Sunday, June 16, 2013

வட்டி வாங்குவது சரியா?


வட்டி வாங்குவது சரியா?

நண்பர்களே! வணக்கம்...

நாம் இந்தப் பதிவில் வட்டி வாங்கி பொருள் ஈட்டுதல் என்பது சரியான நேர்வழிப் பாதையா? அல்லது பாவப்பட்ட தொழிலா? என்பதனை சற்றே ஆராய்வோம்.

கடன் என்றால் என்ன?

கடன் என்பது, அதை பெற்றவருக்கு ஒருவகையான பொறுப்பு.  அதாவது பணமுள்ள ஒருவரிடமிருந்து   பணம் தேவைப்படும் மற்றொருவர் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் திருப்பி கொடுத்துவிடுவதாகக் கூறி பெறுகின்ற தொகையினை கடன் எனலாம்.

கடன் வாங்கக் காரணங்கள் என்ன?

இன்றைய அவசர ஆடம்பர உலகத்தில் நாம் எவ்வளவுதான் ஊதியம் ஈட்டினாலும், அந்த வரம்புக்குள் செலவினங்களை அடக்க முடியாமல் தவியாய் தவித்து, வெளிஉலகம் நம்மை பாராட்டவேண்டும் என்ற மாயையில் ஆடம்பர செலவினங்களுக்காக வாங்கப்படும் கடன்கள்தான் இன்றைக்கு அதிக அளவில் உள்ளது. உதாரணமாக நமது சமுதாயத்தில், திருமணங்களுக்காக வாங்கப்படும் கடன்கள் தான் அதிக அளவில் உள்ளது.

ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்பது, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் மட்டுமே. இந்த மூன்று அடிப்படைத் தேவைகள் மூன்றையும் பெற்றவர்கள்தான் கடன் வாங்குகிறார்கள். ஏன்? அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகியப்பின் ஆடம்பரத் தேவைகள் நம்மை அழைக்கின்றன. அதற்காக நாம் பல வங்கிகள், நிறுவனங்கள், தனியாட்கள் மூலம் கடன் தொகையினை வாங்குகிறோம்.

சில நேரங்களில் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவினங்களுக்கும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள் கல்வி கற்கவும் கடன் வாங்கவேண்டியுள்ளது.

இது தவிர விவசாயம் செய்வதற்கும், வியாபாரம் செய்வதற்கும் கூட கடன் மிக அவசியமானதாக இன்று உள்ளது. கடன் வாங்காமல் இவைகளை செய்ய முடியாது என்ற நிலமையில் நாம் இன்று உள்ளோம்.

அடுத்ததாக, நம்மை ஆளுகின்ற அரசுகளும், நமக்காகவும் அரசின் நலனிற்காகவும் - உலக வங்கியிலிருந்தும், வேறு அரசிடமிருந்தும், வேறு நாட்டிடம் இருந்தும் கடன் வாங்கித்தான் தங்களது அரசை நடத்தமுடியும் என்ற நிலையில் நமது அரசு இயந்திரங்கள் தற்போது இயங்குகின்றன.

இப்படி பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இனி வட்டி என்றால் என்ன? என்பதனை பார்ப்போம்.

வட்டி என்பது, கடன் பெற்றவருக்கு ஒருவகையான சுமை எனலாம்.  அதாவது பணமுள்ள ஒருவரிடமிருந்து   பணம் தேவைப்படும் மற்றொருவர் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் திருப்பி கொடுத்துவிடுவதாகக் கூறி பெறுகின்ற கடன் தொகையினை, திருப்பி செலுத்தும்வரை கடன் கொடுத்தவருக்கு கட்டப்படக்கூடிய பயன்பாட்டுத் தொகை எனலாம். அதாவது வேறுஒருவரின் பணத்தை, நாம் சில காலங்களுக்கு நம்முடைய தேவையினை பூர்த்தி செய்ய அவரின் பணத்தை பயன்படுத்தியதால், அப்பணத்தின் உண்மையான சொந்தகாரருக்கு கொடுக்கக்கூடிய தண்டம் எனலாம்.

சற்றே காலத்தை பின்நோக்கி பார்த்தால், இதே கடனை, நாம் 'கைமாத்து' என்ற சொல்லில் பயன்படுத்தி வந்தோம். இந்த கைமாத்துக்கு வட்டி என்றால் என்ன என்று தெரியாது. நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் அல்லது நண்பர்களிடம் சென்று நமது குடும்ப சூழ்நிலையினை கூறி சிறிது காலத்தில் திருப்பி தந்துவிடுகின்றேன் என்று கூறி ஒரு தொகையினை பெற்று வருவதோடு அதனை அந்த குறிப்பிட்டக் காலத்தில் அந்த நபரிடம் திருப்பி தந்து விடுவோம். இதற்கு கைமாத்து என்று பெயர். இங்கே இருவருக்கும் உள்ளே பரிமாறப்படுவது பணம் மட்டும் அல்ல. நட்பும், உறவும், கருணையும், தயவும் அந்த பணத்துடன் இரண்டற கலந்திருக்கும். எனவே அன்றைய சமூகம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதில் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி கொடுத்தல் எடுத்தல் இருந்தது.

ஆனால், இன்று சொந்தங்களானாலும் நண்பர்களானாலும் ஒருவித எதிர்பார்ப்புடன், இலாப நோக்குடன் அதே உதவியை செய்கின்றனர். இதற்கு பெயர் உதவி என்று சொல்லக்கூடாது. எதிர்பார்ப்புடன் செய்யக்கூடிய பண உதவிக்கு என்ன பெயர் என்று சொல்லமுடியவில்லை. வியாபாரம் என்று சொல்லுவது கூட பொருந்தாது. ஏனெனில் வியாபரம் என்பது பணத்தைக்கொண்டு பொருள்களை வாங்கி அதனை விற்று மீண்டும் பணம் பார்ப்பது. ஆனால் இங்கே பணத்தைக்கொண்டே பணம் பார்க்கிறார்கள்.

பணம் பொருளாக மாறாமல் பணமாக மாறும் போது அவை பணம் படைத்தவர்களிடமே பதுங்கிக் கிடப்பதை இயல்பாகக் கொண்டு விடும். பான் புரோக்கர் வகையறாக்கள் இதற்கு உதாரணம்.தொழில் அல்லது வியாபாரம் செய்வதற்கு ஓரளவாவது பணம் தேவைப்படும்; வட்டிக்கு இந்த முதலீடுகள் தேவையில்லை. 100 ரூபாயை வைத்து வியாபாரம் செய்ய முடியாத ஒருவனால் 100 ரூபாயை வட்டிக்கு விட்டு 105 ரூபாய் சம்பாதித்து விட முடியும். இந்த வகையில் சில்லரையாகவும் பெருமளவும் பணம் முடக்கப்படுவதால் பணவீக்கம் அதிகமாகி எத்தனையோக் கெடுதிகள் முளைத்து நிற்கின்றன.

பணம் கொடுத்துக் கூடுதல் பணம் பெறுவதே இங்கு வட்டியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை விளங்கலாம். வியாபாரத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்று அல்லாமல் இங்கே ஒரு தொகையைக் கொடுத்து விட்டு அதை திரும்பப் பெறும்வரை ஒவ்வொரு நாளுக்கும் வட்டி பெறும் முறை என்பது இந்த சமுதாயத்தை ஒழுக்கக் கேட்டுக்கு இட்டுச் சென்றுவிட்டது. நான் உனக்கு ரூ.1000 கொடுப்பேன்; அதைத் திருப்பி அடைக்கும் வரை மாதாமாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை ஈட்டித்தரும் வட்டியாகும்.
இவையில்லாமல் நாள் வட்டி, மணிக்கணக்கில் வட்டி போன்ற கந்து வட்டி தொழில்களும் சட்டத்திற்கு புறம்பாக வெளிப்படையாக நடக்கிறது. இதனால் ஏழைகள் சுரண்டப்படுகின்றனர் என்பது மட்டுமல்ல மிகப்பெரிய கோடீஸ்வரர்களும் இந்த கந்து வட்டியால் பாதிக்கப்பட்டு ஓடி ஒளிவதை இப்போது நாம் பார்க்கிறோம்.
வட்டி வாங்குவதும் கொடுப்பதும் சமுதாயத்தை மிகவும் பாதிக்கிறது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. தனி சொத்து-செல்வம் பிறரால் அழிக்கப்பட்டு தன்னை நிற்கதியாக ஆக்கிவிடக் கூடாது என்பதில் ஒருவர் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ அதேபோன்று பிறரை அழிக்க தனது செல்வமோ-செயலோ எந்த வகையிலும் துணைப் போகக் கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பணத்தை கடன் கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை. கொடுக்கப்பட்ட பணத்திற்கு வட்டியும் வாங்கவேண்டாம் என்றும் சொல்லவில்லை. இங்கே வட்டி என்பது கொடுப்பவருக்குச் சுமையாக இருப்பதால் அதனை நியாயமான சதவிகிதத்தில் வாங்கவேண்டும் என்கிறேன். நமது அரசு வட்டி வாங்கவேண்டுமென்றால் ஒரு சதவிகிதம் மட்டுமே வாங்குதல் வேண்டும். அதற்கு மேற்பட்டு வாங்கினால் குற்றம் என்கிறது. ஆனால் எத்தனை தனிநபர்கள், வட்டிக்கடைகள் இதனை பின்பற்றுகின்றன? சட்டப்படி குற்றங்களை அல்லாவா இவர்கள் செய்கிறார்கள். அதற்காக தண்டனை பெறுகிறார்களா? இல்லையா? என்பது நமக்கு வேண்டாம். அவர்கள் மனசாட்சியே இதற்கு நிச்சயம் ஒருநாள் தண்டனை கொடுக்கும்.
நாம் நடைமுறையில் வட்டிக்கு கடன் கொடுத்தவர் கடனாளி அசலை திருப்பி செலுத்துகிட்றாரா என்று பார்க்காமல் வட்டியில் கண்ணும் கருத்துமாக இருப்பதை பார்த்திருகின்றோம் இல்லையா? வட்டி என்பதை இலாபமாக அதுவும் கொள்ளை இலாபமாக காணுகின்றனர். வட்டி என்பது பிறர் பணத்தை பயன்படுதுவதுர்க்கு கொடுக்கும் விலை அவ்வாறு அதிக விலை கொடுத்ததால், கொடுப்பவனும் அழிவான், வாங்குபவனும் அழிவான்.
இன்று ஐரோப்பிய நாடுகள் திவாலாக ஆரம்பித்துள்ளன. அமெரிக்க மாதிரி வளர்ச்சியில் எப்பொழுது கடன் தவணை கட்ட முடியாமல் போகும் என்பதை தீர்மானிப்பது கடனாளி அல்ல மாறாக கடன் கொடுத்தவரேயாகும். அதை தீர்மானிக்க தான் இன்று மூடி, பிட்சி ,ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் போன்ற பல்வேறு பன்னாட்டு பொருளாதார தர மதிப்பீடு நிறுவனங்கள் களத்தில் உள்ளன. ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கியதில் இவை பெரும்பங்காற்றியத்தை நாம் மறந்துவிடமுடியாது.
கூடுதல் கடன் வாங்கி குவிக்கும் ஒரு நாடு அதுவும் வட்டியின் மூலம் கொள்ளை லாபம் அடைய காத்திருக்கும் உலக வங்கி(WB) பன்னாட்டு நிதி நிறுவனம் (IMF),ஐரோப்பிய யூனியன் வங்கி (EUB) ஆசிய வளாச்சி வங்கி (ADB) இன்னும் இவை போல பல வங்கிகளிடம் கடன் வாங்கும் ஒரு நாடு இன்று இல்லை எனினும் நாளை சிக்கலில் சிக்குவது உறுதி.
ஒரு அரசு செய்கின்ற பாவச் செயல் அல்லது ஏழைகளை சுரண்டுதல் எப்படி எனில், அரசிற்கு வருவாய் தரும் மதுபானக் கடைகளை அரசே நடத்துவது, கேளிக்கை விடுதிகள் நடத்துவது, டாஸ்மாக் கடையில் அரசு வேலை தருகிறோம் என்று நல்ல குடிமக்களையும் குடிமக்களாக்குவது என்று பட்டியலிடலாம். இவைப்போதாதென்று வட்டிக்கு கடன் பெற்று அரசை நடத்துவது வெட்க கேடானது.  இப்படிப்பட்ட அரசுகள்தான் திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறது, தமிழ் அன்னைக்கு சிலை வைக்கிறது, இவ்வரசுகள் பெரியாரின் வழித்தோன்றல்களாம்! இந்தப் பணமெல்லாம் எங்கிருந்து வருகிறது? திருவள்ளுவரும், தமிழ் அன்னையும் தமக்கு சிலை வைக்க சொன்னார்களா? தற்போது இந்தியாவில் குஜராத் அரசு மட்டுமே பிறரிடம் கடன் பெறாது தன்னுடைய மக்களின் நிதியிலிருந்து சிறப்பாக இயங்குகிறது என்று அறிகிறோம். அங்கே மதுபான கடைகள் தனியாரிடம் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டி வாங்குவதைப் பற்றி நம்மைச் சார்ந்த மத அமைப்புகள் என்ன சொல்கின்றன? என்று பார்த்தால் முதலில் இதற்கு எதிராக சண்டைக்கு வருவது இஸ்லாம் மதமே. இஸ்லாம் மதம் வட்டி வாங்குவதைப்பற்றி கூறுவதைக் கீழே உள்ளபடி காணலாம்...

(1) வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(2) வட்டி வாங்குகிறவனின் வீட்டு நிழலில் நிற்பது குற்றம், வட்டி வாங்குவது பெற்ற தாயுடன் 70 முறை விபச்சாரம் செய் வதை விடக் கொடிய குற்றம்.
இந்து மதம் வட்டி வாங்குவதைப் பற்றி என்ன சொல்கிறது? வருணாசிரம முறைப்படி வட்டி வாங்கலாம் என்கிறது இந்து மதம்!
என்னுடைய இந்து ம‌த‌த்தை என‌க்குப் பிடிக்க‌வில்லையே….. “ந‌ற‌ந‌ற… ர்…ர் …
இஸ்லாம் மத ஒழுக்கத்தினையும் இந்து மத ஒழுக்கத்தினையும் ஒப்பிட்டு 03.05.1936 ஆம் ஆண்டு 'குடியரசு' நாளேட்டில் வந்த செய்தியினை பார்ப்போம்...
இஸ்லாம் போதிப்பது,
1. மதுபானம் கூடாது.
2. சூதாடுதல் கூடாது.
3. விபச்சாரம் கூடாது.
4. வட்டி வாங்குதல் கூடாது.
5. போர் செய்தல் கூடாது.
இந்து மதம் போதிப்பது,
1. கடவுள்களுக்கு மது படைக்க வேண்டும். (ராமாயணம்)
2. அரசர்களுக்குச் சூது உரியது (பாரதம்)
3. கடவுள்களே விபச்சாரம் செய்திருக்கின்றன - (கிருஷ்ணன் முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை)
4. வட்டி வாங்குவது, வருணாசிரம முறை, (வைசிய தருமமா?)
5. கடவுள்கள் யுத்தம் அரச நீதி, அரச தருமம். (கந்த புராணம், பாரதம், ராமாயணம்)
நண்பர்களே, வட்டி வாங்குவதும் கொடுப்பதும் என்னை பொறுத்தவரை அது ஒரு பாவச்செயல். ஏனெனில் வட்டி கொடுப்பவன் மகிழ்ச்சியுடன் கொடுக்கமாட்டான். ஒருவிதமான சாபப்பட்ட பணத்தை, மகிழ்ச்சியுடன் வட்டியாக வாங்குகின்றவன் மகிழ்ச்சியுடன் வாழமாட்டான் என்பது தெள்ளத்தெளிவு.
வட்டி வாங்கவேண்டும் எனில் அரசு நிர்ணயித்த ஒரு சதவிகித வட்டி மட்டுமே வாங்கி, இருவரும் மன மகிழ்ச்சியுடன் இவ்வுலகியல் வாழ்வை நடத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


வள்ளலாரை பின்பற்றும் சன்மார்க்கர்கள் யாரேனும் இத்தொழிலை செய்துக்கொண்டிருந்தால் தயவுச்செய்து வட்டிக்கு பணம் கொடுப்பதை நிறுத்திக்கொள்ளவும். அப்பணத்தை நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கருணை மனப்பான்மையுடன் 'கைமாத்து' ஆக கொடுத்து வாங்குங்கள். உண்மையில், எதிர்பார்ப்பின்றி கொடுத்து வாங்குவதுதான் வட்டியினை வளர்க்கின்ற மார்க்கம் என்பதனை அறிந்துக்கொள்ளுங்கள்.
வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
     வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
     பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
     பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
     எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. (திருஅருட்பா 5561)

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இஸ்லாம் போதிப்பது,
    1. மதுபானம் கூடாது.
    2. சூதாடுதல் கூடாது.
    3. விபச்சாரம் கூடாது.
    4. வட்டி வாங்குதல் கூடாது.
    5. போர் செய்தல் கூடாது.
    ஆனால் இந்தப் பாவச் செயல்களை அதிகம் செய்வதவர்௧ளே. இந்து௧்௧ள் அல்ல

    ReplyDelete
    Replies
    1. ஐயா, (Colins Pranav) தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. Dear All,,

    Please be careful for above messages. Don't reply to any one mail ID.

    Best Regards
    T.M.Ramalingam

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.