Sunday, February 18, 2018

மாதம் ஒரு மகான் – ஸ்ரீ வீர வைராக்கிய மூர்த்தி சுவாமிகள்

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (பிப்ரவரி 2018) வெளிவந்தவை:

மாதம் ஒரு மகான் –

ஸ்ரீ வீர வைராக்கிய மூர்த்தி சுவாமிகள்

திருவண்ணாமலை அருகிலுள்ள சீனந்தல் எனும் ஊரில் ஆதி விஸ்வகர்ம பிராமண மடமான ஸ்ரீ ஜெகத்குரு ஆதி சிவலிங்காச்சாரிய குருபீடத்தின் ஏழாவது பீடாதிபதியே ஸ்ரீ வீர வைராக்கியமூர்த்தி சுவாமிகள் ஆவார் .இவர் இளமையிலேயே ருக்,யசூர், சாம, அதர்வண , பிரணவ எனும் ஐந்து வேதத்தின் தேர்ச்சியும் மற்றைய ஆகம,புராண இதிகாச நூல்களையும் கசடறக் கற்று வல்லுனரானார். இவர் திரிகால சிவபூஜை செய்து செம்பொருட்சோதியின் இன்னருள் பெற்று சிறப்புற வழி நடத்தி சென்றார்.

இவர் இவ்வாறு இருக்கும் போது திருவண்ணாமலை திருநகரை ஓர் மன்னன் ஆட்சி செய்து வந்தான் . அப்பொழுது கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்ந்து கொண்டிருந்தது .அவ்விழாவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வரும்  சமயம் திருவருணையில் உள்ள ஐந்து மடாதிபதிகளும் பல்லக்கில் ஆலய மரியாதையுடன் சுவாமிக்கு பின்னால் செல்வது வழக்கம். அவ்வண்ணமே திருவண்ணாமலையில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கு பின்னால் பல்லக்கில் சென்றார்கள் .அது கண்ட மன்னன் சுவாமிஉலா வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் மடாதிபதிகளை பல்லக்கில் ஏற்றி வருவது எதற்காக எனக் கேட்டான் .அது கண்ட அங்கிருந்த அன்பர்கள் அவர்கள் ஆலயத்திற்கு நேரும் இடையூறுகளை நீக்க வல்லவர்கள் . எனவே தான் இவர்களுக்கு இத்தகைய சிறப்பு என கூறினார்கள். அவர்தம் சொல் கேட்ட மன்னன் நன்று இதோ இங்குள்ள கோவிலின் காராம் பசுவை உடல் வேறு தலை வேறாக வெட்டுகிறேன் எனக்கூறி வெட்டினான் .இவர்கள் தெய்வ வல்லமை உடையவராக இருப்பின் இப்ப சுவை உயிர்ப்பிக்கட்டும் .இல்லையென்றால் இந்த சிவாலயத்தை அழிப்பேன் என சீறி ஆவேசமாக ஆணையிட்டு சென்றான்.
இது கண்ட மடாதிபதிகள் பல வகையிலும் காராம் பசுவை உயிர் பெற வைக்க முயன்றனர். முடியாத நிலையில் கருவறையில் உள்ள ஸ்ரீ அண்ணாமலையாரிடம் சென்று முறையிட்டனர். அப்பொழுது அண்ணாமலையார் அசரீரியாக "இங்கிருந்து வடதிசையில் கண்ணுவ மகரிஷி ஆஸ்ரமத்தின் கண் ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சார்ய குருபீட பாரம்பர்ய ஏழாவது பீடாதிபதியாக உள்ள ஸ்ரீ வீர வைராக்கியமூர்த்தியை அழைத்து வந்தால் தான் இவ்வரிய பணியினை செய்ய முடியும். எனவே அனைவரும் சென்று அழைத்து வருக" என்று கூறி மலர்ந்து அருளினார் .இது கேட்ட மடாதிபதிகள் திருமூலாரண்ய திவ்ய க்ஷேத்திரமாகிய சீனத்தில் மடாலயம் நோக்கி சென்றார்கள். அப்பொழுது சுவாமிகள் வயது பதினான்கு ஆகும் அவர் தமது நித்திய அனுஷ்டானங்களை மிருகண்டு நதிக்கரையில் முடித்து சிவயோகத்தில் அமர்ந்து இருந்த வேலையில் இரண்டு புலிகள் அவர் இருபுறமும் நின்று காவல் இருந்தன.இது கண்ட மடாதிபதிகள்  நாம் வயதில் மூப்பு எய்தி பூரணத்துவ நிலைக்கு பக்குவப்பட்டு உள்ளோம். ஆனால் இவரோ சிறுவனாக உள்ளாரே, இவரால் எப்படி இச்சீரிய அருஞ்செயலை செய்ய முடியும் என மனதளவில் எண்ணினார்கள். இவ்வாறு இவர்கள் எண்ணியதும் புலிகள் கர்ஜிக்கத் துவங்கின. இறைவன் அருள் தூண்ட தியானம் கலைத்த சுவாமிகள் அப் புலிகளை சாந்தம் அடையச் செய்ய அவைகள் புலித் தோல்களாக மாறி விட்டன.பின் தங்களது தவறை உணர்ந்து, தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை எடுத்துக் கூறினர்..

ஸ்ரீ வீரவைராக்கியமூர்த்தி சுவாமிகள் ஸ்ரீ ஆதிசிவலிங்காச்சார்ய மூர்த்தியின் அருளாசியை பெற்று பின்வருமாறு கூறினார், "நன்று நாங்கள் திருவண்ணாமலைக்கு வந்து துண்டிக்கப்பட்ட காராம் பாவினை உயிர் உண்டாக்க வேண்டுமாயின் ஒரு நாழிகை தூரத்திற்கு ஒரு உலைக்கூடம் அமைக்க வேண்டும் .அங்கே பாதரட்சை, கமண்டலம், தண்டம் காய்ந்து கொண்டிருக்க வேண்டும்" என ஆணையிட்டார். சுவாமிகள் உத்தரவுப்படி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டன.
சுவாமிகள் அன்று தனது வழிபாட்டை நிறைவு செய்து சீனத்தல் மடத்திலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு உலைக்கூடத்திலும் புதிதாக காய்ந்து கொண்டிருக்கும் பாதரட்சை, கமண்டலம், தண்டம், முதலியவற்றை அணிந்து கொண்டு பழுக்க காய்ச்சிய பாதரட்சையை பூண்ட வண்ணமாகவே திருவண்ணாமலை ஈசான்ய குளக்கரையை அடைந்தார். மாலைப் பொழுதை நெருங்கியதால் சந்தியா வந்தனத்தை அங்கிருந்து ஓர்க் கைபிடி புல்லை எடுத்துக் கொண்டு ஆலயம் நோக்கி சென்றார். சுவாமிகள் ஆலயத்தினை நெருங்க நெருங்க வெட்டப்பட்டிருந்த காராம் பசுவின் உடல் ஒன்றாக இணையத் துவங்கியது, பின் கோவிலின் உட்சென்று சிவலிங்க மந்திரத்தை கூறி கமண்டலத்தில் உள்ள புனித நீரினை காராம் பசுவின் மீது தெளித்து பிரம்பால் தட்டினார். உடனே உயிரிழந்த அந்த பசு முழக்கமிட்டு எழுந்தது. அப்பொழுது தாம் கொண்டு வந்த புல்லை அதற்கு கொடுத்தார். அப்ப சுவின் கன்று துயர் நீங்கி துள்ளி வந்து பாலுண்டது. இக்காட்சியைக் கண்ட மன்னனும் மக்களும் வியப்புற்று நின்றனர். உடனே சுவாமிகள் நின் அருமை அறியா இம்மக்கள் மத்தியில் நீ இருக்கலாகாது எனக்கூறி பசுவை முக்தி அடைய செய்தார். பின்பு பசுவானது மறைந்தது.
இது கண்ட மன்னன் சுவாமியை நோக்கி என்னால் இதனை நம்ப முடியவில்லை, இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக நினைக்கிறேன், எனக்கூறி மீண்டும் சுவாமியை மன்னன் பரிசோதித்து பார்த்தான்.சுவாமியிடம் தாங்கள் உண்மையான இறைவனின் இன்னருள் உடையவர் எனில் நான் அளிக்கும் நெய்வேத்தியப் பொருட்களையே இறைவனுக்கு படைக்க வேண்டும் என்றான்.சுவாமிகள் அவ்வாறே ஆகட்டும் எனக் கூற அம்மன்னன் பல வகை மாமிச உணவுகளை தட்டிவி வைத்து ஓர் ஆடையால் மறைத்து அளித்தான்.சுவாமிகள் அண்ணாமலையாருக்கு அதனை நெய்வேத்தியமாக காட்டி பின் மேலாடையை நீக்க மாமிசங்கள் அனைத்தும் வண்ணமலர்களாக மாறி இருந்தன. அதனைக் கண்டதும் அனைவரும் வியந்தனர். மீண்டும் அம்மன்னன் நம்பவில்லை, மீண்டும் பரிசோதிக்க எண்ணினான். இறுதியாக தாங்கள் தவப்பயன்மிக்கவர் எனில் இங்குள்ள பெரிய கல் நந்தியை கனைத்தெழ செய்ய வேண்டும், எனக் கூறினான். அதைக் கேட்ட சுவாமிகள் தங்கள் விருப்பம் அதுவானால் இறைவன் குரு அருளால் அவ்வாறே நிகழும் என்றார். உடனே பெரியகல் நந்தி கனைத்து எழுந்து நின்று தனது காலை மடக்கி சுவாமிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மடாலயம் உள்ள திசையை நோக்கி தனது வலது காலை மடக்கி வலப்புறமாக தலையை திருப்பிய வண்ணம் அமர்ந்தது. ( திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள நான்கு நந்தியும் இடது பக்கம் காலை மடக்கி அமர்ந்து இருக்க பெரிய நந்தி மட்டும் வலது பக்கம் காலை மடக்கியும் தலைவலது பக்கமாக பார்த்தவாறு உள்ளது). சிவலிங்க மந்திரத்தால் விளைந்த அரிய செயல்களை கண்ட மன்னன் மெய்சிலிர்க்க சுவாமியின் காலில் விழுந்து வணங்கி தனது ஆளுமைக்கு உட்பட்ட இந்த திருவண்ணாமலை முழுவதையும் உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான்.சுவாமிகள் பொருளாசை எமக்கு இல்லை எனவே எமக்கு தேவையில்லை எனக் கூறினார். இது கேட்ட மன்னன் இவ்வாதீன பீடாதிபதிகள் திருவண்ணாமலை ஆலயத்திற்கு வரும் சமயம் ஆலய பரிவாரங்களுடன் பல்லக்கில் அழைத்து வர வேண்டும் என செப்பேடு சாசனம் எழுதி வைத்து ,இன்றுமுதல் இம்மடம் மகத்துவமடம் என பெயர் பெறட்டும் என்று கூறி வணங்கி பணிந்து நின்றான்.

பின்னர் நால்வகை படைகளுடன் சுவாமிகளை அழைத்து சென்று மடாலயத்திற்கு சென்று மரியாதை செய்து விட்டு திருவண்ணாமலை திரும்பினான்.ஸ்ரீவைராக்யமூர்த்தி சுவாமிகள் வேத பாராயணம் செய்தும் மக்களுக்கு நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் மக்களுக்கு பரப்பி வரலானார்.ஸ்ரீ சுவாமிகள் தனது மடத்தின் முதலாம் பீடாதிபதி ஸ்ரீஜெகத்குரு ஆதிசிவலிங்காச்சார்யமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்த இடத்திற்கு வலது புறம் தானும் முக்தி அடைந்து மக்களுக்கு இன்றளவும் அருள்பாலித்து வருகின்றார்.

ஸ்ரீ வீரவைராக்கியமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்த நாளிலிருந்து இன்று வரை அவருக்கு பின் வந்த மடாதிபதிகளாலும் விஸ்வகர்ம மக்களாலும் அவரது குரு பூஜா மகோன்னத விழா பிரதி ஆண்டு வைகாசி மாதம் முதல்ஞாயிற்றுக்கிழமையன்று ஆதினத்தில் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.