Wednesday, June 14, 2017

கால்நடை வளர்ப்பு

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” இணைய இதழில் ‘மே-மாதம் 2017’ அன்று வெளியானது…

கால்நடை வளர்ப்பு

மூடவழக்கங்களை மக்களாகிய நாம் பல்வேறு வழிமுறைகளில் பின்பற்றி  வருகின்றோம். மூட வழக்கங்கள் எல்லாமே தொன்றுதொட்டு பரம்பரை வியாதிபோன்று  நம்மை தொற்றிக்கொள்கின்றன. அதிலிருந்து மீள்வதென்பது அறிவுடமையால் மட்டுமே முடியக்கூடியதாய் இருக்கின்றது. அறிவு விளங்குமிடத்தில்  மூடம்  செயல்படாது. மூடம் செயல்படும்போது அறிவு  விளங்காது. எனவே அறிவு  மார்க்கமான சன்மார்க்கத்தை  பின்பற்றுதலே மூடம் ஒழிய சிறந்த வழிமுறையாகும்.

மக்கள் - தாங்கள் வாழும் வாழ்க்கையில் பின்பற்றும் மூட பழக்கத்தைப் போலவே தங்களைச் சார்ந்த கால்நடை பராமரிப்பு விவகாரங்களிலும் சில மூடவழக்கங்களை பின்பற்றுவது வேதனையளிக்கின்றது. முக்கியமாக மாடு வளர்ப்பில் ஈடுபடும் மக்களில் சிலர் அவற்றிற்கு ஏதேனும் நோய்கள் தொற்று ஏற்படின் தாங்களாகவே எதையாவது செய்து கால்நடைகளை  துன்பத்தில் ஆழ்த்துகின்றனர். விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்த நூற்றாண்டில்கூட இன்னும் பழைய சிகிச்சைமுறைகளை தாங்கள் வளர்க்கும் மாடுகளுக்குச் செய்து கால்நடைகளை  துன்புறுத்துகிறார்கள்.

கால்நடைகளுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு. அறிவியலும் நவீன மருத்துவமும் முன்னேறி வரும் இக்காலத்தில் தவறான கருத்துக்களாலும், மூட நம்பிக்கைகளாலும் கொடிய மருத்துவம் செய்தல், தகுதியற்றவர்களால் மேற்கொள்ளும் மருத்துவத்தை தவிர்த்தல் வேண்டும். இச்செயல்களை விவசாயிகள் எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்கக்கூடாது.

நாவரஞ்சி எடுத்தல்: கிராமங்களில் நாவரஞ்சி எடுத்தல் என்ற பழக்கம் உண்டு. இம்முறைப்படி தீவிணம் சாப்பிடாத கால்நடைகளின் நாக்கை  வெளியே இழுத்து கத்தியால் சுரண்டி நாக்கின் மேலும் கீழும் உள்ள திசுக்களை அழித்து கொன்றுவிடுவார்கள். இதனால் வலி ஏற்பட்டு கால்நடைகள் அறவே தீவனம் சாப்பிடாது. இரண்டு நாட்கள் கழித்து தீவனம் சாப்பிட துவங்கும். நாக்கில் நாவரஞ்சி விழுந்துவிட்டது என இந்த கொடூர வைத்தியத்தை கையாளுகின்றனர்.

செலைக்குத்துதல்: ‘செலைக்குத்துதல்’ என்னும் வழக்கம் நாவரஞ்சி எடுத்தலை விட கொடுமையானது. இதன்படி தீவனம் சாப்பிடாத கால்நடையின் நாக்கினை வெளியே இழுத்து பிடித்துக்கொண்டு, நாக்கின் அடிப்பாகத்தில் காணும் ரத்தக் குழாயினை கூரிய ஊசி கொண்டு குத்தி விடுவார்கள்.  குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறும். பின் வைக்கோலினால் கயிறு  போல் தயார் செய்து நாக்கின் அடியில் இருந்து மேல்தாடை யோடு சேர்த்து இறுக்கி  கட்டி விடுவார்கள். இதனால் கால்நடைகள் இரண்டு நாட்களுக்கு நாக்கை அசைக்க முடியாமலும், எச்சில் விழுங்க முடியாமலும் கொடூரமான துயரத்திற்கு ஆளாகும். பின்னர் தீவனம் சாப்பிட ஆரம்பிக்கும்.

வைக்கோல் எரிப்பு: அதிக நேரம் காளைகள் வேலை செய்வதாலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தால் உடலில் நீர்ச்சத்து அளவு குறைந்து அவை கீழே விழுந்துவிடும். இதனை அறியாமல் மாடுகளின் அருகில் வைக்கோலை போட்டு கொளுத்துவார்கள். கண்களில் மிளகாய் பொடியை தூவுவார்கள். வாலை  பற்களால் கோரமாக கடித்து புண் ஏற்படுத்துவார்கள். தார் குச்சியின்  நுனியால் மர்ம உறுப்பில் வலி எடுக்கும்படி குத்துவார்கள். இதனால் சில மாடுகள் சூடு தாங்காமலும், மரண வலியை தாங்க முடியாமல் கடும் துயத்துடன் எழுந்து விடுகின்றன. சில நேரங்களில் இப்படி செய்யும்போது அவை நினைவிழந்து இறந்து விடுவதும் உண்டு.

சுண்ணாம்பு பூச்சு: மாடுகள் சண்டையிடும்போதும், சில விபத்துக்களாலும் கொம்பு முறிவதும், கொம்பு கழன்று விழுவதும் இயற்கை. இதற்கு வைத்தியம் செய்கிறோம் என்ற பெயரில் கருப்பட்டி மற்றும் சுண்ணாம்பினை சேர்த்து  அரைத்து காயமடைந்த கொம்பில் பூசி விடுவார்கள். போதாக்குறைக்கு தலை முடியை கொத்தாக எடுத்து கொம்பை  சுற்றிலும் கட்டி விடுவர். பத்து நாட்கள் கழிந்து முடியை பிய்த்து வலுக்கட்டாயமாக இழுக்கும் போது கால்நடைகள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவிக்கின்றன.

எருக்கம்பால் நச்சு: கறவை மாடுகள் சினைப்பிடிக்கவில்லை என்ற காரணத்தினால், கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியான பெண் உறுப்பில் எருக்கம் பாலை இடுவார்கள்.

சில கால்நடைகள் நோயின் காரணமாகவோ அல்லது நச்சு தாவரங்களை உண்பதாலோ சோர்ந்தும், உடல் சிலிர்ப்புடன் காணப்படும். இதனை தவறாக புரிந்து கொண்டு ஓணான், மாட்டின் மேல் விழுந்துள்ளது எனக்கருதி, துண்டு துணியை கழுத்தில் இறுக்கி கட்டி விட்டு மூச்சு விட முடியாமலும், நாக்கை வெளியே தள்ளும் அளவுக்கு கொடுமை செய்வர்.

வெந்த புண்ணில் வேல்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கினால் கால் குளம்புகளில் புண்கள் ஏற்படும். இப்புண்ணில் பினாயில் கிருமி நாசினியை ஊற்றுகின்றனர். இதனால் புண் வெந்து மாடுகளுக்கு மேலும் வேதனையை தரும். இக்கொடூரமான சிகிச்சை முறைகள் எல்லாம் முறையானவை அல்ல. இவற்றால் ஏற்படும் வேதனைகளை வாயிருந்தால் கால்நடைகள் சொல்லி நொந்து  சாபமிட்டிருக்கும். இக்கொடூர காரியங்களில் நெஞ்சில் ஈரமில்லாத மனிதர்கள் சிலர் ஈடுபடும்போது சன்மார்க்கம் இன்னும் கிராம மக்களிடையே பரவவில்லையே என்ற குற்றம் நம்மை வந்து சூழ்கின்றது.

மேலும் விஞ்ஞான வளர்ச்சியால் சில தீய பழக்கங்களும் கால்நடை வளர்ப்பில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதில் ஒன்று சினை ஊசி  போடுதல். சினை ஊசி போடுவதால் நமக்குத்  தேவையான பெண் கன்றை தேர்வு செய்யலாம் என்ற மூடவழக்கம் இன்றும் மக்களிடையே உள்ளது. அறிவியல் பூர்வமாக அவ்வாறு தேர்ந்தெடுப்பது இயலாத ஒன்று.

சினை ஊசியினால் கன்றுகளை பெற முற்படுவதால், காளைகளின் மூலம் உடலுறவு கொள்ள முடியாமல் பசுவினங்கள் தங்களது இயற்கை வேட்கையை தீர்க்கமுடியாமல் மனதளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே கருணையுள்ள மேய்ப்பாளர்கள் இம்முறையினை கைவிட வேண்டும்.

மாடு உறுப்பு போட்டால் அதனை பால் மரம் பார்த்து கட்டுவது என்பதும் மூட வழக்கமாக உள்ளது. அம்மரத்தில் அவ்வுறுப்பை  கட்டினால்தான் பசு அதிக பால் கறக்குமென்ற அறியாமையை நாம் மக்களிடையே இன்றும் காணலாம்.  இந்த மூட வழக்கத்தினையும் ஒழித்து, அவ்வுறுப்புகளை ஆழமாக குழித்தோண்டி புதைப்பதே அறிவுள்ள செயலாகும்.


இப்படிப்பட்ட கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போகவேண்டும். மனிதர்கள் மனிதர்களாக வாழவேண்டும் என்பதே “சன்மார்க்க விவேக விருத்தியின்” கனவாக உள்ளது.  எல்லா உயிர்களும்  இன்புற்று வாழ்க. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.