Wednesday, June 14, 2017

ஜீவ சமாதி

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று வெளியானவை…

ஜீவ சமாதி

பெருமை அற்றவர்களின் உடல் எரிக்கப்பட வேண்டும். பெருமை உள்ளவர்களின் உடல் புதைக்கப்பட வேண்டும் என்று திருமூலர் உரைக்கின்றார்.
                                          
எண்ணிலா ஞானி உடல் எரிதாவிடில்
அண்ணலதம் கோயில் அழவிட்ட தாங்கொக்கும்
மண்ணில மழை விழா வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பார் அரசுமே.

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

ஞானியர்கள் தங்கள் உடலையே கோவிலாகக் கொண்டு வாழ்பவர்கள். அந்த உடலுக்கு தீ வைப்பது திருக்கோவிலுக்கே தீவைப்பதற்கு சமனாகும். அவ்வாறு செய்தால் மண்ணில் மழையின்றி கொடிய பஞ்சம் ஏற்படும். மன்னர் அரசாட்சியை இழக்க வேண்டிவரும். அத்துடன், ஞானியரின் உடல்கள் அடக்கம் செய்ய ஆட்கள் இல்லாது மண்னில் கிடந்து அழிந்தால் அந்த நாட்டின் அழகு எல்லாம் கெட்டு, நாடு வீழ்ச்சியடைந்து பெருந்துன்பம் ஏற்படும் என்கிறார் திருமூல சித்தர்.

பெருமையுடைவர்களின் உடல் மண்ணில் அடக்கம் செய்வதால் நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிட்டும் என்றும் நாடு வளம் பெறுவதுடன் நாட்டு மக்களுக்கும் நல்லருள் கிடைக்கும் என்கிறார். இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து  வெவ்வேறு இடங்களில் நடமாடி  மீண்டும் அடக்கமாகின்றார்கள். இதனால் இவர்களை அடக்கம் செய்ததாக சொல்லாமல் ஜீவ சமாதியடைந்ததாக சொல்ல வேண்டும்.

இறைவன்  நம் எல்லோரின் உடம்பிலும் இருந்து அருள் செய்வதால், நமது உடல்களை எரிக்காது  புதைக்க வேண்டும் என்பது  வள்ளற்பெருமானது கட்டளை. பெருமை யற்றவர்களின் உடலை எரிக்க வேண்டும் என்பது  திருமூலரின் கருத்தை நாம் தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது. இறைவன் இருந்த இடம் நமது எல்லோரின்  உடலாகும். அப்படி இறைவன்  இருந்த  இடம் பெருமையுடையதுதானே. இதனை புரிந்துக்கொண்டால் நாம் எல்லோரும் பழக்கத்தின் வழிமுறைகளை விடுத்து புதைக்கவே முற்படுவோம். உடலை  எரிப்பதனால் மழை வளம் கெடும், நாட்டில் பஞசம் ஏற்படும், நாட்டில் அரசாளும் அரசு கெடும் என்றால், நமது தாய், தந்தை, பாட்டன், பாட்டி போன்ற சுற்றத்தார்களின் உடலை  எரித்தால், அவ்வீட்டிற்கு ஏற்படும் பாதிப்பை சொல்லவும் வேண்டுமோ?      

செத்தவர் எல்லாம் எழுந்து நடமாடுவதாகவும், நடமாட இருப்பதாகவும் வள்ளற்பெருமான் உரைக்கின்றார். அதற்காகவே இறந்தாரை எரிக்க வேண்டாம் என்கின்றார். புதைக்கப்பட்ட உடம்பை மட்டுமே இறைவன் திரும்பவும் எழுப்புவதாகவும் அருள்கின்றார். எனவே நாமெல்லாம் இனி  பிறரை எரிக்கும் செயலை விடுத்து  புதைப்போம்.

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே – சுத்தசிவ
சன்மார்க்க சங்கத்  தலைவனே நிற்போற்றும்

என்மார்க்கம் நின்மார்க்க மே. - 5621

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.