Saturday, August 14, 2021

லிகித ஜெபம்

     அருட்பெருஞ்ஜோதி                                                             அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை                                                            அருட்பெருஞ்ஜோதி

                                           எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

                                                                               லிகித ஜெபம்

நமது கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்காதா? என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெபம் என்று ஒன்றும் இருக்கின்றது. பேப்பரில், பழைய டைரியில், நோட்டுப் புத்தகங்களில் இறை நாமத்தை எழுதுவார்களே அதைத்தான் லிகித ஜெபம் என்று கூறுவார்கள். எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில் வயதான அனைவரும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை இதற்கெனவே ஒதுக்கி இடைவிடாமல் எழுதுவார்கள். இதனால் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. அப்படி எழுதும் குடுபங்களில் பரிபூரண குடும்ப அமைதி நிலவுகின்றது. இறை நிலையை அடைவதற்கும், குடும்பங்களில் தேவையான வளம் நிறைவதற்கும் இந்த லிகித ஜெபம் நிச்சயம் உதவும்.

மேலும் மனம் ஒன்றி எழுத எழுதஇறை சிந்தனை மேலோங்கும். நம்மை அறியாமலே நாம் அந்த இறைவனின் நேரடிப் பார்வைக்கு உட்படுகின்றோம். அப்போது நடக்க முடியாது என நாம் கருதிய காரியங்கள்கூட நடப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். அப்படி மகத்தான வல்லமை இந்த லிகித ஜெபத்திற்கு உண்டு. வள்ளலார் லிகிதெ ஜெபம் செய்கையில் ஒரு நாள் இரவில் வெளிச்சம் இல்லாமலேயே எழுதிக்கொண்டே இருக்கின்றார். அவருக்கு மட்டுமே விளங்கக்கூடிய வெளிச்சம் எங்கிருந்து கிடைத்து என அறிய முடியவில்லை. அப்பொழுது அங்கு வந்த ஒருவர் என்ன ஐயா? இருட்டில் எழுதிக்கோண்டே இருக்கின்றீர்களே? என வினவும்பொழுது தான் வள்ளலார் சுய நிலைக்கு வருகின்றார். உடனே அவரைப்பார்த்து ஒரு விளக்கு எடுத்து வாரும்என கட்டளை இட்டுவிட்டு தாம் எழுதுவதை நிறுத்துகின்றார். இவ்வாறு லிகித ஜெபத்திற்கு மகத்தான வல்லமை உண்டு.

விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்தக் காலங்களில் நம்மில் பெரும்பாலும் எழுதும் பழக்கத்தையே கைவிட்டு விட்டோம். அனைத்து எழுத்துக்களும் டிஜிட்டல் வடிவில் வந்துவிட்டன. பேப்பர் எடுத்து எழுதுவதைவிட கணிணியில் தட்டச்சு செய்து அதனை வெள்ளைத்தாளில் ப்ரிண்ட் எடுத்துவிடுகின்றோம். அதனால் கைகளால் எழுதும் பழக்கம் தற்போது குறைந்துக்கொண்டே வருகின்றது. வள்ளற்பெருமான் மற்றும் அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு .மு.கந்தசாமிப்பிள்ளை ஆகியோர்களை பின்பற்றி இறையருளால் யாமும் தற்போது வரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். எனினும் அதில் ஒன்று கூட எனது கைப்பட எழுதவில்லை. அனைத்தும் கணிணியில் டிஜிட்டல் வடிவிலேயே உள்ளது என்பதே இதற்கு சாட்சியாக உள்ளது.

வள்ளற்பெருமான் தமது கரங்களால் ஆராயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி முடித்தார். அதுவும் லிகித ஜெபமே. அந்த லிகித ஜெபமும் அவரது மரணமிலா வாழ்க்கைக்கு பேருதவி செய்திருக்கின்றது. சன்மார்க்கர்களில் பலர் திருவருட்பா முற்றோதல் செய்வதைக் காணலாம். அதைவிட திருவருட்பாவை முழுதும் நோட்டுப் புத்தகங்களில் எழுதி முடிப்பது ஒரு சிறந்த லிகித ஜெபமாகும். திருவருட்பாவை வள்ளலார் மட்டுமல்ல, நாமும் எழுதுவோம். நம் கைப்பட எழுதிய திருவருட்பாக்கள் நமது இல்லங்களில் பூஜையில் இருக்குமாறு செய்வோம்.

அல்லது வள்ளலார் அருளிய மஹா மந்திரமான

அருட்பெருஞ்ஜோதி          அருட்பெருஞ்ஜொதி

தனிப்பெருங்கருணை       அருட்பெருஞ்ஜோதி

 

என்கின்ற இறை மந்திரத்தை ஒரு கோடி முறை எழுதி முடியுங்கள். வள்ளலாரின் அருளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம் யார்? நமது முந்தைய பிறவிகளின் நிலை என்ன? நாம் இந்த பிறவியில் எந்த நிலையில் இருக்கின்றோம்? என்ன செய்ய விரும்புகின்றோம்? நாம் மரணமிலா பெருவாழ்வை இப்பிறவியில் அடைவோமா? அல்லது அடுத்தப் பிறவியில்நம் நிலை என்ன? என்பதை முற்றும் அறிந்த மகா ஞானி வள்ளலார் அறிவார். அவரது தரிசனம் ஒன்று போதும். இப்பிறவியின் நோக்கம் வெற்றிபெற்றுவிடும். நம் வாழ்வில் சிகரம் தொடும் அளவுக்கு சாதனைகள் செய்ய இயலும். நம்பி இந்த லிகித ஜெபம் செய்யுங்கள். 27-12-2012-ஆம் ஆண்டில் இந்த லிகித ஜெபம் பற்றின ஒரு கட்டுரையை யாம் எமது வலைப்பூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். ஆனால் நானும் இதுவரை (14-08-2022) அதனை பின்பற்றவில்லை என்பது எனது அலட்சிய போக்கேயாகும். எனவே வருகின்ற               15-08-2021 (75-ஆம் ஆண்டு இந்திய சுதந்தர தினம் முதல்) நானும் லிகித ஜெபம் உங்களுடன் செய்ய இருக்கின்றேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உலகம் முழுதும் உள்ள சன்மார்க்க சங்கங்கள் மஹா மந்திர மற்றும் திருவருட்பா முற்றும் எழுதும் லிகித ஜெபத்தை ஊக்குவிக்க வேண்டும். மற்ற மார்க்கங்களில் ஒரு குறிப்பிட்ட மந்திரங்களை ஒரு கோடி முறை எழுதினால் அவர்களுக்கு ஏதேனும் ஒரு பரிசினை அளித்து தங்கள் மார்க்க நம்பிக்கைகளை வளர்க்கின்றார்கள். சன்மார்க்க உலகில் நாமும் அதனை கைகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்து சென்னை அருட் வெங்கட் ஐயாஅவர்கள் இப்படிப்பட்ட மேலான லிகித ஜெபத்தை ஊக்குவித்து வருவதாக அறிகின்றேன். அவருக்கு எமது நன்றிகள் பல. ஒரு தனி நபர் இதனை செய்யும்போது சங்கங்களும் இம்முயற்சியில் இணைந்தால் சன்மார்க்கர்களின் இல்லம் அருளோங்கும் சபைகளாக மாறிவிடும்.

லிகித ஜெபம் என்பதுடன் நாம் ஜீவகாருண்யத்தையும் மறவாமல் கடைபிடிக்கவேண்டும். ஜீவகாருண்யம் இல்லாத எவ்வொரு செயலும் அறிவற்ற செயலாகையால், லிகித ஜெபத்துடன் நாம் நின்றுவிடக்கூடாது என்பதனையும் நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். புலால் மறுத்தவர்களுக்கே லிகித ஜெபம் கைகூடும். நாம் இப்பிறவியில் அடையத்தக்க இம்மை இன்ப லாபம், மறுமை இன்ப லாபம், பேரின்ப லாபம் இவை மூன்றில் முதல் இரண்டு லாபங்களுக்கு நமக்கு உதவுவது இந்த லிகித ஜெபமாகும். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி          அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை        அருட்பெருஞ்ஜோதி

 

 


மஹா மந்திரம் ஒரு கோடி முறை எழுதுவது என்பது 99% முடியாத காரியம். ஏனெனில் ஒருவர் ஒரு நாளைக்கு தனது ஓய்வு நேரத்தில் 100 மந்திரங்கள் எழுதிவருகின்றார் எனில், அவர் ஒரு கோடி முறை எழுத ஆகும் காலம் 278 ஆண்டுகளாகும். ஒரு நாளில் 1000 முறை மஹா மந்திரம் எழுதினால் 28 ஆண்டுகளில் முடித்துவிடலாம். ஆனால் “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜொதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என ஒரு நாளைக்கு 1000 முறை எழுதுவது என்பது 99% உலகியல் மக்களால் முடியாத காரியம். ஆனால் வள்ளல் பெருமானுக்காகவே தங்கள் ஆயுளை முழுதும் ஒப்படைத்திருக்கும் ஒரு நபர் அல்லது சாது நினைத்தால் ஒரு கோடியை பூரணத்துவம் செய்ய முடியும். குடும்பங்களில் இருக்கும் ஒரு நபர் வைராக்கியத்துடன் இருப்பின் ஒரு நாளைக்கு 500 மஹா மந்திரங்கள் எழுதி வரின், அவர் 56 வருடங்களில் இதனை செய்து முடிக்கலாம். ஒருவரின் தற்போதய வயதை கணக்கிட்டு ஒரு கோடி மந்திர லிகித ஜெபத்தை முடிக்க வேண்டும். அல்லது இறைவனை நினைத்து முடிந்த வரை ஒரு லட்சமேனும் தமது வாழ்நாளில் எழுதி முடிக்க நன்று. அல்லது திருவருட்பா ஆறு திருமுறைகளையும் எழுதி முடிப்பது மிகச்சிறந்தது. நன்றி. -- தி.ம.இராமலிங்கம்.

 

    

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.