Tuesday, March 25, 2014

மடந்தையர்களுடன் கூடுவோம்

                                           மடந்தையர்களுடன் கூடுவோம்

அன்பர்களே! வள்ளலார் மடந்தையர்களுடன் கூடிய நிகழ்வை நாம் இப்போது பார்ப்போம்,


'ஒரு பெண் வலிந்து வந்து என்னைக் கலந்தாள், அதை நினைத்து நான் உளம் வருந்தி அயர்ந்து இருந்தேன். அப்போது வந்து, 'இது கெட்ட காரியம் இல்லை, மகனே! என்று ஆறுதல் கூறிய பெருந்தகை நீ' என்று இறைவனைப்பற்றி அருள்விளக்க மாலையில் அடிகள் கூறுகிறார். 'எனக்கு மடந்தையர்கள் மீது மையல் சிறுது ஏற்பட்டதும் மடந்தையர்களைத் தாமே வலிந்து வரச்செய்து எனக்கு மாண்புடைய நண்பன் ஆனாய்' என்று பாடியிருக்கிறார்.

ஒருமடந்தை வலிந்தனைந்து கலந்தகன்ற பின்னர்
    உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
    பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
திருமடந்தை மார்இருவர் என் எதிரே நடிக்கச்
    செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
    காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே (4136)

மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
    வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே (4158)

அடிகளுக்குப் பெண்மீது விருப்பம் ஏற்பட்டவுடனே இறைவன் நட்புடன் ஒரு மடந்தையை அடிகள்பால் அனுப்பினான் என்று கூறினால் அது நகைப்பிற்கு இடமளிக்கும்.

திருஅருட்பா பாடல்களில் வரும் தமிழ் வார்த்தைகளை நேரடியாக பொருள் கொண்டுவரும் பாடல்கள் பல. மேற்கண்டவாறு மறைமுக பொருள்கொண்டுவரும் பாடல்களும் சில உள்ளன.

உலகியலில் ஆடவர்தான் பெண்களை வலிய கலப்பார்கள். அதற்கு உலகியலில் தண்டனை உண்டு. ஆனால் வள்ளலார் இப்பாடலில், தன்னை ஒரு பெண் வலிய வந்து கலந்தாள் என்கிறார். இது எப்படி உலகியலில் பொருந்தும்! ஆகையால் இதற்கு ஏதோ ஒரு மறைபொருள் உள்ளது என்பதை அறியவேண்டும்.

வள்ளலார் தன்னைமறந்து இருக்கையில், ஒரு பெண் பலாத்காரமாகக் கூடி இன்பமுற்ற பின்பு பிரிந்து போனதைப் போன்ற உணர்வை தனது புருவமத்தியில் உணருகிறார். அதன் உண்மை உணராது ஒரு பெண் என்னை வலிய கலந்து இன்புற்றாளே! இது என்ன கொடுமை, நான் தவறு செய்துவிட்டேனோ? என கலங்குகிறார்.

அப்போது இறைவன், உண்மையில் நீ எந்த தவறும் செய்யவில்லை, வருந்தாதே. நீ அனுபவித்த இன்பம் ஆண் பெண் கூட்டுறவால் ஏற்பட்ட கீழ்த்தரமான இன்பம் அல்ல. உனது சிரசின் உச்சிக்குக்கீழே நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. இது நமது திருவிளையாடல் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு ஆறுதல் கூறுகிறார்.

அடுத்ததாக, இரண்டு பெண்கள் தன்முன்னால் நடனம் செய்தனர், என்கிறார் வள்ளலார். பெண்களின் நடனத்தை ரசித்ததால் எனது குறைகளெல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தீர்த்ததாகவும் கூறுகின்றார். பெண்களின் நடனத்தை ரசிப்பதால் நமது சிறுமைகள் போகுமென்றால், நான் ஒரு நல்ல ரசிகனாக இருந்திருப்பேன், அதைவிட வேறென்ன முக்கியவேலை எனக்கு இருக்கிறது, ஏன் நீங்களும் கூட அவ்வாறே இருந்திருப்பீர்கள். ஆனால் அது அப்படியல்ல. அதாவது நம் தலையில் மூன்று சுரப்பிகள் உள்ளன. அவைகளில் இரண்டு சுரப்பிகள் ஒன்றோடொன்று எதிர்ரெதிர் செயல்புரிகிறபோது ஏற்படுகிற இன்பத்தாலும், தெளிவாலும் வள்ளலாரின் சிறுமைகள் நீங்கின என்பது கருத்து.

'உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள், தெள்ளிகுடைந்து நின்று ஆடார், வினை கெடார்' என்பது திருமந்திரம். நம் தலையினுள் மூன்று சுரப்பிகள் உள்ளன. அவை, பிணியல் (Pineal), பிட்டுடரி (Pituitari), கரோடிட் (Carotid), எனபன. இச்சுரப்பிகள் முறையே பெருமூளைக்கும், சிறுமூளைக்கும் இடையே ஒன்றும், அன்னம் என்கிற மேல்வாய்க்கு அருகில் ஒன்றும், குரல்வளைக்கு அடுத்து ஒன்றுமாக இருக்கின்றன. இந்த மூன்று சுரப்பிகளைத்தான் மூன்று மடந்தைகளாக ஞானிகள் குறிப்பிடுவார்கள்.

'பிளாவட்ஸ்கி' அம்மையார் எழுதிய மறைஞானம் என்ற நூலில், இச்சுரப்பிகளில் ஒன்றை 'பெண்உடம்பு' என்றே குறிப்பிடுகிறார். பெண் உடம்பு என்பது மூளையிலுள்ள பெண்குறிதான் என்கிறார். 'The uterus of the Brian' என்பது அம்மையார் திருவாக்கு. இந்த சுரப்பிகள் இயக்கத்தால் உண்டாகிற இன்ப மயக்கம், ஆண் பெண் கூட்டுறவால் உண்டாகிற இன்ப மயக்கம் போன்று இருக்கும்.

ஆண் பெண் கூட்டுறவால் பிறக்கிற பிள்ளை அணுபட்ச சிருட்டியாகும். அணு என்பது தூலப் பொருள். விபு என்பது ஒளிக்கதிர். விபுபட்ச சிருட்டியினை வள்ளலார் குறிக்கிறார். சிரநடு சிற்றம்பலத்திலுள்ள தெய்வீக உள் ஒளியாலும் சிந்தனையாகிய நம் மனமெனும் எண்ணத்தின் விளைவான உயிர் ஒளிகூட்டுறவாலும் உண்டாவது விபுபட்ச சிருட்டியாகும்.

எனவே நாமும் இந்த விபுபட்ச சிருட்டியை நமது மடந்தையர்களுடன் கூடிபெற்று இன்பம்அடைவோம். நம்பெருமானாருக்கு இறைவனே இச்சுகத்தை வலிய கொடுத்ததுதான் மற்ற ஞானிகளுக்கும் நம்பெருமானாருக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். மற்ற ஞானிகளெல்லாம் இதனை தேடியடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அருட்பெருஞ்ஜோதி            அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி 
 


 

2 comments:

  1. அன்புடையீர் வணக்கம்

    நான் அறிந்த வரை வடலூர் பெருமானின் பாடல்கள் பரிபாசையில் வருவன பெருமான் மங்கையரை சேர்ந்த தாக கூறுவது யோகம் செயும் பொழுது நித்தரை வருவதை பரிபாசையில் கூறியுள்ளார் .

    நன்றி

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள். தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.