Wednesday, July 1, 2015

அடிகள் அணிமாலை

அடிகள் அணிமாலை
(தி.ம.இராமலிங்கம்)

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
      https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqY3NCYTExUkJHdkk/view?usp=sharing



யாரு மறியாத இறைவனடி அவன்
    யார்க்கும் செல்ல போகனடி எப்
பாருக்கும் நல்ல பரமனடி அவன்
    பைந்தமிழ் தந்த தலைவனடி எவ்
வூருக்கும் உண்மை உறவனடி அவன்
    வேதம் மறுக்கும் வேந்தனடி ஜீவ
காருண்ய பெருமானடி அவன் பெருங்
    காதல் புரியும் கணக்க னடி.                                  1

சித்தருக் கெல்லாம் சித்தரடி அவன்
    சிந்தை மயக்கும் சிங்காரனடி என்
நித்திரை போக்கும் நிமலனடி அவன்
    நிலவினை ஒத்த அழகனடி என்
சத்தாய் இருக்கும் சன்மார்க்கனடி அவன்
    சாகாத மேனி உடையானடி என்
அத்ததில் ஆடும் ஆட்டமடி அவன்
    ஆட்டத்தில் ஆடும் அண்ட மடி.                        2

நெஞ்சத்தில் நேச முடையானடி அவன்
    நேரில் நின்றே பேசுங்கடி என்னை
அஞ்சேல் என்றும் சொல்வானடி அவன்
    அஞ்ச வைத்தே மகிழ்வானடி என்
மஞ்சம் விரும்பியே வருவானடி அவன்
    மன்மத லீலை செய்வானடி மிகக்
கஞ்சத் தனமே உடையானடி அவன்
    காலைப் பிடித் தால் தருவானடி.                       3 

வெள்ளாடை உடுத்தி வருவானடி அவன்
    வேற் றுலகவாசம் செல்வானடி என்
கள்ளத் தனங்களும் அறிவானடி அவன்
    கைப்பட நானும் கரைவேனடி என்
உள்ளத்தின் உள்ளே நுழைவானடி அவன்
    உண்டு உறங்கிட மகிழ்வேனடி என்
பள்ளத்தை நிரப்பும் பக்தனடி அவன்
    பாதத்தை தொட்டு வணங்குங் கடி.              4

சன்மார்க்க சங்க சித்தனடி அவன்
    சாகாக் கல்வி கற்றானடி என்
பன்மார்க்க நிலை பறித்தானடி அவன்
    பலரும் புகழும் புத்தனடி என்
அன்புக் காதல் கணவரடி அவன்
    எல்லா உயிரின் உருவமடி என்
கன்னத்தில் முத்த மிடுவானடி அவன்
    காதலைப் பெறவே துதியுங் கடி.                       5

திருவருட்பா நூலைத் தந்தானடி அவன்
    தருமச் சாலையில் சென்றானடி என்
உருவில் கலந்து நிற்பானடி அவன்
    உறவினை நாடிச் செல்லுங்கடி என்
இருகண்ணில் இருப்பா னடி அவன்
    இல்லாத இடமே இல்லையடி திரு
மருதூரில் வருவிக்க உற்றானடி அவன்
    மாயமாய் மறையும் மாய னடி.                        6

அனையா தீபம் ஆனாரடி அவன்
    அணைய என்னை இழந்தேனடி என்
வினைகளை ஓட்டிய வீரனடி அவன்
    வடலூரில் வாழும் வள்ளலடி என்
நினைவாய் இருக்கும் நல்லனடி அவன்
    நிழலாய் நானும் இருப்பேனடி என்
மனையில் புகுந்த மன்னனடி அவன்
    மரணம் இல்லா மனித னடி.                           7 

கடை விரித்தே வைத்தானடி அவன்
    கடையை வாங்கிக் கொண்டேனடி என்
தடை களெல்லாம் எண்ணேனடி அவன்
    தயவு இருக்க அஞ்சேனடி என்
குடையை சுருட்டி வைத்தேனடி அவன்
    கருணை மழையில் நனைந்தேனடி என்
எடையும் பஞ்சாய் ஆனதடி அவன்
    எல்லையில் பறந்தே சென்றே னடி.                    8

சாதியும் மதமும் சாய்ந்ததடி அவன்
    சத்திய ஜோதி சாய்த்ததடி என்
வீதியும் வடலூ ரானதடி அவன்
    வானிலே வட்ட மிட்டேனடி என்
நீதியும் சன்மார்க்க மானதடி அவன்
    நானெனச் சொல்லும் நேரமடி என்
பாதியும் புறத்தே சென்றதடி அவன்
    பெருவாழ்வை நானும் பெற்றே னடி.                   9

எல்லாம் வல்லான் வந்தானடி அவன்
    என்னை மணந்தே சென்றானடி என்
இல்லாமை இங்கு மாய்ந்ததடி அவன்
    இருக்க நானும் இல்லையடி என்
கல்லாமை கரை கண்டதடி சாகாக்
    கல்வியும் கற்று இருந்தேனடி நான்
நல்லோர் கூட்டத்தில் நடந்தேனடி அவன்
    நில்லாக் கூட்டத்தை மறந்தே னடி.                     10

எட்டும் இரண்டும் உரைத்தானடி என்னை
    எட்டா உயரத்தில் வைத்தானடி அவன்
கட்டும் ஆடைகள் ஆனேனடி நான்
    கட்டி யணைக்க முயன்றேனடி உடனே
விட்டு விலகிச் சென்றானடி பலநாள்
    வாய் விட்டு அழுதேனடி அவன்
சட்டென்று என்னுள் சாய்ந்தானடி என்
    சழக்கெல்லாம் மாய நின்றா னடி.                      11 

கண்ணே மணியே என்றானடி அவன்
    கற்கண்டுத் தேனா யானானடி என்
பண்ணிலே இசையென இருந்தானடி அவன்
    பொருளெல்லாம் என்ன தாச்சுதடி என்
வண்ணம் எனக்குச் செய்தானடி அவன்
    வான்புகழ் வள்ளல் ஆனானடி குவளைத்
தண்ணீரில் விளக்கை எரித்தானடி அவன்
    தன்னிகர் இல்லாத் தலைவ னடி.                             12

மேட்டுக் குப்பம் சென்றானடி அவன்
    மறைய எண்ணம் கொண்டானடி என்
ஏட்டுக்கு எழுத்தாய் ஆனானடி அவன்
    எழுந்தே என்னோடு வருவானடி என்
பாட்டுக்கு தாளம் போட்டானடி அவன்
    பார்க்க நானும் மறைந்தேனடி என்
நாட்டுக்கு அரசன் ஆனானடி அவன்
    நானாகும் திருநாளும் வந்த தடி.                              13

அந்த சித்திவளாகம் அழைக்குதடி அத்திரு
    வறை என்னை மயக்குதடி என்
சிந்தை எல்லாம் களிக்குதடி அவனது
    சொந்த படிப்பை படிக்குதடி என்
சந்தை உலகியல் சரிந்ததடி சுத்த
    சன்மார்க்க மோகம் ஈர்க்குதடி என்
பந்தப் பாசங்கள் அறுந்ததடி அவன்
    பொற்தாமரை பாதங்கள் பணியு தடி.                  14 

பெருவாழ்வு ஒன்றைப் பெற்றேனடி அவன்
    பெருஞ் சொல்லை நானும் காத்தேனடி
கருக்கொண்டு பிறக்க மாட்டேனடி இனி
    கட்டையில் போகவும் மாட்டேனடி என்
இருக் கண்ணும் பார்க்குதடி அவன்
    அண்டம் முழுதும் அலையுதடி காலக்
கருவை நோக்குதடி காலமில்லா தாச்சுதடி
    குருட் டாட்டம் இன்றே ஓய்ந்ததடி.                            15

அருட்பெருஞ் ஜோதி ஆனேனடி அவன்
    அருள்பெற்று நானும் ஆண்டேனடி சற்
குருநாதன் என்றானடி தனிப் பெருங்
    கருணைக்கு நன்றி சொன்னேனடி நான்
எருபோட்டு செடியொன்று வளர்ந்தேனடி அது
    அழகாய் பூப்பூத்து மணக்குதடி அவன்
நருமண தோட்டத்து பூக்களிலே நானும்

    நறுந்தேன் கொண்டு நீடு வாழ்வேனடி.                        16

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.