Tuesday, December 6, 2016

மஹாயாணம்

மஹாயாணம்

புத்த மதத்தின் எட்டு நல் வழிகள் அல்லாது புத்தரால் போதிக்கப்பட்ட பல அறநெறிகளும் ஒழுக்க நெறிகளும் உள்ளன. புத்தர் மறைந்து சில மாதங்களுக்குப் பிறகு அந்நெறிகளை புத்த பிக்குகள் தொகுத்து 'திரிபிடகம்' என்று உலகிற்கு வழங்கினர்.

இதில் ஒழுக்கத்தை போதிப்பது 'விநயபிடகம்'. அறநெறியைப் போதிப்பது 'தம்மபிடகம்'. மன வலிமையை ஊட்டுவது 'சூத்திரபிடகம்’ஆகும். புத்தர் தமது போதனைகளை பாலி மொழியில் நிகழ்த்தினார். அதேபோல் இந்த திரிபிடகம் நூலும் பாலி மொழியிலேயே அமைந்துள்ளது.

புத்தத்தை இன்னும் உலக அளவில் பரப்ப வேண்டும் என்ற ஆசை கொண்ட சில புத்த பிக்குகள், புத்தர் மறைந்த சுமார் நூறு ஆண்டுகள் கழித்து 'வைசாலி' நகரத்துக்கு அருகில் எட்டு மாதம் தங்கி ஆலோசித்தனர். புத்த மதத்தில் சில புதுமையான கருத்துக்களை புகுத்த திட்டமிட்டனர். ஆனால் முடிவாக, 'புத்த மதத்தில் புதுமைகளைப் புகுத்துவதற்கு இடமில்லை' என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

அவற்றுள் சில புத்த பிக்குகள் புதுமையை புகுத்தினால்தான் புத்த மதம் உலக அளவில் வளரும் என்று அம்முடிவுக்கு உடன்படவில்லை. புதுமையை விரும்பிய புத்த பிக்குகளால் புத்த மதத்திற்குள் 'மஹாயாணம்' என்ற பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. 'புதுமை மதத்தை பாழ்படுத்திவிடும்' என்ற பிக்குகளை 'ஹீனயாணம்' என்று இவர்கள்அழைத்தனர்.

          இந்து வேதங்களில் காணப்படும் சடங்குகளை கடுமையாக எதிர்த்த புத்தரின் போதனைக்கு மாறாக, மஹாயாணத்தில் சில சடங்குகள் புகுத்தப்பட்டன. மேலும் புத்தர் புலால் உண்பதை கடுமையாக கண்டித்தார். அதனை இந்த மஹாயாண பெளத்தர்கள் தடை செய்தனர். புலால் உண்ணலாம் என்று விதியை தளர்த்தினர். இது போன்று உண்மையான ஹீனயாணத்திற்கும் புதுமையான மஹாயாணத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

          இன்று புத்தம் உலக அளவில் பரவியிருப்பதற்கு, அன்று விதிகளை தளர்த்தி மஹாயாணம் கண்டதே காரணம். உண்மையான புத்த மதத்தினரை ஹீனயாணம் என்று கூறுவதை ஈனமாக கருதிய அவர்கள், தங்களைத் தாங்களே 'தேரவாத பெளத்தர்கள்' என்று பெயர் சூட்டிக்கொண்டனர். (தேரவாதம் - மூத்தோர் வழி)

தேரவாதம் இல்லையென்றால் 'பெளத்தம்' என்றால் என்ன வென்றே தெரிந்திருக்காது. புத்தர் புலால் உண்பதை தடை செய்ததைக்கூட அறியாமல் இருக்கும் இன்றைய சீனர்களை பார்த்தால் நமக்கு மஹாயாணம் நன்கு விளங்கும். பெரியார், அம்பேத்கர் போன்றோரும் புத்தரை ஆதரித்தார்கள் என்றால்... அதற்கும் காரணம் இந்த மஹாயாணம்தான்.

புலால் உண்பதையும், சாதி, மதங்களையும் அதன் சடங்குகளையும் வள்ளற்பெருமான் எதிர்க்காமல் தமது போதனையை சைவ சமயம் சார்ந்து செய்திருந்தால் (அவ்வாறு செய்வது இயலாது) அன்றைக்கே உலக அளவில் திருவருட்பா பரவியிருக்கும். ஆனால் ஒழுக்கங்களை விடுத்து ஒரு கொள்கை மக்களிடத்தில் பரவி என்ன பயன்? ஒன்றுமில்லை. உயிரில்லாத பிணம் நடமாடுவதாகவே அதனைக் கருத வேண்டும்.

புத்தரை வணங்கிக்கொண்டே புலால் உண்பவர்களை இவ்வுலகில் பல நாடுகளில் காணும்போது, புத்தர் புன்னகைக்கின்றார்! நாம் அழுவதா? சிரிப்பதா எனத் தெரியவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா...? தற்போது நம்மில், வள்ளற்பெருமானை வணங்கிக்கொண்டே புலால் உண்பவர்களும் சாதி, சமய, மதங்களிலும், சடங்குகளை செய்பவர்களும் மிக மிக அதிகமாகவே உள்ளனர். இவர்களெலாம் உயிரில்லாத பிணங்களே.     




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.