்தில் உள்ளன.

Karthi Stone
அதைத்தான் நானும் கூறுகிறேன் ஐயா நாம தேடி போய் செய்ய வேண்டாம் நம் பக்கத்தில் உள்ள ஜீவன்களுக்கு செய்யலாமே

TMR:
நமக்கு பக்கத்தில் உள்ள ஜீவன்கள் மனிதர்கள் இடும் உணவினை எதிர்பார்த்திருந்தால் செய்யலாம். சுதந்தரமாக உலா வரும் பறவை இனங்கள் விலங்கினங்கள் நீர் இனங்களுக்கு, அவைகள் நமக்கு பக்கத்தில் இருந்தாலும் அவைகளுக்கு உணவிடுவது ஜீவகாருண்யம் அல்ல. ஆனால் அவைகள் ஆபத்தில் இருந்தால் உதவுவது சிறந்தது.  

++++++++++++++++++++++++++++++++++

Natarajamoorthyr Ramalingam
தெருநாய்களுக்கு யார் உணவளிப்பார்கள்?

TMR:
முன்பெல்லாம் தெரு நாய்களுக்கு மனித மலம் உணவாகக் கிடைக்கும். தற்போதுள்ள நாகரீக உலகில் தெருநாய்களுக்கு அவைகள் கிடைப்பதில்லை. மேலும் மனிதர்களாகிய நாம் நமது வீட்டில் எஞ்சிய உணவை அவ்வப்போது அவைகளுக்கு கொடுத்து வருகிறோம். அப்பழக்கத்தை தொடரலாம். எனினும் வள்ளலார் கருத்துப்படி கடவுளின் சுதந்தரத்திலும் அவைகளின் ஆன்ம வினைகளின்படியும் அவைகளுக்கு உணவு கிடைக்கும்.

++++++++++++++++++++++++++++

Abhiraj
நம் கண்முன் துன்பத்தால் வாடும் எந்த உயிருக்கும் உதவலாம்

TMR:
கண்டிப்பாக உதவ வேண்டும்

+++++++++++++++++++++++++++++++


பாரதியார் காக்கை குருவி எங்கள் ஜாதி காடு மலைகள் எங்கள் கூட்டம் என்று கூறியுள்ளாரே

TMR:
அதனதன் இயற்கை செயல்களை மதித்து, அதன் போக்கில் தலையிடாமல் சிறை பிடிக்கமல் கொல்லாமல் சிதைக்காமல் போற்றுவதை அவ்வாறு பாடியிருப்பார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++

வள்ளலார் வளாகம். மவுனகுரு ஆசிரமம்
தேடி வந்தால் சாமி?

TMR:
பழக்கப்படுத்தாமல் தேடி வராது.


பசித்தால் வரும், திருடன் பழகியா பசி வந்தால் திருடுகிறான்? இல்லை குழந்தை தான் பிரட்டை திருடுகிறதா? பசி வந்தால் எல்லாமே செய்யத்தோன்றும், அது எந்த உயிராக இருந்தாலும் உறவே...

TMR:
வளர்ப்பு கால்நடைகள் பசி வந்தால் வரத்தான் செய்யும். மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்தர ஜீவன்களுக்கு உணவளிப்பது மனிதனின் வேலை அல்ல என வள்ளலார் கூறுகிறார்.

Thursday, November 30, 2023

அருட்பெருஞ்ஜோதி

 அருட்பெருஞ்ஜோதி:

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


இவ்வுலகிற்கு முதன் முதலில் சாதி, மதம், இனம் அற்ற தனிப் பெருங் கருணை கடவுளான "அருட்பெருஞ்ஜோதி" கடவுளை அறிமுகப்படுத்தியவர் நமது வள்ளலார். 

"அருட்பெருஞ்ஜோதி" என்று தாம் வழிபட்ட தனித் தலைமை இறைவனுக்கு முதன் முதலில் வள்ளலார்தான் பெயர் வைத்தார். இதற்கு முன்னர் வேறு எந்த மதங்களிலும் சமயங்களிலும் "அருட்பெருஞ்ஜோதி" என்ற பெயர் கொண்ட கடவுள் யாரும் கிடையாது. 

எனவே சமய மதங்களைச் சார்ந்த உலக மக்கள் யாரும் தாங்கள் வழி வழியாக வணங்குகின்ற கடவுள்களை "அருட்பெருஞ்ஜோதி" என்று வள்ளலார் உருவாக்கிய பெயரைக் கொண்டு அழைப்பது நன்றல்ல. இப்பெயர் சுத்த சன்மார்க்க கடவுளுக்கே முற்றிலும் உரியது. வள்ளலாருக்கே (சுத்த சன்மார்க்கத்துக்கே) இப்பெயர் காப்பரிமை பெற்றது. 

சமய மதங்களில் உள்ள அன்பர்கள் தயவு செய்து அவரவர் கடவுள்கள் பெயரை மட்டும் தங்கள் பிரச்சாரத்திற்கு பயன் படுத்தவும். எனது சமய அல்லது மதக் கடவுள்தான் "அருட்பெருஞ்ஜோதி" என்று வழங்குவது வள்ளலார் கொள்கைக்கு எதிரானது. நன்றி. 

TMR

9445545475

vallalarmail@gmail.com

Thursday, November 23, 2023

சூஃபி ராபியா - கவிதைகள்

 சூஃபி ராபியா - கவிதைகள்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



திரை விலகல்:

******************

கடவுளை நோக்கிப் பயணிப்பவர்கள்

திரை விலக்கி

உண்மையைப் பார்க்கட்டும்.


பிறர் குற்றம் பாராதே:

**************************

நான் கடவுளை நேசித்துக்கொண்டிருக்கிறேன்.

சாத்தானை வெறுக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை.


கதவைத் திற:

****************

யாரையாவது திறக்கச் சொல்லி மன்றாடி

எவ்வளவு காலம்தான் 

திறந்தக் கதவை

தட்டிக்கொண்டிருப்பாய்?


தனித்திரு:

*************

எனது கடவுளே,

இப்போது எல்லோரும் அவரவர் காதலர்களுடன் தனித்து இருக்கிறார்கள்.

நான் உன்னுடன் தனித்து இருக்கிறேன்.


கடவுள் மயமாதல்:

**********************

யாருடைய இருத்தலில் நீங்கள்

மறைந்து போகிறீர்களோ,

யாருடைய இருத்தலில் நீங்கள்

இன்னும் இருக்கிறீர்களோ,

யாரைத் தேடி உங்கள்

பயணம் தொடர்கிறதோ,

அவருடைய அன்புக்கு ஏங்கி,

அதில் கரைந்து

தொலைந்தபின், 

உங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய

வெறுமையைத் தவிர

வேறென்ன இருக்க

முடியும்?

____________

Tuesday, November 21, 2023

திருப்புகழ் கிடைத்த கதை

                                                             திருப்புகழ் கிடைத்த கதை


                                           - அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.


திருப்புகழ் நெருப்பென்று  அறிவோம்..

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா? அதற்கு யார் காரணம் என்பதை  வரலாறு அறியுமா?

அருணகிரிநாதர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்

திருப்புகழ் ஆகும். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. அதாவது கிடைத்துள்ளன. இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும். இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசை நூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை. 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுகன்...... அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

கற்பகம் எனவினை.... என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்பொழிவுகளைத் தொடங்குவார். அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது.

அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது 

அந்த  போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.

திருப்புகழ் நமக்கு கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது.

அவர் குறித்து  ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது.

அதை இப்போது சித்தர்களின் குரல் வாயிலாக பார்ப்போம்.....

பிரிட்டிஷ்காரர்கள் என்ற மாபாவிகள்  இந்தியாவை ஆண்டபோது  இந்தியர்களுக்கு அரிதாகவே அரசுப் பணி தருவார்கள். ஒருவர் மாவட்ட ஆட்சியர் ஆகும் தகுதி இருந்தால், அவர் இந்தியராக இருந்தால், அவருக்கு எழுத்தர் வேலை கொடுப்பார்கள்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர்.

அப்பாடலின் வரி;

வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை

மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...

பொருள்:

              வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே....

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் அந்தப் பாடலை கேட்ட மாத்திரத்தில் சொக்கிப் போனார். என்ன பாடல் அது எனக் கேட்டார். அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ்  பாடல்கள் 16000 இல் ஒன்று என்று சொன்னார்கள். எங்கே அந்நூலைக்  காட்டுங்கள் என்றார். ஓலைச்சுவடி ஒன்றை நீட்டினார்கள். மீதம் பாடல்கள்  எங்கே.. என்று பதறினார்... எங்களிடம் இல்லை என்று கை விரித்தார்கள்.

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக் கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின.....

(1)  1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 

(2) 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. 

(3) அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 

(4) 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 

(5) 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது "என் சரித்திரம்" நூலில் பதிவுசெய்துள்ளார்.

அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,

"எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே" என்ற வாக்கால் கூறியுள்ளார்.

ஆனால்  வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது.

ஓலைச்சுவடிகளின் குறை களைக் களைந்து சீர் செய்வ தற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார்.

திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் தமது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும்புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

நாம் இன்று முருகனை நினைந்து உருகிப் பாடும் திருப்புகழ் ஒரு தனி நபர் விடா முயற்சியால் தான் என நாம் நினைக்கும்போது அய்யா வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் பெருந்தொண்டு எத்தகையது என நன்றியுடன் வணங்குவோம்.

சந்த முனி யின் 1324 திருப்புகழ் பாடல்களில் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன. என ஓர் ஆய்வுக் குறிப்பு சொல்கிறது.

நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….!!

உதாரணமாக ஒரு மிக எளிய பாடல் பழனி  திருப்புகழில் இருந்து பார்ப்போம்.

சந்தம்:

தனதான தந்தனத் ...... தனதான

     தனதான தந்தனத் ...... தனதான

பாடல் :

அபகார நிந்தைபட் ...... டுழலாதே

     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே

     உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே

     இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா

     திருவாவி னன்குடிப் ...... பெருமாளே..

 இப்பாடலில் அருணகிரிநாதர் சாமிகள் முருகனின் அருள் பெறுவதற்கான எளிய வழிகள் சொல்கிறார்.

      பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அதனால் வினைகளை ஈட்டி விடாமல், அவ்வாறு  தீய  குணங்கள் கொண்ட மனிதர்களுடன் பழகாமலும், உரிய கிரியைகளுடன் கூடிய பூசையை தினம்  செய்தால் முருகனின் அருள் பெறலாம் என்கிறார்.  ஒவ்வொரு சைவரும் ஜெபமாலை வைத்து இருக்க வேண்டும்.

திருமுருகன் ஆறுபடைகளில் மூன்றாவது படைவீடு திருஆவினன்குடி என நக்கீரதேவ நாயனார் அவர்களால் திருமுருகாற்றுப்படை நூலில் பாடப்பட்டு  இருக்கிறது. இத்திருக்கோயிலில் மயிலில் ஆரோகணித்து திருமுருகன் வீற்றிருப்பார். பழனி மலைமேல் இருக்கும் தண்டபாணி கோயில் படை வீடு அல்ல என்பர் பெரியோர்.

திருத்தணி திருப்புகழில் அருணகிரிநாதர் சுவாமிகள் திருப்புகழ் சிறப்பு சொல்கிறார்.

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்.

அய்யா  வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் நம் கையில் உள்ளது. நெருப்பையும் எரிக்கும் நெருப்பான  திருப்புகழில் இருந்து எளிய பாடல் ஒன்றாவது தினம் ஒன்று விடாமல் சொல்வோம்... முருகனின் திருவருள் பெறுவோம்.




            

Saturday, November 18, 2023

வள்ளற்பெருமானின் மாஹா மந்திரம் எந்நூலில் யாரால் முதலில் வெளியிடப்பட்டது?

 வள்ளற்பெருமானின் மாஹா மந்திரம் எந்நூலில் யாரால் முதலில் வெளியிடப்பட்டது?

அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம்…

திரு.ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்களால்தான் 1932-ஆம் ஆண்டு வெளிவந்த திருவருட்பாப் பதிப்பில் மஹாபதேசம் என்ற பகுதியில் மஹா மந்திரம் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது என்று நாம் இதுகாரும் கருதிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தவறு.

வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களால் 1924-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளிவந்த திருவருட்பாவில் வள்ளற்பெருமானின் மஹா மந்திரம் வெளியிடப்பட்டுவிட்டது. மேலும் மஹாபதேசத்தின் சில முக்கிய பகுதிகள் அதாவது சன்மார்க்கக் கொடியின் விளக்கங்கள் முதற்கொண்டு “திருநெறிக் குறிப்புகள்” என்ற பகுதியில் பக்கம் 669-670 - ல் வெளியிடப்பட்டுவிட்டது.

1923-ஆம் ஆண்டு ச.மு.க. அவர்கள் தனது “பிரபந்தத்திரட்டு” நூலில் வள்ளற்பெருமானின் சரித்திரக் குறிப்புகளை எழுதி முடித்துவிட்டு அதன் இறுதியில் “இனி அச்சிட வேண்டியவை: வள்ளலார் பிரசங்கித்த காலங்களில் அன்பர்கள் எழுதிவைத்த பற்பல அருமையான குறிப்புகள்.” (பக்கம்-137 - பிரபந்தத்திரட்டு - திரு.அ.திருநாவுக்கரசு பதிப்பு) என்று குறிப்பிட்டதைத்தான் 1924-ஆம் ஆண்டு தாம் பதிப்பித்த திருவருட்பாவில் ”திருநெறிக் குறிப்புகள்” என்று வெளிகொண்டு வந்தார்.

எனவே மஹா மந்திரத்தை முதன் முதலில் இவ்வுலகில் வெளியிட்டவர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களே ஆவர் என்பது சன்மார்க்க உலகிற்கு நாம் எடுத்துரைக்கும் வரலாற்று உண்மையாகும். நன்றி.

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி  

நன்றி: திரு.சாது ஹரி ஐயா.


தி.ம.இராமலிங்கம்

9445545475

vallalarmail@gmail.com









Friday, November 3, 2023

கடவுள் கணக்கு எப்படி இருக்கும்?

                                               கடவுள் கணக்கு எப்படி இருக்கும்?



ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு

நான் ஒரு வழி சொல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொழுது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர்

மன்னா ... இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுத்தார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.

ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்.

இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு! ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தர்ம கணக்கு!!

Monday, October 30, 2023

தேசியத்திற்கு கட்டுப்படாத மதம்!

 தேசியத்திற்கு கட்டுப்படாத மதம்!

==============================

நேற்று (29-10-2023) கேரளாவில் யெகோவா கிறுத்துவ ஜெபக்கூட்டத்தில் 3 குண்டுகள் வெடித்து 2 பெண்கள் இறந்தார்கள். குண்டு வைத்தவர் காவலர்களிடம் சரணைந்தார். 

இவர்களது கடவுள் யகோவா ஆகும். (யூதர்களின் கடவுளும் யகோவா தான்.) யகோவா என்ற கடவுளின் குழந்தையாக 'இயேசு' இவர்களால் கருதப்படுகின்றார், எனவே கிறுத்துவத்தில் ஒரு பிரிவினராக இவர்கள் ஒரு தனிக்கூட்டமாக இயங்குகின்றார்கள். 

இம்மதக்கூட்டம் இந்திய தேசியத்திற்கு எதிராக பல கருத்துகளை தங்கள் மக்களிடம் பரப்புவதாக, நேற்று அம்மத இயக்கத்தைச் சார்ந்தவரும் குண்டு வைத்தவருமான மார்ட்டின் கூறியிருக்கின்றார். இம்மதக்கூட்டம் தேச துரோகத்தில் ஈடுபட இந்திய உச்ச நீதி மன்றமே ஒரு காரணமாக இருக்கின்றது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 

இம்மதத்தார்கள் இந்திய தேசிய கீதத்தை பாடமாட்டார்களாம். அது எங்கள் மத அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்று இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்து தங்கள் மத உரிமையை நிலைநாட்டி இருக்கின்றார்கள். இந்திய உச்சநீதி மன்றமும் இம்மதத்திற்கு ஆதரவாக பாடவேண்டாம் என தீர்ப்பளித்திருக்கின்றது. 

ஒரு தேசியத்திற்கு கட்டுப்படாத மதம், எந்த தேசியத்தில் இருந்தாலும் அந்த தேசியத்திற்கு ஆபத்துதான். எனவே இந்திய உச்சநீதி மன்றம், நேற்று நடந்த குண்டு வெடிப்பை சாதாரணமாகக் கடந்துச் செல்லாமல், அதில் தங்களது பங்களிப்பும் மறைமுகமாக இருப்பதைக்கருதி, மறு தீர்ப்பை இந்திய தேசத்திற்கு ஆதரவாக வழங்க வேண்டும். 

இதுபோல் இன்னும் எத்தனை மதங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன எனத்தெரியவில்லை. இவர்கள் எல்லாம் தாங்கள் வசிக்கும் "தேசத்தை எதிர்ப்பதே" கடவுள் கொள்கையாக வைத்துள்ளனர் என்பது வேதனை. 

TMR.





Sunday, October 29, 2023

ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் 99-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பிதழ்

சமரச பஜனை - காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின்                      99-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பிதழ்.


கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து காரணப்பட்டிற்கு, நகர பேருந்து எண்:20 கீழ்கண்ட நேரங்களில் புறப்படும். அப்பேருந்தை பயன்படுத்தி அன்பர்கள் இங்கு வந்து தரிசித்து செல்லலாம்.
காலை 07.00 மணி
மதியம் 02.00 மணி
இரவு 07.00 மணி

ஸ்ரீ இராகவேந்திரர் - இறுதி உரை

ஸ்ரீ இராகவேந்திரர் 

சுவாமிகளின் கடைசி உரை



1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்.


அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:


1) சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.

2) சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம்.

3) அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது.

4) சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

5) கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும்.

6) நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.



Monday, October 23, 2023

யூதர்களுக்கான 10 கட்டளைகள்:

 யூதர்களுக்கான 10 கட்டளைகள்:



+யூத மதத்தை உருவாக்கியவர் மோசஸ்.
+யூத மதத்தின் கடவுள் ’ஜெஹோவா’
+யூத மதத்தின் புனித நூல் ‘தோரா’.
+ யூத மக்களின் தாய் மொழி 'ஹீப்ரு'
யூதர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்:
1. ஓர் இறை கொள்கை. (என்னை அன்றி உனக்கு வேறு கடவுள் இல்லை.)
2. உனது வேண்டுதலுக்காக வேறு ஒரு விக்கிரகத்தை (உருவ வழிபாடு) உருவாக்க வேண்டாம்.
3. உனது கடவுளாகிய எனது பெயரை வீணிலே உபயோகிக்க வேண்டாம். (அடிக்கடி எனது பெயரை உச்சரிக்கக்கூடாது. இக்கட்டளையினால் யூதர்கள் ‘இறைவன்’ என்று பொதுவாக தங்கள் கடவுளை அழைக்கின்றார்கள்)
4. உனது ஓய்வு நாளை மிகவும் பரிசுத்தமாக கழிப்பாயாக.
5. உனது தந்தையையும், தாயையும் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
6. கொலை செய்யக் கூடாது.
7. விபச்சாரம் செய்யக் கூடாது.
8. திருடக் கூடாது.
9. பிறருக்கு விரோதமாய் பொய் சாட்சி சொல்லக் கூடாது.
10. பிறரது பொருளுக்கும் சொத்துக்களுக்கும் ஆசை வைக்கக் கூடாது.
மேற்காணும் 10 கட்டளைகளை யூதர்கள் மட்டுமா கடைபிடிக்க வேண்டும். மனிதர்கள் யாவரும் கடைபிடிக்கலாம். முக்கியமாக 6-ஆவது கட்டளை இன்றைக்கு உலகியலில் அவசியம் தேவை.

-TMR