Tuesday, April 4, 2017

பக்ஷபேதமும் சிருஷ்டியும்


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” மாத மின்னிதழில் ஏப்ரல்-2017 ஆம் மாதம் வெளியானது…

பக்ஷபேதமும் சிருஷ்டியும்
சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் - ஆக 5. இவற்றில் சம்பு, விபு - இவ்விரண்டிற்கும் அபக்குவமில்லை. மற்ற மூன்றிற்கும் பக்குவ அபக்குவ முள. இதற்குப் பிரமாணம். "அடர்மலத்தடையால் தடையுறும்", "தடையுறாப் பிரமன்" என்னும் திருப்பாசுரங்களின்* உள்ளக்கிடையா லுணர்க.மேற்படி பக்ஷ சிருஷ்டி விசித்திரங்களாவன: அணுபக்ஷ அபக்குவ சிருஷ்டி ஒஷதிகளாலும் பௌதிகங்களாலும் ஆகார மூலமாய் ஸ்திரீ புருஷ சம்பந்தத்தோடு உண்டாக்குவது. மேற்படி பக்குவ சிருஷ்டியாவது புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பது போல் தன் அஸ்தத்தால் ஸ்திரீயைத் தடவி ஊன்றி நோக்கிப் புருஷனோடு தேகசம்பந்தஞ் செய்வித்து உண்டாக்குவது. பரமாணுபக்ஷ அபக்குவ சிருஷ்டி தேகத்தைக் கரத்தால் பரிசித்து ஊன்றிப் பார்த்த உடன் கருத்தரித்தல். மேற்படி பக்ஷத்தில் பக்குவம் கண்ணால் பார்த்த உடனே புணர்ச்சியன்றிக் கருத்தரித்தல். சம்புபக்ஷம் வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல். பிரகிருதி பக்ஷத்தால் சங்கற்பித்த மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிண்டம் கீழ்த்தோன்றுதல். விபுபக்ஷசிருஷ்டி பார்த்தவுடன் திரண முதலானவற்றையும் நரனாகச் செய்வித்து அநேக விசித்திரங்கள் உண்டுபண்ணுவது. மேற்படி சிருஷ்டிகள் பல; வேதாகமங்களிலேயும் பலபட விரிந்தன.
-      திருவருட்பிரகாச வள்ளலார்



        இவ்வுலகில் மனித பிறப்புகள் எவ்வாறெல்லாம் நிகழ்கின்றன? என்று வள்ளற்பெருமான் இங்கு சுருக்கமாக விளக்கியிருக்கின்றார். மனித பிறப்புகள் கொள்கை வேறுபாட்டினால் (பசஷ பேதம் – பட்சம் வேறுபாட்டால்) பலவகையாக உள்ளதாக உரைக்கின்றார்.
        கொள்கை வேறுபாடு என்பது ஐந்து வகைகளாக வேறுபட்டுள்ளது.  அணு கோட்பாடு (அணுபட்சம்), பரமாணு பட்சம் (பரமாணுபட்சம்), சம்பு கோட்பாடு (சம்புபட்சம்), விபு கோட்பாடு (விபுபட்சம்), பிரகிருதி கோட்பாடு (பிரகிருதிபட்சம்) என ஐந்து கோட்பாடுகளின்படியே மனித பிறப்புகள் இப்பூமியில் பிறக்கின்றன.

        1. அணு கோட்பாடு: அணு என்பது ஆன்மாவினைக் குறிக்கும். எனவே இதனை ஆன்மக்கோட்பாடு எனலாம். இக்கோட்பாடு இரண்டு வகைப்படும். அவை அபக்குவ அணு கோட்பாடு, பக்குவ அணு கோட்பாடு ஆகும்.


        A. அபக்குவ ஆன்ம கோட்பாடு: இக்கோட்பாட்டின்படி மூலிகைகளையும், வேதிபொருட்களையும் உணவின் மூலமாக உட்கொண்டு, ஆண் பெண் உறவின் மூலம் தம்பதியினர்கள் ஒரு அபக்குவ ஆன்மாவினை தங்களது குழந்தையாக பெறுவது. இப்பூமியில் சிலர் திருமணம் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்கின்றார்கள் அல்லவா? அவர்கள் தாங்கள் குழந்தைப்பேறு பெறுவதற்காக சில மூலிகைகளையும், வேதிபொருட்களையும் மருத்துவர்கள் உதவியுடன் உண்டு குழந்தைப்பேறு பெறுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் அபக்குவ ஆன்மாவாகும்.

        B. பக்குவ ஆன்ம கோட்பாடு: இக்கோட்பாட்டின்படி, ஒரு ஆணாணவன் பெண்ணை பார்ப்பதுபோல் அதாவது சாதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கிறான் என்றால், அவளுடைய அங்கங்களை எல்லாம் தனது கண் பார்வையாலேயே அளந்து மன இன்பமடைந்து விடுவான். இது அப்பெண்ணுக்கே தெரியாது. ‘புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பதுபோல்’ என்று வள்ளற்பெருமான் ஆடவரின் இயல்பை நயமாக இங்கு எடுத்துரைக்கின்றார். அப்படி தமது பார்வையாலே அளந்தது போல், ஒரு பெண்ணினை தமது கரங்களால் தடவி கொடுத்து, ஆழப்பார்வையால் அவள் தேகத்தைப் பார்த்து பிறகு அவளுடன் தேக சம்பந்தம் செய்வதினால் கிடைக்கப்பெறும் குழந்தை பக்குவ ஆன்மாவாகும். இந்த கோட்பாட்டின்படிதான் இவ்வுலகில் பெரும்பான்மை தம்பதியினர்கள் குழந்தைப்பேறு பெறுகின்றனர்.       
         மேற்காணும் ஆன்ம கோட்பாட்டின்படியே (அணுபக்ஷம்) நமக்குத் தெரிந்தவரையில் இப்பூமியில் மனித ஜனனம் நடக்கின்றது. இதற்கு மேற்பட்டு வரும் கோட்பாடுகள் எல்லாம் நாம் இதுவரை பார்த்திராதது. அது என்ன என்பதனை இனி பார்ப்போம்…


        2. பரமாணு கோட்பாடு: அணு என்றால் ஆன்மா என்று பார்த்தோம். இங்கு பரமாணு என்றால் பக்குவத்தில் இன்னும் சற்று மேம்பட்ட ஆன்மா என்று பொருள். இக்கோட்பாடு இரண்டு வகைப்படும். அவை அபக்குவ பரமாணு கோட்பாடு, பக்குவ பரமாணு கோட்பாடு ஆகும்.



        A. அபக்குவ பரமாணு கோட்பாடு: ஒருவர் ஒரு பெண்ணைத் தொட்டு அவளை உற்று பார்த்தவுடன் அப்பெண்ணுக்கு கருத்தரித்து அதன்மூலம் குழந்தை பெறவைத்தல். இவ்வாறு பிறக்கும் குழந்தை மேலான அபக்குவ ஆன்மாவாகும்.

இக்கோட்பாட்டின்படி கணவனின் / ஒரு ஆணின் தேக சம்பந்தம் அப்பெண்ணுக்கு தேவையில்லை. குழந்தை வரம் வேண்டி ஒரு பெண்ணானவள் ஒரு அருளாளரிடம் செல்லும்போது, அவ்வருளாளர் அப்பெண்ணின் நெற்றியையோ, கைகளையோ தொட்டு அப்பெண்ணை உற்று நோக்கியவுடனே இறையருளால் அப்பெண்ணுக்கு அப்போதே கரு உண்டாகிவிடும். இவ்வாறு சில குழந்தைகளும் பிறப்பதுண்டு. அவைகள் மேலான அபக்குவ ஆன்மாவாக இருக்கும்.



B. பக்குவ பரமாணு கோட்பாடு: ஒரு பெண்ணை ஒருவர் தனது கண்களால் கண்டவுடன் கருத்தரித்து அதன் மூலம் குழந்தை பெறவைத்தல். இக்கோட்பாட்டின்படி அக்குழந்தை மேலான பக்குவ ஆன்மாவாக இருக்கும்.   

இக்கோட்பாட்டின்படியும் கணவனின் / ஒரு ஆணின் தேக சம்பந்தம் அப்பெண்ணுக்கு தேவையில்லை. மேலே கூறியதுபோல் ஒரு அருளாளர் தமது கண்களின் பார்வையை ஒரு பெண்ணின் மேல் செலுத்தியவுடன் அப்பெண்ணுக்கு உடனே இறையருளால் கருத்தரித்துவிடும். இவ்வாறும் சில குழந்தைகளும் பிறப்பதுண்டு. ஆனால் நமக்குத்தான் அக்குழந்தை இக்கோட்பாட்டின்படி பிறந்துள்ளது என்று தெரியாது. மேலான பக்குவ ஆன்மாக்கள் இவ்வாறு பிறப்பெடுக்கும்.



3. சம்பு கோட்பாடு:  சம்பு என்றால் இன்பத்தை கொடுப்பவன் எனப்பொருள்.  இக்கோட்பாட்டின்படி இன்பத்தை கொடுக்கின்ற பக்குவ ஆன்மாக்கள் பிறப்பெடுப்பார்கள். ஒரு அருளாளர் தனது வாக்கினால் வாழ்த்தியவுடனே அப்பெண்ணுக்கு கருத்தரித்துவிடும். இதன்படியும் ஆண் பெண் தேகசம்பந்தம் தேவைப்படுவதில்லை.




4. விபு கோட்பாடு: விபு என்றால் முதலாளி / எஜமான் என்று பொருள். ஆன்மாக்களுக்கு எல்லாம் எஜமானனாக இருக்கின்ற பக்குவ ஆன்மாக்கள் இக்கோட்பாட்டின்படி பிறப்பெடுப்பார்கள்.  ஒரு அருளாளர் தம் அருகில் உள்ள ஒரு துரும்பினையோ அல்லது எந்த ஒரு சிறு பொருளையோ தமது அருளாள் மனிதனாக உருமாற்றி அம்மனிதன் மூலம் அநேக விசித்திரங்கள் / சித்திகள் செய்வது. அப்படி உருவான மனிதன் விபு பக்குவ ஆன்மாவாக இருப்பான்.




5. பிரகிருதி கோட்பாடு: பிரகிருதி என்றால் மூலப்பகுதி எனப்பொருள். இயல்பான / நடுத்தரமான ஆன்மாக்கள் என்று ஒருவகையில் இதனை வகைப்படுத்தலாம். இக்கோட்பாட்டில் இரண்டு வகைகள் உள்ளன. இயல்பான அபக்குவ ஆன்மாக்கள், இயல்பான பக்குவ ஆன்மாக்கள் என்பதே அவை.

ஒரு அருளாளர் மூலவனான இறைவனை நினைத்து, குழந்தை பிறக்கவேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்ட ஒன்னரை மணிநேரத்தில் பெண்ணின் வாயிலிருந்து குழந்தை வெளிதோன்றிவிடும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் இயல்பான / பிரகிருதி அபக்குவ அல்லது பக்குவ ஆன்மாக்களாக இருக்கும்.   

இவைகள் போன்று இன்னும் பல பிறப்பின் வகைகள் உள்ளன. இந்து வேதாகமங்களிலும் இப்படிப்பட்ட பிறப்பு வகைகளை புராணக்கதைகள் மூலம் பலவாறாக சொல்லப்பட்டுள்ளன. இப்பிறப்பின் வகைகளில் நாமெல்லாம் எந்த வகையில் வருகின்றோம் என்று இதனை படித்தவுடனே தீர்மானித்துக்கொள்ள முடியும். நாமெல்லாம் பெரும்பாலும் அணு கோட்பாட்டில் (அணுபட்சம்) உள்ள A அல்லது B வகைகளில் வந்துவிடுவோம்.  மிகச்சிலரே பரமாணு கோட்பாட்டின்படி A அல்லது B வகைகளில் வருவர். அதற்கு மேற்பட்ட வகையான சம்பு, விபு, பிரகிருதி வகைகளில் நாம் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி யாரேனும் பிறப்பெடுக்கின்றனரா? என்றும் நமக்குத் தெரியவில்லை.                                                                                                                                                                                                               
வள்ளற்பெருமான் இவைகளில் எந்த கோட்பாட்டின்படி பிறப்பெடுத்துள்ளார் என்று பார்ப்போம்…



வள்ளற்பெருமானின் தந்தை இராமையாபிள்ளை அவர்களின் முதல் ஐந்து மனைவிக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. மேலும் அவ்வைவரும் அடுத்தடுத்து இறந்தும் விடுகின்றனர். ஆறாவது மனைவியான சின்னம்மையாருக்கே குழந்தை பாக்கியம் கிட்டியது. சின்னம்மையாருக்கு மூன்று ஆண் மகன்கள், இரண்டு பெண் மகள்கள் பிறந்தனர். இதில் இறுதியாக பிறந்தவரே நமது வள்ளற்பெருமான்.
இறைவனால் தாம் இப்பூமிக்கு வருவிக்கவுற்றதாக வள்ளற்பெருமான் (திருவருட்பா-5485) சொல்கின்றார். மேலும் அவரது வரலாற்றை எழுதிய காரணப்பட்டு ச.மு.க. அவர்கள், ஒரு சிவ யோகியர் சின்னம்மையாருக்கு திருநீறு கொடுத்து “என்போலும் ஓர் ஆண் மகவை விரைவிற் பெறக்கடவாய்” (பிரபந்தத்திரட்டு-பக்கம்-60) என்று வாழ்த்தி வரங்கொடுத்து சென்றதாக வரலாற்றை எழுதியிருக்கின்றார்.

இறைவனால் வருவிக்கவுற்றாலும், ஒரு சிவயோகியாரின் வரத்தால் வந்திருந்தாலும், ஆண் பெண் தேக சம்பந்தத்தால்தான் இப்பூமியில் மருதூர் இராமையாபிள்ளையின் வீட்டில் பிறந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு சான்றாக வள்ளற்பெருமானே எழுதிய “சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணபம்” உள்ளது. அதில், “உபசாரத்தால் பெற்ற தந்தை என்பான் ஒருவனது சுக்கிலத் துளியின்கண் என்னை ஒரு பகுதிப் பேரணு உருவில் பெருகி வெளிப்பட இருத்திய காலத்திலும்.... உபசாரத்தால் பெற்ற தாயென்பாள் ஒருத்தியின் சோணிதத்திரளில் என் உருவைச் சேர்க்கும் வரையில்…” என்ற வாக்கியங்கள் சாட்சியாக உள்ளன.

எனவே வள்ளற்பெருமானும் நம்மை எல்லோரும்போன்றே மேற்கூறிய அணுபட்சத்தில் உள்ள B வகையான பக்குவ ஆன்மாகவே பிறப்பெடுத்து, முன்செய்த தவத்தாலும் இப்பிறவியில் எடுத்த முயற்சியினாலும், இப்பிறவியிலேயே சாகாவரத்தையும் பெற்று நம்மோடு வாழ்ந்துவருகின்றார்.
சில வார்த்தைகளுக்குண்டான பொருள்:

பசஷம் / பட்சம் – கோட்பாடு
சம்பு – இனியவன்
விபு – கருத்தா / எசமான் .
பிரகிருதி – மூலப்பகுதி / இயல்பு /  மூலம்
பிரஜோத்பத்தி – பிரஜைகளை உற்பத்தி செய்வது.
சந்தானம் – சந்ததி
பரிசித்தல் – தொடுதல்
நரன் – மனிதன்
திரணம் – துரும்பு.
சங்கற்பித்தல் – உறுதிசெய்துகொள்ளுதல்
மூன்றேமுக்கால் நாழிகை – ஒன்னரை மணி நேரம் / ஒரு முகூர்த்தம்

--தி.ம.இராமலிங்கம்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.