Sunday, July 7, 2013

செல்வது உயர்நிலை

                                                                 செல்வது உயர்நிலை

வணக்கம் அன்பர்களே! இதுவரை நாம் உண்மையென்று நம்பி வழிபட்ட தெய்வங்கள் அனைத்தும் எப்படிப்பட்டன, என்று வள்ளலார் மிகத்தெளிவாக தமது திருஅருட்பாவில் விளக்கியுள்ளார். 1823 ஆம் ஆண்டிற்குப் பிறகு மனிதகுலம், தாம் செல்வது உயர்நிலை என்னும் சுத்த சன்மார்க்க பாதையாக இருக்க வேண்டும் என்பதே அருட்பெருஞ்ஜோதி திருவருளின் நோக்கமாக இருக்கின்றது.

ஆம். 1823 ஆம் ஆண்டுதான் அருட்பெருஞ்ஜோதி அருளால் நமது வள்ளலார் இவ்வுலகில் வருவிக்கப்பட்ட ஆண்டு. நடைபெறுகின்ற 2013ஆம் ஆண்டோடு 190 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் இம்மனித குலம் உண்மையினை தெரிந்துக்கொள்ளவில்லை. தெரிந்தும் உண்மைதனை தொடர தயாராக இல்லை. தன்னுடைய பழக்கவழக்கங்களையும், மத சமய சாதி குல வழிபாட்டுக்கடவுள்களையும், பூஜை, அபிஷேகம், அலங்காரம் என்கிற சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் விட்டபாடில்லை.

# சைவம், வைணவம், சமணம், பெளத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும்,

# அவ்வச்சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும்,

# வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேசசித்தி பேதங்களென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம்.

# ஆகலில், அத்திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவதுபற்றி, அவ்வச்சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும், அவற்றின் சத்திய உணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும்.

# நாம் முன் (1823ஆம் ஆண்டிற்கு முன்) பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லஷியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள்.

# தெய்வத்தை அணு மாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லசஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.

# அது யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டுள்ளார்கள்.

# அதற்கேற்றவாறு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்துள்ளார்கள்.

# அவைகள் உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

# தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.

# இவைகள் உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள (அதாவது 1823ஆம் ஆண்டுக்கு முன்னும், அவ்வாண்டிற்கு பின்னும், இன்றும்...) பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.

# ஆனால், ஆதியிலே இதை (உண்மை கடவுளை) மறைத்தவன் ஒர் வல்லவன்.

# அவன் மறைத்ததை இதுவரைக்கும் (1823ஆம் ஆண்டுவரைக்கும்) ஒருவரும் கண்டபாடில்லை.

# அவன் பூட்டிய அந்தப்பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் (1823ஆம் ஆண்டுவரைக்கும்) அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.

# இவைகளுக்கெல்லாம் சாட்சி நானே இருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்லமுடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா!

# அப்படி லட்சியம் வைத்துக்கொண்டதற்கு சாட்சி வேறு வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கின்ற திருஅருட்பாவில் அடங்கி யிருக்கின்ற பாடல்களே போதும்.

# ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

# இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.

# அதனால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். (லாபம் என்பது - மரணமிலா பெருவாழ்வு)

# இதுவரைக்கும் (1823ஆம் ஆண்டு வரைக்கும்) விடாமல் வைத்துக்கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக்கொள்ளவில்லை.

# நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டது என்றாலோ, அந்த லட்சியம் தூக்கிவிடவில்லை.

# எனக்கு இறைவன் தெரிவித்த உண்மைப் பெறுநெறி ஒழுக்கம் யாதெனில், 'கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக' என்றது தான்.

கருணையும் சிவமே பொருளெனக் காணும்
    காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
    வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
    எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
    சிறுநெறி பிடித்த தொன்றிலையே. (3503)

# என்னை ஏறா நிலைமிசை (1823ஆம் ஆண்டுவரை யார் ஒருவரும் ஏறாத நிலை) ஏற்றிவிட்டது யாதெனில், அது 'தயவு'. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது. 

# அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.

# இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள்.

# சமயந் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி என்று பெயரிட்டுக்கொண்ட பெரியவர்களும் உண்மை அறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம். எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை.

# தெய்வத்தைத் தெரிந்துக்கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்.

# ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலே அல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்! என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன்.

# நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில், நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முற்சாதனமாக

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை        அருட்பெருஞ்ஜோதி

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக்கொண்டார்.

# இத்தருணம் ஆண்டவரும் உண்மையினை தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லோரும் உண்மையைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

# ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக்கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.


# பிரம்மா, உருத்திரர்கள் (உருத்திரர், மகேஸ்வரன், சதாசிவன்), விஷ்ணு, இந்திரர்கள் (தேவர்கள்), அருகர் (சமணர்கள்), புத்தர் மற்றும் உள்ள அனைத்து மதத்தலைவர்கள் எல்லாம் சிறுஒளி பெற்ற சிறுபிள்ளை கூட்டங்கள் என்று அறிக.

நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
    நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
    வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
    சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
    சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. (4178)

# பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், விந்து, பிரம்மம், பராசத்தி, பரசிவம் ஆகியோர்கள், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடதுகால் சுண்டிவிரல் நகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி துகள் ஆகும்.

அதாவது, நாம் தற்போது வணங்கிக்கொண்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் உண்மை இறைவனோடு ஒப்பிட்டால் அவைகளெல்லாம் சிறு துகள் என்கிறார். அதுவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நம் மனித உடம்போடு உவமைப்படுத்தி, அவ்வுடம்பில் வலதுகால் என்று கூட சொல்லாமல், இடது கால் என்று கூறுகிறார். பிறகு இடதுகாலில் கட்டைவிரல் என்று கூட சொல்லாமல், விரல்களிலேயே மிகச்சிறிய சுண்டிவிரல் என்று கூறுகிறார். பிறகு அந்த சுண்டிவிரலே மிகச்சிறியது, அந்த சுண்டிவிரலின் நகம். அந்த மிகச்சிறிய நகத்தில் இறுதியாக உள்ள துகள் போன்றவைதான் நாம் வணங்குகின்ற தெய்வங்கள் அனைத்தும் என்கிறார்.

தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
    யேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
    நவில்பர சிவம்எனும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
    இடதுகாற் கடைவிரல் நகத்தின்
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
    கண்டனன் திருவடி நிலையே. (3925)

# மேற்கண்டவர்கள் எல்லாம் 'மலத்தில் நெளிகின்ற சிறு புழுக்கள்' என்று தாம் அறிந்ததாக, சற்றே கடினமான உண்மையினையும் கூறுகிறார்.

இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
    பிரமன்ஈ சானனே முதலாம்
மகத்துழல் சமய வானவர் மன்றின்
    மலரடிப் பாதுகைப் புறத்தும்
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
    புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
    தெரிந்தனன் திருவடி நிலையே. (3927)

# இவ்வுலகில் யார் ஒருவரும் பெற்றிடா நிலையினை தாம் அடைந்திருப்பதாக பாடுகிறார்.

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி! (அகவல் 1576)

உண்மை அன்பர்களே! இதற்கு மேலும் ஒரு அருளாளர், எப்படி இறை உண்மையினை சொல்ல முடியும்! எனவே நாமெல்லாம் சுத்த சன்மார்க்கத்தில் நடைபயில முயலுவோம். நன்றி!

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை        அருட்பெருஞ்ஜோதி






2 comments:

  1. பிரம்மா, உருத்திரர்கள் (உருத்திரர், மகேஸ்வரன், சதாசிவன்), விஷ்ணு, இந்திரர்கள் (தேவர்கள்), அருகர் (சமணர்கள்), புத்தர் மற்றும் உள்ள அனைத்து மதத்தலைவர்கள் எல்லாம் சிறுஒளி பெற்ற சிறுபிள்ளை கூட்டங்கள் என்று அறிக. நல்லது.

    //உண்மை அன்பர்களே! இதற்கு மேலும் ஒரு அருளாளர், எப்படி இறை உண்மையினை சொல்ல முடியும்! எனவே நாமெல்லாம் சுத்த சன்மார்க்கத்தில் நடைபயில முயலுவோம். நன்றி!//

    அவர்களை எல்லாம் விலக்கி விடுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம் சுத்த சன்மார்கத்தில் நடைபயில்தல் என்றால் என்ன? கொஞ்சம் விளக்குங்கள்.

    ReplyDelete
  2. ஐயா, உங்கள் தேடுதலில் நியாயமான கோபத்தை பார்க்கிறேன். நம்பிக்கை பிறழும்போது ஏற்படும் மன இறுக்கமே இது. தங்கள் மனதை புன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

    சுத்த சன்மார்க்கம் என்பது மதங்களை கடந்த மார்க்கம். மேலும் அறிய வேண்டுமெனில் தாங்கள் திருவருட்பா மற்றும் திருவருட்பா உரைநடை நூல்களை வாங்கி படிக்கவும். முடியவில்லை எனில் சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன? என்பதை இதே வலைப்பூவிலே தேடி தாங்கள் அறிந்துக்கொள்ளலாம். அத்தேடுதலில் எவ்விடத்தில் சந்தேகம் இருப்பினும் தெரியப்படுத்தவும். நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.