Wednesday, May 29, 2013

அருட்பாவும் அரசியலும்

அருட்பாவும் அரசியலும்

அன்பர்களே! திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை நமது அரசியல் இயக்கங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்று சற்றே இங்கு காண்போம்.



1. 1947 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தின் 'கடவுள் மறுப்பு', 'சமய மறுப்பு' பிரசாரத்திற்கு "வள்ளலார்" எவ்வாறு பயன்பட்டார் என்று 04.10.1947 ஆம் ஆண்டில் 'குடியரசு' ஏட்டில் வெளியான 'ஆஸ்திகர்களே என்ன கூறுகிறீர்கள்?' என்ற கட்டுரையை இங்கு காண்போம்.

சுயமரியாதைக்காரர்கள் கடவுள் இல்லை, சாதி சமயம் இல்லை என்னும் கயவர்கள், வேத சாஸ்திரங்களையும் இதிகாசப் புராணங்களையும் மறுக்கும் விவேகமற்றவர்கள், நாஸ்திகர் என்று கூறும் ஆஸ்திகர்களே!

சுயமரியாதைக்காரர்களைக் குறைகூறவும் வாயில் வந்தவாறு திட்டவும் பழகிக்கொண்டிருகிறீர்களே யல்லாமல் உண்மை என்ன என்பதை ஒருபொழுதாவது சிந்தித்தீர்களா? மக்களின் உழைப்பின் பயனை உறிஞ்சுவதற்காகவே சாதியும் சமயமும் திராவிடர்களிடையே புகுத்தப்பட்டன. மக்களைத் தத்தம் நிலையை அறியவொட்டாமல் மிருகங்களாக்குவதே இதிகாசங்களும், புராணங்களும் இழி நிலையில் வாழ வேண்டியதே இறைவனின் கட்டளையாகும் என எண்ணச் செய்வதே வேதங்களும் சாஸ்திரங்களும்.

மக்கள் மானத்தை விட்டொழித்து மண்ணுலகில் மெய்மறந்து வாழ வேண்டுமென்பதற்காகப் படைக்கப்பட்டதுதான் விசித்திரமிக்க கடவுளர்கள். இவை சுயமரியாதைக்காரன் கூறுவதுதான். இவ்வாறு சுயமரியாதைக்காரன் கூறுவது பொய்யா? உலகத்தில் யாராகயிருந்தாலும் அனைவருக்கும் அறிவுண்டு எனக்கூறுபவன் சுயமரியாதைக்காரன்! ஆதலால் அறிவு பெற்று விளங்கும் ஆஸ்திகர்களே! சிந்தியுங்கள் நன்றாகச் சிந்தியுங்கள்!

"கொள்ளை வினைக் கூட்டுறவால்
கூட்டிய பல்சமயக் கூட்டமும் அக்
கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறு அக்கலைகள் நாட்டியபல்
கதியும் காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும்
எல்லாம் பிள்ளை விளையாட்டே"

என்று பேசுகிறவர் யார் தெரியுமா?

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச்சரிதம் எல்லாம் பிள்ளைவிளையாட்டே"

என்பவர் யார்?

"இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம்
இவைமுதலா இந்திரசாலங் கடையா உரைப்பர்
மயல் ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனே நீநூல் அனைத்தும் சாலம் என அறிக"

என்று பறைசாற்றுபவர் யார் தெரியுமா?

"நான்முகர் நல்லுருத்திரர்கள் நாரண ரிந்திரர்கள்
நவிலருகர் புத்தர் முதன்மதத் தலைவ ரெல்லாம்
வான்முகத்தில் தோன்றியரு ளொளி சிறிதேயடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம் போனபடியே
தேன்முகந் துண்டவரெனவே விளையாடா நின்ற
சிறுபிள்ளைக் கூட்டமென"

என்று செப்புகிறவர் யார் தெரியுமா?

"இருட் சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப் புன்செவியில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்க ளாச்சிரம
வழக்கெல்லாம் குழிகொட்டி மண்மூடிப் போட்டு"

என்று சாத்திரங்களை எதிர்த்துச் சாம்பலாக்கி எருவாக்குக என்று மதங்களையும் வருணாச்சிரம வழக்கங்களையும் குழியில் கொட்டி மண்மூடி புதைக்க வேண்டும் என்று கூறுகின்றவர் யார் தெரியுமா?

"மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக் கதத்தீலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார்"

எனவும் உங்களின் உண்மையான நிலையை உரைப்பவர் யார் தெரியுமா?

"சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே"

என்றும் உங்கள் மனநிலைக்கு மனமிரங்குபவர் யார் தெரியுமா?

இவ்வாறு கூறுகின்றவர் சுயமரியாதைக் கவிஞரல்லர். ஆஸ்திகர்களாகிய உங்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவரான வடலூர் இராமலிங்க சுவாமிகளாவார். இவர் இவ்வாறு எழுதி வைத்திருக்கும் நூலைத் "திருஅருட்பா" எனச் செப்பி மாலையைச் சுற்றி மண்டியிட்டு வணங்குகிறீர்கள், இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றவர்களை மருநர் என்று செப்பி மண் கல்லை வாரி எறிந்து மல்லுக்கு நிற்க வருகின்றீர்கள்.



இப்போது என்ன கூறுவீர்கள்? சுயமரியாதைக் காரர்கள் கயவர்களா? விவேகமற்றவர்களா? புரட்டர்களா? நாஸ்திகர்களா? சுயமரியாதைக் காரர்களை குறைகூறும் ஆஸ்திகர்களே - உங்களின் உண்மையான நிலை என்ன என்பதை நீங்களே சிந்தித்து முடிவு கட்டுங்கள். சைவ மெய்யன்பர்களே! நீங்களும் சிந்தியுங்கள். சிந்தித்து தெளிவடைய முடிகிறதா எனப்பாருங்கள்.

2. மேலும் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் சில பாடல்களை மட்டும் தொகுத்து "பெரியார்" குடிஅரசுப் பதிப்பாக வெளியீடாக வெளியிட்டார்.


அவ்விளம்பரச்செய்தி பின்வருமாறு;

"குடிஅரசுப் பதிப்பக வெளியீடுகள்" சந்தாதாரர்களுக்கு முக்கால் விலை
"இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு"

"இது இராமலிங்க சுவாமிகள் பாடிய அருட்பாவில் ஆறாம் திருமுறையில் உள்ள பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்டது. இதில் உள்ள பாடல்களால், வேதம், புராணம், மதம் முதலியவைகளின் சூழ்ச்சிகளையும் அவைகள் பொய் என்பதனையும் உணரலாம்" இதன் விலை அணா 0-2-0.

இவ்வாறு பெரியார் அவர்கள் திருஅருட்பாவைச் சந்தாகாரர்களுக்கு சலுகை விலையில் அளித்தும் அக்காலத்தில் பரப்பியிருக்கிறார் என்பதனை இவ்விளம்பரத்தின் மூலம் நாமறிகிறோம். தந்தை பெரியாரையும் தயவுருவ வள்ளலாரையும் ஒப்பிட்டுப் பல நூல்கள் வெளிவந்தன எனத் தெரிகிறது.

3. "வடலூரும் ஈரோடும்" என்னும் நூலை எழுதிய 'திருக்குறளார்' சுத்த சன்மார்க்கப் போலிகளை கீழ்கண்டவாறு சாடித்தள்ளுகிறார்,

"இன்று வடலூர் சென்று வள்ளலாரின் திருவாக்குகளைப் பாராயணம் செய்து பக்திப் பரவசமடையும் அடியார்களில் எத்தனைபேர் அடியாரின் உண்மையெண்ணம் நிறைவேற சாதி மதம் ஒழிய - புராணக்குப்பைகள் நீங்கத் தியாகம் செய்து செய்கை முறையில் வெளிவந்து மக்களிடையே பாடுபடுகிறார்கள் என்று கேட்கிறோம்"

"ஆசிரியர் எவ்வழி அவ்வழி நாங்களும்" என்று பகுத்தறிவு இழந்து, இனப் பற்றை மறந்து, ஆரிய அடிமைகளான தமிழர்களும் வடலூரைப் பின்பற்றாது சென்றனர். இன்று அவர் பாடலைப் பாடினால் போதுமா?

இவ்வாறு வெறும் பேச்சளவில் வள்ளலாரைப் போற்றிச் செயலளவில் சாதி சமயப் பற்றாளர்களாக இருக்கும் இரட்டை வேடதாரிகளுக்குச் சவுக்கடி தருகிறார் திருக்குறளார்.

முடிவாக,

"வள்ளலார் வெளிப்படையில் கூறிய கருத்தினைச் செயல் முறையில் நிலைநிறுத்தப் பாடுபடும் சுயமரியாதைப் பெரியார்களைப் பின்பற்றாத அறிவிலிகள் நிறைந்த இந்த நாடு முன்னேற வழியுண்டா? எழுத்தில் முழங்கிய வடலூரார் கொள்கைகளைச் செயலில் செய்து காட்டுகிறார் பெரியார்" (வடலூரும் ஈரோடும்-பக்கம் 21)

வள்ளலார் கருத்துகளைச் செயலளவில் செய்து காட்டுகிறார் பெரியார் எனப் பெரியாருக்கு புகழாரம் சூட்டுகிறார் திருக்குறளார். இக்கருத்து 'சாதி சமய மத ஒழிப்பு' என்ற ஒரு கருத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் சரியே.

மற்றபடி பெருமானாரின் சமயங்கடந்த, சமரச சுத்த சன்மார்க்க நெறி, ஜீவகாருண்யக் கொள்கை, மரணமிலா பெருவாழ்வு, ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை, கடவுள் ஒருவரே உள்ளார், புலால் மறுப்புக் கொள்கை, தருமச்சாலை வழிபாடு, ஜீவ போன்ற உயர் கொள்கைகளுக்கும் பெரியாருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

4. வள்ளலார் மீதி பெரும் ஈடுபாடு கொண்டிருந்த தந்தை பெரியார் அவர்கள் வடநாட்டில் தோன்றிய அருளாளர்களைப் பொற்றுகின்ற அளவு தமிழனுக்கு தன் இனப் பெரியோர்களைப் போற்றவேண்டும் என்று தெரியவில்லையே என்று வருந்தினார். இதைக் குறிப்பாக 'தமிழ்க் கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம்' என்ற நூலில் பேராசிரியர் சே.இராஜேந்திரன் அவர்களும் சுட்டிக் காட்டுகிறார்.

"மக்களுடைய சிந்தனை ஆற்றலைத் தூண்டுவதற்கு குடிஅரசு இதழ்களில் பெரியார் தொகுத்துள்ள வினாக் கணைகள் என்றென்றும் எண்ணிப்பார்த்து மகழத்தக்கனவாக உள்ளன."

"இராமகிருஷ்ணரைப் போற்றுகின்ற தமிழனே! இராமலிங்கர் எவ்விதத்தில் தாழ்ந்தவர்! என்று கேட்டுத் தமிழரின் தன்மானத்தைப் பெரியார் கிளர்ந்தெழச் செய்தார்."
         (தமிழ்க் கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம்-பக்கம் 92)


இக்கட்டுரை குடிஅரசு ஏட்டில் (08-05-1948 ஆம் ஆண்டு) பக்கம் 14-ல் இடம்பெற்றுள்ளது. அதனை அப்படி இங்கு காணலாம்.

ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப் பற்று? இராமகிருஷ்ண பரமஹம்சர்

"இராமக்கிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார் உன் இராமலிங்கம் எவ்விதத்தில் அவரைவிடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியது என்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப் பற்று? இனியேனும் இன உணர்வு கொண்டு எழு தம்பி! உன் இனத்தான் எந்தவிதத்திலும் அறிவிலோ ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என்பதை இன்றே உணர்வாய்"

5. இதனையே 'உவமைப் புலவர் சுரதா' தன் கவிதையில் தேன் மழையாய் பொழிகிறது


"வங்கத்து ஞானிக்குச் சிலைகள் இங்கே!
வடலூர் போன்றோர்க்குச் சிலைகள் எங்கே?"

என்று தேன் மழையில் 'விழாத விழாக்கள்' என்ற தலைப்பில் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் பாடியதிலும் பெரியாரின் தாக்கத்தைக் காணலாம்.

6. பெரியார் அவர்கள் அருட்பாவை படித்தார், பாடினார், குறைந்த விலையில் நூலாக அச்சிட்டுப் பரப்பினார். எல்லாவற்றுக்கும் மேலாக வடலூர் சென்று வந்த நிகழ்ச்சியையும் அவரது ஆர்வத்தையும் என்றும் நாம் எண்ணத்தக்கது.

"தந்தை பெரியார் புலால் மறுக்காதவர். ஒருமுறை அவர் ஞானசபைக்கு வந்தார். ஞான சபையின் முகப்பில் "புலால் மறுத்தவர் மட்டும் உள்ளே வருக" என்ற பெருமனாரின் கட்டளையினை படித்துவிட்டு வள்ளற்பெருமானுக்கு மரியாதை தரும் வகையில் வெளியிலேயே நின்று விட்டு சென்றார்" (தமிழர் பண்பாடு - பக்கம் 4)

இப்படித் தந்தை பெரியாரின் 'அருட்பா ஈடுபாடு' அவரை வடலூர் வாயில் வரை கொண்டுவந்து நிறுத்தியிருப்பதை காண்கிற பொழுது 'கல்லும் உருகும் அருட்பாவில் கனகம் பதித்த உத்தமனின் உயர்வை எண்ணி எண்ணி உருகுவதைத் தவிர தமிழகத்திற்கு உய்யும் வழி வேறு உண்டோ?



7. தமிழ்த் தென்றலும் தவத் தென்றலும்:

"சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளையே சுயமரியாதையாகும். அக்குழந்தை தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சிக் கண்டு யான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." (தமிழர் தலைவர் - பக்கம் 141)

மேலே உள்ளதைக் கூறியவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஆகும்.



திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் முதற் பகுதியிலும் திரு.வி.க. அவர்கள் சுயமரியாதை இயக்கம் சன்மார்க்க இயக்கத்தினின்றும் பிறந்தது என்று வாதாடுகின்றார்.

"நாயக்கர் சுயமரியாதை எனது சன்மார்க்க இயக்கத்தின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை; பத்து பங்கு வேற்றுமை; வேற்றுமை எங்களுக்குள் போர் மூட்டியது."

இவ்வாறு பின்னால் சமரச சன்மார்க்கக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தமிழகமெங்கும் உலாவந்த பெருமைக்குரிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. கூறுகிறார். இவர் தம் வாழ்நாளில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் அருட்பா ஓதுவதிலும், பெருமான் புகழ் பாடுவதிலும் கழிந்தன என்று நாம் கொள்ளலாம்.

குடியரசில் பெரியார் தீட்டிய ஆசிரியவுரைகளுக்கு மறுப்பாக திரு.வி.க. அவர்கள் (27.06.1928) நவசக்தியில் 'தொடர் முடங்கல்' எனுந்தலைப்பில் எழுதினார். இக்கட்டுரை 'அன்பு கெழுமிய நாயக்கரே' என விளித்து 'தங்களை சிற்றினமெனக் கருதாத தோழன்' என முடிகின்றது. அக்கட்டுரையில்,

"தங்கள் பார்வையில் தற்போது நடைபெற்று வரும் திராவிடன் பத்திரிகையில் இரண்டு குறிப்புகள் திகழ்கின்றன. ஒன்று இராமலிங்க சுவாமியைப் பற்றியது, மற்றொன்று புத்தர் பெருமானைப் பற்றியது. இராமலிங்க சுவாமிகளின் கண்டனக் கூட்டங்களும் புத்தமத எதிர்ப்பு கூட்டங்களும் குழுமிய நாட்களில் யான் பள்ளி மாணாக்கனாயிருந்தவன். அப்பொழுது எம்மேடையில் பேசினேன் என்பது எனக்குத் தெரியவில்லை."
            (தமிழ்ச் சோலை, பக்கம் - 371)

இவ்வாறு மாணாக்கப் பருவத்தில் கதிரைவேலரோடு மருட்பா மேடைகளில் கலந்து கொண்ட திரு.வி.க. அவர்கள் பின்னால் அதை ஒப்புக்கொள்ள மனமின்றி 'அப்பொழுது எம் மேடையில் பேசினேன்' என்பது எனக்கு தெரியவில்லை, என்று மழுப்பியிருப்பதும் அருட்பா அணிக்கு கிட்டிய வெற்றி என்றுதான் கூறவேண்டும்.

தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் 1920 அக்டோபர் மாதம் 22-ம் நாள் 'நவசக்தி' எனும் வார ஏட்டினைத் தொடங்கினார். தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வேட்டில் இடம்பெற்ற சிறந்த கட்டுரைகளையெல்லாம் தொகுத்து தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு எனும் நூலாகவும் திரு.வி.க. அவர்கள் வெளியிட்டார்கள்.

இக்கட்டுரை தொகுப்பு நூலில் 06.05.1921-ல் 'சமரச சன்மார்க்கம்' எனும் கட்டுரையும் 09.01.1929-ல் திருவாரூர் - விசயபுரம் சமரச சன்மார்க்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா தலைமைப் பேருரை 'சமரசம்' என்னும் தலைப்பிலும் 'சன்மார்க்கம்' என்னும் தலைப்பில் 20.04.1932-ல் நவசக்தி வார இதழில் வந்த கட்டுரையும் 05.11.1926-ல் 'சன்மார்க்க சங்கம்' எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையும் தொகுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன.

இங்கே ஆண்டினைச் சுட்டுவதின் நோக்கம் வள்ளலார் புகழ் பரப்பிய அரசியல் தலைவர்களில் பலருக்கு முன்னோடியாகத் தமிழ்த்தென்றல் விளங்குகிறார் என்ற கருத்தை நிலைநாட்டவே ஆகும்.

மேலும் அரசியல் இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் பணியாற்றிய புகழ் பெற்ற ப.ஜீவானந்தம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், பேராசிரியர், டாக்டர் நாவலர் போன்ற பெருமக்களுக்கெல்லாம் இந்த வகையில் திரு.வி.க. அவர்கள் முன்னோடியாகிறார்.

"தேச பக்தனும், நவசக்தியும் அரசியல் கிளர்ச்சிக்கெனத் தோற்றுவிக்கப்பட்ட பத்திரிக்கைகள் ஆதலால் அவைகளில் பெரிதும் அவ்வப்போதய அரசியல் நிலையையொட்டி ஆசிரியக் கட்டுரைகள் எழுதப்படுவது வழக்கம். சிலபோது பொதுக் கட்டுரைகளும் எழுதப்படுவதும் உண்டு." என்று திரு.வி.க. குறிப்பிடுகிறார்.

அரசியல் புயல்களுக்கு நடுவே இலக்கியத் தென்றலை வீசச் செய்வதற்கு அப்போது திரு.வி.க. அவர்களுக்கு அருட்பாவும் பெருமானும் உதவி செய்தனர். இந்த மரபை ஒட்டியே இந்திராகாந்தி அம்மையார் நெருக்கடி நிலையை ஏற்படுத்தி இதழ் தணிக்கை முறையைக் கொண்டுவந்த பொழுது டாக்டர் கலைஞர் அவர்கள் முரசொலியில் 'இலக்கியச் சோலைக்கு ஏகுவோம் வாரீர்' என்று அழைத்தார். அப்போது தி.மு.க. பொது செயலாளராக இருந்த டாக்டர் நாவலர் அவர்கள் 09-01-1972 இல் 'தமிழ் இலக்கியக் கழகம்' என்னும் இலக்கிய அமைப்பினைத் தொடங்கினார்.

இப்படி அரசியல்வாதியாகவும் தொழிற்சங்கவாதியாகவும் இருந்துக்கொண்டு அருட்பாவை பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்திய பெருமக்களில் திரு.வி.க. அவர்களே முன்னனி முத்தாய் ஒளிர்கிறார்.

இவரது சமகாலத்தவராய் அரசியலில் ஈடுபாடு காட்டாது இலக்கியத் துறையில் மட்டும் ஈடு இணையற்றவராய் திகழ்ந்த மறைமலையடிகளார் வள்ளலார் பற்றியும் அருட்பா பற்றியும் பலக் கூட்டங்களில் உரையாற்றியவராகவும் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியவராகவும் இருந்தபோதிலும் அவை ஒரு தனி நூலாக வெளிவரும் அளவுக்கு இல்லாமையே அவருக்கு ஒரு பெரும் குறையையாய் நின்றுவிட்டது.

மற்றும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களோ தன் உரைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து 'இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்' எனும் நூலாக ஆக்கி முதற்பதிப்பாக 1929-ல் வெளியிட்டு முதன்மை பெறுகிறார். அந்நூலில் முன்னுரையில்,

"சென்ற விபவ ஆண்டு தைத் திங்களில் உற்ற பூசநாள் (26-01-1929) விழாவைத் தொடர்ந்து கூடிய மாநாட்டில் தலைமை வகிக்கும் பேறு அடியேனுக்குக் கிடைத்தது. அம்மாநாட்டில் அடியேன் நிகழ்த்திய தலைமையுரையைச் செவிமடுத்த அன்பர் பலர். அதைப் பத்திரிக்கையில் எழுதிவருமாறு கேட்டனர். அவ்வாறே அத்தலைமையுரையை எனது 'நவசக்தி'யில் வாரந்தோறும் எழுதிவரலானேன். அக்கட்டுரைகளைக் கொண்டதே இந்நூல். இந்நூலுக்கு 'இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்' என்னும் பெயர் சூட்டப்பட்டது."

"மண்ணெல்லாம் சன்மார்க்க மலராட்சி வேண்டும்
மார்க்கமெல்லாம் சன்மார்க்க மணங்கமழ வேண்டும்
கண்ணெல்லாம் சன்மார்க்க காட்சியுறல் வேண்டும்
காதெல்லாம் சன்மார்க்கக் கேள்விநுழைய வேண்டும்
பெண்ணெல்லாம் சன்மார்க்கப் பிள்ளைபெறல் வேண்டும்
பேச்செல்லாம் சன்மார்க்கப் பேச்சாதல் வேண்டும்
பண்ணெல்லாம் சன்மார்க்கப் பாட்டிலெழல் வேண்டும்
பரம்பொருளே! சன்மார்க்கப் பணிசெய்ய வேண்டுவனே!" (திரு.வி.க.)

8. மேலும் டாக்டர் கலைஞர் அவர்கள், திருஅருட்பாவில் வள்ளலார் பாடிய "கந்த கோட்டம்" என்னும் சொல்லைத் தழுவியே "வள்ளுவர் கோட்டம்" என்பதனை நிறுவினார். "கோட்டம்" என்ற தமிழ்ச் சொல்லை முதலில் உருவாக்கியவர் வள்ளலார் ஆவார்கள். இது 'கோட்டை' என்னும் சொல்லில் இருந்து வந்தது.

மேலும் வள்ளலார் உருவாக்கிய "ஞானசபை" என்பதனை தழுவி கலைஞர் அவர்கள் அதனை தமிழில் "அறிவாலயம்" என்பதனை உருவாக்கினார்.

தற்போது கலைஞர் அவர்கள் வெள்ளாடையும், தோளில் மஞ்சள் துண்டையும் அணிந்திருப்பது, வள்ளலாரின் சன்மார்க்கக் கொடியினை அடையாளப்படுத்துகிறது.


9. உலக நலத் தொண்டர் வேதாத்திரி அவர்களும் வெள்ளாடையை உடுத்தி தோளில் மஞ்சள் துண்டினை சார்த்தியிருப்பது, சன்மார்க்கக் கொடியினை அடையாளப்படுத்தவே ஆகும்.


10. தனித் தமிழ் இயக்கம்:   

வேதாச்சலம் என்ற தமது இயற்பெயரை தான் கண்ட 'தனித்தமிழ் இயக்கத்தின்' மூலம் மறைமலை அடிகள் சுத்த தமிழில் மாற்றிக்கொண்டார். இந்த 'தனித் தமிழ் இயக்கம்' தோன்றக் காரணமாக இருந்தது வள்ளலாரின் பாடல் ஆகும்.
வேதாச்சலம் அவர்கள் வள்ளலார் பாடிய பாடல் ஒன்றை மெல்லென இசைக்கிறார்! கூடவே அவரது மகளும் கிளிப்பிள்ளையாய் சொன்னதைச் சொல்லுகின்றது.

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பதுமறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந்து ஓங்கும்
நமச்சி வாயத்தை நான்மறவேனே!



இசைப் பாகாக வடித்த தந்தை முதலடியை முதலடியை மீண்டும் இசைத்து உற்ற தேகத்தை என்று சொல்லிச் சற்றே தயங்கினார். தந்தை முகத்தை நோக்கினார் இளஞ்செல்வி.

நீலா! வள்ளலார் பாடிய இவ் வளமான பாடலில் தேகம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. இது வடசொல். இவ்விடத்தில் யாக்கை என்னும் தென் சொல்லைப் பெய்திருந்தால் இன்னும் எத்தகு சுவையாகவும் நயமாகவும் இருந்திருக்கும்! என்றார் தந்தையார்.

இப்பாடலால், தந்தையும் மகளும் தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவே தனித்தமிழ் இயக்கம் தோன்றிய வரலாறு ஆகும். தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தையும் மகளும் தவத்திரு மறைமலை அடிகளாரும் நீலாம்பிகையும் ஆவர்! இவ்வியக்கம் தோன்றிய ஆண்டு 1916. அப்போது அடிகளாருக்கு அகவை நாற்பது. மகளுக்கு அகவை பதின்மூன்று!
எமக்குத் தெரிந்தவரையில் அருட்பா எவ்வாறு அரசியலில் கலந்துள்ளது என்பதை தெரிவித்துவிட்டேன். மீண்டும் சந்திப்போம், நன்றி.
அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை      அருட்பெருஞ்ஜோதி

Sunday, May 26, 2013

ஓம் ஸ்ரீ காரணப்பட்டு கந்தசாமிப் பிள்ளை

அன்பர்களே! வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை அவர்களைப் பற்றி திரு.R.N.ஜெயநாராயணக்கண்ணன் அவர்கள் தமது "ஞானபூமி" என்னும் நூலில் (ஓங்கார அருளாலயம் வெளியீடு) 'இருபதாம் நூற்றாண்டின் ஆத்ம ஞானிகள்' என்னும் தலைப்பில் கீழ்கண்டவாறு எடுத்துரைக்கிறார்.

ஓம் ஸ்ரீ காரணப்பட்டு கந்தசாமிப் பிள்ளை

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்ற போதத்தையும் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்ற ஞான வாக்கையும், ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற ஒழுக்க முறைகளையும் ஏம சித்தி, தத்துவ நிக்கிரகம் செய்தல், இறைவன் நிலையறிந்து அம்மயமாதல் போன்ற ஆன்மீக படிகளையும் சாகாக் கல்வியையும், சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் போன்ற பெரு நெறிகளையும், ஆன்மநேய ஒருமைப்பாட்டின் அவசியத்தையும் மரணமிலா பெருவாழ்வை வாழ்ந்துக் காட்டி நாமும் வாழ வழி வகுத்த வடலூர் இராமலிங்க சுவாமிகளான திருவருட்பிரகாச வள்ளலாரின் அணுக்கத்தொண்டராக "சமரச பஜனை ச.மு.கந்தசாமிப் பிள்ளையவர்கள் புதுவைக்கு அடுத்த காரணப்பட்டு என்ற ஊரில் சன்மார்க்க வாழ்வு வாழ்ந்து வந்தார்.



அணுக்கம் என்றால் நெருக்கம் என்று பொருள். வள்ளல் பெருமானோடே நெருங்கித் தொண்டாற்றி, ஐயாவின் அருளாசியால் வாழ்வை வைத்து வாழ்ந்தார் இத்தொண்டர்.

இவர் 1838-ஆம் ஆண்டு ஏம்பலம் என்ற ஊருக்கு அருகிலுள்ள காரணப்பட்டில் பிறந்தார். தந்தையார் பெயர் முத்துசாமிப் பிள்ளை, தாயார் தைலாம்மாள். இவர் கருணீகர் குலம், பிரம்ம கோத்திரம்.

இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் தெளிவாகக் கற்றவர். எப்போழுதும் பஞ்சாட்சர ஜபம் செய்துக் கொண்டிருப்பார். இயல் இசை தமிழ்ச் சிறப்புடன் விளங்கினார். கவிகளை தேன்மாரிப் பொழிவார். இராமலிங்க சுவாமிகளின் புகழையும் அருளையும் கேட்டுணர்ந்த இவர் வள்ளல் பெருமானிடம் ஆறாக் காதல் கொண்டார். வள்ளலாரிடம் சென்று தம் குறையை இரந்தபோது பெருமான் அவருக்கு விபூதிக் கொடுத்து "தக்க உத்தியோகம் தருவோம்" என்று அருளிச் செய்தனர்.

பிள்ளையவர்கள் தம் உபாசனாமூர்த்தியாக வள்ளலாரையே ஏற்றுக்கொண்டார். "திருவருட்பிரகாச வள்ளலாரை உபாசனாமூர்த்தியாகக் கொண்டொழுகும் காரணப்பட்டு சமரச பஜனை ச.மு.கந்தசாமிப் பிள்ளை" என்று தமது "பிரபந்தத் திரட்டு" என்னும் நூலின் முகப்பில் எழுதியுள்ளார். திருஅருட்பா ஆறுதிருமுறைகளையும் சிறப்பான முறையில் ஆய்ந்து பதிப்பித்தார்.

இவரை "ஆயிரம் பிறை கண்டவர்" என்பார்கள். திருஅருட்பாவில் பொதிந்துக் கிடக்கும் சமரச சுத்த சன்மார்க்க கருத்துகளை சொற்பொழிவாக மக்களுக்கு உணர்த்தினார். இவரது சிறந்த நூல் "பிரபந்த திரட்டு" ஆகும். இது 1500 பக்கங்களைக் கொண்டது. இதில் 25 நூல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் 14 நூல்கள் வள்ளலார் மேல் பாடப்பட்டவை. இராமலிங்க சுவாமிகள் திவ்ய சரித்திரக் கீர்த்தனை, சற்குரு வெண்பா அந்தாதி, திருவருட்பிரகாச வள்ளலார் வருகை என்பவை மாணிக்கக் கற்களாகும். வள்ளலார் வருகை பற்றிய அவரது பாடல்களை இங்கு தருகிறோம்.

சாவாத நெறியருளும் சாமிவரு மாகில்
சாசஷியதா யநுபவிக்குந் தன்மைவரு மாகில்
சாகாத தலையாதித் தரமறிவ னாகில்
சாந்தமுட னல்லதிசை சாற்றுசிறு பல்லி!

சித்திபுரச் சிற்சபையின் தேவன்வரு மாகில்
சித்திவளா கத்தொளிசெய் சித்தன்வரு மாகில்
சித்திபெறு முத்திநெறி சேரவரு மாகில்
சித்த முந்திசையிற் செப்புசிறு பல்லி!
           (நன்னிமித்தம் பராவல் 26-30)

1924-ஆம் ஆண்டு திருஅருட்பா ஆறு திருமுறைகளையும் ஒரே தொகுதியாக வெளியிட்டார்.

வந்தது முடிந்தது:

வயதானது, உடல் கூடு சோர்வுற்றது. ஒரு நாள் அங்குள்ளோரைக் கூப்பிட்டு நான் இராமலிங்க சுவாமிகளின் திருவடிகளைச் சேரப்போகிறேன் என்றார். படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று உரத்தக் குரலில் உள்ளாழ்ந்து சொன்னார். 1924-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி (02-12-1924) உடலை விட்டுப் புறப்பட்டுவிட்டார். காரணப்பட்டு கந்தசாமிப்பிள்ளையவர்களைப் பற்றி குகா.இராஜமாணிக்கம்பிள்ளையவர்கள் பாடியபாடல்கள் கீழ்வருமாறு:

வெண்பா

இரத்தாசஷிக் கார்த்திகையில் ஏற்றபதி னேழில்
திரத்தசட்டி சேரவிட்டம் செவ்வாய் - விரக்தனவன்
காரணப் பட்டினிலே கந்தசாமிப் பெரியோன்
பூரணணாய் நின்றான் பொலிந்து!

விருத்தம்

ஆயிரந்தாய்க் கருணையினும் அதிகங்கொண்ட
    அருட்பிரகாசப் பெரியார்க் கடிமையாகி
ஆயிரம் பாக் களுக்கதிக மான பாக்கள்
    அவனியிலே செய்த தொண்டர் கந்தசாமி
பாயிரத்தி லவர்செய்த நூன்மு கப்பில்
    பார்த்திட்டா லவர்பெருமை கான்பீர்; கேண்மின்
ஆயிரத்தி லொருகூறு பெற்றா மாகில்
    அவர்பத்தி தனில்நாமு முய்ந்து விட்டோம்.

அருட்பெருஞ்ஜோதி          அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!

உலக நலத் தொண்டர் "வேதாத்திரி"

அன்பானர்களே! உலக நலத் தொண்டர் "வேதாத்திரி" தனக்கு வள்ளலார் எவ்வகையில் காரியப்பட்டார் என்பதனை அவரே தனது நூலில் குறிப்படுவதை இங்கே அப்படியே தருகின்றேன்.

அருள்ஜோதி இராமலிங்க வள்ளலார் அருள்பாலிப்பு

"
எனக்கு சுமார் 42 வயது இருக்கலாம். நான் தெரு தின்னையில் அடிக்கடி பல நாட்கள் படுத்துறங்குவது உண்டு. ஒருநாள் பெளர்ணமி தினம் இரவு சுமார் மணி 12.30 இருக்கும் நிலவு நல்ல ஒளி தின்னையில் கால்பாகம் இருக்கிறது. நான் கண் திறந்து விழித்து பார்த்தேன். என் வல பக்கத்தில் இரண்டு அடித் தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளை துணியால் மூடிய நிலையில் அமர்ந்திருந்தார்.

எனக்கு ஒரே படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன். "நான் உன்னோடு பத்தாண்டு காலம் இருக்கபோகிறேனப்பா, இதை இப்போதே யாரிடமும் சொல்லாதே". என்று கூறிய வார்த்தைகளை தெளிவாகக் கேட்டேன், உடனே காட்சி மறைந்து விட்டது. உடம்பெல்லாம் புல்லரித்தது. மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. என் மனைவியை எழுப்பி கூறி மகிழலாம் என்றால், பிறரிடம் அப்போதே கூறக்கூடாது என்ற அருள் ஆணை, என்ன செய்வேன். இதய பூரிப்போடு தவத்தில் உட்கார்ந்தேன். ஆனால் வள்ளலாரின் காட்சி நினைவு தவிர தவமும் வேறு செய்ய முடியவில்லை.


அன்று முதல் பத்தாண்டு காலத்துக்குள் நான் எழுதிய கவிதை, கட்டுரைகள் அனைத்தும் தத்துவ மயம். இராமலிங்க வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் எனது எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார் என்றே எண்ணுகிறேன்.

என்கவிதைகளை, கருத்துகளை வியந்து போற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இந்த நிகழ்ச்சியினை விளக்கி இந்த சிறப்புகள் அனைத்தும் அருள் ஜோதி வள்ளலார் உடையதே எனக் கூறி மகிழ்வேன்.

 அந்த மகான் பல சந்தர்ப்பங்களில் என்னோடு இருந்து வழிகாட்டி செயலாற்றுவதை அனுபவமாக பல முறை கண்டிருக்கிறேன்."

மேற்கண்டவாறு தமது வாழ்க்கை வரலாற்று நூலில் வள்ளலாரின் அருள் பாலிப்பு பற்றி
"
வேதாத்திரி" அவர்கள் குறிப்பிடுகின்றார்.

அவரது அனுபவத்தில் நமக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் "வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் எனது எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார்" என்பது தவறான எண்ணமாகும்.

அதாவது வள்ளலார் தாம் நினைத்த செயல்களை நமது "வேதாத்திரி" ஐயா மூலம் நிறைவேற்றியிருக்கிறார் என்றுதான் நாம் கருத வேண்டும். மாறாக வள்ளலார் ஏதோ தமது சொந்த உடலை விட்டுவிட்டதால் தற்போது "வேதாத்திரி" ஐயாவின் உடலை பயன்படுத்திக் கொண்டதாக எண்ணவேண்டியிருக்கிறது.

இது முற்றிலும் தவறானது. வள்ளலார் தமது சொந்த உடலை விட்டு என்றும் பிரியாமல் சாகா வரம் பெற்றவர். அவர் சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் பெற்று எல்லோர் உடம்பிலும் உள்ளார். "வேதாத்திரி" ஐயாவிடம் பத்தாண்டு இருந்தார் என்றால், அது "வேதாத்திரி" ஐயாவின் செயல்களை குறிப்பிட்டக் காலம் வரை வள்ளலார் தன்வசப்படுத்திக்கொண்டார் என்று தான் பொருள்.

வாழ்க "வேதாத்திரி" ஐயாவின் புகழ்.

வள்ளலாரும் பெரியாரும் சந்தித்தால்...

வள்ளலாரும் பெரியாரும் சந்தித்தால்...


அன்புடையீர் வணக்கம். தற்காலங்களில் எல்லாம் இருதுருவ கொள்கைகளையுடைய பிரமுகர்களை அடிக்கடி சந்திக்க வைத்து பேட்டி எடுத்து அதன்மூலம் இருவருடைய கருத்தின் உண்மைகளை மோதவிட்டு அதன்மூலம் மக்களை தெளிவடையவைப்பது அல்லது இன்னும் குழப்பமடையவைப்பதில்  தொலைக்காட்சி அலைவரிசைகளில்
காண்கின்றோம்.

அந்த வகையில் இருதுருவ கொள்கையுடைய வள்ளலாரையும் பெரியாரையும் சந்திக்க வைக்க காலத்தால் முடியாவிட்டாலும் அவர்களுடைய கருத்துகள் என்றென்றும் காலத்தில் நிலைத்து நிற்பதால் அவர்களை நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க வைக்கமுடியும்.

அவ்வாறுதான் தற்போது இவர்களிருவரும் சந்தித்து உரையாடுகிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்றுதான் பார்ப்போமே...

(யமது இந்த சிறு படைப்பு 'செப்டம்பர் 1997 ஆம் ஆண்டு, சுமார் 15.5 வருடங்களுக்கு முன்பு திரு.நா.மகாலிங்கம் அவரகள் ஆசிரியராக இருக்கும் "ஓம் சக்தி" மாத இதழில் வெளிவந்துள்ளது என்பதனை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்)

வள்ளலார்: "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, அருட்பெருஞ்ஜோதி..."

பெரியார்: "கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி, கடவுள் இல்லவே இல்லை..."

வள்ளலார்: 'தம்பி... நீ தான் பெரியார் ஈ.வே.இராமசாமியா? நான் தான் இராமலிங்கம். உன்னைச் சந்தித்தலில் மகிழ்கின்றேன்.'

பெரியார்: 'ஓ... வள்ளலாரா! வாங்க, வாங்க, நல்லாயிருக்கீங்களா?'

வள்ளலார்: 'நலம் தான். நான் அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தைக் கூறிக்கொண்டு வருகையில், கடவுள் - இல்லை, முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி சத்தமெல்லாம் என் காதில் விழுந்தவுடன் நடுங்கிவிட்டேன். அதை நீதான் கூறினாயா?'

பெரியார்: 'ஆமாம்... அதில் என்ன தவறு?'

'கடவுளை ஒப்புக்கொண்டால், பிறகு இந்து மதத்தை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்; பிறகு வர்ணாசிரம தர்மத்தை ஒப்புக்கொள்ளவேண்டும், பிறகு ஒருவன் பிராமணன், அவனுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்ட நாலாவது சாதியான சூத்திரன் என்று நாம் ஒப்புக்கொள்ளவேண்டும், பிறகு வேத சாஸ்திரம், புராண இதிகாசங்களில் எழுதி வைத்திருக்கின்றபடி நாம் தாசி மகன், வைப்பாட்டி மகன் என்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இதெல்லாம் தேவையா? வெங்காயம்!'

வள்ளலார்: 'தம்பி, கடவுள் இல்லை என்று சொல்லியதால் இப்பிரச்சனை தீர்ந்துவிட்டதா? எனது நோக்கும், உனது நோக்கும் ஒன்றுதான்.'

'எனக்கும் ஒருகாலத்தில் இந்துமதத்தின்பால் வைத்திருந்த நம்பிக்கை அசைக்கமுடியாமல் இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் விட்டு விட்டேன்.'

'சாதி, மதம், இனம், சமயம், சடங்கு இவற்றுக்குள் புகுத்தப்பட்ட இறைவனை அவற்றிற்கு அப்பால் எடுத்து வந்து, இவன் தான் "அருட்பெருஞ்ஜோதி" என்று உலகுக்கு காட்டினேன்.'

'இவருக்கு சாதி, மதம், சமயங்கள் இல்லை என்றும், எனவே இவரை வணங்கும் மக்களுக்கும் சாதி, சமயம் இல்லை என்று கூறினேன்.'

''கடவுளே இல்லை' என்று உன்போல் உன்போல் கூறவில்லையே? முள்ளை முள்ளால் தானே எடுக்கவேண்டும்?'

'இனி நீ கருப்பாடையை எடுத்துவிட்டு என்போல் வெள்ளாடையை உடுத்திக்கொள்'

பெரியார்: 'நானா? வெள்ளாடையா? வெங்காயம்! உங்களது சன்மார்க்கத்தினால் மட்டும் இப்பிரச்சனை தீர்ந்தாவிட்டது? இன்றும் கும்பகோனம், தஞ்சாவூர் போன்ற கோயில்களில் சிக்கி இறந்தவர்கள் நமது திராவிட மக்களல்லவா?'

ஆரியர்கள் செய்யும் சூழ்ச்சிக்கு இனியும் எத்தனை பேர் கோயில்களில் சாகப்போகிறார்களோ? ஆமாம்... இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா? அதைச் சொல்லும் முதலில்...'

வள்ளலார்: 'ஆமாம், என்றால் நீ எப்படி? என்று கேட்பாய்? இல்லை, என்றால் நீ என்னையே கருப்பாடை அணிந்துக்கொள்ளச் சொல்வாய்!'

'இறைவன் நமது அறிவுக்கு அப்பாற்பட்டவன. இறைவன் இருப்பதை விஞ்ஞான முறைப்படி விளக்கவா முடியும்? அறிவு எங்கு முற்றுபெறுகிறதோ, அங்கு ஆன்மீக அன்பு எழுகிறது. அன்பால் கடவுளைக் காணமுடியுமே அன்றி அறிவால் அல்ல! அந்த அனுபவம் எப்படிப் பட்டதென்றால்...'

'ஒவ்வொருவரும் இறப்பது நிச்சயம். நமக்கு மரணம் என்றாவது வந்தே தீரும் என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது. என்றோ வரப்போவதை முன்பே இவன் எப்படி அதனை நிச்சயம் என்று கூறுகிறான்? மரணம் வராமலேயே இருந்துவிடலாமல்லவா? ஆனால், மரணம் நிச்சயம் வரும் என்றே அவன் நம்புகிறான்! ஏன்?'

'ஏனென்றால், அவனுடைய முப்பாட்டன் இறந்துவிட்டான், இன்று இல்லை. பாட்டன் இறந்துவிட்டான், இன்று இல்லை. தந்தையும் இறந்துவிட்டார், இன்று இல்லை. ஆகவே நானும் இறப்பேன், நாளை இருக்க மாட்டேன் என்று தமக்கு முன்னோர்களைக் காரணம் காட்டிக் கூறுகிறான்'

'ஆனால், இதை நீ உண்மை என்று ஒப்புக்கொள்ளவில்லையா?'

'ஏன், நீ அவனிடம் சென்று, உமது பகுத்தறிவினால், தம்பி, நீ கூறுவது தவறு, மரணம் மனிதர்களுக்கு இல்லை. மனித ஆற்றல் தான் உலகிலேயே சிறந்தது. நீ எப்படி உனது முன்னோர்களைக் காட்டி இவ்வாறு கூறலாம்? நீ என்றாவது இறந்து பார்த்திருக்கிறாயா? நீ இறந்ததை நீ பார்த்தால் தானே, நான் இறப்பேன் என்று கூற வேண்டும். என்று உன்னால் அவனிடம் கேள்வி கேட்க முடியுமா? முடியாது!'

'ஏனெனில் இறை அனுபவமும், மரண அனுபவமும் ஒருவனுக்கு ஏற்பட்டால் அவனால் அதனை வெளியில் கூறமுடியாமல் போகும்!'

'இப்பொழுது உன்வழியில் உன் கேள்விக்கு நான் கூறும் பதில், மரணம் தான் இறைவன். மரணம் இல்லை என்று கூறினால் இறைவனும் இல்லை. மரணம் - அதை நீ வென்றால்  இறைவனையே வென்று என்போல் அவனுடன் இரண்டறக் கலந்துவிடலாம்!'

பெரியார்: 'நீங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறதோ? தாங்கள் கட்டியுள்ள ஞானசபையை நானும் மும்முறை வலம் வந்து விழுந்து வணங்கியது உண்டு. அது கடவுள் உண்டு என்பதற்காக அன்று, உங்களது ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்காக நான் செய்த மரியாதி அது.'

'ஆனால் நீங்கள் இறைவனாகி விட்டதால் இந்தச் சமூகத்திற்கும், மக்களுக்கும் என்ன நன்மையைப் பெரிதாகச் செய்துவிட்டீர்கள்?'

'பசிப்பிணி தீரவேண்டுமென தருமச்சாலை தொடங்கினீர்கள். நீங்கள் ஏற்றி வைத்த அடுப்பு இன்னும் அணையாமல் இருக்கிறதேயொழிய, மேலும் அங்கு பிச்சைக் காரர்களல்லவா அதிகமாகி விட்டார்கள்!'

'எது எப்படியோ தற்போதய பிரச்சனை பிச்சைக்காரர்கள் அல்ல! நான் கடவுள் இல்லை என்று சொன்னதுபோல், இனி தலைவர்கள் பெயரும் இல்லை என்று எனது பெயரை எடுத்துவிட்டார்கள்! இதுதான் தற்போதய பிரச்சனை!' (பெரியார் போக்குவரத்துக் கழகம், என்று பல்வேறுபட்ட தலைவர்கள் பெயர் கொண்ட போக்குவரத்துக் கழங்களை அரசு நீக்கி, அதனை பொதுவாக "அரசு போக்குவரத்து கழகம்" என்று வழங்க ஆணையிட்டது)

வள்ளலார்: 'பிச்... பார்த்தீரா, கடவுள் இல்லை என்று சொன்ன உன்பெயரை மட்டுமா எடுத்தார்கள்? கடவுள் உண்டு என்று சொன்ன என் பெயரையும் எடுத்துவிட்டார்களே!'
("தென்னாற்காடு வள்ளலார்" மாவட்டம் என்பதனை "கடலூர்" மாவட்டம் என்று அரசு மாற்றிவிட்டது)

'மக்களுக்கு நாம் வெவ்வேறு வழியில் போராடியாவது நல்லதாகி விட்டது! கவலைப்படாதே... மக்கள் திருந்தி விட்டார்கள்!'

'இனி தலைவர்கள் பெயரை எடுத்தது போல் ஒவ்வொரு சாதி, மதம், இனம், சமயம் இவைகளையும் எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.'

பெரியார்:  'நாட்டு மக்களைப் பற்றிப் பேசியதால் இருட்டிவிட்டதுகூடத் தெரியவில்லை. இந்தாருங்கள் இந்த மெழுகு வத்தியை ஏற்றுங்களேன்!'

வள்ளலார்: 'இல்லை... வெளிச்சத்தின் பொருட்டு ஒரு மெழுகுவத்தி அழுவதை என்னால் சகிக்க முடியாது!'

'இதோ அகல் விளக்கை ஏற்றுகிறேன்."

பெரியார்: 'ஓ... இந்த கருப்புச் சட்டையால் உங்களை திருத்தவே முடியாது... சரி, நான் விடை பெறுகிறேன்...'

'கடவுள் இல்லை, கடவுள் இல்லை...'

வள்ளலார்: 'ஆகட்டும், அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி...'

 




Friday, May 24, 2013

முத்தேகபதி மாலை


அருட்பெருஞ்ஜொதி

முத்தேகபதி மாலை

(சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் என்ற முத்தேகத்தை பெற்ற வள்ளலாரை "முத்தேகபதி" அதாவது முத்தேகத்தைப் பெற்ற இறைவன் என்று பாடியது)

(பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)




சித்தெல்லாம் விளங்கிச் சித்தி வளாகத்திலே
         சிற்றெரும்பும் காணாத
    சர்க்கரை இனிப்பாய் மதங்களெல்லாம் பேசாத 
         சொற்களெல்லாம் பேசியே
பித்தெல்லாம் போக்கி சாதிஇன மதங்களெல்லாம்
         புறமொழிய ஓர்சிறந்த    
    புனிதசுத்த சன்மார்க்கம் சிறந்தோங்க கொடிகட்டி
         பட்டொளிவீசி பறந்ததே
அத்தெல்லாம் நீக்கிஆசார சங்கற்ப விகற்பங்களை  
         அழித்துஇனியும் வீண்காலம்    
    ஆகக்கழிக்காமல் நம்நிலைதெய்வ நிலையறிய விசாரணை
         அளித்ததொரு தெய்வத்திருவே
சத்தெல்லாம்     வித்தாக்கி மூடஅறிவை மண்ணாக்கி
         சாலைசங்களை நீராக்கி
    சகஜப்பழக்கத்தை விளைவித்து எல்லா உயிருள்ளும்
         சங்கமித்தஎந்தை முத்தேகபதியே


உச்சிமுதல் மேனியை மறைத்து நின்அடிகளின்
         உண்மையெலாம் தெரிய
    உருமறைத்து அடிகாட்டியே நடக்கும் திருவே
         உறவாய் வருபவனே
இச்சையின்றி பழக பலவண்ண ஆடைகள்
         இருக்க வெள்ளாடையை
    அணிந்து புறட்சி செய்து உருவாய்
         அருவாய் வருபவனே
பிச்சை எடுக்கவும் கைகளை வீசிநடக்கவும்
         பயந்து திருக்கரங்களை
    பார்ப்பவர்கள் வியக்க கட்டி உலாவியே
         பணிவாய் வருபவனே
அச்சில்நின்று நடுவை நாடி அங்கோர்
         அசையும் நாடியறிந்தங்கே
    ஆடாதே வேறொன்றை நாடாதே சற்றும்     
         அசையாஎந்தை முத்தேகபதியே


உயிருள்ள கல்வியாம் சாகாக்கல்வி பயின்று
         உயிரற்ற கல்வியாம்
    உலகியல் கல்வியை வெறுத்து பட்டம்
         உற்றசாகா அருளாளனே
தாயினும் ஓங்கிய தந்தை மொழியாம்
         தரணியில் எம்மொழிக்கும்
    தருகின்ற கருணை மொழியாம் நமது
         தமிழ்தந்த தமிழனே
ஆயினும் உலகியலரை வேறாக நினையாது
         ஆராகயிருப்பினும் நீவிர்
    ஆன்மநேய உறவன்றோ என்று பொதுவில்
         ஆடுகின்ற அண்ணலே
பாயிலே பஞ்சனையிலே படுத்தாலும் தூங்குமோ
         பாடையும் சுமக்குமோ
    பாழுமிந்த உடம்பையென்றே தூங்காமல் தூங்கிசுகம்
         பெரும்எந்தை முத்தேகபதியே



முன்னம் இருந்த மார்க்கம்பல இறையறியா
         முழங்கும் மதங்கள்பல
    மண்ணில் நீவந்த சமயத்தை தழுவி
         மயங்கிப்பாடிய பாடல்பல
இன்னும் கண்களால் வெறித்தும் மூச்சுகளை
         இழுத்தும் பிடித்தும்
    இசைத்த சாதனைகள் பலகன்னியர் சிலர்
         இடைகாட்டி முகம்காட்டி
தன்முலைக் காட்டியும் கருங்குழியில் செங்கோல்
         தாழாது புலனைந்தையும்
    தாளிட்டு இவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு
         தங்கமேஅணை யர்சுத்த
சன்மார்க்கச் சத்தியச் சங்கத்தை அனைத்திற்கும்
         சமரசமாய் ஏற்படுத்தி
    சாகாவரத்தை தயவினில்பெற்ற முதல்சுத்த சன்மார்க்கி
         சாமியேஎந்தை முத்தேகபதியே


தயவை ஜீவர்களிடம் கொடுத்ததில் கிடைக்கும்
         தாராள இலாபமெனும்
    தாழிடா அன்பை இறைவனிடம் கொடுத்ததில்
         தவறாது அருளைப்பெற்று
பயத்தை பூஜ்ஜியமாக்கி முச்சுடர்களையும் கடந்து
         பார்த்து திகைக்கையில்
    பம்பரமாய் சுற்றிவீழ இருக்கையில் உம்மை
         பிடித்து நிறுத்தி
காயத்துள் ஆகாயத்தில் கலந்தவன் யாரோ
         கலந்தப்பின் நீயாரோ
    கற்பூர மணம் மணக்கிறதுன் உடம்பில்
         காலன் கணக்கும்
சாயம் வெளுக்க பண்ணிய தவம்பலிக்க
         சுடுவதும் புதைப்பதும்
    சேர்ந்த உலகியல் சோதனையை வென்ற
         சோதியேஎந்தை முத்தேகபதியே

பாவிப்பயல் பசி வந்திட்டால் வயிறு
         பகீரென்று எரிகின்றதே
    புத்தி கெடுகின்றதே மனம் சிதறுகின்றதே
         பற்கள் தளருகின்றதே
ஆவிப்போக துடிக்கின்றதே கைகால்கள் சோர்கின்றதே
         அறிவு மயங்குகின்றதே
    அகங்காரம் அழிகின்றதே சித்தம் கலங்குகின்றதே
         இதயம் வேகின்றதே
அவிழ்த்து விட்டநெல்லி மூட்டைப்போல கரணங்கள்
         அடங்க மறுக்கின்றதே
    ஈரல் கரைகின்றதே மேனி கருகுகின்றதே
         இளைத்த மனிதர்களுக்கென்று
புவியிலே ஆகாரம் கொடுத்து பெருந்துன்பம்
         போக்கதருமச் சாலையிலே
    பசிக்கு உணவு அளிக்கின்ற உயிரான
         பதமேஎந்தை முத்தேகபதியே

உலகியலர்கள் எல்லாம் சமரசாமாய் வணங்க
         உண்மைக் கடவுள்
    ஒருவரே என்ற ஞானத்துடன் வணங்க
         உள்ளுணர்ந்து எழுப்பிய
அலகில் பேரொளியாய் விளங்கும் தனிநிலை
         அருட்பெருஞ் ஜோதி
    ஆண்டவரை அவர்விருப்படி எழுந்தருளச் செய்து
         அளவுகடந்த நெடுங்காலம்
பலஅற்புதச் சித்திகளெல்லாம் விளங்க சிற்சபையில்
         பொற்சபையில் புகுந்தருளச்செய்து
    புன்னியனை பொன் வண்ணவனை கண்ணவனை
         பொதுவில் நடமாட
வலமுறு சுத்தசன்மார்க்க ஞானசபையில் எல்லாம்
         வல்லவரை ஓரிறையானை
    வரமெலாம் தரும்படி செய்வித்து அருளிய
         வல்லாஎந்தை முத்தேகபதியே

செத்தாரை எழுப்பும் வல்லமை உடையோனே
         சேர்ந்தாரை நீடுவாழ
    சாகாவரம் அளிப்போனே புலால் உண்போரை
         சாராதே அவர்களை
சுத்தசன்மார்க்கம் புற இனத்தான் என்கிறதே
         சர்வசித்தி வல்லமை
    சார்ந்த இறைவன் உயிர்பலியும் கேட்குமோ
         சிந்திப்பீர் உலகீரே
எத்தனுக்கு எத்தனும் சித்தனுக்கு சித்தனும்
         என்றும் இறுக்க
    எங்கு கண்டோம் இறக்கவே காண்கிறோம்
         அன்று பூட்டிய
வித்தகன் வல்வனின் பூட்டை உடைத்தோனே
         வந்தவன் சென்றவன்
    வாழ்பவன் கணக்கறிந்து மூடப் பழக்கங்களை
         வென்றஎந்தை முத்தேகபதியே

அண்டங்கள் விரிந்துக் கொண்டே இருக்க
         அதைவிடப் பிண்டங்கள்
    அகண்ட விசாலாமுடையது என்றே பிண்டத்தில்
         ஆடுகின்ற தேவனே
கண்களை சிலர் அண்டமாகக் கொண்டு காணவிழைய    
         கடிந்து தயவில்
    கரணங்களும் செயல்படாது புருவ மத்தியில்
         கலையான கண்ணனை
ஆண்டுபல கழியாமல் சடுதியில் உணர
         அழகான உபாயம்
    அளித்தும் பிண்டங்கள் இறந்தால் சுடாமல்
         ஆழ்குழியில் புதைக்க
மண்ணில்மீள அவைகள் எழுந்து வரக்காண்போம்
         மென்றும் அருளை
    மகிழ்தும் நினைந்தும் உணர்ந்தும் நெகிழ்ந்தும்
         மாடியஎந்தை முத்தேகபதியே

அருளே பொருளலல்லாது இவ்வுலகில் வேறு
         ஒன்றையும் பொருளாக
    ஆசையுடன் பார்க்கக் கூடாது என்றே
         உரைத்த சத்தியனே
குருவும் தெய்வமும் ஒன்றாகக் கண்டு
         கற்றதெலாம் அவனிடமே
    குறையா செல்வம் பெற்றதெலாம் அவனிடமே
         களித்ததெலாம் அவனிடமே
மருவும் உலகியலரை நம்பாமல் அம்பலத்திலே
         மாடத்தில் ஓங்கிய
    மாமலையனை அன்பெனும் பிடியுனுள் பிடித்து
         மாயைவென்ற மன்னா
திருவும் உனதுசாகாக் கல்வியும் கற்பக
         தருவாய் என்றும்
    தழைத்தோங்க அருளும் எங்கள் சித்திவளாகத்
         தந்தையேஎந்தை முத்தேகபதியே