Wednesday, April 5, 2017

நபியின் அறிவுரைகள்


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில் வெளியானது…

நபியின் அறிவுரைகள்

இறை அச்சத்தால் குறைவாக சிரி! நிறைய அழு!

“நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்.”

“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே தம்மைவிடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்.”

ஒரு முறை நபி அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் பின்வருமாறு கூறினார். அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் அவை இன்னின்னவை என நிர்ணயித்து எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என மனத்தில் எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக் அல்லாஹ் பதிவு செய்கின்றான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கின்றான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, அல்லாஹ்வுக்கு அஞ்சி அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகின்றான்.

விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்பவர்கள்: “என் சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள், பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவனையே சார்ந்திருப்பார்கள்”.

நம்முடைய செல்வம் எது? “உங்களில் யாருக்காவது தம் செல்வத்தைவிடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா? என்று நபிகள் கேட்க, அதற்கு தோழர்கள், “இறைதூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே வாரிசுகளின் செல்வத்தைவிட எங்களின் செல்வமே விருப்பமானதாகும். என்று பதிலளித்தார்கள். அவ்வாறாயின், ஒருவர் இறப்பதற்கு முன் அறவழியில் செலவிட்டதே அவரின் செல்வமாகும். இறந்த பின்பு விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும் என்று நபிகள் மொழிந்தார்கள். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.