Wednesday, July 24, 2013

குழந்தை வளர்ப்பு



குழந்தை வளர்ப்பு

நண்பர்களே! குழந்தை பிறந்தவுடன் அதன் எதிர் காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய விதி நம் கையிலேயே அடங்கியுள்ளது.

தேசபிதா மகாத்மா காந்தி உலகிற்கே வழி காட்டினார். My Life is My Message என்று எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார்.

ஆனால் அவரது குடும்ப வாழ்க்கையில் - தம்முடைய மகனின் முறையான ஒழுக்கமுள்ள வாழ்க்கைக்கு சரியான பொறுப்பேற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவருடைய மகனின் வாழ்க்கை முற்றிலும் சீரழிந்து போனது. தாம் எப்படி இருக்க வேண்டும் என்று உலகில் வாழ்ந்துக் காட்டினாரோ, அதே போல இப்படி வாழக்கூடாது என்று அவருடைய மகனின் வாழ்க்கை பாடமாயிற்று.

அதனை தெரிந்து கொள்வதின் மூலம் மகாத்மாவின் அந்த குடும்பப் பாசத்தையும் குழந்தை வளர்ப்பையும் தெரிந்து கொள்வோம்.

ஆரம்ப நாளில் இருந்து கஸ்தூரிபாவுக்கும் காந்திஜிக்கும் தலைவலியாக இருந்து வந்தது, அவர்களுடைய மூத்த மகன் ஹரிலால் தான். தந்தை தன்னை அளவுக்கு அதிகமாக ஏமாற்றிவிட்டார் என்று ஹரிலால் கருதினார். தன்னை படிக்க வைக்காதது குறித்து அவருக்கு ஏகப்பட்ட வருத்தமும் எரிச்சலும் இருந்தன. எனவே காந்தியின் எதிரிபோலவே மாறிச் செயல்பட ஆரம்பித்தார். இந்நிலையில் அவருடைய மனைவி குலாபு காலமாகவே பைத்தியம் போல மாறிவிட்டார். ஹரிலால் இருபத்தி நான்கு மணி நேரமும் இரவும் பகலும் மாறி மாறிக் குடிக்க ஆரம்பித்தார்.

குடித்துவிட்டு சாலைகளில் கலாட்டா செய்வதும் காவலர்களால் பிடிக்கப்பட்டு தண்டனையை அடைவதுமாக இருந்தார். இந்நிலையில் ஒரு நாள் திடீரென முஸ்லீமாக மாறிவிட்டார். ஹரிலால் அத்துடன் காந்தியை பற்றி அவதூறாக கைக்கு வந்தபடியெல்லாம் பத்திரிக்கைகளில் திட்டித் தீர்த்தார்.

இவ்வளவு நடந்தும் கஸ்தூரிபாவினால் மகன் மீது கொண்டுள்ள பாசத்தையோ, ஹரிலாலுக்கு தன் தாயின் மேலுள்ள பாசத்தையோ விடமுடியவில்லை.

மனதில் மிரட்சியுடன், கவலையும், பயத்துடனும் கஸ்தூரிபா ஹரிலாலுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அன்புள்ள மகனே ஹரிலால்,

நீ குடித்து விட்டு மிகக்கேவலமான முறையில் சாலையில் நடந்து கொண்டதற்காக காவலர்களால் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதைப் பத்திரிக்கையில் படித்து தெரிந்துக் கொண்டேன்.

உன்னுடைய விஷயத்தில் அதிகாரிகள் இரக்கமும், அனுதாபமும் கொண்டிருப்பதாலும் மகாத்மாவின் மேல் மதிப்பும், மரியாதையும் கொண்டிருப்பதாலும் தான் இவ்வளவு தாராளமாக நடந்துக்கொண்டார்கள்.

உனக்கு நான் என்னதான் புத்திமதி சொல்வது? ஒழுக்கம் கெட்டுப்போகாதே! என்று நான் உன்னை நேரில் பார்க்கும் போதெல்லாம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். நீயோ மிகவும் கீழான நிலைக்கு யாரும் மாற்றப்படமுடியாத நிலைக்கு மோசமாகப் போய்க்கொண்டே இருக்கிறாய்!

இப்படிச் செய்து எங்களுக்கு சகிக்க முடியாத மனவேதனையைத் தருகிறாய் என்பதைப்பற்றி நீ எப்போதாவது யோசனை செய்து பார்த்தது உண்டா? இனி கொஞ்சநாள்தான் உயிரோடு நான் இருப்பேன்.

உன்னுடைய இந்த நடத்தையை பார்த்து பாபு உள்ளுக்குள் மனம் குலைந்து எவ்வளவு அழுகிறார் என்று உனக்கு தெரியுமா? உன்னுடைய நடத்தையை பற்றி தினமும் பாபுவிற்கு ஏகப்பட்ட கடிதங்கள் வருகின்றன. ஆனால் அவர் இதையெல்லாம் எப்படியோ தாங்கிக்கொள்கிறார். ஆனால், என்னால் பிறர் முகத்தினை பார்க்க முடியாதபடி வெட்கமாய் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை பத்திரிக்கையில் உன்னைப்பற்றி எந்த விதமான மோசமான செய்தி வந்திருக்கின்றதோ என்று மனப்போராட்டத்துடன்தான் திறக்கவேண்டியிருக்கிறது. வர வரப் பத்திரிக்கையை நினைத்தாலே பகீர் என்கிறது.

நீ எங்கே இருக்கிறாய்? எப்படித் தூங்குகிறாய்? எப்படி சாப்பிடுகிறாய்? என்று நான் கவலைபடாத தினமே இல்லை. ஒரு வேளை நீ இப்போது மாமிசம் கூட சாப்பிடுகிறாயோ?

உன்னை பார்க்க வேண்டும் என்று எனக்கு நிறைய ஆசை இருக்கிறது, ஆனால் நீ என்னையும் தூக்கி எறிந்து பேசிவிட்டால் என்ன செய்வது என்று பயமாகவும் இருக்கிறது.

பிள்ளையாய் பிறந்துவிட்டு பகைவனாய் நடந்து கொள்ள உனக்கு எப்படி மனம் வந்தது? நீ போகும் இடமெல்லாம் பாபுவை பற்றி இழிவாகப் பேசுகிறாய் என்று கேள்விபட்டேன். ஆனால் உன்மேல் அவர் தன் உயிரையே வைத்திருக்கிறார். ஆகவே நீ ஒழுக்கத்துடன் வாழவேண்டும், என்று அவர் நினைப்பதில் என்ன தவறு?

அவரால் உன்னை பற்றிய கவலைகளை ஒதுக்கிவிட்டு நாட்டுக்குப் பாடுபட முடியும். ஆனால் நான் உன்னை பொறுத்தவரை சாதாரண, சராசரி தாய்தான்!

எல்லாவற்றையும் நன்கு சிந்தி, உன்னைப் பற்றி உன் பிள்ளையையும், பெண்களும் அவமானத்தால் மனம் புழுங்குவதை நேரில் பார்த்தாவது திருந்துவாயா?

உன் அன்புள்ள
"பா"

இந்த கடிதம் ஹரிலாலுக்குக் கிடைத்த பிறகு அந்த பாச உள்ளம் பெரிதும் பொங்கிற்று, என்றாலும் தன்னை மாற்றிக்கொள்ள அவரால் இயலவில்லை.

உலக மகாத்மா, தன்னை பொருத்தமட்டில் தன்வாழ்வை பாழாக்கிய முதல் எதிரி என்று அவர் நினைத்ததுதான் காரணம், என்றாலும் 'பா' வைப் பார்க்க அவருக்கு ஆசை எழுந்தது.

ஒருநாள் கஸ்தூரிபாவும், மகாத்மாவும் ஜபல்பூருக்குப் புகை வண்டியில் வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு வண்டி ஏதோ ஒரு நிறுத்தத்தில் நின்றது.

அலையென திரண்ட மக்கள் வெள்ளம் ஹரிஜன நிதிக்கு பணமாகவும், நகைகளாகவும் அள்ளி கொடுத்தனர். மகாத்மாவுக்கு 'ஜே' என்று பேரொலி வானை முட்டிற்று. அந்த மாபெரும் கூட்டத்தில் வீனையின் நரம்பொன்றில் பிசிறு ஏற்படுவது போல, தாளம் தப்பிய பாடல் ஒன்று ஒலிப்பதுபோல, 'கஸ்தூரிபாவுக்கு ஜே' என்று கேட்டது.

மிக அழுத்தமாகவும், உறுதியாகவும், சத்தமாகவும் பேரொலியையும் மீறிக் கேட்ட அந்தகுரல் சகலவிதமான நரம்புகளையும் சுண்டியிழுத்து ஜன்னல் வழியே, தன்னை வாழ்த்தும் மனிதன் யார்? என்று 'பா' வைப் பார்க்க வைத்தன,

-அது ஹரிலால்-

கிழிந்த அழுக்கேறிய ஆடைகளுடன், ஒட்டி உலர்ந்துபோன உடலுடனும், கண்கள் குழிவிழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாத ஒரு தள்ளாட்டத்துடன், சிவந்த உதடு வறண்டு வெடித்துப்போய் 'கஸ்தூரிபாவுக்கு ஜே' என்றார் அழுத்தமாக,

'ஐயோ... ஹரிலால்' பா கூவினார். இப்படியாகி விட்டாயே!

'சாப்பிட்டீர்களா அம்மா! இந்தாருங்கள் உங்களுக்காக நான் வாங்கிவந்த ஆரஞ்சுபழம்! இதை வாங்கக்கூட என்னிடம் காசுகிடையாது. நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்தவுடன் யாசித்து வாங்கிய பழம் இது! என் எதிரிலேயே உரித்து சாப்பிடுங்கள்.

ஹரிலால்... உனக்கா இந்த கதி? யாசகமாக வாங்கும்படி ஆகிவிட்டது தலை எழுத்துதானே! ஐயோ... என் மகனே! என்னிடம் வந்துவிடு! பாவுவிடம் பேசு! ஏன் பேசமாட்டேன் என்கிறாய்?

'மன்னியுங்கள்... பா! இவ்வளவு சிரமும் பட்டு நடக்க முடியாமல், தூங்காமல் நள்ளிரவில் காத்திருந்து வந்தது உங்களைப் பார்க்கத்தான். பாபு உலகத்துக்கு மகாத்மா, ஆனால் எனக்கு என்னை பொறுத்தவரையில் நீங்கள் மட்டும்தான் தெய்வம்! உங்களால்தான் பாபுவிற்கு இப்படியொரு புகழும், மரியாதையும் மதிப்பும் கிடைத்திருக்கிறது'.

'ஹரிலால், போனது போகட்டும்! எங்களுடன் வா' மகாத்மா கெஞ்சினார் பிள்ளையிடம்!

'முடியாது! நான் யாரை பார்க்கவேண்டும் என்று நினைத்தேனோ யாருக்காக இங்கே வந்தேனோ அந்த வேலை முடிந்து விட்டது, நான் போகிறேன்'

'பா... அந்த பழத்தை சாப்பிடுங்கள்'

'ஹரிலால்... கெட்டுப்போகாதே! உடம்பை பார்த்துக்கொள்' வண்டி நகரத் தொடங்கியது.

ஹரிலாலுக்கு நான் ஒன்றும் தரவில்லையே - தாய் பாசம் தவித்தது.

'இந்தா மாதுளம் பழத்தை கொடு' காந்திஜி கூற ஜன்னல் வழியே எட்டி மாதுளை பழத்தை 'பா' நீட்ட அதைப் பெற ஹரிலால் கையை நீட்ட, ஆனால் பெற முடியாதபடி வண்டி வேகம் எடுக்க -

பழத்தை பெற நீட்டிய கைகளை மடக்கிகொண்டு - 'கஸ்தூரிபாவுக்கு ஜே' என்று உரத்த குரலில் கத்தினார்.

புகைவண்டியின் அரக்க ஒலியையும் - மக்கள் வெள்ளத்தின், 'மகாத்மாவுக்கு ஜே' ஒலியையும் மீறி கஸ்தூரிபாவின் செவிகளில் அது மீண்டும் வந்து தாக்கிற்று.

நிலைகுலைந்து வண்டியுனுள் சாய்ந்தார் 'பா'. இந்த இக்கட்டான நிலமை உருவாக காரணம் யார்?

விதி என்று சொல்லலாமா? அல்லது தாய் தகப்பனாரின் நேரடிக் கண்காணிப்பில்லை என்று கூறலாமா?

பேரறிஞர், மகான், பார் அட்லா பட்டம் பெற்ற பெரிய பாரீஸ்டர், உலகப்பிதா, இவருக்கே இந்நிலமை ஏற்பட்டது என்றால், முறையாக குழந்தை வளர்க்கப்படவில்லை என்றால் எதை சொல்லமுடியும்? இன்றைய நாளேடுகளில் மிகவும் வெறுக்கத்தக்க நிகழ்வாக பாலியல் பலாத்காரம்தான் தினமும் அரங்கேறுகிறது. இதற்கெல்லாம் காரணம் பிள்ளைகளைவிட அவர்களை வளர்த்த பெற்றோர்கள்தான் மிக அதிக அளவில் காரணமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஒவ்வொரு பெற்றோரும் மிகவும் பொறுப்பான முறையில் தங்களது பிள்ளைகளை, வள்ளலார் கூறும் ஜீவகாருண்ய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம்,
ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், கரண ஒழுக்கம் போன்ற ஒழுக்கங்களை குழந்தை பருவம் தொடங்கி சொல்லிக்கொடுத்து வளர்த்தால் இவ்வுலகத்தின் எதிர்காலம் இறைவனின் சொர்க்கமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.


எனவே குழந்தை வளர்ப்பில் விதி என்பதுடன் நம்முடைய பங்கும் மிக முக்கியம் என்று ஒவ்வொரு தம்பதியரும் உணரவேண்டும்.

பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
           போகாத நாளும் விடயம்
     புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
           புந்திதள ராத நிலையும்
எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
           என்றும்மற வாத நெறியும்
     இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
           ஏழையேற் கருள்செய் கண்டாய் (2594)

அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி

 



Tuesday, July 23, 2013

வள்ளலாரும் வாரியாரும்





வள்ளலாரும் வாரியாரும்

அன்பர்களே! திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், தாம் எழுதிய 'செல்வம் சேர்ந்தது எப்படி' என்ற நூலிலிருந்து இரண்டு நிகழ்ச்சியினை மட்டும் இங்கே நமக்காக பதிவு செய்துள்ளேன், படித்து பாருங்கள் அருமையாக இருக்கும்...

வள்ளலார் வான் கருணை:

இறையருளால் 1941 முதல் 1950 வரை வடலூர் சத்திய ஞான சபைத் திருப்பணி செய்து கொண்டிருந்தேன்.

ஒரு மாதம் வேளையாட்களுக்கு சம்பளம் தரப் பணம் இன்றி நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் வாங்கிச் சம்பளம் தந்தேன். 'வள்ளல் பெருமானே! அணிகலன்களை அடகு வைக்கும் நிலை வந்ததே', என்று எண்ணி உள்ளத்தில் ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டது.

ஒரு நாள் வடலூரில் என் அன்பார்ந்த மூர்த்தியாகிய வடலூர் முருகனை வேண்டிக்கொண்டிருந்தேன். ஒரு கணவனும் மனைவியும் வந்து வணங்கினார்கள்.

அருகில் இருந்த ஒருவர், 'இவர் தனமும், மனமும் படைத்தவர்', என்று என் செவியில் கூறினார்.

நான் அந்த தம்பதிகளைப் பார்த்து, 'எந்த ஊர்?' என்று வினவினேன்.

'தெம்மூர், இராஜமாணிக்கம் பிள்ளை', என்று அவர் கூறினார்.

'உங்கள் ஊரில் ஒரு விரிவுரை புரிவேன். சத்திய ஞான சபைத் திருப்பணிக்கு பொருளுதவி புரியுங்கள்' என்றேன்.

அவர் அகமும், முகமும் மலர்ந்து, 'சரி என்றார்'. ஒரு நாள் குறிப்பிட்டு, சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தெம்மூருக்குச் சென்றேன். அன்று ஒரே மழை கொட்டியது. வீதியெல்லாம் வெள்ளம். எனக்கு வருந்தியது உள்ளம். 'மழையினால் மக்கள் கூடி விரிவுரையைக் கேட்டு மகிழமுடியாது. மக்கள் திரண்டு நிகழ்ச்சி நன்கு நடைபெற்றால்தானே, உடையவர் உள்ளம் உவந்து, திருப்பணிக்குக் கனிசமாகப் பொருள் தருவார். இப்படியாயிற்றே!' என்று வருந்தினேன்.

மழை நின்றது, வீதியெல்லாம் சேறு. தென்னை ஓலைக் கீற்றுகளையும், வைக்கோலையும் பரப்பினார்கள். மிக்க ஆர்வம் உள்ள அன்பர்கள் ஈரத்தை பொருட்படுத்தாது அமர்ந்தார்கள்.

வள்ளலார் வரலாற்றைக் கூறினேன். நிகழ்ச்சி ஒருவாறு நிரைவேறியது. இராஜமாணிக்கம் பிள்ளை 500 தருவார், நாம் 1000 கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

பிள்ளையவர்கள் மனைவியாருடன் வந்து வணங்கினார், ஒரு பெரிய தட்டு நிரைய ஆறு ஏழு பேயன் பழச்சீப்புகள், ஒரு கட்டு வெற்றிலை நிறையப் பாக்கு இவைகளை கொணர்ந்தார்.

அதைப்பார்த்தவுடன் என் மனம் திகைத்தது. சில நவராத்திரி விழா, ஆண்டு விழாக்களில் விரிவுரை செய்தால் பழங்கள் நிரைய இருக்கும். பழத்திற்கு அடியில் 25 ரூபாய் நோட்டு மட்டும் இருக்கும். இது எனது அனுபவம்.

இப்போது இங்கே நிரைய பழம் இருக்கின்றதே, திருப்பணிக்கு நோட்டு குறையுமே என்று எண்ணினேன்.

இதற்கு நேர்மாறாக, பழத்தட்டுக்கு மேல் 100 ரூபாய் நோட்டுகள் 35 இருந்தன. நான் நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் பட்டிருப்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. என்ன கடன் பட்டுள்ளதோ அந்த அளவில் பணம் இருந்தது. 3000 தந்திருக்கலாம், அல்லது 2500 தந்திருக்கலாம். இந்த அற்புத நிகழ்ச்சி என் மனத்தை உருக்கியது. ரசீது தந்துவிட்டு அவரிடம் விடை பெற்று புறப்பட்டேன். அன்றிரவு எனக்கு உறக்கம் வரவில்லை. வள்ளலாரின் வான் அருளை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தது.


பக்தியை கெடுக்கலாமா?

1937-ல் புரசைவாக்கம் டாணாத் தெருவில் சிறு தேவதைக்கு பலியிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு நான் சென்று, 'கடவுள் பெயரால் - கருணையே வடிவான கடவுள் திருமுன் உயிர்பலியிடுவது பாவம். வேறு எந்த மதத்தினரும் திருக்கோயிலில் உயிர்பலியிடுவதில்லை. இந்துக்களாகிய நாம் இவ்வாறு செய்வது மன்னிக்க முடியாத குற்றம். இவ்வாறு செய்வது பாவச் செயல், என்று உருக்கமாக விரிவுரை செய்தேன். அங்கிருந்த மக்கள் என் சொற்களைக்கேட்டுப் பலியை நிறுத்திவிட்டார்கள்.

அடுத்த வாரம் பலரும் பாராட்டுகின்ற ஒரு பிரபல சன்யாசி அங்கு சென்றார். பலியை நிறுத்திய செய்தியை அவர் கேட்டார். உடனே அவர் பின் வருமாறு கூறினாராம்.

'வாரியார் இப்படிச் செய்தது சரியாகாது. ஆண்டுக்கு ஒரு முறைதானே பக்தர்கள் தெய்வபக்தியுடன் பலியிடுகிறார்கள். அவர்களைப் பலியிடக்கூடாது என்று தடுத்து நிறுத்தியது நியாயமாகாது. பக்தியை கெடுக்கலாமா? உண்மையிலேயே வாரியாருக்கு ஜீவகாருண்யம் இருக்குமானால் தினம் ஆயிரம் ஆயிரம் ஆடுகளை வெட்டுகின்ற கசாப்பு கடையில் சென்று மறியல் செய்யலாமே? அப்படிச் செய்யாமல் எப்போதோ ஒருமுறை பக்தியுடன் பலியிடுவதை நிறுத்தி அவர்களின் பக்தியைப் பாழாக்கலாமா?'

இந்த வசனத்தை கேட்டு அந்த ஜனங்களுக்குச் குழப்பம் ஏற்பட்டது. 'இவர் கூறுவதிலும் நியாயம் இருக்கின்றது. வாரியார் கூறுவது நியாயமா? இவர் கூறுவது நியாயமா?' என்று மதி கலங்கி நின்றார்கள்.

அடுத்தவாரம் அதே இடத்துக்கு நான் விரிவுரை செய்ய போனேன். அங்குள்ள முக்கியஸ்தர்கள், அந்த துறவியார் கூறியதை என்பால் கூறினார்கள்.

அப்போது அடியேன் கூறினேன்!, 'அன்பர்களே! பெருந்துறவியாகிய அவர் ஆண்டுகொருமுறை பலியிடுவதை நிறுத்துவது பக்தியை கெடுப்பதாகும், தினம் பலப்பல உயிர்களைக் கொல்லும் கசாப்புக் கடையில் சென்று உயிர்க் கொலையை நிறுத்த கூடாதா? என்று கூறினார்கள்.

கோயிலில் வழிபட வந்த ஒருவன் கொடி மரத்தின் அருகில் மலங்கழித்து விட்டான். அங்கே நான், அய்யோ! கோயிலில் மலங்கழிக்கலாமா? என்றேன். அங்கிருந்த ஒரு பெரியவர் என்னைப் பார்த்து 'ஐயா! அவர் ஏதோ வயிற்றுவலி காரணமாக மலங்கழித்துவிட்டார். இதை நீர் தடுக்கலாமா? ஆயிரம் ஆயிரம் பேர் மலங்கழிக்கின்ற கக்கூஸில் சென்று தடுப்பது தானே முறை! என்றார்.

கோயில் வணங்கும் இடம். கக்கூஸ் மலங்கழிக்குமிடம். மலங்கழிக்க வேண்டிய இடத்தில் அந்த வேலையை செய்ய வேண்டும். இறைவனை வணங்கும் இடத்தில் அசுத்தம் செய்யக் கூடாது, என்றேன்.

ஆகவே அன்பு வெள்ளம் ஓடும் திருக்கோயிலில் உதிர வெள்ளம் ஓடக்கூடாது என்றேன். மக்கள் என் விளக்க உரையை கேட்டு திருப்த்தியுற்றனர்.










Saturday, July 20, 2013

ஒன்று போதுமா?



ஒன்று போதுமா?


கேள்வி:

நம் வாழ்க்கைக்கும் இறையருள் பெறுவதற்கும் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் ஒன்று போதுமா? மேலும், எந்த ஒரு மார்க்கத்தையும் பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? (எஸ்.விஜயன், சாலிகிராமம், சென்னை)

எமது பதில்:

ஐயா, சாதாரண மக்களாகிய நாம் நமது வாழ்க்கையினை பிறத்தல் என்பதில் துவங்கி இறத்தல் என்பதில் முடிக்கிறோம். அதாவது,

பிறந்து அழுகிறோம்
வளர்ந்து படிக்கிறோம்
படித்து வேலைக்குச் செல்கிறோம்
வேலையால் ஊதியம் பெறுகிறோம்
ஊதியத்தால் திருமணம் செய்கிறோம்
திருமணத்தால் பிள்ளை பெறுகிறோம்
பிள்ளையினை படிக்க வைக்கிறோம்
அவன் படித்து வேலைக்குச் செல்கிறான்
அவன் வேலைக்குச் சென்று ஊதியம் ஈட்டுகிறான்
அவனது ஊதியத்தால் திருமணம் செய்கிறோம்
அவன் நமக்கு பேரபிள்ளையினை தருகிறான்
அதற்குள் நமக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கிறது
அடுத்து ஓர் பத்து ஆண்டுகள் முதியபருவம் ஓடுகிறது
ஓர் நாள் இறந்து விடுகிறோம்

இவ்வாறு நாம் நமது வாழ்க்கையினை நடத்திவருகிறோம். இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான வாழ்க்கைக்கும் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? மேற்கண்ட மிகச் சாதாரண வாழ்க்கையினை, சுத்தசன்மார்க்கம் ஒன்றே மரணமிலா பெருவாழ்விற்கு இட்டுச்செல்கிறது. எப்படி என்று பார்ப்போம்...

"என்னால் நீங்கள் நன்மை அடைவது சத்தியமே" என்கிறார் வள்ளலார். இல்லற வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்றும் இறை அருளை எவ்வாறு பெறவேண்டும் என்றும் மிகத்தெளிவாக தமது திருஅருட்பாவில் கூறியுள்ளார்.

இல்லத்தரசிகளும் இல்லத்தரசர்களும் தாங்கள் இதுவரை கடைபிடித்துவந்த கடவுள் வழிபாட்டு முறைகளை தூக்கியெறிந்துவிட்டு, ஜீவகாருண்ய ஒழுக்கத்தையே கடவுள் வழிபாடாக கொள்ள வேண்டும் என்கிறார்.

சிறுதெய்வ வழிபாடு, பல தெய்வ வழிபாடு அறவே கூடாது என்கிறார். தெய்வங்கள் பெயரால் உயிர்பலியிடுவதையும் கண்டிக்கிறார். தெய்வம் ஒன்று என்று அறியும் அறிவு வேண்டும் என்கிறார்.

மனிதர்கள் எக்காரணங்கொண்டும் புலால் உண்ணக்கூடாது என்கிறார்.

தமது நித்திய கரும விதியில் இல்லத்தார்கள் காலையில் எழுவது முதல் இரவு உறங்கும் வரை என்னென்ன எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கியுள்ளார்.

தமது மருத்துவக் குறிப்பில் மனித நோய்கள் தீரும் வழியினை கூறியிருக்கிறார்.

தமது உபதேசக்குறிப்பில் சமய மத புராணங்களின் உண்மை நிலைகளையும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளையும் விளக்கியுள்ளார்.

கடவுள் அருளை பெறுவதற்கு ஜீவகாருண்ய வழிபாடு என்கிற தயவு மார்க்கம் மட்டுமே வழியாக உள்ளது.

நாம் இதுவரை கடைபிடித்துக்கொண்டிருக்கும் ஆசாரங்கள், சடங்குகள் போன்றவை தயவினை பெருக்க தடையாக உள்ளதால் அவைகளை அறவே விடவேண்டும் என்கிறார்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் தவமும் கைகூடினால் மரணமிலா பெருவாழ்வு கிடைக்கும் என்கிறார். தவம் என்பது தன் சுதந்தரமான தேக சுதந்தரம், ஜீவ சுதந்தரம், போக சுதந்தரம் ஆகிய மூன்று சுதந்தரத்தையும் இறைவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு ஒருமையுடன் இறை சிந்தனையுடன் இருத்தல். ஒருமை என்பது 'தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடுவது ஒருமையாகும்.

மரணம் தவிர்த்தால் மட்டுமே பிறவி பெருங்கடலை கடக்கமுடியும் என்கிறார். எமது மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்கிறார்.

சாதி, மதம், இனம், நாடு, மொழி போன்ற தடைகளை நீக்கி நாம் அனைவரும் மனிதர்கள் என்ற "மனித நேயமும்", எறும்பு முதல் யானை வரை இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரனங்களும் உண்மையில் நமது சகோதரர்களே / தாய் தந்தையர்களே / சகோதரிகளே / பிள்ளைகளே என்கிற உணர்வு பெற்ற "ஆன்ம நேயமும்" மனிதர்களுக்கு வரவேண்டும் என்கிறார்.

ஏழைகள் பசி தீர்க்க தருமச்சாலை துவக்கியுள்ளார். இந்த தருமச்சாலையில் அவரால் ஏற்றிவைக்கப்பட்ட அடுப்பு இதுநாள் வரையில் அனையாமல் எரிந்துக்கொண்டே இருக்கிறது. அதாவது ஏழைகளுக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கிய வண்ணம் உள்ளது. இந்த தருமச்சாலை இயக்கத்தில் உங்கள் பங்கும் மிக முக்கியமாக இருக்கவேண்டும் என்கிறார்.

தாம் கண்ட ஒருமை இறையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு, ஆண்டவரின் சம்மதத்துடன் நாம் வணங்குவதற்காக எண்கோண வடிவில் ஒரு சபையினை கட்டினார்கள். இச்சபையினுள் சென்று இறைவனை வழிபடவேண்டுமானால், கொலை புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளெ செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

சுத்தசன்மார்க்க கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்கு 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை' உருவாக்கினார். அதற்கென்று தனிக் கொடியினையும் (ஆன்மக் கொடி) கண்டார்.

வள்ளலார் பல முறை மறைந்து வெளிவந்துள்ளார். இறுதியாக ஓர் அறையில் சென்று தாளிட்டு மறைந்த இடம் 'சித்திவளாகம்' எனப்படும். தாம் மீண்டும் வருவதாக சொல்லி சென்றுள்ளார்கள். வரும் நாளை எதிர்நோக்கி காத்திருப்போம்.

மேற்கண்ட முக்கிய கொள்கைகளுடன் பல கருத்துகளை வலியுறுத்தி கூறியுள்ளார். வள்ளலார் கூறியுள்ள மெய்பொருள்களை மிகச் சுருக்கமாக இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விரிவினையும் இதனையும் தாண்டி பல கருத்துகளை திருஅருட்பாவில் காணலாம்.

நம்முடைய அன்றாட சாதாரண வாழ்வு என்பதை மரணமிலா பெருவாழ்வாக மாற்றக்கூடியது சுத்த சன்மார்க்கம் ஆகும்.

1. ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு (மூன்று பிரிவுகளாக விளக்கப்பட்டுள்ளது)
2. மருத்தவக் குறிப்புகள் (மூலிகை குண அட்டவணை, சஞ்சீவி மூலிகைகள், மருத்துவ குறிப்புகள்)
3. நித்திய கரும விதி (சாதாரண விதி, பொது விதி, சிறப்பு விதி)
4. உபதேசக் குறிப்புகள்
     1.அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி
     2.கடவுள் பிரகாசம்
     3.ஞானசபையும் நடராஜரும்
     4.பிண்ட ஒளியும் அண்ட ஒளியும்
     5.பிண்டாண்ட கிரகண சித்தாந்தம்
     6.அண்ட பிண்ட திசைகள்
     7.அண்ட பிண்ட அமுதங்கள்
     8.மழை
     9.முச்சுடர்
     10.அனுபவத்தில் சத்தி சிவம்
     11.சிருட்டி நியாயம்
     12.பசஷபேதமும் சிருஷ்டியும்
     13.கலை
     14.சிருஷ்டி வகை
     15.மும்மலபேதமும் சிருஷ்டியும்
     16.ஆணவம், மாயை, கன்மம்
     17.எழுவகைப் பிறப்பு
     18.ஜென்மம்
     19.ஆண்பெண் - பெண்ஆண்
     20.ஆண் பெண் பருவம்
     21.கரு உற்பத்தி
     22.சுக்கில சுரோணிதம்
     23.சப்த தாதுக்கள்
     24.தேக சத்து
     25.பிண்ட இலக்கணம்
     26.ஜீவஸ்தானம்
     27.பூர்வோத்திரம்
     28.பிண்ட நியாயம்
     29.பிண்டானுபவ இலக்கணம்
     30.மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது
     31.உரோம தத்துவமும் பிந்துஸ்தானமும்
     32.பிந்து நாதங்கள்
     33.பாலஸ்தானம்
     34.பெண் பிறவியும் பிந்து விளக்கமும்
     35.சாமானிய ஜீவன் விசேஷ ஜீவன்
     36.கடவுள் காரியப்படுவது
     37.கோபம்
     38.சமய நூல்களின் உண்மை
     39.சமய நூல்களின் பிழை
     40.கற்பமும் பிரளயமும்
     41.கற்பபேதம்
     42.கலியுகம்
     43.கலியுக முடிவு
     44.கால சங்காரம்
     45.சுரர் அசுரர்
     46.மனிதரும் தேவரும்
     47.அடி முடி தேடல்
     48.பிரம தண்டனை
     49.சரஸ்வதியை மூக்கறுத்தது
     50.சந்திர சாபம்
     51.தசஷ யாகம்
     52.சூரபத்ம சம்ஹாரம்
     53.குண்டோதரனுக்கு அன்னமிட்டது
     54.பாற்கடல் கடைந்தது
     55.பாற்கடலில் பள்ளிகொண்டது
     56.நாராயணன்
     57.கருடன்
     58.அயக்கிரீவம்
     59.வாமனாவதாரம்
     60.வடுகநாதர்
     61.பைரவர் வீரபத்திரர்
     62.வேதாரண்யம்
     63.வேதம்
     64.வேதம் ஆகமம் முதலிய நூல்கள்
     65.வேதாகம வழிகள்
     66.தேவாரம்
     67.திருவாசகம்
     68.திருமந்திரம்
     69.திருமந்திரமும் திருவாசகமும்
     70.சிவம் என்பதன் பொருள்
     71.சிவ
     72.சி
     73.சிவகுணமும் ஜீவகுணமும்
     74.சிவமாதல்
     75.பஞ்சாக்கரம்
     76.சிவ சிந்தனை
     77.பிரணவம்
     78.அகரம்
     79.காயத்ரி
     80.தத்துவம்
     81.குடிலை
     82.பூதம் என்பதன் சப்தார்த்தம்
     83.பெளதிகம்
     84.நினைப்பு மறைப்பு
     85.விருப்பு வெறுப்பு
     86.சங்கல்பம்
     87.பற்று
     88.தன்னையறிதல்
     89.கூடஸ்த பிரம ஐக்கியம்
     90.கடவுள் ஏகம் அனேகம்
     91.கடவுள் ஒன்றும் இரண்டும் ஆதல்
     92.மூவகை உயிர்கள்
     93.முக்குணம்
     94.மூன்றாசை
     95.மூன்று அவஸ்தை
     96.மூவகை ஞானம்
     97.ஞான வகை
     98.பர அபர ஞானங்கள்
     99.மூவிடம்
     100.பஞ்ச மகா பாவங்கள்
     101.பர அபர வாக்குகள்
     102.பிபீலிக விகங்க நியாயங்கள்
     103.சித்தாந்த வேதாந்தம்
     104.ஜீவன் முத்தனும் ஞானசித்தனும்
     105.புருஷன்
     106.சூரியகலை
     107.தியானம்
     108.தீசைஷ
     109.நித்தியத் துறவு
     110.உடம்பின் அருமை
     111.ஆண்டவர் சோதனை
     112.ஞான சிருஷ்டி
     113.ஆணவ மல நிவர்த்தி
     114.அன்புருவம்
     115.அகங்கார ஒழிவு
     116.இகபர காமங்கள்
     117.அபேதம்
     118.கவலை
     119.கலையறிவும் அருள் அறிவும்
     120.சடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்
     121.சன்மார்க்க சங்கம்
     122.சத்திய மார்க்கம்
     123.சத்துவகுண லசஷியம்
     124.சத்மார்க்கம்
     125.சர்வ சித்தி
     126.பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்
     127.சாத்திய நிலை
     128.சுத்த சன்மார்க்கக் கொள்கை
     129.சன்மார்க்க கொள்கை
     130.சுத்த சன்மார்க்க முடிபு
     131.சாகாத கல்வி
     132.சாகாக்கல்விக்கு ஏது
     133.சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்
     134.சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம்
           1.இந்திரிய ஒழுக்கம்
           2.கரண ஒழுக்கம்
           3.ஜீவ ஒழுக்கம்
           4.ஆன்ம ஒழுக்கம்
     135.சுத்த சன்மார்க்க சாதனம் (பரோபகாரம், சத்விசாரம்)
     136.சன்மார்க்க சாதனம்
     137.சுத்த சன்மார்க்கப் பிராத்தனை
     138.சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்
     139.பத்தி
     140.ஆன்ம இயற்கையாகிய தயாமூலதர்மம்
     141.ஆனந்தம்
     142.ஜீவகாருண்யமே முத்திக்கும் சித்திக்கும் முதல்படி
     143.ஞானசித்தியும் ஒளிநிலையும்
     144.தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்
     145.அதிதீவிர பக்குவி
     146.நஷ்டஞ் செய்யும் நான்கு
     147.ஜாக்கிரதை
     148.தேக நஷ்டத்தின் முதற் காரணங்கள்
     149.துர் மரணம்
     150.இல்வாழ்வானுக்கு நியாயம்
     151.சந்நியாசமும் காவி உடையும்
     152.மகளிர் சமத்துவ நிலை
     153.பொதுப்பார்வை
     154.வந்தன முறை
     155.சுத்த சன்மார்க்க ஆகாரம்
     156.சன்மார்க்க ஆகாரம்
     157.சர்க்கரை
     158.சன்மார்க்க ஆகார விலக்கு
     159.வெந்நீர்
     160.கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
     161.பஞ்ச கவ்யம்
     162.பஞ்ச சபை
     163.பஞ்ச அமுத ஸ்தானங்கள்
     164.பஞ்ச ஸ்தானங்கள்
     165.ஏழு திரைகள்
     166.ரசவாதம் ஏழு
     167.உபரசவாதம் ஏழு
     168.நவ நிலை
     169.குளிகை மணி ஒன்பது
     170.திரோயதச நிலைகள்
     171.ஞானயோக அனுபவ நிலைகள்
     172.சகஜ நிலை
     173.வேதாகமச் சிறப்பு
     174.சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்
     175.மூவகைச் சித்தி
     176.சுத்தமாதி தேகங்கள் மூன்று
     177.சுவர்ணதேகிகள் ஆயுள்
5. சுப்பிரமணியம் என்பது என்ன?
6. மயில் என்பது என்ன?
7. மயிலின் மீது சுப்பிரமணியன் ஏறிக்கொண்டிருத்தல் என்பது என்ன?
8. மயிலின் காலின்கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன?
9. படைவீடு என்பது என்ன?
10. பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது யாது?
11. ஈசுவரனுக்கு உபதேசித்தது என்ன?
12. கங்கையிலுள்ள நாணற்காட்டிற் பிறந்தது என்பது என்ன?
13. பின் கார்த்திகை அரிவை பால் கொடுத்தது என்பது என்ன?
14. பிண்டத்தில் இருப்பதை அண்டத்தில் ஊர், ஆலயம், மூர்த்தி, செய்கை முதலியன உண்டானது ஏன்?
15. அருள் நெறி
16.திருவருண் மெய்ம்மொழி
17. பேருபதேசம்
18. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம்
19. அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை
20. சாலை சம்பந்திகளுக்கு இட்ட சமாதிக் கட்டளை
21. சன்மார்க்கப் பெரும்பதி வருகை
22. சாலையிலுள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளை
23. சன்மார்க்கப் பிராத்தனை
24. சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி
25. சித்திவளாக வழிபாட்டு விதி
26. சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை
27. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
28. சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பம்
29. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
30. சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்னப்பம்

மேற்கண்ட முக்கியமான பட்டியல் அனைத்தும் திருஅருட்பா உரைநடைப்பகுதியில் உள்ளனவாகும். இவைத்தவிர 5818 மற்றும் தனிப்பாடல்கள் என சுமார் 6000 அருட் பாடல்கள் கொண்ட, ஆறு திருமுறைகளாக பிரிக்கப்பட்டுள்ள திருஅருட்பாவை வள்ளலார் நமக்காக, நமது வாழ்க்கைக்காக, இறையருள் பெறுவதற்காக வழங்கியுள்ளார்கள்.


ஐயா, நமது வாழ்விற்கும் இறையருள் பெறுவதற்கும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒன்று போதுமா? என்கிறீர்கள். மேற்கண்ட உண்மைகளைத் தவிர வேறு பொய்யினங்கள் எதுவும் தேவையில்லை. நமது வாழ்க்கைக்கும் இறையருள் பெறவும் சுத்தசன்மார்க்கம் ஒன்றே போதும். இன்னும் வேண்டும் என்றால், சுத்த சன்மார்க்க காலம் வரும்போது ஆண்டவர் இதற்கு மேலும் உள்ளதை தெரிவிப்பார் என்று வள்ளலார் கூறுகிறார். எனவே தற்போது இருப்பது ஒன்றுதான், அதற்கு மேல் எதுவும் இல்லை கீழும் எதுவும் இல்லை என்பதை அறிக. எனவே வேறு எந்த உலகியல் மார்க்கமும் தெரிந்துக்கொள்ள வேண்டியது இல்லை.

ஒன்றதி ரண்டது ஒன்றின்இ ரண்டது
ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே
ஒன்றல இரண்டல ஒன்றின்இ ரண்டல
ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே
ஒன்றினுள் ஒன்றல ஒன்றினில் ஒன்றில
ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே (அகவல்)

அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி