Monday, July 31, 2017

இந்துமதம் எங்கே போகிறது? - 1

இந்துமதம் எங்கே போகிறது? - 1
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச்செல்லுங்கள். முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டையும் சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத, காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி.

இமயமலைக் குளிர்காற்றில் நடுங்கியபடி ஓடிக்கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்து சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடைபயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து. அது... அந்தக்கால ஆப்கானிஸ்தான். நிர்வாண மனிதர்கள், சாப்பிடத் தெரியாது, எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தின் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்துவிடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள். பூமியே புதிராக தெரிந்தது அவர்களுக்கு. நரியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர். சுற்றிலும் இருள் பூசியது யார்...? நடுங்கினர்.

இந்தப் பயந்தாங்கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம் உற்றுப்பார்த்தார்கள். அவர்களின் மூளைக்குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனாசக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றிவைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தை குடைந்தனர். விளைவு...? கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரை பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை, நதிதான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான். உற்றுப்பார்த்தார்கள். (இந்த தெய்வம் என்ற பதம்தான் ஐரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் ஐரோப்பாவுக்கு நகர்ந்தது)

இயற்கைதான் கடவுள் துரத்தும், உலுக்கும் சக்திதான் கடவுள். உற்றுப்பார்த்தார்கள்... பார்த்தான் பார்த்தான் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு "ரிஷி" என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான்... பார்ப்பான்... பார்த்துக்கொண்டே இருப்பான் என பொருள். நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய்... அதற்கு நாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள். உண்டாயிற்று வேதம். உற்றுப் பார்த்து சிந்தித்த சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.

"இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ, சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்" - வகுத்தது வேதம். "Civilisation never born, but, it is the heritage of humanity" என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம். முதலில் இயற்கையை பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனைசெய்த உற்றுப் பார்த்த மனிதனான "ரிஷி" அறிவுரை சொன்னான்.

"பயப்படாதே... நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தை பயன்படுத்துவோம். நதிகளை பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான்" வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தை கொண்டுவந்தது. ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்... இம்மனிதர்களிடையே இப்படித்தான் வேதமதம் பிறந்தது.

இந்த நல்லெண்ண சிந்தனை வளர்ந்து மெருகேறியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்ற ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதற்கு என்ன செய்தார்கள்? பிரித்தார்கள்... மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிர்வாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.

ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு. ஆள்பவன் சத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டுபேரையும் வேதத்தை வைத்துக்கொண்டு, வேதத்தைக் கற்று நீதிநெறிப் படுத்தியவன் பிராமணன் ஆனான்.

ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் சத்திரியர்கள். உழைக்க வேண்டும், பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள். பிராமணர்கள் பார்த்தார்கள்... இவர்கள் இருவருமே வேதத்தை விட்டுவிட்டுப் போய்விட்டார்களே... அதிலிலுள்ள கருத்துக்களை, கட்டளைகளை, கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல்படுத்த வேண்டும். எனவே வேதம், பிராமணர்கள் கைக்குப் போனது.

இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேதகாலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாக சொல்கின்றன வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள். வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும், தர்மமும், கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்... வேதமதம் பிராமண மதம் ஆயிற்று.

ஆரிய மதம், வேதமதமாகி, வேதமதம் பிராமண மதமாகி... காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க.... அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்...?

ஒரு புருஷனும் அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் பள்ளம். இடையில் மழைநீர் தெருமண்ணோடு கூட்டணி வைத்து "சகதி" அந்தஸ்தோடு கிடக்கிறது. புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப் பக்கம் வந்து விட்டான். திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழவேண்டியதுதான் என பயந்தாள்.

"கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்" என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான். இதே போலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். நம்மூர் மழைச்சாலையைவிட மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தான்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது. "வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்...". ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது கூடவந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத் தக்கதுதான்.

ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால் மநு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர். மநு...?

வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவர்க்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என "எளிமை" என்ற பெயரில் செய்யப்பட்டதுதான் மநுதர்மம்.

பிராமணன், சத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை "மநு" பிளவாக்கியது. கூடவே இவர்களை தாண்டி "சூத்திரர்கள்" என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மநு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உட்பட 11 குணங்களை வகுத்த மநு - சூத்திரனைப் பற்றி இப்படி எழுதியது,

"சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே, சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்த பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை..." இப்படிப் போகிறது மநு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் "நன்றாகவே" வேலை செய்தது. ஏற்கனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சத்திரியர்களும் வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.

"அடே... குழந்தாய் இந்தா பால்... இதைக் குடித்து மகிழ்வாய் வாழு..." - என்ற வேதத்தை மனு திரித்து... "இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்க வேண்டும்" என பிளவு செய்தது.

ஆரியரகள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா?... இதற்கு காரணம் என எடுத்துக் கொள்ள ஏதுவான மநு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.

"பால்யே பிதிர்வஸே விஷ்டேது
 பாணிக்ரஹா யெளவ்வனே
 புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
 நபஜேத் ஸ்த்ரி ஸ்வதந்த்ரதாம்."

"பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதை கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதை கேட்கவேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள். ஆண் சொல்படி கேள்"

இப்படி "பெண்ணுரிமை" பேசும் மநு இன்னொரு இடத்தில் சொல்கிறது. "பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோபதேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே..." பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மநுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு "பூம் பூம்" மாடுகள் போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.

வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. "கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்..." என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.

பலநூறு வருடங்கள்... ஒரு கிரிமினல் லா போன்றே மநுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன்... சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். அவனுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட ஒரு "சாஸ்திர ஏகாதிபத்ய" சூழ்நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.

"கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கின்றீர்களே?... உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது?... கடவுளா?... அவன் எங்கே இருக்கிறான்?...

வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மநு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும்தான் வேண்டும்..."

என அந்த சூழ்நிலையில் மிக மிக மிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.

இன்றைக்கு அணுகுண்டு வெடி சோதனைக்கே "புத்தர் சிரித்தார்" - என பெயர்வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?...

சகல செளபாக்யங்களையும் ருசித்துக்கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்யம் பளிச்சிட்டது. இனி பெண்சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாமென மூளைக்குள் முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டுவிட்டு வெளியே போய்விட்டார்.

வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள்தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன. எங்கெங்கு காணிணும் மூடப் பழக்க வழக்கங்கள், ஊரெல்லாம் ஒரே அக்னிப்புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.

ஏன் அக்னிப் புகை...?

பிராமணர்கள் சொன்னார்கள். "ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்" என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள்.

(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா...? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள். பிற்காலங்களில் பசு என்றால் கறவைமாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாசுக்காக இப்போது நாலுசக்கர பஸ்ஸைகூட பசு என கூறினாலும் கூறலாம்.)

அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்த்ரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம்... அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்த்ரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.

புத்தர் இதை பார்த்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார். அப்போதுதான் அசுவமேத யாகத்தின் கொடூரங்களையும் ஆபாசங்களையும் கண்கூடாக கண்டார் புத்தர். அதென்ன அசுவமேத யாகம்...?

ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு.... அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம். ஓடிக்களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த கடமை முக்கியமாக ராணிக்குத்தான். இதைக் கூற சங்கோஜ (கூச்சமாகத்தான்) இருக்கிறது. என்ன செய்ய. அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.

"அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
 பத்னி க்ராக்யம் ப்ரசக் ஷதே..."

என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி "வழிபட வேண்டிய" முறையைத்தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும்வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வமேத யாகம்.


மக்களை போலவே, ராஜ குடும்பத்தினரும் பிராமணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... 'ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகிவிட்டது. இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்சனை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்' என்றார்களாம். இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். 'மனித தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...? -- என யாகம் நடந்த இடத்துக்கேபோய் கேள்விகள் கேட்டார். 

to be continue... 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.