Tuesday, January 28, 2025

கைவிடேன் உனையே

அருட்பெருஞ்ஜோதி                    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

கைவிடேன் உனையே
(திரு ருதூர் ராமலிங்க பிள்ளை)


தூங்காமல் தூங்கும் தூக்கம் அறியேன்
            திருவருட் பாக்காட்டும் திசை அறியேன்
ஓங்கி உத்தமனாகும் ஓட்டம் அறியேன்
            ஒன்றினில் ஒன்றிய ஒருவனை அறியேன்
ஏங்கிய ஏக்கமெலாம் ஏனென்று அறியேன்
            என்பெயரும் உயிரும் நீஎன்று அறியேன்
காங்குவாய் ஆகாயக் காட்சியை அறியேன்
            கருத்தில்லேன் எனினும் கைவிடேன் உனையே. (26012025)



 
நிலைத்து உடல் நிற்குமென நாளும்
            நன் மார்க்கம் நடக்க அறியேன்
மலைசுற்றி வந்தும் மாநதிகள் நீராடியும்
            முக்கூட்டில் மனம் மறைய அறியேன்
சிலை வழிபாட்டில் சிவனைத் தொழுது
            சவம் ஆவதே சைவமென அறியேன்
கலை உறைத்த கற்பனையால் மதி
            கலங்கினே னாயினும் கைவிடேன் உனையே. (27012025)



 
சாத்திரச் சடங்குகள் சாதி சமயங்கள்
            சொல்லும் சூத்திரங்களின் சூது அறியேன்
பூத்திருக்கும் பூக்களால் பூஜை செய்தும்
            பூஎழில் மாறாமல் பார்த்து அறியேன்
கூத்தாடி கூத்தாடி கூடு உடைந்தாலும்
            கூற்றை எதிர்க்கும் காற்றை அறியேன்
காத்திருக்க இலவங் காய் பழுக்கறியேன்
            காரிருளுள் சென்றாலும் கைவிடேன் உனையே. (27012025)



 
பேயென அலைந்தேன் பாரினில் பிறர்புகழ
            பொய்யாய் நடித்தேன் பேரருள் அறியேன்
நாயென மலத்தையே நாடி உண்டேன்
            நாதன் உள்ளிருப்பதை நொடியும் அறியேன்
தாயெனத் தலைவன் தாங்கும் திறத்தையும்
            தான்நானாகும் அறத்தையும் தழைக்க அறியேன்
காயெனக் கசந்தேன் காமத்தில் விழுந்தேன்
            காயமே வீழினும் கைவிடேன் உனையே. (27012025)



 
மண்ணில் மங்கையர் மணம் புரியுமொரு
            மாந்தராய் இல்லாதெனை மீட்டத்திறத்தை அறியேன்
எண்ணத்தில் நிறைத்து என்னுயிர் வளர்த்தும்
            எங்குமாய் விளங்கும் என்னுறவை அறியேன்
உண்மை உரைக்கவே ஊமைஎனை பேசும்
            உயிராய் உருவாக்கிய உன்னருளை அறியேன்
கண்ணில் நீர்ப்பெருகி குருவைப் பாடிக்
            களிக்க இயலேனெனினும் கைவிடேன் உனையே (27012025)





இன்றிருக் கின்றேன் என்றிறப் பேனென்று
            ஏதும் அறியேன் என்றும் இறவாவரம்
அன்பர்க்கே கொடுப்பாய் என்றிருக்க எனது
            ஐம்பது அகவையிலும் என்மீது ஐயமோ
உன்னை அறியேன் உன்செயலை அறியேன்
            உண்மை அறியேன் உயிரை அறியேன்
கன்றாகினும் மடியறியாது கலங்கிப் பசியால்
            குலைந்தே னாயினும் கைவிடேன் உனையே. (31012025)

கல்வி அறியேன் கலைகள் அறியேன்
            கற்றது எதிலும் கடவுளை அறியேன்
வல்லான் தனைஏற்கும் வந்தன மறியேன்
            வன்மனக் குரங்கின் வீரியம் அறியேன்
நல்லான் எனநடிக்கும் நாடகமும் அறியேன்
            நன்றியெனச் சொல்ல நாயகனை அறியேன்
கல்லென இருந்தேன் கருநிலை கடவேன்
            குருடன் என்றாயினும் கைவிடேன் உனையே. (11022025)


திருக்கோயில் அறியேன் திருக்கதவம் அறியேன்
            தனித்திருக்க அறியேன் தன்நிலை அறியேன்
பெருமந்திரம் அறியேன் பெரும்புகழ் அறியேன்
            பெருவாழ்வு அறியேன் பெண்ணின்பம் ஒன்றே
சருமத்தில் காணும் சழக்கை விட்டறியேன்
            சபலத்தால் அலைந்தேனெனினும் சாமி உந்தன்
கருணை நிறைந்ததென் கடவுள் பிறந்துவிட்டார்
            கடலூர்வட லூராகியதினி கைவிடேன் உனையே. (17022025)


 
 
-TMR


Saturday, January 25, 2025

தீட்டு

சன்மார்க்கத்தில் சமுசாரிகளில் மாதவிலக்கு, பிறப்பு இறப்பு தீட்டுகள் பற்றி வள்ளற் பெருமான் என்ன கூறுகின்றார்?

Mr.D.Jagadeeswaran - Erode



பிறப்பு இறப்பு தீட்டுகள் என்பன சுத்த சன்மார்க்கத்தில் கிடையாது. இதனைப் பற்றி வள்ளற் பெருமான் வெளிப்படையாக ஏதும் கூறவில்லை. எனினும் வள்ளற் பெருமானின் புரட்சி கருத்துக்களை ஆழ நோக்கில், பிறப்பு இறப்பு தீட்டு என்பதைப் பற்றி ஏதும் கூறாமையால், அவர் அதனை முற்றிலும் தவிர்த்திருப்பது நமக்கெல்லாம் புரியவருகின்றது.

இறந்தவர்கள் திரும்ப எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம், எனவே எவ்வளவும் துன்பப் படாமலும் அழுகுரல் செய்யாமலும் இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். இறந்தவர்களை தகனம் செய்யாமல் சமாதி வைக்க வேண்டும். ஒரு தினத்திற்குள் (24 மணி நேரத்திற்குள்) தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்து அடக்கம் செய்விக்க வேண்டும். அத்தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்ட மட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும்.” என்று இறப்பு நேரிட்ட இல்லத்தார்களுக்கு வள்ளலார் அறிவுறுத்துகின்றார்.

சடலத்திற்கு மாலை அணிவித்தல், குளிப்பாட்டுதல், புத்தாடை உடுத்தல் போன்ற சடங்குகளை தவிர்க்க வேண்டும். ”கலையுரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போகவேண்டும்என்பார் வள்ளலார். இங்கே வள்ளலார் இறப்பு நிகழ்ச்சியினை ஒரு துக்க நிகழ்வாக பார்க்கவில்லை. அதனால் இதனை மகிழ்ச்சிகரமாகவும் வள்ளலார் பார்க்கவில்லை. எந்நிகழ்வையும் சமத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்வதாகக் கருதாலம். எனவே இங்கு தீட்டு என்பதை நாம் அறவே புறந்தள்ள வேண்டும். எப்போதும் போல சகஜமாக இருக்கவும் பழகவும் சுத்த சன்மார்க்கத்தில் இடமுண்டு.

இறந்தாரை தூக்கிச்சென்ற பிறகு அவர் இருந்த வீட்டினை சுத்தம் செய்தல், இடுகாடு சென்று வந்தப் பின்பு குளித்தல் போன்ற நிகழ்வுகள் இடம், மனம் சார்ந்த சுத்தத்தை பொறுத்தது. அதனை தடைச் செய்தல் தேவையற்றது. மற்றபடி வேறு எந்த சடங்குகளும் கர்ம காரியங்களும் நினைவாஞ்சலியும் செய்யக்கூடாது. எனவே பிறப்பு இறப்பு தீட்டுகளெல்லாம் சுத்த சன்மார்க்கத்தில் அறவே கிடையாது.

இப்போது நாம் சமுசாரிகளில் மாதவிலக்கு தீட்டு பற்றி வள்ளலார் ஏதேனும் கூறியிருக்கின்றாரா என்று பார்ப்போம்.

நாம் முன்னரே கூறினார்ப் போன்று வள்ளலார் யாதொரு இடத்திலும் எவ்வகையானத் தீட்டுகள் பற்றியும் சொல்லவில்லை. பெண்கள் யோகம் முதலியக் கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என பெண் சமத்துவம் பேசுவார் வள்ளலார். சுத்த சன்மார்க்க அனுபவத்தில் ஆண் என்றும் பெண் என்றும் பாலின வரையறை தோன்றாது என்பார் வள்ளலார். எனவே சமுசாரிகள் என்பதைவிட பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு என்பது ஓர் இயற்கைத் துன்பம் எனலாம். அந்தத் துன்பத்தினால் ஆனவர்கள்தான் நாமெல்லாம். எனவே நமக்கெல்லாம் மூலம் அதுதான். எனவே அதனைத் தீட்டு எனச் சொல்லி, பெண்களை அவமானப்படுத்துவது அறிவின்மை. தீட்டு என்பதெல்லாம் மூடமான சடங்குகள் வழி வருவதால், அச்சடங்குகளை எல்லாம் மிகவும் கண்டித்தவர் வள்ளலார் என்ற நோக்கில் பார்த்தால், வள்ளலார் இந்த மாதவிலக்கு தீட்டு என்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவே நாம் கருதுதல் வேண்டும். பெண்கள் எப்போதும் போல் சகஜமாக இருத்தல் வேண்டும்.

ஆனாலும், இரவில் பெண்ணிடத்தில் தேக சம்பந்தம் செய்தப் பிறகு இருவரும் குளித்துவிட்டு பின்பு வந்து உறங்க வேண்டும் என்பார் வள்ளலார். தேக சம்பந்தம் செய்தலை வள்ளலார் தீட்டாகக் கொள்கிறார். இன்னும் ஆழச் சொல்ல வேண்டுமெனில் பெண்களை தொட்டாலே தீட்டுதான் என்பதாய் வள்ளலார் பல இடங்களில் பெண்களை பற்றி பெண் போகம் பற்றி இழிவாகப் பாடுகின்றார். தன்னுடைய ஆன்மீக இலக்கான மரணமிலா பெருவாழ்வைப் பெறுவதற்கு பெண் போகம் தடையாக இருப்பதால், அவ்வாறு பாடியிருக்கின்றார்,


மின்னைப் போலிடை மெல்இய லார்என்றே
      விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
      புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
      சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
என்னைப் போல்வது நாய்க்க்குலம் தன்னிலும்
      இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே. (திருவருட்பா-2739)
 
புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
      புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
      பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
      மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
      கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே. (திருவருட்பா-2778)

இப்படிப்பட்ட கருத்துக்கள் கொண்ட திருவருட்பாவினை கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள்.

எனவே தேக சம்பந்தம் தவிர, தீட்டு என்பது எவ்வகையிலும் சுத்த சன்மார்க்கத்தில் கிடையாது என்றே புத்தியை தீட்டு.   

 -T.M.Ramalingam – Cuddalore

 https://vallalarr.blogspot.com/2016/04/blog-post_8.html 

for PDF

https://drive.google.com/file/d/1UVMx8P15WuoxULcjhHX5Ak8cpwx7qlwk/view?usp=drive_link