Thursday, March 14, 2013

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

(14.03.2013)
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்பது வள்ளலார் இறைவனிடம் வேண்டும் முக்கியமான வேண்டுகோளாகும். இந்த வேண்டுகோளை இறைவன் மதித்ததாகவே தெரியவில்லை, இல்லையா? 

நானும் இந்த வேண்டுகோளையே தினமும் இறைவனிடம் வைக்கிறேன். ஆனால் வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் நமது கண் பார்வைக்கு வருவது தெருவோரத்தில் நாகரிகமின்றி வெட்டப்படும் ஆடு, கோழி இவைகளின் துடிதுடிப்பும், காது கேட்பது இவைகளின் அலறல் சத்தமும்தான்.

கடல்வாழ் உயிரினங்கள் பிணமாக கூடையில் வைத்து விற்பணைக்கு வருகின்றன, அந்த சுற்று வட்டாரமே நாறுகிறது, சில நரிக்குரவர்கள் தினமும் எந்தப் பறவைகளையாவது சுட்டு பிணமாக அவைகளை எடுத்து வந்து விற்பணை செய்கிறான். இப்படி மனிதனால் எந்த உயிரும் இன்புற்று வாழ்வதை விட, எல்லா உயிரும் துன்புற்று ஒழிகின்றன என்பதனை நாம் நாளும் பார்க்கிறோம்.

நாட்டில் மனிதன் இப்படி என்றால், காட்டிலும் இப்படியே... வலிமையான மிருகங்கள் வலிமையிழந்த மிருகங்களை உணவிற்காக கொல்கின்றன. இப்படி இவ்வுலகில் எங்கு நோக்கிலும் உயிர் கொலைகளாகவே இருக்கின்றன. 

மனிதனாவது நிம்மதியாக இன்புற்று வாழ்கின்றானா? என்று கேட்டால் இல்லை. அவன் இனத்தை அவனே அழிக்கிறான். வாழும் காலத்திலும் மற்ற உயிருக்கு துன்பத்தைக் கொடுத்துக்கொண்டு, அவனும் துன்பமுடனே வாழ்கிறான். 

இப்படி 'எங்கெங்கு காணிணும் துன்பமடா' என்பது போல இவ்வுலகு சுற்றிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால் வள்ளலார் வேண்டும் இந்த வேண்டுதலுக்கு என்னதான் பொருள்? என்று சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதன் பொருள் வேறாக அமைந்திருப்பதைக் காணலாம்.

அது வேறு ஒன்றுமில்லை, சிற்றின்பம் தான் அது. இந்த சிற்றின்பம் ஒன்றே இந்த உலக உயிர்களுக்கு எல்லாம் பொதுவாக இருப்பதை பார்க்கலாம். நீர் வாழ்வன, பறப்பன, ஊர்வன, தாவரங்கள், மனிதர்கள், தேவர்கள் ஆகிய யாவரும் இந்த சிற்றின்பத்தை அனிச்சை செயலாகவே செய்யும்படி இறைவன் தன்னுடைய படைப்பை படைத்திருக்கின்றான்.

இந்த இன்பத்தை மட்டும் எந்த உயிரினம் வேண்டாம் என்று மறுக்கிறதோ, அந்த உயிரினம் நாளடைவில் இந்த பூமியில் இருக்காது. ஆனால் அந்த மறுப்பு அதிகாரத்தை மனிதனுக்குத் தவிற மற்ற எந்த உயிரினத்திற்கும் இறைவன் வழங்கவில்லை, என்பது தான் மனிதப் பிறவியின் மேன்மையாகும். பயம் வேண்டாம், மனித இனம் இதனால் அழிந்துவிடாது. பத்து இலட்சத்துக்கு ஒருவர் மட்டுமே இந்த மறுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இறைநிலைக்குச் செல்ல முடியும், எனவே இந்த அதிகாரத்தை சாதாரன மனிதர்கள் பயன்படுத்திவிட முடியாது.

அனைத்து உயிரினமும் தங்களது உடலியக்கம் மூலம் இன்பத்தைக் கண்டு அதன் மூலம் தனது எதிர்கால சந்ததிகளை இந்த பூமியில் வாழையடி வாழையென விட்டுச் செல்கின்றன. இந்த இன்புறுதலால்தான் இவ்வுலகில் எல்லா உயிர்களும் தழைத்து வாழ்கின்றன. இறைவனின் தனிப்பெருங்கருணையால் இந்த உடல்சுகமும் சுவாசித்தலும் எவ்வித தடையுமின்றி அனைத்து உயிர்களிலும் நடந்தேரி வருகிறது. 

இவ்வாறு இறைவனின் தனிப்பெருங்கருணையினை வியந்து, அச்செயலை வாழ்த்துவதற்காகத்தான் வள்ளலார் 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்று வாழ்த்துகிறார். ஆக, இந்த சிற்றின்பத்தில்தான் உயிர்கள் தங்களது வினைகளுக்கு ஏற்ப வெவ்வேறு தகுதியினை உடைய உடலை பெருகின்றன. 



சிற்றின்பம் எதை போன்றது என்பதை விளக்க பல்வேறு நீதி நூல்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன, அவற்றுள் விவேகசிந்தாமணி எனும் நூலில்

அடுகரி தொடர வீழ
ஐந்தலை நாகம் காண
இடிகிணற்று அறுகின் வேரைப்
பற்றிநான் றிடஅவ் வேரைக்
கடுகஒர் எலியும் வந்து
கறித்திட அதில்நின் றோனுக்கு
இடைதுளித் தேன்நக்கும் இன்பம்
போலும் இப்பிறவி இன்பம்

இந்த பாடலின் கருத்தை பார்ப்போம்

ஒருவன் காட்டு வழியே பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அப்போது அவனை மத யானை ஒன்று விரட்ட தொடங்க (அதனால் பயந்து ஒடிய அவன்) தடுமாறி ஒரு கிணற்றில் வீழ்ந்தான். அந்த பள்ளத்தில் ஐந்தலை நாகம் ஒன்று படமெடுத்து ஆடியது, அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள அந்த கிணற்றில் இருக்கின்ற வேரைப் பற்றி ஏற முயன்றான், அந்த கிணற்றின் மேல் இருந்த எலி ஒன்று அவ்வேரை கறித்துக்கொண்டிருந்தது, இவ்வளவு துன்பத்துக்கு மத்தியில் நின்ற அவனுக்கு அந்த கிணற்றின் மேல் இருந்த தேன் கூட்டில் இருந்து சிதறிய சிறு துளி தேனை சுவைப்பதால் ஏற்படும் இன்பம் போலும் இப்பிறவி இன்பம்.

இந்த பாடலின் வழியே மானுடப்பிறவியில் சிற்றின்பம் என்பது ஒரு சிறு துளியே என்று உணர்ந்து கொண்டால் பேரின்பம் எனும் இறைவன் திருவடியை அடையும் வழியை நாம் அறியலாம். பிறப்பு - இறப்பு என்னும் வட்டத்தை உடைக்க தெரிந்தவன் சிற்றின்பத்தில் ஈடுபடான். அவன் மூலம் இந்த உலகில் எந்த உயிரும் உடல் எடுத்து, துன்பப்படவோ, இன்பப்படவோ மாட்டாது. அவன் தனது உடலியக்கத்தின் மூலம் கிடைக்கும் இன்பத்தை விட 'சும்மா இருக்கும் சுகம்' என்பதனை அறிந்து பேரின்பம் காண்பான்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

Wednesday, March 13, 2013

மரம் பாடும் பாடல்

மரம் பாடும் பாடல்

பாலை மணலில் நடக்கையில்
  பாவி மனம் பதைக்குதே
சாலை ஓர மரங்களும்
  சாதி பார்த்து உதவுதே
காலை நேர சூரியன்
  குலம் பார்த்து உதிக்குதே
மாலை வந்த பொழுதும்
  மதம் மறைய மறுக்குதே

இதமாய் வீசும் காற்றும்
  இனம் பார்த்து வீசுதே
விதவிதமாய் சாமிகளும் கல்
  விகார சிலை களானதே
சதகோடி ஒளியின் வழியும்
  சடங்காய் விளை யாடுதே
முதலிட்டு இலாபமே பார்க்கும்
  மனிதன் கட்டிய கோயிலே

தங்கள் குலத்திற்கு ஒருசாமி
  தவறாமல் கும்பிடும் மடசாமி
சங்கம் சரணம் கச்சாமி
  சாகும் மனிதனுக்கு ஏன்சாமி
தங்கம் வைரம் என்சாமி
  தவிக்கும் ஏழைக்கு எதுசாமி
எங்கும் மலிவாய் மதுசாமி
  அங்கம் வீழ குடிசாமி

தாயின் வாயில் சேவல்கொண்டை
  தயவு இன்றி மயானக்கொள்ளை
பேயின் ஆட்டமுடன் அகோரமாய்
  பாய்ந்து செல்லுதல் அழகலவே
பாயில் படுக்கின்றோமென்று தினம்
  பாடையிலே படுக்கின்றீர் பித்துலகீரே
வாயில்திறக்குதே நரகத்தில் அங்கே
  வாழ்த்து தெரிவிப்பான் எமனுமே

உருமிலா வழிபாடு அறியாயோ
  ஆயிரம் சடங்குகள் அழியாதோ
அருட்பெருஞ் ஜோதி வழிபாடு
  அருட்பா ஓதி துதிபாடு
மருள்நெறி புலூலை மறந்திடு
  மனித நெறியிலே நிலைத்திடு
இருள் நெறியிலேநீ நடக்கையில்
  அருள் மனம் மிகவலிக்குதே

புவனம் ஆளும் மனிதா
  புண்ணியம் செய்வது எளிதா
ஜீவகாருண்ய வழியென்ன புதிதா
  ஜோதியை நாடும் புனிதா
தவறால்நான் மரமாய் பிறந்தாலும்
  தனித்து நிற்பேனோ உனது
ஏவல்செய்ய நானும் நடந்தேனே
  தனிப்பெருங்கருணை இது தானே!

 

Sunday, March 10, 2013

சிவராத்திரியின் உண்மை என்ன?


10-03-2013
சிவராத்திரியின் உண்மை என்ன?


புராணம் / கதை எண்:1

பரம்பொருளான சிவத்தின் ஆணையை ஏற்றுப் படைத்தல் தொழிலைச் செய்கின்ற பிரமனுக்கும் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலுக்கும் ஒருமுறை தர்க்கம் ஏற்பட்டதாம். அதாவது தம்மில் யார் உயர்ந்தவர் என்பதாகும். பிரமனும் திருமாலும் தங்கள் சிக்கலுக்கு முடிவு காண இயலாது பரப்பொருளான சிவத்திடம் முறையிட்டனர். இறைவரும் தம் கருணையினால் தங்களில் ஒருவர் என் திருமுடியையும் ஒருவர் என் திருவடியையும் தொட்டு வந்தால் உங்களில் சிறந்தவர் யார் என்பதைக் கூற இயலும் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி அன்னப் பறவை வடிவில் பிரமன் இறைவன் திருமுடியைத் தொட்டுவர முயன்று சோர்ந்து திரும்பினான். திருமாலோ பன்றி வடிவில் பூமியைக் குடைந்து உட்சென்று இறைவன் திருவடியைக் காண இயலாது சோர்ந்து திருப்பினான்.

திருமாலும் பிரமனும் தங்கள் அறியாமையை உணர்ந்து, சிறுமையை உணர்ந்து இறைவனை வணங்கித் தங்களுக்கு அருள்புரியுமாறு வேண்டி நின்றனர். பிரமனுக்கும் திருமாலுக்கும் அருள்புரிகின்ற மாதேவனாகிய சிவப்பரம்பொருள் அவர்கள் அறியாமை நீங்க முதலில் பெரும் சோதிப் பிழம்பாய்க் காட்சி கொடுத்து நின்றார்.

இறைவனின் இப்பெருஞ்சோதி வடிவினைக் காண இயலாது பிரமனும் திருமாலும் கலங்கி நின்றனர். அவர்கள் காணும்படியான வடிவினைக் காட்டியருளுமாறு வேண்டினர். இறைவன் சோதிப்பிழம்பாய் நிற்பதை விட்டு தணிந்தார். அப்பிழம்பே திருவண்ணாமலையாகக் குளிர்ந்தது என்பர்.

பிறகு நீண்ட நாள் திருமாலும் பிரமனும் தவம் இயற்ற அவர்களின் அறியாமை நீங்க வேண்டி இறைவன் நள்ளிரவில் சிவலிங்கமாகத் தோன்றி அவர்கள் காணும்படியாக அருள்புரிந்தார். இதுவே இலிங்கோத்பவர் என்றும் அன்றைய தினமே சிவராத்திரியாகவும் கொண்டாடப் பெறுகிறது என்றும் குறிப்பிடுவர்.

புராணம் / கதை எண்:2

சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். இதுவே சிவராத்திரி.

இவைபோல் இன்னும் பல புராணக்கதைகளுடன் நான் என்னுடைய சொந்தக் கதைகளையும் சேர்த்துச் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னால் அதனையும் மக்கள் நம்பி என்னுடன் கூட்டம் சேர்ந்து ஆட தயாராகியுள்ளார்கள். அந்த அளவிற்கு மக்களிடம் ஆண்மீக விழிப்புணர்வு தேவைக்கு அதிகமாகவே உள்ளது. இன்று இரவு கண்விழித்து விட்டு நாளை பகலில் தூங்குவதற்க்காக எத்தனை புத்திசாலிகள் தங்கள் அலுவலகங்களில் விடுமுறை கடிதம் கொடுத்துள்ளனரோ தெரியவில்லை.

இப்போது நான் கூறுவதுதான் உண்மையான சிவராத்திரி புராணக்கதையாகும். (கதையென்றாலே பொய்தான், இதில் உண்மை கதை வேறா? என்றெல்லாம் சிந்திக்காமல் எப்பொழுதும் போல் இதனையும் நம்பத்தான் வேண்டும். 'நம்பினால் கெடுவதில்லை' இது நான்கு மறைத் தீர்ப்பு அல்லவா?)

என்னுடைய கட்டளயை ஏற்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை செய்யக்கூடிய கர்த்தாக்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்குள் தங்களில் யார் பெரியவர் என்ற தர்க்கம் வந்துவிட்டது. அந்த தர்க்கம் அடிதடியில் போய், ஒருவனுக்கு கையை கானோம், ஒருவனுக்கு காலை கானோம், ஒருவனுக்கு இரண்டையும் கானோம். மூவரும் இரத்தம் சொட்ட சொட்ட என்னைநாடி வந்து 'பரம்பொருளே, உங்கள் கட்டளைப் படி நடக்கும் எங்களின் யார் பெரியவர்? என்று நீங்கள் தான் கூறவேண்டும்,' என்று மன்றாடினர்!

(நல்லவேளை, எங்கே இம்மூவரும் சேர்ந்து - எங்களைவிட நீ என்ன பெரியவனா? என்று கேட்காமல் விட்டனரே! என்று எனக்குள் நினைத்துக்கொண்டு, நமக்கு இன்று ஒன்று இரண்டல மூன்று அடிமைகள் சிக்கிக்கொண்டார்கள் என்ற சந்தோஷத்துடன் தீர்ப்பு கூற தயாரானேன்.)

அடப்பாவமே! இதற்க்காகவா மூவரும் அடித்துக்கொண்டீர்கள்? சரி, தர்க்கம் என்று வந்துவிட்டாலே, ஏதாவது போட்டி வைத்து அதில் வெல்பவர்கள் தான் உங்களில் பெரியவராக இருக்க முடியும். என்ன? போட்டிக்கு மூவரும் ரெடியா?

ஐயோ, ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டு, நாங்கள் எங்களுக்குள் அடித்துக்கொண்டு இரத்தம் வழிய நிற்கிறோம், இதில் இன்னொரு போட்டியா? என்றான், கையையும் காலையும் இழந்த சிவன்.

சிவன் சொன்னதையும், அவன் நிலையையும் கண்டு நான் என்னுடைய பெருங்கருணையால் அவர்கள் மூவரின் அங்களையும் பழைய ரூபத்திற்கு மாற்றினோம்! அவர்களும் மகிழ்ந்து புதியப் போட்டிக்கு தயாராகினர்,

பரம்பொருளாகிய நான் அம்மூவரையும் நோக்கி - அருள்சார்ந்தப் போட்டி யாதெனில் "உங்கள் மூவரில் யாரொருவர் என்னுடைய "அடி, முடி, நடு" இம்மூன்றையும் இன்றைய 'ஒரே இராத்திரியில்' பார்க்கிறீர்களோ, அவரே உங்களுள் பெரியவர் என்று கருதமுடியும், என்று கூறிவிட்டு - உடனே பரம்பொருளான நான், மூவரும் பார்த்துவிடாதபடி பாம்புபோல் வட்டவடிவமாக எனது அடியைக்கொண்டு முடியை மூடிக்கொண்டு இராத்திரியில் ஒளிந்துக்கொண்டேன்.

பிரம்மா - அன்னப் பறவை வடிவம் கொண்டு முதலில் எனது முடியைக்கண்டு வருமோம் என்று மேலே பறந்துவிட்டான்.

விஷ்ணு - பன்றி வடிவம் எடுத்துக்கொண்டு முதலில் எனது அடியைக்கண்டு வருவோம் என்று பூமிக்குக் கீழே சென்றுவிட்டான்.

சிவன் - ஆந்தை வடிவம் எடுத்துக்கொண்டு முதலில் எனது நடுவைக்கண்டு வருமோம் என்று பூமியைத் தழுவியே தேடச் சென்றுவிட்டான்.

அன்றைய ராத்திரி முடிந்தது, பொழுது விடிந்தது, பரம்பொருளாகிய நான் மூவரையும் ஒரு விசில் சவுண்டு விட்டு அழைத்து, என்ன? மூவரும் எனது மூன்று நிலையையும் பார்த்தீர்களா? என்று வினவினேன். அதற்கு ஒவ்வொருவராக என்னருகில் கையைக் கட்டிக்கொண்டு, தங்களது சிறுமையை உணர்ந்து பதில் கூறினார்கள்...

பிரம்மா - "பரம்பொருளே! அன்னமாகிய நான் முதலில் தங்களது புனித முடியைக்காண மேலே சென்றபோது அங்கே தங்களது முடியைக் காணவில்லை, ஆனால் என்ன ஆச்சரியம் அங்கே முடியிருக்குமிடத்தில் தங்களது அடியைக்கண்டேன், முடியையும், நடுவையும் என்னால் காணமுடியவில்லை, அதற்குள் பொழுது விடிந்துவிட்டது." என்றான்.

விஷ்ணு - "பரம்பொருளே! பன்றியாகிய நான் முதலில் தங்களது புனித அடியைக்காண பூமிக்கும் கீழே சென்றபோது அங்கே தங்களது அடியைக் காணவில்லை, ஆனால் தங்களது வளைந்த உடல் பாகங்களின் சிலவற்றையே என்னால் பார்க்க முடிந்தது, அதற்குள் பொழுது விடிந்துவிட்டது." என்றான்.

சிவன் - "பரம்பொருளே! ஆந்தையாகிய நான் முதலில் தங்களது புனித நடுவைக் காண பூமியின் மேற்பரப்பில் தேடினேன். இங்கே நான் தங்களது நடுவைக் கண்டேன், அது மட்டுமல்ல நடுவிலிருந்து பார்த்தபோது தங்களது அடியையும் கண்டேன், ஆனால் முடியைக் காணவில்லை, அதற்குள் பொழுது விடிந்துவிட்டது." என்றான்.

இப்போது பட்டிமன்றத்தின் தலைவரும் பரம்பொருளாகிய நான் தீர்ப்பு கூறியாகவேண்டும்,

நான் ஒருதடவச் சொன்னால் நூறு தடவ சொன்ன மாதிரி! அப்புறம், 'நாட்டாம தீர்ப்பை மாத்தி சொல்லு' என்றெல்லாம் என்னை கட்டாயப்படுத்தக்கூடாது என்று முதலில் அம்மூவரையும் எச்சரித்துவிட்டு மேற்கொண்டு தீர்ப்பை கூறினேன்...

பிரம்மாவே, எனது 'அடி, முடி, நடு' இவற்றில் அன்னப் பறவையாகிய நீ எனது முடியைப் பார்க்கச் சென்று அதனை காண இயலாது, கீழே இருக்கும் எனது அடியை மேலே சென்று பார்த்தாய். இதன் உண்மை யாதெனில், பரம்பொருளாகிய நான் "எனது முடியை பக்தர்களாகிய உங்கள் அடியில் மறைத்து வைத்துள்ளேன்" என்பதனை அறியவேண்டும். எனது முடியையும், நடுவையும் காண இயலாத இந்த அன்னப் பறவை, எதிர்காலதில் இவ்வுலகிலிருந்து காணாமல் போகட்டும். மேலும் நீ முதலில் மேலே சென்று எனது முடியைக் காண விழைந்ததினால், உனது அகங்காரம் அழியும்வரை இந்த பூமியில் உன்னை மக்கள் வணங்கமாட்டார்கள்.

விஷ்ணுவே, எனது 'அடி, முடி, நடு' இவற்றில் பன்றியாகிய நீ எனது அடியைப் பார்க்க கீழே சென்று அதனை பார்க்கத் தவறியது மட்டுமன்றி நீ எனது இம்மூன்றில் எதையும் பார்க்கவில்லை. இதன் மூலம், பரம்பொருளாகிய நான் " எனது அடியை பக்தர்களாகிய உங்கள் முடிமீதுதான் வைத்துள்ளேன்" என்பதனை அறியவேண்டும். என்னில் எதையும் காண இயலாத இந்த பன்றி, எதிர்காலத்தில் சுத்தமானதை அறியாவண்ணம், அசுத்தத்தையே உண்டு, அசுத்ததிலேயே வாழவேண்டும். மேலும் நீ  என்னை முதலில் கீழே சென்று எனது அடியைக் காண விழைந்ததினால், உனது அறியாமை நீங்கும்வரை இந்த பூமியில் பல அவதாரங்கள் எடுத்து மீள்வாய்.

சிவனே, எனது 'அடி, முடி, நடு' இவற்றில் ஆந்தையாகிய நீ எனது நடுவைப் பார்க்க பூமியின் மீது தேடி கண்டுகொண்டாய். அதுமட்டுமல்லாமல் எமது நடுவிலிருந்தவேறே எனது அடியையும் கண்டதும் சிறப்பு. இதன் மூலம், பரம்பொருளாகிய நான் "யார் ஒருவர் ராத்திரியில் 'நடு' நின்று பார்க்கிறார்களோ அவர்களுக்கே எனது காட்சி கிடைக்கும்" என்பதனை அறியவேண்டும். எனினும் எனது முடியைக் காணாத இந்த ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது போகட்டும். மேலும் நீ முதலில் பூமியின் மேலேயே எனது நடுவை பார்க்க விழைந்ததால், மனிதர்களின் இருகண்களின் நடுவே நடனம் புரிந்து, நெற்றிக்கண்ணாக விளங்கவேண்டும். நீ எனது 'நடுவை' கண்ட இந்த ராத்திரி இனிமேல் உனது பெயரிலேயே 'சிவராத்திரி' என்று வழங்கப்படும்.

பரம்பொருளே! எங்கள் மூவராலுமே தங்களது முடியைக் காணமுடியவில்லையே? அது ஏன்? மூவரும் ஒரே குரலில் என்னைக் கேட்டனர். பரம்பொருளாகிய நான் விடை பகருகிறேன்...

அற்பர்களே... உங்களால் எனது முழு வடிவையும் காண இயலாது. உங்களையும் விட பெரியவர்கள் மனிதர்களே! அவர்களால்தான் என்னை முழுதும் காண முடியும். நீங்கள் மூவரும் என்னை ஒப்பிட்டால் 'எனது இடது கால் கட்டை விரலில் ஒட்டிக்கொண்டுள்ள ஒரு சிறு தூசியே" என்று அறிய வேண்டும். நீங்கள் என்னைக் காணவேண்டுமெனில் மீண்டும் நீங்கள் மனிதப் பிறவி எடுத்து அதற்கு முயற்சிக்கவும்.

"ராத்திரி" என்று சொன்னால் இரா+திரி = திரிபு இல்லாத ஒன்று என்று பொருள். அந்த ஒன்றை (பரம்பொருளை) இந்த இராத்திரியில் (இரவில்) உறங்காமல் சிந்தனைச் செய்தால் நெற்றிக்கண்ணாக நான் இருப்பது தெரியும். இந்த இரவு மட்டுமல்ல, அனைத்து இரவு நேரங்களிலும் இதனை செய்யவேண்டும். இரவு நேரங்களில்தான் இதனை தனித்திருந்து செய்ய வேண்டும். நான் (பரம்பொருள்) வரும் நேரம் 'நடு' இரவு தான் என்பதனை அறியவேண்டும்.

எனது ஞானம் உள்ள மனிதர்கள் மேற்கண்டவாறு முயலுவார்கள். அஞ்ஞானம் உள்ளவர்கள் இதனை ஒரு சடங்காக கோயில்களிலும் மற்ற இடங்களிலும் ஆடம்பரமாக செய்து வீண்போவார்கள்.

பரம்பொருளே! இன்னும் எங்களில் யார் பெரியவர் என்று சொல்லவில்லையே? என்று மூவரும் மீண்டும் ஒருங்கே முழங்கினர்.

மூவரில் எமது 'நடு' நிலையைக் கண்ட 'சிவன்' பெரியவன். மேலும் உங்களுக்குள்ள ஆயுளை கூறுகிறேன் கேளும்...

பிரம்மன் வயது - 4,36,000 ஆண்டுகள்
விஷ்ணு வயது - 8,64,000 ஆண்டுகள்
சிவன் வயது - 17,28,000 ஆண்டுகள் (திருஅருட்பா)

இதன் பிறகு நீங்கள் மரணமடைவீர்கள். மீண்டும் பிறவி உங்கள் வினைக்கேற்ப ஏற்படும். இப்படி எண்ணற்ற பிரம்மன், விஷ்ணு, சிவன் தோன்றியுள்ளனர்.

ஆனால் மனிதர்களால் மட்டுமே மரணத்தை தவிர்க்க முடியும். ஆக இன்று சிவராத்திரி - நீங்கள் அனைவரும் 'சிவனே' என்று இருப்பதைவிட 'சிவமே' என்று இருங்கள்.

விடைபெருகிறோம் பரம்பொருளே! நன்றி!

வாய்மை என்றும் வாழி!

Friday, March 8, 2013

அருவ வழிபாடும் - உருவ வழிபாடும்

அருவ வழிபாடும் - உருவ வழிபாடும்



 

அன்பர்களே

நாம் நமது நன்றியினை இயற்கையின்பால் தெரிவிப்பதற்காகவும், சில நேரங்களின் அவற்றின்பால் உள்ள பயத்தினாலும், நமது சமூக ஒற்றுமைக்காகவும், இன்னும் சில பல காரணங்களுக்காகவும் வழிபாடு நடத்தி மனநிம்மதியடைகிறோம். இந்த வழிபாட்டு முறைகளை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அருவ வழிபாடு, மற்றது உருவ வழிபாடு.

 

இதுவன்றி அருவுருவ வழிபாடும் இருக்கின்றது, அது தான் ஜோதி வழிபாடு. ஜோதியினைப் பார்க்கலாம் ஆனால் பிடிக்கமுடியாது, எனவே இது அருவுருவ வழிபடாயிற்று. மனிதர்கள் இம்மூன்றில் ஏதோ ஒன்றை பற்றி வழிபடுவதால், இவற்றில் எந்த வழிபாடு சிறந்தது? என்ற கேள்வி நம்மில் சிலருக்கு ஏற்படுவதுண்டு. என்னைக்கேட்டால், நான் சொல்வேன் - 'அருவ வழிபாடு' தான் மிகச்சிறந்தது.

ஆனால் இந்த அருவ வழிபாடு என்பது நமக்கு சாத்தியமாகாது. ஏனெனில் நமது மனம் வழிபடும் போது எதையாவது ஒன்றை சாராது வெறும் சூனியத்தை வழிபடவேமுடியாது, ஏனெனில் மனதின் இயல்பானது, அது ஏதெனும் ஒரு பொருளையோ அல்லது பல பொருளையோ சார்ந்தே இருப்பதுதான். மனிதர்கள் வெளிஉலகில் / புறத்தே செய்யும் அருவ வழிபாட்டில், அவர்கள் மனம் எப்படியோ, எதையோ ஒன்றை கற்பனை செய்துக்கொண்டுதான் அந்த வழிபாட்டை நிறைவேற்றுவார்கள், நிறைவேற்றமுடியும். யாரேனும் இதனை மறுக்கமுடியுமா? எனவே புற வழிபாடு அனைத்துமே ஒருவகை சடங்குதான்.

அப்படியெனில் அருவ வழிபாடு என்பதுதான் யாது?

வழிபாடு என்று சொன்னாலே, நாம் ஏதேனும் ஓர் இடத்தில் தனித்தோ அல்லது ஒன்று கூடியோ அல்லது ஏதேனும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சில சட்ட திட்டங்கள் மூலம் நிறைவேற்றுவதே வழிபாடு என்பதாகும். இம்முறையில் நாம் வழிபட்டால் அது அருவ வழிபாடு ஆகாது. இந்த வழிபாட்டை நாம் வெளியில் எங்கும் செய்ய இயலாது, முடியாது. நாம் நமது உள்ளே சென்று மிக ஆழ்ந்த சிந்தனையில், நம்மையும் மறந்து, நமது ஆழ்ந்த சிந்தனையையும் மறந்து இருபுருவ மத்தியில் ஒன்றுமில்லாத சூனியத்தை, எல்லாமுடையவனாக (இங்கு தயவுசெய்து மீண்டும் உருவத்திற்கு வந்துவிடாதீர்கள்) பார்க்க முயலுவது தான் அருவ வழிபாடு. அது எப்படிப்பட்ட காட்சியாக இருக்கும் என்பதனை நாம் நமது சொந்த அனுபவம் மூலமாகவே அறியவேண்டும். இந்த வழிபாட்டை நேரடியாக மேற்கொள்ளும் மனிதர் ஒரு யுகத்திற்கு ஒரு நபர் பிறப்பதே அரிது.

 

சரி, ஜோதி வழிபாடு என்பது யாதெனில், மேற்கண்ட அருவ வழிபாட்டிற்கு செல்லும் வழிகாட்டி பலகை என்று இதனை சொல்லலாம். இங்கே நாம் ஜோதி வழிபாட்டினை ஏதேனும் ஒரு இடத்தில் பலர் கூடியோ, தனித்தோ செய்கிறோம். இந்த அருவுருவ வழிபாடு ஏன் செய்யவேண்டும் என்றால், இது நமது மனதின் இயற்கையான, சார்பு நிலைக்கு உகந்ததாகவும் (இறைவன் ஜோதியாக இருக்கிறான் என்று சொல்லி நம் மனதை அதில் ஈடுபட செய்யும் ஒரு உபாயம் / தந்திரம்) மேலும் அந்த ஜோதியினை நம்மால் நமது விருப்பத்திற்கு வடிவமைக்கமுடியாது, அது இந்த உலகில் எங்கெங்கு செல்லினும், யவர் வழிபட்டாலும் அதன் வடிவம் ஒன்றே, அதனை யாரும் பிடித்து வளைத்து, ஒடித்துவிடமுடியாது (அனைத்துவிடலாம், அது வேறு), மேலும் புற இருளை நீக்கக் கூடிய ஒன்று தான் நமது அக இருளையும் நீக்கமுடியும் என்பதாலும், அண்டங்களிலெல்லாம் ஜோதியின் சுடரே எங்கும் வியாபித்திருப்பதாலும், யாருக்கும், எங்கும், எதற்கும் இது பொதுவாக விளங்குகிறப்படியாலும், ஜோதியின் சுடர் தொன்றும் போது அது எங்கிருந்து வந்தது என்றோ அது அனையும் போது அது எங்குச் சென்றது என்றோ எவராலும் கூறமுடியாது என்பதெ அதன் தனிச்சிறப்பு என்பதாலும் இதனை நாம் வழிபடலாம்.

மேலும் இதனை ஒருகுறியீட்டின்மூலம் காணலாம், இந்த ஜோதி என்பது அருவுருவமாக இருப்பதால் - அதன் உருவத்திற்கு ஒன்று (1) என்ற இலக்கத்தையும், அதன் அருவத்திற்கு ஜீரோ (0) என்ற இலக்கத்தையும், இவையிரண்டும் சேர்ந்து நம்மை ஒரு சூனியத்திற்கு (சூனியம் என்றால் ஒன்றுமில்லாத ஜீரோ எனலாம்) நம்மை அழைத்துச்செல்வதால் (அதாவது அருவ வழிபாட்டிற்கு - அக வழிபாடு) அதற்கு ஒரு குறியீடாக ஜீரோ (0) என்ற இலக்கத்தையும் கொடுத்துப்பார்த்தல், இந்த ஜோதி வழிபாடு 100 என்ற இலக்கத்தினைப்பெற்று முழு மதிப்பெண்ணுடன் இருப்பதைக் காணலாம்.

'இறைவன் தீபத்திற்கு முன்னிலையில் விளங்குகிறான்' (திருஅருட்பா) எனவே இந்த தீபமே / ஜோதியே இறைவன் அல்ல. இந்த வழிபாட்டின் மூலம் நாம் புறத்தில் ஜோதியை பார்த்து பார்த்து அதனையே அகத்தில் அனுபவமாக பார்க்கவேண்டும். பிறகு அந்த ஜோதி அருவுருவமும் நமது மனதின் கண் தானாக இயற்கையாக மறைந்துவிடும். இந்நிலையில்தான் அருவ வழிபாடான மேற்கண்ட ஒன்றுமில்லாத சூனியத்தை, எல்லாமுடையவனாக (இங்கும் தயவுசெய்து மீண்டும் உருவத்திற்கு வந்துவிடாதீர்கள்) பார்க்க முயலுவதுதான் ஜோதி வழிபாடு.

'தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே

 ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே! (திருஅருட்பா)

இப்படியாக நமது மனதை தந்திரமாக ஏமாற்றி அருவ வழிபாட்டிற்கு செல்லும் வழிகாட்டியாகத் திகழ்வதுதான் இந்த ஜோதி வழிபாடு. இந்த வழிபாட்டினையே செய்துகொண்டிருந்தால் அவன் இன்னும் அந்த வழிகாட்டி பலகையை பார்ப்பதை தவிற வழிகாட்டி சொல்லும் பாதையில் பயனிக்கவில்லை என்று பொருள். எனவே இதனையும் மனதை பக்குவப்படுத்தியப் பின்பு இந்த புற வழிபாட்டினையும் விட்டு விட்டு அக வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும், அதாவது பயணப்படவேண்டும. இந்த பயணம் ஒன்றுமில்லாத ஆதி அனாதியான சூனியத்தில் சென்று முடியும். வழிகாட்டி இல்லாமல் இப்பயணத்தை மேற்கொள்வது என்பது முடியவே முடியாது. எனவே புற வழிபாட்டிலிருந்து அக வழிபாட்டிற்கு செல்லும் பயணம்தான் ஜோதி வழிபாடு, பயணத்தின் முடிவுதான் (அக வழிபாட்டின் முடிவு) அருவ வழிபாடு.

'நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

  நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால்

உடம்பு நனைந்துநனைந் தருளமுதே...' (திருஅருட்பா)

இவ்வாறு தமக்குத்தாமே வழிபடுவதே அருவவழிபாடு. இதற்கு இவ்வுலகிலுள்ள எந்த ஒரு மொழியும், மதமும், சமயமும், வேதமும், சடங்குகளும், வழிபாடுகளும், மார்க்கங்களும், ஆச்சாரங்களும் தேவையில்லை. நமக்குத்தேவையானது இரண்டுதான். ஒன்று மனித உடல், மற்றது அவ்வுடலில் அமைந்த உயிர், அதாவது உயிருடன் கூடிய உடல் அவ்வளவே. (கோமா நிலையில் இருந்தால் போதுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது) அது (உடல் + உயிர்) தற்போது தற்காலிகமாக உள்ளது. அருவவழிபாட்டின் இறுதியில் அவ்வுயிர் நமது உடலிலே நிரந்தரமாகும். அருவ வழிபாட்டின் முடிவு சாகநிலை, மரணமிலா பெருவாழ்வு.! இந்த அருவ வழிபாட்டால் நாமும் அருவமாவோம். நமது உருவம் மறையும்.

இதனை வள்ளலார் முத்தேக சித்தி என்று கூறுகிறார். முத்தேகசித்தியடைந்த வள்ளலார், மேலும் அந்த தேகங்களின் இயல்பை கீழ்கண்டவாறு தமது திருஅருட்பாவில் விளக்குகிறார்,

முத்தேகமாவது யாதெனில், 1.சுவர்ணதேகம் (பொன் வண்ணமாக இருக்கும், நரை,திரை,பிணி,மூப்பு,மலம்,ஜலம்,வியர்வை,ஆகாரம்,நித்திரை,தாகம்,நிழல் முதலியவை இருக்காது, இத்தேகம் 12வது வயது வரை) 2. பிரணவதேகம் (சுவர்ணதேகத்தின் சிறப்பு + தேகம் தோன்றும் ஆனால் பிடிபடாது, இத்தேகம் 16 முதல் 108 வயது வரை)  3. ஞானதேகம் (சுவர்ணதேகம் + பிரணவதேகத்தின் சிறப்புகள் + உருவம் தொன்றியும் தோன்றாமலும் இருக்கும், அளவுகடந்த காலம் - வரையறையில்லை).

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

  உறவனன்றிப் பகைவன்என என்னாதீர் உலகீர்

கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்

  கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ

சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

  தன்மனந்தான் கல்மனமோ வன்மனமோ அறியேன்

இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்

  என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே. (திருஅருட்பா)

இவை நிற்க. நாம் இனி உருவ வழிபாட்டிற்குள் செல்வோம். இந்த உருவ வழிபாட்டை நினைத்தாலே எனக்கு ஒருவித பயமும், மயக்கமும் வருவதாக உள்ளது. ஏனெனில் அது அவ்வளவு விகாரமாக உள்ளது. இதனால் யாதொரு பயனும் வருவதில்லை, வீணுக்கு அழுதல் என்பார்களே அது போன்றதுதான் இந்த உருவ வழிபாடு. வள்ளலார் வழியில் கூறினால் இது ஒரு 'சிறி பிள்ளை விளையாட்டு' என்றும் கடவுளுக்கு கை, கால்கள் போன்ற அங்க அவயங்கள் உண்டா? என்று வள்ளலார் அறைந்தபோது, யாராலும் பதில் கூறமுடியவில்லை. "உண்மையான இறைஇயல்பை மண்ணைப்போட்டு மறைத்துவிட்டார்கள், மறைத்தவன் ஒரு வல்லவன், அவன் போட்ட பூட்டை இது வரை யாராலும் திறக்கமுடியவில்லை" என்று உண்மையை வெளிபடுத்த விழைந்தவர் வள்ளலார்.

ஆனால் நாம் இன்னும் கடவுளை ஒரு பொருளாகவே பார்க்கிறோம். எது தடை செய்கிறதோ (OBJECTS) அதற்கு பொருள் (OBJECT) எனப் பெயர். ஒரு சுவரை நாம் ஊடுறுவிச் செல்ல முயன்றால், நாம் சுவரால் இடிக்கப்படுவோம். சுவர் ஒரு பொருள், அதன் வழியாகச் செல்வதை அது தடுக்கிறது. நாம் பாறையின் ஊடே கடந்துச் செல்லமுடியாது. அது ஆட்சேபிக்கிறது, அது தடுக்கிறது, அது தடங்கல் செய்கிறது.

கடவுள் ஒரு பொருள் அல்ல - நாம் கடவுளின் ஊடே கடந்துச் செல்ல முடியும், அதனால் தான் தமிழில் அவனது பெயர் கடவுள் (கட - உள்). கடவுள் ஒரு பொருளாக இருந்தால் நமது புலன்களால் அவரை அறிய முடியும். முடிகிறதா? ஆனால் நாம் கடவுளை ஒரு பொருளாக்கி விட்டோம், பல சிலைகள் உருவாகிவிட்டன, அந்த சிலைகள்தான் பொருட்கள். அவைகள் கல்லாலோ, மரத்தாலோ, மற்றவற்றாலோ செய்யப்பட்டுள்ளன. கடவுளை ஒரு பொருளாக ஆக்குதல் மிகப்பெரிய தெய்வ நிந்தனையாகுகம். ஏனெனில் கடவுள் உள் உணர்வைச் சார்ந்தவர். கடவுளைப்பற்றிய முழுக் கொள்கைகளையும் நாம் மாற்றிக்கொண்டிருக்கிறோம். அவரை ஒரு பொருள் நிலைக்குத் தாழ்த்திவிட்டோம். மீண்டும் கூறுகிறேன் - கடவுள் ஒரு பொருள் அல்ல.

கெளதம புத்தர் கூட கடவுளை சூன்யம் (NOTHINGNESS) என்றழைத்தார். சூன்யம் என்று சொல்லும்போது (no - thingness) பொருள் அற்ற நிலை என்ற அர்த்தத்தில் தான் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறார். புத்தர் கடவுளை மறுக்கவில்லை, கடவுளை இல்லை என்று சொல்லவில்லை. ஒன்றுமில்லை என்பதற்கு 'அது ஒரு பொருள் அல்ல' என்று அர்த்தமாகின்றது.

கோவில்களும், சர்ச்சுகளும் கடவுளை ஒரு பொருளாக்கிவிட்டன, பள்ளிவாசல்களில் சிலைகள் இல்லை, ஆனால் கடவுள் அவ்விடங்களில் இருப்பதைப் போல நினைத்துக்கொண்டு, ஆழ்ந்த உள் உணர்வு இல்லாமல் வழிபாடு செய்கின்றனர். சிலைகளுக்கு முன் மண்டியிட்டாலும், மேகங்களுக்கு மேல் கடவுள் எங்கேயோ இருப்பதாக நினைத்துக்கொண்டு வழிபட்டாலும் அதேதான் - கடவுள் ஒரு பொருள் ஆகிறார். புறத்தில் செய்யும் வழிபாடு அனைத்தும் பொருள் வழிபாடே. அக வழிபாடே மிகச்சிறந்தது. நாம் ஒரு பெண்ணுடன் / மனைவிடம் அல்லது ஆணுடன் / கணவருடன் கூடும்போது புறத்தில் கூடுவோமா? மாட்டோம், அது எவ்வளவு அந்தரங்கமானதோ அதைவிட இரகசியமானது கடவுளின் ஊடே கூடுதல். ஆனால் நாய்கள் அனைவரும் காண தெருவில் கூடும். நாம் யார் என்ற தெளிவு வேண்டும், தெளிவு வந்துவிட்டால் 'எல்லாம் செயல் கூடும்'.

கடவுளை ஒரு பொருளாகப் பார்க்கும்போது தான் நமக்குள் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறோம். ஏனெனில் நாம் சண்டையிட விரும்புகிறோம், சண்டையிடுவது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நமது 'பொருள்' என்னும் கடவுள் சண்டையிடுவதற்கு ஒரு காரணமாய் இருக்கிறார். நாம் ஒருபோதும் இது பற்றி ஒரு இறுதி முடிவுக்கு வர இயலாது.

ஒரு கடையின் முன்பு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். அந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒரு பத்து வயது சிறுவனும் இருந்தான். ஒரு வழிபோக்கன் அங்கே வந்து என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது? என்று அங்கிருந்த அந்த சிறுவனிடம் கேட்டான்.

'என்னுடைய தந்தையும், இன்னொருத்தரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர்' என்றான் அவன்.

அந்த இருவரில் உன்னுடைய தந்தை யார்? என்றான் வழிபோக்கன்.

அதைப்பற்றிதானே அவர்களிருவரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றான் அந்தச் சிறுவன். இம்மாதிரி இவ்வுலகிலுள்ள மதவாதிகள் பல நூற்றாண்டுகாலமாக சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தத்துவ பேராசிரியர்களும், மத பேராசிரியர்களுக்கும் அவர்களைப்பற்றியே அவர்களுக்கு ஏதும் தெரியாது. ஆனால் கடவுளைப்பற்றிய அவர்களது கருத்து உண்மையானதென்று நிரூபிக்க அவர்கள் முயர்ச்சி செய்கின்றனர்.

நாம் பெரும்பாலும் நமது தந்தை அல்லது பரம்பரை என்ன தெய்வங்களை எப்படி வணங்கினரோ அதனை அப்படியே நாமும் பின்பற்றுகிறோம், பின்பற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டோம். அது பரம்பரை பழக்கமாகிவிட்டது. இந்த தொடர்நிகழ்வு சரிதானா? என்று நாம் சிந்திக்க மறுக்கிறோம். சிந்தித்தாலும் அந்த வழிபாட்டை விட்டு செல்ல நமது சமுதாயம் தடைவிதிக்கிறது அல்லது நம்மால் உண்மையான வழிபாட்டிற்குச் செல்லும் அளவிற்கு ஞானமுதிர்ச்சி இல்லை.

இந்த உருவ வழிபாட்டினை இவ்வுலகில் ஒரு வரையறையின்றி மனம் போன போக்கில் பின்பற்றுபவர் இந்து மத மக்களே. கல், மரக்கட்டை, செம்பு, தங்கம், பித்தளை, அலுமினியம், வெள்ளி, ஸ்படிகம், வைரம், முத்து, பவழம், நவமணிகள், மாட்டு சாணம், களிமண், வண்ணப்படங்கள்... போன்றவற்றில் பலவிதமான் மனித ரூபங்கள் மட்டுமல்லாது மற்ற அஃறினை ரூபங்களையும் செதுக்கி அதன் அருகில் மண்டியிடுவது / வழிபடுவது என்பது நமது அறிவிற்கு அழகா? என்று சிந்திக்கவும்.

சிற்பி ஒருவனால் செதுக்கப்பட்ட ஒரு கல் உருவம் எப்படி கடவுளாகும்? கடவுள் காட்சியை செதுக்கப்பட்டக் கல்லில் பார்க்கும் அளவிற்கு அவர் 'காட்சிக்கு எளியவரா'? அல்லது அவரது தரம் தாழ்ந்துவிட்டதா? அல்லது அவர் என்ன முட்டாளா? அல்லது நாம் அந்தக்கடவுளை கோயிலில் நேரடியாகப் பார்க்கும் அளவிற்கு சக்தி பெற்றுவிட்டோமா

இங்கு வள்ளலார் வாழ்க்கையில் நடந்த ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகின்றேன். ஒரு சமயம், பண்ணுருட்டியில் உள்ள ஒரு சிற்பி வள்ளலாரின் மேனியினை கல்லில் செதுக்கி அதனை மிகவும் பெருமையுடனும், பயபக்தியுடனும் வள்ளலாரிடம் எடுத்துவந்து காண்பிக்க, வள்ளலார் அதனை பார்த்தவுடன் மிகவும் கோபப்பட்டு 'பிச்... பொன்னான மேனி கல்லானதே' என்று கூறியபடியே அதனை வாங்கி உடைத்துவிட்டார். வள்ளலாரின் உண்மையான உருவத்தையே கல்சிலையாக பார்க்கும்போது அவருக்கு கோபம் வந்தது என்றால், இறைவனின் உண்மை என்னவென்றே தெரியாமல் அவரை மனம் போன போக்கில் மேற்கண்டவாறு செதுக்கி வழிபட்டால், அவர் எந்த அளவிற்கு பொறுமை காக்கிறார் என்று உணரவேண்டும்.

அதாவது நீங்கள்தான் இறைவன் என்று வைத்துக்கொள்வோம். உங்களைப் பார்க்காமலேயே காட்டில் உள்ள சிங்கங்கள் மனித இறைவனான உங்களை வணங்குவதாக நினைத்து ஒரு பன்றியாக உங்களை உருவகப்படுத்தி வணங்கி, அதற்கு அது சாப்பிடும் உணவை படைத்து, அது குளிக்கும் நீரினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்களுக்கு அந்த சிங்கங்கள் மேல் கோபம் வருமா? வராதா? அப்படித்தான் நாம் கடவுள் நிலை தெரியாமல் அவரை எந்த அளவிற்கு இழிவு செய்யமுடியுமோ அந்த அளவிற்குச் செய்துக்கொண்டிருக்கிறோம். இது உண்மை.

நாம் செய்வது என்ன, சாதாரண வழிபாடா? புண்ணியம் செய்வதுபோல் தினம் பாவங்களையே செய்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை. அந்த கல்லால் ஆன, பேசமுடியாத, பார்க்கமுடியாத, கேட்கமுடியாத, நடக்கமுடியாத, நுகரமுடியாத, தொட்டாலும் - உடைத்தாலும் சுரனை இல்லாத பொம்மைக்கு அபிஷேகம் என்ற பெயரில் நாம் செய்யும் விரயங்கள் மட்டும் கணக்கிட்டால், தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீணாக (கீழே) கல்லின் மேலே கொட்டப்பட்டு வீணாக்கப்படுகின்றது. இதனால் நமது வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படுவதை யாரும் கவனிப்பாரில்லை. இதனால் பாவத்தைத் தவிற, புண்ணியம் கிடைக்கும் என்று கனவில் கூட யாரும் இனி நினைக்கவேண்டாம். நாம் நினைப்பது போல் அந்தக் கல் இறைவனே என்று வைத்துக்கொண்டாலும், அவனது தலையில் எண்ணைய், பால், தயிர், நெய், பன்னீர், விபூதி, அன்னம், கூழாக்கிய பழங்கள் இன்னும் சொல்ல முடியாத பொருள்களை கொட்டினால் அவனுக்கு என்ன சந்தோசமா கிடைக்கும், துடைப்பக்கட்டையாலே நம்மை அடிக்கத்தான் வருவான்.

நாம் உண்ணும்போது உணவை கீழே சிந்தினாலே அதற்கான பாவத்திற்காக பல பிறவிகள் பிறக்கவேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள், ஆனால் அப்படிப்பட்ட பெரியவர்களே எப்படி தான் இவ்வாறு செய்கின்றனரோ? கடவுளை கல்லினுள் அகப்பட்டதாகப் பாவித்து ஆவாகனம் பண்ணுதல், புதைப்பதற்கு அகப்படா நிழலைப் புதைக்கத் தொடங்கியது போலவும், தனது நிழலை காலால் அளந்தறிய அது கடந்துக்கொண்டே செல்வது போலவும் ஆயிற்று. அதன் மூலம் பாலோடு பன்னீர் அபிசேக நெய் ஊற்றலால் அந்தகல்லுக்கோ உண்மை இறைவனுக்கோ யாதொரு சுகமும் இல்லை என்பதனை அறியவேண்டும்.

காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

  கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்

கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே

  குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே

பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்

  பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்

ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்

  எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே. (திருஅருட்பா)

நாம் செய்வது என்ன, சாதாரண வழிபாடா? பார்ப்பதற்கே கோரமான, கொலை ஆயுதங்களுடன் செதுக்கப்பட்ட கல் உருவத்திற்கு பலி கொடுக்கின்றோம் என்று கோயில்களில் ஆடுகள், மாடுகள், கோழிகள், சேவல்களை யெல்லாம் கருணை ஒரு சிறிதும் இன்றி துடிக்க துடிக்க வெட்டி, கோயில்கள் புனிதமான இடம் என்று நாமே சொல்லிவிட்டு, அதனை உண்மையில் புலால் / மாமிசக் கடையாக்குகிறோம். ஆசாமியைத்தவிற வேறு எந்த சாமியும் பலி கேட்காது. ஏன் சாதாரண படையல் கூட (அன்னம் படைத்தல்) அந்தக்கல்லிற்கு உதவாது, என்பது நமக்குத் நன்றாகவே தெரியும் இருந்தும் இன்னும் நம்மாலே அது போன்ற மூடபழக்கத்தினை விட மன தைரியம் இல்லை. சில கூட்டங்கள் பிழைக்கவேபலியிடுதல் இறைவனை மகிழ்விக்கும் என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளன.

மனித பிறப்பை எடுத்த நாம் புலால் உண்ணுவதே, இறை சட்டப்படி குற்றம், அப்படி இருக்க பலி என்ற பெயரில் கோயிலை இரத்த களரி ஆக்குவது எந்த வகையில் நியாயம்? இந்தியாவில் சில இடங்களில் மனித பலி நடப்பதையும் நாம் அறிகிறோம். இவையெல்லாம் நினைக்கும் போது, நம் மனித இனம் எந்த அளவிற்கு தாழ்நிலையில் இருக்கிறது என்பதனை சொல்லி தெரியவேண்டாம். அப்படிபட்ட மனித இனமான நாம் நமது இறைவனையும் அவ்வாறே வைத்துள்ளோம் என்பதில் வருத்தப்பட ஏதுமில்லை. நாம் எப்படியோ அப்படியே நமது வழிபடும் இறைவனும் இருப்பான் என்று ஏமாறுகிறோம்.

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே

  பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே

  நடவாத நடத்தைகள் நடக்கின் றீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தணை நினைந்தே

  கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணெவும் நேரும்ஓர் காலம்

  எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. (திருஅருட்பா)

நாம் செய்வது என்ன, சாதாரண வழிபாடா? கோயில்களில் யாகங்கள் செய்வதாகக் கூறி நெருப்பை மூட்டி, அதில் நெய்யை ஊற்றி, ஆல் அரசங்குச்சிகளையும், இன்னும் மனதில் பட்ட பல பொருள்களையும் தீயில் இட்டு புகை மூட்டி, காகம் கறைவது போன்ற சத்தத்தில் வேத மந்திரங்களை ஓதுவதால், அங்கே உள்ள நாம் வெளியிடும் கரியமில வாயுவை வெளியேற்ற ஒருவாறு துணை செய்யுமே அன்றி இறையறுளை அது எவ்வகையில் பெற்றுத்தரும் என்று சிந்திக்கவேண்டும். இந்த யாகங்கள் ஒரு சில கூட்டம் பிழைக்க ஏற்படுத்தப்பட்டது, வேதகாலத்தில் வேதத்தில் கூறியபடி, யாக நெருப்பில் கால்நடைகளை பலிகொடுத்து அதில் இடுவார்கள். (நமது வேதம் எப்படிபட்டது என்பதை சிந்திக்கவும்) அது தற்போது மாற்றமடைந்து விட்டது, ஆனால் அதன் அடிப்படை, வேதத்தின் கொடூர சொற்கள் இன்றும் இந்த யாகங்களில் ஓதப்படுகின்றன. அதைப்பற்றி நமக்கென்ன என்று இருந்துவருகின்றோம், இது தாழ்நிலை வழிபாடு என்பதனை அறியவேண்டும். கணபதி யாகம், அசுவமேத யாகம் (அசுவமேத யாகம் ஒரு மகா மட்டமான யாகம்) மகாசண்டி யாகம் இவை போன்ற யாகங்கள் எல்லாம் 'சிறு பிள்ளை விளையாட்டு' என்பதனை அறியவேண்டும்.

இவைகளினால் ஒரு பயனும் இல்லை என்பதனை திருவள்ளுவர்,

சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று (திருக்குறள்)

என்றும் இந்த ஞானசூன்ய செயலை செய்யத்தூண்டும் வேதத்தை கண்டித்து வள்ளலாரும் கூறுவதைக்காண்போம்,

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னதலால் உண்மைவெளித் தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை? (திருஅருட்பா)

நாம் செய்வது என்ன, சாதாரண வழிபாடா? இந்த உருவ வழிபாட்டை ஞானசூன்ய வழிபாடு என்று ஒரே வரியில் கூறிவிடலாம். இதனை பற்றி விரித்து சொல்ல முற்பட்டால் அது நமது பிறவிகளைப்போல் தொடர்ந்துக்கொண்டே செல்லுவதாய் உள்ளது. எனினும் இன்னும் ஒருசிலதை மட்டும் சுருக்கமாக கூறி முடிப்போம்.

கோயில்களில் உள்ள பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது ஒரு வேடிக்கையான விளையாட்டு. அந்த பொம்மைகளை பள்ளியறை வரை கொண்டுவிடுவார்கள், விட்டால் இவர்களே... அதையும் முடித்துவிடுவார்கள் போலும்.

கோயில்களில் உள்ள பொம்மைகளுக்கு அலங்காரம் செய்து அதனை வாகனத்தில் ஏற்றி வீதி உலா வரச்செய்வது என்பது ஒரு சூப்பர் விளையாட்டு, அதிலும் பலர் கூடி தேர் இழுப்பது என்பது இன்னும் கேலிக்குறியதாக உள்ளது.

திருவிழா என்று சொல்லி பொதுமக்களிடம் வசூல் செய்து அப்பணத்தை விரயம் செய்வது என்பது தான் இன்றைய ஆன்மீகம். வீதி ஓரங்களில் பெரிய பெரிய கட் அவுட்கள் வைப்பது, பேனர்கள் வைப்பது, வெடி வெடிப்பது, தெருஓரங்களில் தேவையில்லாமல் டியூப் லைட் அமைப்பது, மின்சாரத்தை திருடி பயன்படுத்துவது, திருவிழா முடியும்வரை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அல்லது கோயில்களில் மட்டும் ஒலிப்பெருக்கி மூலம் சாமி பாட்டு என்று கண்டவன் கண்டபடி பாடிய பாடலை மிகவும் சத்தமாகப் போட்டு மக்கள் உயிரை வாங்குவது, தீ மிதிப்பது, தனது உடலை தானே இரத்தக்களரி ஆக்கிக்கொள்வது, மயான சூரை என்ற கொடூரம் அரங்கேற்றுவது, மொட்டை யடிப்பது, செடல் போடுவது, சாமியாட்டம், பேயாட்டம் ஆடுவது, மாலை போட்டு சுற்றுலா செல்லுதல், காது குத்துதல், மேள தாளங்கள் வாசிப்பது, இராமாயணம் மகாபாரதம் போன்ற ஒன்றுக்கும் உதவாத கதைகளை பேசுவது, சூர சம்ஹாரம் என்ற கொலை செய்யும் சடங்குகளை செய்வது, புனித ஆறு என்று அதில் குளிப்பது, பல்வேறு கடவுள்கள் இருப்பதாக உருவகப்படுத்துவது, ஒவ்வொரு கடவுளுக்கும் பல மனைவிமார்கள், வப்பாட்டிகள் இருப்பதாக கூறுவது, அந்தக் கடவுளுக்கு பிள்ளைகள் இருப்பதாகக் கூறுவது, ஒவ்வொருகடவுளும் தங்களுக்குள் பெண்ணுக்காகவும், பழத்திற்க்காகவும், மற்றவற்றிற்காகவும் சண்டையிட்டுக்கொள்வது, அர்ச்சனை என்ற ஏமாற்றும் வேலை செய்வது, கற்பூரம் காட்டுவது, பணம் கொடுத்தால் முதலில் சாமி தரிசனம், கும்பபாபிஷேகம் செய்வது, தீர்த்தம் கொடுப்பது, விபூதி, நாமம் இடுவது, காவி உடையணிந்து சுகபோகத்தை அனுபவிப்பது, நால்வகை வருணபேதம் பேசுவது, ஆசாரங்கள், சடங்குகள், விரதங்களை பின்பற்றுவது, ஜோதிடம் பார்ப்பது, குறி சொல்வது, பாம்புக்கு முட்டை, பால் வைத்து வழிபடுவது, மரக்கிளையில் கயிறு, தொட்டில் கட்டுவது, அவதாரம் என்று புளுகுவது, நடுரோட்டில் கோயில்கட்டி வழிபடுவது, தெருவிற்கு ஒரு கோயிலைக் கட்டுவது, நவ கிரகங்களை கல்லாக்கி அதனை ஒன்பது முறை சுற்றுவது இன்னும் பல வழிபாட்டு முறைகள் இந்த உருவ வழிபாட்டில் உள்ளன. ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கவேண்டாம், இதனை செய்யும்போது மக்கள் ஏன், எதற்கு என்ற கேள்விகளை தங்களுக்கு தாங்களாகவே கேட்டுக்கொண்டால் இத்தனை சடங்குகளையும் நாறிய பிண்ணாக்கு என்று விட்டுவிடுவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

மேற்கண்ட முறைகளில்தான் தற்போதய இந்து மத உருவ வழிபாடு என்ற ஆண்மீகம் தழைத்து ஓங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குள் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பதாகக் கூறி பிழைப்பை ஓட்டுவதும் இருக்கிறது. புதிய புதிய சாமியார்கள் மக்களுக்கு உபதேசம் செய்ய கிளம்பிக்கொண்டே இருக்கின்றனர். இதற்காக பல ஆண்மீக மாத இதழ்கள் சந்தையில் விற்றுக்கொண்டிருக்கிறது. இது தவிர ஒவ்வொரு சாமியைப்பற்றி ஆராய்ச்சி புத்தகங்களும் வருக்கின்றன. அதனை வாங்கிப் படித்து நமது மக்கள் பக்தியில் முத்திவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

கோயில் யானைக்குத் தெரியாது தாம் பிச்சை எடுக்கிறோம் என்று! ஆனால் அதனை பழக்கப்படுத்தியவன் ஒரு வல்லவன். அவன் நேரடியாக அதனைச் செய்யாமல், தனக்காக தன்னைவிட வலிமையான ஒன்றை பிச்சை எடுக்க வைத்துவிட்டான். இங்கு நாம் அணைவரும் கோயில் யானையாக உள்ளோம் என்பதை அறியவேண்டும். அப்படி நம்மை பழக்கியவர்கள் வேதாந்திகள்.

கோயிலுள்ள சிலைகளை கலைக் கண்களோடு இரசியுங்கள், ஆனால் அவற்றை தெய்வம் என்று அவற்றின் முன் மண்டியிடாதீர்கள். மனிதத் தன்மையோடு இருக்க வேண்டுகிறேன். எந்த ஒரு விஷயத்திலும் சற்று ஆழமாகப் போய்ப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளும் அனுபவங்களும் சற்று வேறு மாதிரியானவை. 'உண்மை கசக்கும்' என்பது நிஜமான வார்த்தை!

கிருத்துவத்தில் உருவ வழிபாட்டு மூட நம்பிக்கைகளும் உள்ளன, ஆனால் அவை இந்து மதத்தில் இருப்பவை போன்று அவ்வளவு மோசமாக இல்லை. எனினும் இவர்களும் மக்களை ஏமாற்றுவதை தவிர்க்கவேண்டும்.

'குருடர்கள் பார்க்கிறார்கள்

செவிடர்கள் கேட்கிறார்கள்

சப்பாணிகள் நடக்கிறார்கள்

அதிசய சுகமளிக்கும்

அற்புத ஆராதனைகள் -

ஆராதனைகள் மூலமே

அனைத்தும் முடியுமென்றால்

ஆஸ்பத்திரிகள் எதற்காக?

போப்பாண்டவர் அறுவை சிகிச்சை

செய்துகொள்வது எதற்காக?'

பிள்ளையார் பால் குடிக்கிறார், மேரியம்மா கண்ணில் இரத்தம் வடிகிறது, பிறந்தக் குழந்தை குரான் ஓதுகிறது, தர்க்காவில் பச்சை வளையல் போட்டால் கல்யாணம் நடக்கும் என்பன போன்ற கதைகள் அவ்வப்போது வெளிப்படுவதும் மக்கள் அதைக்காண அலைபாய்வதும், நம்புவதும் நடக்கின்றன. இவையெல்லாம் வெறும் பிரச்சார மோசடிகள் என்று அறியவேண்டும்.

இஸ்லாமில் உருவ வழிபாடு கிடையாது. (சமாதி வழிபாடு இடையில் முளைத்துக்கொண்டது) மிகவும் நல்ல வழிபாடு இது. ஆனால் இவர்கள் அதனை படிப்படியாக புற வழிபாட்டை அக வழிபாடாக மாற்றவேண்டும். எந்த ஒரு புற வழிபாடும் உருவ வழிபாட்டிற்குச் சமம். மேலும் இவர்கள் புலால் உண்பதனையும் நிறுத்திவிட்டால் இம்மார்க்கமும் ஒரு சன்மார்க்கமே.

சிவவாக்கியார் "தனது வாழ்நாளில் பல ஆண்டுகள் முட்டாளாக இருந்து மயக்கம் கலந்த வேதத்தைப் படித்துவிட்டு வழிபாடு, பூசனை என்று கழித்து, இப்போது முட்டாள் தனத்திலிருந்து வெளியேறி விட்டேன்" என்கிறார்.

அவர் மட்டுமா! திருமூலர் கூடப் பல ஆண்டுகள் முட்டாளாக வாழ்ந்தார்.

 "இலைத் தொட்டுப் பூப்பறித்து

   எந்தைக்கு என்றெண்ணி

மலர்தொட்டுக் கண்டேன்

   வரும்பலன் காணேன்

தலைதொட்டுத் தாழ்ந்து

   என் உள்ளம்

தலைதொட்டுக் கண்டேன்

   தவம் கண்டவேறே"

எந்தப் பலனையும் காணாமல் பக்தி செய்து முட்டாளக இருந்தேன் என்கிறார்.

வள்ளல் பெருமான்கூட சைவ சித்தாந்த நெறியைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து நெடுநாள் முட்டாளக வாழ்ந்ததை அருட்பெருஞ்ஜோதி அனுபவம் வந்த பிறகு ஒப்புக் கொள்கிறார்.

எனவே நாம் முட்டாளக வாழ்ந்தது போதும். உருவ வழிபாட்டை விட்டொழித்து மேன்மை யடைவதே உண்மை இன்பமாகும்.

இதன் மூலம் நான் தெரிவிப்பது யாதெனில் 'நாமணைவரும் உருவ வழிபாட்டைத் தவிர்த்து, ஜோதி வழிபாட்டின் மூலம் அருவ வழிபாட்டிற்கு சென்று மரணமிலா பெருவாழ்வில் வாழவேண்டும்' என்பதே அன்றி வேறில்லை.

அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

  அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்

கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

  கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தேன்

எல்லா உலகும் என் வசமாயின

  எல்லா உயிர்களும் என் உயிர்களாயின

எல்லா செயல்களும் என் செயல்களாயின

  என்னால் நீங்கள் நன்மை அடைவது சத்தியம்! (திருஅருட்பா)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

தி.ம.இராமலிங்கம்

9445545475