Thursday, April 14, 2016

இராமலிங்க அந்தாதி - 10



அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  

                     இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா

ஆவதும் அழிவதும் ஆருயிர்ப் பாவங்கள்
போவதும் ஜோதி பிரகாசத்தாலே - ஈவதும்
ஈட்டியப் பொருள் ஆவதும் ராமலிங்கமே
ஆட்டு விக்கும் ஆடலால்.

ஆடலால் ஆருயிரை அசைவிக்க ஜோதியின்
கூடலால் உயிரின்பம் காட்டுவிக்க - தேடலால்
சாகாக் கல்வியும் சாற்றுவிக்க ராமலிங்கமே
ஏகாந்தத்தி லெனை ஏற்றினாய்.

ஏற்றிய தீபத்திலே உள்ளொளி உயிராகி
கூற்றத்தை உதைக்கும் கனலாகி - போற்றி
தொழ வைக்கும் பிரகாசமாகி ராமலிங்கமே
அழகாகி உயிராகி உள்ளான்.

உள்ளத்தில் உணர்வாகி உயிரினில் ஒளியாகி
கொள்ளை கொண்ட கள்வனாகி - வள்ளலே
என்பெயராகி யாரும் இன்பமுற ராமலிங்கமே
அன்புருவம் எனக் களித்தாய்.

அளித்த முத்தேகத்தால் ஐந்தொழில் முதல்
வெளியெலாம் புகுந்து விளங்கும் - எளிய
அரியப் பணிகளை அளித்த ராமலிங்கமே
துரியாதீத அனுபவவா தீதமிது.

அதீதமாய் அதற்கும் அதீதமாய் சித்தாந்தஅந்
தாதீத சுத்தசன்மார்க்க அறிவினை - ஆதீன
மாக அளித்தவளரொளி மணியே ராமலிங்கமே 
ஏக இறைவனென உலகு.

உலகெலாம் உணர்ந்து ஓதி அறிந்தவன்
பலமெலாம் பாடிப் பெற்றவன் - நலம்
நாடுவோர்க்கு நடு நாயகன் ராமலிங்கமே
பாடுவோர்க்கு பரம் பொருள்.

பொருளாவது ஏதுமில்லை பிரமமும் அதன்
அருளுமன்றி ஆசை ஒன்றில்லை - இருளும்
பகலு மற்றஇன்பப் பரவெளியில் ராமலிங்கமே
அகலும் தீபமுமாய் எரிவேன்.

எரிகின்ற ஜோதியின் அருகிலே விளங்கும்
அரிய அருட்பெருஞ் ஜோதியே - சரியை
கிரியை மார்க்கங் காணாது ராமலிங்கமே
உரிமை என்று உயர்ந்தேன்.

உயர்மலைத் தேனாகி அதிலுறும் சுவையாகி
அயர்ந்து உண்ணும் அனுபவமாகி - இயங்கி
என்னுள்ளே பிறிவிலா தமர்ந்த ராமலிங்கமே
உன்பெருங் கருணை உற்றேன்.                                910

உற்றமொழி உரைத்து அற்றமொழி மாய்த்து
பெற்றமொழியாம் தமிழைப் போற்றி - கற்ற
மொழி சாகாக்கல்வி மொழிந்த ராமலிங்கமே
அழிவில்லா ஆக்கை எனக்களி.

எனக்கே உரிமையாகி என்னுடல் ஆவி
தனமுமாகி உள்ளந் தழுவும் - மனமாகி
எனதுயிர் பசிக்கு உணவாகி ராமலிங்கமே
கனவாகி நனவாகிக் களித்தேன்.

களித்த நாளெல்லாம் கருணையே நின்கரம்
அளிக்கப் பெற்று ஆனந்தித்தேன் - துளிர்த்த
சிறுவொளி பேரொளி சக்தியாக ராமலிங்கமே
பொறுத்திட மாட்டேன் பொருந்திடு.

பொருத்தம் கண்டேன் புண்ணியா நின்பெருங்
கருணை பெற்றுக் கொண்டேன் - அருமை
அருட் பெருஞ்ஜோதி ஆடலில் ராமலிங்கமே
இருமை யற்று ஒன்றினேன்.

ஒன்றென உரைப்பேன் உயிரெல்லாம் எனது
அன்பென உரைப்பேன் உலகை - சன்மார்க்க
நிலை நிறுத்திநீதி நாட்டுவேன் ராமலிங்கமே
புலை கொலை போக்கிடுவேன்.

போக்கிடம் அறிந்தேன் புகலிடமும் அறிந்தேன்
ஆக்கையில் கூடுமிடம் அறிந்தேன் - சாக்காடு
வாராவழி அறிந்தேன் வள்ளல் ராமலிங்கமே
பேரானந்த நிலைப் பெற்றேன்.

பெற்ற சுகந்தனை பேரருள் நிலைதனை
கற்ற கல்விதனைக் கூறுவேன் - உற்ற
கலவிச் சுகம் கூறக்கோடியே ராமலிங்கமே
உலகென உயிர் இனிக்கும்.

இனியஎன் இசையே இசைக்கேற்றப் பாட்டே
கனிந்த மாங்கனியே கற்கண்டே - மனிதப்
பிறவியின் பெரும் பயனே ராமலிங்கமே
உறவென உள்ளம் உருகும்.

உருகும் உணர்வில் உயிரும் கரைந்துபே
ரருளால் உடலும் அருகிடுமே - விருந்து
போற்றும் உலகீர் பாரீர் ராமலிங்கமே
ஆற்றும் சித் தாடலை.

ஆடலரசன் யாரென அறியீர் பாடியேக்
கூடவரும் கூத்தனைக் காணீர் - மாட
மாளிகை சுகமும் மதியீர் ராமலிங்கமே
அளித்த சன்மார்க்கமும் அறியீர்.                               920

அறிவுக்கு அறிவாகி ஆன்மத்தின் விழிப்பாகி
பிறிவுறா உயிராகிப் புணர்ந்து - நெறிகாட்டி
நீடுவாழவே நல்நீதி நாட்டிய ராமலிங்கமே
கூடு சொந்தமெனக் காட்டு.

காட்டிலே இறந்தோர் கருணைப் பெற்று
நாட்டிலே எழுவார் நாளை - பாட்டிலே
கூறிய தெல்லாம் காட்டிட ராமலிங்கமே
மாறிட நானும் முயன்றேன்.

முயன்று அகத்தில் முகநடு சபையில்
பயந்தே நடந்துப் பார்த்தேன் - தயங்கி
நானும் இருக்கை நீட்டி ராமலிங்கமே
வானுலகம் பற்ற வந்தேன்.

வந்ததே சுத்தசன்மார்க்க வசந்த காலம்
சந்தை சடங்குகள் சென்றதே - விந்தை
உலகியல் மூடம் அழிந்தன ராமலிங்கமே
கலங்கின மதக் கூட்டங்கள்.

கூட்டங் கூடுவதால் கடவுள் அருளை
ஈட்டலாம் என்ப திழுக்கு - ஆட்டமும்
உலகியல் மகிழ்வு மின்றி ராமலிங்கமே
இலகுமைந் தொழி லடைந்தான்.

அடைந்த அனுபவம் ஆனந்த சொரூபம்
கடைந்த அமுதங் குடித்துநான் - படை
எடுத்து எமனை அழித்து ராமலிங்கமே
அடுத்து என்ன என்றேன்.

என்றும் நிலையாகி என்னுயிர்க் குயிராகி
சன்மார்க்க பொருளாகி சித்தாகி - இன்ப
ஊற்றாகி என்னுள் உறையும் ராமலிங்கமே
நேற்றாகி இன்றாகி நாளையானான்.

நாளையெனும் மயக்கத்தில் நாளும் ஓடும்
விளையாட்டுப் பிள்ளையாய் விதி - மூளை
யுடன் செயல்பட்டு உருண்டிட ராமலிங்கமே
கடங்கார தேகங் குலையும்.

குலைந்த தேகமும் கலையாய் மீண்டும்
மலையென எழுந்து மீளும் - சிலை
வடித்த மதங்களின் விலை ராமலிங்கமே
படித்தப் பாட்டால் படிந்தது.

படிந்தன கொலைபுலை பாரினை விட்டு
நொடிந்தன சமயமத நிலையும் - மடிந்தன
சுத்த சன்மார்க்கமே செழிக்க ராமலிங்கமே
வித்தகம் செய்வான் விரைந்து.                                930

விரைந்து அழைக்கிறேன் வம்மின் உலகீர்
கரைவின் மாமாயைக் கரும்பெருந் - திரை
முதல் கலப்புத்திரை முடிய ராமலிங்கமே
இதமாய் நீக்கும் இனியன்.

இனியனே என்னுயிர் இதயனே பெருவெளித்
தனிமுதல் தனித்தத் தலைவனே - மேனியை
பொய்யெனப் பாடாப் பெரியோனே ராமலிங்கமே
மெய்யெனப் பாடி மீண்டான்.

மீண்டும் மீண்டும் மனமது மலத்தினை
உண்டு களிக்க உதவலாமா - வண்ண
உலக மாயையை உடைத்து ராமலிங்கமே
நலமென்று அவனை நாடு.

நாடும்வீடும் கொண்ட நானிலத்தீர் உமது
கூடுவிட்டு போனால் கட்டிய - வீடுஎன
எங்கு செல்வீர்வழி அறியீர் ராமலிங்கமே
இங்கு சொந்தவீடு அளிப்பான்.

அளிக்கின்றான் என்னரசன் அழியா தேகமதில்
களிக்கின்றான் என் கண்ணன் - குளிக்கும்
கண்களி ரண்டும் கண்ணீரால் ராமலிங்கமே
உண்டாகும் உனதுபே ரருள்.

பேரருளை நினைப்பனோ பெருங் கருணை
இரப்பனோ பெருஞ்ஜோதி ஆவனோ - மர
மென இருப்பனோ அறியேன் ராமலிங்கமே
தினமும் உனையே தொழுவேன்.

தொழுவதே எனதுத் தொழிலாக விழுந்து
அழுவதே எனதுவழி யாக - எழுதிப்பாடித்
துதிப்பதே எனது துணையாக ராமலிங்கமே
மதிப்படி விதிசெல்ல மிதி.

மிதித்திடு மதத்தை மதியோடு மக்களை
கதிபெற ஓர்நிலையாய்க் கூட்டிடு - நதி
என்றால் நீர்வழிந் ஓடும் ராமலிங்கமே
என்றால் வினை ஓடும்.

ஓடுஒட்டா புளியும் உயிர்ஒட்டா உடலும்
காடு புகுவதுகாலன் கணக்கு - பாடுமிந்தத்
திருவருளைப் பாடித் தொழ ராமலிங்கமே
அருள் தருவானிது உண்மை.

உண்மை அறியும் உணர்வு இல்லையே
தண்ணீர் எனகானல் தனை - எண்ணியே
இறந்தும் பிறந்தும் இருக்க ராமலிங்கமே
சிறந்த மார்க்கம் சொன்னான்.                                  940

சொன்னதில் சிறிதேனும் சாய்ந்து நடவாது
முன்னதில் முயங்கி மாள்கிறீர் - என்னது
சாகா சன்மார்க்க சாதனையே ராமலிங்கமே
ஆகாசமென என்னை ஆக்கு.

ஆக்கிய பஞ்சபூத ஆக்கையில் இடகாலை
தூக்கியே சினத்தை தகர்த்து - ஆக்குவாய்
சுவர்ண தேகச் சித்தியை ராமலிங்கமே
அவர்க்கும் உண்டு அடக்கம்.

அடக்கம் செய்வதே அமரருள் உய்விக்கும்
மடமாய் தகனம்செய்தல் மாபாவம் - திட
முற இறந்தவர் மீண்டும் ராமலிங்கமே
அறமுடன் எழுவார் இன்று.

இன்று வருவாயென என்றும் தனித்திருக்க
கன்று தனித்திருக்கக் காணாது - மன்றில்
பாலூட்டியத் தாய்ப் பசுவாய் ராமலிங்கமே
கால்பிடித்து வந்த கால்.

காலிலே வந்துசென்று காலிலே உயிரை
பாலிலே நெய்யெனப் புகுத்தி - ஆலிலைக்
காற்றாய் சக்தியினைக் காட்டி ராமலிங்கமே
நாற்ற உடம்பை நீட்டினாய்.

நீட்டிலேன் புறானக்கதை நாட்டி மாலை
சூட்டிலேன் சத்திய சன்மார்க்கம் - ஊட்டி
உன்னை மீட்கவே அந்த ராமலிங்கமே
என்னை அனுப்பினா னிங்கு.

இங்குநான் உறும்நிலை என்னவோ அது
அங்குவான் உறும்நிலை ஆகும் - எங்கு
என்று என்னை அண்டாது ராமலிங்கமே
நன்று என்று நினைவீர்.

நினைவும் அவனே நிமித்தமும் அவனே
எனை அடுத்தவனும் அவனே - அனைத்
துயிரும் அவனேஎன உருக ராமலிங்கமே
பயிற்று விக்கும் பாட்டிது.

பாட்டிலே கலந்தான் பாடுபட்டு அடைந்தக்
கூட்டிலே இரண்டறக் கலந்தான் - நாட்டிலே
நன்மார்க்கர் நாவிலே நுழைந்து ராமலிங்கமே
சன் மார்க்கம் சொன்னான்.

சொன்ன சொல்லிலே சுகங்கண்டு உயர்
அன்ன தானத்தில் அகங்கண்டு - ஆன்ம
அறிவிலே பிரமம் அறிந்து ராமலிங்கமே
குறித்தக் கல்வி கற்றேன்.                                     950

கற்பூர மணமிந்த கழுதை அறியாது
அற்ப அறிவால் அழிவனோ - குற்ற
முடை யோருக்கு முற்ற ராமலிங்கமே
தடையற்ற தயவைத் தா.

தாஎன்றால் தருகின்ற திருவருள் கடலே
வாஎன்றால் வந்து விளங்கி - நானென்று
என்னுள் நடிக்கும் எந்தை ராமலிங்கமே
உன்னுள் புகுவதே உறவு.

உறவு ஆயிரம் இருந்தாலும் உடல்
இறந்தால் உயிரும் ஏகும் - துறவு
பூண்டு உனைப் பற்ற ராமலிங்கமே
வேண்டு மெனக்கு வரம்.

வரம் அளிப்பாய் வெள்ளாடைக் கட்டி
கரம் இணைத்து காருண்ய - உரமிட்டு
கண்களில் கதிர்நலங் காண ராமலிங்கமே
எண்திசை உயிரும் எனதாக.

எனக்குள் உயிர்நீ எனக்குள் மனம்நீ
எனக்குள் இறைநீ அக - இனத்துள்
அருட் பெருஞ் ஜோதிநீ ராமலிங்கமே
பருவுடல் இறவாப் புகழ்நீ.

புகழ்வதே எனக்குப் புண்ணியம் உன்னை
அகழ்வதால் இல்லை அன்னியம் - சகத்
துயி ரெல்லாம் உன்னிடம் ராமலிங்கமே
பயில்வது சாகாப் புத்தகம்.

புத்தக அறிவோடு பித்தனாகியே நானும்
சித்தனாகிச் சாகா சிரங்காண - நித்தமும்
மறவாது உனையே மேவ ராமலிங்கமே
திறந்து காட்டியதே திரை.

திரையற்று ஜோதியாய் திசை யெட்டும்
கரையற்று எங்குமாய்க் கண்டு - உரைத்
தேன் உலகீர்நீர் தயவோடு ராமலிங்கமே
வான் பொருளென வணங்குவீர்.

வணங்கு வாரில்லை வாழ்த்து வாரில்லை
குணங்கெட்டு சாதிமதக் குழியில் - மணம்
முடித்து பணம் மடிப்பார் ராமலிங்கமே
கடிந்து ரைத்தும் கருதார்.

கருதாமல் செய்பிழையால் காலன் ஓடோடி
வருவானோ அய்யோ வகையறியேன் - கரு
வளர்த்த என்தாயென வந்து ராமலிங்கமே
களக்கமற என்னுயிர் கொள்.                                   960

கொள்ளை கொண்டுஎனக் கட்டி யணைத்து
உள்ளம் கவர்ந்த உத்தமனே - பள்ளம்
மேடறியா இடத்தில் மூழ்கி ராமலிங்கமே
ஊடலின்று உறவு உற்றேன்.

உற்ற உலகினில் உயிர் பிரியாததொரு
பெற்ற உடலில் புகுந்தான் - சிற்றம்
பலச் சித்தினைப் பூட்டி ராமலிங்கமே
வலஞ் சென்றுநடு வந்தான்.

வந்தது நற்றோன்றல் வருடம் நல்லதே
தந்து சன்மார்க்கம் தழைக்கும் - இந்த
பிரபவ முதல் பாரெங்கும் ராமலிங்கமே
நரகரும் நல்லதே நாடுவர்.

நாடுக சமநீதி நால்வருணம் உயர்தோன்றல்
சாடுக எவ்வுயிரும் சரிசமமெனப் - பாடுக
விபவ ஆண்டில் வள்ளல் ராமலிங்கமே
அபயம் என்று ஆடுக.

ஆடுகின்ற உள்ளொளி எல்லாம் வெள்ளொளி
சூடுகண்டு சித்தெல்லாம் சூழும் - கூடுநின்று
சுக்ல வருடமதில் சுகம்பெறவே ராமலிங்கமே
எக்கமும் மறவேன் உனை.

உனையே நினைக்கும் உத்தம பேருவகை
தனைத் தந்தருளும் தாமரையே - எனை
பிரமோதூத வருடம் பார்த்து ராமலிங்கமே
கரம் பிடிக்கக் கண்டேன்.

கண்னென மக்கட்செல்வம் காணும் நல்
எண்ணம் கைகூடும் ஆண்டு - மண்ணில்
பிரசோற் பத்தியில் பிறக்க ராமலிங்கமே
பிரம்ம மென பார்ப்பான்.

பாரிலே அயல்முனியால் பயிர் செழித்து
காரிலே மழையாய்க் கூட்டிடும் - ஊரிலே
ஆங்கீரச ஆண்டின் அரசனாய் ராமலிங்கமே
தூங்காமல் காக்க துயரில்லை.

துயரற்று ஓங்கும் திருமுகம் ஆண்டில்
பயமின்றி எதுவும் பார்ப்பாய் - தயவு
ஸ்ரீமுக வருடம் ஸ்ரீலஸ்ரீ ராமலிங்கமே
பூமுகப் புன்னகை புரிவான்.

புரிகின்ற தோற்றம் பைந்தமிழ் ஏட்டால்
எரியுமே சாதிமத ஆக்கம் - உரிமையாய்
பவ ஆண்டில் பலம்காண ராமலிங்கமே
தவமிருக்க வரும் தயவு.                                      970

தயவு பிறந்தெங்கும் தருமம் ஓங்கி
நயந்த இளமையே நீளும் - உயரும்
யுவ வருடம் யாவரும் ராமலிங்கமே
நவநிலை அடையும் நாள்.

நாளும் மாழையால் நானிலம் பொங்கி
ஆளும் பொன்னகை ஆண்டு - நீளும்
தாது வருடம் தடையேது ராமலிங்கமே
மாதுவும் சாதுவும் மகிழ்வர்.

மகிழும் உயிர்களில் முட்டி நின்றாங்கே
அகிலாய் குழைவது ஈச்சுரம் - முகிலாய்
ஈஸ்வர ஆண்டை இயக்கி ராமலிங்கமே
ஆஸ்தான மென ஆள்வான்.

ஆள்பவன் அருளாளே ஓங்குமே கூலவளம்
தாள்எனப் பணமும் திகட்டும் - தூள்என
வெகுதானிய ஆண்டு விரவி ராமலிங்கமே
பகுத்தறிவு விளங்கும் பார்.

பார்முழுதும் சன்மார்க்கம் பரவி முன்மை
கூர்பெற்று விளங்கக் காண்பாய் - சீர்பெறு
பிரமாதி வருடம் பகலவனாய் ராமலிங்கமே
சிரமுள் இருக்க சிந்தைசெய்.

சிந்தைசெய் நேர்நிரல் சமுதாயக் கூட்டம்
விந்தையாய் வரும் வருடம் - தந்தையாம்
விக்கிரம ஆண்டில் விழித்து ராமலிங்கமே
அக்கிரகம் ஒழிப்பான் இங்கு.

இங்கு விளைபயன் இன்றி தர்மமிட்டால்
எங்குமாய் விளங்கும் ஏற்றங்கூடும் - தங்க
விஷு ஆண்டில் வளரும் ராமலிங்கமே
அசீதளம் மணக்கும் ஆக்கை.

ஆக்கை ஒளிபெற்று ஓவியக்கதிர் நலத்
தாக்கம் சூழ்ந்து துய்க்கும் - காக்கும்
சத்தியபானு வருடம் சுகமே ராமலிங்கமே      
சுத்த சன்மார்க்கம் சூழும்.

சூழும் நற்கதிரால் சாய்ந்து இருளுலகம்
வீழும் நோயற்று வரும்பிறவி - ஏழும்
சுபானு ஆண்டில் சீர்பெறும் ராமலிங்கமே
உபாயம் ஆவான் உண்மை.

உண்மை விளங்கி அன்புத் தாங்கெழில்
எண்ண மோங்கி ஆடிடும் - வண்ண
தாரண வருட தயவால் ராமலிங்கமே
ஆரணமாம் இந்த ஆண்டில்.                                   980

ஆண்ட அனுபவ மளித்து நிலவரையன்
தீண்டும் சுகத்தையும் தந்திடும் - நீண்டு
பார்த்திப வருடம் பார்க்கும் ராமலிங்கமே
ஓர்இறைவ னென்ற ஒருமை.

ஒருமை நினைவோடு ஒன்ற விரிமாண்புத்
திருஓங்கி அவன் தாள்காண்க - கருணை
விய ஆண்டில் வன்புலாலை ராமலிங்கமே
மயமாகி விடுதல் மாண்பு.

மாண் புடையோரின் முற்றறிவால் இனி
வீண் போகாத வழிச்செல்வர் - மீண்டும்
சர்வசித்து ஆண்டில் சித்தன் ராமலிங்கமே 
அர்த்த வடிவாகி அமர்வான்.

அமர்ந்து முழுநிறைவு அளித்து உடலில்
எமனை விரட்டும் ஆண்டிது - நமது
சர்வதாரி வருட சிற்ஜோதி ராமலிங்கமே
சொர்ண சித்தி சூட்டுவான்.

சூட்டும் முத்தேக சாதனையில் தீர்பகை
ஓட்டி இரண்டற ஆக்குமாண்டு - கூட்டு
விரோதி ஆண்டில் வந்து ராமலிங்கமே
பரோப காரம் புரிவான்.

புரிந்து வளமாற்றம் பயிற்றுவித்து நம்மை
சரிநிகராக்கி ஓங்கச் செய்யுமாண்டு - உரிய
விக்ருதி வருடத்தில் விமலன் ராமலிங்கமே
சக்தி ஜோதியாய் சாதிப்பான்.

சாதியும் மதமும் செய்நேர்த்திக் கண்டு
பீதியடைந்து ஒழியும் பார் - போதிக்கும்
கர ஆண்டில் கருணைமிகு ராமலிங்கமே
இரக்க முகமாகி இயங்குவான்.

இயங்கி நற்குழவியே உலகில் பெருக்கி
மயக்கம் போக்கும் மருந்தை - நயந்து
நந்தன வருடத்தில் நீட்டி ராமலிங்கமே
வந்தனம் சொல்லி வருவான்.

வருகின்ற நல் வாழ்க்கையில் உயர்வாகை
தருவித்து என்றும் துணையாகி - அருகில்
விஜய வருட வெற்றியாய் ராமலிங்கமே
பீஜமகா மந்திரம் பொழிவான்.

பொழிகின்ற கார்போல பெறுவாய் வாகை
அழிவில்லை இனி ஆக்கமே - விழியாம்
ஜய வருடத்தில் ஜோதியாகி ராமலிங்கமே
உயர்ந்து உள்ளம் உறுவான்.                                   990

உறுகின்ற காதன்மை அவன் அடியில்
நிறுத்தும் கலையே நிர்குணம் - அறும்
மன்மத வருடம் மருவி ராமலிங்கமே
இன்பம் என்று இரு.

இருமுகமும் வெம்முக மாகிக் கலந்து
ஒரு முகத்தில் ஒளிர்ந்து - அருவாகும்
துன்முகி வருடந் தாங்கி ராமலிங்கமே
அன்பு முகமாகி அருள்.

அருளே பொருளாகி அணியும் பொற்றடை
வருவிக்கும் வருடம் வந்தது - குருவாய்
ஹேவிளம்பி ஆண்டில் ஆதி  ராமலிங்கமே
கூவி வருவானெனக் கூறு.

கூறுஞ் சன்மார்க்கங் கேட்டு அட்டி
நாறுங் காயம் நீளும்இனி - மாறும்
விளம்பி ஆண்டு வர ராமலிங்கமே
இளமை தருவான் இங்கு.

இங்கு எழில்மாறல் ஏடுகள் சொன்ன
அங்கக் கடவுள் எல்லாம் - மங்கியே
விகாரி ஆண்டில் வீழ ராமலிங்கமே
மகா மந்திர மணியாவான்.

மணி ஓசையால் மனம் வீறியெழுந்து
அணி பெற்று ஆன்மஅறிவுப் - பணியை
சார்வரி வருடம் செய்ய ராமலிங்கமே
ஓர்அருவாக உள் இருப்பான்.

இருக்கும் கீழறை உறக்கங் கலைந்து
உருவாய் இறந்தவர் எழும் - மருந்து
பிலவ ஆண்டில் பார்க்க ராமலிங்கமே
நலமாய் ஐந்தொழில் நாட்டுவான்.

நாட்டிய நற்செய்கை நன் மார்க்கம்
ஊட்டி உலகெலாம் உயிரை - ஆட்டி
சுபகிருது வருட சுகமாய் ராமலிங்கமே
அபயமாகி சுற்றும் உலகம்.

உலகம் மங்கலம் உறவே சாதிமத
கலகம் ஒழியக் காணும் - திலகமே
சோபகிருது ஆண்டு சாது ராமலிங்கமே
ஆபத்து நீக்கி ஆள்வான்.

ஆளும் அருளால் அழியும் பகைக்கேடு
நாளும் நன்மையே நினைக்க - நீளும்
குரோதி ஆண்டில் கூடி ராமலிங்கமே
விரோதி யகற்ற வருவான்.                                    1000



(இராமலிங்க அந்தாதி - தொடரும்)