Saturday, January 18, 2014

சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 1


சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 1

அன்பர்களுக்கு வணக்கம்!

நாம் தற்போது 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான "சிவவாக்கியார்" அருளிய "சிவவாக்கியம்" என்னும் நூலில் உள்ள தத்துவக் கருத்துகளையும், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபில் ஒருவரான "வள்ளலார்" அருளிய "திருஅருட்பா" என்னும் அருள்வாக்கியத்தில் உள்ள தத்துவக் கருத்துகளையும் ஒருங்கிணைத்து சற்றே உரசிப்பார்ப்போம்.

14-ம் நூற்றாண்டில் தத்துவக்கருத்துகளை வேறு யாரையும்விட மிக ஆழமாக அலசியவரும் இவ்வுலகில் பதித்தவரும் சிவவாக்கியார் ஆவர். நாம் வணங்கும் இறைவனை ஒரு மதத்துள்ளும், ஒரு சமயத்துள்ளும், பல சடங்குகளுக்குள்ளும், பல பூஜைவழிபாட்டுக்குள்ளும் அடைத்து வைத்திருந்த வேதாந்திகளை கடுமையாக சாடியவர் சிவவாக்கியார். இவற்றிற்குள் சிக்கிக்கொண்ட இறைவனை அதிலிருந்து மீட்டு அநாதியாக்கினார். பாமரர்களின் பக்தியினை வேதாந்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டதை கண்டித்தார்.

வேதாந்திகளுக்கு தமிழக சைவர்களும், வைனவர்களும் எதிரியாக இருந்தனர். சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் வேதாந்திகள் எதிரியாக இருந்தனர். இன்று வரை சைவமும், வைணவமும் வேதாந்தத்தை வீழ்த்தமுடியவில்லை. காரணம் பாமரர்களின் பக்தியானது, சடங்கு மற்றும் பூஜையுடன் நின்றுவிடுகின்றது. பாமரமக்கள் இவற்றை கடந்துவராத அளவிற்கு இவ்வுலகத்தில், உண்மை இறைவனையே, சடங்கு, பூஜை என்னும் மாயையில் மறைத்துவிட்டார்கள். தமிழ் வளர்த்த சைவமும், வைணவமும் வேதாந்திகளிடம் கைகட்டி சேவகம் செய்வதைச் சிதம்பரம் கோயிலில் இன்றும் காணலாம். இதற்குக் காரணம் வேதாந்திகள் அல்ல, பாமரர்களாகிய நாம்தான். இவ்வுலகில் இறையடிச் சேர சாகாக்கல்வியினை அறியாது, உலகியல் சந்தைப்படிப்பை படித்த மற்றும் படிக்காதவர்கள் தங்களை பக்தர்கள் எனக்கூறிக்கொள்ளும் உலகியலர் யாவருமே பாமரர்கள்தான். 

சிவவாக்கியாருக்கு மேற்கண்ட வேதாந்திகள், சைவர்கள், வைணவர்கள் ஆகிய மூவரின் தத்துவமும் தவறு என்று அதனை 14-ம் நூற்றாண்டிலேயே உடைத்தெரிந்த முன்னவர் சிவவாக்கியார் ஆவார். அதன் விளைவாக அவரிலிருந்து எழுந்த தீப்பொறியே "சிவவாக்கியம்" ஆகும்.

14-ம் நூற்றாண்டில் விளைந்த வாழைக்கு, 19-ம் நூற்றாண்டில் அடி வாழையாக இவ்வுலகில் எழுந்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் ஆவார். இவரது முடிவான தத்துவங்களும் சிவவாக்கியாரின் தத்துவத்தை (சிலவற்றைத்தவிர) பெரும்பாலும் தழுவிய ஒன்றாகவே இருப்பதைக் காணலாம். வள்ளலார், வேதாந்தம், சைவம், வைணம் போன்ற மத சமயத் தத்துவங்களில் முதலில் சிக்குண்டார். பிறகு இறுதியில் அவையெல்லாம் பொய் பொய்யே, என்றும், அவற்றில் சிக்கி மாளாதீர் உலகீர்! என்று உண்மையுரைத்தார். 'நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தை'  என்று அருள்வாக்கியத்தை உரைத்து அந்த பேரிறைவனை, "ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி" என்று சிவவாக்கியார் போன்று இறைவனை அநாதியாக்குகின்றார்.

"ஆதியுண்டு அந்தமில்லை
    அன்றுநாலு வேதமில்லை
சோதியுண்டு சொல்லுமில்லை
    சொல்லிறந்தது ஏதுமில்லை
ஆதியான மூவரில்
    அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும்
    ஆரறிவர் அண்ணலே" (சிவவாக்கியம்)

முடிவற்ற ஒரு ஆதி உண்டு என்றும், அந்த ஆதிக்கு சோதி என்றும் பெயரிடுகிறார். அன்று (ஆதி பிறந்தபோது) அந்த சோதியினை சுட்டுவதற்கு ஓர் சொல்லுமில்லை, சொல்லக்கூடியவர்கள் யாருமில்லை, நாலு வேதங்கள் உள்ளிட்ட சகலமும் பின்னர் வந்தவையே என்றும் கூறுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கிற மூவரில் இருக்கும் மூச்சும் ஆதியில்லை, எனவே இவர்களது மூச்சும் ஒருநாளில் நின்றுவிடும் இயல்பையே பெற்றுள்ளனர் என்கிறார்.

இவர் தமது தத்துவத்தில் ஆதி என்ற தொடக்கம் இருப்பதாக கூறுவதைக் கவனிக்கவேண்டும். முடிவில்லாத ஒன்றுக்கு ஒரு தொடக்கம் இருந்தது என்றால், அந்த தொடக்கத்தை தொடங்கியது எது? அதற்கு முன்னர் இருந்தது எது? போன்ற கேள்விகள் எழச் செய்கின்றன. அதனை "யார் அறிவர்?" என்று தமது தத்துவ தேடலை ஒரு கேள்வியுடன் முடித்துவிட்டார்.

"ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
    அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
    நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
    சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
    விளம்பினேன் வம்மினோ விரைந்தே. (5453-திருஅருட்பா)

வள்ளலார் அவர்கள் தாம் கண்ட இறைவனுக்கும் சோதி என்றே பெயரிடுகிறார். ஆனால் அந்த சோதிக்கு ஆதி என்ற தொடக்கம் கிடையாது என்று திருஅருட்பாவில் பல இடங்களில் முழங்குகின்றார். எது ஒன்று இருக்கிறதோ அதற்கு ஒரு தொடக்கம் இருந்தே ஆகவேண்டும். முடிவு வேண்டுமானால் இல்லாமல் அல்லது தொடர்ந்துக்கொண்டே இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தொடக்கமே / பிறப்பே இல்லாத ஒன்று எப்படி இருக்கமுடியும். வள்ளலாரின் தத்துவமும் எங்கோ தவறுகிறது, என நினைக்கையில், தமது திருஅருட்பாவில் ஓரிடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஆதி என்றும் பாடியிருப்பதைக் காணமுடிகின்றது,


'சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
 ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார்' (திருஅருட்பா-4303)

ஆனால் பெரும்பாலும் ஆதியற்றவன் இறைவன் என்றே திருஅருட்பா முழுதும் கூறுகிறது.


சிவவாக்கியாரும், வள்ளலாரும் தாம் கண்ட சோதியாம் இறைவனுக்கு ஒரு தொடக்கம் இருக்கிறது என்று ஒருவரும், தொடக்கம் இல்லை என ஒருவரும் பாடியிருப்பது வியப்பளிக்கிறது. இங்கு நாம் இருவரின் தத்துவத்தையும் உரசிப்பார்க்கையில் இரண்டு தத்துவத்திலும் ஒரு முழுமை உண்மை இல்லை என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது.

'மூவரில் அமர்ந்திருந்த வாயுவும் ஆதியன்று' என்ற சிவவாக்கியாரின் தத்துவத்துடன் வள்ளலாரின் தத்துவம் ஒருங்கிணைவதை காணலாம். வள்ளலார் தாம் எழுதிய உரைநடைப்பகுதியில் இம்மூவர்களுக்கு எவ்வளவுகாலம் ஆயுள் உள்ளது எனத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

 "சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்னவே சாற்றப் புகினும் சாலார்" என்கிறார் வள்ளலார். சமயத் தெய்வங்கள் மூவர் உட்பட யார் யாரெல்லாம் நாமது வணக்கத்திற்கு உள்ளனரோ அவர்கள் எல்லாம் சிறியத் துறும்பு என்று சொல்லக்கூட முடியாத அளவிற்கு தாழ்நிலையில் இருப்பதாக வள்ளலார் கூறுகிறார்.

பிரம்மனின் வயது 4.35,000 ஆண்டுகள்
விஷ்ணுவின் வயது 8,64,000 ஆண்டுகள்
ருத்திரனின் வயது 12,90,000 ஆண்டுகள்
மகேஷ்வரன் வயது 17,28,000 ஆண்டுகள்
சதாசிவன் வயது 43,20,000 ஆண்டுகள்

துரும்புகளாகிய தாழ்நிலையில் உள்ளவர்களின் வயதை மேற்கண்டாவாறு வள்ளலார் தமது உரைநடைப்பகுதியில் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவரவர்களின் ஆயுள் முடிந்தவுடன் இறந்த பிரம்மாவும், விஷ்ணுவும், சிவனும் எத்தனையோ கோடி என்றும், இன்று இருப்பவர்கள் எத்தனையாவது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று கூறயியலாதநிலையில் உள்ளார்கள் என்கிறார் வள்ளலார். இவர்களே தாழ்நிலையில் இருக்கின்றார்கள் என்றால் மனிதர்களாகிய நமது ஆயுள் 120 ஆண்டுகளே என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆனால் நமது ஆயுளை நீட்டிக்க முடியும், மரணமிலா பெருவாழ்வில் வாழ முடியும். நாம், நமது அடுத்தப் பிறப்பில் மூவர்களில் ஏதேனும் ஒருவராகக்கூட மிக எளிதில் பிறந்துவிட முடியும். ஆனால் மனிதப் பிறப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்கிறார் வள்ளலார்.

அதனால்தான் கிடைப்பதற்கரியப் பிறவி இம்மனித பிறவி என்பார் வள்ளலார். சரி, மனிதராகிய வள்ளலாரின் ஆயுள் என்ன?  "என் பொழுது வான் பொழுது" என்பார் வள்ளார். ஞானதேகம் பெற்ற மனிதனுக்கு வயது கிடையாது, சர்வ மகாசக்தி, சர்வ சுதந்தரம், காலாதீதன் என்று வள்ளலார் குறிப்பிடுகிறார். இப்போது சொல்லுங்கள் மனித ஆயுள் 120 ஆண்டுகள் தானா? மனிதர்களாகிய நம்மால் மட்டுமே காலத்தைக் கடந்து காலாதீதன் ஆகமுடியும். ஆனால் மேற்கண்ட சமய தெய்வங்கள் என பெயர் பெற்ற துரும்புகள் யாவும் மரணமிலா பெருவாழ்வை பெறவே முடியாது, மரணம் நிச்சயம் உண்டு, அதனால்தான் தாழ்பிறவி என்று சாடுகின்றார் வள்ளலார். மனிதனுக்கு மரணம் அஜாக்கிரதையால் வருகிறதே அன்றி மனிதனுக்கு மரணம் இல்லை, மனித உடல் மட்டுமே மெய், சத்தியம், உண்மை என்று அறியவேண்டும். இனியும் நாம் சமயத் தெய்வங்களை கடவுளாக வணங்குவது சரியா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். சிவவாக்கியார் கூற்றுபடியும் வள்ளலார் கூற்றுபடியும் மூவர்களின் சுவாசக்காற்றில் ஆதி என்ற இறை இல்லை என்பது இங்கே மிகத்தெளிவாக நிரூபனமாகின்றது.

'தன்னையும் யார் அறிவார் அண்ணலே?' என்கிறார் சிவவாக்கியார். அதாவது சோதியான ஆதியையும் தன்னையும் என்னால் அறியமுடியவில்லை என்கிறார். ஆனால் இங்கே வள்ளலார் தன்னையும் ஆதி அந்தம் இல்லா சோதியையும் மிகத்தெளிவாக அறிந்துக்கொண்டார்.

'தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே' என்று தன்னை அறிவதற்கு முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார். தான் ஒரு சிற்றணு வடிவனன். நாபியிலிருந்து நெற்றியின் நடுவரை ஒரு நாடி இருக்கிறது, அந்நாடியின் முடிவில் நான் ஒரு சிற்றணுவாக ஒரு ஜவ்வு வடிவில் தொங்குகின்றேன், மூன்றில் ஒரு பங்கு மேல்புறம் மஞ்சளாகவும் கீழ்புறம் வெள்ளை நிறமாகவும் நான் இருக்கின்றேன், எனக்கு ஆன்மா என்று பெயர், நான் அசைந்துக்கொண்டே இருக்கின்றேன், நான் ஆயிரம் கோடி சூரிய பிரகாசமுடையவன், எனக்கும் ஆதியும் அந்தமும் இல்லை என்பன போன்ற உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

மேலும் ஆதியும் அந்தமும் இல்லாத சோதியின் அடி முடிகளை தாம் கண்டுவிட்டதாக பல இடங்களில் பாடி பரவசம் அடைகிறார். 
  
"படிமுடி கடந்தனை பார்இது பார்என
அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி"

"அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம் பிடி"

போன்ற உண்மைகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் வள்ளலார். எனவே தன்னை அறிவதிலும், இறைவனை அறிவதிலும், இவ்விருவருக்கும் கடுகிற்கும் மேருவிற்கும் இருக்கும் இடைவெளியினை மிகத்தெளிவாகவே காணமுடிகிறது.

ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே. (திருஅருட்பா 4742)



                                 
இனி சிவவாக்கியாரின் அடுத்த ஒரு பாடலுக்குச் செல்வோம்... தொடரும்....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.