Monday, February 8, 2016

இராமலிங்க அந்தாதி - 701-800



அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  

                      இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா


ஆடுகின்ற திருவடியில் அன்பு கொண்டு
பாடுகின்றேன் திருவருள் பாடலே - நீடு
வாழவே காதலாகி வந்தேன் ராமலிங்கமே
வீழ வைக்குமோ வினை.

வினை செய்யும் வீண் செயலெல்லாம்
எனை விட்டு ஓடியதுகாண் - நினையே
காதல் புரிந்து கசிந்தேன் ராமலிங்கமே
சாதல் எனக்கில்லைநீயே சான்று.

சான்றாகிய மூன்றையும் சாமிக்கே கொடுத்து
நான்என்ற நாயை நகைத்தேன் - ஊன்செய்
காதலை உயிர்க் காதலாக்கி ராமலிங்கமே
மாதவம் புரிந்தேன் மண்ணில்.

மண்ணில் எடுத்த மலமொத்த தேகத்தை
எண்ணில் மண்ணும் ஈடாகாது - கண்ணே
மணியேஎன காதல் மொழியால் ராமலிங்கமே
அணிசெய்ய வந்தேன் உன்னை.

உன்னை நினைந்து உள்உருகிக் காதலால்
என்னையே தந்தேன் உனக்கு - உன்னுடல்
பொருள் ஆவியை புனைய ராமலிங்கமே
அருள் செய்வாய் எனக்கு.

எனக்கும் உனக்கும் இசைந்தக் காதலால்
தினமும் பாடுவேன் திருவருளை - கன
நேரமும் காதலாலுனை நாடி ராமலிங்கமே
பேரதிசம் புரிவேன் பாராய்.

பாராமுகங் காட்டும் புண்ணியா நானுனை
நேராய்ப் பார்க்கும் நாள்தான் - வாராமல்
போனால் திருவருள் பாடுமோ ராமலிங்கமே
ஊனாகி உயிராகி உளன்.
உளமுனது வசம் உறைந்து காதலால்
களவு கண்டு களித்தேன் - அளவின்றி
கொடுத்த பொற் கரங்களை ராமலிங்கமே
எடுத்து ஒற்றினேன் எந்தாய்.

என்தனி அன்பே என்னுயிர்க் கலப்பே
என் இறையாம்காதலே என் - துன்பம்
போக்கும் அரும் பொருளே ராமலிங்கமே
தூக்கம் போனது தூரம்.

தூரம் என்றிருந்தேன் தலைவாநீ அருகே
ஈரமாய் இருப்பதை அறியேன் - தாரமாய்
நானிருக்க உனக்கு நாணமோ ராமலிங்கமே
வானில்லாத இடத்தில் வரவா.                           710

வரமொன்று கேட்டு வந்தேன் என்காதலா
தரமன மில்லையோ தலைவா - இரக்கம்
உனக்கே இல்லை என்றால் ராமலிங்கமே
எனக்கேது அந்த அருள்.

அருளின் பொருளே அன்பின் குணமே
கருவின் அணுவே காதலிலே - உருகி
பசலை வந்தது பாராய் ராமலிங்கமே
அசதி கொடுப்பது அழகோ.

அழகே என்அறிவே ஆருயிர் பதியேநீ
அழவைத்து எனை அடிப்பது - அழகோ
காதலால் உனைக் கூடவே ராமலிங்கமே
நாதமுடி கடந்தேன் நான்.

நான்தானே உந்தன் நடன அழகிஐயா
ஏன்என் நடத்திற்கு இரங்காய் - வான்
போல அம்பலம் பாராய் ராமலிங்கமே
காலமின்றி கலந்து கூடாய்.

கூடும் சுகத்தைக் கூட்ட வருவேன்
ஆடும் அடிக்கு அணியாய் - ஏடு
நிறையப் பாடி நிற்பேன் ராமலிங்கமே
இறைமுடி காண இன்பம்.

இன்பச் சோலையிலே இனிய மலராக
அன்புத் தேனுடவே இருந்தேன் - பொன்
வண்டென நீயே வருவாய் ராமலிங்கமே
கண் மூடாது காத்திருப்பேன்.

காத்திருக்கும் காலத்தில் காலன் வந்திடுமோ
நாத்திகக் காதல் நடந்திடுமோ - ஆத்திரத்தில்
உயிர் விடும் உணர்ச்சியுறுமோ ராமலிங்கமே
பயிலேன் சன்மார்க்கப் பாடம்.

பாடங் கேட்கவே பறந்தோடி வந்தே
மாட மேறினேன் மன்னா - ஆடக
ஒளியில் உன் அழகை ராமலிங்கமே
களித்து காதல் கற்றேன்.

கற்றதெல்லாம் நலனே காதலாகி நான்
பெற்ற தெல்லாம் பயனே - உற்றமொழி
உரைத்த நின்பாத அடியில் ராமலிங்கமே
கரைந்தே இருக்கக் கடவேன்.

கடவுள் நிலையறிந்து கடவுளாகும் ஓர்
நடனத்தை எனக்கே நல்கினாய் - உடல்
நிலைக்கவே உயிர் நிற்க ராமலிங்கமே
வலை யிட்டு வைத்தேன்.                               720

வைத்தியம் பார்த்து வெந்ததைத் தின்று
பைத்தியம் போல் பாடைஏறேன் - கைத்
தலமிருகப் பற்றி தீர்வேன் ராமலிங்கமே
உலகம் நாமின்றி உருளாது.

உருவம் மறையும் உண்மையை எனக்கு
கருவிலே சொன்ன காதலா - இருளும்
மறைக்க அருளும் மறைக்க ராமலிங்கமே
இறையுள் மறைய இசை.

இசை யமுதினை இசைக்காது காதலால்
அசையும் மனதை அசைக்காது - தசை
தடவ ஆசையுற்று துவள ராமலிங்கமே
மடயனுக் களித்தாய்நவ மணி.
  
மணி அறிந்தேன் மந்திரமும் அறிந்தேன்
பணியும் அறிந்து பாடுகின்றேன் - பிணி
மூப்பு மரணமிலா மருந்தை ராமலிங்கமே
காப்பாய் எனக்குக் கொடு.

கொடுக்க கொடுக்க காதல் பெருகுதே
ஒடுக்கநிலை எனைவந் தாளுதே - தொடுத்
தப்பாட்டில் திருவருள் தீண்டுதே ராமலிங்கமே
எப்பாலவர்க்கும் நாமே இறை.

இறைவனே என்னுயிர் உடையானே ஏழ்
மறைதிரை நீக்கும் மாயோனே - குறை
யில்லாக் காதல் இன்பமே ராமலிங்கமே
எல்லா உயிரு மானேன்.

ஆனவரைப் பாடியே ஆண்டவனு மாவேன்
போனப் பிறவிபோல் போகேன் - ஊனக்
கண்ணுக்குத் தோன்றா கதியை ராமலிங்கமே
எண்திரை விலக்கி அளி.

அளித்த மரணங்களுள் அம்மரணமே இறுதி
புளித்துப் படுத்தேன் பாடைதோறும் - வளி
யெனவந்தேன் வீழேன் இனி ராமலிங்கமே
கனக தேகங் கொண்டேன்.

கொண்ட கோலமதில் கண்டிடுவே னுனை
தொண்ட னெனக்குநீயே துணை - கண்
ணிரண்டில் கலந்த ஒளியே ராமலிங்கமே
இரக்கம் இருக்க இறவேன்.

இறப்பதற்கா பிறந்தோம் என்ற கேள்வியை
உறவோடு கேட்டு உணர்த்தினாய் - அறங்
காவல் புரியும்திரு கருணீக ராமலிங்கமே
ஏவல் செய்வேன் உன்னடிக்கு.                           730

அடியும் முடியுமில்லா அண்ட விலாச
மடியைத் தொட்டு முத்தமிட்டு - இடி
மின்னல் காற்றை முகர்ந்து ராமலிங்கமே
இன்ன லின்றி இருப்பேன்.

இருக்கும் சூரியசந்திர எல்லைக் கப்பால்
ஒருபெரும் பரமாகாசம் உள்ளது - மரு
தூர்தலை வன்ஆங் குள்ளான் ராமலிங்கமே 
ஓரிறைவன் இடம் அது.

அதுவிருக்கு மிடத்தில் அண்ட கோடிகளாய்
மதுகுடித்தார் போல் மயங்கினேன் - எது
வென்று அறிவேன் அவனை ராமலிங்கமே
அன்று சொன்ன அருட்ஜோதியது.

அருட்ஜோதி ஆடுகிற அம்பலம் கண்டு
ஒருமையில் நின் றிருந்தேன் - அருமை
பதிக ளெல்லாம் புறமிருக்க ராமலிங்கமே
மதித் தெனையே மணந்தான்.
மணஞ்செய் வல்ல மணாளா உனையன்றி
பண முடையாரைப் பார்ப்பேனோ - குணம்
வேறாயினு மெனை விரட்டாய் ராமலிங்கமே
ஈறேழு உலகமும் ஈந்தாய்.

ஈந்த அத்தருணம் என்னிலை மறந்து
சாந்த சித்தம் சென்றேன் - காந்தக்
காதலால் கவர்ந்து காமுற்று ராமலிங்கமே
சாதனம் என்று சாய்ந்தேன்.

சாய்என்றப் பெயரைச் சூட்டி நாயாகிப்போன
தாய்க்குல மரபானதே தமிழ்க்குலம் - பேய்
பிடித்தப் பிள்ளையைப் பாராய் ராமலிங்கமே
குடிப்பெய ரில்லையோ கூறாய்.

கூறிய வாய்மொழி கொதிப்பெலாம் குளிர்ந்து
ஆறின உன்சத்திய அருட்பாவால் - ஏறிய
சமயமத சாதி சழக்கெலாம் ராமலிங்கமே
இமயம் விட்டு இறந்தன.

இறந்தாலும் உன்னடியில் இறப்பேன் இனிநான்
பிறந்தாலும் உன்மடியில் பிறப்பேன் - உறவு
உனையன்றி வேறு அணையேன் ராமலிங்கமே
நினைவாகி இறவாமல் நிற்பேன்.

நிற்கும் அழகால் நின்றன கண்கள்நீ
விற்கும் பொருளை வாங்கி - நற்
குலமாக ஆகக் கண்டேன் ராமலிங்கமே
மலங்கள் வீழ மலர்ந்தேன்.                              740

மலர்ந்த மலரொன்றை மணந்து எனக்கே
குலமோங்க கொடுத்த கணவா - உலகம்
வியக்க வந்தஎன் வானவா ராமலிங்கமே
இயக்கம் நீயன்றி இல்லை.

இல்லை என்பதில்லை இனிநீயன்றி எனக்கேது
மில்லை இறப்பதற்கும்நான் இல்லை - எல்லை
என்ற காலமும்எனக் கில்லை ராமலிங்கமே
உன்பெயருக் கோர் இழிவில்லை.

இழிவு சொல்லாத இனியசெந்நாப் புலவனே
அழிவு அறியாமுத்தேக அறிஞனே - குழியில்
வீழாத செங்கோல்மா வீரனே ராமலிங்கமே
ஊழான உலகம் உனக்கில்லை.

உனக்கும் எனக்குமோர் உறவுண்டு அது
மனத்தால் கூடும் மணவுறவு - இனமும்
பெயரும் குணமும் பொருந்த ராமலிங்கமே
உயர்ந்து வாழ்வோம் உலகில்.

உலகெலாம் நீயெஎன உணர்ந்து ஓதியே
பலமெலாம் நான் பெற்றேன் - சிலகாலம்
வாழ்ந்து செல்ல வரவில்லை ராமலிங்கமே
ஊழி தோறுமூழி ஓங்கினேன்.

ஓங்கிய முச்சுடர் ஒளிகளும் என்னைத்
தாங்கிய அத்திரு தாள்களும் - வாங்கிய
முத்தேக வடிவமும் முறையே ராமலிங்கமே
நித்தியனான உனக்கே நல்கினேன்.

நல்கியதிரு வருள்யாவும் நாட்டில் பலர்
பல்கியே வாழப் பாடினேன் - எல்லா
உயிரும் இன்புற்று உயரவே ராமலிங்கமே
பயில் வித்தப் பாட்டிது.

பாட்டிலே பொருளாய் பொருளிலே அருளாய்
ஏட்டிலே எழுத்தாய் இருப்பவனே - நாட்டிலே
திருவருள் படிப்பாரைத் திருத்தி ராமலிங்கமே
குருவருள் புரிவாய் குளிர்ந்து.

குளிர்ந்தக் கண்களால் காதலை செலுத்தி
அளித்த சுகத்தை என்னென்பேன் - வளி
மண்டல வானமும் மிரள ராமலிங்கமே
அண்டமும் அழுதது இன்பத்தில்.

இன்பமே இனிதுன்பம் இல்லை உலகீர்
அன்பினால் அவனை அழைத்து - தன்
குறை இயம்ப கடவுளாய் ராமலிங்கமே
அறை திறந்துவந்து அருள்வான்.                         750

அருள்வாய் விரைந்து என்முகம் பார்க்க
வருவாய் மகிழ்ந்து வருக - இருத்தல்
எத்தனை நாளோ அறியேன் ராமலிங்கமே
பத்து மாதம் போலானேன்.

ஆனவரை ஆற்றி இருந்தும் இன்னும்
போனவரை நேர் பாரேன் - ஏனவர்
என்மீது கோப முற்றார் ராமலிங்கமே
என்றும் உனக்காக ஏங்குவேன்.

ஏங்கும் ஏழையின் உள்ளம் அறியாது
ஆங்கே அறையில் என்னவேலை - ஓங்கி
வளர்ந்தக் காட்டில் வாடுகிறேன் ராமலிங்கமே
இளமையில் கூட எழுந்திரு.

எழுந்தோடி வந்து ஏக்கப்பெரு மூச்சுவிட்டு
அழுத முகத்துடன் அடைந்தும் - தழுவ
மனமில்லை ஏனோ மன்னவா ராமலிங்கமே
தனம் விம்மியும் தயவில்லை.

தயவுக்கு தலைவனே தருமத்தின் தலைவனே
நயமாய் அழைத்தும் நினைவில்லை - பயன்
கருதிப் பாடிலேன் கருணீககுல ராமலிங்கமே
குருதி ஓட்டத்தால் குறித்தேன்.

குறித்துப் பாடினும் காதலால் வளைத்து
கூறினும் என்ன கண்டேன் - நாறிடுமென்
உடம்பு நாறுமோ அழியுமோ ராமலிங்கமே
இடமின்றி இருக்கவே இச்சை.

இச்சை ஒன்றுண்டு அதுஎன்கால சக்கர
அச்சை காண்பதன்றிவே றல்ல - பச்சை
விலகியப் பின் வருவான் ராமலிங்கமே
நிலவுலகு காட்டி நிற்பான்.

நிற்கவோ தயவில்லை நடக்கவோ சுதந்தரமில்லை
கற்கவோ அறிவும் காலமுமில்லை - விற்கவோ
பொருளில்லை இந்தப் பாவிக்கு ராமலிங்கமே
அருளு மில்லையோ உன்னில்.

உன்னையே கதியென்று ஊர்தோறும் சொல்லி
என்னையே கொடுத்து இறந்தேன் - அன்பாய்
இறந்தோனை எழுப்பி அருளும் ராமலிங்கமே
மறவேன் என்றும் மறியேன்.

மறிந்தோ ரெல்லாம் மாண்புற மண்ணுலகம்
அறிய எழுந்துவரும்கால மிது - வறியோரும்
செல்வராகி இன்பம் சூழக்காண ராமலிங்கமே
எல்லாம் செய்வான் இனி.                               760

இனியொரு விதியும் எனக்கான நற்கதியும்
கனியக் காத்திருக்கும் கைக்கிளை - தனிப்
பெண் என்னை பார்க்காமல் ராமலிங்கமே
கண்மூன்றி ருந்தும்பயனேது காண்.

காண்பது கானலாய் காதலும் ஒருதலையாய்
வேண்டு வதெல்லாம் விழலாயாகாது - தூண்டி
எனைப் பாடவைத்த என்னில் ராமலிங்கமே
சினையாய் வர சிந்தைசெய்.

சிந்தனை ஒன்றாகி சிற்சபைத் தலைவனை
வந்தனம் செய்து வரவேற்றேன் - சந்தனம்
பூசி நறுமணப் பன்னீர்த்தூவி ராமலிங்கமே
ஆசிபெற உனை அலங்கரித்தேன்.

அலங்கரித்தேன் சபையை ஆடல் புரிந்து
கலந் திருக்கக் கருதாயோ - நலமோடு
உடலுடன் உயிர் உறவாட ராமலிங்கமே
கடலூர் வருக களித்து.

களித்திருக்க என்வீட்டு கதவைத் திறந்து
ஒளிந்திருந்த காதல் ஒளியே - சளிப்புக்
காணாது இன்பங் கொடுக்க ராமலிங்கமே
வீணான வெட்கம் விலக்கு.

விலகிச் செல்லவே வெள்ளாடை உடுத்தி
இலகுவாய் சென்றால் இனியும் - கலங்கா
திருக்க தனம்மா ளில்லைநான் ராமலிங்கமே
உரு மறைத்தாலு முனைவிடேன்.

உனையன்றி வேறொரு உறவை கனவிலும்
நினையேன் கண்ணீர் நனைய - எனையே
அழவைப்ப துனக்கு அழகோ ராமலிங்கமே
பழம் அழுகாமுன் பசித்தீர்.

பசியில்லா மருந்தே பாசமில்லா உறவே
புசிப்பில்லா சுவையே பாரில் - வசிப்பில்லா
உடலே அவ்வுடலுறு முயிரே ராமலிங்கமே
படமில்லா உருவே புகழ்.

புகழ்வேண்டா தருமமே பள்ளிசெல்லா அறிவே
இகழில்லாப் பெயரேமரு தூரில் - பகலிரவில்லா
பிறப்பே மரணமிலா பெருவாழ்வே ராமலிங்கமே
இறப்பில்லா பிறப்பே இதம்.

இதமில்லா உலகிலே இன்னாகூறாப் பாடலே
மதமில்லா மன்னனே மன்றில் - கதவில்லா
அறையே உருவில்லா அணியே ராமலிங்கமே
மறையில்லா மணியே மாண்பு.                          770

மாண்புடையக் காதல் மன்னா என்
வேண்டுதல் கேட்டு வந்தால் - ஆண்
மயில் அகவலில் மயங்கி ராமலிங்கமே
பயில்வேன் காதல் பாடம்.

பாடம் கற்கவே படிகடந்து வந்துஉன்
ஓடம் ஏறிய ஒய்யாரிநான் - நாடகச்
செயலா லெனைச் சூடி ராமலிங்கமே
தயவா லெனைத் தாங்கு.

தாங்குமுன் தோளில் தழைத்து நான்
தூங்கவே ஆசை தலைவா - ஏங்கு
மென் ஏக்கம்நீக்கி எனை ராமலிங்கமே
உன் கரத்தால் அணை.

அணைத்த சுகம் அனையெனப் பெருகி
கணைத் தேடி கைபோகும் - இணைய
நாள் இதுவே நேரமிதுவே ராமலிங்கமே
தாள்வை என் தலைமீது.

தலைவாரி பூச்சூடி தலைவா உனக்காக
மலையேறி வந்த மான் - கலையான
காதல் சொல்லி காமுற்று ராமலிங்கமே
பாதம் தொட்டுப் பணிந்தேன்.

பணிந் தழைக்கும் பாவைஎன் உயிரை
அணிந் திருக்கும் ஆணழகா - மணி
ஓசை கேட்கும் ஓரடியை ராமலிங்கமே
ஆசைதீர என்னுள் இசை.

இசைத்தல் எங்ஙனமோ வென்று உன்னை
அசைக்கவும் முடியா தென்றேன் - பசைப்
பொருளாம் காதல் பாட்டில் ராமலிங்கமே
இருவரும் இசைய இணைந்தோம்.

தோம்தோமென்று போடு தாளம் நாமொன்றா
னோமென்று சங்கூதி ஆடிப்பாடும் - ஓம்ஓமென
ஐந்து பாகத்துள் ஒளிந்தோடி ராமலிங்கமே
அந்த பிரணவமென அறி.

அறியா பருவத்தில் என்னுள் இணைந்தே
பிறிவிலா தமர்ந்த பரமனே - உறியில்நீ
இருப்பினும் என் உரிமை ராமலிங்கமே
உருகிப் போகிறாளிவ் வேழை.

ஏழைப் படும்பாடென்று அன்றுநீ பாடியதை
வாழையடி வாழையென வந்தென் - ஊழை
ஒழிக்க நானும் ஓதுகிறேன் ராமலிங்கமே
வழிகாட்டி எனை வாழ்த்து.                              780

வாழ்த்திய வள்ளல் வாய்மொழிச் சொல்
ஏழ்பிறவி கடந்தும் இனிக்கும் - ஆழ்
மனக் காதலால் மன்மத ராமலிங்கமே
எனக்கு மாலை இட்டான்.

இட்ட கட்டளைகளை இசைந்தே செய்து
பட்ட மரத்தை பூக்கச்செய்வேன் - வட்ட
மையம் புகவே முயன்றேன் ராமலிங்கமே
ஐயமின்றி புகுந் தாடுவேன்.

ஆடும் அருட்ஜோதி யழகில் கலந்து
பாடும் திருவருள் பாட்டே - கூடுங்
குறிப்பை இரு கண்களால் ராமலிங்கமே
அறிவித்த நயம் அறிவேன்.

அறிவிலே புகுந்து என்னன்பிலே நுழைந்து
பொறியிலே கலந்த புண்ணியா - குறித்த
மகா மந்திர மாமனிதனே ராமலிங்கமே
சிகாரப் பதியே சரணம்.

சரண மடைந்தேன் சன்மார்க்க சாமியே
மரணம் வாரா மாண்பைக்காமியே - பர
மாகாச வெளி மைந்தனே ராமலிங்கமே
ஏகாந்த இனிமையே அருமை.

அருகே நீஇருந்தால் அந்த மரணமும்நின்
அருளே என்றுநான் ஏற்பேன் - கருவாய்ப்
பிறந்து ஜென்மம் பலவும் ராமலிங்கமே
உறவெனப் பாடியுனை அடைவேன்.

அடையும் நாள்காட்டி அறையுங் காட்டி
மடை திறந்த மாணிக்கமே - விடை
பெற்று வந்து பேரொளியாய் ராமலிங்கமே
பெற்ற பெருவாழ்வு பெறுவேன்.

பெறுகின்ற அருளால் பேரருள் பாட்டினை
உறுதியாய் உரைக்கின்றேன் உலகீர் - மறுப்
பேது மில்லா இறவாகதியை ராமலிங்கமே
சாதுவாய் வந்து சொன்னான்.

சொன்னபடி சுத்த சன்மார்க்க நெறிகாட்டி
அன்னதான மளித்து ஒளியாகி - தன்தே
கத்தை ஒளித்துக் காட்டி ராமலிங்கமே
சத்திய மென சார்ந்தான்.

சார்ந்தோ ரெல்லாம் சாதிமதம் விடுத்து
நேர்வழிச் சென்று நிலைத்தார் - ஓர்
இறைவன் நீஎன இருக்க ராமலிங்கமே
கறைபடுமோ என் காதல்.                                790

காதல் கடலில் கப்போலோட்டி நீதான்
சாத லன்றிவாழ சாதித்தாய் - வேதம்
நான்கினும் உயர் நாமமே ராமலிங்கமே
ஊன் ஒளியாய் ஆனாய்.

ஆனாலும் தீதான ஆசையால் மோசம்
போனாலு முனை பிறியேன் - வானாலும்
காற்றாலும் எனைக் கூடிய ராமலிங்கமே
கூற்றொழிந் ததெனக் கூறு.

கூறுகின்ற மதங்களில் கூற்று மிருப்பான்
ஏறுகிறோ மென்று விழுந்து - வாறுகிறீர்
கூற்றில்லா மார்க்கம் கண்ட ராமலிங்கமே
ஆற்று படுத்தினா னன்று.

அன்றொரு நாள் என்கைப் பிடித்துவா
என்று இருள்கடக்க உதவிய - உன்பே
ரருளை நினைந் தழுவேன் ராமலிங்கமே
இருத்தலை நான் அறிந்தேன்.

அறிந்த நாள்முதல் உன்னை அன்றி
எறிந்த சாமிகள் ஏராளம் - மறித்த
மத மெல்லாம் மாய்த்து ராமலிங்கமே
பதமென கொண்டேன் பக்தி.

பக்தியென்று கல்லுக்கு பூச்சூடி பால்வார்த்து
சக்தி வருமென்று மயங்கினேன் - முக்தி
எதுவென தெரியாது ஏங்கினேன் ராமலிங்கமே
அதுவிது வென அலைந்தேன்.

அலையாய் எழுந்தும் இறப்பெனும்கரை கடக்க
மலைத்து மண்ணில் மடிந்தேன் - கலையுரைத்தக்
கற்பனைக் கடலில் குளித்தேன் ராமலிங்கமே
அற்பவயதே அதிகமென இருந்தேன்.

இருஎன்றாலும் இல்லாத இடத்திற்கும் தாழ்ந்து
உருண் டோடுகிறது எம்மனம் - திருமலையில்
ஏறதிரு வருட்பாபாடுவ தில்லையே ராமலிங்கமே
உறவென எனக்கா உன்பெயர்.

உன்நிலை யறிந்தும் உன்னுடல் இறந்ததென
வன்மையாய் சொல்லும் வஞ்சகன் - துன்மார்க்கம்
வீழாதிருக்க சன்மார்க்கம் விடுத்தேன் ராமலிங்கமே
ஏழாந்திருமுறை ஏன் என்றேன்.

என்னுயிரின் வடிவமே என்னுடலில் கலந்து
இன்புறும் உயிர்ச்சுகம் அறியேன் - துன்புறும்
உடல்சுகம் ஒன்றே உடையேன் ராமலிங்கமே
இடம்வலம் நடுவும் அறியேன்.                           800


(இராமலிங்க அந்தாதி - தொடரும்)
 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.